11/25/2006

படகில் மூவர், அதில் நாயை மறக்கலாகுமா? - 4

முதல் பதிவு
இரண்டாம் பதிவு
மூன்றாம் பதிவு

இனிமேல் என்ன, மாண்ட்மொரென்ஸியை அலட்சியம் செய்து, வரைபடங்களை பிரித்து என்ன செய்யலாம் என்று திட்டமிட்டோம்.

வரும் சனிக்கிழமை மாலை கிங்ஸ்டனிலிருந்து புறப்படுவது என்று தீர்மானித்தோம். ஹாரிஸும் நானும் வரும் சனிக்கிழமை காலையில் புறப்பட்டு படகை ஒரு குறிப்பிட்ட இடத்துக்கு செலுத்துவது, அங்கு ஜார்ஜ் எங்களுடன் சேர்ந்து கொள்வது என்று தீர்மானமாயிற்று. ஜார்ஜ் சனியன்று மதியம்தான் வர முடியும். (அவன் தினமும் காலை பத்திலிருந்து பிற்பகல் நான்கு வரை ஒரு பேங்குக்கு தூங்கச் செல்வான், சனிக்கிழமை தவிர, ஏனெனில் அன்றைக்கு அவனை பிற்பகல் இரண்டு மணிக்கே எழுப்பி வெளியில் துரத்தி விடுவார்கள்).

இரவுகள் எதில் கழிப்பது? சாவடிகளிலா அல்லது கூடாரம் அடித்து வெளியில் தங்கப் போகிறோமா?
எனக்கும் ஜார்ஜுக்கும் கூடாரம் அடிக்கும் யோசனை பிடித்திருந்தது. அது ரொம்ப சவால் நிறைந்ததாகவும் விடுதலை எண்ணத்தைத் தூண்டுவதாகவும் அமையும் என்று நாங்கள் இருவரும் அபிப்பிராயப்பட்டோம்.

மேகங்கள் சூரியனின் வெப்பத்தை மறந்த நிலையில் இரவு திருடன் போல வரும். உற்சாகம் இழந்த குழந்தைகள் போல் பறவைகள் பாடுவதை நிறுத்தி கூடுகளுக்குள் சென்று புகுந்து கொள்ளும். தூரத்தில் எங்கோ ஒரு சேவல் மாலையை காலையாக எண்ணி கொக்கரொக்கோ என்று கத்திப் பார்க்கும். மற்ற சேவல்கள் அந்தக் கத்தலை அலட்சியம் செய்ய, திகைப்புடன் கக் கக் என்று கத்திக் கொண்டே அது இங்குமங்கும் ஓடும். படகு நதியில் மெதுவாகச் செல்லும். துடுப்பு ப்ளக் ப்ளக் என்று தண்ணீரில் மூழ்கி எழ்ந்திருக்கும் ஒலி மட்டும் கேட்கும்.

நதியின் இரு கரைகளிலும் உள்ள மரங்கள் கையெழுத்து மறையும் அந்த வேளையில் பெரிய பூதங்கள் போலக் காட்சி தரும்.



பிறகு நாங்கள் படகை ஒரு வாட்டமான இடத்தில் நிறுத்தி, கரையிலிருக்கும் ஒரு மரத்துடன் கட்டுவோம். பிறகு கூடாரம் அடிப்போம். எளிமையான உணவை சமையல் செய்து அமைதியான சூழ்நிலையில் உண்போம். பிறகு ஆளுக்கு ஒரு பைப் புகைத்துக் கொண்டு ஒருவருக்கொருவர் மிருதுவானத் தொனியில் பேசிக் கொள்வோம். அவ்வப்போது எங்கள் பேச்சுடன் படகு அசைந்து தண்ணீரில் எழுப்பும் சளக் புளக் என்ற சப்தம் கேட்கும். மரத்தின் மேலிருந்து சிறுபழங்கள் தண்ணீரில் விழுந்து "குளுகு குளுகு" என்று சப்தம் எழுப்பும். இந்த நதியும் எவ்வளவு சரித்திர நிகழ்ச்சிகளுக்கு மௌன சாட்சியாக இருந்திருக்கிறது! அது மட்டும் கதை சொல்ல ஆரம்பித்தால்....

திடீரென ஹாரிஸ் கேட்டான், "ஆமா, மழை பெஞ்சா என்ன பண்ணறது?"

இந்த ஹாரிஸிடம் இதுதான் கஷ்டம். கவிதை என்றால் கிலோ என்ன விலை எனக் கேட்பான்.

"ஏனென்று கூற முடியாத மெல்லிய அழுகை" என்றால் என்ன என்று கேட்கக் கூடியவன் அவன். அவனுக்கு கண்ணீர் வந்தால் பயல் வெங்காயம் உரிக்கிறான் என்று பொருள்.



அவனுடன் நீங்கள் கடற்கரையில் நின்று கொண்டிருக்கிறீர்கள். மாலை கையெழுத்து மறையும் நேரம். நீங்கள் கூறுகிறீர்கள், "கேள் ஹாரிஸ், தூரத்தில் அந்தக் கடல் கன்னி தன் காதலனை இசை ரூபத்தில் அழைப்பதைக் கேட்கவில்லையா. அந்த உருக்கமானக் கதையைக் கேட்டுள்ளாயோ? என்று".

ஹாரிஸ் உணர்ச்சிவசப்பட்டு உங்கள் கையைப் பற்றிக் கொள்வான். "மச்சி நான் பயந்தா மாறியே ஆச்சும்மா. உனக்கு ஏதோ ஜல்ப்பு பிடிச்சிருக்கு. இப்படியே இந்த ரோட்டோரம் போய் முக்கு திரும்பினா நமக்கு வேண்டப்பட்டவனோட சாராயக் கடை இருக்கு. ஆளுக்கு ஒரு கட்டிங்க் போட்டுக்கலாம், வா. உனக்கு உடனே குணமாயிடும்" என்பான். எந்த ஊருக்குப் போனாலும் அங்கே ஹாரிஸ் "முக்குத் திரும்பினா வரும்" சாராயக் கடையைக் கண்டுபிடித்து விடுவான். அவனை நீங்கள் சொர்க்கத்தில் சந்தித்தாலும் அங்கே உங்களைப் பார்த்து, "இப்படியே இந்த ஒத்தையடிப் பாதை வழியாப் போயி முக்குத் திரும்பினா அருமையான அமிர்தக் கடை ஒண்ணு இருக்கு" என்பான்.

எது எப்படியானாலும் இம்முறை ஹாரிஸ் கூறியதும் யோசிக்கத் தகுந்ததே. மழையில் மைதானத்தில் முகாமிடுவது ரொம்ப பேஜார் பிடித்த வேலையாக்கும்.

மாலை நேரம். எல்லோரும் களைப்பாக இருக்கிறீர்கள். நல்ல மழை. படகில் இரண்டு அங்குல உயரத்துக்குத் நீர் தேங்கியுள்ளது. எல்லாம் நனைந்த நிலையில். கரையில் சுமாராகத் தண்ணிர் தேங்காத இடத்தைக் கஷ்டப்பட்டு கண்டு பிடிக்கிறீர்கள். அந்த இடத்தில் கூடார சாமான்களை இறக்குகிறீர்கள். உங்கள் மூவரில் இருவர் கூடாரம் அடிக்கும் வேலையில் ஈடுபடுகிறீர்கள்.

அது நொசநொசவென்று ஈரத்துடன் இருக்கிறது. உங்கள் பேச்சுக்கு மதிப்பு கொடுக்காது தொளபுளவென்று ஆடி உங்கள் மேல் அன்புடன் கவிந்து கொள்கிறது. மழையோ ஜோ எனப் பெய்கிறது. உங்களுக்கு கோபமாக வருகிறது. மழை இல்லாதபோதே கூடாரம் எழுப்புவது சள்ளையான வேலை. மழை இருந்தால்? சொல்லவே வேண்டாம். உங்களுக்கு உதவி செய்வதற்கு பதில் இன்னொருவன் வேண்டுமென்றே உங்களை வெறுப்பேற்றுகிறான். நீங்கள் உங்கள் பக்கம் ஒரு வழியாக ஆணி அடித்து பொருத்தினால், அடுத்தவன் அப்போதுதான் தன் பக்கம் வேகமாக இழுக்க, பொருத்தியது எல்லாம் பிடுங்கிக் கொண்டு வருகிறது.

"ஏய், என்ன பண்ணறே நீ!" என்று நீங்கள் கத்துகிறீர்கள்.

"நீ என்ன பண்ணறே, அதைச் சொல்லு முதல்லே?" என்று அவன் கத்துகிறான்; "கொஞ்சம் லூஸ் விடுப்பா, மாட்டியா?"

"நீ விடுப்பா; செய்யறதெல்லாம தப்பாயிட்டு், முட்டாளே!" இது நீங்கள்.

"நீதான் அது," அவன் பதிலுக்குக் கத்துகிறான்; "கொஞ்சம் லூஸு விடுடா கம்னாட்டி!"

அப்படியே எல்லாத்தையும் விட்டுட்டு, கூடாரத்தை சுற்றி எதிர்ப்பக்கம் போகிறீர்கள், அவனை ஒரு வழி பண்ண. அவனும் அதே ஐடியாவுடன் இருக்க, இருவரும் உறுமிக் கொண்டு கூடாரத்தை சுற்றி இரு முறை செல்கிறீர்கள்.

இதற்கிடையில் படகில் இருப்பவன் மூடும் சொல்லிக் கொள்வது போல இல்லைதான். பத்து நிமிடங்களாக விடாப்பிடியாக உலகில் உள்ள எல்லோரையும் திட்டிக் கொண்டிருக்கிறான் அவன். படகிலிருந்து தண்ணீர் இறைத்து மாளவில்லை அவனுக்கு. கூடாரத்துக்கு அருகில் வந்து இத்தனை நேரம் என்ன பிடுங்கிக் கொண்டிருந்தீர்கள் என்று அன்புடன் வேறு கேட்கிறான்.

ஒரு வழியாக கூடாரம் எழும்பியாயிற்று. கரையில் சாமான்களை இறக்கியாயிற்று. விறகடுப்பு ஏற்ற வழியில்லை. கெரசின் ஸ்டவ் ஏற்ற வேண்டியிருக்கிறது. இப்போது சாப்பாடு. முக்கிய உணவு மழைத் தண்ணீர்தான். பிரெட், பீஃப், ஜாம், வெண்ணை, உப்பு நீர், என்று எல்லாம் மழை மயம். ஏதோ கைவசம் புட்டி இருந்ததோ பிழைத்தீர்களோ. அதிலும் மழைநீர் புகுந்து கொள்ளும் முன்னமே வேமாக விழுங்கி வைக்கிறீர்கள். பிறகு படுக்கச் செல்கிறீர்கள். நடு இரவில் ஒரு யானை வந்து உங்கள் மார்பு மேல் அன்புடன் உட்கார்ந்து கொள்கிறது. எரிமலை வெடித்து நீங்கள் கடலுக்கடியில் செல்கிறீர்கள். சட்டென்று விழித்துப் பார்த்தால் கூடாரம் உங்கள் மேல் விழுந்து விட்டிருக்கிறது. அப்படியும் இப்படியும் குதித்து பார்த்தால் மெதுவாக உங்கள் தலை கூடாரத்தின் ஒரு ஒட்டையிலிருந்து வெளியே வருகிறது. உங்களுக்கு இரண்டடி தொலைவில் ஒரு ரௌடி நின்றிருக்கிறன். அவனை அடிக்கப் போகிறார்கள். அவனும் உங்களை அடிக்க வருகிறான். கடைசி நிமிடத்தில் ஒருவரை ஒருவர் அடையாளம் கண்டு கொள்கிறீர்கள்.

"நீயா", என்று ஒரு சேரக் கத்துகிறீர்கள்.

மூன்றாவது ஆளைத் தேடுகிறீர்கள, இருவரும் சேர்ந்து. சற்று பலவீனமாகக் கத்திக் கொண்டு அவன் தலையும் வெளியே வருகிறது. நீங்கள் இருவரும் சேர்ந்து கொண்டு வேண்டுமென்றே அவ்வாறு செய்துள்ளதசக அவன் பலமாக நம்புகிறான்.

அடுத்த நாள் காலை மூவருக்கும் பயங்கர ஜல்ப்பு. பேசக் கூட இயலவில்லை. அடித்தொண்டையில் ஒருவர் இன்னொருவரைத் திட்டுகிறீர்கள்.

ஆகவே, மழை இல்லாத நாட்களில் டெண்ட்டில் தங்குவது என்றும், மழை இரவுகளில் சத்திரங்களில் தங்குவது எனத் தீர்மானித்தோம்.

மாண்ட்மரன்ஸிக்கு இந்த முடிவு ரொம்பப் பிடித்தது. அதற்கு தனிமையின் இனிமை எல்லாம் புரியாது. ஏதாவது பூனை, எலி, அணில் ஆகியவற்றைத் துரத்துவதே அதற்கு சொர்க்கம். முதல் தடவை அது என்னிடம் வந்தபோது அதைப் பார்த்தால் ரொம்பப் பாவமாக இருந்தது. இந்தப் பாவப்பட்ட உலகில் தேவதை போன்றிருந்த இந்த நாய் எவ்வளவு காலம் வாழப் போகிறதோ என்ற சோகமான நினைவு மனதைக் கவ்வியது. கண்களில் கண்ணீர் பெருகியது.

ஆனால் அது வந்த சில நாட்களிலேயே அது ஒன்பது அணில்கள், எட்டு கோழிகள், இரண்டு சேவல்கள் ஆகியவற்றைக் கொன்றது. பக்கத்து வீட்டுப் பாட்டியம்மாவை இரண்டு மணி நேரத்துக்கு ஒரு மரத்தின் மேல் கிளையில் எறும்புகள் கண்ட இடங்களில் கடிக்க உட்கார வைத்து கீழே காவல் புரிந்தது. பலருக்கு தண்டம் அழுத பின்னால் இந்த நாய் அவ்வளவு சீக்கிரம் கடவுளிடம் சென்று விடாது என்றும், நமக்கெல்லாம் சமாதி கட்டாமல் அது போகாது என்றும் ஆசுவாசம் ஏற்பட்டது.

தெருக்களில் வலம் வருவது, ஒரு குழு ரௌடி நாய்களுடன் கூட்டு சேர்ந்து, குழந்தைகள், பெரியவர்கள், தபால்காரர் என்று எல்லோரையும் பாரபட்சமில்லாமல் துரத்துவது ஆகிய நித்தியக் கடமைகளை செய்து விட்டு தினமும் திருப்தியுடன் அதே தேவதை முகத்துடன் உறங்கச் செல்வதுதான் தன் ஜன்மக் கடன் என்று அது நினைத்து உள்ளது. ஆகவே சத்திரங்களில் தங்குவதை அது பலமாக ஆமோதித்தது.

இதெல்லாம் முடிவு செய்த பிறகு என்னென்ன எடுத்துச் செல்வது என்பதில் விவாதம் ஆரம்பித்தது. ஹாரிஸ் சற்று நேரம் பிரேக் எடுத்துக் கொள்ளலாம் என்று அபிப்பிராயப்பட்டான். அதே தெருவில் முக்கு திரும்பினால் ஒரு கட்டிங்க் கடை புதிதாக வந்திருப்பதாக அவன் சித்தப்பா பையன் கூறியதாகக் கூறினான்.



ஜார்ஜும் தனக்கு ரொம்ப தாகம் எடுப்பதாகக் கூறினான். (ஜார்ஜுக்கு தாகம் இல்லாத நேரத்தை இதுவரை யாரும் கண்டிலர்); எனக்கும் சற்று ஏதேனும் அருந்தினால் தேவலை போல இருந்தது. ஆகவே எல்லோரும் தொப்பியை தலையில் போட்டுக் கொண்டு வெளியில் கிளம்பினோம்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

5 comments:

Bajji(#07096154083685964097) said...

இந்தப் புத்தகம் 100 ஆண்டுகளுக்கு மேல் பழமை வாய்ந்ததா? நம்பவே முடியவில்லை. இப்போதுதான் லைப்ரரியிலிருந்து எடுத்துப் படித்துக் கொண்டிருக்கிறேன்.

அவ்வப்போது கெக்கெக்கே என்று வேறு சிரித்து கொண்டிருக்கிறேன். முக்கியமாக அந்த சீஸை டிரெயினில் எடுத்துச் செல்லும் காட்சி, Oh God.

அந்த சீனை உங்கள் மொழிபெயர்ப்பிலும் காண ஆவல்.

கிருஷ்ணன்

dondu(#11168674346665545885) said...

பாலடைக் கட்டியை எடுத்துச் செல்லும் காட்சி எனக்கும் பிடிக்கும். அதை லைப்ரரியில் வைத்துப் படிக்கும்போது கடகடவென்று சிரித்து, அதன் பேரில் லைப்ரேரியன் என்னை வெளியேற்றினாலும் சிரிப்பு அடங்கவில்லைதான்.

கூடிய சீக்கிரம் அந்த சீனுக்கும் வருகிறேன்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

Anonymous said...

"அவ்வப்போது கெக்கெக்கே என்று வேறு சிரித்து கொண்டிருக்கிறேன். முக்கியமாக அந்த சீஸை டிரெயினில் எடுத்துச் செல்லும் காட்சி"

Where can I get the book, Dondu uncle?

Thangam

dondu(#11168674346665545885) said...

"Where can I get the book, Dondu uncle?"

இணையத்தில் ப்ராஜக்ட் கூட்டன்பெர்கில் முயற்சித்து பார்க்கவும். நான் அங்கிருந்துதான் பெற்றேன். சுட்டி நினைவில் இல்லை. கூகளிடவும்.

டோண்டு ராகவன்

ரவி said...

******** தனிமடல் அனுப்பியுள்ளேன் **********

 

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது