5/23/2008

டோண்டு பதில்கள் - 23.5.2008

அனானி: (16.05.2008 காலை 10.54-க்கு கேட்டவர்)
1. வெளிநாடுகளில் கடன்வாங்கி அந்தப் பணத்தில் இந்திய அரசாங்கம், இந்தியர்களின் உழைப்பையும் அறிவையும் பயன்படுத்தி பல முன்னேற்றங்களைச் செய்துவருகின்றது. அவை இந்தியர்களின் சாதனையாகவே கருதப்படுகின்றன. உதாரணமாக, இஸ்ரோ தயாரிக்கும் ராக்கெட் தொழில்நுட்பங்கள். வெளிநாட்டுப்பணம் இல்லாவிட்டால் இவர்களால் இதைச் செய்திருக்க முடியாது. இருப்பினும், வெளிநாட்டு மூலதனத்தை வைத்துக்கொண்டு இந்தியர்கள் தயாரிக்கும் பொருட்களுக்கான பெருமை வெளிநாட்டினருக்கு போய்ச் சேரவேண்டுமா?
பதில்: யார்தான் கடன் வாங்கவில்லை? அமெரிக்காவையே எடுத்து கொள்ளுங்கள். கடன் வாங்கித்தான் தனது நாட்டையே நடத்துகிறது. ஆகவே இந்தியா இந்த விஷயத்துக்கு கடன் வாங்குவதில் தவறில்லை. அந்தக் கடனை ஒழுங்கான விஷயத்துக்கு செலவு செய்வது முக்கியம். அதைத்தான் இஸ்ரோ செய்கிறது. அவர்களுக்கு முழு பாராட்டுகள்.

2. இஸ்லாமிய, கம்யூனிஸ, ஆபிரகாமிய தீவிரவாதிகள் மிகத் தெளிவாக தாங்கள் இந்தியத் தீவிரவாதிகள் என்று சொல்லிவருகிறார்கள். ஆனால், இந்தியாவில் எப்போது குண்டு வெடித்தாலும் இது வெளிநாடுகளால் நடத்தப்படுவது என்று மீடியாக்கள், அரசியல்வாதிகள், அரசாங்கம் சொல்லிவருகின்றன. தீவிரவாதங்கள் இந்தியர்களால்தான் நடத்தப்படுகின்றது என்பதை இவர்கள் ஏன் மறைக்கவேண்டும்?
பதில்: யாரும் மறைப்பதில்லையே. இந்தியத் தீவிரவாதிகள் 90 விழுக்காட்டுக்கும் மேல் அயல் நாட்டு சதிக்காரர்களின் அல்லக்கைகள்.

3. கடந்த பத்து ஆண்டுகளில் இருபத்தி இரண்டு குண்டுவெடிப்புகள் நடந்துவிட்டன. இந்த சூழ்நிலையில் இருந்து நீங்களும், உங்களது குடும்பத்தினரும், அன்பர்களும் விடுபட்டு பாதுகாப்பாக இருக்கமுடியும் என்று நம்புகிறீர்களா?
பதில்: வாழ்க்கையின் நிலையாமையே அதுதான். நெருநல் உளனொருவன் இன்றில்லை என்னும் பெருமை உடைத்து இவ்வுலகு என்பது எல்லோருக்கும் தெரிந்ததுதானே. மேலும் தீவிரவாத சூழ்நிலை உலகின் கிட்டத்தட்ட எல்லா நாடுகளிலும்தான் உள்ளன. மரணம் எப்போது வேண்டுமானாலும் வரட்டும். இருக்கும் ஒவ்வொரு கணத்தையும் அணுஅணுவாக ரசித்து வாழ்வதுதான் புத்திசாலித்தனம்.


அரசன்:
1. சூப்பர் ஸ்டார் ரஜினி நடித்த படங்களில் தங்களுக்கு பிடித்த படம் எது? விளக்குக
பதில்: சந்திரமுகி. அதுவும் அந்த கடைசி சீன் உள்ளத்தைக் கொள்ளை கொண்டது. களிதெலுங்கில் ரா ரா சரசுக்கு ராரா என்ற பாடலில் காதலியின் ஏக்கம் மிக அழகாகக் காட்டப்பட்டிருந்தது. அதே போல ரஜனி ஏற்ற பாத்திரம் தனது உயிரையும் பயணம் வைத்து செயல்பட்ட அந்தக் காட்சி கண்ணுக்குள்ளேயே நிற்கிறது. வினீத் மட்டும் லேசுப்பட்டவரா என்ன? அனாயாசமான அவரது நடன அசைவுகள் உள்ளத்தைக் கொள்ளை கொள்ளுகின்றன.

2. பிரபாகரன் மறைவுக்கு பின்னர் ஈழ விடுதலை போராட்டம் தொய்வு அடைந்து விடுமா?
பதில்: ஈழ விடுதலைக்கு இந்தியா ஆதரவு தந்த நிலையில் அதை அனாவசியமாக கெடுத்து கொண்ட பிரபாகரனின் செயல் முட்டாள்தனமானது. இப்போது மிகக் குழப்பமான நிலை நிலவுகிறது. நாட்டை விட்டு வெளியேறிய ஈழமக்களது துயரம் மகத்தானது. ஆனால் பிரபாகரன் போன்றவர்களிடம்தான் அவர்களுக்கு விமோசனம் என்ற நிலைப்பாடு சரியானதாகப் படவில்லை.

3. கலைஞர் கருணாநிதிக்கு பிறகு திமுக உடையும் வாய்ப்பு உள்ளதா?
பதில்: தி.மு.கா வில் வாரிசுகளுக்கு பஞ்சம் இல்லை. அதே சமயம் உட்கட்சி ஜனநாயகமும் லேது என்ற நிலை வந்துவிட்ட நிலையில் எது வேண்டுமானாலும் நடக்கலாம்.

4. ஜெயலலிதாவிற்க்கு பிறகு அதிமுக என்ன ஆகும்?
பதில்: திமுகாவுக்கு எதிர் நிலை அதிமுகாவில். வாரிசு என்று யாரும் அடையாளம் காட்டப்படவில்லை. ஜெயலலிதா தான் எப்போதும் இருக்கப் போவதாக எண்ணியிருக்க வேண்டும், அல்லது தானே இல்லை என ஆகிவிட்ட நிலையில் அதிமுகாவுக்கு என்ன ஆனால் என்ன என்ற எண்ணம் அவருக்கு வந்திருக்க வேண்டும்.

5. ஈழப் போராட்டத்தில் இந்து ராம் நிலை என்ன? அவர் நிலை சரியா?
பதில்: ராம் பற்றி இந்த உரலில் நன்றாக தந்திருக்கிறார்கள், படியுங்கள். அவரது நிலை அவருக்கு. அது சரியா என்று கூறும் அளவுக்கு எனக்கு இந்த விஷயத்தில் நான் படித்ததைத் தவிர அதிகம் தெரிந்திராதவன். ஆகவே அவர் நிலை சரியா என்ற கேள்விக்கு என்னிடம் பதில் இல்லை.


அனானி (17.05.2008 அன்று காலை 08.34-க்கு கேட்டவர்):
1. துக்ளக் சோ பார்வையில் "உத்தப்பபுரம்" சுவர் விவகாரம் வேறு கோணத்தில் சொல்லப்பட்டுள்ளது. ஹிந்து நாளிதழ்கூட தகவலை தவறான புகைப்படத்துடன் வேறுமாதிரி பிரசுரித்ததாக (மின்வேலி பாதுகாப்புச் சுவர்) எழுதியுள்ளார் (துக்ளக் dated 21-05-2008). அந்த சுவர் பற்றி பல புதுத் தகவல்கள் தந்துள்ளார். உங்கள் கருத்து என்ன?
பதில்: எனது கருத்தை நான் எனது பதிவில் கூறிவிட்டேன். பிறகுதான் துக்ளக்கின் நிலையைப் பார்த்தேன். அவர்கள் சம்பந்தப்பட்ட இடத்துக்கு நேரடியாகச் சென்றுள்ளார்கள். அங்குள்ளவர்களுடன் பேசியுள்ளார்கள். உதாரணத்துக்கு சுவற்றில் மின்கம்பி பொருத்தவில்லை எனக சிலர் அவர்களிடம் கூறியுள்ளார்கள். அவ்வளவுதான். துக்ளக் இந்த பிரச்சினையை மைக்ரோ அளவிலதான் பார்க்கிறது என நினைக்கிறேன். ஆனால் தமிழகத்தில் இம்மாதிரி பல இடங்களில் தலித்துகளுக்கு பாதுகாப்பு இல்லை என்ற விசனத்துக்குரிய நிலைமைதான் இருக்கிறது.

2. தமிழக முதல்வர் மெல்லிய அணுகுமுறைக்கு அவரது பாசம்தான் (பிள்ளைமார் சமுகம் மீது)காரணமா? (அநேகமாக பிள்ளைமார் சமுகத்தில் பல உட்பிரிவுகள் உட்பட கழகத்தின் தீவிர ஆதரவாளர்கள்தான்).
பதில்: வேறு என்ன காரணம் இருக்க முடியும்? அவரும் சரி பெரியாரும் சரி, தலித்துகள் மற்றும் பார்ப்பனரல்லாத உயர்சாதியினரிடையே மோதல் வந்தால் அனுதாபம் பின்னவரிடமே உள்ளது. கீழ்வெண்மணியில் தலித்துகள் உயிருடன் எரிக்கப்பட்ட விவகாரத்தில் பெரியார் ஒரு விளக்கெண்ணெய் விளக்கம் கூறியது இதனால்தான்.
அவர் கூறியது என்ன என்பதைப் பார்ப்போமா? அதற்கு இந்தப் பதிவுக்கு போக வேண்டும்.
//கேள்வி: கீழ்வெண்மணியில் விவசாயிகள் தீயிட்டுக் கொளுத்தப்பட்ட போது பெரியார் கண்டு கொள்ளவில்லை என்று ஒரு பிரச்சாரம் நடை பெறுகிறதே?
பதில்: அக்கொடுமை நடந்த மறுநாள் விட்டு மறுநாள் (28-12-1968) தந்தை பெரியார் ஒரு நீண்ட அறிக்கையினை வெளியிட்டுள்ளார்கள்.
"கடைசி நடவடிக்கையாக நேற்று முன் தினம் தற்காப்புக்காக ஓடி ஒரு வீட்டிற்குள் ஒளிந்து கொண்ட ஆண், பெண், குழந்தைகள் உள்பட 42 பேர்கள் பதுங்கிக் கொண்ட வீட்டை பூட்டிக் கொளுத்தி, 42 பேரும் கருகிச் சாம்பலாக்கப்பட்டிருக்கிறார்கள். இந்தக் கொடுமைகளையும் இது போன்ற அராஜகங்களையும் சட்ட விரோதங்களையும் அடக்கிட ஆட்சிகளால் முடியவில்லை. இந்தியாவை ஆள இந்தியருக்கு தகுதியில்லை. இதற்காக நம் நாட்டை நாம்தான் ஆள வேண்டும் என்று கருதத் தேவையில்லை. அதற்காக அந்நியர் ஆண்டாலும் பரவாயில்லை" என்று எழுதி இருக்கின்றாரே - உண்மை இவ்வாறு இருக்க புழுதி வாரித் தூற்றுவோர் பற்றி நாம் ஏன் கவலைப்பட வேண்டும்
(திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்களின் பதில் - விடுதலை ஞாயிறு மலர் 11.2.2006)//

3. இல்லை (உயர் சாதிப்பிரிவினர் மீது)மேலும் கலைஞர் அவர்களின் அணுகு முறையில் இது நல்ல ஒரு மாற்றமா? (தாங்கள் ஒத்துக்கொள்ளமாட்டீர்களே!)
பதில்: மாற்றமாவது புடலங்காயாவது. ப்யூர் ஓட்டு வேட்டை சுவாமி.

4. வால்பையன் அவர்கள் ஆதரவுதரும் online trading ( உலகத்தின் பொருளாதாரத்தை உலுக்கும்) சாதகபாதங்களை துக்ளக் திரு எஸ்.குருமீர்த்தி அவர்கள் கட்டுரையை படித்தீர்களா? உங்கள் கருத்து யாது?
பதில்: உலகமயமாக்கல் பற்றிய எனது சிந்தனைகளைப் பார்க்கவும். மற்றபடி குருமூர்த்தி அவர்கள் ஆன்லைன் வர்த்தகத்தைப் பற்றி எழுதிய கருத்துகள் கவனத்துக்குரியவையே.

5. மத்திய அரசு ரயில்வே துறையில் மட்டும் தனியார் துறையில் உள்ளது போல் வசதிப்பெருக்கம்,நுகர்வோர் நலம் பேணுதல் எப்படி சாத்தியமாகிறது? அங்கு நடைபெறும் கட்டிட மாற்றங்கள் (தரை, கூரை, இடவசதிகள்....)மிகவும் தரமான போற்றுதலுக்கு உகந்த முறையில் நடை பெறுகிறதே? வழக்கமாக "hc/lq" (Highest commission lowest quotation)
தாரக மந்திரம் (அரசுத் துறையை சிரழித்த அணுகுண்டு)அங்கே கடைபிடிக்கப் படவில்லையா? அல்லது லல்லு அவர்கள் அதிகாரிகளுக்கு கொடுத்த முழுச் சுதந்திரம் காரணமா?

பதில்: லல்லு அவர்கள் மொத்தமான தனது நிலைப்பாட்டை கூறி அதிகாரிகளை அதன் செயலாக்கத்துக்கு பொறுப்பாக்கினார். அதை செய்ய அவர்களுக்கு பவர் தந்தார். அதே சமயம் அதை சரியாக பிரயோகிக்காது ஆட்டம்போட்டால் சங்குதான் என்பதையும் தெளிவாக்கினார்.

6. லல்லு அவர்கள் பாரத்தின் பிரதம அமைச்சராக மாறினால் எல்லா அரசுத்துரைகளும் (குறிப்பாக பொதுத்துறை நிறுவனங்கள்) புதுப்பிறவி எடுத்து எதிர்காலம் என்னவாகும் என்ற பயத்தில் இருக்கும் உழியர்களின் மனக் கலக்கம் மறையுமா.( அரசு மற்றும் உயர் அதிகாரிகளின் தவறான கொள்கை முடிவுகளால் அழிவின் விளிம்பில் பல பொதுத்துறை (உதாரணத்துக்கு-/ITI(TELEPHONE)-OOTY PHOTO FILM INDUSTRY.....) நிறுவனங்கள் உள்ளதாக செய்திகள் சொல்லுகின்றன.)
பதில்: எதை வேண்டுமானாலும் செய்யலாம். மனதுதான் வேண்டும். மோடி குஜராத்தில் செய்யவில்லையா. அவர் செய்ததை நான் இங்கு குறிப்பிட்டுள்ளேன்.


அனானி (18.05.2008, காலை 6.03-க்கு கேள்வி கேட்டவர்):
1. கூட்டணிக் கட்சி அமைசர்கள்(முதலில் டி.அர். பாலு அவர்கள்,இப்போது அன்புமணி அவர்கள்) செய்யும் தவறுகளை காங்கிரஸ் தலைவர்களின் சமாளிப்பு பற்றி தங்கள் கருத்து யாது?
பதில்: வெட்கம் கெட்ட பதவி ஆசை தவிர வேறு என்ன காரணம் இருக்க முடியும்?

2. அரசின் கையிலுள்ள அதிகார பவரை வைத்துக் கொண்டு அரசின் துறைகளை
முடக்கி தனியாருக்கு தாரை வார்ப்பது போன்ற "வல்லமைத்தனம்" கடவுளுக்கே அடுக்குமா?

பதில்: வியாபாரம் செய்வது அரசின் வேலை இல்லை என்பதை ஐம்பதுகளிலேயே மாமனிதர் ராஜாஜி கூறினார். அதை அப்போதே ஏற்றிருந்தால் நம் நாடு இவ்வளவு பின்தங்கியிருந்திராது.

3. அரசுத்துறையை.நலிவடைய செய்து பின் அத்துறையின் கடல் போன்ற சொத்துக்களை book value க்குவாங்கும் (market value வைவிட 10 ல் ஒரு பங்கு மதிப்பு) போக்கை உங்ளை போன்ற கடவுள் பக்தியுள்ளவர்கள் வன்மையாக கண்டிக்க வேண்டாமா? [51 % பங்குகளை மிக சொற்ப (பங்கு விலை குறைக்கவோ கூட்டவோ இவர்களுக்கு (இந்தியாவின் பங்கு வணிபத்தில்)சர்வ சாதாரணம்)) விலைக்கு வாங்கி owner ஆகும் "வல்லமை"]
பதில்: சொத்தை வெறுமனே வைத்து கொண்டு என்ன செய்வது? நாக்கை வழிக்க வேண்டியதுதான். மூலதனத் தொகையைப் போல பலமடங்குகள் விழுங்கிய வெள்ளை யானையாக செயல்பட்ட அரசுத் துறைகளால் நாட்டுக்கு எவ்வளவு நட்டம்? இந்த நிலை இந்தியாவில் மட்டும் இல்லை. சமீபத்தில் 1979-ல் பதவிக்கு வந்த மார்க்கரெட் தாச்சர் அம்மையார் இங்கிலாந்தில் சந்தித்த நிலையும் அதுவே. பல அரசு நிறுவனங்கள் வெள்ளை யானைகளாக இருந்து பணத்தை முழுங்கின. தாட்சண்யமே இன்றி ஒவ்வொன்றாக தனியார் மயமாக்கினார் அவர். மக்களும் அவரை ஆதரித்து எண்பதுகள் முழுக்க பிரதமராக இருந்து ஒரு ரிகார்டையே படைத்தார். நம் தேசத்திலும் அவரைப் போன்ற தலைவர்கள் தேவை. இந்த விஷயத்தில் லாலு அவர்களும் மோடி அவர்களும் தத்தம் இடத்தில் சரியாகவே செயல் படுகின்றனர்.

4. வறுமை கோட்டுக்கு கீழே வாழும் சுமார் 60 கோடி பேர்களும் கடவுளின் பிள்ளைகள் தானே.அவர்களுக்கு கொடுக்கவேண்டிய கல்வி,மருத்துவ உதவி,காப்பீட்டு உதவி,தங்கும் இட வசதி,உண்ண உணவு(விலைஏற்றம்) எல்லாம் கானல் நீராய் மாறி வருகிறதே.இது நல்லதற்கா?
பதில்: நல்லதற்கில்லைதான்.

5. தவறான முறையில் பணம் குவித்தவர்கள்(பெரும் லஞ்சம் வாங்கிய அரசு ஊழியர்கள்,அரசியல் தலைவர்கள்,ஹர்சத் மேத்தா போன்ற பங்குவர்த்தக மோசடிப் பேர்வழிகள்,உணவுப் பொருட்களை பதுக்கி கொள்ளை லாபம் அடித்தவர்கள்,கடத்தலில் கொடிகட்டி பறந்தவர்கள்,கள்ள சாராயம்,போலி மருந்து,அரசின் சொத்துகளை வளைத்து போட்டு புது தொழில் அதிபர்களாக வலம் வந்தவர்கள்.......etc..) இந்தியாவில் உள்ள சட்ட ஓட்டைகளை பயன் படுத்தி சுதந்திரமாக வலம் வருகிறார்களே இது தர்மமா?
பதில்: இது ஒரு விஷச்சுற்று. அநியாய முறையில் பணம் சம்பாதிப்பது, அதை நிலை நிறுத்திக் கொள்ள அதே அனியாய முறையில் அதே பணத்தை உபயோகிப்பது. நிலைமை சிக்கல்தான்.

6.தவறான முறையில் பணம் சேர்த்தால் தவறாமல் துன்பம் வரும் என்பது உண்மையாகுமா?
பதில்: கண்டிப்பாக வரும் அல்லது வரவேண்டும் என்பதே எனது பதில். இது பற்றி கவியரசு கண்ணதாசனின் 'அர்த்தமுள்ள இந்து மதம்' அழகாக குறிப்பிடுகிறது.

7. ஆன்மீகத் திருப்பணிகளுக்கு அள்ளிக் கொடுத்துவிட்டால் தப்பிக்காலாமெனும் எண்ணம் என்னாவாகும்?
பதில்: அது மனித இனம் நாகரிகம் பெற ஆரம்பித்ததுமே தொடங்கி விட்டது. எந்த மதத்தினரும் இதற்கு விலக்கில்லை.

8. எல்லோரும் எல்லாமே பெறவேண்டும். இங்கு இல்லாமை இல்லாத நிலை வேண்டும். இது இங்கே சாத்தியம் போல் தெரியவில்லயே?
பதில்: அவரவர் சாப்பாட்டுக்கு அவரவர்தான் உழைக்க வேண்டும். அதுதான் சாத்தியம். உழைக்காத சோம்பேறிகளுக்கு இல்லாமைதான் நிச்சயம்.

9. எல்லோரும் யாரை வேண்டுமென்றாலும் ஏமாற்றலாம், ஆனால் கடவுளை ஏமாற்றமுடியுமா?
பதில்: ஏமாற்றத்தானே, முடியும். ஆனால் கடவுளை அல்ல, நம்மை நாமே.

10."உப்பைத் தின்றவர்கள் தண்ணி குடிக்கவேண்டும் " என்று நம் முன்னோர்கள் சொன்னது என்னவாகும்?
பதில்: அது எக்காலத்துக்கும் பொருந்தும் உண்மையல்லவா?


அனானி (18.05.2008 இரவு 9.38-க்கு கேள்விகள் கேட்டவர்):
1. ஜனதாக் கட்சி தலைவர் சுப்பிரமணிய சாமி அவர்கள் புதிதாகத் தொடங்கியிருக்கும் "தொலைபேசி பேச்சை ஒட்டுக்கேட்டு வெளியுடும் மகாமாத்யம்' பற்றிய தங்கள் கருத்து யாது?
ஆட்சியில் இருப்பவர்கள் ஒட்டுக் கேட்பது உலகளாவியது. சாணக்யர் காலத்திலிருந்தே நடந்து வந்திருக்கிறது. இனிமேலும் நடக்கும்.

2. அடுத்து மாட்டப் போவது யார் என்பது அ.தி.மு.க தலைமையின் கண் அசைவுக்கு காத்திருப்பதாக செய்திகள் கூறுகிறதே. எதிர் கட்சியாய் இதே போல் செய்யும் போது (எதிர் வழக்குகள்)அவருக்கு செய்த செயல்களை எப்படி மறந்தார்?
பதில்: அரசியலில் சீக்கிர மறதிகள் அதிகம்தானே

3. பா.ம.க வின் தலைவரின் போக்கில் திடீர் மாற்றம் கூட்டணி மாற்றங்கள்
எற்படுவதற்கு கட்டியம் கூறுவது போல் உள்ளதே?

அஇஅதிமுகாவுடன் கூட்டு வரும் என நினைக்கிறீர்களா? அரசியல்லே இதெல்லாம் சகஜமப்பா.

4. தமிழக முதல்வரின் மனவலிக்கு அவரும் ஒரு காரணமா?
தமிழக முதல்வருக்கு நிம்மதி அளிப்பது எதிர்க்கட்சித் தலைவரின் வேலை இல்லை.

5. பாரளுமன்ற தேர்தலுக்குப் பின் அரசியல் மாற்றம்( ஆட்சி மாற்றம்-மூன்றாம் அணி அல்லது பா.ஜ.கா.)நடை பெறுமா?சாத்யமா?
பா.ஜ.க. வரும் வாய்ப்பு உள்ளது, ஆனால் அதற்கு அக்கட்சி இன்னும் உழைக்க வேண்டும். மூன்றாம் அணிக்கு வாய்ப்பு இல்லை.

6. கர்நாடக தேர்தல் கருத்துக்கணிப்புகள் (இரண்டு கட்டங்கள்)இதை உறுதி செய்வது போல் உள்ளதே ( B.J.Pக்கு ஆதரவாக-பத்திரிக்கையாளர் துக்ளக் சோ அவர்களின் கணிப்பும்)
இன்று கேட்ட நிலவரப்படி பா.ஜ.க. தனிப்பெரும் கட்சியாக வரும் வாய்ப்பு உண்டு, ஆனால் பெரும்பான்மை? அது கஷ்டம்தான்.

7. தமிழகத்திலும் மீண்டும் அ.தி.மு.க,பா.ஜ.க,ம.தி.மு.க,விஜயகாந் கட்சி,சரத் கட்சி(ஒரு வேளை ரஜினி சாரின் ரசிகர்கள்) கூட்டணி அமைவது போல் இட்டுகட்டி எழுதப் படுகிறதே இது சாத்யமா?
தமிழகத்தில் எல்லா கட்சியினருமே கூட்டணிகளுக்கு தயார்தான். பேரம் படிந்து விட்டால் எது வேண்டுமானாலும் எப்போது வேண்டுமானாலும் நடக்கும்.

8. கலைஞர் அவர்களின் ஆட்சியில் பெரிய குறை மக்களுக்கு இல்லாவிட்டாலும்,உணவு மற்றும் சிமெண்ட்,மணல்,இரும்பு ஆகியவைகளின் உச்ச விலையுயர்வு அள்ளிக் கொடுத்த இலவசங்களை இல்லாமல் ஆக்கிவிடும் போலுள்ளதே
இலவசம்தான் பெரிய குறை. அதனால் திருப்தியடைந்தவர்கள் கட்சிக்காரர்கள் மட்டுமே. மற்றவர்கள் அதிருப்தியாளர்களே.

9. அவரது சொந்த பந்தங்களும் மற்றும் சில அரசியல் சகாக்களும் அவரது மன அமைதியை குலைத்து அவரது பிறந்த நாள் கொண்டாட்டங்கள் நடை பெறுமா என வினா வலம் வருகிறதே?
பிறந்த நாள் வேண்டாம் என இவர் தன் கடமைக்கு கூறிக் கொள்வார். இல்லை கொண்டாடுவோம் என கட்சிக்காரர்கள் சொல்வார்கள். (அப்படி சொல்லாதவருக்கு சங்குதான் என்பது எழுதப்படாத விதி).

10. தமிழினத் தலைவர், பாரம்பரியம் மிக்க தேசியத் தலைவர்கள் போல் 'குணவாளானாக' "யார்க்கும் இனியனாய்', "யார்க்கும் தோழனாய்", "யார்க்கும் வழிகாட்டியாய்" "யார்க்கும் தலைவனாய்" மாறி கொண்டிருக்கும் நல்ல மன மாற்றத்தை நடை பெறும் செயல்கள் தடுத்து விடும் போல் உள்ளதே?
பதில்: யாரைப் பற்றி அவ்வாறு கூறுகிறீர்கள்? கருணாநிதியைப் பற்றியா?


அருண்:
1. அரசியல்: கருணாநிதி, தயாநிதி மாறன் சண்டை ஓயுமா? கருணாநிதிக்கு பிறகு மாறன் கட்சியை கைபற்ற முயலுவாரா?
பதில்: அரசியலில் எதுவும் நடக்கலாம்.

2. கலை: திரைப்படங்களுக்கு மொழி மாற்றம் செய்யும் எண்ணம் உள்ளதா?
பதில்: அதற்கான வேலை நல்ல சம்பளத்துடன் வந்தால் செய்வதில் என்ன பிரச்சினை இருக்க முடியும்? ஆனால் இம்மாதிரி வேலைகளுக்கு கட்டை சம்பளம்தான். நான் படப்பிடிப்புக்கு சென்று வந்த என் அனுபவங்களைப் பற்றி எழுதியுள்ளேனே.

3. இலக்கியம்: படிப்பதற்கும், வாசிப்பதற்கும் உள்ள வித்தியாசம் என்ன? நிறைய இலக்கிய எழுத்தாளர்கள் புத்தகம் வாசிப்பதாக சொல்கிறார்களே?
பதில்: நான் புரிந்து கொண்டவரை ஒன்று மேலோட்டமாகப் பார்ப்பது இன்னொன்று ஆழ்ந்து கவனத்துடன் அவதானிப்பது. எது எதை குறிக்கும் என்பதை இராமகி ஐயா போன்றவர்கள்தான் சொல்ல வேண்டும்.


அனானி (20.05.2008 மாலை 8.07-க்கு கேள்வி கேட்டவர்):
1. ப்ளாக்குகளில் நேரம் செலவழிக்கும் இச்சையை வேலை நேரத்தில் எப்படி கட்டுப்படுத்துகிறீர்கள்?
இதில் என்ன கஷ்டம்? மொழிபெயர்ப்பு வேலை என்று வந்து விட்டால் அதை செய்யும் இச்சை எல்லாவற்றையுமே மிஞ்சிவிடுமே. அப்போது பிளாக்காவது ஒன்றாவது? உண்மை கூறப்போனால் எனது வேலை மேல் உள்ள மோகத்தை மீறி என்னை கோவில்களுக்கு இழுத்து செல்ல ஒவ்வொரு முறையும் என் வீட்டம்மா படாத பாடுபடுகிறார். ஆக, உங்கள் கேள்வி சற்றே மாற்றி கேட்கப்படவேண்டிய ஒன்றாகும். அதாவது, 'அவ்வப்போது வேலை இச்சையை மீறி எப்படி ஓய்வு எடுத்து ஊர்களுக்கு செல்கிறீர்கள்' என்று கேட்க வேண்டியிருக்கும்.


அடுத்த வாரம் சந்திப்போமா?

அன்புடன்,
டோண்டு ராகவன்

15 comments:

Anonymous said...

1.உறவினரை ஊழல் குற்றச்சாட்டிலிருந்து தப்பிக்க உதவி செய்ய முயன்ற டாக்டர் பூங்கோதை ராஜிநாமா செய்திருக்கிறார். அது ஏற்கப்பட்டிருக்கிறது, சரி. ஆனால் தனது சொந்த குடும்ப நிறுவனத்திற்கு உதவ, தானே நேரில் வற்புறுத்தியதாக நாடாளுமன்றத்தில் ஒப்புக்கொண்டிருக்கும் மத்திய கப்பல், தரைவழிப் போக்குவரத்துத்துறை அமைச்சர் பாலு மட்டும் அமைச்சராகத் தொடர்கிறாரே, அதுமட்டும் ஏன்?

2.தா.கிருட்டிணன் கொலை வழக்கில் மு.க. அழகிரி விடுதலை செய்யப்பட்டுவிட்டார். ஒரு துணை மேயர் இன்னும் பன்னிருவர் என அனைவருமே ஒட்டுமொத்தமாக விடுதலை செய்யப்பட்டுவிட்டனர்.இது பற்றிய உங்கள் கருத்து என்ன?

Anonymous said...

1.என் பிறந்த நாளைக் கொண்டாட வேண்டாம் என அதற்கு ஒருமாதம் முன்பே கருணாநிதி ஜல்லியடித்தது ஏன்? பின் அன்பழகன் போன்ற அடிப்பொடிகளை விட்டு வேண்டுகோள் டிராமா போட்டபின் இப்போது பெரியமனது பண்ணி ஒத்துக் கொண்டிருக்கும் கருணாநிதியின் பெருந்தன்மை பற்றி?
2.இந்த அளவுக்கு இறங்கிய அன்பழகனின் நிலை பற்றி?

dondu(#11168674346665545885) said...

நீங்கள் கேட்ட கேள்விகள் டோண்டு பதில்கள் - 30.5.2008 பதிவுக்கான வரைவுக்குள் முதல் நான்கு கேள்விகளாக சென்று விட்டன. நன்றி கோமணகிருஷ்ணன் அவர்களே.

அன்புடன்,
டோண்டு ராகவன்

Anonymous said...

1) எரிந்துபோன SSLC விடைத்தாள்களுக்கு என்ன மதிப்பெண்கள் கொடுத்தால் சரியாக் இருக்கும் என நினைக்கிறீர்கள்

2)பெட்ரோல் டீசல் விலையேற்றிய தீரவேண்டிய கட்டாயத்தில் அரசு, ஆனால் அதை கடுமையாக எதிர்க்கும் கம்யூனிஸ்டுகள் சூழ்நிலையில் இருப்பர் என்னதான் செய்ய இயலும் அரசால்?

3) கேள்வி பதில் படுசீரியசாக உள்ளது மொக்கைகளையும் அதில் நுழைத்து சிறிது கலகல உண்டாக்குங்கள்

Anonymous said...

//அவரவர் சாப்பாட்டுக்கு அவரவர்தான் உழைக்க வேண்டும். அதுதான் சாத்தியம். உழைக்காத சோம்பேறிகளுக்கு இல்லாமைதான் நிச்சயம். //

இந்தியாவில் வறுமைக்கோட்டுக்கு கீழே இருப்பதாக்க் கூறப்படும் 60 கோடிபேரும் சோம்பேறிகளா?

dondu(#11168674346665545885) said...

//3) கேள்வி பதில் படுசீரியசாக உள்ளது மொக்கைகளையும் அதில் நுழைத்து சிறிது கலகல உண்டாக்குங்கள்//

கண்டிப்பாக. இக்கேள்வியை அடுத்த பதில்கள் பதிவின் வரைவுக்கு கொண்டு சென்று பதிலும் போட்டு விட்டேன். விதிவிலக்காக அவ்விடையையே இங்கேயும் வெளியிடுகிறேன்:
"நான் ரூம் போட்டா யோசித்து தீர்மானம் போட்டேன், எல்லாமே சீரியஸ் கேள்விகளாகத்தான் வேண்டுமென்று? கேட்ட கேள்விகளுக்கு ஏற்பத்தானே பதில் சொல்ல முடியும்? மொக்கைகளை கேட்டால்தான் பதிலிலும் மொக்கை போட முடியும். நானே மொக்கை கேள்விகள் கேட்டு, அதற்கான பதில்கள் நானே மொக்கையாக போடுவதற்கு நான் ஒன்றும் காண்டு கஜேந்திரன் இல்லையே. நான் டோண்டு ராகவன்".

இப்போது வரைவில் உள்ள பதிலில் இல்லாதது: அரசு கேள்வி பதிலைத்தான் எனக்கு ரோல் மாடலாக வைத்து கொண்டுள்ளேன். சமயத்தில் அசைவ ஜோக்குகளும் சொல்லப்படும் சூழ்நிலைக்கு பொருத்தமாக இருந்தால்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

Anonymous said...

//// 3. கடந்த பத்து ஆண்டுகளில் இருபத்தி இரண்டு குண்டுவெடிப்புகள் நடந்துவிட்டன. இந்த சூழ்நிலையில் இருந்து நீங்களும், உங்களது குடும்பத்தினரும், அன்பர்களும் விடுபட்டு பாதுகாப்பாக இருக்கமுடியும் என்று நம்புகிறீர்களா?

பதில்: வாழ்க்கையின் நிலையாமையே அதுதான். நெருநல் உளனொருவன் இன்றில்லை என்னும் பெருமை உடைத்து இவ்வுலகு என்பது எல்லோருக்கும் தெரிந்ததுதானே. மேலும் தீவிரவாத சூழ்நிலை உலகின் கிட்டத்தட்ட எல்லா நாடுகளிலும்தான் உள்ளன. மரணம் எப்போது வேண்டுமானாலும் வரட்டும். இருக்கும் ஒவ்வொரு கணத்தையும் அணுஅணுவாக ரசித்து வாழ்வதுதான் புத்திசாலித்தனம் ///

என்ன ஒரு தான்தோன்றித்தனமான பொருப்பில்லாத பதில். தீவிரவாதத்தால் இந்தியா இப்படி தாக்குதலுக்கு உள்ளாகும்போது நீங்கள் தத்துவம் பேசி "அணுஅணுவாய் வாழ்க்கையை ரசிக்கச்சொல்வது" அபத்தம்.

ஒன்றுமில்லாத அப்பாவிகள் தெருவில் சிதறுண்டு மடிவது உங்களுக்கு வாழ்க்கையின் நிலையாமையைக் காட்டுகிறதா! அடடா!

ஓரிரு கணங்களில் குடும்பங்கள் சிதைந்து வாழ்க்கை மூளியாவது தங்களுக்கு தென்படவில்லையா? தன் குழந்தைகளுடன் விளையாட்டு சாமான் வாங்க பஜாருக்குப் போன ஜெய்ப்பூர் முஸ்லிம் தாய் தன் குழந்தைகளுடன் ஒரு கணத்தில் மரித்ததை இன்னும் அதிர்ச்சியிலிருந்து மீளாத அந்த குடும்பத்தலைவனும், அவனின் எஞ்சிய சின்னஞ்சிறு குழந்தையின் கதறலும் தங்களுக்கு "அணுஅணுவாக ரசிக்கும்" அறிவுரையை வழங்கத்தோன்றுகிறதா? இதற்கான மூல காரணங்களை அறியாமல் அரசாங்கம் இந்த கொலையாளிகளுக்கு இன்னும் பாட்டை போட்டுக்கொடுத்துக்கொண்டிருப்பதை நீங்கள் "வாழ்க்கையின் நிலையாமை" என்று தத்துவம் பேசுகிறீர்களே!

இணையத்தில் யார் வேண்டுமானாலும் எதை வேண்டுமானாலும் எழுதலாம். ஆனால், அந்த எழுத்தின் அபத்தம் அவர்களை வெட்கமடையச்செய்யும்.

dondu(#11168674346665545885) said...

என்ன தான்தோன்றித்தனத்தை கண்டுவிட்டீர்கள்?

வாழ்க்கை அநித்யமானது என்பது அவரவர் பிறந்தபோதே ஆரம்பமாகி விடுகிறது. என்னவோ நான் மட்டும் எல்லாவற்றிலிருந்தும் தப்பிப்பேன் என்ற ரேஞ்சுக்கு பேசினால் என்ன அர்த்தம்?

//தன் குழந்தைகளுடன் விளையாட்டு சாமான் வாங்க பஜாருக்குப் போன ஜெய்ப்பூர் முஸ்லிம் தாய் தன் குழந்தைகளுடன் ஒரு கணத்தில் மரித்ததை இன்னும் அதிர்ச்சியிலிருந்து மீளாத அந்த குடும்பத்தலைவனும், அவனின் எஞ்சிய சின்னஞ்சிறு குழந்தையின் கதறலும்..//
அதைப் பார்த்து குண்டு வைத்த அந்த சக முஸ்லிம் தீவிரவாதிதான் கதற வேண்டும். அது என்ன சாவில் முஸ்லிம் சாவு, ஹிந்து சாவு என பிரிக்கிறீர்கள்? இன்னிக்கு செத்தா நாளைக்குப் பால் என்று பேரறிஞர் விவேக் கூறவில்லையா? :)))

ரொம்பவும் அலட்டுகிறீர்கள். அடங்குங்கள். இதைத்தான் ஆங்கிலத்தில் playing to the gallery என்பார்கள்.

வேறு யாரிடமாவது போய் இந்த அழுகைப் பேச்சை வைத்து கொள்ளுங்கள். உங்களைப் போன்றவர்கள் தவிர்க்கப்பட வேண்டிய நபர்கள். பார்க்க: http://dondu.blogspot.com/2006/11/blog-post.html

அன்புடன்,
டோண்டு ராகவன்

Anonymous said...

டோண்டு ஐயா,

/// அதைப் பார்த்து குண்டு வைத்த அந்த சக முஸ்லிம் தீவிரவாதிதான் கதற வேண்டும். அது என்ன சாவில் முஸ்லிம் சாவு, ஹிந்து சாவு என பிரிக்கிறீர்கள்? இன்னிக்கு செத்தா நாளைக்குப் பால் என்று பேரறிஞர் விவேக் கூறவில்லையா? :))) ////

நீங்கள் எழுதியிருப்பதை படித்துப் பார்க்கிறேன்.

/// 1. அதைப் பார்த்து குண்டு வைத்த அந்த சக முஸ்லிம் தீவிரவாதிதான் கதற வேண்டும்.///

"சக முஸ்லீம் தீவிரவாதி" - இதற்கு என்ன பொருள் ஐயா?

பொதுவாக நான் கண்டவரை நீங்கள் இப்படி தவறுவது இல்லையே. ஒருவேளை நீங்கள் விளக்கமாகச் சொல்ல விரும்பியதை சுருக்கமாகச் சொல்லி இருப்பதால் இந்த குழப்பம் ஏற்பட்டுள்ளது என நினைக்கிறேன்.

ஒரு பெண் முஸ்லீமாக இருந்தால் அவர் தீவிரவாதியாகத்தான் இருக்கவேண்டும் என்கிற உங்கள் ஆழ்மன வெளிப்பாடாக இதை படிப்பவர்கள் எண்ணும் வாய்ப்பு இருக்கிறது.

உங்களுடைய இந்த பதிலையும், தன்னை ஒரு ஹிந்துத்வவாதி என்று வெளிப்படையாகச் சொல்லிக்கொள்ளும் ஒருவரின் பதிலையும் ஒப்பிட்டுப் பார்க்கிறேன். அவருடைய பதிலை இங்கே நான் இடுகிறேன்:

ஜடாயு எண்ணங்கள்

---------------------------------------------------------------------------


True Indian said...
We bloody Indians are meant for killed like stray dogs. the socalled Politicians will lick muslim's ass to get few thousand votes and they will protect them from this terrorist act. They will be continuosly protected in the name of minorities though they are the culprits of all the terrorist act in this holy land. They will eat, earn and live comfortably in India and will kill fellow Indians. because they are not Indians. they are Muslims. Their religion tells them to kill non followers. For that religious instruction they will follow like a fools and kill others. When the last muslims in India is killed then only India will get its glory back.

12:58 PM


ஜடாயு said...
True Indian, cool down.

I disagree with your branding all Indian Muslims as culprits. Thats why I use the words Jihadi & Islamist in my writings.

What we should condemn is the Jihad doctrine and ideology of Islamic religion that makes people commit such acts of violence. Just like Hindus denounced an evil like unthouchability from their religion, Indian Mulsims should denounce and throw away that part of the Koran that exorts them to kill kafirs in the name of religion.

1:58 PM

-----------------------------------------------------------------

பாருங்கள், ஒருவர் இஸ்லாமியராக இருப்பதாலேயே தீவிரவாதி என்று சொல்லக்கூடாது என்று தெளிவாக சொல்கிறது ஹிந்துத்வவாதம். இந்த ஹிந்துத்வவாதிகளைத்தான் பலர் தமிழ்நாட்டில் தவறாக எழுதியும், பேசியும் வருகிறார்கள்.

ஆர்.எஸ்.எஸ்ஸில் பல இஸ்லாமியர்கள் இருப்பதற்கான காரணம் இப்போதுதான் புரிகிறது.


/// 2. என்ன சாவில் முஸ்லிம் சாவு, ஹிந்து சாவு என பிரிக்கிறீர்கள்? ///

ஐயா, அந்த அனானி அப்படி பிரித்ததாகத் தெரியவில்லை. அந்த இஸ்லாமியப் பெண்மணியின் கதறல் சில செய்திகளில் வெளிவந்து பிரபலமானது. அதனால் அதை அவர் அப்படியே வெளிப்படுத்தியிருக்கிறார்.

//// இன்னிக்கு செத்தா நாளைக்குப் பால் என்று பேரறிஞர் விவேக் கூறவில்லையா? ////

உண்மையில் வேதனையாக இருக்கிறது நீங்கள் எழுதியதை படிப்பதற்கு.

இந்த சொலவடை நல்ல மரணத்திற்கு மட்டுமே சொல்லப்படுவது. அமைதியான, இயற்கையான, நல்ல மரணங்களும் உண்டு. துக்கம் அதிகமாக இருக்காது. இவற்றை ஹிந்துக்கள் கொண்டாடுவார்கள். அந்தச் சூழலுக்கு மட்டுமே தெய்வீகத் தமிழர்களால் பயன்படுத்திய ஒரு சொலவடையை நீங்கள் துர்மரணத்திற்கு பொருத்தியிருப்பது முறையா?

இங்கனம் நல்ல முறையில் இருந்தவர்களின் பிரிவையே நம்மால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. ஆண்டுகள் ஓடினாலும், அவர்கள் நமக்காகச் செய்த தியாகங்கள், அவர்களுடன் கழிந்த நமது பொழுதுகள் நமது கண்களை குளமாக்குகின்றன.

அப்படி இருக்கும்போது, இந்த கொடூர மரணங்கள் ஒருவர் மனத்தில் ஏற்படுத்தும் வலி மிக ஆழமானது.

இப்படிப்பட்ட கொடூரமான மரணங்களைக் கண்டு வருந்துபவர்கள் நீங்கள் என்பதே இப்போதும் எனது எண்ணம். பாலஸ்தீனிய தீவிரவாதிகளால் துன்புறுத்தபடும் மக்களுக்காக வருந்துகிற நீங்கள், இந்திய மக்களின் கொடூர மரணங்கள் கண்டு வருந்தாமல் இருப்பீர்கள் என்று தோன்றவில்லை.

"இன்னிக்கு செத்தா நாளைக்குப் பால்"

ஜெய்ப்பூரிலும், கோயம்புத்தூரிலும், மதுரையிலும், தென்காசியிலும் தங்களது உயிரை விட்டவர்களின் மரணத்தை இவ்வளவு எளிதாக "இன்னிக்கு செத்தா நாளைக்குப் பால்" என்று மறந்துவிடமுடியுமா?

இன்றைக்கு செத்தா நாளைக்குப் பால் என்று வசனம் பேசுவது தீவிரவாதிகளின் கொடூர செயலைவிட அதிக வேதனை தருகிறது.

அல்லது, இதுபோன்ற மரணங்கள் அடிக்கடி நிகழ்வதால் அது குறித்த வேதனை பழகிய உணர்வாகிப்போய், இப்படி வெறும் அங்கலாய்ப்பாக உங்களிடம் இருந்து வெளிப்படுகிறதா?

கண்டிப்பாக நீங்கள் சொல்லி இருப்பது, நமக்கு நடக்காதவரை நல்லதுதான் என்கிற உணர்விலிருந்து எழுந்திருக்காது என்றே நம்புகிறேன்.

ஆபாசமாகவோ, தனிமனித தக்குதலோ இல்லாமல் இருக்கும் இந்த கமெண்டை வெளியிடுவீர்கள் என்பதும் எனது மற்றொரு நம்பிக்கை.

dondu(#11168674346665545885) said...

//"சக முஸ்லீம் தீவிரவாதி" - இதற்கு என்ன பொருள் ஐயா?//
சக என்று குறித்துள்ளது முஸ்லீமுக்கு மட்டுமே தீவிரவாதிக்கு இல்லை. இப்படி வேண்டுமானாலும் எழுதியிருக்கலாம்: "தீவிரவாதியான அந்த சக முஸ்லிம்தான் கதற வேண்டும்". மொழியில் டீல் செய்யும் நான் இன்னும் ஜாக்கிரதையாக இருந்திருக்க வேண்டும் என்பதை ஒத்து கொள்கிறேன். எடுத்து காட்டியதற்கு நன்றி.

மற்ரப்படி இன்னிக்கு செத்தால் நாளைக்கு பால் என்று சொன்னது எனது சாவுக்குத்தான். ஆகவே நான் எழுதியதில் அந்த வகையில் தவறில்லைதான்.

உலகே அநித்தியமாக இருக்கையில் அதையே வைத்து இடிந்து போகக்கூடாது என்பதை வலியுறுத்தவே அவ்வாறு சொன்னேன்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

Anonymous said...

//ஆர்.எஸ்.எஸ்ஸில் பல இஸ்லாமியர்கள் இருப்பதற்கான காரணம் இப்போதுதான் புரிகிறது//

Really??!! Is it true!!??

Vikram

Anonymous said...

1.பாராட்டுக்கள் டோண்டு சாருக்கு.எப்படி சார் கர்நாடக தேர்தல் முடிவை மிகச் சரியாக கணித்தீர்கள்.அப்படியே அடுத்த மத்திய அரசு,தமிழக அரசு பற்றி?
2.அடுத்த முதல்வர் அழகிரியா?,ஸ்டாலினா?,கனிமொழியா?,ஆர்காட்டாரா?,தயாநிதியா?,ரஜினியா?(ஜெயலலிதா,வை.கோ,சரத்,விஜய்காந்த இவர்கள் ரேசில் பின்தங்குவது போல் உள்ளது)
3.மீண்டும் தமாரையுடன்,ஆதவன் கைகோர்க்கும் போலுள்ளதே?
4.ராஜஸ்தானில் நடைபெறும் மலைவாழ் பட்டியலில் சேர நடைபெறும் போராட்டம் நியாம்தான?
5.இதேபோல் எல்லா மாநிலங்களிலும் போரட்டம் ஆரம்பிப்பதற்கு இது வழி ஏற்படுத்திவிட்டால்,நாம் அடைந்துள்ள பொருளாதார முன்னேற்றம் என்னவாகும்(போரட்டக் காரர்கள் பொருளாதரத் சேதம் தான் சிறந்த வழி என காரியம் மாற்றுவதால்)
6.ஆயில் கம்பெனிகள் நஷ்டம் என்றதும் அந்த துறையின் அமைச்சரின்
வேகமான நடவடிக்கைகள்,பிற பொதுத்துறை நிறுவனங்களின் சீர்கெட்ட நிதிநிலமை பற்றி (உதாரணம்:ஊட்டி பிலிம் தொழிற்சாலை)அந்த அந்த அமைச்சர்கள் பாராமுகமாய் உள்ளனரே?
7.அரசுத்துறைகளில் உயர் தொழில்நுட்ப பயிற்ச்சி முடித்த கையோடு தனியார் துறைகளுக்கு மாறும்
உழியர்களின் செயல் நம்பிக்கை துரோகம் அல்லவா?(குன்னூர் அரசு தடுப்பூசி நிறுவனம் to தனியாரின் நிறுவனம்(பெரியவர்களின் ஆதரவுடன்)-பத்திரிக்கை செய்தி)
8.கச்ச எண்ணெய் 35 டாலரை இருக்கும் போது வசுலித்த 5 % கலால் வரியை ,135 டாலாராய் உள்ள போதும் அதே அளவு வேண்டும் என வாதிடும் நிதிஅமைச்சரின் கூற்று சரியா?
9.அரசே இப்படி இருக்கும்போது இரும்பு,சிமெண்ட் வணிகர்கள் எப்படி தங்கள் லாபத்தை குறைப்பார்கள்?
10.ஓய்வில்லாச் சூரியனாய்
ஓங்குபுகழ் சோழனாய்
அகவை 86என்றாலும்
அறிவிற் சிறந்தும்
இலக்கியச் செம்மலாயும்
இனிய மொழித்திறமையுடனும்
ஆட்சியாற்றும் திறமையுடனும்
ஆர்பரிக்கும் ஆற்றலுடன்

வாழும் வள்ளுவர்,சோழனின் மறு மதிப்பு,பொதுடமைப் பூங்கா என அனைவராலும் பாரட்டப்படும் தமிழினத் தலைவரின் 86ம் பிறந்த நாள் கொண்டாட்டங்கள் பற்றிய தங்கள் விமர்சனம் யாது?

dondu(#11168674346665545885) said...

10 கேல்விகளுக்கும் பதில் அடுத்த வாரப்பதிவில்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

Anonymous said...

ஏதோ பெரிய கொள்கைகளுடனும்,சித்தாந்தங்களுடனும்,புரட்சிகருத்துகளுடனும்,ஏழை எளியவர் நலம் காக்கும் பாதுகாவலன் போல் தங்களி சித்த்ரிக்கும் இந்த திவிரவாதிகளின் போரட்டம் மற்றும் திவிரவாதாச் செயல்களில் உயிர்ப் பலியாவது ஏதும் அறியா சாதாரண மக்களே.இது எந்த வகையில் நியாம்(தனக்கு இழைக்கப்பட்ட அநியாம் கண்டு தான் தான் தீவிர வாதி ஆனதாக சொல்லும் தீவிரவாதிகள்)
தங்களின் அறிவையும் ஆற்றலையும்(மெத்த படித்த இளைஞர்கள்) நாட்டு நலனுக்கும் பயன்படச் செய்யும் நாளும் வருமா?

Anonymous said...

1.நாகரிக உலகில் வாலிப ஆண்கள்,பெண்கள் ஆகியோரின் ஆடைகள்,அலங்காரங்கள்,பாஸ்ட் புட் முதலியவை மிக (பண்பாடு,கலாச்சரம் தாண்டி)அதிகமாய் கொண்டே செல்கிறதே இது எதில் கொண்டு போய் விடும்?
2.மேலை நாடுகள் கூட நமது பாரத இந்து கலாச்சாரம் தான் நல்லது என் முடிவெடுத்து நமது யோகக் கலை,காய்கறி உனவு முறை,arranged marriage,ஆகியவற்றில் ஈடுபாடு காட்டும் போது இங்கெ செய்வது சரியா?
3.இந்தியா கலாச்சார சிரழிவின் விளிம்பை நோக்கி செல்கிறதா?
4.மென்பொருள் துறையில் கொட்டும் பெரும் பணம் செய்யும் புண்ணியம் இதுவா?
5பெரியவர்கள் சொல்வார்களே "எதை இழந்தாலும் இழக்கலாம் நமது பண்பாட்டை இழக்கக்கூடாது".
அந்த மபெரும் தவறை செய்துவிடும் போல் தெரிகிறதே?

 

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது