5/05/2009

எங்கே பிராமணன் பகுதி - 64

பகுதி - 64 (05.02.2009):
பாகவதர் வீட்டில் அவர், அவரது மனைவி ஜானகி மற்றும் இரண்டாவது பையன் பேசி கொண்டிருக்கின்றனர். பாகவதர் ராமசுப்புவை தாங்கள் பார்ப்பதற்காக ஹாஸ்டலுக்கு சென்றபோது தாங்கள் எவ்வளவு கெஞ்சியும் அவனைப் பார்க்க வார்டன் தங்களை அனுமதிக்கவில்லை என்பதை அவர் பையனிடம் கூற அவன் மிகவும் கோபப்படுகிறான். ஸ்ரீரங்கம் செல்லும்போது அவர்கள் ராமசுப்புவின் அப்பா அம்மா வீட்டுக்கு செல்லக்கூடாது என்று கூற பாகவதர் அதை மறுத்து பேசுகிறார். தாங்களே ராஜியிடமும் சிவராமனிடமும் இது பற்றி நேரில் கேட்கப் போவதாகவும் கூறுகிறார்.

வேம்பு சாஸ்திரிகள் தனது மனைவியுடன் கிரி வீட்டிற்கு வந்து தட்டு மாற்றுகிறார். கிரியின் தந்தை திருமணத்துக்கு பிறகு கிரி ஜெயந்திக்கு தனிக் குடித்தனம் வைத்து கொடுத்து விடும் தன் எண்ணத்தை கூறுகிறார். அப்போதுதான் தன் மனைவி ஆசைப்பட்டது போல அவன் முழுபிராமணனாக வாழ இயலும் எனவும் கூறுகிறார். வேம்புவோ தன் மகள் மாமியார் மாமனாருக்கு சேவை செய்வதே நல்லது என அபிப்பிராயப்படுகிறார்.

பாகவதர் வீட்டில் பாகவதரும் அவர் மனைவியும் அசோக் பற்றி பேசுகின்றனர். அசோக்குக்கு ஒன்றுமே இல்லை என மனோதத்துவ நிபுணர் கூறிவிட்டதாக பாகவதர் தான் கேள்விப்பட்டதை தன் மனைவியிடம் கூறுகிறார். தன்வந்தரி மனம் வைத்தால் ஒரு வியாதியும் அண்டாது எனவும் கூறுகிறார். அப்போது அங்கு வரும் அவரது இளைய மகன், அசோக்கை வேறு சைக்கியாட்ரிஸ்டிடம் நாதன் அழைத்து செல்லப்போவதாக கூறுகிறான். அவனை பைத்தியம்னு ஸ்தாபிக்காமல் அவர்கள் விட மாட்டார்கள் போலிருக்கிறது என பாகவதர் வருத்தப்படுகிறார்.

வேம்பு வீட்டிற்கு தனியாக வரும் கிரியின் தந்தை அவரிடம் சீர் செனத்தி எல்லாம் வேண்டும் என்று ஒரு பெரிய லிஸ்டே தருகிறார். தனது ஜாதியிலேயே நல்ல பெண்கள் இருப்பதாகவும், கிரியின் அன்னை பிடிவாதமாக இருந்ததால் மட்டுமே இந்த திருமணத்துக்கு தான் ஒத்து கொண்டதாக வேறு கூறுகிறார். வேம்புவும் அவரது குடும்பத்தினரும் திகைக்கின்றனர். மேலும் தன் மனைவிக்கு இதெல்லாம் ஒன்றும் தெரியக்கூடாது என்றும் வேம்புவே இத்தனையும் செய்ததாகத் தோன்ற வேண்டும் என்றும் அவர் கூறுகிறார்.

டாக்டர் ஹம்சாவின் கிளினிக்கில் அவர் நாதனிடம் அசோக்குக்கு எல்லா பிரச்சினைகளும் இருப்பதாகக் கூறுகிறார். அவன் பேசுவது எல்லாம் குழப்ப நிலையிலிருந்து என்றும், விரக்தியாக இருப்பது டிப்ரஷனால் என்றும், பாகவதர் காஞ்சியில் இருக்க, தான் அவரை சென்னையில் பார்த்ததாய் அவன் கூறுவது ஹாலுசினேஷன் என்றும் கூறுகிறார். நாதனிடம் Beautiful mind என்னும் ஆங்கில படம் பற்றி பேசி அதிலிருந்து ஒரு காட்சியை தனது லேப்டாப்பில் போட்டு காட்டுகிறார். அசோக்குக்கு இரண்டு வாரங்களுக்கு மருந்து தந்துவிட்டு பிறகு ஷாக் ட்ரீட்மெண்ட் தரவேண்டும் என்றும் கூறுகிறார். ஷாக் ட்ரீட்மெண்டா என நாதன் தயங்க, அப்படி செய்யாவிட்டால் அசோக் முழுக்க முழுக்க பைத்தியமாகி விடுவான் எனவும் கூறுகிறார். அசோக்கின் இந்த நிலைக்குக் காரணமே அந்த பாகவதர் என்றுதான் என அழுத்தம் திருத்தமாகக் கூறுகிறார்.

நாதனும் அசோக்கும் வீட்டுக்கு திரும்புகின்றனர். நாதன் வசுமதியிடம் நடந்ததை கூறி பாகவதர்தான் எல்லாவற்றுக்கும் காரணம் என டாக்டர் கூறியதையும் அவளிடம் சொல்ல, வசுமதியோ “டாக்டர் ஃபீஸ் கொடுத்துத்தான் இதை நீங்க தெரிஞ்சுக்கணுமா” என நொடிக்கிறாள். சமையற்கார மாமியிடம் தண்ணீர் கொண்டுவர சொல்கிறாள். நாதன் தன் சட்டைப்பையில் மாத்திரைகள் இருப்பதாகக் கூறி தேட, அவை அங்கு இல்லை. எங்கு தேடியும் கிடைக்கவுமில்லை.

“அடேடே மாத்திரை காணாமல் போச்சே, கிடைச்சிருந்தா அசோக் குணமாகியிருப்பானே” என சோவின் நண்பர் அங்கலாய்க்க, அந்த மாத்திரைகள் நல்லதுதான் செய்திருக்கும் என நிச்சயமாக கூற இயலாது என்று கூறுகிறார். பிறகு ஒரு புராணக்கதையும் கூறுகிறார். ஒரு சாமியார், ராஜா ஒருவனிடம் வந்து ஒரு மாங்கொட்டையைத் தருகிறான். அதை விதைத்து மரமாக வளர்க்க வேண்டும் என்றும், அதனுடைய முதல் பழத்தை உண்டால் ராஜா சாவே இல்லாது வாழ்வான் என்று கூறிவிட்டு நிறைய பொருள் பெற்று செல்கிறான். ராஜாவும் மரத்தை ஒரு நதிக்கரை தோட்டத்தில் வைத்து வளர்த்து பாதுகாக்கிறான். ஆனால் முதல் பழம் ஆற்றில் விழுந்து நீரோட்டத்தோடு போகிறது. அங்கு ஆற்றில் மீன் பிடிப்பவன் கையில் அகப்பட அவனும் யதார்த்தமாக அதை உண்டு விடுகிறான். பழம் நீரில் செல்லும்போது பின்னாலேயே ஓடிய வீரர்கள் அம்மனிதனை பிடித்து, ராஜாவிடம் கொண்டு வருகின்றனர். இப்பழத்தின் பின்புலன் தனக்கு தெரியாது என்றும், தெரியாமல் உண்டு விட்டதாகவும் அந்த மனிதன் கூற, ராஜா கோபத்துடன் அவனுக்கு மரணதண்டனை விதிக்கிறான். அதுவும் நிறைவேற்றப்படுகிறது.

இப்போது மந்திரி மெதுவாகப் பேசுகிறான். இப்பழத்தை சாப்பிட்டால் சிரஞ்சீவியாகலாம் என சாமியார் சொன்னான், ஆனால் அதை உண்டவனோ ஒரே நாளில் துர்மரணம் அடைந்தான். இதிலிருந்தே சாமியார் ஏமாற்று பேர்வழி என்பது தெரியவில்லையா என அவன் ராஜாவை கேட்கிறான். இந்த மாதிரி கதைகள் நமது கலாசாரத்தில் கொட்டிக் கிடக்கின்றன எனவும் சோ கூறுகிறார்.

கிரி வீட்டில் வேம்பு அவனது தாயாருடன் பேசுகிறார். கிரியும் அருகில் இருக்கிறான். தனது கணவர் ஒன்றுமே செய்ய வேண்டாம் என்றாலும் வேம்பு தன்னிச்சையாக செய்யப் போவதாக தன் கணவர் தனக்கு கூறியதாக கிரியின் அன்னை கூற, வேம்புவோ அதை மறுத்து அவள் கணவர் பொய் சொல்வதாகவும், தன்னிடம் அவர் கண்டிப்பாக பேசி, பெரிய சீர்செனத்தி லிஸ்டே தந்ததாகவும் கூறுகிறார். கிரியின் அன்னை திகைக்கிறாள். தான் மிகவும் சிரமப்பட்டே தனது குடும்பத்தினரை இக்கல்யாணத்துக்கு சம்மதிக்க வைத்ததாகவும், கிரியின் தந்தை இவ்வாறு பேசிய பிறகு தனக்கு மேலே ப்ரொசீட் செய்ய விருப்பம் இல்லை என்றும், கிரிக்கு வேறு நல்ல பெண் கிடைப்பாள் என்றும் கூறிவிட்டு அங்கிருந்து செல்கிறார். கிரியும் அவன் அன்னையும் திகைக்கின்றனர்.

இப்போது டோண்டு ராகவன். திடீரென கதையில் மாற்று கருத்துகள் வீறுகொண்டு எழுகின்றன. முதல் அதிர்ச்சி இரண்டாம் சைக்கியாட்ரிஸ்ட் அசோக் பற்றி கூறியது. ஆனால் யோசித்து பார்க்கையில் அவர் தனது பார்வை கோணத்திலிருந்து பேசியிருக்கிறார். ஆகவே அவரை குற்றம் சொல்ல முடியாது. அதே சமயம் அந்த மாத்திரைகளும் ஒரு கோளாறும் இல்லாது இருக்கும் அசோக்குக்கு ஊறுவிளைவித்திருக்கும் என்பதும் புரிகிறது. அவை எப்படி காணாமல் போயின? நான் ஊகிக்கிறேன் அது நாரதரின் கைங்கர்யமாகத்தான் இருக்கும் என. மேலே ட்ரீட்மெண்டுகள் எல்லாம் எவ்வாறு செல்லப் போகின்றன என்பதையும் பார்க்க ஆவலுடன் இருக்கிறேன்.

இங்கு இதை சோ அவர்கள் வெளிப்படையாக எடுத்து கூறாவிட்டாலும், ஜெயந்தி திருமண விஷயத்தில், சாதி விட்டு வேறு சாதியில் திருமணம் செய்வதின் ஒரு சிக்கல் புலப்படுகிறது. தான் காதலித்து கலப்பு மணம் செய்துகொண்ட கணவனையே புரிந்து கொள்ளாது செயல்பட்டிருக்கிறாள் கிரியின் அன்னை. கிரியின் தந்தையும் பேராசை கொண்டவர் என நான் நினைக்கவில்லை. ஆனால் அதே சமயம் தனக்கு விருப்பமில்லாத இத்திருமணத்தை தான் வெளிப்படையாகத் தடுப்பதைவிட, வேம்புவே அதை நிறுத்த வேண்டும் என்பதற்காகவே இப்படியெல்லாம் நடந்து கொண்டார் என எனக்கு தோன்றுகிறது.

ஆனால் இப்பிரச்சினை அவ்வாறு கலப்பு மணம் செய்து கொண்டவர்களது குழந்தைகள் திருமண சமயத்தில் நிச்சயம் வரும், வந்துள்ளன. அன்னையின் சாதிக்காரர்கள் அவள் பிள்ளைக்கு தங்கள் பெண்ணைத்தர யோசிப்பார்கள். தந்தையின் சாதிக்காரர்களும் கிட்டிமுட்டி போனால் அதையே சொல்ல மாட்டார்கள் என்பதிலும் நிச்சயம் இல்லை. மேலும், கலப்பு மணத்தின் முக்கியப் பிரச்சினையே மாறுபட்ட உணவுப் பழக்கங்கள்தான்.

வரதட்சிணை ஒழிய வேண்டுமானால் காதல் கல்யாணம், அதுவும் கலப்பு கல்யாணமே சரி என பிதற்றுபவர்களுக்கு சுற்றும் முற்றும் தமது உறவினர்கள் மத்தியில் நடக்கும் நிகழ்வுகளைப் பார்த்தாலே எல்லாம் புரியும், புரிய வேண்டும். அதிலும் ஊராருக்கெல்லாம் கலப்பு மணம் செய்வித்து விட்டு, தனது மகன்/மகளுக்கு மட்டும் அவர்களது முறைப்பெண்/முறை மாப்பிள்ளை தேடும் அரசியல்வாதிகளிடம் ஜாக்கிரதையாகவே இருக்க வேண்டும். அவர்களுக்கென்ன, கலப்பு மணம் செய்வித்துவிட்டு, மயிராச்சுன்னு போயிடுவாங்க. வாழ்நாள் முழுக்க கஷ்டப்படப் போவது யார்?

இது விஷயமாக நான் முன்னொரு சமயம் இட்ட இப்பதிவிலிருந்து போகிறபோக்கில் எழுதிய சில வார்த்தைகள். (பின்னூட்டங்களும் சுவாரசியமாகவே உள்ளன).
சாதி கூடாது என்று கூறுவர் பலர். ஆனால் கிட்டிமுட்டிப் போய் நீங்கள் என்ன சாதியில் பெண் எடுத்தீர்கள் என்று கேட்டால் மென்று முழுங்குகின்றனர். தங்கள் பெற்றோரின் வார்த்தைக்கு மதிப்பு கொடுத்து செய்தார்கள் என்று சப்பைக் கட்டு கட்டுகின்றனர். இருபது ஆண்டுகள் கழித்து தங்கள் பிள்ளைகளுக்கு கலப்பு மணம் செய்விப்பதாக வீறாப்புப் பேச்சு வேறு. யாராவது அவ்வளவு ஆண்டுகள் கழித்து கேள்வி கேட்கப் போககிறார்களா என்ற எண்ணம்தானே அதற்கு காரணம்?


எங்கே பிராமணன் மெகா சீரியல் திங்கள் முதல் வெள்ளி வரை ஜெயா டி.வி.யில் இரவு 8 மணிக்கு.

அன்புடன்,
டோண்டு ராகவன்

2 comments:

Sivakumar said...

நான் வலையுலகிற்கு புதியவன் - படிக்க சுவாரஸ்யமாக உள்ள தளங்களை தேடிப் பிடித்து படிப்பதில் அலாதி பிரியம் - அதில் உங்கள் பதிவுகள் "some what interesting"

சரி நானும் கேள்வி கேட்போமே - என்று கேட்டு விட்டேன். தமிழில் பிழை இருப்பின் சுட்டினால் திருத்திக் கொள்வேன்

-----------------------------------

சொந்தமாக தொழில் செய்வது நல்லதா? 20 - 25 வருடங்கள் உத்யோகத்தில் இருப்பது நல்லதா?

ஆங்கில அறிவை மேம்படுத்த என்னென்ன வழிமுறைகளைக் கையாளலாம்?

வேற்று மொழி கதைகள் படிக்கும் போது எத்தகைய முறையைக் கையாண்டால் படிப்பதற்கு சுவாரஸ்யமாக இருக்கும்?

தங்களுக்கு தமிழ் தவிர இந்திய மொழிகள் என்னென்ன தெரியும்?

சமஸ்கிருதத்தில் தங்களுடைய புலமை எத்தகையது?

ஒரு வாரத்திற்கு அதிகபட்சம் எவ்வளவு நேரம் வருமானம் சார்ந்த வேலைக்காக ஒதுக்குவீர்கள்?

ஒரு நாளைக்கு அதிகபட்சமாக எவ்வளவு நேரம் டிவி பார்ப்பீர்கள்?

பே சானல்கள் பற்றி என்ன நினைக்கிறீர்கள்? நம்மிடம் பணம் வசூல் செய்யும் அத்தகைய சானல்களுக்கு ஏன் விளம்பரக் கட்டுப்பாடு ஏன் விதிக்கக்கூடாது? (விஜய் டிவியில் விளம்பர இடைவேளை மிகமிக அதிகம்)

உங்கள் வீட்டில் கேபிளா டிடீஎச்-ஆ? கேபிள் எனில் உங்கள் பகுதியில் எவ்வளவு வசூலிக்கிறார்கள்? டிடீஎச் எனில் எந்த கனெக்ஷன் வைத்துள்ளீர்கள்?

எங்கே பிராமணன் இ-புத்தகம் எங்கே கிடைக்கும்? (சுட்டி தந்தால் தன்யன் ஆவேன். சீரியல் அநியாயத்திற்கு டிவிஸ்ட் ஆகிறது)

எங்கே பிராமணன் சீரியலில் ஏன் ஐயங்கார் கதாபாத்திரங்கள் வரவில்லை? சோ ஐயர் என்பதாலா? (வரப்போகிறது என்று சொல்ல வேண்டாம் - டைடிலில் ஒரு ஐயங்கார் வருகிறார்)

Anonymous said...

கேள்விகள்:

எம்.கண்ணன்.

1. எங்கே பிராமணன் தொடரில் பாத்திரத் தேர்வுகள் மிக அருமை தானே ? நல்ல ஃபிகர் என யாரைச் சொல்லுவீர்கள் ? கிருபாவின் மனைவியாக வரும் சங்கீதாவா ? இல்லை சமையல் மாமியா ?

2. குமரி முனையில் வசிக்கும் ஜெயமோகனை பல ஊர்களிலிருந்தும் கூப்பிட்டு (வெளிநாடுகள் உட்பட) அவர் பல இடங்களுக்கும் செல்ல வாய்ப்பு ஏற்படுகிறதே ? ஆனால் சென்னை மாநகரத்திலே வசிக்கும் சாரு நிவேதிதாவை யாரும் கூப்பிடுவது போல் தெரியவில்லையே ? சக வலைப்பதிவர் என்ற முறையில் ஏன் என நீங்கள் நினைக்கீறீர்கள் ?

3. ஆண் வாரிசு இல்லையே என வருத்தப் பட்டதுண்டா ? ஆண் வாரிசு இல்லாதவர்களுக்கு நீங்கள் கூறும் மனவியல் அறிவுரை என்ன ?

4. ஜெர்மனியும் பிரான்ஸும் போகாமலேயே மொழிபெயர்ப்பு வேலைகள் செய்து வருகிறீர்கள். அங்கு ஒரு முறை சென்று அவர்கள் (தற்போது) வாழ்க்கை நடைமுறையை கண்டு வந்தால் உங்கள் மொழிபெயர்ப்பு இன்னும் சிறக்கக் கூடும் அல்லவா ?

5. குமுதத்தில் வரும் ஜாதிகள் பற்றிய தொடர் ஏன் இப்போதெல்லாம் உங்கள் பதிவுகளில் எடுத்துப் போடுவதில்லை ? அந்தந்த ஜாதிகளில் பிரபலங்களைப் பற்றிய சிறப்புச் செய்திகள் வருகின்றனவே ? (குமுதம் பே சைட் ஆனது தான் காரணம் என சொல்லமாட்டீர்கள் என எண்ணுகிறேன்)

6. கம்ப ராமாயணம், வால்மீகி ராமாயணம் - எது பிடிக்கும் ? ஏன் ? உங்களுக்குப் பிடித்த அதன் சுவையான / நீங்கள் ரசித்த பாடல்களை / வர்ணனைகளை எடுத்து பதிவாக (தொடர்ந்து - வாரம் ஒருமுறை) பகிரலாமே ? (வெறும் பாடல் அதன் பொருள் என்றில்லாமல் கொஞ்சம் விரிவாக)

7. கதா காலட்சேபம் செய்யும் பௌராணிகர்கள் குறைந்துவிட்டார்களே ? சுகி.சிவம், நாகை முகுந்தன் என சிலர் இருந்தாலும் எல்லோரும் வாழ்வியல் பக்கம் ஒதுங்கிவிட்டனரே ? ஒரு டி.எஸ்.பாலகிருஷ்ண சாஸ்திரிகள் போலவோ, கிருபாநந்த வாரியாரைப் போலவோ, கமலா மூர்த்தி போலவோ ஆன்மீகம்/பக்தி பற்றி சொல்ல பெரியவர்கள் குறைந்ததற்கு என்ன காரணம் ?

8. பெரும்பாலும் அரட்டையாகவே நடைபெறும் பதிவர் சந்திப்புகளுக்கு 'சொந்த' கார் வாடகைக்கு எடுத்துச் செல்ல எப்படி கட்டுப்படியாகிறது ? பழவந்தாங்கலில் இல்லை வேளச்சேரியில் ரயில் பிடித்து போகலாமே ?

9. உங்களுடைய கருத்துகளில் உறுதியாக நின்றாலும், அனைவரிடமும் நட்பு பாராட்டும் இந்த பன்முகத் தன்மை உங்களுக்கு வந்தது உங்கள் பம்பாய், டில்லி வாசத்தினால் என்று கூறினால் சரிதானே ? பொதுவாக வடக்கில் (தமிழகம் / தென்னகம் விட்டு வெளியே ) பல வருடங்கள் வாழ்ந்தவர்களுக்கு தமிழகத்திலேயே இருந்தவர்களை விட கொஞ்சம் பரந்த மனது என நண்பன் ஒருவன் கூறினான். உங்கள் கருத்து என்னவோ ?

10. நங்கநல்லூர் வட்டாரங்களில் தற்போது வீட்டு வேலை செய்ய வரும் பெண்மணிக்கு எவ்வளவு மாதச் சம்பளம் கொடுக்க வேண்டி உள்ளது ? சம்பளம் தவிர வேறு அடிஷனல் உண்டா ? (உதா: காபி, மாதம் 2 நாட்கள் லீவு; வருடம் 2 புடவை என) ? நகரத்தில் வேலைக்கு நம்பகமான ஆள் கிடைப்பது அரிதாகி வருகிறதே ?

 

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது