11/06/2006

துள்ளும் இசை தரும் ஓ.பி. நய்யார்

அண்மைக் காலம் வரை லதா மங்கேஷ்கர் ஆட்சி ஹிந்தி திரையுலகில் நடந்து வந்தது. மாபெரும் இசை மேதையான அவரது மறுபக்கம் சற்று அதிர்ச்சியை தரக் கூடியது. இவ்வளவு இனிமையான குரலை உடைய அவருக்கு ஏனோ மற்ற பாடகிகள் முன்னுக்கு வருவது பிடிக்காமல் போயிற்று. பல இசையமைப்பாளர்களை அவர் பயமுறுத்தி தன்னைத் தவிர வேறு பாடகிகளுக்கு சான்ஸ் கிடைக்காமல் இருக்க ஆவன செய்தார். அவர்களில் அவரது சொந்த சகோதரி ஆஷா போன்ஸ்லேயும் அடக்கம்.

கிட்டத்தட்ட எல்லா இசையமைப்பாளர்களும் அவர் வார்த்தைக்கு கட்டுப்பட்டனர். நம்மூர் வாணி ஜயராம் அவர்களது ரிக்கார்டிங்கை ஒரு சமயம் நிறுத்தி வைத்தவர் இந்த புண்ணியவதி. (இசையமைப்பாளர் வசந்த தேசாய்). ஆனால் ஒருவர் மட்டும் அசையாமல் நின்றார். அவர்தான் ஓ.பி. நய்யார் அவர்கள்.

ஆஸ்மான் என்ற ஒரு படத்தில் மட்டும்தான் அவர் இசையமைப்பில் லதா பாடியிருக்கிறார். அதன் பிறகு ஒரு படத்திலும் அவர் லதாவை கூப்பிடவேயில்லை. அவரது சகோதரி ஆஷா போன்ஸ்லே, ஷம்ஷாத் பேகம், வாணி ஜயராம் ஆகியோரை வைத்துக் கொண்டே தனது இசை சித்து விளையாட்டுகளை நடத்தியவர் நய்யார் சாகேப்.

கிஸ்மத் என்னும் படத்தில் "கஜ்ரா மொஹப்பத்வாலா" என்னும் பாடலை ஆஷாவும் சம்ஷாத் பேகமும் அருமையாக பாடியிருப்பார்கள். பாடல் வரிகளுக்கு முன்னோடியான அவரது இசை அற்புதம். அதே போல சம்பந்த் என்னும் படத்தில் "அந்தேரே மே ஜோ பைட்டே ஹைன், நஜர் உன்பர் பீ குச் டாலோ, அரே ஓ ரோஷனிவாலோ" என்று சமீபத்தில் 1968-ல் நான் கேட்டப் பாடல் இன்னும் எனது உள்ளத்தை விட்டு அகலவில்லை. நயா தௌர், ஆர் பார் (பழையது மற்றும் புதியது), தில் அவுர் முஹப்பத், இன்ஸ்பெச்டர், சி.ஐ.டி. ஆகிய படங்கள் பாட்டுக்காகவே ஓடின.

ஆல் இந்தியா ரேடியோவில் நான் வெளிநாட்டு ஒலிபரப்பு சேவையில் பிரெஞ்சு ஒலிபரப்பை நடத்தியபோது ஓ.பி. நய்யார் பாடல்களை போடும்போது மட்டும் அறிவிப்பாளர் என்ற ஹோதாவில் ஓரிரு வார்த்தைகள் அவரை புகழ்ந்த பிறகுதான் போடுவேன்.

அவரது "சல் அகேலா, சல் அகேலா.." என்னும் பாட்டை கேட்ட பிறகும் ஒருவர் மனது துள்ளாட்டம் போடவில்லையென்றால், அவருக்கு சங்கீதக் காது இல்லை என்றுதான் நான் கூறுவேன். ஓ.பி. நய்யார் ஒரு அடாவடி நடவடிக்கையை எதிர்த்து போராடியதாலேயே அவரை எனக்கு மிகவும் பிடிக்கும். அதே சமயம் அவரது இசையும் சூப்பர்.

தொண்ணூறுகளின் துவக்கத்தில் அவர் இசையமைத்த இரு படங்கள் அதிசயமாக வந்தன. அவை ஜித் மற்றும் நிஸ்சய். அதில் இரண்டாவதாக வந்த நிஸ்சய் (Nischay) பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது. வினோத் கன்னா ராக்கி அவர்களை கோச்சில் வைத்து வண்டியோட்டும் வேளையில் பாட ஆரம்பிக்கிறார். ஓ.பி. நய்யாரின் இனிய இசை தியேட்டரை நிரப்ப, ஒரே கரகோஷம் ஆடியன்ஸ் தரப்பில். கரகோஷமிட்டது இந்த டோண்டு ராகவனும்தான். திரையை பார்க்க முடியாமல் அவன் விட்ட ஆனந்த கண்ணீர் தடுத்தது.

அன்புடன்,
டோண்டு ராகவன்

11 comments:

கஞ்சா கருப்பு said...

"வினோத் கன்னா ராக்கி அவர்களை கோச்சில் வைத்து வண்டியோட்டும் வேளையில் பாட ஆரம்பிக்கிறார். ஓ.பி. நய்யாரின் இனிய இசை தியேட்டரை நிரப்ப, ஒரே கரகோஷம் ஆடியன்ஸ் தரப்பில். கரகோஷமிட்டது இந்த டோண்டு ராகவனும்தான். திரையை பார்க்க முடியாமல் அவன் விட்ட ஆனந்த கண்ணீர் தடுத்தது."
நேரில் பார்த்த உணர்வை கொடுத்து விட்டீர்கள் டோண்டு சார்.

"ஓ.பி. நய்யார் ஒரு அடாவடி நடவடிக்கையை எதிர்த்து போராடியதாலேயே அவரை எனக்கு மிகவும் பிடிக்கும். அதே சமயம் அவரது இசையும் சூப்பர்."
அடாவடிக்கெதிரான உங்கள் பிரசித்திபெற்ற நிலைப்பாடுதான் தமிழ்மணமே அறிந்ததொன்றாயிற்றே.

எங்கள் பெரிய வாப்பா அவர்களுக்கு ஓ.பி.நய்யாரின் இசை ரொம்ப பிடிக்கும். அவரிடம் உங்கள் பதிவை காட்டுவேன். மிகவும் மகிழ்ச்சியடைவார்.

அன்பன்,
முகம்மது யூனுஸ்

வஜ்ரா said...

இந்த விஷயத்திற்காகவே எனக்கு லதா மங்கேஷ்கர் என்றால் பிடிக்காமல் போய் அவர் குரலும் பிடிக்காமல் போய்விட்டது.

இன்று லதா வை விட ஆஷா போஸ்லே அதிக பாடல்கள் பாடுகிறார் என்று நினைக்கிறேன்.

dondu(#11168674346665545885) said...

நன்றி முகம்மது யூனுஸ் அவர்களே. உங்கள் பெரிய வாப்பாவை கேட்டதாகச் சொல்லவும்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

dondu(#11168674346665545885) said...

உங்கள் பிரமையை உடைப்பதற்கு மன்னிப்பு கோருகிறேன் வஜ்ரா அவர்களே. ஓ.பி. நய்யாரின் தயவில் வளர்ந்து விட்ட ஆஷா போன்ஸ்லே பிறகு தன் அக்காவின் கட்சியில் சேர்ந்து கொண்டார். அதற்கெல்லாம் ஓ.பி. நய்யார் அவர்கள் அசரவில்லை என்பதும் நிஜமே.

அன்புடன்,
டோண்டு ராகவன்

GiNa said...

லதா மங்கேஷ்கர் எப்போதோ ரிடயர் ஆயிருக்கவேண்டியவர், அதை செய்யாமல் இன்னும் கீச்சுக்குரலில் கரினா கபூருக்கு பாடுவது கேட்க நாராசமாக இருக்கிறது!

வாணி ஜெயராமுக்கு அவர் ஆப்பு வைத்தாரென்றல், இந்த கால தமிழ் இசையமைப்பாளர்கள் உதித் நாராயணை பாட அழைக்கிறார்கள். சரியாக பாடித்தொலைத்தாலும் பரவாயில்லை, பிரிய்மான பெண்ணை காதலித்தால் தப்பில்லை என்ற வரிகளை பெரியம்மா பெண்ணை காதலித்தால் தப்பில்லை என்று பாடுகிறார் ;D (செய்தி உபயம்: வைரமுத்து)

என்னத்த சொல்லி.. என்னத்த செய்ய...

dondu(#11168674346665545885) said...

"..இன்னும் கீச்சுக்குரலில் கரினா கபூருக்கு பாடுவது கேட்க நாராசமாக இருக்கிறது!"
இது என்ன கொடுமை சரவணன்? :))))

அன்புடன்,
டோண்டு ராகவன்

dondu(#11168674346665545885) said...

ஆஜாத் அவர்கள் பதிவு ஒன்றில் நான் இட்ட இந்தப் பின்னூட்டம் மட்டுறுத்தலுக்காகக் காத்திருக்கிறது. பார்க்க: http://ennam.blogspot.com/2006/11/blog-post_16.html
படகோட்டி படத்தை பற்றி படித்தது மகிழ்ச்சியளித்தது. சமீபத்தில் 1964 திசம்பரில் அப்படத்தை பார்த்த போதே அதன் எல்லாப் பாடல்களும் என் மனதைக் கொள்ளை கொண்டன. வெவேறு வகைகளில் பாடல்களை வரிசைப் படுத்தும்போது ஒவ்வொரு வகையிலும் இப்படத்தின் பாடலே முதல் இடத்தைப் பெற்றது.

1. சிறந்த பெண் தனிப்பாடல்: என்னை எடுத்து, தன்னைக் கொடுத்து போனவன் போனாண்டி...
2. சிறந்த ஆண் தனிப்பாடல்: கரை மேல் பிறக்க வைத்தான்...
3. சிறந்த டூயட், ஒற்றைப் பக்கப் பாடல்: தொட்டால் பூ மலரும்..
2. சிறந்த டூயட், டபிள் சைட் பாடல்: பாட்டுக்கு பாட்டெடுத்து...

எல்லா வகைகளையும் சேர்த்தால், சிறந்தப் பாடல்: என்னை எடுத்து, தன்னைக் கொடுத்து...

பை தி வே, நான் துள்ளும் இசை தந்த ஓ.பி. நய்யாரைப் பற்றி பதிவு போட்டுள்ளேன். படித்தீர்களா? பார்க்க: http://dondu.blogspot.com/2006/11/blog-post_06.html

இப்பின்னூட்டத்தின் நகலை எனது மேலே சுட்டியுள்ள ஓ.பி. நய்யார் அவர்களை பற்றிய பதிவிலும் பின்னூட்டமாக இடுவேன்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

அபுல் கலாம் ஆசாத் said...

ராகவன் சார்,

1.
மாங்குக்கே சாத் தும்ஹாரா (நயா தௌர்) - நான் விரும்பும் பாடல்களுள் ஒன்று. இது பாட்டாளியின் சபதம் என தமிழில் டப்பிங் செய்யப்பட்டதாகச் சொல்வார்கள்.

2.
துனியா ஹை மேரே பீச்சே
லேக்கின் மை தேரே பீச்சே - யில் மயங்காத இந்தித் திரைப் பாடல் ரசிகரும் உண்டா.

ஷம்ஷாத் பேகத்தின் சிறந்த பாடல்களின் பட்டியலில் இதுவும் வரும் என்பதில் சந்தேகமில்லை.

நீங்கள் குறிப்பிட்டிருக்கும் சி.ஐ.டி.யின் 'லேக்கே பெஹ்லா பெஹ்லா ப்யார்'உம் ஷம்ஷாத் பேகத்தின் பட்டியலில் அடங்கும்.

பதிவுடன் சம்மந்தப்படாத இன்னொன்று. ஷம்ஷாத் பேகம் லதாவுடன் பாடிய 'தேரி மெஹ்ஃபில்மே'வின் (மொஹலே ஆஸம் - நௌஷாத்) தமிழாக்கத்தினை கஜல் புத்தகத்தில் தந்திருக்கிறேன்.

அன்புடன்
ஆசாத்

dondu(#11168674346665545885) said...

மிக்க நன்றி ஆசாத் அவர்களே. லதாவுடன் அவரது பிரச்சினையை பற்றி மேலும் ஏதாவது அறிவீர்களா? அது மட்டும் இல்லாதிருந்தால் மனிதர் எங்கோ போயிருப்பார். அவர் இசை அமைத்தப் படங்கள் மற்ற வகையில் மிகச் சாதாராணமானவை அவை எல்லாம் இன்றும் பேசப்படுவதற்கு அவரது இசையே காரணம்.

அந்த விதத்தில் அவர் மற்ற எல்லா இசை அமைப்பாளர்களை விட சற்று சிறப்பானவராகவே என் கண்களுக்குத் தெரிகிறார்.

அநீதியை எதிர்த்துப் போராடினார், பல நஷ்டங்கள் அனுபவித்தார், ஆயினும் தலை நிமிர்ந்து நிற்கிறார்.

பிற்காலத்தில் அவரது இசைதான் நிற்கும், அவர் முதுகில் குத்தியவர்கள் மறக்கப்படுவர்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

Anonymous said...

அநீதியை எதிர்த்துப் போராடும் ஓ.பி. நய்யாரைப் பற்றி நீங்கள் எழுதுவது மனசுக்கு பிடிச்சிருக்கு.

கட்டபொம்மன்

dondu(#11168674346665545885) said...

அநீதியை எதிர்த்து போராடுவது கட்டபொம்மனுக்கு பிடிக்காமல் வேறு யாருக்கு பிடிக்குமாம்? :)))

அன்புடன்,
டோண்டு ராகவன்

 

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது