எபிசோடு - 111 (30.06.2010) சுட்டி - 2
நாதனை வீட்டுக்கு அழைத்து வருகிறார்கள். நாதன் அசோக்குக்கு நேர்ந்த கஷ்டங்களை நினைத்து உருகுகிறார். காதம்பரி வந்து பார்க்கிறாள்.
வையாபுரியிடம் பணம் கொடுத்து ஏமாந்த அந்த தொழிலதிபர் சிங்காரத்தை கூப்பிட்டனுப்புகிறார். தன்னிடம் அடியாளாக சேரும்படி கேட்கிறார். சிங்காரம் மறுத்து விடுகிறான். அவன் ஏற்கனவே அடியாளாக இருந்தவன்தானே, அதுவும் இறந்துபோன நல்லத்தம்பியின் சகோதரன் வையாபுரியிடம்தானே என கேட்க, சிங்காரம் வையாபுரியும் நல்லத்தம்பியும் ஒரே ஆள் எனக் கூறிவிடுகிறான். திடுக்கிட்ட அந்தத் தொழிலதிபர் அப்போது தான் கொன்றது வையாபுரியையா என திகைப்புடன் கேட்க, சிங்காரம் இப்போது திடுக்கிடுகிறான்.
இது பற்றி அறிந்த நாதன் வக்கீலிடம் உடனே அந்த தொழிலதிபரை அரெஸ்ட் செய்ய ஏற்பாடு செய்யுமாறு கூறுகிறார். இதிலெல்லாம் அவசரப்படக்கூடாது என வக்கீல் அறிவுரை கூறுகிறார்.
கொலை செய்தவன் யாரெனத் தெரிந்தும் ஏன் இன்னும் தாமதம் என நண்பர் கேட்க, சோ அவசரப்பட்டால் காரியம் நடக்காது. இதில் சாதுர்யமாக நடந்து குற்றவாளியை பிடிக்க வேண்டியதன் அவசியத்தைக் கூறுகிறார்.
(தேடுவோம்)
எபிசோடு - 112 (01.07.2010) (இறுதி எபிசோடு) சுட்டி - 2
சிறைச்சாலையில் பார்வையாளர்கள் பகுதி. அசோக்கைப் பார்க்க அந்த சன்னியாசி வருகிறார். அசோக் அவரை வணங்கி தனக்கு ஏற்பட்ட சோதனைகளை கூறுகிறான். எல்லாமே பரமன் செயல் எனக்கூறி, அவர் அசோக்குக்கு கையாலயத்தில் நடந்த நிகழ்ச்சிகளை விவரித்துக் கூறி அவன் வசிஷ்டர் எனவும் கூறுகிறர். பிறகு அவர் நாரதராக சுயவுருவம் பெற, அசோக் வசிஷ்டரின் ரூபத்தைப் பெறுகிறான்.
எங்கே பிராமணன் என்பதை அவர் தேடியதன் பலனை கூறுமாறு நாரதர் வசிஷ்டரிடம் கேட்க, அவரோ கலியுகத்தில் முழுமையான வர்ணரீதியான பிராமணனாக வாழ்தல் துர்லபமே எனக்கூறிவிடுகிறார். பிறகு அங்கிருந்து இருவருமே மறைகின்றனர். உள்ளே வரும் காவலாளி அவர்கள் எங்கே என பிரமிக்கிறான்.
அசோக் நல்லவன், நேர்மையாளன் ஆனால் அவனை பைத்தியம் எனக்கூற வைத்தீர்களே எல்லோரையும், இப்போது திருப்திதானா என சோவின் நண்பர் கேட்க, அப்படித்தால் லோகம் நினைக்கிறது. இன்றையச் சூழ்நிலையில் வர்ண ரீதியான பிராமணன் என ஒருவன் வாழ முற்பட்டால் அவன் பைத்தியக்காரனாகத்தான் பார்க்கப்படுவான். ஏன் நேர்மையாக இருப்பவனுக்கும் அதே கதிதான் என சோ கூறுகிறார்.
வர்ணங்கள் என்பவை சாதிகள் அல்ல. நால்வகை குணநலன்களையே அவை குறிக்கின்றன. ஒன்றுக்கொன்று உயர்ந்ததோ தாழ்ந்ததோ இல்லை எனக் கூறும் சோ அவற்றுக்கான சான்றுகளை பல இடங்களிலிருந்தும் சுலோகமாகவும் மேற்கோள்களாகவும் காட்டுகிறார். இவை எல்லாம் ஒன்றும் தான் கண்டுபிடித்தவையல்ல், சொன்ன விவரங்கள் எல்லாமே பல இடங்களில் தேடிப்படித்து, விஷயம் அறிந்தவர்களிடம் கேட்டு தான் உணர்ந்தவை மட்டுமே என்றும் இதில் தனக்கு வேறு கிரெடிட் எதுவும் இல்லை எனவும் அவர் கூறி, இந்த சீரியல் வெற்றிகரமாக எடுக்கப்பட்டதற்கு சம்பந்தப்பட்ட எல்லோருக்கும் (ஜெயா டிவி, வெங்கட், தயாரிப்பாளர் சுந்தரம் ஆகியோர்) நன்றி கூறுகிறார்.
எங்கே பிராமணன் முதல் பகுதியில் கடைசி எபிசோட் என்பதை நான் முதலிலிருந்தே கண்டு கொள்ள முடிந்தது. ஆனால் இம்முறை நான் அவ்வாறு காண இயலவில்லை. ஆகவே இந்த சீரியல் இம்மாதிரி முடிந்தது என்னையும் ஆச்சரியத்திலும் ஏமார்றத்திலும் ஆழ்த்தி விட்டது. காரணம் கதையில் இன்னும் பல முடிச்சுகள் அவிழ்க்கப்படாமல் உள்ளன.
எல்லாவற்றையும் விடுங்கள். காதம்பரி என்னும் அப்பெண்ணை இப்படி அம்போ என விட்டுப்போனது எந்த விதத்தில் நியாயம் என்பதே புரியவில்லை. மெனக்கெட்டு அவளை அசோக்கின் தர்மபத்தினியாக்கினார்கள். இப்போது அவள் கதி? அசோக் திடீரென மறைந்து போனதால் அவனது பெற்றோருக்கு வரும் மன உளைச்சல்கள், சட்ட சிக்கல்கள், போலீஸ் கெடுபிடிகள் ஆகியவற்றையும் நினைத்துப் பார்க்க வேண்டும்.
எனக்கு வரும் கோபத்துக்கு பார்ட் -2 ஆரம்ப எபிசோடில் வந்தது போல நாதன், வசுமதி, நீலகண்டன், சாம்பு ஆகிய பாத்திரங்கள் காதம்பரியுடன் கூட வந்து சோ அவர்களை ஒரு மொத்து மொத்தினால்தான் என் மனம் ஆறும். சிங்காரம் ஒருவன் போதாதா, வந்து வீடுகட்டி உதைக்க?
அது சரி நீ எப்படி பெரிசு இந்தக் கதையை முடிச்சுருப்பே என முரளி மனோகர் நக்கலாகக் கேட்கிறான். அதையும் சொல்லிவிடுகிறேன்.
நாரதர் அசோக்கிடம் சொன்னதெல்லாம் சரிதான். ஆனால் அவன் தனது பூலோகக் கடமையையும் முடித்தாக வேண்டும், பீஷ்மரைப் போல. வக்கீலின் உதவியோடு உண்மை குற்றவாளியை பிடிப்பது பெரிய காரியமாக இருக்க முடியாது. பிறகு முழுவர்ண ரீதியான பிராமணனாக வாழமுடியவில்லை என்றாலும், கலியுக தர்மங்கள் மற்றும் சாத்தியக்கூறுகளுக்கும் ஏற்ப ஒருவன் எவ்வாறு பிராமணனாக வாழமுடியும் என்பதையும் அசோக் எடுத்துக் காட்டியதாக நான் கதையை கொண்டு சென்றிருப்பேன்.
அத்தனைக் காட்சிகளையுக் காண்பிக்க முடியாவிட்டால், காதம்பரி உண்மையிலேயே வசிஷ்டரின் மனைவி அருந்ததியே என கதையின் போக்கை மாற்றி அவளும் அதை உணர்ந்து அசோக்குடன் வாழ்வதையே சூசகமாக ஒரு எபிசோடில் காட்டியிருப்பேன். இத்தனை விஷயங்களையும் மேலும் ஒரே ஒரு எபிசோடில் காட்டியிருக்க இயலும்.
எது எப்படியோ நான் இம்மாதிரி சோ அவர்களை இம்மாதிரி முழுமையாகக் கண்டித்து இப்பதிவை போடுவேன் எனக்கனவிலும் நினைக்கவில்லை.
பொறுமையாக எனது எங்கே பிராமணன் சம்பந்தப்பட்ட பதிவுகளைப் படித்த எல்லோருக்கும் என் நன்றி.
அன்புடன்,
டோண்டு ராகவன்
நம் மூளை எந்த நிலையிலுள்ளது?
-
நாம் நம் மூளையை எந்நிலையில் வைத்திருக்கிறோம்? நம் உடலைப் பராமரிப்பதுபோல
அதைப் பராமரிக்கிறோமா? அதற்குரிய பயிற்சிகளை அளிக்கிறோமா?
20 hours ago
