5/02/2006

படகில் மூவர், அதில் நாயை மறக்கலாகுமா? - 2

பகுதி - 1 இங்கே:

இப்போது கல்லீரல் கையேடு விஷயத்துக்குப் போவோம். அதை பற்றிய எல்லா அறிகுறிகளும் என்னுள் குடி கொண்டிருந்தன என்பது சந்தேகத்திடமின்றி வெளிப்படையானது. அவற்றில் முக்கியமானது "எந்த விதமான வேலையையும் மேற்கொள்ள மனமின்றி இருத்தல்."

என் கஷ்டத்தை வர்ணிக்க ஒரு நாவு போதாது. என் குழந்தைப் பருவத்திலிருந்தே நான் இதனால் அவதிப்படுகிறேன். சிறுவனாக இருந்தபோது இது என்னை ஒரு நாள்கூட விட்டகலவில்லை. அப்போது பெரியவர்களுக்கு இதன் காரணம் என் கல்லீரல் கோளாறே என்பது புரியவில்லை. மருத்துவ அறிவு இப்போதைப் போல (வருடம் 1889) அப்போது வளரவில்லை. ஆகவே நான் சோம்பேறி என்றே முடிவு கட்டினர்.

"ஏண்டா சோம்பேறி பையா, கொழுப்பா? மரியாதையா எழுந்து ஏதாவது உருப்படியான வேலை செய்து பணம் சம்பாதிக்கப் பாரடா நாயே" என்றுதான் அவர்கள் என்னை மிரட்டி வளர்த்தனர். அவர்களுக்கு என்னத் தெரியும் எனக்கு உடம்பு சரியில்லையென்று?

அவர்கள் எனக்கு மாத்திரை ஒன்றும் தரவில்லை. மண்டையில் அவ்வப்போது குட்டியதுடன் சரி. ஆனால் என்ன ஆச்சரியம்! ஒவ்வொரு முறை குட்டு வாங்கியதும் என் கல்லிரல் நிலை உடனே அப்போதைக்கு சரியாயிற்று. ஒரு புட்டி மாத்திரைகள் இப்போது தர முடியாத உடல் நலத்தை குட்டுகள் அச்சமயத்தில் உடனே தந்தன. நேரத்தை மேலும் வீணாக்காது உழைக்க ஆரம்பிக்க முடிந்தது.

அதுதான் வாழ்க்கை ஐயா. பல சமயங்களில் இம்மாதிரியான லகுவான பழையகால வைத்திய முறைகள் தற்சமயம் இருக்கும் மருத்துக் கடைகளை விட அதிகப் பலனை அளிக்கின்றன.

இதே மாதிரி நாங்கள் மூவரும் அடுத்த அரை மணி நேரத்துக்கு பேசிக் கொண்டிருந்தோம். எங்கள் நோய் அறிகுறிகளை ஒருவருக்கொருவர் பரிமாறிக் கொண்டோம். காலையில் எழுந்ததும் படும் கஷ்டங்களை நான் ஜார்ஜுக்கும் ஹாரிஸுக்கும் கூற, ஹாரிஸ் படுக்கப் போகும்போது அவன் படும் கஷ்டங்களைக் கூறினான். ஜார்ஜோ கணப்பருகே நின்று கொண்டு, தான் இரவில் படும் வேதனைகளை நடித்தே காட்டினான்.

உங்களுக்கு தனியாக ஒரு விஷயத்தை காதில் போடுவேன். இந்த ஜார்ஜ் பையனின் உடம்புக்கு ஒரு கேடும் இல்லை. அவன் என்னமோ தான் உடம்பு சரியில்லாதது போல பந்தா செய்கிறான்.

இதெல்லாம் நடந்து கொண்டிருக்கும்போது என் ஹவுஸ்கீப்பர் திருமதி போப்பெட்ஸ் என் அறைக் கதவைத் தட்டினார். இரவு உணவு தயார், நாங்கள் தயாரா என்று கேட்டார். ஒருவரையொருவர் பார்த்து சோகமாகப் புன்னகை செய்தோம். ஏதாவது வயிற்றுக்குள் தள்ளுவது நலம் என்று முடிவு செய்தோம். ஏதாவது உண்டால் நோயைக் கட்டுப்பாட்டுக்குள் வைக்கலாம் என்று ஹாரிஸ் அபிப்பிராயப்பட்டான். திருமதி போப்பெட்ஸ் சாப்பாட்டை அறைக்குள்ளேயே கொண்டு வந்தார். நாங்களும் ஆளுக்கு நான்கைந்து கறித் துண்டுகள், பழ கேக்குகள், பாற்றிட்ஜ், இரண்டு கப்புகள் ஐஸ்க்ரீம் மட்டும் எடுத்துக் கொண்டோம்.

எனக்கு நிஜமாகவே உடம்பு சரியில்லாமல்தான் இருந்திருக்க வேண்டும். அரைமணி நேரம் ஆகாரம் எடுத்துக் கொண்ட பிறகு பசியே போய்விட்டது. சீஸ் கூட வேண்டாம் என்று கூறிவிட்டேன். சாதாரணமாக சீஸ் எனக்கு பிடிக்கும்.

இந்தக் கடமை முடிந்ததும், கிளாஸ்களில் விஸ்கியை ஊற்றி, பைப்பைப் பற்றவைத்து, எங்கள் உடல்நிலை பற்றிய பேச்சைத் தொடர்ந்தோம். எங்கள் உடலில் நிஜமாக என்னக் கோளாறு என்பது எங்களுக்குத் தெரியாதுதான். ஆனாலும் இதில் மட்டும் ஏகோபித்தக் கருத்து கொண்டிருந்தோம். எந்தக் கோளாறாய் இருந்தாலும் சரி அது ரொம்பவும் அதிகமாகவே வேலை செய்ததால் வந்துள்ளது என்பதுதான் அது.

"நமக்கு வேண்டியத் ஓய்வு," என்றான் ஹாரிஸ்.

"ஓய்வு, அத்துடன் கூடவே ஒரு முழு மாறுதல்," என்று ஆமோதித்தான் ஜார்ஜ். "நமது மூளை ஒரு பெரிய அழுத்ததின் கீழ் இருந்ததால் ஒரு பொதுவான மனச் சோர்வு நம் எல்லோரையும் பாதித்துள்ளது. இட மாறுதல், கஷ்டப்பட்டு யோசிக்கவே தேவையில்லாத நிலை ஆகியவையால் நம் மனம் சமநிலையை எய்தும்."

ஜார்ஜின் அத்தைபிள்ளை ஒருவன் இருக்கிறான். சாதாரணமாக அவன் மாட்டிக் கொள்ளும் நியூசன்ஸ் கேஸ்களில் போலீசார் தாங்கள் தயாரிக்கும் சார்ஜ் ஷீட்டுகளில் அவனை மருத்துவக் கல்லூரி மாணவன் என்றே குறிப்பிடுவர். அவனோடு பழகி இவனுக்கும் மருத்துவ பந்தாவுடன் பேசும் பழக்கம் வந்து விட்டது.

ஜார்ஜ் கூறியதுடன் நான் ஒத்துப் போனேன். எங்காவது ஒரு மூலையில், கும்பல் இல்லாத இடத்தில் சில நாட்கள் கழிக்க வேண்டும். மூச்சை முட்டும் இந்த பத்தொன்பதாம் நூற்றாண்டு உலகத்தின் நெருக்கடியிலிருந்து விலகி இருக்க வேண்டும். ஒதுக்குப் புறமாய் ஓர் இடம், சோலைகள் சூழ்ந்த அதன் ஒற்றையடிப் பாதைகள் ஆகியவற்றை சிறிது நாட்கள் அனுபவிக்க வேண்டும் என்றெல்லாம் நான் யோசனை கூறினேன்.

ஹாரிஸோ அம்மாதிரி இடங்கள் ரொம்ப போர் என்றான். அங்கு இரவு எட்டு மணிக்கு மேல் தெருக்கள் வெறிச்சோடிக் கிடக்கும். குடிப்பதற்கு ஒன்றும் பணம் கொட்டிக் கொடுத்தாலும் கிடைக்காது. எதை வாங்க வேண்டுமானாலும் பத்து மைலுக்குக் குறையாமல் நடக்க வேண்டும் என்றெல்லாம் பயமுறுத்தினான்.

"வேண்டவே வேணாம்பா, அப்படி ஓய்வும் மாறுதலும் அவசியம் என்றால் கடலில் ஒரு டிரிப் அடிக்கலாம்" என்றான் ஹாரிஸ்.

கடல் பயணத்துக்கு நிச்சயமாக் என் ஒப்புதல் கிடைக்காது. ஓரிரு மாதங்கள் என்றால் பரவாயில்லை. ஒரு வாரம்தான் என்றால் அது மிகக் கொடுமைடா சாமி, என்பது என் கட்சி.

நீங்கள் ஒரு திங்கட்கிழமை காலையில் ஒருவாரக் கடல் பயணத்துக்காக கிளம்புகிறீர்கள் என்று வைத்துக் கொள்வோம். உங்களை வழியனுப்ப வந்த நண்பர்களுக்கு பந்தாவாக டாட்டா காட்டி விட்டு கப்பல் ஏறுகிறீர்கள். கேப்டன் குக், சர் ஃபிரான்ஸிச் ட்ரேக் மற்றும் கொலம்பஸ் எல்லோரும் ஒன்று சேர்ந்து நீங்களாக இருப்பது போன்ற பிரமை உங்களுக்கு. ஒரு பெரிய பைப்பை பற்ற வைத்துக் கொண்டு பந்தாவாக கப்பல் தளத்தில் நடை போடுகிறீர்கள். செவ்வாயன்று ஏன்தான் கப்பலுக்கு வந்தோமோ என்று அலுத்துக் கொள்ள ஆரம்பிக்கிறீர்கள். புதன், வியாழன் மற்றும் வெள்ளியன்று வாந்தியெடுத்து, வாந்தியெடுத்து இறப்பே மேல் என சிந்திக்கத் துவங்குகிறீர்கள். சனிக்கிழமை சற்றே நீர்த்த டீ அருந்த முடிகிறது. உங்கள் உடல்நலம் குறித்து விசாரிப்பவர்களுக்கு களைப்புடன் கூடிய புன்முறுவலுடன் பதில் சொல்ல முடிகிறது. ஞாயிறன்று சற்றே நடமாட முடிகிறது, சிறிது திட உணவு எடுத்துக் கொள்ள முடிகிறது. திங்களன்று கப்பல் மேல்தளத்தில் பக்கத்தில் மூட்டை முடிச்சு, கையில் குடை என்று கரை இறங்குவதற்காகக் காத்திருக்கும்போது, இப்பயணத்தை நிஜமாகவே விரும்ப ஆரம்பிக்கிறீர்கள்.

இப்படித்தான் எனது அத்திம்பேர் ஒரு வாரத்துக்கு கப்பல் பயணம் செய்தார். லண்டனிலிருந்து லிவர்பூல், பிறகு அங்கிருந்து லண்டன் என்று ரிடர்ன் பெர்த் வாங்கினார். லிவர்பூல் சென்றதும் முதல் வேலையாக ரிடர்ன் டிக்கட்டை அடிமாட்டு விலைக்கு விற்றுவிட்டு ரெயிலில் லண்டன் திரும்பினார்.

அதே அத்திம்பேரின் மாமா தாத்தா (அம்மாவின் மாமா) ஒருவர், நன்றாக வஞ்சனை இன்றி சாப்பிடக் கூடியவர். அவரும் இதே மாதிரி ஒருவார கடல் பயணத்துக்குச் சென்றார். அவரிடம் ஒவ்வொரு சாப்பாட்டுக்கும் தனியாகப் பணம் செலுத்துகிறாரா அல்லது சீஸன் டிக்கெட் பேல வாங்கிக் கொள்கிறாரா என்று கேட்கப்பட்டது. அம்மாதிரி செய்தால் நிறைய பணம் மிச்சம் செய்யலாம் என்று வேறு கூறப்பட்டது. அவரும் அவ்வாறே செய்தார்.

முதல் நாள் பகல் சாப்பாட்டு நேரம் வந்தது. ஏனோ நன்றாகப் பசிக்காததால் வேக வைத்த மாட்டிறைச்சி, கொஞ்சம் ஸ்ட்ராபெர்ரி ஐஸ்க்ரீம் என்று எடுத்துக் கொண்டார். பகல், மாலை முழுதும் ஆழ்ந்த சிந்தனையில் இருந்தார். எப்போதுமே தான் வேக வைத்த மாட்டிறைச்சி மற்றும் ஸ்ட்ராபெர்ரி ஐஸ்க்ரீமிலேயே வாழ்ந்திருப்பது போன்ற பிரமை அவருக்கு. அவற்றைப் பற்றி நினைக்கும்போதே உற்சாகக் குறைவு ஏற்பட்டது அவருக்கு.

மாலை ஆறுமணி அளவில் டின்னர் ரெடி என்று கூறப்பட்டது. அவருக்கு சாப்பிடவே மூட் இல்லை, இருப்பினும் கொடுத்த காசு வீணாகக் கூடாது என்று மெல்ல மெல்ல கயிற்றைப் பிடித்துக் கொண்டே உணவு வழங்கும் இடத்துக்கு சென்றார். நல்ல வெங்காய வாசனை, ஹேம் எனப்படும் பன்றிக்கறியின் மணம், கூடவே கருவாடு வேறு என்ற நிலை அவரை வரவேற்றது. அந்த இடத்துக்கு செல்லும் ஏணி அருகே நின்று கொண்டிருந்த ஸ்டூவெர்ட் அவரிடம் என்ன ஐயா சாப்பிடுகிறீர்கள் எனக் கேட்க இவரோ, "ழேய், என்ன இங்கேருந்து கொண்டு போங்கடா, உவ்வேழ்" என்று கத்த, அவரை அப்படியே அலேக்காக தளத்தின் கைப்பிடிக் கம்பி அருகே ஒரு நாற்காலியில் (நீல குஷன் பச்சை பார்டர் போட்டது) உட்கார வைத்து அவ்விடத்தை விட்டுப் பைய அகன்றனர். அடுத்த அரை மணிக்கு அவரது மற்றும் சில பயணிகளின் சத்தம் மிகுந்த வாந்திக் கச்சேரியில் கழிந்தது.

அடுத்த நான்கு நாட்களுக்கு அவருக்கு சோடா மற்றும் ஒல்லியிலும் ஒல்லியான கேப்டனின் பிஸ்கட்டுகள்தான் (அதாவது பிஸ்கட்தான் ஒல்லி, கேப்டன் அல்ல) ஆகாரம். சனிக்கிழமை வாக்கில் நான்கு டோஸ்டுகள் மற்றும் நீர்த்த டீ என்று முன்னேற்றம் ஏற்பட்டது. திங்களன்று சிக்கன் சூப்பில் காலம் கழிந்தது.



செவ்வாயன்று அவரை துறைமுகத்தில் இறக்கி விட்டு அப்பால் மேலே சென்றது. அதை சோகமாகப் பார்த்துக் கொண்டே என் அத்திம்பேரின் மாமா தாத்தா, "நான் ஏற்கனவே பணம் கொடுத்து வாங்கிய கணிசமான உணவு ஐயோ என்று போய்விட்டதே" என்று அவரை ரிசீவ் செய்ய வந்த என் அத்திம்பேரிடமும் என் அக்காவிடமும் கூறினார். இன்னும் ஒரு நாள் அதிகம் தங்கியிருந்தாலும் போட்ட பணத்துக்கு வஞ்சனையில்லாமல் சாப்பிட்டு பணத்தை ஈடு கட்டியிருக்க முடியும் என்ற எண்ணம் அவருக்கு.

அன்புடன்,
டோண்டு ராகவன்

3 comments:

Muthu said...

அசத்த்லாய் இருக்கிறது. மிகவும் நகைச்சுவையாய் இருக்கிறது. இதை எப்படி நம் தமிழ் சினிமாக்காரர்கள் விட்டுவைத்திருக்கிறார்கள்?.

dondu(#11168674346665545885) said...

பத்தொன்பதாம் நூற்றாண்டில் எழுதிய புத்தகம் இது. இப்போது நாம் இருப்பதோ 21-ஆம் நூற்றாண்டு. இருப்பினும் அது பலருக்குப் பிடித்திருக்கிறது. என்னை மாதிரி பலர் அதன் பல பாராக்களை அப்படியே பாராயணம் செய்தது போல் அவுட்டுச் சிரிப்புடன் ஒப்பிப்பார்கள். என் சித்தப்பாவும் நானும் சேர்ந்து ஒருவர் விட்டதை மற்றவர் எடுத்துக் கொடுத்து ஒரே கலாட்டாதான் போங்கள்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

dondu(#11168674346665545885) said...

நன்றி வளநாடன் அவர்களே.

அன்புடன்,
டோண்டு ராகவன்

 

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது