5/13/2006

படகில் மூவர், அதில் நாயை மறக்கலாகுமா? - 3

பகுதி - 1
பகுதி - 2

ஆகவே நான் கடல் பயணம் கூடாது என்பதில் உறுதியாக இருந்தேன். அது எனக்காக இல்லை, ஜார்ஜ் மற்றும் ஹாரிஸின் உடல்நலத்தை உத்தேசித்தே என்பதையும் தெளிவுபடுத்தினேன். எனக்கு எப்பொதும் கடல் நோய் ஏற்பட்டதேயில்லை என்றும் கூறினேன். ஜார்ஜ் அவன் பங்குக்கு கூறினான், தனக்கு ஒன்றும் பிரச்சினை இல்லையென்றும், கடல் பயணம் அவனுக்குப் பிடிக்கும் என்றும், ஆனால் நானும் ஹாரிஸும் சிரமப்படுவோம் என்றெண்ணியே கடல் பயணம் தேவையில்லையெனக் கூறியதாகக் கருணையுடன் கூறினான். ஹாரிஸும் கிட்டத்தட்ட இவ்வாறே, ஆனால் தேவையான எழுவாய் மாறுதல் செய்து கூறினான். எப்படி ஒருவருக்கு கடல் பயணம் செய்தால் வாந்தி மயக்கம் வரக்கூடும் என்பது தனக்குப் புரியவேயில்லை என்று வேறு ஹாரிஸ் கூறினான். வேண்டுமென்றே மற்றவர் பாவனை காண்பிக்கிறார்கள் என்று கவலையுடன் அபிப்பிராயப்பட்டான். தான் எவ்வளவு முயற்சி செய்தும் அம்மாதிரி வாந்தி எதுவும் தனக்கு வரவேயில்லை என்று திகைப்புடன் சொன்னான்.

பிறகு ஹாரிஸ் இங்கிலீஷ் கால்வாயில் தான் செய்த பயணங்களைப் பற்றிக் கூறினான். கடல் கொந்தளிப்பிள் பயணிகளை அவரவர் படுக்கையுடன் கட்டிப் போட வேண்டியதாயிற்று. அவனும் கேப்டனும் மட்டுமே வாந்தியெடுக்காமல் இருந்தனர் என்றும் அவன் கூறினான். சில அவனும் துணை கேப்டன் மட்டும், வேறு சமயங்களில் அவனும் மீகாமன் மட்டும் என்று யாரேனும் இருவர்தான் எந்த சமயத்திலும் பாதிக்கப்படாமல் இருந்தனர் என்று கூறி தலையை வேகமாகா ஆட்டினான். அதாவது அந்த இருவரில் ஒருவனாக ஹாரிஸ் எப்போதுமே இருப்பான். அப்படியில்லாவிட்டால் சில சமயங்களில் அவன் மட்டுமே.

எனக்கே வேடிக்கையாக இருக்கிறது. கடல் பயணங்களின் போது மயக்கம் அடைந்ததாக கரையில் இருக்கும் எவருமே எப்போதுமே ஒத்துக் கொண்டதில்லை. கடல் பயணம் செய்யும்போது நீங்களே அம்மாதிரி பலரை பார்த்திருப்பீர்கள். அவர்கள் ஆயிரக்கணக்கில் உள்ளனர். அத்தனை பேரும் கரையிறங்கியதும் எங்கு போய் ஒளிந்து கொள்கின்றனர் என்பது மிகப் பெரிய புதிரே.

ஆனால் நான் பார்த்த ஒரு மனிதனை உதாரணமாகக் கொண்டால் என்ன நடக்கிறது என்பதை ஊகிக்க முடியும். அவனை ஒரு கடல் பயணத்தின்போது பார்த்தேன். கப்பல் மேல்தளத்தின் ரெயிலிங்கில் அபாயகரமாக சாய்ந்து, ஓங்கார சப்தத்துடன் வாந்தி எடுத்துக் கொண்டிருந்தான். அவன் கீழே விழுந்துவிடப் போகிறான் என்ற ஆதங்கத்தில் நான் அவனை ஜாக்கிரதையாக இருக்கும்படி கூற அவன் அப்படி விழுந்தால்கூட தேவலை என்ற ரேஞ்சில் பேசிவிட்டு வாந்தியை விட்ட இடத்திலிருந்து தொடர்ந்தான். மூன்று வாரங்கள் கழித்து அவனை பாத் என்ற ஊரில் உள்ள ஹோட்டல் காபி ஷாப்பில் பார்த்தேன். அவன் சுற்றி இருந்தவர்களுடன் தன் செய்த கடல் பயணங்களை பற்றி உற்சாகமாக பேசிக் கொண்டு வந்தான். தனக்கு கடல் என்றால் உயிர் என்றும் பேசினான். அவன் தனக்கு கடல் நோய் வந்ததே இல்லையென்றும், ஒரே ஒரு முறை தென் அமெரிக்காவில் உள்ள கேப் ஹார்ண் அருகே சற்றே வயிற்றை குமட்டியதாகவும், அடுத்த நாள் கப்பல் மூழ்கியதாகவும் கூறினான்.

நான் சொன்னேன், "உங்களை ஒரு கப்பல் பயணத்தின் போது ஜிப்ரால்டர் அருகே வாந்தி எடுப்பதை பார்த்தேனே" என்று. "எப்போது" என்று அவன் ஆச்சரியத்துடன் கேட்க, "சமீபத்தில் மூன்று வாரங்களுக்கு முன்பு, அது ஒரு வெள்ளிக் கிழமை" என்று விடாமல் கூற, அவனோ, "ஓ, அதுவா? அன்று சாப்பாட்டில் கொடுத்த ஊறுகாயில் பூஞ்சைக் காளான், ஆகவே உடல் நிலை சற்று சரியில்லை, அவ்வளவே. இம்மாதிரி மட்டமான ஊறுகாய் போட்டதற்காக கேப்டனை திட்டி விட்டேன். அவரும் மன்னிப்பு கேட்டு கொண்டு ஒரு புது ஊறுகாய் பாட்டில் கொடுத்தார், இதோ அது" என்று ஒரு ஊறுகாய் பாட்டிலை தன் பையிலிருந்து எடுத்துக் காட்டினான்.

என்னைப் பொருத்தவரை கடல் நோய்க்கு ஓர் அருமையான மாற்றுமுறை கண்டுபிடித்துள்ளேன். கடல் நோய் ஏன் ஏற்படுகிறது? உங்கள் பேலன்ஸ் தவறுவதால்தானே. ஆகவே கப்பல் மேல்தளத்தில் நின்று கொண்டு கப்பல் முன்பக்கம் சாய்ந்தால் நீங்கள் பின் பக்கமாக அதே அளவு சாய வேண்டும், அதே போல கப்பலில் இருக்கும் எல்லா நாட்களிலும் ஒரு நாளைக்கு 24 மணி நேரம் செய்தால் போதும்.

இப்போது எங்கள் மூவர் விஷயத்துக்கு வருகிறேன்.

ஜார்ஜ் சொன்னான். "பேசாமல் தேம்ஸ் நதியில் படகு பயணம் செய்யலாம்." அவன் மேலும் இதனால் நல்ல காற்று நம் மேல் படும் என்றும், நல்ல உடற் பயிற்சி, ஆரவாரமில்லாத சூழ்நிலை ஆகியவை கிட்டும் என்றும் விடாது மாறும் காட்சிகள் நம் மூளைக்கு புத்துணர்ச்சி தரும் (இதில் ஹாரிஸிடம் இருக்கும் மூளை என்று அவதூறாகக் கருதப்படும் வஸ்துவும் அடங்கும்) என்றும் கூறினான். மேலும் நல்ல உடல் உழைப்பால் சுகமான தூக்கம் வேறு வரும் என்றும் கூறினான்.

ஹாரிஸொ இப்போதிருப்பதற்கு மேல் ஜார்ஜ் தூங்க நினைத்தால் நாடு தாங்காது என்று அபிபிராயப்பட்டான். உண்மை கூறப் புகுந்தால் இதற்கு மேல் எவ்வாறு ஜார்ஜுக்கு தூங்க நேரம் கிடைக்கும் என்றும் கேட்டான். குளிர்க்காலமோ, கோடைகாலமோ ஒரு நாளில் 24 மணி நேரங்கள்தான் உள்ளன என்றும் இதற்கு மேல் ஜார்ஜ் தூங்க நினைத்தால் அதற்கு செத்துப் பொவதே ஒரு வழி என்றும் அப்படியானால் ஜார்ஜுக்காக ஆகும் வாடகையும் சாப்பாட்டுச் செலவும் மிச்சம் என்றும் ஹாரிஸ் கவலை தோய்ந்த முகத்துடன் கூறினான்.

ஆனால், நதிப் பயணம் தனக்கு ஜாடிக்கு மூடியென என ஒத்துக் கொள்ளும் என்றும் ஹாரிஸ் கூறினான். எனக்குத் தெரிந்த ஜாடி எல்லாம் ஊறுகாய் ஜாடிதான்.

எனக்கும் அது ஜாடிக்கு மூடியென ஒத்துக் கொள்ளும்தான். ஆகவே நானும் ஹாரிஸும் ஜார்ஜின் யோசனை நல்லது என்று கூறும்படியாயிற்று. இவ்வளவு நல்ல யோசனையை ஜார்ஜ் போன்ற ஒருவன் எவ்வாறு கூறலாயிற்று என்று நாங்கள் இருவரும் எங்கள் தலையை பிய்த்துக் கொண்டோம்.

மாண்ட்மரன்ஸிக்கு மட்டும் இந்த யோசனை பிடிக்காது எனத் தோன்றியது. அவன் கூறக்கூடும், "எல்லாம் சரிதான், ஆனால் எனக்கு என்ன பயன்? கடல் பயணத்தின்போது துரத்த ஒரு கோழியோ பூனையோ எலியோ உண்டா?" அதெல்லாம் அவன் கூறவில்லை. ஏனெனில் மாண்ட்மரன்ஸி நான் வளர்க்கும் நாய்.



நாங்கள் மூவர் மெஜாரிட்டியில் இருந்ததால் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

அன்புடன்,
டோண்டு ராகவன்

8 comments:

Unknown said...

///"எப்போது" என்று அவன் ஆச்சரியத்துடன் கேட்க, "சமீபத்தில் மூன்று வாரங்களுக்கு முன்பு, அது ஒரு வெள்ளிக் கிழமை" என்று விடாமல் கூற, ////

3 வாரத்துக்கு முன்பு நடந்தது சமீபம் என டோண்டு சார் எழுதினால் ஒத்துக்கொள்ள மாட்டோம்.குறைந்த பட்சம் 30 வருடத்துக்கு முன் நடந்ததுதான் சமீபம்:-)))

dondu(#11168674346665545885) said...

வாருங்கள் சொல்லின் செல்வனே. அப்படிப் பார்க்கப் போனால் 19-ஆம் நூற்றாண்டில் நடந்த இந்தப் புத்தகத்தின் நிகழ்ச்சிகள் எல்லாமே சமீபமே.

அன்புடன்,
டோண்டு ராகவன்

Unknown said...

என்னது,சமீபத்தில் 19ம் நூற்றாண்டிலா?இதெல்லாம் உங்களுக்கே நியாயமா?விட்டால் "சமீபத்தில் துவாபர யுகத்தில்" என்று எழுதுவீர்கள் போலிருக்கெ?:-))))

dondu(#11168674346665545885) said...

செல்வன் அவர்களே,

சூரிய குடும்பத்தின் வரலாற்றை ஒரு வருட ஸ்கேலில் சுருக்கினால், மனிதன் உருவானது டிசம்பர் 31, இரவு பன்னிரண்டு மணிக்கு முன்னால் ஒரு வினாடிக்கும் குறைவான அளவில்தான் என்பதை பற்றி படித்திருக்கிறீர்களா? பூமி வாழ்வதற்கு ஏற்புடையதானது டிசம்பர் 27 அளவில் என்பதையும் நான் படித்திருக்கிறேன்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

Unknown said...

//சூரிய குடும்பத்தின் வரலாற்றை ஒரு வருட ஸ்கேலில் சுருக்கினால்....//

எம்மாம் பெரிய IF condition இதில் இருக்கு.

சூரிய குடும்பத்தின் வரலாற்றை ஒரு வருட ஸ்கேலில் சுருக்கினால் 2006 AD என்பது நானோசெகண்டை விட குறைவான கால அளவாகிவிடும்.

நீங்க வக்கிலாயிருந்தீங்கன்னா இந்நேரம் ஜெத்மலானிய தூக்கி முழுங்கியிருப்பீங்க.எங்கெங்க போயி பாயினடை பிடிக்கறீங்க பாத்தீங்களா?:-)))

dondu(#11168674346665545885) said...

சூரிய குடும்பத்தை இப்போதைக்கு விட்டு விடுவோம்.

என்னுடைய "சமீபத்தில் 1955-ல் என்ற பதிவைப் பாருங்கள். வேறு கோணத்தில் இது பற்றி எழுதியுள்ளேன். http://dondu.blogspot.com/2006/01/1955.html

அன்புடன்,
டோண்டு ராகவன்

Unknown said...

Dondu, I saw your comment that was automoderated. are you referring to the 4th comment in that post? That was published by me before I setup smart moderation for my blog. Now, I have 3 bad comments in my mailbox from Poli Mayavarathan which have not been allowed.

dondu(#11168674346665545885) said...

நன்றி வெங்கடரமணி அவர்களே.

அன்புடன்,
டோண்டு ராகவன்

 

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது