12/16/2009

சோவின் எங்கே பிராமணன் பார்ட் - 2 (எபிசோட் - 2)

முதல் எபிசோடுக்கான பதிவில் வந்த வஜ்ரா அவர்களது இப்பின்னூட்டத்தையும் அதற்கான எனது எதிர்வினையையும் இங்கே குறிப்பது பொருத்தமாக இருக்கும் என நினைக்கிறேன்.

வஜ்ரா said...
இல்லாத பிராமணனைத் தேடுவதாக ரொம்பவும் சிலர் கவலைப்படுகிறார்களே ? அதைப்பற்றி எதுவும் நீங்கள் சொல்லவில்லையா?
December 16, 2009 3:56 PM

dondu(#11168674346665545885) said...
@வஜ்ரா
கவலைப்படுகிறவர்கள் அதைச் செய்யாது நிறுத்தச் செய்யும் செய்தி முதல் எபிசோடிலேயே வந்து விட்டதே. அதை அவங்க கேக்கல்லைன்னு நினைக்கிறேன்.

வர்ண ரீதியான பிராமணன் தற்காலத்தில் இல்லை என்பதை சோ தெளிவுபடவே புத்தகத்திலும் கூறிவிட்டார், எங்கே பிராமணன் தொடரின் முதல் பகுதியிலும் கூறி விட்டார்.

இரண்டாம் பகுதியின் முதல் எபிசோடில் நாரதர் சாமியார் வேடத்தில் வந்து அசோக்கிடம் பேசுகிறாரே. பிராமணனை அசோக் தனக்குள்ளேயே தேட வேண்டும். தேவையானால் உருவாக்க வேண்டும் என்று.

வசிஷ்டரான அசோக்கால் அது முடியாது என்கிறீர்களா? அப்படி உருவாகும் பிராமணன் தற்காலத்தவரால் எவ்வாறு நோக்கப்படுவான், அவனுக்கு வரும் இன்னல்கள் என்னென்ன, அவனுக்கு உதவப்போவது யார் யார் என்பதெல்லாம்தான் இரண்டாம் பகுதியில் வரும் என நம்புகிறேன்.

காத்திருந்து பார்ப்போமே, என்ன நான் சொல்லுவது?

மற்றப்படி, சோவின் இந்த அற்புத சீரியல் பற்றி என்னால் ஆன விஷயங்களை எழுத எண்ணியுள்ள நானா ஜெலூசில் பேர்வழிகள் போடும் உபயோகமற்ற பதிவுக்கெல்லாம் போவேன்?

ரொம்பவே கஷ்டகாலம்தான்.

எபிசோட் - 2 (15.12.2009)
சுட்டி - 1
சுட்டி - 2

நாதனும் சாம்பு சாஸ்திரிகளும் வரும்போது அசோக் உள்ளே வருகிறான். அவன் இத்தனை நேரம் எங்கிருந்தான் என நாதன் கடும் கோபத்துடன் கேட்டு அவனை அவன் அம்மா தேடுவதாக அனுப்புகிறார். அவனும் சாம்பு சாஸ்திரிகளை வணங்கிவிட்டு உள்ளே செல்கிறான்.

வசுமதி அவனை விசாரிக்கிறாள், அவன் எங்கே போயிருந்தான் என. தான் காத்தாட பீச்சுக்கு போனதாக செல்ல, எப்படி சென்றான் என கேட்கிறாள். அவன் தான் நடந்து சென்றதாகக் கூற, அவ்வளவு தூரம் பீச்சுக்கா நடந்து சென்றான் எனக் கேட்க, அவன் விவேகானந்தர் கன்னியாகுமரி வரைக்கு நடந்து சென்றபோது தான் நடந்தது ஒன்றுமேயில்லை எனக் கூறிவிடுகிறான்.

இம்மாதிரியே விசாரணை செல்ல, வசுமதியே கடைசியில் அளித்து “இந்தாத்துல என் புருஷனையும் மாத்த முடியாது, என் பிள்ளையையும் மாத்த முடியாது” என அவள் அங்கலாய்ப்பது ரொம்ப இயல்பாகவே இருந்தது.

அசோக் தான் அந்த சன்னியாசியை சந்தித்தது பற்றிக் கூற, அவள் கவலைப்படுகிறாள். அது போதாததுபோல தான் மேற்கொண்டுள்ள எங்கே பிராமணன் என்ற தேடலில் அவரால் புதிய தெளிவு தனக்குள் பிறந்துள்ளது என்பதையும் கூறி விட்டு அப்பால் செல்கிறான். நளினி தன் மகன் சன்னியாசியாகிவிடுவானோ என கவலைப்பட ஆரம்பிக்கிறாள். சமையற்கார மாமி அவளுக்கு ஆறுதல் சொல்கிறாள்.

பழைய மாம்பலம் கோசம்ரட்சண சாலையில் வினாயகர் பூஜை நடக்கிறது. அங்கு வேம்பு சாஸ்திரிகள் வருகிறார். அங்கு சாம்பு சாஸ்திரிகளைப் பார்க்கிறார். அவர் தன்னிடம் இருந்த மாட்டிற்கு வந்த கேன்சர் நோய் குணமானதாகவும், இப்போது அதை நல்ல நிலையில் கோசாலைக்கு தந்ததாகவும் கூறுகிறார். வேம்பு சாஸ்திரி சாம்புவின் செயலை விதந்தோதுகிறார்.

(இங்கு நான் எனக்கு வந்த ஊகத்தை முன்னே வைக்கிறேன். அந்த மாடு வரும் நிகழ்ச்சிகளில் பங்கு வகிக்கும் என நினைக்கிறேன். வசிஷ்டரிடம் இருந்த நந்தினி பசுதான் இங்கும் வந்து அசோக்குக்கு துணையாக வரப்போகிறது என நினைக்கிறேன். எனது ஊகத்துக்கான காரணங்கள் இப்போதைக்கு மெல்லிய இழைதான், ஆனால் அது உண்மையாக வேண்டும் என்பதற்கான எனது ஆசை தாம்புக்கயிற்றுக்கு இணையாக பலமாக உள்ளது).

வேம்பு சாஸ்திரிகளது பெண்ணைப் பற்றி சாம்பு விசாரிக்க, அவர் தன் மகள் மாப்பிள்ளையுடன் அடிக்கடி சண்டை போட்டுவிட்டு பிறந்தகத்துக்கு வந்து விடுகிறாள், இப்போதும் தங்களாத்தில்தான் இருப்பதாகக் கூறி வருத்தப்படுகிறார். சாம்பு அவரைத் தேற்றுகிறார். தனது மகளும் மாப்பிள்ளையும் திருமண ஆலோசனைக்கு போகப்போவதாகவும், அதற்கு ஃபீஸ் உண்டும் என்றும் கூறுகிறார். இதென்ன விசித்திரமாக இருக்கு. அக்காலங்களில் கூட்டுக் குடும்பமாக இருந்தபோது சிறிசுகளின் பிரச்சினைக்கு வீட்டுப் பெரியவர்களே மருந்தாக இருந்தார்களே என சாம்பு அங்கலாய்க்கிறார்.

“இது என்ன கதையா இருக்கே, டைவர்ஸ் கூடாதா” என நண்பர் கேட்க, சோ அவர்கள் பழைய காலத்திலேயே விவாகரத்து, விதவா விவாகம் என்று எல்லாம் முறைப்படுத்தப்பட்டு நடந்திருக்கின்றன என்பதை விளக்குகிறார்.

வேம்பு சாம்புவின் மகன், மருமகள் பற்றி கேட்க, கடவுள் புண்ணியத்தில் எல்லாம் நல்லபடியாக இருப்பதாகக் கூற, சாம்பு வேதத்தை நம்புபவர் ஆகவே அவருக்கு எல்லாம் நல்லபடியாகவே நடக்கும் என கூறுகிறார். தான் லௌகீக விஷயங்களில் அதிக ருசி கொண்டிருந்ததால் இப்போது பல துன்பங்களை அனுபவிப்பதாகவும், அந்த பாவச்சுமையை குறைக்கவே கோசாலைக்கு வந்து மாட்டுக்கு அகத்திக்கீரை போடுவதாகவும் கூறி விட்டு விடைபெற்று செல்கிறார்.

சாரியார் வீட்டில் அவர் கவலையுடன் அமர்ந்திருக்கிறார். தன் மகன் பாச்சா ஒரு சுலோகம் கூட சொல்ல முடியாமல் இருக்கிறானே எனக் கவலைப்ப்ட்டு, “உரைக்க வல்லேன் அல்லேனுன் உலப்பில் கீர்த்தி வெள்ளத்தின் கரைக்கண் என்று செல்வன்நான்? காதல் மையல் ஏறினேன், புரைப்பிலாத பரம்பரனே. பொய்யிலாத பரஞ்சுடரே, இரைத்து நல்ல மேன்மக்கள் ஏத்த யானும் ஏத்தினேன்” என்னும் நம்மாழ்வார் பாசுரத்தை முணுமுணுக்கிறார்.

தன் மகன் பாச்சா எப்படியேல்லாம் இருக்க வேண்டும் என கற்பனை செய்ய, அவன் “கருமா முகிலுருவா” என்று துவங்கும் திருமங்கை ஆழ்வாரின் பாசுரத்தை வேகமாகக் கூறுவது போன்ற பொய்த்தோற்றம் தெரிகிறது. சட்டென நினைவுக்கு வந்து பார்த்தால் நிலையில் ஒரு மாறுதலும் இல்லை என சாரியார் ஏங்குகிறார். “ஊரிலேன் காணியில்லை” என்னும் தொண்டரடிப்பொடியாழ்வார் பாசுரத்தை அவர் இப்போது முணுமுணுக்கிறார்.

சாரியார் ஸ்லோகமெல்லாம் சொல்கிறாரே என நண்பர் கேட்க, அவை பாசுரங்கள் என சோ விளக்குகிறார். பிறகு முதல் பாசுரத்தை எழுதிய நம்மாழ்வார் பற்றி கூற ஆரம்பிக்கிறார்.

நம்மாழ்வார் ராமனின் அம்சம் எனக்கூறி, லட்சுமணன் ஒரு கட்டத்தில் தன்னையும் மீறி ராம ஆணையை புறக்கணிக்க வேண்டிய நிர்பந்தத்தில் செயலாற்றிய போது ராமர் லட்சுமணன் புளியமரமாக அவதரிப்பான் எனவும் தான் அவனிடம் வந்து சேர்வதாகவும் கூறியதாக நம்மாழ்வார் கதையில் கூறப்படுகிறது.

நம்மாழ்வார் பிறந்த பொழுதிலிருந்து ஒரு அசைவும் இன்றிக் கிடக்க, அவர் அன்னை திருக்குறுகூர் கோவிலுக்கு கொண்டு வந்து விட, அது நேரே அக்கோவிலில் இருந்த தல விருட்சமான புளியமரத்தடியில் சென்று அமர்ந்து கொண்டது. இவ்வாறு 16 வருடங்கள் கழித்து விடுகிறார். இதற்கிடையில் குருவை தேடி ஒரு ஒளியால் வழிகாட்டப்பட்டு மதுரகவி என்னும் பெரும் அறிஞர் திருக்குருகூர் வந்து சேர்கிறார். மெதுவாக நம்மாழ்வார் முன் வந்து, "செத்ததன் வயிற்றில் சிறியது பிறந்தால் எத்தைத் தின்று எங்கே கிடக்கும்?" என்று கேட்கிறார்.

அது நாள் வரை வாய் திறவாத நம்மாழ்வார், அன்று திருவாய் அருளி, "அத்தைத் தின்று அங்கே கிடக்கும்" என்கிறார். இந்திய மெய்யியல் சரித்திரத்தில் நீங்காத இடம்பெறும் இருவரின் உறவு இந்தகைய சம்பாஷனையில் தொடங்குகிறது. இங்கு செத்தது என்பது உடலைக் குறிக்கிறது. உடல் வாழும் போதே கூட செத்துத்தான் உள்ளது. மயிர், நகம் இவை செத்தவை. மேலும் உடல் செத்து, செத்து உயிராய் மலர்வதால் அதை "செத்தது" என்கிறார். சின்னது என்பது "அணுவுக்குள், அணுவாய்" இருக்கும் உயிரைக் குறிக்கும். இவ்வுயிர், செத்ததான உடலுக்குள் போன பின் அது செய்யும் கர்ம, காரியங்களில் பங்கேற்று வாழும் என்பதை "அத்தைத் தின்று அங்கே கிடக்கும்" என்கிறார்.

(தேடுவோம்)

எங்கே பிராமணன் பார்ட் 2 ஜெயா டிவியில் திங்கள் முதல் வியாழன் வரை (நான்கு நாட்கள்) இரவு எட்டு மணி முதல் 08.30 வரை ஒளிபரப்பாகிறது.

அன்புடன்,
டோண்டு ராகவன்

4 comments:

உங்கள் தோழி கிருத்திகா said...

நல்ல முயற்சி சார்...கண்டிப்பாக தொடரவும்...பாகம் ஒண்ணை பல சமயங்களில் தவற விட்டு விட்டேன்...இப்போ தான் உங்க ப்லாகை பாத்தேன்..பாகம் 2 தவற விட்டாலும் இங்க வந்து படிச்சுக்கலாம் :)
ரொம்ப அரிய தொடர் இது..துணிச்சலாக இதை செய்து கொண்டிருக்கும் ஜெயா டீ.விக்கும் சோவுக்கும் கண்டிப்பாக பாராட்டுக்கள்...அத்துடன் உங்களுக்கும் :)

Jawahar said...

//மற்றப்படி, சோவின் இந்த அற்புத சீரியல் பற்றி என்னால் ஆன விஷயங்களை எழுத எண்ணியுள்ள நானா ஜெலூசில் பேர்வழிகள் போடும் உபயோகமற்ற பதிவுக்கெல்லாம் போவேன்?//

எல்லாவற்றையும் படிக்க வேண்டும். இயன்றவரை அறிவுப் பூர்வமான விவாதங்களையும் முன் வைக்க வேண்டும் என்பது என் எண்ணம்.

http://kgjawarlal.wordpress.com

வஜ்ரா said...

சென்ற வருடம் வீட்டில் இருந்ததால் ஜம்மென்று ஜெயா டீ.வியில் பார்த்துவிட்டேன்...இந்த வருடம் வெளியூரில் இருப்பதால் உங்கள் புன்னியத்திலும், டெக்சத்தீஷ் புன்னியத்திலும் எபிசோடுகளைப் பார்க்கிறேன்.

வர்ணரீதி பிராமணணாக அசோக் மாறுவானா ? அப்படி மாறுவதால் யாருக்கு என்ன பயன் ? வர்ணரீதியான பிராமணன் என்றாலும் ...கலியாணம் செய்துகொள்வானா அசோக் என்பதும் பார்க்கப்படவேண்டும் என்று நினைக்கிறேன்.

thiruchchikkaaran said...

Dear Brothers and Sisters,

Kindly read the following article.


http://thiruchchikkaaran.wordpress.com/2009/12/17/is-cho-the-jagath-kuru-now/

Thanks

 

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது