12/13/2009

போலி டோண்டு பற்றி 20.12.2009 தேதியிட்ட கல்கி இணையம் பற்றிய இதழில் வந்த எனது கட்டுரை

சில நாட்களுக்கு முன்னால் நேசமுடன் வெங்கடேஷ் தான் தயாரிக்கவிருக்கும் கல்கி இணையச் சிறப்பிதழில் போலி டோண்டு பற்றிய எனது அனுபவங்களை கட்டுரை ரூபத்தில் அனுப்பச் சொன்னார். அதற்காக நான் அனுப்பிய கட்டுரை இதோ.

இந்தியாவுக்கான கூகள் தேடுபெட்டியில் டோண்டு என தமிழ் ஒருங்குறியில் அடித்து க்ளிக் செய்தால் 38000 ஹிட்டுகளுக்கு மேல் வருகின்றன. அது இந்த உண்மை டோண்டுவுக்கு பெருமை ஒன்றும் அளிப்பதாக இல்லை. இந்த நிலைக்கான முக்கியக் காரணமே போலி டோண்டு என்ற பெயரில் வந்த மலேசிய பதிவர் மூர்த்திதான்.

2005-லிருந்து 2008 ஜூலை வரை அவன் தமிழ் இணையத்தில் கொட்டம் அடித்தான். அதற்கு முன்னரே பலரது வயிற்றெரிச்சலை கொட்டிக் கொண்டிருக்கிறான். பலர் அவனால் இணையத்தையே விட்டு விலகினர். அவனும் அதற்காக காலரை தூக்கி விட்டுக் கொண்டான்.2005-லிருந்து அவனது லீலைகள் வழக்கத்தைவிட அதிகமாகவே அத்துமீறின. காலணாகூட பெறாத ஒரு விஷயத்துக்காக அவன் என்னிடம் விரோதம் கொண்டான். சாதாரணமாக அவனால் தாக்கப்படுபவரது பெண் உறவினர்களை அசிங்கம் அசிங்கமாக திட்டுவான். ஆனால் என்னைப் பொருத்தவரை எனது அடையாளத்தையே முழுக்க முழுக்க ஏற்றுக் கொண்டு மற்ற பதிவர்களது பெண் உறவினர்களை திட்டினான்.

அதனால் திடீரென பார்ப்பவர்களுக்கு இந்த உண்மை டோண்டுவாகிய நான்தான் பதிவர்களை வாய்க்கூசும் வார்த்தைகளால் வசைபாடுகிறேன் என்று தோற்றம் அளித்தது. ஆகவே வேறு வழியின்றி நான் சண்டையில் இழுக்கப்பட்டேன்.

என்னைப் பற்றி முதலில் கூறிவிடுகிறேன். நான் பிடிவாதக்காரன்.மிரட்டல்களுக்கு அஞ்சாதவன். போலி டோண்டுவோ கணினி விஷயங்களில் நிபுணன். அந்தத் திறமையை வைத்துத்தான் எல்லோரிடமும் விளையாடி வந்திருக்கிறான். அவனுடன் போராடவே நான் எனது கணினி திறமைகளை வளர்க்க வேண்டியிருந்தது.

பிளாக்கர் பதிவுகளில் பின்னூட்டங்கள் இட மூன்று வழிகள் உண்டு. ஒன்று பிளாக்கராக லாகின் செய்து வருவது. இரண்டு அனானியாகவே அவருவது. மூன்று அதர் ஆப்ஷனில் வருவது. முதலில் அவன் அதர் ஆப்ஷன் மூலமாகத்தான் நான் பின்னூட்டம் இடுவது போன்ற தோற்றம் அளித்தான். வலைப்பூவில் எனது படத்தை போட்டுக் கொண்டு சமாளித்தேன். அதர் ஆப்ஷன் பின்னூட்டங்களுக்கு போட்டோ வராது,அதனால் அப்பின்னூட்டங்கள் போலியால் இடப்பட்டதாக அடையாளம் காண்ப்பட்டன. உடனே அவன் எனது வலைப்பூ போலவே அதே டிஸ்ப்ளே பெயர், எனது போட்டோ எல்லாம் வருமாறு ஏற்பாடு செய்தான். அதை அறிய எலிக்குட்டியை அந்த லிங்க் மேல் வைத்து பார்த்தால் போலி யார் உண்மை யார் என்பது பிளாக்கர் எண்ணை எலிக்குட்டி காண்பிப்பதால் தெரிய வரும். ஆனால் அதைச் செய்யவும் சோம்பேறிப்பட்டனர் பல பதிவர்கள். அதுதான் அவனுக்கு சாதகமாக அமைந்தது. நானும் விடவில்லை. சம்பந்தப்பட்ட பின்னூட்டங்கள் வந்த வலைப்பதிவுகளுக்கு போய் அவை போலி பின்னூட்டங்கள் என்பதை நிரூபித்தேன். இதை பெரும்பாலான பதிவர்கள் ஏற்றனர். ஆனால் சிலர் மட்டும் அதை ஏற்க மறுத்தனர்.

அதற்கான முக்கியக் காரணமே சாதி துவேஷம்தான்.இப்போது ஒரு கசப்பான உண்மை பற்றிக் கூறியே ஆக வேண்டும். இணையத்தில் பார்ப்பன எதிர்ப்பு சர்வ சாதாரணமாக நிலவுகிறது. அதுவும் போலி டோண்டு இத்தனை நாட்கள் ஆட்டம் போட முடிந்ததற்கு ஒரு முக்கியக் காரணம். டோண்டு ராகவன் என்னும் பார்ப்பனனை குறிவைத்ததை பலர் ஆதரித்தனர்.அப்படியே கூட தொடர்ந்திருக்க முடியும்.

ஆனால் இங்குதான் அவன் ஒரு முட்டாள்தனமான காரியம் செய்தான். யார் எனக்கு பின்னூட்டமிட்டாலும் அவர்கள் பதிவுக்கு போய் அவர்களை பயமுறுத்துவது, ஆபாசமாக திட்டுவது அதுவும் போதாது என்றால் அவர்களுக்கான போலிவலைப்பூக்களையும் உருவாக்குவது என்றே அவன் செயல்பட்டான். அதனால் பலர் பயந்து போய் எனக்காக பின்னூட்டம் இடுவதை நிறுத்தினர். எனது வலைப்பூக்களில் பின்னூட்டம் இடுவதற்கான அனானி மற்றும் அதர் ஆப்ஷன்களை செயல்படுத்தாமல் இருந்ததால் இது சாத்தியம் ஆயிற்று.

இப்போதுதான் எனது நண்பரான அமெரிக்கவாழ் பதிவர் ஒருவர் துணைக்கு வந்தார். நாட்டாமை, அறவாழி அந்தணன், தினகரன், ராஜ் சந்திரா ஆகிய பெயர்களில் வலைப்பூவை சிருஷ்டித்து கொண்டு எனக்கு பின்னூட்டங்கள் இட்டார். இன்னொரு சென்னை அன்பர் முனிவேலு, தங்கம்மா, பஜ்ஜி, கட்டபொம்மன் ஆகிய பெயர்களில் வலைப்பு சிருஷ்டித்தார். நான் என் தரப்புக்கு முரளி மனோகர் என்னும் பெயரில் வலைப்பூ சிருஷ்டித்தேன். ஆனால் அந்தோ அது பிளாக்கர் சொதப்பலால் வெளிப்பட்டது வேறு கதை. அது இங்கே வேண்டாம்.

தமிழ்மண நிறுவனர் காசி அவர்களையும் அந்த போலி டோண்டு விடவில்லை. அவர் சென்னை சைபர் கிரைமுக்கு சென்றார். நான் என் தரப்பில் சிபிசிஐடியின் சைபர் பிரிவுக்கு சென்றேன். இதெல்லாம் 2006-ல் நடந்தன. ஆனால் அம்முயற்சிகளால் பலன் அதிகம் இல்லை. ஏனெனில் சைபர் கிரைம் விதிகள் இன்னும் சரியாக வடிவமைக்கப்படவில்லை.

இதெல்லாம் நடந்து கொண்டிருக்கும்போது போலி டோண்டுவான மூர்த்தி இன்னும் பலரை எனக்கு பின்னூட்டம் இட்டதற்காக தாக்க அவர்களில் சிலர் பொறுமை இழந்து அவனுக்கு எதிராக சாட்சியங்கள் சேர்க்க தொடங்கினர். இந்த முயற்சிகளில் முக்கியமாக நான் குறிப்பிடுவது செந்தழல் ரவி, உண்மைத் தமிழன், குழலி, ஓசை செல்லா ஆகியோர். எல்லோருமாக சேர்ந்து ஆகஸ்ட் 2007-ல் ஒட்டு மொத்தமாக மூர்த்திதான் போலி டோண்டு என சந்தேகத்துக்கிடமின்றி பதிவுகள் போட்டனர்.

2008-ஏப்ரல் மாதம் செந்தழல் ரவி, உண்மைத் தமிழன் மற்றும் ஓசை செல்லா அவன் மேல் சென்னை சைபர் கிரைமில் புகார் கொடுத்தனர். சில நாட்கள் கழித்து நானும் புகார் தந்தேன். இம்முறை போலீசார் நல்ல ரெஸ்பான்ஸ் தந்தன்ர். மூர்த்தி பிடிபட்டான். ஜூலை 2008-ல் அவனை கமிஷனர் அலுவலகத்தில் வைத்து விசாரித்தனர். நானும் உண்மைத் தமிழனும் சென்றோம்.

போலீஸ் செய்த கெடுபிடியில் அவன் எல்லாவற்றையும் ஒத்துக் கொண்டு தன்னால் உருவாக்கப்பட்ட போலி தளங்களை அழித்தான். போலி டோண்டுவின் அத்தியாயம் முடிவுக்கு வந்தது. ஆனால் மழை விட்டும் தூவானம் விடவில்லை என்பது போல அவ்வப்போது அவனுக்கு அநுதாபம் தெரிவிக்கும் பதிவுகள் வருகின்றனதான். அதனால் என்ன? அவ்வாறு செய்பவர்களில் பலர் அவனுக்கு அல்லக்கைகளாக செயல்பட்டவர்கள் என்பது தெரிந்ததுதானே. ஆனால் ஒன்று, இன்னொரு போலி டோண்டு வராமல் தடுப்பது மிக முக்கியம்.


இன்னும் பலவிஷயங்கள் கூறியிருந்திருக்க வேண்டும். ஆனால் 500-600 வார்த்தைகளுக்குள் கட்டுரை இருக்க வேண்டும் என வெங்கடேஷ் கூறியிருந்தார். ஏனெனில் கல்கி பக்கங்கள் பல விஷயங்களை கவர் செய்ய வேண்டும். இது புரிந்து கொள்ளக்கூடியதே.

வெங்கடேஷ் அவர்கள் எனது கட்டுரையை பலகாரணங்களுக்காக மாடிஃபை செய்து எனது பார்வைக்கு அனுப்பினார். அக்காரணங்களை என்னால் புரிந்து கொள்ள முடிகிறது. ஆகவே அவற்றை இங்கு விவரிக்க முயலவில்லை. இரண்டு கட்டுரைகளையும் கம்பேர் செய்தாலே அவை தெரிந்துவிடும். அவரால் செய்யப்பட்ட மாற்றங்களை ஏற்றுக் கொண்டேன். போட்டோ அனுப்பச் சொன்னார். அனுப்பினேன். அக்கட்டுரை இதோ.

போலி டோண்டு பற்றி நிஜ டோண்டு
=============================
டோண்டு ராகவன். தமிழ் வலைப்பதிவு உலகத்தில் மிகவும் பிரபலமான பெயர். அவருடைய எழுத்தைவிட, அவர் இணையத்தில் பட்ட ரணங்களுக்காகவும் வேதனைகளுக்காகவும் அதிகம் அறியப்படுபவர். இணையத்தில் முகம் தெரியாத மனிதர்கள் எப்படி போலி போர்வை போர்த்திக்கொண்டு, மற்றவர்களை ரணப்படுத்த முடியும் என்பதற்கு இவரது அனுபவமே நேரடி உதாரணம். இங்கே அவரே தன் அனுபவங்களைப் பகிர்ந்துகொள்ளுகிறார்.

“நான் ஓய்வு பெற்ற சிபிடிபிள்யூ பொறியாளன். பிரெஞ்சு, ஜெர்மன் மொழிளைப் படித்தவன். மொழிபெயர்ப்பையே தொழிலாக வைத்துக்கொண்டு இருப்பவன். பல ஆண்டுகள் தில்லிவாசி. இணைய ஆர்வம் என்னையும் ஒரு நாள் தீண்டியது. அதுவும் தமிழில் எழுதவேண்டும் என்ற உந்துதல் என்னையும் ஆட்டிப் படைத்தது. அப்படித்தான், தமிழில் என்னுடைய வலைப்பதிவை நான் 2004ல் தொடங்கினேன். இவ்வளவு துன்பங்களுக்கும் வருத்தங்களுக்கும் நான் ஆளாவேன் என்று தெரியவில்லை.

வழக்கம் போல் என் மொழிபெயர்ப்பு அனுபவங்கள், என் சின்ன வயது அனுபவங்கள், கருத்துகள் என்று அனைத்தையும் என்னுடைய வலைப்பதிவில் எழுதிவந்தேன். தமிழ் வலைப்பதிவுகள் முழுவதும் புதிய நபர்களால் நிறைந்தது. என் வலைப்பதிவுகளைப் படித்துவிட்டு பல பேர் நண்பர்கள் ஆனார்கள். எண்ணற்றோர் என் பதிவுகளுக்கு பதில் தந்து, ஊக்குவித்து, என் எழுத்தை மெச்சினார்கள். நானும் பலருடைய வலைப்பதிவுகளில் போய் என் கருத்துகளை அவர்களோடு பகிர்ந்துகொண்டேன்.

மே 2005. வழக்கம்போல் நான் மற்ற நண்பர்களின் வலைப்பதிவுகளைப் படித்துக்கொண்டு இருந்தபோது, முகமூடி என்ற நண்பரின் வலைப்பதிவைப் பார்த்தேன். அவர் எழுதியிருந்த ஒரு பதிவுக்குக் கீழே பதில்கள் இருந்தன. அதில், என் பெயரில் ஒரு மோசமான, அருவருப்பான கமெண்ட் எழுதப்பட்டிருந்தது. படித்துப் பார்த்தவுடன், துடித்துப் போனேன். அதிர்ச்சி என்ற சொல்லுக்கு அன்றுதான் எனக்கு உருவம் தெரிந்தது.

சம்பந்தமே இல்லாமல், யாருடைய வம்புக்கும் போகாத என்னை யாரோ குறிவைத்திருக்கிறார்கள் என்று என் உள்மனம் சொன்னது. நான் என்ன பாவம் செய்தேன். எதற்கு என்னைக் குறிவைத்திருக்கிறார்கள்? யார் வைத்திருக்கிறார்கள்? தெரியவில்லை. ஒரு பக்கம் வலி. மறுபக்கம், இதை இப்படியே விட்டுவிடக் கூடாது என்ற வேகம், உறுதி.

உடனடியாக என் நண்பர்கள் அனைவருக்கும் கடிதம் எழுதி, இப்படி ஒரு சம்பவம் நடந்திருப்பதைத் தெரிவித்தேன். நான் இதைச் செய்யவில்லை, என் பெயரில் யாரோ விளையாட நினைக்கிறார்கள், ஜாக்கிரதை என்று எச்சரித்தேன். அடுத்த கட்டமாக, வலையுலகும் அதன் தொழில்நுட்ப விவரங்களும் தெரிந்த நண்பர்களிடம் பேச ஆரம்பித்தேன். எப்படி இதை எதிர்கொள்வது?

நண்பர்கள்தான் ஆபத்பாந்தவர்கள். தொழில்நுட்பம் சொல்லித் தந்தார்கள். இதுபோன்ற அனானிமிட்டி கமெண்ட்டுகளை எப்படி எதிர்கொள்ள வேண்டும் என்று விவரம் சொல்லித் தந்தார்கள்.

நான் நண்பர்களிம் இதை எடுத்துச் சொன்னபிறகுதான் மற்றவர்கள் எல்லோரும் உஷாரானார்கள். தமிழ் வலைப்பதிவு உலகமே இந்தப் ‘போலி டோண்டு’வை எதிர்கொள்ளத் தயாரானது. நான் நிஜ டோண்டு. வேறு ஒருவன் என் பெயரில் எழுதுகிறான் என்பதை மற்றவர்கள் ஒத்துக்கொள்ள ஆரம்பித்தார்கள்.

நான்தான் நிஜ டோண்டு என்பதை எப்படி நிரூபிப்பது? என் பிளாக்கர் ஐடி எண், என் போட்டோ ஆகியவற்றை என் பெயரோடு சேர்த்து எல்லா இடங்களிலும் எழுதத் தொடங்கினேன். மற்றவர்களின் வலைப்பதிவுகளில் நான் எழுதிய பதில்களை நானே ஒரு வலைப்பதிவு ஆரம்பித்து அதில் சேமித்தும் வைக்கத் தொடங்கினேன்.

இப்போது அடுத்த பிரச்னை ஆரம்பித்தது. என் வலைப்பதிவில் யார் வந்து பதில் போட்டாலும் அவர்களுக்கு எல்லாம் மிரட்டல் வரத் தொடங்கியது. என்னை ஊக்குவிப்பவர்கள் எல்லோரும், அந்த முகம் தெரியாத மனிதனுக்கு எதிரியானார்கள். உடனே, என் நண்பர்களை எல்லாம் அவர்களுடைய வலைத்தளங்களில் போய், வாய்கூசும் சொற்களால் அர்ச்சனை செய்ய ஆரம்பித்தான். அருவருக்கத்தக்க மொழி. ஆவேசமான கெட்ட வார்த்தைகள். பல நண்பர்கள் பயந்துபோனார்கள்.

எப்படி எதிர்கொள்ளுவது என்று எல்லோருக்கும் திணறல். பலர் என்னோடு சகவாசம் வைத்துக்கொள்வதே ஆபத்துக்குரியது என்று நினைக்க ஆரம்பித்தார்கள். உண்மையில் என்னைத் தனிமைப்படுத்த வேண்டும் என்பதே அந்த முகம் தெரியாதவனின் குறிக்கொள் போலும்.

இந்நிலையில், அடுத்த குண்டு விழுந்தது. என் வலைப்பதிவு போன்றே, அச்சு அசலாக முகம் தெரியாதவனும் இன்னொரு வலைப்பதிவு ஆரம்பித்தான். அதில் எவ்வளவு ஆபாசமாக கதைகளைப் போட முடியுமோ அவ்வளவையும் போட்டான். இதேபோல் இன்னும் பல வலைப்பதிவுகளை அவன் ஆரம்பிக்கத் தொடங்கினான். எல்லாவற்றிலும் இதேபோன்ற ஆபாச அர்ச்சனைகள்தான். என் நண்பர்களின் பெயர்களிலேயே இப்படிப்பட்ட வலைப்பதிவுகள் தொடங்கப்பட்டன.

உடனே, பிளாக்கர் வலைத்தள நிர்வாகத்துக்கு இந்த விவரங்களை எல்லாம் தெரிவித்து, கடிதங்கள் எழுதி, பல வலைப்பதிவுகளை தடுத்து நிறுத்தினோம். வெட்ட வெட்ட முளைக்கும் கள்ளிச்செடி போல், முகமற்றவன் இன்னும் இன்னும் மோசமாக என் மேல் பாய ஆரம்பித்தான்.

அடுத்த பாய்ச்சல்தான் என்னை இன்னும் குலை நடுங்க வைத்தது. என் வீட்டுக்கு ஒரு வலையுலக தோழி வந்து சென்றிருந்தார். அப்போது என் வீட்டினரோடு அந்த அம்மையார் புகைப்படம் எடுத்துக்கொண்டு இருந்தார். இதை எப்படியோ தெரிந்துகொண்ட அந்த முகமற்றவன், என்னுடைய இமெயில் ஐடி போன்றே இன்னொரு ஐடியை உருவாக்கிக்கொண்டு, மிக அமைதியாக அந்த அம்மையாருக்குக் கடிதம் எழுதி, என் வீட்டில் எடுக்கப்பட்ட புகைப்படங்களைப் பெற்றுக்கொண்டான்.

அவ்வளவுதான், இப்போது, ஆபாசம் என் மகள் பெயரில் பொழிய ஆரம்பித்தது. அதுவும் போட்டோவோடு. நிச்சயம் நிலைகுலைந்து போனேன். இதுபோல் எண்ணற்றவர்களின் தனிப்பட்ட விவரங்களை எல்லாம், போட்டோக்களை எல்லாம் திரட்டியவன், அதைக் கொண்டு மோசமான வலைத்தளங்களை உருவாக்கத் தொடங்கினான். நண்பர்கள் நடுங்கிப் போனார்கள். பலர் வலைப்பதிவு உலகை விட்டே ஓடிப் போனார்கள்.

இந்த நிலையில்தான் போலீஸுக்குப் போவது, எல்லா விவரங்களையும் சொல்லுவது ஆரம்பித்தது. சைபர் கிரைம் பிரிவில் போய் விவரங்களை, எங்கள் ஆதங்கங்களையும் கொட்டினோம். 2006லேயே இதை ஆரம்பித்தோம். ஆனால், அப்போது, சைபர் கிரைம் துறைக்குப் போதிய உபகரணங்கள் இல்லை. விவரங்கள் போதவில்லை. எப்படி இப்படிப்பட்ட ஒரு மேனியாக்கை கையாள்வது என்று தெரியவில்லை.

இதில் வேடிக்கை என்னவென்றால், இணையத்திலும் அதன் தொழில்நுட்ப விவரங்களிலும், இந்த முகமற்றவன் பயங்கர தேர்ச்சியுடையவனாக இருந்தான். உன்னைப் போல் ஒருவன் திரைப்படத்தில் வருவது போன்று, பல்வேறு நாடுகளின் ஐபி முகவரிகளில் இருந்து, இவன் பதில்களைப் போட்டு வந்தான். இவனை இந்த நாட்டில் இருப்பவன், இங்கிருந்து பதில் போடுகிறான் என்று சுட்டிக் காட்டுவது மிகவும் சிரமமாக இருந்தது.

ஆனால், அவனை விடத் திறமைசாலிகள் இல்லாமல் இல்லை. அவனை எப்படியும் பிடித்துவிடுவது என்ற வேகம் என் நண்பர்களிடையே தோன்றி, அவன் விட்டுச்சென்ற இணையத் தடங்களைக் கொண்டு, கடைசியாக அவனை மலேசியாவில் இருப்பவன் என்று கண்டுபிடித்தார்கள். பின்னர் அவன் பணியாற்றும் நிறுவனத்தையும், அவனையும் சேர்த்துக் கண்டுபிடித்தார்கள். எல்லாமே என் மூளைக்கு எட்டாத கம்பியூட்டர் சமாச்சாரம்.

சென்னை மாநகர போலீஸ் மூலம், அவனை மலேசியாவில் இருந்து இந்தியா வரவழைத்து, போலீஸ் ஸ்டேஷனில் நிற்கவைத்தபோதுதான், முதன் முறையாக அவன் முகத்தை நேருக்கு நேராகப் பார்த்தேன்.

அவனுக்கு எனக்கும் என்ன பகை? என்ன விரோதம்? ஒன்றுமே இல்லை. நான் என் கருத்துகளை எழுதிப் போகிறேன். அவன் அவனுடைய எண்ணங்களை. ஆனால், என் கருத்துகளும் சார்புகளும் பிடிக்கவில்லை என்பதற்காக, என்னை இத்தனை சித்ரவதை செய்யவேண்டுமா? பல நாள்கள் என் உறக்கத்தைக் கொடூரமாகக் கலைக்க வேண்டுமா? என் குடும்பத்தை, என் உறவினர்களையும் நண்பர்களையும் எல்லாம் இவ்வளவு கொச்சைப்படுத்த வேண்டுமா?

என் அனுபவத்தின் வயதுகூட அவனுக்கு இல்லை. மிஞ்சி மிஞ்சி போனால், 30, 35 இருக்குமா? இணையமும், தொழில்நுட்பமும் அறிவின் சாளரங்களாக இருக்கின்றன. ஆனால், உள்ளே இருக்கும் சாதி அழுக்கும் விரோதமும் வன்மமும் எங்கிருந்து வந்தன? தொழில்நுட்பமும் வளர்ச்சியும் நம் மனத்தை இன்னும் தூய்மைப்படுத்தவில்லையே?”


இப்போது இன்று வெளியான 20.12.2009 தேதியிட்ட கல்கியைப் பார்த்தால் அவர் எழுதியதும் முழுக்க வரவில்லை. அதே இடப்பிரச்சினைதான். இருப்பினும் பரவாயில்லை. ஒருமாதிரி நன்றாகவே வந்துள்ளது. ஆனால் இதனால் ஒரு தட்டையான தோற்றம் மட்டுமே வருகிறது என்பதையும் மறுக்கவியலாது. முழு பரிமாணங்களையும் அறிய பொறுமையாக எல்லா தரப்பினர் எழுதியதையும் படிக்க வேண்டியிருக்கும். போலி டோண்டு பற்றி நான் இட்ட பதிவுகள் பிரச்சினை வளர்ந்த பின்னணியை ஓரளவுக்கு காட்டுகின்றன.

இங்கு ஒரு சுவாரசியமான விஷயத்தைச் சொல்லியேயாக வேண்டும். நேசமுடன் வெங்கடேஷ் அவர்கள் இட்ட கமலுக்குப் பின் என்னும் பதிவு ஒன்றிலிருந்துதான் எனக்கும் போலி டோண்டுவுக்குமான சண்டையே ஆரம்பித்தது.

அன்புடன்,
டோண்டு ராகவன்

21 comments:

அண்ணாமலையான் said...

உள்ளே இருக்கும் சாதி அழுக்கும் விரோதமும் வன்மமும் எங்கிருந்து வந்தன? தொழில்நுட்பமும் வளர்ச்சியும் நம் மனத்தை இன்னும் தூய்மைப்படுத்தவில்லையே?” சரியா சொன்னீங்க சார். இந்த பதிவ படிக்கும் போது நீங்க அனுபவிச்ச துன்பம் புரியுது.அதே சமயம் இந்த விஷயத்த நீங்க கையாண்ட முறையில உங்களுக்கு உறுதுனையா இருந்த சக பதிவர்களை நினைக்கும் போது சந்தோஷமா இருக்கு.

சைவகொத்துப்பரோட்டா said...

இப்படி கூட நடக்கும் நபர்கள் இருக்கிறார்களா, படிக்கும்பொழுதே அதிரிச்சியாக இருக்கிறது.

Anonymous said...

but u also resbonsiple

komanakrisnan

Raju said...

நல்ல விசய ஞானம் பெற வழி வகுக்கும் கட்டுரை. போலிகள் எங்கும் நிலைக்காது!

பதிவுலகில் மட்டும் ஜாதி இல்லாமல் பண்ணலாம் அல்லவா? நீங்கள் குறிபிட்டது போல, ஒவ்வொருவரும் தான் இந்த ஜாதி என்று குரிபிடுவதால் தான் இந்த துவேஷங்கள் கொடிகட்டி பறக்கின்றன. முதலில் ஜாதி அடையாளங்கள் பதிவுலகில் நீக்கப்படவேண்டும். நல்லதுதானே?

***


நீங்கள் எழுதி வந்த எங்கே பிராமணன் நூற்றி சொச்சச்தில் முடித்துவிட்டது, இனி சோ எடுக்கமாட்டார் என்றீர்கள் ( எதோ முந்தைய பதிவு, எனக்கு புரிந்த மாதிரி! ). பொய் ஆனதே?

Anonymous said...

சாதி ரீதியான வன்மங்கள் உங்களுக்கு இல்லை என்கிறீர்களா?

Santhosh said...

//சம்பந்தமே இல்லாமல், யாருடைய வம்புக்கும் போகாத என்னை யாரோ குறிவைத்திருக்கிறார்கள் என்று என் உள்மனம் சொன்னது.//

ஸ்ஸ்ஸ்ஸ்யப்பாஆஆஆஆஅ படிக்கும் பொழுதே கண்ணை கட்டுதே.. சும்மா இருந்தவரை கல்கியில கட்டுரை போடுறேன்னு சொறிஞ்சி விட்டுடாரு..நல்லா இருங்கடே!

நான் நல்லவன் ரொம்ப ரொம்ப நல்லவன்னு ஒரு பக்க சார்பாக வெளிவந்துள்ள கட்டுரை நடுநிலையாளர்களுக்கு ஏன் இவருடைய ரசிகர்களுக்கே தெரியும் இவருடைய பங்கு இதில் எவ்வுளவு என்று..ரொம்ப நல்லா இருங்கடே!


இப்படிக்கு போலியின் அல்லகை (நீங்க எதுக்கு தனியா சொல்லிட்டு நானே சொல்லிடுறேன்)
சந்தோஷ் :)

dondu(#11168674346665545885) said...

//இப்படிக்கு போலியின் அல்லகை (நீங்க எதுக்கு தனியா சொல்லிட்டு நானே சொல்லிடுறேன்)//
சொன்னாலும் சொல்லாவிட்டாலும் நீங்கள் அவனது அல்லக்கைதான்.

டோண்டு ராகவன்

திருவாரூர் சரவணா said...

நேற்று கல்கி இதழில் நானும் இந்தக் கட்டுரையைப் படித்தேன் சார். பதிவுலகில் இவ்வளவு ஆபத்துக்களான்னு எனக்கு ஏற்பட்ட அதிர்ச்சி ரொம்ப நேரம் விலகவே இல்லை. ஆனாலும் போராடி அவனை கண்டுபிடிச்சிருக்கீங்க பாருங்க. அதுதான் கொஞ்சம் ஆறுதல் தருது.

வலைபதிவில் பிராமின் எதிர்ப்பு அதிகமாவே இருக்குறதையும் நான் கவனிச்சுட்டுதான் இருக்கேன். துஷ்டனை கண்டா தூர விலகுன்னு அவங்க ஒதுங்கிப் போகப் போக இவங்க ஆட்டம் அதிகமாகுது. தென் மாவட்டங்கள்ல செருப்பு கூட போடா விடாம ரெண்டு கிளாஸ் கொடுமை செய்யுற ஜாதிகள் எதுன்னு அவங்களுக்கு நல்லாவே தெரியும். அவங்களைப் பற்றி எழுதுனா அடுத்தநாள் உயிரோடவே இருக்கமாட்டோம்னு பயம் இருக்கு. அதனாலதான் வம்பு தும்புக்கு போகாத பிராமின்சை துவைச்சு காயப் போடுறாங்க. அவர்களிலும் தப்பு செயுரவங்களைப்பத்தி எது வேணுனாலும் எழுதட்டும். ஒட்டு மொத்தமா குறை சொல்லி திட்டுறதை என்னன்னு சொல்றது. வயிற்றேரிச்சல்னு ஒரே வார்த்தை பதில்தான் எனக்கு தோணுது.

Anonymous said...

16.அமெரிக்க அதிபர் ஒபாமா உண்மையில் மாற்றங்களைக் கொண்டு வந்ததன் பலன் என்ன?
17.தேமுக தலைவர் விஜயகாந்தின் அரசியல் பாணி வெற்றி பெறுமா?
18.பொதுவாய் ஒருவன் அசடு வழிவது என்றால்?
19.பரந்த உலகில் பணத்தைப் பற்றிக் கவலைப்படாமல் வாழமுடியுமா?
20.ஆந்திராவில் காங்கிரஸ் நிலை?
21.பலர் கேள்வி கேட்பது, நீங்கள் பதில் சொல்வது இது பற்றி?
22.பலரால் சுட்டிக்காட்டப்படும் ஸ்விஸ் வங்கியில் இருக்கும் இந்தியர்களின் கறுப்புப்பணம் எவ்வளவு?
23.தலைவர் கலைஞர் - சன் டீவி மாறன் குடும்ப உறவு இப்போது?
24.மதுரை அழகிரியாரின் நெருக்குதலுக்கு இந்த்தடவை தலைவரின் உறுதியான முடிவு தொடருமா?
25.வாழும் தமிழக அரசியல் தலைவர்களில் இலங்கைத் தமிழர்களின் மீது உண்மையான பாசம் கொண்டவர்?
26.வாழும் தமிழக அரசியல் தலைவர்களில் இலங்கைத் தமிழர்களின் மீது போலியான பாசம் கொண்டவர்?
27.தமிழ் சினிமாவின் சார்லி சாப்ளின் யார்?
28.காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால்
தமிழ்நாட்டில் பூரண மதுவிலக்கு சாத்யமா?
29.தற்சமயம் உள்ள தமிழ்த் தொலைக்காட்சிகளில் உருப்படியான நிகழ்ச்ச்சி எது?
30.உலகில் எதிரிகளே இல்லாதவர்கள் யாரேனும் உண்டா?
31.டெஸ்ட் போட்டி தர வரிசையில் முதலாம் இடத்துக்கு முன்னேறி விட்டதே இந்தியா?
32.பாரதி விழா( 11.12.2009) கொண்டாடங்கள் இந்த வருடம் எப்படி?

ஈஸ்வரன் said...

டோண்டுசார்,
உங்கள் வலைப்பதிவிலிருந்த மற்ற வலைபதிவுகளுக்கான லிங்கை ஏன் எடுத்துவிட்டிர்கள்?
என்னைபோன்றவர்களுக்கு அது மிகவும் வசதியாக இருந்தது. நான் தினமும் உங்கள் வலைபக்கதிட்கு வந்து அங்கிருந்து மற்ற வலைத்தளங்களுக்கு செல்வது வழக்கம். தமிழ்மணம் போன்ற திரட்டிகள் வழியாக செல்வது பெரிய கொடுமை. ஒரு நல்ல பதிவை அடைய 99 குப்பை பதிவுகளை ஆராய்ந்து விலக்க வேண்டி வருகிறது. நீங்கள் முன்னரே இந்த filtering செய்துகொடுத்திருந்தது நேரத்தை மிச்சபடித்தியது. தயவுசெய்து மீண்டும் இந்த வசதியை கொடுக்கவம்.

ஈஸ்வரன்

dondu(#11168674346665545885) said...

//நீங்கள் எழுதி வந்த எங்கே பிராமணன் நூற்றி சொச்சச்தில் முடித்துவிட்டது, இனி சோ எடுக்கமாட்டார் என்றீர்கள் ( எதோ முந்தைய பதிவு, எனக்கு புரிந்த மாதிரி! ). பொய் ஆனதே?//
நான் சொன்னது முதல் பகுதிக்குத்தான் பொருந்தும். அது புத்தகம் எங்கு முடிந்ததோ அங்கேயே முடிந்தது.

தொடர்ந்தால் என்னென்ன செய்யலாம் என எனது ஊகங்கள் சரியாகுமா என்பதை முரளி மனோகர் அவதானித்து எழுதுவான்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

dondu(#11168674346665545885) said...

@ஈஸ்வரன்
பிளாக் ரோல் வைப்பதால், இணைக்கப்பட்ட வலைப்பூக்களில் வைரஸ் பாதிப்பு இருந்தால் எனது வலைப்பூவும் முடக்கப்படும் அபாயம் உண்டு.

அதே மாதிரி ஒரு இணைப்பால்தான் உண்மைத் தமிழனின் பதிவுகள் கோவிந்தாவாயின.

ஆகவே பிளாக்கர் ரோலை எடுத்து விட்டேன். ட்விட்டர் இணைப்பையும் எடுத்தேன். தமிழிஷ், நம்குரல் ஆகியவர்றின் கருவிப்பட்டையை இணைக்கவில்லை.

இப்போது இருக்கும் விட்ஜெட்டுகள் வெறுமனே ஃபாலோயெர்ஸ், தமிழ்மணம், ஹிட் கவுண்டர் ஆகியவை மட்டுமே.

எனது பதிவும் சீக்கிரம் திறக்கிறது.

அன்புடன்,
டோண்டு ராகவன்

Anonymous said...

கனிக்க்ஷன் கொடுக்காத சும்மாங்காட்சிக்கும் அவங் உரலை மொத பக்கத்தால போடு சார். என்னாட டெஸ்டுக்கு இது மாறி ஆளுங்க பதிவு மேட்ச ஆவது, ரீஜென்டா கீதுன்னு சொல்லிகிட்டா என்ன ராங் ஆவப் போகுது ? கொஞ்சம் திங்க் பண்ணி பாரு சார்

வஜ்ரா said...

போலி டோண்டுவின் முன்னாள் அல்லக்கை எழுதி ஒரு பிரபலமான பத்திரிக்கையில் தொடர் ஒன்று வந்ததும், அதில் நீங்கள் போலிடோண்டு பற்றி எழுதவேண்டும் என்று அவனிடம் கேட்டுக்கொண்டதாகவும் சொன்னீர்கள். ஆனால் தொடரும் முடிந்தது அல்லக்கை as usual தன் தலைவனைக் காட்டிக்கொடுக்கவில்லை.
இப்பொழுது நீங்களாவது கல்கியின் இணைய இதழில் இந்த விஷயத்தைப் பற்றி எழுதியது மிகுந்த மன மகிழ்சியைத் தருகிறது.

அப்படியே உங்களிடம் உள்ள போலியின் அல்லக்கைகளின் பட்டியலைப் போட்டால் நாளை வலை உலகுக்கு வரும் புதிய அன்பர்களுக்கு யாருடன் எச்சரிக்கையாக இருக்கவேண்டும் என்று தெரிந்துகொள்வார்கள்.

வால்பையன் said...

வாங்கிடலாம்!

கிருஷ்ண மூர்த்தி S said...

வால்பையன் said...

/வாங்கிடலாம்!/

எங்க வால்பையன் சுரத்தே இல்லாம பின்னூட்டம் போட ஆரம்பிச்சதுக்கு என்ன அல்லது யார் காரணம்? ஜெய் ஹிந்துபுரத்துக் காரர் சமீபத்திய பதிவில் கூட ரைட்டு என்று ஒரே வார்த்தையில் முடித்துக் கொண்டிருக்கிறார்!

இப்போதே பதில் சொன்னாலும் சரி, கேள்வி-பதில் பகுதிக்குத் தள்ளிக் கொண்டுபோய் பதில் சொன்னாலும் சரி!

எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகணும் :-)

Anonymous said...

dear dondu sir i am new to this blogger world and it is very disgusting and distressing to read the words immersed in anti brahminism. may god give some decency to these bloggers

balasubramanian vellore

thiruchchikkaaran said...

I appreciate Mr. Dondus Courage!

thiruchchikkaaran said...

Dear Mr. Dondu,

Can I request you to give the complete details of Mr. Murthy including his photo so that we can post articles about the same. I think all the bloggers should post articles about this, with the photo , so that atleast people will refrain from doing so in the future.

Anonymous said...

Who reads Kalki Internet issue?

Your matter should have appeared in Kalki and other popular main magazines.

ஜோதிஜி said...

ஐயா வணக்கம்

இது குறித்து ரவி எழுதிய சில விசயங்களை அப்போது படித்துள்ளேன். ஆனால் இதற்குப் பிறகு இத்தனை விசயங்கள் உங்கள் மன உளைச்சல் துன்பங்கள் படித்து முடிக்கும் போது என்ன சொல்வது என்றே தெரியவில்லை. அது போல மூர்த்தியின் திறமையை உங்கள் வார்த்தைகள் மூலம் உணரும் போது அதை விட ஆச்சரியமாக இருக்கிறது.

செந்தழல் ரவி உண்மைத்தமிழனுக்கு என் சார்பாகவும் வாழ்த்துகள்.

 

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது