6/26/2010

சோவின் எங்கே பிராமணன் பார்ட் - 2 (எபிசோட்கள் - 105, 106, 107 & 108)

எபிசோடு - 105 (21.06.2010) சுட்டி - 2

(முதன்முறையாக இந்த சீரியலின் எபிசோடுகளை போடுவதில் மனச்சங்கடம் எனக்கு ஏற்படுகிறது. விஷயம் வேறொன்றுமில்லை. அசோக் சந்திக்கும் சோதனைகள்தான் மனதைக் கலக்குகின்றன. எல்லாமே கதைதானே என இருக்கவியலவில்லை. அசோக்குக்கு தெய்வ அனுக்கிரகம் கிட்டும், வசிட்டராகிய அவனுக்கு கிட்டாது யாருக்குக் கிட்டும் என்பதெல்லாம் புரிந்தாலும் தற்போதைய நிகழ்வுகளின் பாரம் மனதை அழுத்துகிறது. இருப்பினும் பல்லை கடித்துக் கொண்டு பதிவுகளை இடுவேன். இந்த மனப்பான்மைதான் என்னை 4 எபிசோடுகளாகச் சேர்த்து போட வைத்ததற்கு அடிப்படையான காரணம் என நினைக்கிறேன்).

அசோக்குக்காக வக்கீல் வைத்து வாதாடப்போவதாக நாதன் அவனிடம் கூற அவனோ வக்கீல் என்பவர் நியாயத்துக்காக மட்டுமே வாதாட வேண்டும் எனக் கூறுகிறான்.

சாம்பு வீட்டில் சந்துரு அப்பா அம்மாவிடம் ஆர்த்தி வீட்டில் சண்டை நடப்பதைக் கூறுகிறான். தான் உள்ளே போக பயந்து வந்து விட்டதாகவும் கூறுகிறான். ஆர்த்தி என்ன கஷ்டத்தில் இருக்கிறாளோ, தங்களாத்துக்கு வந்து விடப்போகிறாள் கோபத்துடன் என சாம்பு, சந்துரு, செல்லம்மா நினைக்க வந்து
நிற்கிறான் மாப்பிள்ளை. தனது பிறந்த வீட்டில் கோபித்துக் கொண்டு பெட்டியை எடுத்துக் கொண்டு மாமனார் வீட்டுக்கு வரும் நவீன மாப்பிள்ளை.

கேட்டரிங் வேலைக்கு தன்னையும் ஆள்குறைகிறது எனக்கூறி அப்பா அழைத்ததாகவும் தான் மறுக்கவே சண்டை வந்ததாகவும் கூற, சாம்புவுக்கு அழுவதா சிரிப்பதா எனத் தெரியவில்லை. பின்னாலேயே புயலென வரும் ஆர்த்தி கணவனை கண்டித்து வீட்டுக்கு இழுத்துச் செல்கிறாள். அதிலும் தவறுதலாக தன் பெட்டியை மாப்பிள்ளை எடுத்து வந்ததாகக் கூற, அவன் முகத்தில் டன்டன்னாக அசடு வழிகிறது.

கோவிலில் வந்திருக்கும் செல்லம்மா நாதனை பார்த்து அறுதலாக விசாரிக்கிறாள். அசோக்குக்கு காலசர்ப்ப தோஷம் இருப்பதாகவும் திருநாகேஸ்வரத்துக்கு பிள்ளையை அழைத்து வந்து அஎச்சனை செய்வதாக வேண்டிக் கொள்ள வேண்டும் என சாம்பு கூறியதை செல்லம்மா நாதனிடம் கூறுகிறாள்.

நாதனைப் பார்க்க கைலாஷ் நகர் அசோசியேஷன் செயலாளர் வந்து விசாரிக்க நாதன் அவர் அசோசியேஷன் சம்பந்தப்பட்ட விஷயத்தால்தான் அசோக்கே இந்த வழக்கில் சிக்கியிருப்பதாகவும், அவரைப் பார்க்கவே தனகு வெறுப்பாயிருப்பதாகவும் கோபமாகப் பேசி நாதன் அவரை வெளியே போகச் சொல்கிறார்.

வக்கீல் கோபாலையரிடம் நாதன் அசோக் கேசை ஒப்படைக்கிறார். அவரும் வசுமதியும் பேசிக் கொண்டிருக்கும்போது சமையற்கார மாமி காப்பி கொண்டுவந்து வைக்கிறாள். நாதன் அவளை போலீசிடம் எல்லாவற்றையும் உளறியதற்காக சாடுகிறார்.

அந்தம்மா உண்மையைத்தானே சொன்னாங்க என சோவின் நண்பர் கேட்க, சில சமயங்களில் பொய்பேச வேண்டியதன் அவசியத்தை சோ உதாரணங்களுடன் விளக்குகிறார். மேலும் அந்தம்மா நேரில் எதையுமே பார்க்காது சிங்காரம் சொன்னதைக் கேட்டு பேசியது ஹியர்சே எவிடென்ஸ் ஒத்துக் கொள்ளமுடியாதது என்றும், அதைத் தர அவளுக்கு எந்த பிரமேயமும் இல்லையென்றும், நாதன் வீட்டு உப்பைத் தின்றுவிட்டு அவள் செய்தது தவறே எனவும் சோ கூறுகிறார்.

சமையற்கார மாமியை அனுப்பிவிட்டு நாதன் வசுமதியிடம் பேசும்போது அசோக்கே தன்னையுமறியாமல் இச்செய்கையை செய்திருக்கலாம் என்ற தனது சந்தேகத்தையும் வெளியிடுகிறார்.

கோவிலில் சாம்பு நாதனை சந்தித்து அசோக்குக்கு காலநேரம் சரியில்லையெனவும், அவனுக்கு சோதனை வரும் ஆனால் கடைத்தேறுவான் எனவும் அவனை வழிநடத்தும் சாமியார் கூறியதைக் கூறிவிட்டு மேலே பேசுகிறார். நாதனுக்கே பேசுவது சாம்பு சாஸ்திரிகள்தானா என்னும் ஐயம் வருகிறது. அவரிடமே kஏட்க, தனக்குள்ளிலிருந்து யாரோ பேசுவதாகவே தனக்கும் தோன்றுவதாக இருக்கும். சோதனை வரும், ஆனால் கடைத்தேறலும் நடக்கும் என அவர் திட்டவட்டமாகக் கூறுகிறார்.

(தேடுவோம்)

எபிசோடு - 106 (22.06.2010) சுட்டி - 2
அசோக்கின் கேஸ் ஆரம்பிக்கிறது. பிராசிக்யூஷன் வக்கீல் கேஸை சமர்ப்பித்தப் பிறகு அசோக்கின் வக்கீல் பேச ஆரம்பிக்கிறார். அசோக் ஒழுக்கமானவன், தர்மசிந்தனை உடையவன், பாரம்பரியம் மிக்க உயர்குலத்தைச் சேர்ந்தவன் என அவர் கூறுகிறார்.

பார்ப்பனர்கள் உயர்குலமா என நண்பர் ஆட்சேபிக்க, சோ அவர்கள் இந்த இடத்தில் குலம் என்பது குடும்பத்தைத்தான் அதாவது நாதனின் குடும்பத்தையே குறிக்கும் எனவும், சாதியில்லை எனவும் தெளிவுபடுத்துகிறார். பிறகு குலதர்மம் என்பதையும் பேசுகிறார். யுகதர்மமும் பேச்சில் வருகிறது. சம்பந்தப்பட்ட வீடியோவைக் காண்தலே சிறப்பாக இருக்கும்.

நாதனுக்கு கோர்ட்டிலேயே மைல்ட் அட்டாக் வர அவரை ஆஸ்பத்திரிக்கு அழைத்துச் செல்கிறார் நீலகண்டன். ஐ.சி.யு.வில் அவரை சேர்க்கிறார்கள்.

சாம்புவும் வேம்புவும் பேசுகின்றனர். அசோக் மாட்டிக் கொள்ளாமல் புத்திசாலித்தனமாக நடந்திருக்கலாம் என பேச்சு வருகிறது. நண்பரும் அது உண்மைதானே என ஆமோதிக்க, சோ அவர்கள் அசோக் ஞானப்பாதையில் செல்கிறான். அவனது செயல்கள் வித்தியாசமாகவே இருக்கும் எனக்கூறிவிட்டு, மனிதன் என்பவன் எப்போதுமே தனிதான். சுற்றி எவ்வளவு பேர் இருந்தாலும் அவன் தனியேதான். அவனவன் செய்த காரியங்களின் பலனை அவனவனே அனுபவிக்க வேண்டும் எனக் கூறுகிறார்.

நீங்கள் நல்ல அறிவாளராகத் தோற்றமளிக்கிறீர்கள் என நண்பர் விதந்தோத, சோ சுயகிண்டலுடன் பேசுகிறார். பார்வைக்கு மட்டுமே குயிலும் காகமும் ஒரே நிறம், வசந்தகாலம் வந்தால் உண்மை வெள்ளிடைமலையாகும். அதே போல தன்னை அறிஞர்கள் நிறைந்த சபையில் நிறுத்திப் பேசவைத்தால் தனது லட்சணம் தெரியும் என்கிறார்.

(தேடுவோம்)

எபிசோடு - 107 (23.06.2010) சுட்டி - 2
அசோக் பற்றி சுப்புவும் அவள் நாத்தனாரும் வேணமட்டும் இளப்பமாகப் பேசிய பிறகு சுப்பு வசுமதிக்கு ஃபோன் போட்டு அசோக்கை பற்றி அங்கலாய்ப்பாகவும், புகழ்ந்தும் பேசி சீன் காட்டுகிறாள். அவள் கணவர் வேம்பு அவளை இதற்காகக் கண்டிக்கிறார். அசோக் அவன் அப்பாவிடம் சொல்லி இந்த வீட்டை அவர்களுக்கு வாங்கித் தரவில்லையானால் அவர்கள் நடுத்தெருவில்தான் நின்றிருப்பார்கள் என்பதையும் அவர் சுட்டிக் காட்ட, சுப்புவின் நாத்தனார் அதையும் புறம் தள்ளுகிறாள். பாத்திரமறிந்து பிச்சையிட்டிருக்க வேண்டும் அசோக் என வேம்பு நொந்து கொள்கிறார்.

சாம்பு அப்போது வர அவரிடம் நாதன் பற்றி விசாரிக்கிறார்கள். ராமர் காட்டுக்குப் போனார் என்பதையறிந்ததுமே தசரதர் உயிர்துறந்தார் என வேம்பு கூற அப்படியா எனக் கேட்கிறார் சோவின் நண்பர். வால்மீகி ராமாயணத்தில் அப்படியில்லை என சோ விளக்குகிறார். ராமர் காட்டுக்கு சென்ற சில நாட்கள் கழித்துத்தான் அவர் உயிர் துறக்கிறார் எனவும், அதுவும் அவர் அத்தனை நாட்கள் புத்திர சோகத்தை அனுபவிப்பதே அவருக்கு முன்னால் ஒரு ரிஷியால் இடப்பட்ட சாபம் என்பதையும் அவர் விளக்குகிறார்.

மரத்திலிருந்து விலகும் பழம் கீழே விழ வேண்டும் என்பது புவி ஈர்ப்பு விதிப்படி நடப்பது, ஆனால் யாராவது அதை கையால் தாங்கிப் பிடித்தால் அது விழாது அல்லவா? அசோக் இப்போது கீழே விழும் பழம், ஆனால் கடவுள் அருள் இருந்தால் அவன் விழ மாட்டான் என்று சாம்பு பூடகமாகச் சொல்கிறார்.

அசோக் வீட்டிற்கு வக்கீல் கோபாலையர் வருகிறார். அசோக்கைக் காப்பாற்ற ஒரு உபாயம் சொல்கிறார். ஆனால் அதைக் கூறும்போது வாய்ஸ் ஓவர் ஆகிறது. இதற்கு நாதன் ஒத்துக் கொள்வாரா என வசுமதியும் நீலகண்டனும் கவலைப்படுகின்றனர். எதற்கும் காதம்பரியையும் ஒரு வார்த்தை கேட்க வேண்டும் என்றும் கூறுகின்றனர்.

(தேடுவோம்)

எபிசோடு - 108 (24.06.2010) சுட்டி - 2
காதம்பரி, அவள் அக்கா மற்றும் அத்திம்பேர் அசோக்கைக் காப்பாற்ற வக்கில் கொடுத்த உபாயம் பற்றிப் பேசுகின்றனர். இந்த உபாயம் ரொம்பக் கொடூரமானது ஒத்துக் கொள்ள முடியாது என காதம்பரி கூறுகிறாள். கடவுளின் சோதனை என அத்திம்பேர் கூற, அம்மாதிரி கொடூர மனதுடைய கடவுளை ஒதுக்கி வைக்குமாறு காதம்பரி கோபமாகக் கூறுகிறாள்.

எங்கள் போன்றவர்களை விடுங்கள் சார், உங்களைப் போன்ற தெய்வ நம்பிக்கையுடையவர்களை கடவுள் ஏன் சோதிக்கிறார் என சோவின் நண்பர் கேட்க, சோ அவர்கள் இதெல்லாம் கர்மபலன் என்றே கூறுகிறார். மகாபாரதத்திலிருந்து கௌதமி என்னும் பென்ணின் மகனை சர்ப்பம் தீண்டி மகன் இறக்க, அப்போது வந்த விவாதங்கலை உதாரணமாகத் தருகிறார். பிறகு அசோக் பற்றி பேசுகையில் அசோக் வசிஷ்டர். ஆனால் இங்கு நாதனின் புதல்வர்’ ஆகவே இம்மாதிரி சோகங்கள் அனுபவிக்க வேண்டியது நாதன் மர்றும் அவர் குடும்பத்தாரின் கர்ம பலனாகக் கூட இருக்கலாம் என்றும் அவர் கூறுகிறார்.

வக்கீல், நீலகண்டன் மர்றும் வசுமதிஉ நாதனைப் பார்க்க வருகின்றனர். அவர் அசோக் கேஸ் விவரம் குறித்து ஆவலோடு கேட்க, அவரிடம் வக்கீல் தான் யோசித்து வைத்த உபாயம் பற்றிக் கூறுகிறார். வேறு வழியில்லையா என நாதன் கேட்டுவிட்டு, மனமின்றி சம்மதிக்கிறார்.

காதம்பரியின் சம்மதத்தை பெற நீலக்ண்டன் முயலுகிறார். அவளோ இது பற்றி அசோக்கின் அபிப்பிராயம் என்ன என்று கேட்க, அசோக் கண்டிப்பாக இதற்கு ஒத்துக் கொள்ளமாட்டான் எனவும், ஆகவே அவனை கேட்கவில்லை என்றும் பதில் வருகிறது. வேறு வழியின்றித்தான் வக்கீல் இந்த உபாயத்தை கையில் எடுக்க க்க நேர்ந்தது எனக் கூற, வக்கீல் கையில் எடுத்துக் கொண்டதும் மிக அழிவுகளை தரக்கூடியதுமான அந்த பிரும்மாஸ்திரத்துக்கு தன் நமஸ்காரங்களை காதம்பரி தெரிவிக்கிறாள்.

அதென்ன சார் பிரும்மாஸ்திரம், அவ்வளவு அழிவைத் தருமா என சோவின் நண்பர் கேட்கிறார்.

(தேடுவோம்)

சோவின் எங்கே பிராமணன் பார்ட் - 2 ஒவ்வொரு வாரமும் திங்கள் முதல் வியாழன் முடிய ஜெயா டிவியில் இரவு எட்டு முதல் எட்டரை வரை ஒளிபரப்பப்படுகிறது.

அன்புடன்,
டோண்டு ராகவன்

1 comment:

Madhavan Srinivasagopalan said...

thanks dondu saar. Please continue your post in this topic.

24th june episode, I couldn't see as I was away.. So, it is obvious for people like me to follow your post on this topic.

hence plz. continue to post..

thanks

 

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது