3/30/2008

கால் திருடன், அரைத்திருடன் - மதன காமராஜன் கதைகள்

இப்போதெல்லாம் பெரிய எழுத்து விக்கிரமாதித்தன் கதைகள், மதன காமராஜன் கதைகள் ஆகியவை அதிகம் காணக் கிடைப்பதில்லை. சிறு வயதில் என் அன்னை, பாட்டி ஆகியோர் இக்கதைகளைக் கூறியுள்ளனர். பிற்காலத்தில் அவற்றை நேரடியாக படிக்க நேர்கையில் அவர்கள் ரொம்பவும் சென்சார் செய்தே கதைகளைக் கூறியதை அறிந்தேன். அது பற்றியல்ல இப்பதிவு. அதில் ரசித்த கதைகளில் ஒன்றைத் தருவது மட்டுமே இப்பதிவின் நோக்கம்.

ஒரே ஒரு ஊரில் கொட்டாப்புளி என்னும் திருடன் இருந்தான். அவன் கன்னம் வைத்து திருடுவதில் சமர்த்தன். எப்படிப்பட்ட பாதுகாப்பிருந்தாலும் கன்னமிட்டு வீட்டினுள் சென்று திருடுவதில் சமர்த்தன். நன்றாக மாறுவேடமும் அணிவான். ஒரு தடவை நல்ல உபன்யாசகன் போல வேடமணிந்து உள்ளூர் வசந்த மண்டபத்தில் தங்கி பஜனைகள் செய்து வந்தான். கூடவே அவனது பிள்ளை மஹரிஷி வேஷம் அணிந்து அவனுக்கு துணையாக இருந்தான். தினமும் ஊரடங்கியதும் ஏதாவது ஒரு வீட்டைத் தேர்ந்தெடுத்து அதில் கன்னமிட்டு அப்பனும் மகனும் கொள்ளையடிப்பர். பிறகு அடுத்த நாள் காலை ஒன்றுமே நடவாதது போல வசந்த மண்டபத்தில் பஜனை செய்ய வந்துவிடுவர்.

அப்படித்தான் ஒரு நாள் இரவு அப்பனும் பிள்ளையும் கன்னமிட ஒரு வீட்டுக்கு சென்றனர். துரதிர்ஷ்டவசமாக அந்த வீடு இந்த ஜோடி மேல் சந்தேகம் கொண்டிருந்த கதிரவன் என்பவரது வீடு. அவர் மாடியிலிருந்து இந்த ஜோடி தன் வீட்டை நோக்கி வருவதை நிலா வெளிச்சத்தில் கண்டு கொண்டார். அவர்கள் கையில் கன்னக்கோல் வேறு இருந்தது. கதிரவன் தனது பணப்பெட்டி அறையில் ஒளிந்து கொண்டார். இங்கு கொட்டாப்புளி வழக்கம்போல கன்னமிட்டு சுவரில் துளை இட்டான். கன்னமிடும் கொள்ளைக்காரர்களது வழக்கத்துக்கேற்ப தனது இருகால்களையும் முதலில் உள்ளே நுழைத்தான். பிறகு உடலை உள்ளே நுழைத்தான். தலையைத் தவிர மீதி எல்லா பாகங்களும் உள்ளே வந்து விட்டன. இதற்கெனவே காத்திருந்த கதிரவன் அந்த உடலின் இருகால்களிலும் கடப்பாரையால் இரண்டு போடுபோட்டு அவற்றை உடைத்தார். பிறகு உடம்பின் மீது பெரியபெட்டிகளை வைத்து அடுக்கினார். பிறகு சாவகாசமாக கதவைத் திறந்து காவலாளிகளைக் கூப்பிட்ட வண்ணம் வீட்டின் வெளியே வந்தார். நிலைமை கைமீறியதை அறிந்த மகரிஷி சட்டென்று தந்தையின் தலையை கத்தியால் வெட்டி எடுத்து அங்கிருந்து தன் வீட்டுக்கு ஓடிவிட்டான். ஆக திருடனது முண்டம் மட்டும் அகப்பட்டு கொண்டது. ஆனால் தலையில்லாததால் அடையாளம் காண இயலவில்லை.

வழக்கு அரசனிடம் வந்தது. கதிரவன் ஒரு ஆலோசனை கூறினார். அதாவது முண்டத்தை ஒரு கைவண்டியில் போட்டு ஊர் முழுக்க ஊர்வலம் விட வேண்டும். அதைப் பார்த்து யார் அழுகிறார்களோ, அவர்களே திருடனின் உறவினர்கள். அவ்வாறே அரசனும் ஆணையிட முண்டத்தை ஊர் முழுக்க ஊர்வலம் கொண்டு வந்தார்கள். மகரிஷி தன் அன்னையிடம் உடலைப் பார்த்து அவள் அழுதால் காரியம் கெட்டுப் போகும் என எச்சரிக்க, அவளோ அழாமல் இருக்க முடியாது என்று கூறிவிட்டாள். ஆகவே மகரிஷி ஒரு காரியம் செய்தான்.

ஊர்வலம் இவர்கள் இருக்கும் தெருவுக்கு வந்த சமயம் மகரிஷி தன் வீட்டுக்கு முன்னால் இருந்த மரத்தில் ஊர்வலத்தைப் பார்க்கும் கும்பல்களில் ஒருவனாக அமர்ந்திருந்தான். கைவண்டி வீட்டுக்கருகே வரும் சமயம் பார்த்து தொப்பென்று கீழே விழுவது போல விழுந்தான். அவன் அம்மா அதை பார்த்து குய்யோ முறையோ என ஒப்பாரி வைத்தாள். கைவண்டி வீட்டைக் கடந்ததையும் கவனிக்காது பையன் மேல் விழுந்து அழுதாள்.

ஆக அரசனின் இந்த முயற்சி தோல்வியில் முடிந்தது. கதிரவனிடம் அரசன் இதுபற்றி கேட்க, அவரும் தன்மகனுக்காக அழுத அப்பெண்மணியும், கீழே விழுந்த அந்த மகனுமே முண்டத்தின் மனைவி மற்றும் மகனாக இருக்க வேண்டும் என்று தெரிந்து கொண்டார்.

மீதிக்கதை? அது கிடக்கட்டும் இன்னொரு நாளைக்கு பார்ப்போம்.

அலிபாபா கதையில் மார்ஜியானா ஊரில் எல்லா வீட்டு கதவுகளிலும் + குறி இட்டதும் இது போன்ற யுக்தியே.

மொக்கை போட்டு கொஞ்ச நாட்கள் ஆயின. ஆகவே இந்த மொக்கை

அன்புடன்,
டோண்டு ராகவன்

7 comments:

வால்பையன் said...

//ஒரு தடவை நல்ல உபன்யாசகன் போல வேடமணிந்து உள்ளூர் வசந்த மண்டபத்தில் தங்கி பஜனைகள் செய்து வந்தான். கூடவே அவனது பிள்ளை மஹரிஷி வேஷம் அணிந்து அவனுக்கு துணையாக இருந்தான். //

அப்ப சாமியார பார்த்த நம்ப வேணாம்கிரிங்க!!

நீங்க என்ன சொல்ல வர்ரிங்க!
ஒரே நபர் பல பேர்ல பிளாக் வச்சி ஊர ஏமாத்துரத சொல்றிங்களா!!

வால்பையன்

வால்பையன் said...

அரசியல் கேள்விகள்
தி.மு.கா.விற்கு அடுத்த தலைவராக நீங்கள் நினைப்பது யாரை?

கட்சி மாறும் கோமாளிகளை பார்த்து நீங்கள் நினைப்பது என்ன?

சமீபத்திய பட்ஜெட் பற்றி உங்கள் கருத்து?

மொக்கை கேள்விகள்
மூன்று தலைமுறை வாழ்க்கையை மூன்று மணி நேர படமாக(படையப்பா) தரும் போது
சீரியலில் உங்கள் ஆர்வம் ஏன் அதிகமாக இருக்கிறது?

உங்கள் பழைய கணினியை எப்போது மாற்றுவீர்கள்? எதாவது சென்டிமென்ட்டா?

ஜாதகம், நியுமராலஜி,வாஸ்த்து இவைகளில் உங்களுக்கு நம்பிக்கை உண்டா. ஏன்?

பயங்கர மொக்கை கேள்விகள்

ஜட்டி போடும் பழக்கம் யார் கொண்டு வந்தது? எந்த வருடம்?

மண்ணுக்கு மனம் உண்டு, நிறம் உண்டு, சுவையும் உண்டு பிறுகு ஏன் அதை வைத்து டீ போட முடியாது?(பார்க்க த்ரீ ரோசஸ் டீ விளம்பரம்)

எட்டு கேள்விய நானே கேட்டுட்டேன் உடனே பதில் போடவும்

வால்பையன்

Anonymous said...

டோண்டு சார்,

இந்தப் பதிவுக்கும், சாமியாருக்கும், திருடனுக்கும் ஏதாவது சம்பந்தம் இருக்கா? இது சாதாரண பதிவா? உள்குத்துப் பதிவா? இல்ல, கும்மாங்குத்துப் பதிவா? இப்போதே தெளிய வைக்கவும் (முடிந்தால் அவருக்கும்).

dondu(#11168674346665545885) said...

அதுதான் கூறி விட்டேனே. உள்குத்து? புரிய வேண்டியவருக்கு புரிந்தால் போதும்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

bala said...

டோண்டு அய்யா,

கீழே விழுந்த மகன் நம்ம டி பி ஸி டி #2 அய்யான்னு புரியுது;ஆனா அழுது புரண்ட அம்மாக்காரி கோவி.மு.க அய்யாவா?கொஞ்சம் குழப்பமா இருக்கே.

பாலா

dondu(#11168674346665545885) said...

பாலா அவர்களே,

நம்ம பம்மல் உவ்வே சம்பந்தம் சொன்னா மாதிரி பயமொயி/கதையையெல்லாம் அனுபவிக்கணும்.

இப்ப கேவிக் கேவி அயுத அம்மால்லாம் யாருங்கற கவலை நமக்கு எதுக்கு?

அன்புடன்,
டோண்டு ராகவன்

Aani Pidunganum said...

Dondu saar,

Indha ulkutthu, veli kutthu irukatum, (Puriyaravanga purinjukatum, ennai pola tubelightku puriyadhu) kadhai meedhi eppo ezhudhuvinga...
Vaasagar virupathukunu potu kadhai mudikalamla....

 

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது