3/03/2008

சுஜாதாவுக்கு அஞ்சலி கூட்டம்

இன்று மாலை 4 மணியளவில் சென்னை டி.டி.கே. சாலையில் உள்ள நாரத கான சபாவில் இக்கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. எல்லே ராம் அவர்கள் முதலிலேயே தொலைபேசி தான் வருவதை நிச்சயப்படுத்தினார். போகும் வழியில் சிமுலேஷன் அவர்களிடமிருந்து போன் வந்தது. அவர் அச்சமயம் அரங்குக்கு வந்து சேர்ந்து விட்டார். என்றென்றும் அன்புடன் பாலாவும் அதியமானும் திருவல்லிக்கேணியிலிருந்து வந்தனர். அரங்கில் பதிவர் மெலட்டூர் நடராஜன் வந்திருந்தார்.

மீட்டிங் ஒரு பழைய பேட்டியின் வீடியோவுடன் துவங்கியது. சிவாஜி படத்துக்கு முன்பு பதிவு செய்யப்பட்டிருக்க வேண்டும். கோபினாத் பேட்டி கண்டார் சுஜாதாவை. அவர் கதைகளில் ஸ்ரீரங்கச் சூழலின் முக்கியக் காரணமே அவர் அங்கு கழித்த பள்ளிப்பருவம்தான். அவரது முதல் கதை சிவாஜி பத்திரிகையில் வந்து 12-13 ஆண்டுகளுக்கு பிறகுதான் அடுத்த கதை வந்தது. அதுவும் நண்பன் எழுதிய கதையை இவர் திருத்தி நண்பன் பெயரில் வந்தது. கதை சீரியசாக எழுத ஆரம்பித்தது வேலையில் சேர்ந்த பிறகே. இவர் மின்னணுத் துறையில் படித்ததால் அவரது கதைகளிலும் அத்துறையின் பாதிப்பு இருந்தது. இவரது பேட்ச்மேட் முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் அவர்கள். இருவருக்கும் தமிழில் விஞ்ஞான கட்டுரை எழுதும் போட்டியில் பரிசு கிடைத்தது. கணையாழியில் 1965-லிருந்து எழுத ஆரம்பித்தார். அப்பத்திரிகையை துவங்கியது திரு. கஸ்தூரி ரங்கன் அவர்கள். கணினி பற்றி கட்டுரைகள் ஆரம்பிக்கும் முன்னால் உரிய தமிழ் சொற்களை கண்டுபிடிக்கும் பணியை நிறைவேற்ற வேண்டியிருந்தது. அறிவியல் பற்றி எழுதும்போது அதை எளிமைப்படுத்துவதிலும் வரம்பு உண்டு. வாசகர்களும் சற்றே மெனக்கெட வேண்டும். பலமுறைகள் படிக்க வேண்டியிருக்கும். அவர் எழுத்துகளில் உள்ள காட்சியமைப்பை விவரிக்கும் தன்மையையும் தொட்டு பேசினார் அவர். தமிழ்திரையுலகத்துடன் அவரது தொடர்பு பற்றியும் பேசினார். இவ்வளவு வயதுக்கு பிறகும் அவர் இளைமையாகத் தன்னை உணர்வதன் காரணமே எப்போதும் எதையாவது புதுமையாக கற்பதே காரணம் என்பதில் தெளிவாக இருந்தார் அவர். ஆங்கில எழுத்தாளர் பி.ஜி. வோட்ஹவுஸ் தனது 93ஆம் வயதிலும் புதிதாகக் கற்பதில் ஆர்வம் காட்டியதையும் அவர் கூறினார். மாறும் உலகுக்கு ஏற்ப தாம் கற்பதும் மாற வேண்டும் என்பதை அழுத்தம் திருத்தமாகக் கூறினார். தான் கதை எழுதுவது குறைந்து விட்டது என்று கூறினார்.

பிறகு இரங்கல் கூட்டம் ஆரம்பமானது. நெய்வேலி சந்தானகோபாலன் அவர்கள் புதல்வி ஸ்ரீரஞ்சனி சுஜாதாவுக்கு பிடித்தமான பாசுரத்தைப்பாட, அரங்கம் அமைதியில் ஆழ்ந்தது. மோகன ராகம் மற்றும் பிருந்தாவன சாரங்கா ராகங்களில் பாடப்பட்டது என நண்பர் சிமுலேஷன் கூறினார். நடிகர் பார்த்திபன் தொகுப்புரை நிகழ்த்த வந்தார். இரண்டு நிமிட மௌன அஞ்சலி. பிறகு பார்வையாளர்கள் மௌனமாகவும், மேடையில் சிலர் வார்த்தைகளாலும் சுஜாதாவுக்கு அஞ்சலி செலுத்தவுள்ளனர் எனக்கூறிய பார்த்திபன் அவர்கள் முதலில் மனுஷ்ய புத்திரனை பேச அழைத்தார். அவருக்கு பிறகு ஒவ்வொருவராக அழைக்கப்பட்டனர். நடுநடுவில் பார்த்திபனும் சில வாக்கியங்களை சமயம் பார்த்து பிரயோகித்து அசத்தினார்.

மனுஷ்யபுத்திரன்:
இவ்வளவு குறைந்த அவகாசத்தில் இந்தக் கூட்டத்தை நடத்த உதவிய பார்த்திபன், நடராஜன் மற்றும் கனிமொழிக்கு நன்றி. என்னை முதலில் சுஜாதா அவர்கள் சந்தித்த போது இவ்வளவு சின்ன வயதில் ஏன் மரணத்தைப் பற்றி கவிதை எழுத வேண்டும் எனக்கேட்டார். என்னை முன்னுக்கு கொண்டு வந்தவர் அவர். அவரின்றி நான் இல்லை. எனது உடலின் ஒரு பகுதியை இழந்தது போல நான் உணர்கிறேன். பொங்கல் சமயத்தில் புத்தகக் கண்காட்சியில் உயிர்மை ஸ்டாலில் அவர் வாசகர்களை சந்தித்தது என் மனதில் உறைந்துள்ளது. கடந்த 6 ஆண்டுகளாக இதை அவர் தவறாது செய்து வந்திருக்கிறார். இப்பொங்கல் அவர் உடல் பலவீனம் அடைந்ததால் தன்னை சிரமப்படுத்தி கொள்ள வேண்டாம் எனக்கூறினாலும் பிடிவாதமாக வந்தார். அவர் தற்காலத்து நாயகன். அவரைப் பற்றி நாம் எவ்வளவு கூறினாலும் விடுபட்டவை அதிகமாகவே இருக்கும். மொழிக்கு புத்துணர்ச்சி கொடுத்தார். இனி ஒவ்வொரு ஆண்டும் சுஜாதா அவார்ட்ஸ் அளிக்கப்படும். இச்சந்தர்ப்பத்தில் மறைந்த எழுத்தாளர் ஸ்டெல்லா ப்ரூஸுக்கும் எனது அஞ்சலிகள்.

ரா.கி. ரங்கராஜன்:
நான் வர இஷ்டப்படவேயில்லை. ஏனெனில் அழுகை வருகிறது. இரவு பூராவும் அழுதேன். இப்போதுதான் அழுகை இல்லை, ஏனெனில் கண்ணீர் வற்றி விட்டது. ஒரு எழுத்தாளன் வெற்றியடைய குறைந்த பட்சம் 100 சுவாரசியப் புள்ளிகளை தொட வேண்டும். ஆனால் சுஜாதாவோ 150க்கும் மேல் சுவாரசியப் புள்ளிகளைத் தொட்டார். அவர் பத்திரிகை உலகத்தில் Editor's delight என்றுதான் கூறவேண்டும். பத்திரிகை உலக அவசரங்களுக்கு சளைக்காமல் ஈடு கொடுத்தார். நான்கு பக்கத்துக்கு விஷயம் வேண்டும் என்றால் அவ்வாறே தருவார். கண்ணுக்கு மிக அருகில் உள்ள விஷயங்களை நாம் கவனிப்பதில்லை. அவை விலகிச் சென்றதும்தான் அவற்றைப் பற்றி நாம் உணர்கிறோம். சுஜாதாவும் அப்படிப்பட்ட விஷயங்களில் ஒன்று. பாரதி போனார் இன்னொரு பாரதி வரவில்லை, கல்கி போனார் இன்னொரு கல்கி வரவில்லை, அதே போல சுஜாதா போனார் இன்னொரு சுஜாதா வரப்போவதில்லை.

நிர்மலா பிரசாத் (முதல்வர், எம்.ஓ.பி. வைஷ்ணவா கல்லூரி):
நான் சுஜாதாவுக்கு உறவினர். அவர் எனக்கு அத்திம்பேர். அதை எல்லாம் விட அவர் எங்கள் கல்லூரியில் தமிழ் ஜர்னலிசம் மாணவிகளுக்காக நிகழ்த்திய உரைகள் பற்றியே இங்கு பேச வேண்டும். நாங்கள் கோர்ஸில் பல மாதங்கள் சொல்லிக் கொடுத்த விஷயங்களை அவர் அனாயாசமாக சில வரிகளில் மானவிகளுடன் நிகழ்த்திய ஒரு மணி நேர சந்திப்பு உரையாடலில் வடிக்கட்டி தந்து விட்டார். அவரது ஸ்ரீரங்கத்து தேவதைகள் புத்தகம் தமிழ் துணைப்பாட நூலாக சேர்க்கப்பட்டதும், தமிழ் வகுப்புகளின் வருகைப்பதிவு 100% ஆயிற்று. பாரதியார் திரைபடத்தைப் பற்றி அவர் தந்த அறிமுக உரை தமிழ் தாய்மொழி அல்லாத மாணவிகளையும் கவர்ந்து பாரதி மேல் ஆர்வம் கொள்ள வைத்தது. அவரது மரணத்தில் எங்கள் எம்.ஓ.பி. வைஷ்ணவா கல்லூரி அதன் துரோணாச்சாரியாரை இழந்து விட்டது. இங்குள்ள ஏகலைவர்கள் வாடுகின்றனர்.

பார்த்திபன்:
சுஜாதா அவர்கள் கடைசி காலத்தில் தன் மனைவிக்கு எல்லா சிறு விஷயத்துக்கும் நன்றி கூறினார். போர்வை எடுத்து போர்த்தினால் அதற்கு நன்றி, வெந்நீர் வைத்து தந்தால் அதற்கு நன்றி என்றெல்லாம் கூறியதாக அவரது மனைவி தெரிவித்தார். அவருக்கு நாமும் நன்றி சொல்ல வேண்டும்.

கிரேசி மோகன்:
அவருடன் எனக்கு 30 வருடப் பழக்கம். பெங்களூரில் நாங்கள் நாடகம் போடும்போது அவற்றைப் பார்க்க வருவார். நாங்கள் சற்றே பயத்துடன் அவர் எப்படி ரியேக்ட் செய்கிறார் என்பதை ஸ்க்ரீனின் இடுக்குகள் வழியாகப் பார்ப்போம். அவரோ கண்ணாடியை கழற்றி வைத்து கொண்டு குலுங்கக் குலுங்க சிரிப்பார். குழந்தை போன்ற மனிதர். அப்போது அவர் வசந்தாக காணப்படுவார். நாடகம் முடிந்ததும் பிறகு ஒரு மணி நேரத்துக்கு கணேஷாக மாறி க்ளாஸ் எடுப்பார்.நாங்கள் செய்த தவறுகளைப் பட்டியலிடுவார். அவர் நாடகங்களுக்கு செய்த சேவை மகத்தானது. திவ்யப்பிரபந்தத்தில் மூழ்கி முத்தெடுத்தார். இப்போது கூட வைகுண்டத்தில் அவர் பெருமாளுடன் இருக்க மாட்டார், ஆழ்வார்களுடனேயே இருப்பார்.

ஜயகாந்தன்:
இது விமரிசன மேடையில்லை. உணர்வுகளை மட்டுமே பகிர்ந்து கொள்ள வேண்டும். முப்பது ஆண்டுகளுக்கு முன்னால் அவர் என்னைத் தேடி வந்தார். அக்காலக் கட்டங்களில் மனைவியின் பெயரில் கதை எழுதுபவர்களை நான் கிண்டலடித்ததுண்டு. தமிழுக்கு அவர் கொடுத்த புதுமையான விஷயங்களை சிலாகிக்க வேண்டும். கம்ப்யூட்டருக்கு கணினி என சொல் உருவாக்கியது அவரே. அவரது விஞ்ஞானக் கதைகள் பாராட்டத்தக்கவை.

பார்த்திபன்:
வாழ்க்கையை ரீவைண்ட் செய்து பார்க்க முடிந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்! இன்னும் பல ஆண்டுகள் அவர் வாழ்வார் அவரது எழுத்துகள் வடிவில்.

அசோகன், ஆனந்த விகடன்:
அவருக்கு மரணம் இல்லை. அவரது எழுத்துலக வாரிசுகள் ரூபத்தில் வாழ்வார். அவரது பாதிப்பு இல்லாத எழுத்தாளர்கள் குறைவு. சுஜாதா மாதிரி எழுதுகிறீர்கள் என்றாலும் சரி அவர் மாதிரி எழுதவில்லை என்று சரி அவற்றுக்கென்று தனித்தனியாக சந்தோஷம் அடைவது நிஜம். டெட்லைனை மதிப்பதில் நிகரற்றவர். அதற்காகவெல்லாம் தரத்துடன் சமரசம் கிடையாது. என்றும் இளைமையானவர். புதிய எழுத்தாளர்களை பாராட்டுவார், எங்களையும் பாராட்ட சொல்வார்.

ஒளிப்பதிவாளர் ரவிவர்மன்:
அவருடன் இரண்டு படங்கள் செய்தேன். விஷுவல் ட்ரீட்மெண்டை வலியுறுத்தினார். இறவா வரம் பெற்றவர்.

இந்திரா பார்த்தசாரதி:
1965-ல் சந்தித்தேன். வாரம் ஒருமுறை சந்திப்போம். எனது நாடகங்களில் ஆங்கில வார்த்தைகள் மிக அதிகம் இருப்பதை வைத்து அவற்றைத் தமிழில் மொழிபெயர்க்க வேண்டும் என்று தமாஷாகக் கூறினார். அவர்து குரு‌ஷேத்திரம் என்னும் கதைதான் நைலான் கயிறு தொடர்கதையாக வந்தது.

நடிகர் சிவகுமார்:
அனைவர் நெஞ்சத்திலும் நீங்காத இடம் பிடித்தவர் சுஜாதா. அவரது மனைவிக்கு பணிவான வணக்கங்கள். அவரது புத்தகங்கள் பல படித்துள்ளேன். மேகத்தைத் துரத்தியவன், வைரங்கள், மறுபடியும் கணேஷ் ஆகியவை அவை. அவ்வளவு பெரிய மேதையை திரையுலகம் சரியாகப் பயன்படுத்தவில்லை. பூர்ணம் விஸ்வநாதன் குழுவுக்காக அவர் எழுதிய நாடகங்கள் அன்புள்ள அப்பா, டாக்டர் நரேந்திரன்னின் விநோத வழக்கு, ஊஞ்சல் ஆகியவை நினைவில் நிற்கின்றன. சென்னைக்கு என் வீட்டிற்கு வந்தால் உரிமையுடன் லுங்கி கேட்டு வாங்கி சௌகரியமாக அமர்வார்.

திருப்பூர் கிருஷ்ணன்:
நா.பார்த்தசாரதி அவர்கள் ஒரு வெண்பா போட்டி அறிவித்தார், வேண்டாம் வரதட்சிணை என்ற ஈற்றடிக்கு வெண்பா கேட்க அவர் ஒரு நேரிசை வெண்பா இவ்வாறு எழுதி அனுப்பினார்:
"பத்துபவுன் தங்கம் பளிச்சென்ற கல்வளையல்
முத்திலே சின்னதாய் மூக்குத்தி - மத்தபடி
"பாண்டு'வைத்து ஊர்கோலம் பாட்டு இவைதவிர
வேண்டாம் வரதட்சிணை"!
1330 திருக்குறள் இருக்கும்போது ஏன் திருக்குறள் என்று எழுதவேண்டும், திருக்குறள்கள் என ஏன் எழுதக்கூடாது என்று கேள்விக்கு அவரது பளிச் பதில் “திருக்குறள் கள்ளை அனுமதிப்பதில்லை”.

சாரு நிவேதிதா:
பதற்றமா இருக்கேன். 3 நாளா தூக்கம் இல்லை. எனக்கு 2 ஆசான்கள், ஒருவர் ஜயகாந்தன், இன்னொருவர் சுஜாதா. திருமதி சுஜாதா, மனுஷ்யபுத்திரன், கனிமொழி ஆகியோர் துயரத்தில் பங்கு பெறுகிறேன்.

பார்த்திபன்: உனக்காக ஒன்றுமே எழுதி வைக்கவில்லையே என சுஜாதா தன் மனைவியிடம் கூறிய போது அவரோ, எல்லா கதைகளையும் என் பெயரில்தானே எழுதினீர்கள் என்றாராம்.

எழுத்தாளர் சிவசங்கரி:
வேதனை, அதே சமயம் நிறைவாகவும் உள்ளது. தமிழை எளிமைப்படுத்தியவர் பாரதி. தொழிலாளிகளும் பத்திரிகை படிக்கும் வண்ணம் செய்தவர் சி.பா. ஆதித்தனார். இல்லத்தரசிகளும் படிக்க வைத்தவர் கல்கி. முழு இளைய தலைமுறையினரே தமிழுக்கு இழுத்தவர் சுஜாதா. 24 மணி நேரமும் படிப்பு, எல்லாவற்றிலும் முழு ஈடுபாடு.

கார்ட்டூனிஸ்ட் மதன்:
கார்ட்டூன்கள் பற்றி அவருக்கு ஆழ்ந்த அறிவு, ஆனால் இங்கு அது பற்றி பேசப்போவதில்லை. ஏனெனில் என்னைப் பற்றியும் அதில் பேச வேண்டியிருக்கும். படிக்கும் ஆர்வத்தை மீட்டு தந்தார். அவர் எழுப்பியது கண்ணுக்கு தெரியாத ஒரு மேம்பாலம். பலர் அதை உபயோகித்தனர். நானும்தான். அவரது திறமைக்கு அவர் சம்பாதித்தது மிகவும் குறைவே. வேறெங்காவது பிறந்திருந்தால் இன்னும் அதிகமாக சம்பாதித்திருப்பார். படைப்பாளிகளுக்கு சம்பளம் உயர்த்தப்பட வேண்டும்.

பெண்டா மீடியா சந்திரசேகர்:
சுஜாதாவை எனக்கு 1995லிருந்து தெரியும். அவரது புத்தகம் அனிதா இளம் மனைவி. என் பெண்ணின் பெயரையும் அனிதா என்றே வைத்தேன். எங்கள் நிறுவனத்தின் முன்னேற்றத்தில் அவரது பங்களிப்பு உண்டு. பாண்டவாஸ், அலிபாபாவும் 40 திருடர்களும் மற்றும் புத்தா அனிமேஷன்களுக்கு அவரது ஸ்க்ரிப்ட் அட்டகாசம். எல்லா ஊடகங்களிலும் வெற்றியடைய சுஜாதா ஒருவரால் மட்டுமே இயலும்.

ஓவியர் ஜெயராஜ்:
மற்றவர்களை பாராட்டுவதில் கஞ்சத்தனமே இல்லை. என்னையும் பாராட்டியுள்ளார். எதிர் சாரியில் ஒரு அழகான பெண் சென்றாள் என்பதை குறிக்க, “எதிர்வாடையில் ஒரு ஜெயராஜ் சென்றது” என்று எழுதினார். எந்த ஊருக்கு சென்றாலும் அவ்வூரின் வட்டார மொழி சொற்களை பலரிடம் கேட்டு தெரிந்து கொள்வார். ரொம்ப தமாஷ் எல்லாம் செய்வார். ஒரு மீட்டிங்கில் பல இளைஞர்கள் தங்கள் சட்டை பித்தான்களை கழற்றி என்னை அவர்கள் நெஞ்சில் படம் வரையச் சொல்ல, இளைஞிகள் யாரும் அவ்வாறு முன்வரவில்லையே என்று சிரிக்காமல் கூறினார். மாரிஸ் ஹோட்டலில் ஒரு கூட்டத்தில் நான் மேடை பயத்தால் உதறிக்கொண்டிருக்க, தானும் அவ்வாறே உதறுவதாகக் கூறினார். நான் பேசி முடிந்து இருக்கைக்கு திரும்பியதும் உதறி முடிஞ்சாச்சா என்று கேட்டார்.

தூர்தர்ஷன் நடராஜன்: (இவர் நாமகிரிப்பேட்டை கிருஷ்ணனின் மாப்பிள்ளையாம்)
நான், ஜெயகாந்தன் மற்றும் சுஜாதா ஒரு மீட்டிங்கிற்கு பிறகு தனியாக பேசினோம். இரவு முழுக்க பேச்சு. விடியற்காலையில்தான் ஏதோ டிபன் சாப்பிட்டோம். சுஜாதாவின் வானொலிப்பேட்டி சம்பந்தமான பழைய போட்டோவை நான் கேட்க, அவரது மனைவி கோப்பிலிருந்து எடுத்து கொடுத்தார். இவ்வாறு தன் கணவர் சம்பந்தப்பட்ட விவரங்களை அழகாக தொகுத்து வைத்து அவரது வேலைகளை சுலபமாக்கினார். கூறிய அறிவு. எந்த மாற்றங்களை ஸ்க்ரிப்டில் கேட்டாலும் உடனடியாக நிறைவேற்றிக் கொடுப்பார்.

பேராசிரியர் ஞானசம்பந்தன்:
நான் பேச்சாளரானதே எதிர்பாராமல் வந்தது. சுருங்கக் கூறி விளக்கும் அவரது நடையை நான் பின்பற்றித்தான் பேச்சாளனாக வந்தேன். முக்கால் மணி நேரம் பேசிவிட்டு, பிறகு இது முன்னுரை மட்டுமே என்று சிலர் இரக்கமில்லாமல் கூறுவர். அவ்வாறெல்லாம் நான் வராததற்கு காரணம் இவரே. முதலில் அவரை நேரில் சந்திக்கும்போது நான் அவரது 20 ஆண்டுகால ரசிகன். என் பேச்சை முதலில் கேட்டு தன் மனைவியிடம் புகழ்ந்து கூற அவரோ ஏற்கனவே என் பேச்சை கேட்டிருப்பதாகக் கூறினார். நான் ரசிக்கும் எழுத்தாளர் என் ரசிகராக வந்ததில் எனக்கு மகிழ்ச்சி.

கணையாழி கஸ்தூரி ரங்கன்
இறந்தவருக்கு அஞ்சலி இருவகை. பூத உடலுக்கு மரியாதை, நான் போகவில்லை. நினைவுக்கு மரியாதை தர இங்கு வருவதே உத்தமம். 60 ஆண்டுகளாக நான் அவரை அறிவேன். அவரைப் பிண்மாகப் பார்க்க விரும்பவில்லை. இந்த நினைவஞ்சலி ஏற்பாடு செய்தவர்களுக்கு பாராட்டுகள். 1965-ல் ஆரம்பித்த கணையாழி 1995-ல் நிறுத்தபட்டது. பிறகு 2005 வரை வேறொரு நிர்வாகத்தில். அப்புறம் என்னால் முடியவில்லை எனக் கூறி விட்டேன். இப்போது நண்பர் பிரசாத் ஆரம்பித்துள்ள யுகமாலினி என்னும் பத்திரிகையில் 20 பக்கங்களை கணையாழி பக்கமாக ஒதுக்கித் தர முடிவு செய்யப்பட்டுள்ளது. சுஜாதாவின் எழுத்துக்கள் best of Sujathaa என்ற பெயரில் மீள்பிரசுரம் செய்யப்படும். நண்பர் இரா. முருகன் அதை தொகுக்கும் பொறுப்பேற்றுள்ளார்.

கிருஷ்ணா ஸ்வீட்ஸ் முரளி:
ரொம்பப் பழக்கமில்லை. எல்லோரிடமும் விஷயத்தை கிரகித்து சரியான முறையில் சரியான இடத்தில் வெளிப்படுத்தக் கூடியவர். அவரது ஆத்மா சாந்தியடையட்டும்.

இத்தருணத்தில் ஓவியர் ஸ்ரீதர் வரைந்த சுஜாதா அவர்களது ஓவியத்தை கமல் அவரது பிள்ளைகளுக்கு வழங்கினார்.

கமலஹாசன்:
குறிப்புகள் இல்லாதுதான் பேசுவேன். இனிமேல் உட்கார்ந்து எழுதினால் அது நல்லா இருக்குன்னு சொல்லக்கூடிய ஆட்களுக்கு எங்கே போவது? பல எழுதப்பட்ட ஆனால் படமாக்கப்படாத கதை கோப்புகள் உண்டு. மருதநாயகம் படத்துக்கு இனி நானேதான் திரைக்கதை எழுத வேண்டும். எழுத வேண்டிய அவர் இல்லாது போய் விட்டார்.அதெல்லாம் கம்பசூத்திரம் இல்லை என்று அவர் பல விஷயங்களைப் பற்றிக் கூறுவார். ஏன், கம்ப சூத்திரத்தைக் கூட அப்படியே கூறிவிடுவார். கேரளா, மஹாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் எழுத்தாளருக்கு இருக்கும் மரியாதையைப் பார்த்தால் பொறாமையாக இருக்கும், நம்மூரில் அப்படியில்லையே என்று. சுஜாதா அவர்களுக்கு மேனாட்டு தாக்கம் உண்டு. அதனால் என்ன அதை நன்றாகவே தமிழாக்கம் செய்தார். அவரை சந்திப்பதற்கென்றே நான் சென்னையிலிருந்து பெங்களூர் சென்றதுண்டு. எழுத்து அவரது காதல். அதற்கு தன் காதலியின் பெயரையே வைத்தார். தமிழ் கதையுலகில் அவர் மிக்கியமான அத்தியயம்.

வைரமுத்து:
மரபுகளை உடைத்தவர் சுஜாதா. இரங்கல் கூட்டத்தில் சாதாரணமாக எழாத கரவொலி இங்கு எழுந்ததே. கஸ்தூரி ரங்கன் கூறினார், மலர்ந்த முகத்தைப் பார்த்த தான் மரண முகத்தை காண விரும்பவில்லை என்று. நான் கூறுவேன் மரணித்த முகத்தில் தேஜஸ் கண்டேன். அவரது கடைசி எண்ணம் அவர் முகத்தில் உறைந்து மரணத்தைப் புறம் தள்ளியிருக்குமோ. இப்போதுள்ள புகழ்ச்சிகள் அவர் இருக்கும்போதே இருந்திருக்கக் கூடாதா! சுஜாதா ஒரு கடல். தூரத்திலிருந்து ரசிக்கவும் இயலும், கரைக்கு வந்து காலை அலையில் நனைக்கவும் முடியும், முடிந்தால் படகெடுத்து உள்ளேயும் பயணிக்கலாம், தைரியமிருப்பின் அக்கடலில் மூழ்கி முத்தும் எடுக்கலாம். மேனாட்டு மரபும் இந்திய மரபும் சேர்ந்து உருவானது சுஜாதாயிசம். அது மட்டும் இருந்தால் நான் வந்திருக்க மாட்டேன். அதையும் தாண்டியுள்ளார் அவர். மரணம் பெரியதா வாசகன் பெரியவனா என்றால், வாசகனே என்பேன், ஏனெனில் அவன் மரணத்துக்கு பிறகும் எழுத்தாளனை உயிருடன் வாழவைக்கிறான். முக்கியமான விஷயம், எந்த எழுத்தாளரையும் அவர் புறம் பேசியதில்லை. நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்த கனிமொழி, பார்த்திபன் மனுஷ்யபுத்திரன் ஆகியோருக்கு நன்றி.

ப்ரகாஷ் சுவாமி:
ஒரு அறுவை சிகிச்சை பற்றிய அவரது ஆங்கிலக் கட்டுரை அமெரிக்க மருத்துவர்களை அவரது விசிறிகளாக்கிற்று. அமெரிக்க நகைச்சுவை எழுத்தாளர் ஆடர்ட் பூஹ்வால்ட் (Art Buchwald) ரேஞ்சுக்கு அவரி அவர்கள் பார்த்தார்கள். பத்திரிகையாளர்கள் மீது அன்பு காட்டினார். எம்மி விருதுகள் வழங்க என்னையும் நீதிபதிகளில் ஒருவனாக போட்ட போது எனக்கு அந்த விருது வழங்கும் வழிமுறைகளை விரிவாக எழுதி அனுப்பினார். அதை வைத்து செயலாற்றினேன்.

டைரக்டர் வசந்த் பேச மறுத்து விட்டார்.

எல்லே(இளங்கிளியே) ராம், வலைப்பதிவர்:
சுஜாதா பற்றி பேசும்போது நகைச்சுவை பற்றியும் பேச வேண்டும். அவரது யாகம் கதையை நாடகவடிவில் அரங்கேற்ற அனுமதி கேட்டேன். தயங்காமல் அனுமதி கொடுத்தார். நாடகத்தைப் பார்க்க அவரது உறவினரை (அப்போது உறவினர் அமெரிக்காவில் இருந்தார்) அனுப்பிவைத்தார். நாடகம் நன்றாக இருந்தது எனவும் மனமாரப் பாராட்டினார். நான் எழுதிய எல்லாவற்றையும் அவரிடம் காட்டுவேன். பாராட்டுவார். Brevity is the source of wit என்பதில் நம்பிக்கை உள்ளவர்.

நடிகர் சத்யராஜ்:
எனக்கும் சேர்த்து எல்லோருக்கும் ஆழ்ந்த அனுதாபங்கள். எனக்கும் ஒரிஜினலாக அவரது பெயர்தான், அதாவது ரங்கராஜன். கடவுள் பற்றிய கேள்விகளுக்கு அவர் விடையளிக்கும்போதெல்லாம் டென்ஷனுடன் கவனிப்பேன். எல்லோரும் ஏற்றுக் கொள்ளும்படியான விஞ்ஞான விளக்கங்களை கூறுவார். விக்ரம் படம் ஷூட்டிங் போது அவருடன் நன்கு பழகியுள்ளேன். ஒன்றாக உலாவச் செல்வோம். அவரிடம் பல விஷயங்கள் கற்றேன். மறுபடியும் எல்லோருக்கும் எனது அனுதாபங்கள்.

கனிமொழி:
சுஜாதாவின் பாதிப்பு இல்லாத எழுத்தாளரோ வாசகரோ இல்லை. கலை ரசனை அவரால் வள்ர்ந்துள்ளது. அந்த உயர்வு வணிகபத்திரிகை வாசகர்களுக்கும் அவர் அவற்றில் எழுதுவதால் கிட்டியுள்ளது. ஒரு எழுத்தாளரை பிடித்தால் அவரை சந்திக்காதே, அவர் பற்றிய பிம்பம் உடையும் சாத்தியக்கூறு உள்ளதால் என்பார்கள். ஆனால் சுஜாதா அவர்களை சந்தித்ததும் அந்த பிம்பம் இன்னும் அதிகம்தான் ஆயிற்று. தன்னைத் தாக்கிய ஒரு எழுத்தாளரைப் பற்றிப் பேசும்போது தமிழில் உள்ள ஒரே ஹைக்கூ எழுதியவர் அந்த எழுத்தாளர் என சிலாகித்தார். பந்தா இல்லாது பழகுபவர்.

தங்கர்பச்சான்:
நான் திரைப்படக் கல்லூரியில் படித்தபோது அவரது வந்தவன் கதையை டிப்ளமாவுக்காகப் படமாக்கினோம். என்னைத் தன் மகன்போல நடத்தினார். பாரதியார் படத்தை முதலில் அவருக்குத்தான் போட்டுக் காட்டினோம். ஆங்கில இலக்கியத்தை தமிழருக்கு அறிமுகப்படுத்தியவர்.

இரா. முருகன்:
தில்லியில் இருந்த சமயம் நூதன் அடுப்பில் பாலை ஏற்றிவிட்டு சுஜாதாவின் கட்டுரை ஒன்றில் ஆழ்ந்து போக, அதில் இரா.முருகன் என்பவர் நன்றாக எழுதியுள்ளார் என்று எழுதிய வரிகளை பலமுறை பாராயணம் செய்ய, பால் பொங்கி வழிந்து நூதன் ஸ்டவ்வை அணைத்ததை பிறகுதான் உணர முடிந்தது. அதுதான் அவரிடமிருந்து எனக்கு வந்த முதல் பாராட்டு.

எஸ்.ராமகிருஷ்ணன்:
சுஜாதா மூலம் பல அனுபவங்கள். அவர் மரணமடைந்த செய்தி குறித்து 20 வருடங்கள் என்னிடம் தொடர்பில் இல்லாத நண்பன் பேசினான்.

பாலு மஹேந்திரா:
பேச வந்ததைக் கூற இயலாமல் அழுகை வந்ததால், அவரை மிருதுவாக அந்தண்டை அழைத்து சென்றனர்.

பூர்ணம் தியேட்டர்ஸ் எம்.பி. மூர்த்தி:
வருடம் 1979. அன்புள்ள அப்பா நாடகத்தை அவர் சொல்லச் சொல்ல நான் எழுதினேன். வாழ்க்கையை அவர் ரசிக்கக் கற்று கொடுத்தார். குருகுலம் அமைப்பில் அவரது நாடகங்களை மேலும் போட ஆர்வமாக உள்ளோம்.

பூர்ணம் தியேட்டர்ஸ் ரமேஷ்:
சுஜாதா பற்றி கூற வேண்டுமானால், ”நான் நிரந்தரமானவன் அழிவதில்லை எந்த நிலையிலும் எனக்கு மரணமில்லை”! என்ற வரிகள்தான் அவருக்கு பொருந்தும்.

தேசிகன் (சுஜாதாவின் அதிகாரபூர்வ பயோக்கிராஃபர்)
சுஜாதாவை எனக்கு அறிமுகப்படுத்தியது எனது தந்தையே. அப்போதெல்லாம் எழுத்துக் கூட்டித்தான் தமிழ் படிப்பேன். முதல் புத்தகம் படிக்க பல நாட்கள் எடுத்து கொண்டேன். பிறகு வெரி வந்ததுபோல எல்லா புத்தகங்களையும் படித்தேன். ஒரு முறை அவரது முழு புத்தகப் பட்டியலை தேதிவாரியாக டைப் செய்து கொடுத்தப் போது நீதான் எனது அதிகாரபூர்வமான பயோக்கிராஃபர் என்று மனமாரக் கூறினார். தன் கதைகளை என்னுடன் தாராளமாக டிஸ்கஸ் செய்வார். அப்படி ஒரு தொடர்கதையின் முடிவை பல வாரங்கள் முன்னாலேயே அறிந்து கொண்ட நான் அதை என் தந்தையிடம் கூற முன்வந்த போது அவர் அதை தான் நேரிலேயே படித்து தெரிந்து கொள்வதாகக் கூறிவிட்டார். ஆனால் முடிவு வெளியாகும் முன்னமேயே அவர் மறைந்தார். என் திருமணப் பத்திரிகையை சுஜாதா அவர்களுக்கு தந்த போது, அதைப் பார்த்துவிட்டு, 'உன் தலைவிதி அப்படியிருந்தால் நான் என்ன செய்யமுடியும்' என்று போலி சீரியசாகக் கேட்டார். என் மனைவி பெயரும் சுஜாதா. ஸ்ரீரங்கத்து தேவதைகள் புத்தகத்துக்கு படம் வரையா ஆசையை தெரிவித்தபோது விடுவிடுவென்று ஸ்கெட்ச் போட்டு ஸ்ரீரங்கத்தின் முக்கிய இடங்களை காண்பித்து அவற்றைப் படம் வரையச் சொன்னார். அவர் வாழ்க்கை சரித்திரம் எழுத வேண்டும் என்று சொன்னபோது முதலில் பல தர்ம சங்கடங்கள் வரும் என்றார். பிறகு சில காலம் கழித்து கேட்டபோது, ஒத்துக் கொண்டார். பல கேள்விகளை அவர் முன்னால் வைத்தேன். அவற்றுக்கு நேர்மையான பதில்கள் தந்தார். சிலவற்றுக்கு கண்ணீரும் விட்டார். அந்த பயாக்ரஃபி இப்போது பாதியில் நிற்கிறது. மரணத் தருவாயில் கேட்க வேண்டிய பிரபந்தப்பாடல்கள் பற்றிப் பேசினார். அவர் மரணித்த சமயம் அவர் அருகில் அமர்ந்து பிரபந்தம் படித்தேன்.

எஸ். திருமலை, சுஜாதா அவர்களின் தம்பி:
என் அண்ணாதான் எனக்கு ரோல் மாடல். ரேமாண்ட்ஸில் முழுமையான கூறும் முழுமையான மனிதன் என் அண்ணா. அவர் பல துறைகளைத் தொட்டவர். நன்றாகப் படம் வரைபவர், ஸ்கூல் நாட்களில் கையெழுத்து பத்திரிகை நடத்தியுள்ளார். என்னை பொருத்தவரை அவர் 120 ஆண்டுகள் வாழ்க்கையை 73 ஆண்டுகளிலேயே வாழ்ந்து விட்டார். மற்றவர்களிடம் உள்ள நல்லதையே பார்ப்பவர் அவர். அவர் ஒரு ஒரிஜினல் thinker. அவர் உருவத்தில் மட்டுமல்ல, எண்ணத்திலும் உயர்ந்தார். அவரை எல்லோரும் மேற்கோள் காட்டுவர், ஏனெனில் அவர் யாரையும் மேற்கோள் காட்டவில்லை.

சுதாங்கன்: எனது ஒரிஜினல் பெயரும் ரங்கராஜன். எங்கள் இருவர் பெயரையும் மாற்றியவர் ரா.கி. ரங்கராஜன். வசந்த் அவர்களும் கணேஷ் வசந்த்துக்காக தன் பெயரையும் வசந்த் என வைத்து கொண்டார்.

ம்றுபடி டோண்டு ராகவன். நேரம் மிகவும் ஆகிவிட்டதால், இப்போது செல்ல வேண்டியதாயிற்று. ஆகவே மேலே பேசியதை குறிப்பெடுக்க இயலவில்லை. பாதி எழுதும்போது ரீஃபில் தீர்ந்துவிட, நண்பர் சிமுலேஷன் தன் பேனா கொடுத்து உதவினார். அவருக்கு என் நன்றி.

பேசியவர்களில் ஒருவர் அவரது "திம்லா" என்னும் கதையை இன்னொரு கதையுடன் சேர்த்து குழப்பி தவறாக மேற்கோள் காட்டினார் என்பதை போகிறபோக்கில் கூறுகிறேன். அவர் யார் என்று சொல்ல விரும்பவில்லை.

அன்புடன்,
டோண்டு ராகவன்

48 comments:

Sivakumar said...

நானும் கூட்டத்திற்கு புறப்பட்டேன். ஏதோ சில காரணங்களால் வர முடியாமல் போய்விட்டது. உங்கள் இந்த பதிவு என்னை அந்த கூட்டத்திற்கு அழைத்து சென்றுவிட்டது. நன்றி ராகவன்.

SP.VR. SUBBIAH said...

பதிவில் பல விஷயங்களைக் கூறியுள்ளீர்கள் - என்னைப் போன்றவர்களின் மனம் நிறையும் விதமாக!
நன்றி!

உண்மைத்தமிழன் said...

சிறப்பான பதிவிற்கு மிக்க நன்றி டோண்டு ஸார்..

supersubra said...

When the GOD feels lonely and want to be praised by his creations and want to listen to them in person he takes avatar on earth. one such avatar is Sujatha.

வடுவூர் குமார் said...

வாவ்! அசத்திடீங்க.

Natrajan said...

Dondu, You were so lucky you left the place at right time along with your friend for a plate of BONDA. I was unfortunate to sit to hear' his machine(S-in-law) /his doctor etc. kavijaigal on Sujatha. Sathiyamai Sujatha manniththuirkkamattar in kavithaigalai.
Natrajan

தறுதலை said...

Thank you.

Anonymous said...

Why there was nobody from Kumudam?
Kumar

Anonymous said...

நெஞ்சை தொட்ட பதிவு.
டோண்டு சார் எப்படி நீங்கள் புகழஞ்சலியில் நடந்த எல்லாவற்றையும் எழுதினீர்கள். வேகமாக எழுத short-hand முறை எதாவது பயன்படுத்துவது உண்டா.
உங்கள் சேவைகளுக்கு நன்றி !

சில மொக்கைசாமிகள் போட்ட கேலி பின்னுடங்களை வெட்டி விடவும். விமர்சனத்துக்கும் கேலிக்கும் இது சரியான இடமல்ல.

dondu(#11168674346665545885) said...

//சில மொக்கைசாமிகள் போட்ட கேலி பின்னுடங்களை வெட்டி விடவும். விமர்சனத்துக்கும் கேலிக்கும் இது சரியான இடமல்ல.//
இதற்குள் மொக்கை/கும்மியடிப்பவர்கள் இந்த டோண்டு ராகவன் எல்லோரையும் விட அதிகமாக மொக்கையடிக்கக் கூடியவன் என்பதை உணர்ந்திருப்பார்கள். கவலை கொள்ளற்க (வியங்கோள் வினைமுற்று). வசைப் பின்னூட்டங்கள் ஆபாசப் பின்னூட்டங்கள் ஆகியவற்றை நிச்சயம் மடக்கி தடுத்து விட்டேன், இன்னும் தடுப்பேன்.

மற்றப்படி ஜாலி மொக்கையை சுஜாதாவே விரும்புவார்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

PKS said...

Thank you very much for this coverage. - PK Sivakumar

Anonymous said...

அபாரம் டோண்டு Sir. நானும் மீட்டின்ங்கிற்கு வந்திருந்தேன். எப்படி குறிப்பெடுத்துக் கொண்டு விலாவரியாக எழுதியிருக்கிறீர்கள். நீங்கள் மீட்டிங்கை விட்டு சரியான நேரத்தில் தான் வெளியேறியிருக்கிறீர்கள். With due respects to Sujatha's sis - in -law அவரது ஆங்கிலக் கவிதை(!) சாரி கொஞம் ஓவர்! அதே போல் சுஜதாவின் டாக்டர் படித்த கவிதையும்.ICU வில் சுஜாதா இருந்தபோது டாக்டர் இந்தக் கவிதையைப் படித்துக் காண்பித்துவிட்டாரோ! என்று வெளியில் வந்த்தும் கூடவந்தவர்களிடம் comment அடித்துவிட்டேன். I am sure Sujatha will understand.

பினாத்தல் சுரேஷ் said...

நல்ல விரிவான பதிவுக்கு நன்றி டோண்டு.

நடராஜன் சொல்லி இருப்பதைப் பார்த்தால் நீங்கள் மட்டும்தான் தப்பித்தீர்கள், தமிழ்த்தாய் தப்பிக்கவில்லை போல இருக்கிறதே! கவிமடத்தின் கவுரவத் தலைவர் சுஜாதா நிச்சயம் நெளிந்திருப்பார்!

dondu(#11168674346665545885) said...

// எப்படி குறிப்பெடுத்துக் கொண்டு விலாவரியாக எழுதியிருக்கிறீர்கள்.//
ஒரு நீண்ட நோட்டு புத்தகத்தை வைத்துக் கொண்டு வேகமாக எழுத வேண்டியதுதான். மேலும், நேற்று ரொம்ப சௌகரியமாகவே உட்கார்ந்தேன். துக்ளக் மீட்டிங்கில்தான் தரையில் உட்கார்ந்து எழுத வேண்டியிருந்தது. அதுவும் நேற்று பேசியவர்கள் பலர் இடைவெளி கொடுத்து பேசியதில் எழுதுவதில் சிரமம் அதிகம் இல்லை.

All in the game.

//ICU வில் சுஜாதா இருந்தபோது டாக்டர் இந்தக் கவிதையைப் படித்துக் காண்பித்துவிட்டாரோ!//
ஹா ஹா ஹா.

அன்புடன்,
டோண்டு ராகவன்

Anonymous said...

இருந்தாலும் பாவம் அந்த டாக்டரை விட்டுவிடுங்கள் அவருக்கு வைத்தியம் பார்ப்பதுதான் தொழில். வைரமுத்து நல்ல கவிதை எழுதுவார் என்பதற்காக டாக்டர் மாதிரி வைத்தியம் பார்க்க முடியுமா என்ன ?
எல்லாரும் ஓவர் என்று சொல்லிவிட்டு நிறுத்திவிடுகிறார்கள். மொக்கைக்கு டோண்டு சாரே o.k சொல்லிவிட்டார். அஞ்சலிக்கு வரதவர்களுக்கு 'why blood? same blood' feeling கொடுக்கலாமே. பிளிஸ் யாராவது அந்த கவிதையை ரிலீஸ் பண்ணுங்க.

Raj Chandra said...

Thank you for the detailed post.

Regards,
Rajesh

Sundar Padmanaban said...

குறிப்புகளுக்கு நன்றி திரு.டோண்டு.

படிக்கப் படிக்க நாக்கு மேலண்ணத்தில் ஒட்டிக்கொண்டது.

இயல்பாக இருக்கச் சிலகாலம் ஆகும்.

நன்றி.

Anonymous said...

//கம்ப்யூட்டருக்கு கணினி என சொல் உருவாக்கியது அவரே//

:-O

dondu(#11168674346665545885) said...

//படிக்கப் படிக்க நாக்கு மேலண்ணத்தில் ஒட்டிக்கொண்டது.//
ஏன்?

அன்புடன்,
டோண்டு ராகவன்

Anonymous said...

வர முடியாமல் இருக்கும் சென்னைக்கு வந்து சென்றுபோல் இருக்கிறது உங்கள் பதிவு. நன்றி.

புள்ளிராஜா

Rasikan said...

Thanks Dondu saar for the nice coverage.Would you kindly tell me how you uploaded such a long writeup on to the system,I mean by just typing it out or by some scanning process?
It takes a lot of time for me to type in Tamil.Regards,

ரவிஷா said...

கவரேஜுக்கு நன்றி!

Anonymous said...

// பாதி எழுதும்போது ரீஃபில் தீர்ந்துவிட, நண்பர் சிமுலேஷன் தன் பேனா கொடுத்து உதவினார். அவருக்கு என் நன்றி.//

பேனாவை குடுத்ததுக்கு தாங்கஸ் சொல்ல ஒரு பத்தியா? விட்டா தனிப்பதிவே போட்டு நன்றி சொல்லிடுவீங்க போலிருக்கு:-)

VSK said...

சோ மீட்டிங்கின் போதே தங்களது குறிப்பெடுக்கும் திறமையை அவ்வப்போது கவனித்து பிரமித்தேன்.
அப்போது நான் சென்னையில் இருந்ததாலும்,,கணினி ப்பக்கம் வரமுடியாமல் போனதாஅலும், பின்னூட்டம் இட முடியாமல்போயிற்று.

இன்று சுஜாதா இரங்கல் பற்றிய இந்தப் பதிவு, நிகழ்ச்சியை நேரில் இருந்து பார்த்தது போன்ற உணர்வை ஏற்படுத்தியது.

இது போன்ற பதிவுகள் தொடர்ந்து வரவேண்டூமெனக் கேட்டுக் கொள்கிறேன்.

Anonymous said...

மிக்க நன்றி டோண்டு சார். இணையத்தில் திரியும் சில வக்கிர மனம் படைத்தவர்களின் வாந்திகளுக்கிடையே தங்களின் சுஜாதா பற்றிய பதிவுகள் ஆறுதலளிக்கின்றன. உங்களுக்கு என் மன‌மார்ந்த நன்றிகள்.

இறந்தவரைப் பற்றிய அவதூறான/நக்கலான பதிவு போடுவது எந்தக் கலாச்சாரம்? சத்தியமாக தமிழனின் கலாச்சாரம் இல்லை என்பது உறுதி. அப்படியானால் அம்மாதிரிப் பதிவு போட்டவர்கள்? அந்த ஆண்டவனுக்கே வெளிச்சம்.

dondu(#11168674346665545885) said...

மிக்க நன்றி வி.எஸ்.கே. அவர்களே. பை தி வே நான் உங்களை துக்ளக் மீட்டிங் அன்று கேட்டு கொண்டது போல எனது இந்த இரண்டு பதிவுகள் பற்றி ஒரு மருத்துவர் என்ற முறையில் உங்கள் கருத்துக்களை கூற இயலுமா? பின்னூட்டங்களையும் நோக்கவும். பார்க்க:
http://dondu.blogspot.com/2008/01/1-1-0.html
http://dondu.blogspot.com/2008/01/5.html

அன்புடன்,
டோண்டு ராகவன்

அபி அப்பா said...

அஞ்சலி கூட்டத்தில் கலந்து கொண்டது மாதிரியான அருமையான விளக்கப்பதிவு டோண்டு சார் இது! மிக்க நன்றி!

உங்கள் பாணியில் சொல்லப்போனால் சமீபத்தில் 20 வருடம் முன் அவரிடம் பழகும் வாய்ப்பு கிடைத்தது. என் கல்லூரி விழாவுக்கு அழைத்திருந்தோம். வரவேற்ப்புறையில் மிக அழகாக அவரின் வானமென்னும் வீதியிலே கதையின் தேவி, இராஜேந்திரன் முதல் நைலான் கயிறு கதையில் ராக்கேஷ், மணி வரை எல்லாம் கோர்த்து பேசினேன். பின் ராக்கேஷா, மணியா என்ன என் வீட்டில் நடந்த வாக்குவாதத்தையும் சொன்னேன். பேசி முடிஞ்ச பின்ன கேட்டார் "சரி நீயாவது கண்டுபிடிச்சியா ராக்கேஷா, மணியான்னு"ன்னு கேட்டார். "சார், கண்டுபிடிச்சேன்ன்னு சொல்லி உங்களை தோற்கடிக்க மாட்டேன்"ன்னு சொன்னேன். அந்த பதிலுக்கு "மையமாக" சிரிச்சார். அவ்வளவே அவரிடமான எனக்கு உண்டான பழக்கம். ஆனாலும் இது வரையிலான அவரின் அத்தனை புத்தகங்களையும் படித்த வாசகன் என்கிற முறையில் நான் இப்போது மிகவும் வருந்துகிறேன் அவரின் இழப்பால்:-((

dondu(#11168674346665545885) said...

//"மையமாக" சிரிச்சார்//
Neutrallly, non/committally, vaguely என்றெல்லாம் ஆங்கிலத்தில் குறிப்பிடுவதை தமிழில் அழகாக ஒரே ஒரு வினையெச்சத்தில் கூறிவிட்டார்.

நகைச்சுவை எழுத்தாளர்கள் ”சாதாரணமாக ரொம்ப முன்கோபிகள், அவரது மனைவியர் வருடத்துக்கு ஒரு முறை பயத்துடன் சிரிப்பார்கள்” என்று ஒரு முறை எழுதியுள்ளார்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

தென்றல் said...

விரிவான பதிவிற்கு நன்றி!

Radha Sriram said...

நானே கூட்டத்தில் கலந்துகொண்டது போன்ற நிறைவை தந்தது உங்கள் பதிவு. நன்றி!

Anonymous said...

நானே கூட்டத்தில் கலந்துகொண்டது போன்ற நிறைவை தந்தது உங்கள் பதிவு. நன்றி!

பாரதிய நவீன இளவரசன் said...

நல்ல கவரேஜ். கூட்டத்தில் வந்த வேறு வலைப்பதிவர்கள் யாராவது உங்கள் கண்ணில் பட்டார்களா?

dondu(#11168674346665545885) said...

//கூட்டத்தில் வந்த வேறு வலைப்பதிவர்கள் யாராவது உங்கள் கண்ணில் பட்டார்களா?//
அரங்கத்துக்கு வெளியில் சிவஞானம்ஜியுடன் வந்து கேண்டீனில் போண்டா சாப்பிட்டபோது உங்களையும் சந்தித்தேனே.

அன்புடன்,
டோண்டு ராகவன்

அழகன் கருப்பண்ணன் said...

Nandri. Thohuppu padikka arumaiyaha irundhadhu.puthiya seidhihal idam petrullana. vanakkam
Alakan

Rasikan said...

அன்புள்ள திரு. டோண்டு

நேற்று நான் உங்களிடம் ஒரு சந்தேகம் கேட்டிருந்தேன்.அதற்கு பதில் தர இயலுமா?
நன்றி வணக்கம்.

ரசிகன்.

dondu(#11168674346665545885) said...

அன்புள்ள ரசிகன்,

பதில் ஏற்கனவே கொடுத்துள்ளேனே. இதில் குறுக்கு வழி ஒன்றும் கிடையாது. எல்லாவற்றையும் அப்படியே முதலில் எழுதினேன், சில சங்கேதக் குறிகள் இட்டேன்.

பிறகு வந்து தட்டச்சு செய்ய வேண்டியதுதான். இதில் எங்கிருந்து ஸ்கேன் செய்வதாம்? ஆனால் ஒன்று. இம்மாதிரி பயிற்சியால் எனது தட்டச்சு வேகம் அதிகரித்து, ஆங்கிலம் > தமிழ் மொழிபெயர்ப்புக்கு துணையாக இருக்கிறது.

ஆகவே டோண்டு ராகவன் தமிழ்மணத்தை விட்டு விலக மாட்டான் என்பதையும் கூறிவிடுகிறேன்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

Anonymous said...

//ஆகவே டோண்டு ராகவன் தமிழ்மணத்தை விட்டு விலக மாட்டான் என்பதையும் கூறிவிடுகிறேன்.//

தமிழ்மணத்துக்கு விடிவுகாலமே இல்லை என்பது உறுதி

Anonymous said...

//எல்லாவற்றையும் அப்படியே முதலில் எழுதினேன், சில சங்கேதக் குறிகள் இட்டேன்.//

அப்ப, புயல் வேகத்தில் எழுதியிருக்க வேண்டும்.

//ஆகவே டோண்டு ராகவன் தமிழ்மணத்தை விட்டு விலக மாட்டான் என்பதையும் கூறிவிடுகிறேன்.//

சுஜாதா மறைவை விட இது ரொம்ப சோகமான செய்தி சில பேருக்கு.

dondu(#11168674346665545885) said...

//தமிழ்மணத்துக்கு விடிவுகாலமே இல்லை என்பது உறுதி//
//சுஜாதா மறைவை விட இது ரொம்ப சோகமான செய்தி சில பேருக்கு.//
ஹா ஹா ஹா. ஆனா என்னைப் பற்றிய இச்செய்தி ரொம்ப பழையதாயிற்றே. பார்க்க: http://dondu.blogspot.com/2007/04/blog-post_17.html
அவனவன் இடி விழுந்தாப்போல அப்போதிலிருந்தே இருக்கானே.

அன்புடன்,
டோண்டு ராகவன்

Anonymous said...

//அவனவன் இடி விழுந்தாப்போல அப்போதிலிருந்தே இருக்கானே.//

பழசா இருந்தாலும் நீங்க அதை அப்பப்ப ரிலீஸ் செய்வதால் நண்பர்களுக்கு நெஞ்சு வலி, o^o வலி வருகிறது.

வால்பையன் said...

செங்குன்றம் தள்ளி 10 கிலோ மீட்டர் உள்ளே இருந்ததால், வாகன வசதி இல்லாமல் என்னால் வரமுடியவில்லை. உங்களின் அழைப்புக்கு மிகவும் நன்றி.
நான் நேரில் வராவிட்டாலும், நேரில் பார்த்த அனுபவம் உங்கள் பதிவை படிக்கும் போது.
மிக்க நன்றி

வால்பையன்

Anonymous said...

dondu avargale en bonda comment enge? een pirasurikkavillai? kutra unarchiyaa?

komanan

பாரதிய நவீன இளவரசன் said...

//சிவஞானம்ஜியுடன் வந்து கேண்டீனில் போண்டா சாப்பிட்டபோது உங்களையும் சந்தித்தேனே.//

அதுசரி.. எனக்கு இப்போ ஒரு சிறு குழப்பம்... நீங்கள் இரண்டு பேரும் கிட்டத்தட்ட ஒரே ஹைட்டில் இருந்தீர்களா, உங்களிருவரில் யார் சிவஞானம்ஜி, யார் ராகவன் என்பது மறந்துவிட்டது. இத்தனைக்கும் உங்களில் ஒருவர் 'N.Raghavan' எனற பிஸினஸ் கார்டையும் என்னிடம் கொடுத்துள்ளீர்கள்.

anyway, இன்று மாலை (ஏன்... இன்னும் சில மணித்துளிகளிலேயே கூட) உங்கள் கைப்பேசில் நான் உங்களைத் தொடர்பு கொள்வேன் :)

dondu(#11168674346665545885) said...

உங்கள் தொலைபேசி அழைப்பை எதிர்பார்க்கிறேன்.

என் முகத்தை நினைவில் கொண்டுவர இந்த வீடியோ பார்க்கவும். http://youtube.com/watch?v=6_zPWFUX-mM

அதன் பின்புலனை அறிய எனது இப்பதிவுகளுக்கு செல்லவும்.

http://dondu.blogspot.com/2008/01/25012008-0730.html

http://dondu.blogspot.com/2008/01/blog-post_30.html

அன்புடன்,
டோண்டு ராகவன்



அன்புடன்,
டோண்டு ராகவன்

Anonymous said...

//dondu avargale en bonda comment enge? een pirasurikkavillai? kutra unarchiyaa?//

mokkaithambi, poi vera vela iruntha paru...

Anonymous said...

Dear Mr Raghavan

Thank you very much for this writeup.I read the whole thing with teary eyes.I know Sujatha ony through his writings having met him once in 1969 when I was in Delhi.He was writing Nil,gavani,Thakku in Dinamani Kadir at that time.We discussed the story with him in a Karol Bagh restaurent without knowing he was the author initially.
I cannot get over his loss.

Ramamurthy

Anonymous said...

whats the meaning of வியங்கோள் வினைமுற்று

dondu(#11168674346665545885) said...

வியங்கோள் வினைமுற்று:- ஆணையிடுவது போலல்லாமல் வேண்டுகோளைப் போன்று தொனிக்கும் வினைமுற்றுகள் இவை.

எடுத்துக்காட்டு:
வாழ்க, நிற்க, தொடங்கற்க - "க" விகுதி
வாழிய - "இய" விகுதி
வாழியர் - "இயர்" விகுதி
எனல் - "அல்" விகுதி

அன்புடன்,
டோண்டு ராகவன்

 

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது