சென்னையில் படிப்பு முடிந்து ஒரு வருடம் வேலையில்லாமல் இருந்தேன். ஜெர்மன் படித்து வந்ததால் மனம் ரொம்ப அலைபாயவில்லை. அப்போதெல்லாம் இஞ்ஜினீயரிங் படித்தவர்களுக்கு வேலை கிடைப்பது குதிரைக் கொம்பு. எங்கள் நம்பிக்கை தமிழ்நாடு மின்வாரியம்தான். இளநிலை பொறியாளர் பதவிதான் எங்கள் குறி.
மேக்ஸ்ம்யுல்லர் பவன் அப்போது அண்ணா சாலையில் இருந்தது. பக்கத்திலேயே பிரிட்டிஷ் கௌன்ஸில், அமெரிக்க நூலகம் மற்றும் தேவநேயப் பாவாணர் நூலகம். பிரெஞ்சு நூலகமும் அதே பகுதியில்தான் ஆனால் அப்போது என் பிரெஞ்சு தொடர்பு இன்னும் உருவாகவில்லை. இதையெல்லாம் ஏன் கூறுகிறேன் என்றால், மின்வாரிய அலுவலகம் கூட இந்த இடத்திற்கு அருகிலேயே இருந்தது. ஆகவே என் ஆசையெல்லாம் இங்கு வேலையில் சேர்ந்து எல்லா நூலகங்களுக்கும் தாராளமாக விசிட் செய்ய வேண்டும் என்பதுதான். ஆனால் மின்வாரியத்தில் வேலை கிடைக்கவில்லை. பம்பாயில்தான் வேலை கிடைத்தது.
ஆனால் என்ன வேடிக்கை பாருங்கள். என் அலுவலகம் இருந்தது நியூ மரைன்லைன்ஸில். அமெரிக்கன் லைப்ரரி எதிர் பில்டிங்கில். பிரிட்டிஷ் கௌன்ஸில் ஐந்து நிமிட நடை தூரத்தில். மேக்ஸ் ம்யுல்லர் பவனும் எதிர் பில்டிங்கில். ஆசை தீர எல்லா நூலகங்களுக்கும் செல்வேன். அதாவது, பகவான் என் ஆசையை நிறைவேற்றினார், ஆனால் வேறு ஒரு நகரத்தில். அது சரி தானம் கொடுத்த மாட்டின் பாலையா பிடித்து பார்ப்பது. கிடைப்பதை வைத்து சந்தோஷப்பட வேண்டியதுதான் டோண்டு.
நான் ரொம்ப நியாய மனப்பான்மை கொண்டவன். பத்து மணி ஆபீசுக்கு பத்தரை மணிக்கெல்லாம் வீட்டிலிருந்து புறப்பட்டு, கன்ஸர்ன்ஸில் சாப்பிட்டுவிட்டு 11 மணிக்கு மாதுங்காவில் வண்டி பிடித்து 11.45 அளவில் ஆபீஸ் போய் சேருவேன். லேட்டாக போனதுக்கு ஈடு செய்வதற்காக மாலை சற்று சீக்கிரமே கிளம்பி விடுவேன். என்ன காதில் புகையெல்லாம் வருகிறதா? எங்கள் அலுவலகத்தில் 8 இளம்பொறியாளர்கள். எல்லோரும் ஒரே கேபினில்தான். எல்லாம் இளவட்டங்கள். கொட்டம்தான். வேலையெல்லாம் ரொம்ப இல்லை. அதனால்தான் நாங்கள் இஷ்டப்பட்டபடி போய் வர முடிந்தது.
பம்பாயில் மழைக்காலம் என்றாலே தொல்லைதான். அப்படிப் பேய்மழை பெய்யும். இதிலும் கஷ்டம் என்னவென்றால் ஹைடைட் இருக்கும்போது மழைபெய்தால் கடல்நீரும் சாக்கடைகள் வழியாக ஊருக்குள் வந்துவிடும். எல்லா தெருக்களும் தண்ணீரில் மிதக்கும். அப்படிப்பட்ட தினத்திற்கென்று நான் ஒரு ரொட்டீன் வைத்திருந்தேன். அதாவது, விடிகாலை 7 மணிக்கு கழுத்தை நீட்டி ஜன்னல் வழியாக பார்ப்பது. மழை நன்றாகப் பெய்துகொண்டிருந்தால் மறுபடி படுக்கையில் முடங்க வேண்டியது. சிறிது நேர கோழித்தூக்கத்திற்குப் பிறகு 9 மணியளவில் எழுந்து காலைக் கடன்களை முடிப்பது. அதற்குள் மற்ற அசடுகள் எல்லாம் அரக்க பரக்க குளித்து ஆபீஸுக்கு குடையை எடுத்துக் கொண்டு கிளம்பியிருக்கும். பாத்ரூம் காலியாக இருக்கும். ஆனந்தமாக கீஸர் போட்டுக் குளித்து விடுவேன். அதற்குள் வேலைக்காரன் டோண்டு (உண்மையாகவே அதுதான் அவன் பெயர், நம்புங்கள்) ஜிம்கானாவிலிருந்து பிளாஸ்கில் காப்பி வாங்கி வைத்திருப்பான். அதை குடித்து விட்டு சிறிது நேரம் பால்கனியிலிருந்து மழையை வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பேன். 11.30 மணியளவில் கன்ஸர்ன்ஸில் சாப்பிட்டு விட்டு, பக்கத்து அரோரா தியேட்டரில் மார்ணிங் ஷோ. பிறகு ரூமுக்கு வந்து ஆனந்த தூக்கம்தான்.
காலையில் போன அசடுகள் மணிக்கணக்காக பயணம் செய்து அலுவலகம் செல்லும்போது பிற்பகலாயிருக்கும். அரை மணியிலேயே கிளம்பி அதே மாதிரி மணிக்கணக்கில் பயணம் செய்து ஜலதோஷத்துடன் திரும்புவார்கள், மாலை 7 மணி வாக்கில். நான் பிரெஷ்ஷாக ரூமிலேயே இருந்ததைப் பார்த்து வயிறெரிவார்கள்.
மூன்றரை வருடம் போனதே தெரியவில்லை. மற்ற பம்பாய் நினைவுகளை பின்வரும் பதிவுகளில் கூறுவேன்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
நம்மை நாம் பரிசளித்தல்
-
The daughter of kumari Amazon One million footsteps Amazon Chasing the Yeti
Amazon Stories of the true Amazon The Abyss Jeyamohan ஜெயமோகன் ஆங்கில
நூல்கள் உ...
19 hours ago

11 comments:
உள்ளதை உள்ளபடி சொன்னீர்கள் உள்ளபடியே உத்தமர் சார் நீங்கள்
என்னார்
நன்றி ராஜ், என்னார் அவர்களே.
அன்புடன்,
டோண்டு ராகவன்
அப்போதைய மழைக்காலம் தற்போதைய மும்பை மழை போல் இருக்குமா?
"அப்போதைய மழைக்காலம் தற்போதைய மும்பை மழை போல் இருக்குமா?"
கண்டிப்பாக இருந்தது. சமீபத்தில் ரிகார்ட்ப்ரேக்கிங் மழை பெய்ததல்லவா. அதன் முந்தைய ரிகார்ட் ஜூலை 1974, ஐந்தாம் தேதி இரவு பதிவாயிற்று. அப்போது நான் பம்பாயில்தான் இருந்தேன்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
//லேட்டாக போனதுக்கு ஈடு செய்வதற்காக மாலை சற்று சீக்கிரமே கிளம்பி விடுவேன்.//
பிரன்ச்சில் சொல்லுவார்கள் you can't be late twice in a day..
அரசு ஊழியர்களைப்பற்றி சொல்லும்போது " Those who come late cross those who leave early "
comme dirait COLUCHE..
டோண்டு சார்... இந்த பதிவைப் படிச்சதும் தோணினது, ' பாவி மனுஷா. அனுபவிச்சிருக்கய்யா' தான். அப்படியே சொன்னதுக்கு கோவிச்சுக்க மாட்டீங்கதானே?
நிர்மலா.
நன்றி நிர்மலா அவர்களே, கண்டிப்பாக கோபித்துக் கொள்ள மாட்டேன். இன்னும் பல நல்ல விஷயங்களை நான் பம்பாயில் அனுபவித்தேன். அவற்றையும் எழுதுவேன்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
ஐயோ, ஐயோ,
வயிறு எரியுது சாரே. எப்படியெல்லாம் அனுபவிச்சிருக்கீங்க!
சேத்தன் சம்பத்
மேலே பின்னூட்டம் போட்டிருக்கும் சேத்தன் சம்பத் போலி என்று சொல்லிகொள்கிறேன். நான் தான் ஒரிஜினல்.
(ஒரிஜினல்) சேத்தன் சம்பத்
///மூன்றரை வருடம் போனதே தெரியவில்லை. மற்ற பம்பாய் நினைவுகளை பின்வரும் பதிவுகளில் கூறுவேன்.///
இங்கனதான் டருஜாகுறாங்க மக்கள்..::ஓஓஓ
//இங்கனதான் டருஜாகுறாங்க மக்கள்..::ஓஓஓ//
பதவுரை ப்ளீஸ்.
பரண்ல வந்திட்டுது போல. திடீர்னு பின்னூட்டம் வந்ததும் ஒண்ணும் புரியல்ல. பரணை பாத்தப்பறம்தான் புரிஞ்சுது.
அன்புடன்,
டோண்டு ராகவன்
Post a Comment