8/25/2008

அப்போ இந்த படத்துக்கான விமரிசனத்துக்கு நாந்தான் ஃபர்ஸ்டா?

உள்ளூர் கேபிள்காரர் உபயத்தில் ஒரு படத்தை வழக்கம்போல நடுவிலிருந்து பார்த்தேன். பரவாயில்லை என்று சொல்லும் ரகம். படத்தின் பெயர் தெரியாது, அதே வழக்கம்போல லக்கிலுக்குக்கு போன் செய்து கேட்டதில் அப்படத்தின் பெயர் "வீராப்பு" என்று கூறினார். ஒரிஜினல் மலையாளப் படம் மிக அருமை என்றும் தமிழ் வெர்ஷனில் மோசமான எடிட்டிங் என்றும் கூறினார். மோசமான எடிட்டிங் என்பதை விட என் மனதுக்கு பட்டது மிகமிக மோசமான கேமிரா பிரிண்ட் என்பதே. பல வசனங்கள் காதில் விழவேயில்லை. மலையாளப் படம் மூன்று ஆண்டுகளுக்கு முன் வந்ததாகவும், பெயர் ஞாபகமில்லை என்றும் அவர் கூறினார். யாராவது அப்படத்தின் பெயர் தெரிஞ்சால் சொல்லுங்கப்பூ.

தமிழ் வலைப்பதிவர்கள் யாரும் "வீராப்பு"-க்கு விமரிசனம் எழுதியதாகத் தெரியவில்லை. ஆகவே எனது இப்பதிவு.

வழக்கமான அப்பா பிள்ளைக்கு நடுவில் உள்ள தகவல்பரிமாறலில் குறைபாடுதான். அப்பா கணக்கு வார்த்தியார். பிள்ளையும் கணக்கில் புலியாக வேண்டும் என்ற ஆர்வம். தவறில்லை எனக் கூறினாலும் அதுவே வெறியாகப் போவது நிச்சயம் தவறுதான். ஆர்வக்கோளாறில் பிள்ளையை ரௌடியாக்குவதுதான் நடக்கிறது. அருமையாக சென்றிருக்க வேண்டிய கதையை சொதப்பினாலும் படம் பரவாயில்லை என்று சொல்லும்படிக்கு இருந்தது ஒரிஜினல் கதையின் அழுத்தமான மெசேஜ்தான் என்றால் மிகையாகாது. பிள்ளை மெக்கானிக் வேலையில் நிபுணனாக இருப்பதை அங்கீகரிக்க தயாராக இல்லாமல், கணக்கில் அவன்பெறும் தோல்விகளையே குத்திக் காட்டும் செயல் செய்வது ஒரு தகப்பனுக்கோ ஆசிரியருக்கோ அழகல்ல. தானாக மணி அடிக்கும் பொறியை மகன் செய்தபோது பாராட்டாது உதாசீனப்படுத்தியவரே சில ஆண்டுகள் கழித்து அதை பொதுமக்கள் பார்வைக்கு திறந்து வைக்க நேரிடும் நிகழ்ச்சி நம்பக் கடினமாக இருந்தாலும் எனக்கு பிடித்திருந்தது.



சுந்தர் சி. காமெடியும் நன்றாகவே செய்கிறார். டில்லி குமார், பிரகாஷ்ராஜ், சுமித்ரா, சந்தோஷி, ஆகியோரும் தத்தம் பாத்திரத்தை செவ்வனே செய்திருக்கிறார்கள். காமெடியில் நடிகர் விவேக் பட்டையை கிளப்பியிருக்கிறார் என்றாலும் படத்துடன் ஒட்டவில்லை. சாதாரணமாக இம்மாதிரி காமெடி டிராக்குகளை தனியாக எடுத்து படத்துடன் சேர்ப்பது என்பது கலைவாணர் காலத்திலிருந்தே வந்துள்ளது. அவ்வாறு சேர்ப்பதை பிறர் அறியாவண்ணம் செய்வதே சிறப்பு. இப்படத்தில் இது நடக்கவில்லை. லாரி டிரைவராக வரும் சுந்தர்.சி. யிடம் கிளீனர்களாக இருக்கும் சந்தானமும், பாவா லட்சுமணனும் காமெடிக்கு பயன்படுத்தப்பட்டு இருக்கிறார்கள்.



வில்லன் இன்ஸ்பெக்டர்கள், சுந்தர் சி. க்கு உதவி செய்யும் ஹெட் கான்ஸ்டபிளாக நடிப்பவர்களது பெயர் தெரியவில்லை. அதனால் என்ன, நன்றாகவே செய்திருந்தனர். கடைசியில் வரும் பொன்னம்பலமும் தூள் கிளப்புகிறார். சதிக்கு எதிர் சதி என சுந்தர் செயல்பட்டு எதிரி கேம்பில் புயல் விளைவிப்பது குழந்தைத்தனமாக இருந்தாலும் மனதுக்கு நிறைவாகவே இருந்தது.

போன ஆண்டு இப்படம் வந்ததாம். ஆனால் நான் கேள்விப்படவே இல்லை. இணையத்திலும் இது பற்றி செய்திகள் இல்லை என்றே கூறிவிடலாம்.

ஆக, அப்போ இந்த படத்துக்கான விமரிசனத்துக்கு நாந்தான் ஃபர்ஸ்டா?

அன்புடன்,
டோண்டு ராகவன்
முரளி மனோஹரின் குறிப்பு: "அடேய் டோண்டு! வீராப்பு என்று எழுதி கூகளில் தேடாமல் வீறாப்பு எனத் தவறாக தேடுபெட்டியில் தட்டச்சினால் எப்படியடா உருப்படும்? ஏதோ வஜ்ரா ஸ்படிகம் என மலையாள வெர்ஷனின் பெயரைச் சொன்னதால், ஓசைப்படாது நீ தவறை திருத்த முடிந்தது. இப்போது கூகளில் பார்த்தால் வீராப்பு பற்றி வலைப்பதிவுகள் வந்துள்ளன. ஆகவே நீ ஃபர்ஸ்ட் அல்ல".
நன்றி முரளி மனோஹர்.
படங்களுக்கு நன்றி: http://tamil.cinesouth.com/masala/hotnews/new/22012007-4.shtml

7 comments:

வஜ்ரா said...

அந்த மலயாளப்படத்தின் பெயர் ஸ்படிகம். மோஹன் லால் நடித்தது.

dondu(#11168674346665545885) said...

மிக்க நன்றி வஜ்ரா அவர்களே. அப்படம் பார்த்துள்ளீர்களா?

அன்புடன்,
டோண்டு ராகவன்

Bleachingpowder said...

திருட்டு விசிடில படம் பாக்குறதே தப்பு (கேபிள்ல டிவினாலும்) இதுல விமர்சனம் வேற போடறீங்க :))

நடத்துங்க நடத்துங்க

வால்பையன் said...

தலைநகரம் என்ற படத்தில் நடித்த பின் பின் வரும் படங்கள் அனைத்தும் ரவுடித்தனமான கதாப்பாத்திரங்க்களே கொடுக்கபடுகின்றன சுந்தருக்கு, இது ஆரோக்கியமல்ல.
இந்த படத்தை பொறுத்தவரை ஒரு ஆழமான காரணம் இல்லை அப்பா, மகனை வெறுப்பதற்கு
ஆனாலும் சில இளைஞர்களால் ரசிக்கபட்டதாக தகவல்

உண்மைத்தமிழன் said...

'ஸ்படிகம்' திரைப்படத்தின் 100-ல் ஒரு பங்கு திருப்தியைக்கூட தரவில்லை இத்திரைப்படம்..

நான் திரைப்படம் பார்க்கப் போன ஒரே ஒரு காரணம் கோபிகா..

அந்த ஒரே ஒரு பாட்டு மட்டுமே பிரபலம் 'வந்தா இருப்பீரோ; போனா வருவீரோ...'

g said...

இந்த படத்துக்கு மட்டுமில்ல டோன்டு சார். எல்லாத்துக்கும் நீங்கதான் பர்ஸ்டு. பிளீச்சிங் பவுடர் இருக்கிற இடமெல்லாமே கலவர பூமியாத்தான் இருக்கும்போலிருக்கு. படத்தை பற்றி எழுத மனசில்லை. நான் கிளம்புறேன்.

அருப்புக்கோட்டை பாஸ்கர் said...

//திருட்டு விசிடில படம் பாக்குறதே தப்பு (கேபிள்ல டிவினாலும்) இதுல விமர்சனம் வேற போடறீங்க :))//
நீங்க இந்தியாவில் விற்றால் நாங்க ஏங்க திருட்டு விசிடியில் பார்க்கிறோம்?
நீங்க இங்கே மட்டும் விற்க மாட்டீர்கள் . ஆனால் உலகம் முழுவதும் விர்ப்பீர்கள் !
அப்புறம் நாங்க எப்படி பார்ப்பதாம் ?

 

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது