2/26/2007

மச்சமச்சினியே

நான் சமீபத்தில் 1979-ல் இப்போது நான் இருக்கும் எனது சொந்த வீட்டிலிருந்து காலி செய்து தி.நகர், அங்கிருந்து தில்லி என்றெல்லாம் சென்று விட்டு திரும்பவும் 2001-ல் அந்த சொந்த வீட்டுக்கே வந்தது பற்றி இப்பதிவில் குறிப்பிட்டுள்ளேன். ஆனால் இப்பதிவு அதைப் பற்றியல்ல.

தற்காலிகமாக திரும்பி வந்ததும் ஒருமாதம் முழுக்க மராமத்து வேலை, பிறகு தில்லி சென்று வீடு காலி செய்து கண்டையனரில் வீட்டு பொருட்களை ஏற்றி விட்டு திரும்ப சென்னைக்கு வருவதற்கும், கண்டையனர் வந்து சேருவதற்கும் சரியாக இருந்தது. அதுவும் இப்பதிவில் கூறப்போவதில்லை. நான் கூறவந்தது மராமத்து வேலைகள் சமயத்தில் ஒரு மாதம் நங்கநல்லூரிலேயே நண்பர் வீட்டில் தங்கியபோது நடந்தது பற்றி.

தில்லியில் உள்ள வாடிக்கையாளர் மின்னஞ்சலில் மொழிபெயர்ப்புக்கான கோப்புகளை அனுப்ப, நண்பரின் இரு மகன்கள் அவற்றை பிரிண்ட் அவுட் எடுத்து என்னிடம் தர, நானும் மராமத்து வேலைகளை அவ்வப்போது மேற்பார்த்துக் கொண்டே மொழிபெயர்ப்புகளை கையால் எழுதியதை அவ்விரு இளைஞர்களும் கணினியில் தட்டச்சு செய்து முடிக்க, அதை கணினி திரையிலேயே படித்து நான் திருத்தங்களைக் கூற அவர்கள் அதை அனாயாசமாக நிறைவேற்றி பிறகு மொழிபெயர்ப்பை நான் மின்னஞ்சல் பெட்டி மூலம் அனுப்ப என்று விடாது வேலை. திங்கள் தெரியாது, சனி தெரியாது, கிழமைகளே தெரியாது அப்படி வேலை. என் அக்காவின் கணவர் கூட வேடிக்கையாகக் குறிப்பிடுவார், "நம்ம டோண்டு சென்னைக்கு வந்துட்டான்னுதான் பேரு. ஆனால் இப்பவும் அவனை தில்லி மூலமாகத்தான் பிடிக்க வேண்டியிருக்கு" என்று.

ஆக, மராமத்து, மொழிபெயர்ப்பு தவிர மீதி எல்லாம் கனவைப் போலவே இருந்தன. அப்போதுதான் இந்தப் பாட்டு அடிக்கடி எல்லா தொலைக்காட்சி சேனல்களிலும் வரும்.

"மச்சினியே மச்சமச்சினியே மச்சத்திலே உச்சம் காட்டு நீயே
துள்ளி துள்ளி இங்கு விளையாடும் ...." அப்பாட்டை கீழே தருகிறேன்.



ஒரு நதி அருவி வழியாக வீழ்ந்து, சிற்றோடையாகச் செல்லும் அழகில் இப்பாட்டு செல்லும். நதியில் விளையாடி கொடியில் தலைசீவி என்ற உணர்ச்சி எனக்கு அப்பாட்டை முதலில் சின்னத்தரையில் கண்டு கேட்கும்போதே தோன்றியது. இப்பாட்டு அடிக்கடி வந்து, என் உள்ளத்தைக் கொள்ளை கொண்டது. இப்பாடலுக்கு நடன அசைவுகளும் ஒரு வித மேன்மை கணித நேர்த்தியுடன் (advanced mathematical precision) இருந்ததும் என் மனதைக் கவர்ந்தது. அதுவும் நான் அந்த வீட்டில் கணினி இருந்த அறையில் அமர்ந்து மொழிபெயர்ப்பு வேலை செய்தது என் வேலைக்கு அது ஒரு பின்னணி இசை கொடுத்தது போலத் தோன்றியது.

இப்பதிவை எழுதும்போதும் அப்பாட்டை கேட்டுக் கொண்டிருக்கிறேன். அப்படியே 2001-க்கு போன உணர்வு. அதுவும் சென்னையில் தில்லி போல நன்றாக மொழிபெயர்ப்பு வேலை நடக்குமா என்று சற்றே அஞ்சியபடி வந்தவன் நான். அப்படியெல்லாம் பயம் தேவையில்லை எனக்கு உணர்த்திய அந்த ஒரு மாதம் என் இனிய தருணங்கள் பலவற்றை அடக்கியுள்ளது. அவற்றில் ஒன்று இந்த மச்சமச்சினியே பாட்டு என்றால் மிகையாகாது.

பிறகு பிப்ரவரி 2002-ல் நானே சொந்த கணினியை வீட்டில் நிறுவிக் கொண்டதும் மேலே நான் குறிப்பிட்ட அந்த இரு இளைஞர்களது உதவியாலேயே நிகழ்ந்தது. பெரியவன் எனது கணினிக்காக பாட்டுகளை தெரிவு செய்ய, சின்னவன் கூவினான், "டேய் அந்த மச்சமச்சினியே பாடலை முதலில் லோட் செய். அந்தப் பாட்டு டோண்டு மாமாவுக்கு பிடிக்கும்" என்று சீரியசாகவே கூறினான். பெரியவனோ "அப்பாடல் மட்டுமென்ன அந்தப் படத்தில் வரும் மீதி பாட்டுக்களையும் லோட் செய்வேன்" என்றான். அப்போதுதான் அப்பாட்டு ஸ்டார் படத்தினுடைய பாட்டு என்பதை அறிந்து கொண்டேன். எல்லா பாட்டுக்களுமே அப்படத்தில் அருமைதான். ஆனால் இப்போதும் அவற்றுள் என் விருப்பப் பாடல் அந்த மச்ச மச்சினியேதான். இப்பாடல் மெட்டில் ஹிந்தியிலும் ஒரு பாடல் ஒரு முறை கேட்டேன். ஆனால் எந்தப் படம் எனத் தெரியவில்லை. இப்போது இதே பாட்டை ஹிந்தியில் கேளுங்கள், ருத் ஆ கயீ ரே எனத் துவங்கும் பாடல் எர்த் 1947 என்னும் படத்தில்.



ஆனால் அப்படத்தை முழுதாக இந்த ஆண்டுதான் சின்னத் திரையில் பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது. படமும் அருமையாகத்தான் இருந்தது. வாழ்வின் செல்லும் போக்குக்கெல்லாம் செல்லும் பிரசாந்த ஜோதிகாவின் காதல் கிடைத்ததும் எப்படி தன் வாழ்க்கையை மாற்றி அமைக்கிறார் என்பது கதை. காதலின் சக்தி என்னவென்பதை அலட்டிக் கொள்ளாமல் காட்டியது. அப்படக்கதையை சற்றே விரிவாகப் பார்ப்போம்.

காசுக்காக மற்றவர் செய்யும் சிறு குற்றங்களை தான் ஏற்று அடிக்கடி சிறை செல்பவன் பிரசாந்த். சிறையே அவனுக்கு பிறந்த வீடு போலத்தான். அம்மாதிரி வாழ்க்கையை கவிதையாகக் காட்டுவது அப்படத்தில் முதலில் காண்பிக்கப்படும் இந்த மச்ச மச்சினியே பாடல்தான். உருதுவில் பிந்தாஸ் என்று கூறுவார்கள். அது ஒரு அலட்சிய, விட்டேற்றியான, அனாயாசமான பாணி. அப்படி வாழ்ந்தவன் பிரசாந்த். ஒரு முறை சாதாரண ஈவ்டீசிங் வழக்கு என நினைத்து குற்றத்தை ஏற்றுக் கொள்ள, அதில் பாதிக்கப்பட்ட பெண் கோமா ஸ்டேஜில் இருப்பதை பார்த்து வீறு கொண்டெழுந்து குற்றவாளியான திமிர் பிடித்த அந்தப் பணக்காரப் பையனைப் பந்தாடி போலீஸில் ஒப்படைக்கிறான். பிறகு ஜோதிகாவின் காதல் கிட்டுகிறது. ஜோதிகாவின் மாமா விஜயகுமார் பிரசாந்தை கொலை மிரட்டலுக்காளாகியிருக்கும் தன் மகனைக் காப்பாற்ற பிரசாந்தை தன் மகனாக நடிக்கக் கேட்டு கொள்கிறார். ஆனால் உண்மை காரணத்தை மறைத்து தன் மனைவி ஸ்ரீவித்யாவுக்காக அதை செய்வதாகவும், பிள்ளை இறந்து விட்டாலும் அவன் இறந்தது மனைவிக்கு தெரியாது என்று செண்டிமெண்ட் பேசி பிரசாந்தை இணைய வைக்கிறார்.

இதொன்றும் தெரியாத பிரசாந்த் ஸ்ரீவித்யா, விஜயகுமார் இருவரையுமே அன்னை தந்தையாக பாவித்து உருக, விஜயமுமாரின் உண்மை மகன் வில்லனுடன் சேர்ந்து கொள்ள என்றெல்லாம் கதை பல திருப்பங்களுடன் சென்று க்ளைமேக்ஸை அடைகிறது. ஆனால் ஒன்று. எல்லா திருப்பங்களுமே லாஜிக்கலாக காட்டப்பட்டுள்ளன.

இதற்கு மேல் கதையை இங்கு கூற விரும்பவில்லை. சான்ஸ் கிடைத்தால் பார்த்து கொள்ளுங்கள். முக்கியமாக சண்டைக் காட்சிகள் அபாரம் என்று கூறுவது இந்த 61 வயது இளைஞன் டோண்டு ராகவன்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

27 comments:

Anonymous said...

உண்மையைச் சொல்லுங்க
பாடல் பிடித்தது மும்தாஜ்க்காகத் தானே

dondu(#11168674346665545885) said...

அந்த பாட்டுக்கு அசைவுகள் கொடுத்தது மும்தாஜா? அப்பெண்ணின் பெயரை நான் இப்போதுதான் அறிகிறேன்.

ஆனால் அப்போது அந்தப் பெண்ணின் பெயர் கேட்கும் மனநிலையில் நான் இல்லை. கவனித்து ரசிக்க வேறு பல விஷயங்கள் இருந்தன. ஆகவே பெயர் முக்கியம் இல்லை. :)))

முனியம்மாள் என்றிருந்தாலும் ரசித்திருந்திருப்பான் இந்த இளைஞன் டோண்டு ராகவன்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

Anonymous said...

//இப்பாடல் மெட்டில் ஹிந்தியிலும் ஒரு பாடல் ஒரு முறை கேட்டேன். ஆனால் எந்தப் படம் எனத் தெரியவில்லை.//

Actually the tune is from Hindi. I hope the movie is 'Pukar' by AR Rahman. In hindi also its very good song.But the bad thing is its Tabu not Mumtaj :(
-- KING

dondu(#11168674346665545885) said...

//அதானே.கோழி குருடா இந்தா என்ன,குழம்பு ருசியா இருந்த போதுமில்லையா?//
:)))))))))))))))))

அன்புடன்,
டோண்டு ராகவன்

Anonymous said...

நானும் உங்கள் பதிவின் நீண்ட நாள் வாசகி என்பதை சொல்லிக் கொள்வதில் பெருமையடைகிறேன்

dondu(#11168674346665545885) said...

நன்றி மும்தாஜ் அவர்களே. கற்பனையாக இருந்தாலும் தி க்ரேட் மும்தாஜ் எனது ரசிகை என்பது மகிழ்ச்சி தரும் கற்பனையே.

அன்புடன்,
டோண்டு ராகவன்

Anonymous said...

ம.நெ.கு.கா விற்கு பதில் முனியாண்டியை வணங்குவீர்களா?

அன்புடன்
சைத்தான் கி பச்சே

dondu(#11168674346665545885) said...

சைத்தான் கி பச்சே,

அதுதான் ஹிந்து மதத்தின் சிறப்பு. இஷ்ட தெய்வம் என்று உண்டு. என் உள்ளங்கவர் கள்வன் என் அப்பன் தென்திருப்பேரை மகரநெடுங்குழைகாதன் என் இஷ்ட தெய்வம். அதற்காக மற்ற தெய்வங்களை வணங்க மாட்டேன் எனக் கூற இயலுமா?

ராமருக்கு இஷ்ட தெய்வம் சிவபெருமான், சிவனின் அம்சமாகிய அனுமனுக்கோ திருமால் கூட இல்லை, ராமர்தான் இஷ்ட தெய்வம். வைகுந்தத்தில் ராமன் பெயர் கேட்க முடியாது என்பதால் பூலோகத்திலேயே தங்கி விட்டவர். அவர் கூட நேரில் வந்தால் பிரம்ம தேவனை வணங்க மாட்டேன் என கூறிவிடுவாரா என்ன?

ஆகவே ஒரு தெய்வத்தை வணங்கினால் வேறு தெய்வங்களை புறக்கணிக்கிறோம் எனப் பொருள் இல்லை.

அது இருக்கட்டும். தெரியாமல்தான் கேட்கிறேன், மும்தாஜை பற்றி பேசும்போது இது என்ன கேள்வி?:)))))

அன்புடன்,
டோண்டு ராகவன்

Anonymous said...

"அந்த பாட்டுக்கு அசைவுகள் கொடுத்தது மும்தாஜா? அப்பெண்ணின் பெயரை நான் இப்போதுதான் அறிகிறேன். "

ஐய்யோ! ஐய்யோ! முழு புசினிக்காய் தோட்டத்தை சோற்றில் மறைக்க பார்கிறார் டோண்டு ஐய்யா. மும்தாஜை தெரியாத முதியவர் இருக்கலாம் ஆனால் ஒரு இளைஞன் இருக்க முடியுமா?

மும்தாஜ் & டி.ஆர் ரசிக்காதவர் மன்றம்-
புழுதிவாக்கம்

Anonymous said...

நல்லா இருந்த மனுசன இப்படி மும்தாச பத்தி பதிவு போட வெச்சிடங்களேடா!

படுபாவி பசங்களா! நீங்க நாசமா போவிங்கடா.

dondu(#11168674346665545885) said...

//மும்தாஜை தெரியாத முதியவர் இருக்கலாம் ஆனால் ஒரு இளைஞன் இருக்க முடியுமா?//
அதானே. ஆனால் நடந்தது ரொம்ப சிம்பிள். மும்தாஜ் கேள்விப்பட்டிருக்கிறேன். ஆனால் ஸ்டார் படத்தில் அந்த ஒரு பாட்டுக்கு மட்டும் நடன அசைவு கொடுத்து போனது அவர்தான் என்று தெரியாது. அதாவது மும்தாஜுடன் அப்பெண்மணியின் பெயரை நான் அசோஸியேட் செய்யவில்லை என்றேன்.

மேலும், 2001-ல் அப்போதுதான் 20 வருட இடைவெளிக்கு பிறகு சென்னைக்கே வந்திருக்கிறேன். யார் எவர் என்பது புரிய நாளாகும்தானே. அதுவும் முக்கியமான மொழிபெயர்ப்பு வேலைகள் செய்யும் நேரத்தில் இது வெறும் அழகான background தானே.

மற்றப்படி, மும்தாஜ், நக்மா, லைலா எல்லாம் கேள்விப்படாமல் இருப்போமா என்ன? ஆனால் ஒன்று, அஞ்சலி தேவியின் அழகுக்கு அவரேதான். அதுவும் சமீபத்தில் 1956-ல் அவர் நடித்து வந்த படம் "கணவனே கண்கண்ட தெய்வம்" மிக அருமை.

அன்புடன்,
டோண்டு ராகவன்

dondu(#11168674346665545885) said...

//நல்லா இருந்த மனுசன இப்படி மும்தாச பத்தி பதிவு போட வெச்சிடங்களேடா!//

இப்ப என்ன ஆச்சுன்னு இப்படி புலம்பறீங்க. இது வரைக்கும் அப்பெண் நன்றாக் நடன அசைவு கொடுத்ததற்கு சந்தோஷப்பட்டேன். இப்போது அவர் பெயரையும் தெரிந்து கொண்டேன் அல்லவா. நல்ல விஷயம்தானே.

அன்புடன்,
டோண்டு ராகவன்

சாமான்யன் Siva(stocksiva.blogspot.com) said...

<-- இப்ப என்ன ஆச்சுன்னு இப்படி புலம்பறீங்க -->
உங்க இளமையை சோதிக்கிறாங்களோ என்னமொ? -))))

dondu(#11168674346665545885) said...

//உங்க இளமையை சோதிக்கிறாங்களோ என்னமோ? -))))//

:))))))))))))))))

அது அப்படியே இருக்கட்டும். இப்படத்தில் எனக்கு பிடித்தது ஒரு முக்கியத் தத்துவம்.

பிரசாந்தை சுற்றி இவ்வளவு வ்லைகள் பின்னப்பட அவ்ர் மட்டும் தன் போக்கில் செல்கிறார். அவருக்கு வரும் கெடுதிகள் அவற்றை ஏற்பாடு செய்தவர்களுக்கு எதிராகவே திரும்புகின்றன. அதற்காக அவர் சண்டையேல்லாம் போடாது இல்லை. அது பாட்டுக்கு அது.

எனக்கு என்ன தோன்றுகிறது என்றால், நீ பலனை எதிர்ப்பார்க்காது உன் முயற்சிகளை செய்து கொண்டே போ, மீதியை ஆண்டவன் பார்த்துக் கொள்வான் என்று கூறுவதில் ஒரு பெரிய உண்மை ஒளிந்திருக்கிறது என்று.

கடமையைச் செய். மச்சமச்சினியே தானே கிட்டும். :)))))))

அன்புடன்,
டோண்டு ராகவன்

Madhu Ramanujam said...

என்ன சொல்லுங்க.... "மனதுக்குள் ஒரு புயல்..." அந்தப் பாட்டு தான் ஸ்டார் படத்தில் எனக்கு ரொம்பப் பிடிக்கும். அதிலுள்ள மென்மை அப்படத்தின் வேறு பாடல்களில் இல்லை என்றெ கூறுவேன்.

dondu(#11168674346665545885) said...

//"மனதுக்குள் ஒரு புயல்..." //
மச்ச மச்சினியே இல்லாமல் இருந்திருந்தால் எனக்கும் இப்பாட்டுத்தான் பிடித்திருக்கும் போல.

அன்புடன்,
டோண்டு ராகவன்

Anonymous said...

இந்தக் கேள்வியை ஒங்க கிட்ட தான் முதல்ல கேட்கணும். 30 பின்னூட்டங்களோட தமிழ்மணத்தில கட் அப்பிடின்னு சொல்லிட்டாங்க.. அத பத்தி 2 வார்த்த சொல்லுங்க சார்

dondu(#11168674346665545885) said...

//பின்னூட்டங்களோட தமிழ்மணத்தில கட் அப்பிடின்னு சொல்லிட்டாங்க.. அத பத்தி 2 வார்த்த சொல்லுங்க சார் //
No comments!:)))))

அன்புடன்,
டோண்டு ராகவன்

Gopalakrishnudu(#07148244463938149692) said...

////பின்னூட்டங்களோட தமிழ்மணத்தில கட் அப்பிடின்னு சொல்லிட்டாங்க.. அத பத்தி 2 வார்த்த சொல்லுங்க சார் //
No comments!:)))))//

You seemed to have wisely refrained from replying, given the further roller coaster course, the entire question has taken since then.

Gopalakrishnudu

dondu(#11168674346665545885) said...

//You seemed to have wisely refrained from replying, given the further roller coaster course, the entire question has taken since then.//

மட்டுறுத்தல் தேவையில்ல்லை என்று மாற்றியதுதான் சற்றே அவசரப்பட்டுவிட்டார்கள் என்ற எண்ணத்தை அளிக்கிறது. மற்றப்படி திரட்டியை நடத்துபவர்களுக்கு தாங்கள் என்ன செய்கிறோம் என்று தெரியாமலா இருக்கும்?

என்னைப் பொருத்தவரை மட்டுறுத்தல் எனது பதிவுகளில் கண்டிப்பாக உண்டு.

அவரவர் கவலை அவருக்கு. வேறு ஒன்றும் கூற இதில் இல்லை. இதை விட முக்கியமான வேலைகள் எனக்கு ஆயிரம் உண்டு.

அன்புடன்,
டோண்டு ராகவன்

Anonymous said...

//இதை விட முக்கியமான வேலைகள் எனக்கு ஆயிரம் உண்டு.//

மும்தாஜை பார்த்து ரசிப்பது? :)))))

மும்தாஜ் விசிறி

dondu(#11168674346665545885) said...

//மும்தாஜை பார்த்து ரசிப்பது? :)))))//

:)))))))

சீரியசாக பேசுவோமா? மச்சினியை விடுங்கள். அப்பாடல் பிரசாந்தின் ஆரம்ப காலத்தை காட்டுகிறது அவ்வளவே. அதிலேயே நாம் ஏன் நிற்க வேண்டும்?

இப்படத்தில், பிரசாந்த் விஜயகுமாரின் மகனாக வெறுமனே நடிக்க வந்திருந்தாலும் தன்னையறியாமலேயே பாத்திரத்துடன் ஒட்டி விடுகிறார். அதற்கேற்றாற் போல ஸ்ரீவித்யா நிஜமாகவே பிரசாந்த் தன் காணாமல் போன மகன் என்று நிஜமாகவே நம்பி பாசத்தைப் பொழிய பிரசாந்தின் மனமாற்றம் விரைவிலேயே நடக்கிறது. அத்துடன் ஜோதிகாவுடனான காதல் வேறு இதில் வேலை செய்கிறது.

இந்தப் படத்தின் அழகே இந்த மாற்றத்தை அருமையாகக் காட்டியிருப்பதுதான்.

கடைசியில் பிரசாந்த் விஜயகுமார் பற்றிய உண்மையுணர்ந்தாலும் ஸ்ரீவித்யாவின் அன்புக்காக தன் வேலையை செவ்வனே நிறைவேற்றுவது மனதுக்கு நிறைவைத் தருகிறது.

பல எதேச்சையான விஷயங்கள் நடந்து கதையில் திருப்பம் கொடுத்தாலும் அவை எல்லாம் நம்பும்படியாகவே இருந்தன.

அன்புடன்,
டோண்டு ராகவன்

ஆதி said...

பதிவில் இருந்து உங்களை திசை திருப்ப நினைக்கிறார்கள்.

படிக்க நாங்கள் இருக்கிறோம். எழுதிக்கொண்டே இருங்கள் சார்.

dondu(#11168674346665545885) said...

மச்ச மச்சினியே பாடலின் லிங்க் இப்போது சேர்த்துள்ளேன். கேட்டு மகிழவும்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

Anonymous said...

Saw this post only 2 days ago. Today this song was telecast in CC TV . Did u see?

dondu(#11168674346665545885) said...

இல்லை, பார்க்கவில்லை. ஆனால் அப்பாட்டின் ஆடியோவை எனது கணினியில் சேமித்து வைத்துள்ளேன்.

துரதிர்ஷ்டவசமாக நான் கொடுத்த வீடியோ லிங்க் யூ ட்யூப்பால் எடுக்கப்பட்டு விட்டது.

அன்புடன்,
டோண்டு ராகவன்

நறுமுகை said...

மச்சினிய இவ்ளோ புகழுறீங்களே??



www.narumugai.com

 

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது