4/19/2006

முரட்டு வைத்தியம் - 3

முரட்டுவைத்தியம் - 1
முரட்டு வைத்தியம் - 2 (என்னைப் புரட்டிப் போட்ட அந்த ஞாயிற்றுக் கிழமை)

முரட்டு வைத்தியம் - 2 ஏற்கனவே வேறு பெயரில் வந்து விட்டபடியால் அதற்கும் முதல் பகுதிக்கும் சுட்டிகள் கொடுத்துவிட்டு இப்பதிவுக்கு வருவேன்.

சமீபத்தில் 1986-ல் ஐ.டி.பி.எல் தலைமை அலுவலகத்தில் சீனியர் டிசைன் இஞ்சினியர் மற்றும் பிரெஞ்சு மொழிபெயர்ப்பாளராக வேலை பார்த்து வந்தேன். தலைமை அலுவலகமும் தொழிற்சாலையும் குர்கானில் ஒன்றுக்குப் பக்கத்தில் ஒன்றாக இருந்தன. திடீரென என்னைத் தொழிற்சாலைக்கு மாற்றி விட்டார்கள். ஆனால் தொழிற்சாலையிலோ என்னை தலைமை அலுவலகத்துக்கான மின் உபகரணங்களைப் பராமரிக்குமாறு ரிபோஸ்டிங் செய்து விட்டனர். அது பற்றி நான் இப்பதிவில் போட்டுள்ளேன்.

அதுவரை என்னுடன் நட்பு முறையில் பழகி வந்த தலைமை அலுவலகத்தார் என்னை வித்தியாசமாக நடத்த ஆரம்பித்தனர். தலைமை அலுவலகத்தில் வேலை செய்பவர்களை அழைத்துச் செல்லும் பஸ் தில்லியில் எங்கள் வீடு இருந்தத் தெரு வழியாகச் சென்றது. தொழிற்சாலையில் இருந்த நான் அந்த பஸ்ஸில் அலுவலகம் செல்வது வழக்கம். அதற்கு ஆட்சேபணை எழுப்பினர் தலைமை அலுவலக யூனியன்காரர்கள். தங்கள் கேட் மீட்டிங்கில் எஙளைப் போன்றவர்களைத் தடுக்கப் போவதாகக் கூறினர். (என்னைத் தவிர தொழிற்சாலையைச் சேர்ந்த இன்னும் பலரும் அதே பஸ்ஸில் வருவது வழக்கம்).

நான் என்ன செய்தேன் தெரியுமா? "நீ யாரடா ஜாட்டான் என்னை பஸ்ஸில் வர வேண்டாம் என்பது, நான் கூறுகிறேன் உன் பஸ் எனக்கு வேண்டாம்" என்று ஒரு சைக்கிள் வாங்கி அதில் வேலைக்குச் செல்ல ஆரம்பித்தேன். வீட்டிலிருந்து அலுவலகம் 20 கிலோமீட்டர். போக ஒரு மணி நேரம் வர ஒரு மணி நேரம் என்று 40 கிலோமீட்டர் பயணம் தினசரி. அப்போது எனக்கு வயது 42. ஆனால் சைக்கிளை கண்மண் தெரியா வேகத்தில் ஓட்டிச் செல்வேன். காற்றின் எதிர்த் திசையில் மனிக்கு 20 கி.மீ. வேகம், நேர்த் திசையில் 30 கி.மீ. வரை வேகம். திசம்பர், ஜனவரி மாதங்களில் அலுவலகம் அடைந்ததும் ஸ்வெட்டரைக் கழற்றி சட்டை வியர்வையால் உடம்பில் ஒட்டிக் கொள்ள நின்றவன் நான் ஒருவனாகத்தான் இருப்பேன். பகல் நேர வெப்ப அளவு 15 டிக்ரி செல்சியஸ் போல இருக்கும்.

சில நாட்கள் கழிந்தன. ஒரு நாள் தலைமை அலுவலகத்துப் பொது மேலாளர் P.G. Zalani என்னை நேஷனல் ஹைவேயில் வியர்வையுடன் சைக்கிள் செலுத்தி வருவதைப் பார்த்து அதிர்ச்சியடைந்தார். என்னைக் கூப்பிட்டு விசாரிக்க நான் அவரிடம் யூனியன்காரர்கள் செய்ததைக் கூற, உடனே அவர் அவர்களைத் தன் அறைக்கு வரவழைத்துக் கேட்டிருக்கிறார். அவர்களோ தாங்கள் ராகவனைக் குறித்துப் பேசவில்லை அவர் எப்போது வேண்டுமானாலும் பஸ்ஸில் வரலாம் என்றுக் கூறினர்.

இருந்தாலும் நான் ஒத்துக் கொள்ளவில்லை. "இதை ஒரு உடற்பயிற்சியாகச் செய்துக் கொள்கிறேன், நன்றி" என்றுக் கூறி விட்டேன். அதனால் என் மதிப்பு பலமடங்கு உயர்ந்தது. அவ்வாறு செய்யாமல் நான் என்னை பஸ்ஸில் அனுமதியுங்கள் என்றுக் கேட்டிருந்தால் வெற்றியடைந்திருப்பேன் என்று நினைக்கிறீர்களா?

இந்த நிலைமை 1993 அக்டோபரில் 47 வயதில் நான் விருப்ப ஓய்வு எடுக்கும் வரை நீடித்தது. ஒரு நாளைக்கு சராசரியாக 40 கிலோமீட்டர் வீதம் ஒரு மாதத்தில் (25 நாட்கள்) 1000 கிலோமீட்டர், ஒரு வருடத்தில் 12000 கிலோமீட்டர், 6 வருடங்களில் 72000 கிலோமீட்டர் தூரம் சைக்கிள் விட்டிருக்கிறேன். பூமியின் சுற்றளவு பூமத்திய ரேகையில் 25000 கிலோமீட்டர்கள் என்று ஞாபகம். ஐ.டி.பி.எல்லில் எனக்கு "வன மானுஷ்" (காட்டு மனிதன் --> காட்டான்)என்று சிலர் பட்டப் பெயர் வேறு கொடுத்திருந்தனர்.

ஆனால் இப்போது நினைத்துப் பார்த்தால் வேடிக்கையாக இருக்கிறது, அதுவும் இப்பதிவைப் போட்ட பிறகு. சைக்கிள் ஓட்டும்போது கோமணத்தை இறுகக் கட்டியது ஒன்றுதான் நான் செய்து கொண்ட முன்ஜாக்கிரதை நடவடிக்கை. ஆனால் என்னுடன் 42 ஆண்டுகளாக இருந்த ஹெர்னியா என் உயிருக்கு அபாயத்தை உண்டு பண்ணாதது என் உள்ளங்கவர் கள்வன் என் அப்பன் தென்திருப்பேரை மகர நெடுங்குழைகாதன் போட்ட பிச்சையே. இந்த அழகில் என் அப்பனை பற்றி போன வருடம் மார்ச் மாதம்தான் தெரிந்து கொண்டேன். முதல் தரிசனத்தின் போதே பல ஆண்டுகளாகவே அவனுடன் பழகிய உணர்வு.

அன்புடன்,
டோண்டு ராகவன்

23 comments:

கால்கரி சிவா said...

தோண்டு சார், என்னே உங்க மன உறுதி! கீப் இட் அப்

அன்புடன்

கால்கரி சிவா

dondu(#11168674346665545885) said...

நன்றி கால்கரி சிவா அவர்களே.

அன்புடன்,
டோண்டு ராகவன்

Prabhu said...

monthly 1000kms aa?
correct aa thaan office la peru vachu irukaanga.

dondu(#11168674346665545885) said...

பிரபு அவர்களே, கார்ப்பரேட் ஆஃபீஸ் யூனியன்காரர்கள் என்னை அவமானப் படுத்திவிடக் கூடாது என்பதற்காக ஆரம்பித்தது எப்படியோவெல்லாம் சென்று விட்டது. எல்லாம் நல்லதுக்குத்தான்.

இதனால் என் சுய மரியாதை பல மடங்கு உயர்ந்தது. இன்று என்னை ஒரு நல்ல நிலையில் வைத்துள்ளது.

அன்புடன்,
டோண்டு ராகவன்

லக்கிலுக் said...

என் வீட்டிலிருந்து ஆபிஸ் 15 கிமீ தான்... இருந்தாலும் பைக் தான் பயன்படுத்துகிறேன்... உண்மையைச் சொல்ல வேண்டுமானால் என்னிடம் இப்போது சைக்கிளே இல்லை... அதற்காக வெட்கப்படுகிறேன்...

பள்ளி படிக்கும் போது ஒரு முறை மாமல்லபுரத்துக்கு சைக்கிளில் போய் இருக்கிறேன்.... 50 + 50 = 100 கி.மீ.

ஒரு முறை காஞ்சிபுரத்துக்கு சைக்கிளில் போய் வந்திருக்கிரேன்.... 70 + 70 = 140 கி.மீ...

இது தான் என் மேக்ஸிமம் சாதனை...

அதுவும் 42 வயதில் உங்கள் வைராக்கியம் ரொம்ப ஓவர்....

dondu(#11168674346665545885) said...

லக்கிலுக் அவர்களே, நீங்கள் மடிப்பாக்கத்தில் இருப்பதாகத்தானே கூறினீர்கள்? அலுவலகம் எங்கே?

ஒரு நல்ல சைக்கிளை 1000 ரூபாய் கொடுத்து வாங்கிக் கொள்ளலாமே? ஆனால் ஒன்று. பலர் கேலி செய்வர். அதையெல்லாம் தாங்கிக் கொள்ள வேண்டும். அலுவலகம் என்று இல்லாவிட்டாலும் வீட்டில் ஒரு சைக்கிள் இருப்பது நலம். வீட்டு வேலைகளுக்கு டூ வீலர் உபயோகிப்பதை விட சைக்கிள் ரொம்ப சௌகரியம்.

என்னுடைய இப்போதைய 60 வயதிலேயே 25 வயது எண்ணங்கள்தான். 42 வயது ரொம்ப இளமை அல்லவோ?

அன்புடன்,
டோண்டு ராகவன்

லக்கிலுக் said...

அய்யா,

என் அலுவலகம் அண்ணா சாலையில் இருக்கிறது... எனக்கு சைக்கிளில் வர ஆசையாக இருக்கிறது... ஒரு நல்ல சைக்கிள் வாங்கி வைத்துக் கொள்கிறேன்.... மற்றவர்களின் கேலியைப் பார்த்து கலங்காத உங்கள் உள்ளம் உயர்ந்தது... நானும் சைக்கிளில் அலுவலகம் வர முயற்சிக்கிறேன்...

பெட்ரோலுக்கு மட்டும் மாதத்துக்கு கிட்டத்தட்ட 1000/- செலவாகிறது... அதை மிச்சப்படுத்தலாம்... மேலும் ஆரோக்கியத்துக்கும் நல்லது அல்லவா?

லக்கிலுக் said...

///என்னுடைய இப்போதைய 60 வயதிலேயே 25 வயது எண்ணங்கள்தான். 42 வயது ரொம்ப இளமை அல்லவோ?///

உண்மை தான்... 30 வயதிலேயே எண்ணங்களில் கிழடு தட்டிப் போனவர்களைப் பார்த்து பார்த்து 42 வயது ரொம்ப அதிகம் என்று நினைத்து விட்டேன்... வயது ஒரு பொருட்டே அல்ல தான்... 83 வயது கிழவர் தமிழ்நாடு முழுவதும் சுற்றவில்லையா?

Muthu said...

வன மானுஷ்

dondu(#11168674346665545885) said...

உங்கள் சைக்கிள் முயற்சிக்கு என் ஆசிகள்.

"83 வயது கிழவர் தமிழ்நாடு முழுவதும் சுற்றவில்லையா?"

ஈ.வே.ரா. அவர்களைத்தானே கூறுகிறீர்கள்? அவருடைய பல கொள்கைகள் எனக்கு ஏற்புடையதில்லைதான். ஆனால் அவர் சிலப்பதிகாரத்தைப் பற்றிக் கூறியதுடனும் ஆண் பெண் கற்பு நிலை பற்றியக் கருத்துக்களுடனும் நான் ஒத்துப் போகிறேன்.

உடல் நலம் குன்றிய நிலையிலும் அந்தக் கிழவர் காட்டிய மனதிடத்தை நானும் அந்த வயதில் காட்ட என் உள்ளங்கவர் கள்வன் என் அப்பன் தென்திருப்பேரை மகரநெடுங்குழைகாதனின் அருளை வேண்டுகிறேன்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

dondu(#11168674346665545885) said...

வன மானுஷ்

உள்ளேன் ஐயா.

ஏதோ ஸ்கூலில் அட்டெண்டன்ஸ் எடுப்பது போல இல்லை?

அன்புடன்,
டோண்டு ராகவன்

லக்கிலுக் said...

////"83 வயது கிழவர் தமிழ்நாடு முழுவதும் சுற்றவில்லையா?"

ஈ.வே.ரா. அவர்களைத்தானே கூறுகிறீர்கள்?////

கறுப்புத்துண்டுக்காரர் 93 வயதில் கூட தமிழ்நாடு முழுதும் சுற்றினார்.... அது இன்னும் ஓவர்....

நான் சொல்லுவது மஞ்சள் துண்டு காரர்.... இவரெல்லாம் எங்கே சுற்றுப்பயணம் செய்து என்று நினைத்தேன்.... முதல்கட்டத்திலேயே 1,000 கி.மீ. வேனில் பயணம் செய்து அசத்தி விட்டார்.....

dondu(#11168674346665545885) said...

மஞ்சள் துண்டுக்காரரும் மன உறுதியில் லேசுபட்டவர் இல்லைதான்.

இன்னும் பல உதாரணங்கள் உழைப்புக்கு அஞ்சா மன உறுதிக்கு உண்டு. காமராஜ், சோ, சுஜாதா, வாலி, வை.கோ...

இப்படி கூறிக் கொண்டே போகலாம்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

லக்கிலுக் said...

நீங்கள் ராஜாஜியைச் சொல்ல மாட்டீர்களா? என்று போலி டோண்டு காத்துக் கொண்டிருக்கிறார்.... அவரை ஏமாற்றி விட்டீர்களே? :-)

dondu(#11168674346665545885) said...

ராஜாஜி மற்றும் காந்திஜியின் ரேஞ்சே தனிதானே.

தண்டி/வேதாரண்யம் உப்பு யாத்திரைகள் மறக்கக் கூடியவையா என்ன? அவர்கள் மாமனிதர்கள் ஆயிற்றே.

மேலும் அந்த இரண்டு சம்பந்தி பெரிசுகளும் தேவதாஸ் மற்றும் லட்சுமியின் திருமணத்திற்கு வைத்த சோதனைகள் பயங்கர முரட்டு வைத்தியம் அல்லவா?

அன்புடன்,
டோண்டு ராகவன்

லக்கிலுக் said...

////மேலும் அந்த இரண்டு சம்பந்தி பெரிசுகளும் தேவதாஸ் மற்றும் லட்சுமியின் திருமணத்திற்கு வைத்த சோதனைகள் பயங்கர முரட்டு வைத்தியம் அல்லவா?////

நானும் கேள்விப்பட்டு இருக்கிறேன்... இருந்தாலும் அது குறித்து முழு விவரம் தெரியாது... அதுபற்றி நீங்கள் ஏதாவது பதிவு செய்திருக்கிறீர்களா?

dondu(#11168674346665545885) said...

வாருங்கள் லக்கி லுக் அவர்களே. தேவதாஸ் காந்தி மற்றும் லட்சுமி திருமணத்தைப் பற்றி நான் என்னுடைய இந்தப் பதிவில் குறிப்பிட்டுள்ளேன். அதை பின்னூட்டங்களுடன் சேர்த்துப் பார்க்க: http://dondu.blogspot.com/2006/03/blog-post_19.html

அன்புடன்,
டோண்டு ராகவன்

லக்கிலுக் said...

நன்றி!

இதை உங்கள் பெயருக்கு Courtesy போட்டு கருத்துக் களத்தில் பகிர்ந்துக் கொள்கிறேன்....

dondu(#11168674346665545885) said...

You are welcome Luckylook. Once you have done so, give me the link to the post, so that I can see that.

Regards,
Dondu N.Raghavan

லக்கிலுக் said...

http://www.karuththu.com/forum/index.php?showtopic=1161

dondu(#11168674346665545885) said...

Thanks Luckylook.

Regards,
Dondu N.Raghavan

geethappriyan said...

டோன்டூவார் ஐயா,வணக்கம்
உங்களைப்பற்றி கேள்விப்பட்டிருந்தாலும்,இவ்வளவு நாள் சுட்டி கிடைக்காததால் பார்க்கமுடியவில்லை,எவாளவு படிக்க வேண்டியிருக்கிறது உங்கள் தளத்தில்.
இந்த கட்டுரை படித்து கலங்கி விட்டேன் .நாங்கள் எல்லாம் பெரிசுகள் தானே என்று அலட்சியப்படுத்தும் பெரியவர்கள் வாழ்வில் எவ்வளவு தாண்டி வந்திருக்கின்றனர் ?
நாங்கள் போக வேண்டிய தூரம் ரொம்ப இருக்கிறது.அடக்கமும் உங்களுக்கு சிறப்போட்டுகிறது.
தங்கள் கட்டுரைகள் அனுபவம் "proffessionalism" மற்றும் maturity கொண்டிருக்கிறது.
இனி அடிக்கடி வந்து படிப்பேன்.btw இங்கு நானும் ஒரு பிலிப்ஸ் கியர் சைக்கிள் வைத்திருக்கிறேன்.அப்படி ஒரு நண்பன்,முன்பு ஆபீஸ் கராமா என்னும் இடத்திலும் என் வீடு தேரா என்னும் இடத்திலும் இருந்தமையால் தினமும் அப்படி பயன்படுத்துவேன்,இது எனக்கு கிட்டத்தட்ட 600 மணி நேர காத்திருத்தலையும், சுமார் 12000 இந்திய ரூபாய்களையும் (ஒரு வருடம்)சேமித்து தந்தது,இப்போது சார்ஜா வந்ததால் (அபீஸ் அடுத்த பில்டிங்)சைக்கிள் ஓட்ட முடிவதில்லை.
நல்ல கட்டுரை.நன்றிகள்
கார்த்திகேயன்
அமீரகம்.

dondu(#11168674346665545885) said...

நன்றி கார்த்திகேயன்.
அதனால் என்ன இப்போது கூட சார்ஜாவுக்குள் எல்லா இடங்களுகும் சைக்கிளிலேயே போகலாமே. ஏதோ சுற்றுப்புறச் சூழலுக்கு நம்மால் இயன்ற பங்களிப்பு.

அன்புடன்,
டோண்டு ராகவன்

 

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது