11/30/2004

அநாகரிகமானப் பின்னூட்டங்கள் - disgusting!

பார்க்க: http://www.tamiloviam.com/nesamudan/page.asp?ID=110&fldrID=1

உதாரணம் நான் மேலே கொடுத்துள்ள் உரல்.

இந்தப் பதிவில் பலர் தங்கள் யார் என்பதைக் கூற தைரியமில்லாது பின்னூட்டம் கொடுத்துள்ளனர். இதைத் தடுக்க ஒரே வழி சம்பந்தப்பட்டப் பதிவாளர்கள் தத்தம் பதிவில் பெயரிலிப் பின்னூட்டங்களை அனுமதிக்கக் கூடாது என்பதுதான்.

இவ்வாறுக் கோழைத்தனமாகப் பின்னூட்டம் கொடுப்பவர்களைப் பற்றி நாம் என்னவென்று நினைப்பது?

இன்னொரு முக்கியமான விஷயம். பின்னூட்டம் கொடுக்குமுன் வலைப்பதிவாளர் என்னக் கூறுகிறார் என்பதைப் பார்க்க வேண்டும்.

அதைப் பார்க்காது நடந்ததால்தான் மேலே சுட்டியளிக்கப்பட்டப் பதிவுகள் கலாட்டா நடந்தது /நடக்கிறது.

அன்புடன்
டோண்டு

11/25/2004

வேண்டிக் கொள்ளுதல் - on others' behalf

ஒரு விஷயம் எனக்குப் புரிவதேயில்லை. யார் யார் சார்பிலோ யாராரோ வேண்டிக் கொள்ளுகிறார்கள்.

உதாரணத்துக்கு என் பெண் பிறக்க சிறிது கஷ்டம் என்றவுடன் வீட்டுப் பெரிசுகள் ஆளாளுக்கு தங்கள் இஷ்ட தெய்வங்களிடம் என் குழந்தைக்கு முடியிறக்குவதாக வேண்டி கொண்டு விட்டனர்.

எல்லாம் நல்லபடியாக முடிந்தவுடன் என்னிடம் விஷயத்தைக் கூறி விட்டுக் கடமை முடிந்ததெனச் சென்று விட்டனர்.

ஒவ்வொரு ஊருக்கும் குழந்தை மற்றும் மனைவியை அழைத்துக் கொண்டு செல்வது என் வேலையாயிற்று.

அதன் பிறகு குழந்தைக்கு என்ன உடம்புக்கு வந்தாலும் இந்த அராஜகம் நடக்கிறது.

நான் கூறுவது இதுதான்.

வேண்டிக் கொள்வதாயிருந்தால் தானே ஏதாவது செய்வதாக இருக்க வேண்டும். தான் கால்நடையாக கோவிலுக்கு வருவதாக, அங்கப் பிரத்ட்சணம் செய்வதாக இத்யாதி, இத்யாதி.

வரும் ஆத்திரத்துக்கு அவ்வாறு வேண்டிக் கொள்பவர்கள் உடம்பு சரியில்லாமல் போனால் அவர்களுக்கு மொட்டைப் போடுவதாகப் பிரார்த்தனை செய்து கொள்ளலாமா என்றுத் தோன்றுகிறது.

நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? எப்போது நிற்கும் இந்த எமோஷனல் பயமுறுத்தல்?

11/19/2004

சாரதா லாற்ட்டே - ஒரு அற்புத மனுஷி

எனக்கு பிரெஞ்சு மொழியின் அடிப்படைகளைப் போதித்த ஆசிரியை இவர். சினிமா கதாசிரியர் திரு. கே.ஜே.மகாதேவனின் புதல்வி. இவர் அக்கா லட்சுமி ஒரு டென்னிஸ் வீராங்கனை. இவர் கணவர் லாற்டே (Lartet) அச்சமயம் (1975 - 1978) சென்னை அல்லியான்ஸில் உதவி டைரக்டர். ஆசிரியரும் கூட.

சாரதா அவர்கள் வகுப்பு எடுப்பதே ஒரு அழகு. மாணவர்களின் சந்தேகங்களை மிக அன்புடன் தீர்த்து வைப்பார்.

மொத்தம் நான்கு நிலைகளில் மொழி கற்றுக் கொடுக்கப்பட்டது. அவை "செர்டிபிகா", "ப்ரே டிப்ளோம்", "டிப்ளோம்" மற்றும் "டிப்ளோம் ஸுபேரியேர்" ஆகும்.

வாரத்துக்கு நான்கு முறை மாலை வகுப்புகள். ஒவ்வொரு நிலைக்கும் வருடத்தை மூன்றாகப் பிரித்து பிரெஞ்ச் கற்பிக்கப் பட்டது.

அவசரக் குடுக்கையான நான் ஆர்வக் கோளாறில் முதல் மூன்று மாததிலேயே முதல் நிலைப் புத்தகத்தில் உள்ள எல்ல பயிற்சிகளையும் எழுத்தில் செய்து முடித்து அதன் பின் இரண்டாம் நிலைக்கானப் புத்தகத்தையும் முடித்தேன்.

மூன்றாம் நிலைக்கானப் புத்தகத்தை வாங்கப் போனால் ஒரே ரவுஸுதான். சாரதா அவர்கள் துணையை நாட அவர் அலட்டிக் கொள்ளாமல் தானே அப்புத்தகத்தைத் தன் பெயரில் வாங்கிக் கொடுத்தார். என் முயற்சிகளுக்கு உறு துணையாக இருந்தார்.

இரண்டாம் நிலைக்கான வகுப்பில் இருந்த போது எங்கள் வகுப்பு மாணவர் எண்ணிக்கை குறைவாக இருந்ததால் கலைக்கப் பட்டது. நாங்கள் வேறு வகுப்பு நேரங்களைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளலாமெ என்று கூறப்பட்டது.

ஆனால் என்னால் அது முடியாத காரியமாயிற்று. மறுபடியும் சாரதா அவர்கள் உதவி செய்தார். என்னை தன் கணவர் நடத்திய மூன்றம் நிலைக்கான வகுப்பில் சேர்த்து விட்டார். நானும் அவர் நம்பிக்கைக்கு ஊறு விளைவிக்காமல் அத்தேர்வில் நல்ல மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றேன். இரண்டாம் நிலைத் தேர்வு எழுதவே இல்லை.

நான்காம் நிலைக்கான இறுதித் தேர்வு சமயத்தில் ஸாரதாவும் அவர் கணவரும் ஸ்பெயினுக்கு மாற்றம் பெற்றனர்.

ஏதோ ஒரு தேவதையைப் போல வந்து எனக்கு உதவிகள் செய்திராவிட்டால் நான் சாதாரணப் பொறியாளனாகவே ஓய்வு பெற்றிருப்பேன். வாழ்க்கை அற்புதமயமானது.

சில மாதங்களுக்கு முன் சாரதா அவர்களுடன் தொலைபேசியில் பேசினேன். என்னை இவ்வளவு வருடங்களுக்குப் பிறகும் அவரும் அவர் கணவரும் ஞாபகம் வைத்திருந்தது எனக்கு சந்தோஷத்தைக் கொடுத்தது.

11/18/2004

தேசிகன் என்னும் மாமனிதர்

1969-ல் பொறியியல் கடைசி வருடத் தேர்வில் இரண்டுப் பாடங்களில் பணால். அடுத்தப் பரீட்சை நவம்பரில்தான்.

சோர்வுடன் இருந்த என்னிடம் என் தந்தை கூறினார்: "ஏண்டா, மேக்ஸ் ம்யுல்லர் பவனில் ஜெர்மன் வகுப்பு ஜூலை 1-ஆம் தேதியிலிருந்து ஆரம்பிக்கப் போகிறார்களாமே, அதில் ஏன் சேரக்கூடாது?" என்றுக் கேட்டார்.

அவ்வாறு சேர்ந்தது என் வாழ்க்கையயே மாற்றி விடும் என்று அப்போது எனக்குத் தெரியாது. அது பற்றிப் பிறகு.

அறுபது, எழுபது மற்றும் எண்பதுகளில் மேக்ஸ் ம்யுல்லர் பவனில் படித்தவர்களுக்கு தேசிகனைத் தெரியாமல் இருந்திருக்க முடியாது. அவர் அதன் நிர்வாக அதிகாரி. அவர் பேசும் ஜெர்மன் மொழி சங்கீதமயமானது. கேட்டுக் கொண்டே இருக்கலாம். அவர் வேறு மேக்ஸ் ம்யுல்லர் பவன் வேறல்ல என்றப் பாவனையில் அதனுடன் ஒன்றிப் போனவர்.

ஒரு நாள் மாலை (வருடம் 1969) நூலகத்தில் புத்தகங்கள் பார்த்துக் கொண்டிருந்தேன். உலகச் சிறுகதைத் திரட்டு ஒன்று ஜெர்மன் மொழியில் கண்டேன். எல்லா நாடுகளிலிருந்தும், வெவ்வேறு மொழிகளிலிருந்தும் தெரிவு செய்யப்பட்டிருந்தச் சிறுகதைகளின் ஜெர்மன் மொழிப் பெயர்ப்பை அதில் கொடுத்திருந்தார்கள். இந்தியாவிலிருந்து என்ன கதை தெரிவு செய்யப்பட்டது என்றுப் பார்த்தால், அது அகிலன் அவர்களின் "மூன்று வேளை" என்றக் கதையாகும். அதன் ஜெர்மன் மொழிபெயர்ப்பு வெண்ணையென வழுக்கிக் கொண்டு ஓடியது. அகிலனின் சொல்லாக்கம் ஜெர்மனில் அப்படியே இருந்தது.

மொழி பெயர்ப்பாளர் யார் என்றுப் பார்த்தால் ஆர்.தேசிகன் என்று போட்டிருந்தது. அப்படியே அந்த புத்தகத்தைக் கையில் எடுத்துக் கொண்டு தேசிகனிடம் சென்றேன்.

அவரிடம் "உங்கள் இனிஷியல் என்ன?" என்றுக் கேட்டேன். அவர் "ஆர்" என்றார். "இந்த மொழிப் பெயர்ப்பு உங்களுடையதா?" என்று அகிலனின் கதையைக் காட்டிக் கேட்டேன். சங்கோசத்தால் முகம் சிவக்க "ஆம்" என்றுக் கூறினார்.

அது வரைக்கும் என் வகுப்புத் தோழர்கள் யாருக்கும் தேசிகன் இவ்வளவுத் திறமை வாய்ந்தவர் என்பது தெரியாது. அவ்வளவு நிறைகுடம் அவர். 1993-ல் அவர் காலமானார். மேக்ஸ் ம்யுல்லர் பவன் களையிழந்தது.

தேசிகன் என்னுடைய மற்றப் பதிப்புகளிலும் அவ்வப்போது வருவார். அவர் உதவி இல்லாவிடில் நான் ஜெர்மன் மொழியை அவ்வளவு குறுகியக் காலக் கட்டத்தில் படித்து முடித்திருக்க முடியாது.

11/13/2004

பதிப்பாளர்களின் நாணயமற்றப் போக்கு

பல மாத நாவல்கள் வெளி வருகின்றன.அவற்றில் கணிசமானவை ஏற்கனவே பத்திரிகைகளில் தொடர்க் கதையாக வெளி வந்தவையே. ஆனால் சம்பந்தப்பட்ட மாத நாவலில் அதை பற்றி ஒன்றும் கூற மாட்டார்கள். தலைப்பை வேறு மாற்றி விடுவார்கள்.

இந்தப் பழக்கத்துக்கு ஒரு மோசமான உதாரணம் திரு. சாவி அவர்கள். அவருடைய தொடர் கதை "ஓ" மாத நாவலாக உருவான போது "அன்னியனுடன் ஒரு நாள்" என்றப் பெயரில் வந்தது. நல்ல வேளையாக நான் அதை வாங்கி ஏமாறவில்லை. ஓரு சைக்கிள், ஒரு ரௌடி, ஒரு கொலை" என்று 1978-ல் வெளியான தொடர் கதை தொண்ணூறுகளில் வேறு பெயரில் வந்தது. இந்த முறை ஏமாந்தேன். ஆனால் முதல் பாரா படிக்கும் போதே ஏற்கனவே படித்த கதை என்றுத் தெரிந்துப் போயிற்று. சாவியின் இம்முயற்சிகள் எல்லாம் அவருடைய சொந்தமான மோனா பப்ளிகேஷனில் வெளியாயின. ஆகவே அவர் பொறுப்பு இதில் இரட்டிப்பு ஆகிறது.

சாவியின் எழுத்துக்கள் மட்டும் இம்மாதிரி முயற்சிகளில் ஈடுபடுத்தப் பட்டன என்றுக் கூற முடியாது. பால குமாரன், ராஜேஷ் குமார் ஆகியவர்கள் புத்தகங்களும் இம்மாதிரியான முயற்சிகளிலிருந்துத் தப்பவில்லை.

ரயில் மற்றும் பஸ் நிலையங்களில் அவசர அவ்சரமாய் பிடித்த எழுத்தாளர்களின் புத்தகங்களை வாங்கிக் கொண்டு வண்டி ஏறுகிறோம். வண்டி கிள்ம்பியப் பிறகு ஏமாந்ததுத் தெரிந்து ஙே என்று விழிக்கிறோம்.

ஏற்கனவே ஒரு புத்தகம் தொடர்க் கதையாகவோ அல்லது புத்தகமாகவோ வெளியாகி விட்டது என்றுக் கூறுவது சட்டப்படிப் பதிப்பாளரின் கடமை அல்லவா? பிறகு எந்தத் தையிரியத்தில் இந்த நாணயமற்ற வேலை நடக்கிறது?

மேலும் சேர்க்கப் பட்டது:
சத்யராஜ் குமார் கூறியது சரி எனப்பட்டதால் தலைப்பைத் திருத்தியுள்ளேன். ஆனால் எழுத்தாளருக்கும் இதில் பொறுப்பு இல்லையா? பதிப்பாளர்கள் அவ்வாறு செய்யும் போது அவர்கள் தங்கள் எதிர்ப்பைத் தெரிவிக்கலாமே. எனக்குத் தெரிந்து பால குமாரன் ஒரு முறை இவ்வாறு செய்துள்ளார்.

11/12/2004

கருப்பு, சிவப்பு, வெளுப்பு

இந்தத் தலைப்பில் சுஜாதா குமுதத்தில் எழுத ஆரம்பித்தத் தொடர் கதையைப் பற்றிப் பேசப் போகிறேன். இக்கதை தொடங்கி சில வாரங்களுக்குள் நிறுத்தப் பட்டது. ஏனெனில் இது ஒரு ஜாதிப் பிரச்சினைக்கு வழி வகுக்கும் போல் தோன்றியது.ஆனால் சில வார இடைவெளிக்குப் பிறகு அதே கதையை சுஜாதா சில மாற்றங்களுடன் "ரத்தம் ஒரே நிறம்" என்றத் தலைப்பில் வெற்றிகரமாக அதே குமுதத்தில் எழுதி அவருக்கு எதிராக திரை மறைவில் வேலை செய்தவர் மூக்கை அறுத்தார்.

முதலில் எழுதப்பட்டக் கதையில் மாடன் என்னும் நாடார் ஜாதியைச் சேர்ந்த வாலிபனைப் பற்றி விவரிக்கப் பட்டது. அவன் தங்கை வெள்ளைக்காரன் வீட்டுக்கு வேலைக்காரியாகச் செல்கிறாள். காலம் 1857-ஆம் வருடத்துக்கு முந்தியது. அதில் வரும் வில்லன் வெள்ளைக்காரன் செங்கல்பட்டுக்கு வேட்டைக்கு செல்லும் தருணத்தில் கதை மேலே சொன்னபடி நிறுத்தப் பட்டது.

இப்போது இரண்டாம் கதைக்கு வருவோம். இதில் கதை செங்கல்பட்டு வேட்டையுடன் ஆரம்பிக்கிறது. வில்லன் கோட்டைக்குத் திரும்பும் வழியில் முத்துக்குமரன் (அதுதான் பெயர் என்று ஞாபகம்) என்பவனுடன் சன்டை போட்டு அவன் அப்பாவைக் கொன்று விடுகிறான்.

இரண்டாம் கதை போன போகிலிருந்து என்னால் சில விஷயஙளை ஊகிக்க முடிந்தது.முதல் கதை நிறுத்தப்படாமல் இருந்திருந்தால் என்ன ஆகியிருக்கும்? முத்துக்கருப்பன் யானையடியில் வைத்துக் கொல்லப்பட்டிருப்பான். மாடன் தப்பித்துச் சென்று முத்துக்குமரன் காதலியொடு சேர்ந்து வட இந்தியா சென்றிருப்பான். மாடன் தன் தங்கையைக் கொன்றதிற்காக வில்லன் வெள்ளைக்கரானை பழி வாங்கத் திட்டம் தீட்டியுருப்பான். அது நடக்காதலால் இரண்டாம் கதையில் கொல்லப்படுவதற்கென்று ஒரு கொள்ளைக்காரன் தாண்டவராயன் வர வேன்டியிருந்தது. ஆக முத்துக்குமரனுக்கு ஒரு பதவி உயர்வு.

இக்கதையால் உருவானப் பிரச்சினைகளைப் பற்றி பிற்காலத்தில் சுஜாதா எழுதும்போது எஸ்.ஏ.பி அச்சமயம் தனக்குப் பொறுமையாக இந்த விஷய்த்தின் கருப்பு, சிவப்பு மற்றும் வெளுப்பு பற்றிக் கூறியது பற்றிக் குறிப்பிட்டிருந்தார். இந்தப் பிரச்சினையில் எஸ்.ஏ.பி மற்றும் சுஜாதா பெருந்தன்மையாக நடந்துக் கொண்டனர்.

ஆனாலும் சுஜாதா ஓரிரு முறை இது பற்றி வேடிக்கையாகக் கோடி காட்டியுள்ளர். கணேஷ் ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் ஜாதியைப் பற்றிக் கூற, வசந்த் கூறுவான்: "பாஸ் வேண்டாம். தொடர்கதையை நிறுத்திருவாங்க" என்று.கதை முடிந்ததும் சுஜாதா வெளியிட்டிருந்த சான்றுச் சுட்டிகள் மிக அருமை. இக்கதையில் வந்த நீல் என்பவன்தான் நீலன் துரை என்று ஊகிக்கிறேன். அவனது சிலை வெல்லிங்டன் தியேட்டர் எதிரில் வைக்கப் பட்டிருந்தது என்றும் பொது மக்கள் போராட்டத்துக்குப் பிறகு அது அகற்றப்பட்டது என்றும் படித்ததாக ஞாபகம். அந்த இடம் சிலைகளுக்கு ராசியில்லாத இடம் என்று எனக்குப் படுகிறது. திரு. மு. க. அவர்கள் சிலையும் அந்த இடத்தில் இருந்தது. எம்.ஜி.ஆர். இறந்த சமயத்தில் பொது மக்களால் சேதம் செய்யப் பட்டது.

அன்புடன்,
டோண்டு ராகவன்

11/11/2004

வலைப்பதிவின் கீழ் காண்பிக்கப்படும் நேரம் மற்றும் தேதி

வலைப்பதிவின் கீழ் காண்பிக்கப்படும் நேரம் மற்றும் தேதி இந்திய நேரப்படியா அல்லது வேறு ஏதாவதா? உதாரணத்துக்கு இப்போது இந்திய நேரம் பிற்பகல் 2.36, தேதி 11. ஆனால் வலை பதிக்கும் பெட்டியின் கீழ் நேரம் விடியற்காலை 1.44 தேதி 11. எது சரி? ஒரு வேளை அமெரிக்க நேரமோ? யாராவது கூறுவார்களா?

11/10/2004

ஹாரி பாட்டர் புத்தகங்கள் படிப்பதுண்டா?

நான் அவற்றை மிக விரும்பிப் படிப்பேன். ஆங்கிலத்தில் மட்டுமின்றி ஜெர்மன் மற்றும் பிரென்சு மொழிகளிலும் படித்து ரசித்துள்ளேன். அருமையான மொழி பெயர்ப்புகள் அவை. ஆங்கில மூலத்தில் உள்ள மேஜிக் அப்படியே மொழி பெயர்ப்பிலும் பார்த்து மகிழ்ந்தேன். நானும் ஒரு மொழி பெயர்ப்பாளன் என்ற வகையில் என் சகாக்களின் திறமையில் மிகப் பெருமைக் கொள்கிறேன்.
அவ்வகையில் கா.ஸ்ரீ.ஸ்ரீயின் வி.ச. காண்டேகரின் யயாதியின் தமிழாக்கம் மிக அருமையானது. முதல் பாகம் மட்டும்தான் வந்தது. கா.ஸ்ரீ.ஸ்ரீ அவர்கள் வீட்டுக்குச் சென்று (1986-ல்) கேட்டப் பொழுது 2-ஆம் பாகம் எழுதவில்லை என்று கூறி விட்டார். எனக்கு மிகுந்த ஏமாற்றம். ஆனாலும் யயாதியை முழுமையாக படிக்க வேண்டும் என்று ஆசைப் பட்டேன். மராத்தி தெரியாது. அதனால் என்ன? ஹிந்தி தெரியுமே! எங்கள் அலுவலக (ஐ.டி.பி.எல்.) நூலகத்திலிருந்து எடுத்து 2-ஆம் பாகமும் படித்தேன். குறை தீர்ந்தது.
மொழி பெயர்ப்பது ஒரு நல்லக் கலை என்பதே நான் கூற விரும்புவது.

வலைப் பதிவில் எதிர்க் கொள்ளும் உபத்திரவங்கள்

முதலில் நேரம் மற்றும் தேதி ஆகியவை ஒவ்வொரு முறையும் ஞாபகமாக மேன்யுவலாக பதிக்க வேண்டியிருக்கிறது. இது ஆட்டமேட்டிக் ஆகப் பதிந்தால் நலம். இதற்கு முந்தையப் பதிவில் அதை மறந்ததால் சரியான நேரம் பதிவாகவில்லை. என்ன செய்வது? பிழையிலிருந்துக் கற்றுக் கொள்ள வேண்டியதுதான்.

ஒரு புதியப் பதிவை பதிக்க சுற்றி வளைத்துச் செயல் பட வேண்டியிருக்கிறது. Profile>Edit profile>Dashboard என்று மூக்கைச் சுற்றித் தொட வேண்டியிருக்கிறது. இதற்கு எதாவது மாற்று ஏற்பாடு செய்தல் நலம்.

இன்னொரு வகையில் பார்த்தால் இதுவும் நல்லதுக்கே என்றே தோன்றுகிறது. ஜாக்கிரதையாக இருப்போம் அல்லவா?

விளக்கங்கள் அளித்த பத்ரி அவர்களுக்கு என் நன்றி.

அன்புடன்,
டோண்டு ராகவன்

கணேஷ் மற்றும் வசந்த் இருவரும் ஒருவரே

சுஜாதாவின் கணேஷ் மற்றும் வசந்த் இருவரும் ஒருவரே என்பதில் எனக்கு ஐயமில்லை. அவர் கதைகளை ஆதி காலத்திலிருந்தே படித்து வருபவன். "நைலான் கயிறு" கணேஷ் இப்போதைய வசந்த் போலவே செயல் பட்டிருப்பார். "அனிதா இளம் மனைவி" யில் கராத்தே சண்டை கூடப் போட்டிருப்பார். காலப் போக்கில் வசந்த் தேவைப் பட்டிருக்கிறார்.

"பிரியா" திரையாக்கத்தைப் பார்த்து திடுக்கிட்டேன். கணேஷை ஒரு சூப்பர்மேன் ரேஞ்சுக்கு அதில் காண்பித்து இருந்தார்கள். இந்த அழகில் அவருக்குக் கல்யாணம் வேறு செய்து விட்டார்கள்! சுஜாதா ஏ.வி.எம். மேல் கேஸ் கூடப் போட்டிருக்கலாம். அந்த அளவுக்கு அது ஒப்பந்த மீறல் ஆகும். ஏனெனில் அவர்கள் பிரியா கதைக்கு மட்டும்தான் உரிமை வாங்கியிருப்பார்கள். கணேஷ் என்பவர் கட்டை பிரம்மச்சாரி. இப்போதும் கூட.

இதையெல்லாம் பார்த்துத்தான் கணேஷ் வசந்தை தனித்தனியாகப் பிரித்தார் சுஜாதா என்பது என் கருத்து. கணேஷின் பயங்கள் மற்றும் சந்தேகங்கள் ஆகியவையும் அவ்வப்போது காண்பிக்கப் படுகின்றன. உதாரணம்: "கணேஷ் Vs வசந்த்". பிரியா படம் வெளி வந்த உடனேயே சுஜாதா தன் அதிருப்தியை ஒரு கதையில் நாசுக்காக வசந்த் வாய் மொழி மூலம் காண்பித்து இருப்பார்.

ஆகவே கணேஷ் மற்றும் வசந்த் இருவரும் ஒருவரே என்பதில் எனக்கு ஐயமில்லை.சுஜாதா வாசகர்களின் கருத்து என்ன?

பின் குறிப்பு:
காந்தளூர் வசந்த குமாரன் கதையிலும் கூட கணேஷ் (கணேச பட்டர்) மற்றும் வசந்த் (வசந்த குமாரன்) வருகிறார்கள். மிகவும் ரசித்தேன். முக்கியமாக வசந்த குமாரனின் சேட்டைகளை. நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?

அன்புடன்,
டோண்டு ராகவன்

11/09/2004

வலைப் பதிப்பது அவ்வளவு எளிது இல்லைப் போலும்

உயிரைக் கொடுத்து ஒரு பத்தி அடித்து உள்ளிட்டேன். வலைப்பூவாக பதிப்பும் செய்தேன். பிறகு கணினியை மூடி விட்டு கடைக்குச் சென்றேன். திரும்பி வந்து கணினியைத் திறந்தால் மூடுவதற்கு முன்பு பதித்தது காற்றோடு போயே போச்சு. என்ன தவறு நடந்திருக்கும் என்பது பிடிபடவேயில்லை. பரவாயில்லை. தொலைந்தது ஒன்றும் பெரிய காவியமில்லை. போனால் போகட்டும் போடா என்று பாடி விட்டுப் பயணத்தைத் தொடங்க வேண்டியதுதான்.

நான் ஒரு மொழிபெயர்ப்பாளன் என்பதை என் விவரஙளிலிருந்து ஏற்கனவே நீங்கள் அறிவீற்கள். மொழிபெயர்ப்பது வேற்று மொழியிலிருந்து தாய் மொழிக்குத்தான் இருக்க வேண்டும் என்பது உலகளாவியக் கொள்கை ஆகும். அதாவது ஜெர்மன் மற்றும் பிரென்சிலிருந்து ஆங்கிலத்துக்கு நான் மொழி பெயர்க்கலாம். எதிர் திசையில் அல்ல என்று சாணக்கியர் அர்த்த சாத்திரத்தில் எழுதிவிட்டப் பாவனையில் எல்லோரும் அலட்டிக் கொள்வார்கள். இந்த நிலை எடுப்பவர்களில் ஐரோப்பியர்கள் மற்றும் அமெரிக்கர்கள் முக்கியமானவர்கள்.

அது தவறு என்று நான் கூற மாட்டேன். ஆனால் எல்ல விதிகளுக்கும் விதி விலக்கு உண்டு அல்லவா? அதைத்தான் நானும் மற்றவர்களும் கூறுவது. இது பற்றி விவாதங்கள் மிகத் தீவிரமாக நடக்கின்றன. மொழிபெயர்ப்பாளர்களுக்கான வாசலில் (www.proz.com) இவை காணக் கிடைக்கும்.

அன்புடன்,
டோண்டு ராகவப்

11/08/2004

ஒரு சிறு தவறு முதல் பதிவில்




யூனி கோட் முறையில் தட்டச்சு செய்யும் போது மிகக் கவனம் தேவை. இல்லையென்றால் என் முதல் பதிவில் ஏற்பட்டது போல் நடந்து விடும். கவனக் குறைவில் கடைசி வரி அடிக்கும் போது மேல் பெட்டியில் அடிக்க வேண்டியதை கீழ் பெட்டியில் அடித்துத் தொலைத்து விட்டேன். விளைவை நீங்களே பார்க்கலாம்.

நிற்க. டோண்டு என்பது என் வீட்டில் எனக்களித்தச் செல்லப் பெயர். நான் சிறுவனாக இருந்த காலத்தில் அப்பெயர் மிக அவமானகரமாகத் தோன்றியது. முக்கியமாக என் பள்ளி நண்பர்களுக்கு அது தெரியக் கூடாது என்பதில் பிடிவாதமாக இருந்தேன். ஆனால் காலம் செல்லச் செல்ல அப்பெயர் பிடிக்க ஆரம்பித்து விட்டது. ஏனெனில் அது எனக்கு மட்டும் உரித்தான தனி அடையாளமாக ஆகி விட்டது.

டோண்டு

இதோ வந்தேன் டோண்டு

வலைப்பூ பதிப்பது இவ்வளவு எளிதாக இருக்கும் என்று கனவிலும் எண்ணியது இல்லை. தமிழில் தட்டச்சு செய்கிறோம் என்பதைப் பார்க்க மிக்க மகிழ்ச்சி ஏற்படுகிறது.
நான் ஒரு மொழிபெயர்ப்பாளன். ஜெர்மன் மற்றும் பிரெஞ்சு மொழிகளிலிருந்து ஆங்கிலத்துக்கும் ஆங்கிலத்திலிருந்து ஜெர்மன் மற்றும் பிரெஞ்சு மொழிகளுக்கும் மொழி பெயர்ப்பது என் வேலை. மின் பொறியியலில் பட்டம் பெற்று அத்துறையில் 23 வருடம் வேலை செய்த அனுபவம் உண்டு. மொழி பெயர்ப்பாளனாக ஜெர்மன் மற்றும் பிரெஞ்சு மொழிகளில் 26 வருடங்களுக்கு மேல் அனுபவம் உண்டு. புத்தகஙள் படிப்பதில் மிக்க விருப்பம்.
என் கன்னி முயற்சிக்கு சக வலைப்பதிவாளர்களின் ஒத்துழைப்பை எதிர் பார்க்கிறேன். பின் வரும் வலைப்பூக்களில் மீண்டும் எழுதுவேன்.

அன்புடன்,
டோண்டு ராகவன்
 

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது