2/13/2006

இனிமையான உருது மொழி

கார்க்கில் யுத்தம் வரும் வரைக்கும் பாகிஸ்தான் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளைக் காண முடிந்தது. அவற்றில் செய்திகளையும் பார்ப்பதுண்டு. எல்லாமே இந்திய எதிர்ப்பு செய்திகளே, இருப்பினும் அவற்றையும் தெரிந்து கொள்வது ஒரு விதத்தில் உசிதமே. எதிராளி நம்மைப் பற்றி என்ன நினைக்கிறான் என்று தெரிந்து கொள்வதில் தவறேதும் இல்லை என்பது எனது கருத்து. ஆனால் அவற்றைப் பற்றி அல்ல இப்பதிவு.

நான் கூறநினைப்பது பாகிஸ்தான் நாடகங்கள் மற்றும் தொலைக்காட்சித் தொடர்கள் பற்றியே. அவற்றில் என்னைக் கவர்ந்தது அவற்றில் உருது மொழியின் உபயோகமே. ஹிந்தி உருது ஆகிய இரண்டு மொழிகளுமே ஒரே இலக்கண அடிப்படையைக் கொண்டவை. சொல்லாட்சிகளில் மட்டும் வேறுபாடுகள் தெரியும். ஹிந்தியில் வடமொழி வார்த்தைகளும் உருதுவில் அரேபிய மற்றும் பாரசீக வார்த்தைகளும் அதிகம் காணப்படும். அவ்வளவுதான்.

தனிப்பட்ட முறையில் எனக்கு உருது அதிகம் பிடிக்கும். காரணம் கூறத் தெரியவில்லை. அடிக்கடி உருது நிகழ்ச்சிகள் பார்த்ததில் தில்லியில் இருக்கும்போது நான் பேசிய ஹிந்தியில் உருது வார்த்தைகள் அதிகம் காணப்பட்டன. அப்படித்தான் ஒரு நாள் நான் என் கீழ் வேலை செய்த எலெக்ட்ரீஷியனிடம் "ஏதேனும் கையெழுத்து இடுவது போன்ற தேவை ஏற்பட்டால் எனக்கு தகவல் தெரிவிக்கவும்" என்பதை நான் "அகர் கோயீ தகல்லுஃப் ஹோ முஜே இத்திலாக் கர் தேனா" என்று கூற அவன் என்னை ஒரு முறை விழித்துப் பார்த்து விட்டு அவசரம் அவசரமாக பக்கத்தறைக்கு போய் வாய் விட்டு சிரித்து விட்டு அகன்றான். ஒரு மதறாசி உருது மொழியுடன் விளையாடுவது அவனுக்கு விந்தையாக இருந்திருக்கிறது. ஆனால் அதற்கெல்லாம் அஞ்சுபவன் டோண்டு ராகவனாக இருக்க முடியாதே,

பாக்கிஸ்தானி சீரியல்களை பார்க்கும்போது அவை எனக்கு வட இந்திய சீரியல்களை விட அதிகம் பாந்தமாகப் பட்டன. காரணம், நம் தமிழ் சினிமாவில் முறைப் பெண், முறை மாப்பிள்ளை என்பது போல அந்த ஊர் நாடகங்களிலும் அவ்வாறே இருந்தது. தென்னிந்தியாவில் அத்தை மகளை திருமணம் முடிப்பது உரிமை என்பது போன்ற ரேஞ்சில் அந்த சீரியல்களிலும் அவ்வாறே வரும். ஆனால் சிறிது மாறுதல்கள் உண்டு. அதாவது இசுலாமிய வழக்கப்படி பெரியப்பா/சித்தப்பா மகளைக் கட்டலாம். அக்கா மகள் கூடவே கூடாது. அத்தை மகள் மற்றும் மாமன் மகள் விஷயம் நம் தென்னிந்தியர்களின் வழக்கமே அங்கும். ஆக இவை எல்லாவற்றையும் உரிமைக்காரன் அல்லது ஹக்தார் என்று பார்க்கும்போது பாகிஸ்தான் சீரியல்கள் எனக்கு அதிகப் பாந்தமாய் பட்டன. ஹிந்தி சீரியல்களிலோ அத்தை மகள், மாமன் மகள், அக்கா மகள், சித்தப்பா/பெரியப்பா மகள் ஆகிய எல்லா உறவுகளுமே சட்ட விரோதமானவையே. இந்த இடத்தில் நான் தவறு சரி என்ற பேச்சுக்கெல்லாம் போகவில்லை. ஒவ்வொரு முறைக்கும் ஏதாவது சமூகக் காரணங்கள் இருக்கும். விஞ்ஞான முறைப்படி பார்க்கும் வழக்கமும் வந்து விட்டது.

உருது மொழி சொல்விளையாட்டுக்கு மிகவும் ஏற்றது. கவிதைகளுக்கும் அவ்வாறே. உருது கவி சம்மேளனங்கள் காண்பது எனக்கு மிகவும் பிடிக்கும். சொல் விளையாட்டு என்றதும் எனக்கு ஒரு நிகழ்ச்சி நினைவுக்கு வருகிறது. தன்னுடன் கூட வந்த பர்ஹார் என்பவரை கூட்டத்தில் தவறவிட்ட என் நண்பர் என்னைப் பார்த்தும் "யே பர்ஹார் கே பச்சே கோ கஹீன் தேக்கா? (இந்த பர்ஹார் பையனை எங்கேனும் பார்த்தாயா?) என்று என்னைக் கேட்க நான் என்னையறியாமலேயே "க்யோன், பர்ஹார் ஃபரார் ஹோ கயே?" (ஏன் கேக்கறீங்க பர்ஹார் கம்பி நீட்டி விட்டாரா?") என்று கேட்க நண்பர் தான் பர்ஹாரைத் தேடுவதையும் மறந்து வெடிச் சிரிப்பைத் சிதறவிட்டார்.

பாகிஸ்தானிய சீரியல் ஒன்றில் ஒரு அதிகாரி அரசு ஆணையை ஆங்கிலத்தில் டிக்டேட் செய்து விட்டு அதை உருது மொழியாக்கம் செய்து கோப்பிலிட்டப் பின்னால் ஆங்கிலக் கடிதத்தை மேலே அனுப்புமாறு கூறுகிறார். நம்மூர் நிகழ்ச்சிகளில் இதே இடத்தில் மொழிபெயர்ப்பு ஹிந்தியில் செய்யச் சொல்லுவார்கள். அவ்வளவுதான் வித்தியாசம்.

தூர்தர்ஷனில் "புனியாத்" என்ற சீரியல் வந்தது. இந்திய பாகிஸ்தான் பிரிவினைக் காலங்களில் இருந்து கதை ஆரம்பித்து, ஃப்ளாஷ் பேக்கில் 1915 லாஹூர் வந்தது. இந்தியா பாகிஸ்தான் ஆகிய இரு தேசங்களிலுமே இந்த சீரியல் ரொம்ப விரும்பிப் பார்க்கப்பட்டது. அதிலும் லாஹூர்வாசிகள் அம்ருத்சர் தொலைக் காட்சி நிலையதிலிருந்து நேரடி ஒளிபரப்பே பெற முடியும். மற்ற பாகிஸ்தானியர் வி.சி.ஆரில் பதிவு செய்து கொண்டு பார்த்தனர். கதாநாயகன் ஹவேலி ராமும் லாஜோ அல்லது லாஜ்வந்தி என்று அழைக்கப்படும் அவன் மனைவியும் பிரிவினைக் காலத்தில் ஒருவரை விட்டு ஒருவர் பிரிந்து பிறகு மீண்டும் சேர்கின்றனர். அந்த குறிப்பிட்ட சீன் வந்த அன்று லாஹூர் மற்றும் அம்ருத்ஸர் ஆகிய இரு நகரங்களிலுமே தெருக்களில் ஈ காக்கை இல்லை. எல்லோரும் தத்தம் வீடுகளில் முடங்கிக் கிடந்தனர்.

அதே போல பல பாகிஸ்தானி சீரியல்களைக் கண்ட எனக்கும் ஒரு சராசரி பாகிஸ்தானியனுக்கும் இந்தியனுக்கும் இடையில் வேறுபாடு எதையும் என்னால் காண முடியவில்லை. இதற்கெல்லாம் காரணம் நான் விரும்பும் உருது மொழியே காரணம்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

10 comments:

நல்லடியார் said...

//இசுலாமிய வழக்கப்படி பெரியப்பா/சித்தப்பா மகளைக் கட்டலாம். அக்கா மகள் கூடவே கூடாது.//

இது தவறா சரியா என்ற தர்க்கத்திற்கு செல்லாமல், இந்துக்களில் சகோதரியின் மகளை மனப்பது பற்றி சொல்ல முடியுமா? சகோதரியின் மகளை மனப்பது போல் சகோதரனின் மகனை ஏன் மனப்பதில்லை? தெரிந்து கொள்ளும் ஆர்வம் மட்டுமே. உள்நோக்கம் ஏதுமில்லை என்பதை அறியவும்.

மற்றபடி, 20-25 வருடங்களுக்கு முன்பு வலைப்பூக்கள் இருந்திருந்தால் உங்கள் டைரிகளுக்கு வேலை இல்லாமல் போயிருக்கும். வலைப்பூக்களும் திரட்டியும் வந்த பின்னர் இம்சை தாங்க முடியவில்லை. பெரும்பாலான பதிவுகளைப் பார்க்கும் போது டைரியிலிருந்து எடுத்து எழுதுகிறீர்களோ என்று நினைக்கத் தோன்றுகிறது.

dondu(#11168674346665545885) said...

வாருங்கள் நல்லடியார் அவர்களே. ஒரு பெண்ணுக்கும் அவள் சகோதரன் மகனுக்கும் ஒரே கோத்திரம் என்று வந்து விடும். ஆனால் திருமணமான சகோதரி வேறு கோத்திரம் ஆகிறாள், அவள் பெண்ணும் வேறு கோத்திரம் ஆகிறாள். கோத்திரம் என்பது தந்தைவழி பங்காளிகளுக்கு ஒன்றாக இருக்கும்.

நீங்கள் கேட்பதற்கு முன்னமே இன்னொரு கேள்வியை நானே எதிர்நோக்கிக் கூறுவேன். இரு சகோதரிகளின் குழந்தைகளும் சாதாரணமாக வேறு கோத்திரத்தினராகத்தான் இருப்பர். இருப்பினும் அந்த உறவும் தென்னிந்தியரிடையே திருமண உறவாகக் கருதப்படுவதில்லை. எல்லாமே லாஜிக்கில் வருவதில்லை என்றுதான் கூற முடியும்.

மொத்தத்தில் உறவு முறைத் திருமணங்கள் ஹிந்துக்களிடையே விந்திய மலைக்கு வடக்கே தடை செய்யப்படுகின்றன.

இப்போது டைம் பாஸ் செய்ய ஒரு கேள்வி: எனக்கும் என் மகளுக்கும் ஒரே மாமியார் என்றால் என் மச்சினன் மனைவி எனக்கு எந்த உறவு முறை?

அன்புடன்,
டோண்டு ராகவன்

G.Ragavan said...

வடக்கில் இலக்கியச் செழிப்புள்ள மொழிகள் மூன்று. வடமொழி, வங்கம் மற்றும் உருது. நமக்கு வடக்கத்திய மொழிகள் உச்சரிப்பு கொஞ்சம் கஷ்டமாகத்தான் இருக்கும். நமக்கு இனிக்கும் தமிழ் அவர்களுக்குக் கரடு முரடாக இருக்கிறதே. அது போலத்தான். சிறந்த கவிதைகளைக் கொண்டது உருது மொழி.

dondu(#11168674346665545885) said...

செந்தமிழும் பெண்குரலும் ஒன்றாகட்டும்" என்ற பாடல் அடிக்கு மாதவி (ராஜஸ்ரீ) பூம்புஹார் படத்தில் அபிநயம் பிடிக்கும் காட்சி என் மனக்கண்முன்னே விரிகிறது.

ஆனால் நீங்கள் கூறுவது போல நம் மொழியின் இனிமை அது தெரியாதவருக்கு புரியாததுதான். ஆக ஒரு மொழியின் இனிமையை உணர அம்மொழியில் கூறப்படுவதன் பொருளும் விளங்க வேண்டும்.

உருதுவைப் பொருத்தவரை எனக்கு அந்த மொழி தெரியும் ஆகவே அதன் சொல் விளையாட்டுகள், வார்த்தை நயம் ஆகியவற்றை உணர முடிகிறது.

அன்புடன்,
டோண்டு ராகவன்

வெளிகண்ட நாதர் said...

உருதுவை இனிமையாக பேசக்கூடிய இந்தி நடிகை, நம்ம ஊர் ஜெமினி பொண்ணு ரேகான்னு தெரியுங்களா, 'உம்ரோவ் ஜான்' பார்த்திரூக்கிங்காளா! ஹிந்தி கொஞ்சம் தெரிஞ்சாலே போதும், நல்லா ரசிக்கலாம். நிறைய ஹிந்திப்பட வசனங்கள்ள உருதுவோட தாக்கம் அதிகம் உண்டு கவனிச்சிருக்கிங்களா, ஏன்னா வசனம் எழுதற பெரும் பாலோர் பாக்கிஸ்தானை பூர்வீகமா கொண்டவங்க!

Muthu said...

////இப்போது டைம் பாஸ் செய்ய ஒரு கேள்வி: எனக்கும் என் மகளுக்கும் ஒரே மாமியார் என்றால் என் மச்சினன் மனைவி எனக்கு எந்த உறவு முறை?///

மகள் (??)

ஒரிசாவில் உறவு முறைகள் கொஞ்சம் வித்தியாசமானவை.
http://muthukmuthu.blogspot.com/2006/01/blog-post.html

dondu(#11168674346665545885) said...

ஜெமினி மகள் ரேகாவைத் தெரியாமல் இருக்க முடியுமா? அவர் படம் உம்ராஉ ஜான் பார்த்திருக்கிறேன். அதற்காக அவர் சிறந்த நடிகைக்கான ஊர்வசி விருதை குடியரசுத் தலைவரிடமிருந்து பெற்றார். அதே வருடம் அந்த விருதுக்காக கருதப்பட்டவர் சுகாசினி நெஞ்சத்தைக் கிள்ளாதே படத்துக்காக.

ரேகாவை அவர் முதல் படம் சாவன்பாதோன் படத்திலிருந்து பார்த்து வருகிறேன். அவர் படங்களில் எனக்குப் பிடித்தது ... ஓக்கே அவரைப் பற்றித் தனிப்பதிவே போட்டு விடுகிறேன்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

dondu(#11168674346665545885) said...

சரியான விடை முத்து அவர்களே. இதில் விசேஷம் என்னவென்றால், தன் மகளை தன் மச்சினனுக்கே கட்டிக் கொடுத்த ஒருவரும் அந்த மகளும், சம்பந்தப்பட்ட மச்சினனும் இப்புதிருக்கு விடை தெரியாமல் முழித்தார்கள். நான் விடை கூறியதும் செல்லமாக தத்தம் தலையில் அடித்துக் கொண்டனர்.

இதே புதிரை உருதுவில் கேட்ட போது அதாவது "அகர் மேரீ அவுர் மேரி பேடீ கீ சாஸ் ஏக் ஹீ ஹை மெரே சாலே கி பீவி மேரீ க்யா லக்தீ" என்ற உடனேயே கேட்பவருக்குத் தலை சுற்றி திரும்பத் திரும்ப கேட்பார்கள். விடையைக் கூறினாலும் அவர்களுக்கு புரியாது. விளக்கிக் கூறினால், சகோதரியின் மகளை மணப்பதா, தோபா தோபா என்று அரற்றுவார்கள்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

dondu(#11168674346665545885) said...

The comment below was put in by me in Uma Kathir's post vide http://umakathir.blogspot.com/2006/09/blog-post_115834982117782611.html
பாக்கிஸ்தானியருக்கும் நமக்கும் என்ன வித்தியாசம் இருந்திருக்க முடியும்? இருவரும் ஒரே தேசத்தில் இருந்தவர்கள்தானே. அதிலும் பாக்கிஸ்தானி சீரியல்களை பார்க்கும்போது அவை ரொம்ப பாந்தமாகவே இருந்தன. இப்போது அவற்றை பார்க்க முடியவில்லை என்பது சோகமே.

உருதுவும் இந்தியும் ஒரே மொழிதான் இலக்கணம் ஒன்று ஆனால் சொற்கள் சில வித்தியாசப்படும். உருதுவில் அரேபியத் தாக்கம் இருக்கும் இந்தியில் வடமொழியின் தாக்கம். எழுத்துருக்களில் வேறுபாடு, அதுவும் நாமாக வைத்துக் கொன்டது, அவ்வளவே. உருது மொழி பற்றி நானும் பதிவு போட்டுள்ளேன். பார்க்க கீழே:

இந்தப் பின்னூட்டத்தை உண்மையான டோண்டுதான் இட்டான் என்பதைக் காட்ட அதன் நகலை நான் மேலே குறிப்பிட்ட பதிவிலும் பின்னூட்டமாக இடுகிறேன். பார்க்க: http://dondu.blogspot.com/2006/02/blog-post_13.html

அன்புடன்,
டோண்டு ராகவன்

dondu(#11168674346665545885) said...

ஆசாத் அவர்களது பதிவு ஒன்றில் நான் இட்ட இந்தப் பின்னூட்டம் மட்டுறுத்தலுக்காகக் காத்திருக்கிறது. பார்க்க: http://ennam.blogspot.com/2006/11/blog-post_16.html
"இஸ்லாமியர்களுக்கும் கவிதைக்கும் அப்படியென்ன உறவு?"
இதில் என்ன ஆச்சரியம்? தேனினும் இனிய உருது மொழி, மற்றும் அரேபிய பாரசீக மொழிகள் கவிதை உருவாக்க சிறந்த மொழிகள் அல்லவா? வெவ்வேறு விதமான சாயல்களை சர்வ சாதாரணமாகத் தரக்கூடியவை.

முஷைரா எனப்படும் கவியரங்கங்களைப் பார்த்திருக்கிறீர்களா? கவி பாடப் போகிறவர் பார்வையாளர்களிடம் "இஜாஜத் ஹை?" (அனுமதி உண்டா?) என்று கேட்டு, பிறகு பாடும் அழகே அழகு. வாஹ் வாஹ் என்று ஆரவாரம் எழுவதும், "ஆதாப் அர்ஜ் ஹை" என்று கவி நன்றி சொல்வதும் காணக் கண்கொள்ளா காட்சிகள்.

இப்பின்னூட்டத்தின் நகலை எனது உருது மொழியைப் பற்றிய பதிவிலும் பின்னூட்டமாக இடுவேன். பார்க்க: http://dondu.blogspot.com/2006/02/blog-post_13.html

அன்புடன்,
டோண்டு ராகவன்

 

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது