8/25/2008

நச்சுப் பொய்கை யட்சனின் கேள்விகளும் யுதிஷ்டிரர் அளித்த மறுமொழிகளும்

12 ஆண்டுகால வனவாசம் கிட்டத்தட்ட முடிந்து பாண்டவர்கள் ஓராண்டு மறைந்த வாசம் செய்ய வேண்டிய காலம் நெருங்கி விட்டது. ஒரு நாள் காட்டில் அலைந்து கொண்டிருந்த சமயம் எல்லோருக்கும் தாகம் ஏற்பட, தருமர் நகுலனை அருகில் ஏதேனும் நீர்நிலை தென்படுகிறதா என்பதைப் பார்த்து வரும்படி ஏவுகிறார். நகுலனும் அவ்வாறே செல்ல ஒரு பொய்கையைப் பார்க்கிறான். முதலில் தன் தாகம் தணித்து சகோதரர்களுக்கும் தண்ணீர் எடுக்கும் நோக்கத்துடன் பொய்கைக்குள் இறங்குகிறான். அப்போது "சாகசம் செய்யாதே நகுலா, எனது கேள்விகளுக்கு பதிலளிக்கவும்" என்று ஒரு அசரீரி கேட்கிறது. அதை அலட்சியம் செய்து தண்ணீரை அருந்த, அவன் நினைவிழந்து கரையில் வீழ்கிறான்.

நகுலனைக் காணாததால் சகாதேவனை தருமர் அனுப்ப அவனுக்கும் அப்பொய்கையருகில் அதே கதிதான். அதே போல அருச்சுனன் மற்றும் பீமனும் மயக்கமடைகின்றனர். இப்போது தருமரே செல்கிறார். அவரிடமும் அந்த அசரீரி எச்சரிக்கை செய்ய, அவரும் கேள்விகளுக்கு பதிலளிக்க சம்மதிக்கிறார்.

மகாபாரதத்தில் இந்தப் பகுதி மிக பிரசித்தம். யட்சனின் கேள்விகளுக்கு தருமர் அளித்த விடைகளில் வெளிப்படையாக ஒரு அர்த்தம் தெரியும். ஆனால் தத்துவார்த்த முறையில் ஆராய்ந்து பார்ப்பவர்களுக்கு அப்பதில்களில் புதைந்து கிடக்கும் பொருளும் தெரியும். ஆனால் அதை அறிய மிகுந்த பாண்டித்யம் தேவைப்படும். தன் போன்றவர்களுக்கு அது கிடையாது என சோ அவர்கள் தான் எழுதியுள்ள "மகாபாரதம் பேசுகிறது" என்னும் புத்தகத்தில் குறிப்பிடுகிறார். அதை படித்து இப்பதிவைப் போடும் டோண்டு ராகவன் மட்டும் எப்படி விதிவிலக்காக இருக்க முடியும்? ஆகவே நேரடி விளக்கங்கள் மட்டுமே இங்கே.

யட்சன்: எந்த மனிதன் துணை உள்ளவனாகிறான்?
தருமர்: தைரியமுள்ள மனிதன் துணை உள்ளவனாகிறான்.

யட்சன்: மனிதன் எவ்வாறு புத்திமானாகிறான்?
தருமர்: பெரியோர்களை அண்டுவதால் மனிதன் புத்திமானாகிறான்.

யட்சன்: பயிரிடுபவர்களுக்கு எது சிறந்தது?
பதில்: பயிரிடுபவர்களுக்கு மழை சிறந்தது.

யட்சன்: செல்வமுள்ளவனாக இருந்தாலும், அறிவாளியாக இருந்தாலும் எந்த மனிதன் வாழும்போதே உயிரற்றவனாக இருக்கிறான்?
தருமர்: தேவதைகள், விருந்தாளிகள், வேலைக்காரர்கள், முன்னோர்கள் - இவர்களுக்கு மரியாதையுடன் உணவு தராதவன்.

யட்சன்: தாங்கும் சக்தியில் பூமியை விட அதிக சக்தி வாய்ந்தது எது?
தருமர்: ஒரு தாயின் மனம்.

யட்சன்: ஒரு மனிதனுக்கு ஆகாயத்தை விட உயர்ந்தது எது?
தருமர்: அவனுடைய தந்தை.

யட்சன்: காற்றைக் காட்டிலும் வேகமானது எது?
தருமர்: மனிதனின் மனம்.

யட்சன்: புல்லைவிட அலட்சியமாக கருதிவிடத் தக்கது எது?
தருமர்: கவலை.

யட்சன்: தூங்கும்போது கண்களை மூடாமல் இருப்பது எது?
தெருமர்: மீன்.

யட்சன்: பிறந்தும் அசைவற்று இருப்பது எது?
தருமர்: முட்டை.

யட்சன்: தன்னுடைய வேகத்தினாலேயே வளர்வது எது?
தருமர்: நதி.

யட்சன்: தன் ஊரை விட்டுப் போகிறவனுக்கு நண்பன் யார்?
தருமர்: அவன் பெற்ற கல்வி.

யட்சன்: வீட்டில் இருப்பவனுக்கு தோழமை தருவது யார்?
தருமர்: அவன் மனைவி.

யட்சன்: நோயாளிக்கு நண்பன் யார்?
தருமர்: நல்ல வைத்தியன்.

யட்சன்: சாகப்போகிற நிலையில் இருப்பவனுக்கு யார் உற்ற தோழன்?
தருமர்: அவன் செய்கிற தருமம்.

யட்சன்:புகழ் எதில் நிலை பெற்றிருக்கிறது?
தருமர்: ஒரு மனிதன் செய்யும் தானத்தில் புகழ் நிலை பெறுகிறது.

யட்சன்: மனிதனின் சுகம் எதனால் நிலைபெறுகிறது?
பதில்: நல்லொழுக்கத்தின் மூலமாக.

யட்சன்: சொர்க்கத்தன்மை எதன் மூலம் நிலைபெறுகிறது?
தருமர்: சத்தியத்தைக் காப்பாற்றுவதன் மூலமாக.

யட்சன்: ஒரு மனிதன் பெறக்கூடிய லாபங்களுள் எது சிறந்தது?
தருமர்: நோயின்மை.

யட்சன்: ஒரு மனிதன் பெறக்கூடிய சுகங்களில் உயர்ந்தது எது?
தருமர்: மனத்திருப்தி.

யட்சன்: சிறந்த தருமம் எது?
தருமர்: அஹிம்சை

யட்சன்: எதை அடக்குவதன் மூலம் துயரத்தைத் தவிர்க்க முடியும்?
தருமர்: மனதை அடக்கினால் துயரம் வராது.

யட்சன்: எதை விடுவதன் மூலம் மனிதன் மற்றவர்களுடைய அன்புக்கு பாத்திரமாகிறான்?
தருமர்: கர்வத்தை விட்ட மனிதன் மற்றவற்களது அன்பைப் பெறுகிறான்.

யட்சன்: எதை விடுவதன் மூலம் மனிதன் துன்பத்தைத் தவிர்க்கிறான்?
தருமர்: கோபத்தை விட்ட மனிதனுக்குத் துன்பம் நேராது.

யட்சன்: எதை விடுகிற மனிதன் பொருள் உள்ளவன் எனப்படுகிறான்?
தருமர்: தர்ம விரோதமான ஆசைகளை விடுகிற மனிதனே, உண்மையில் பொருள் உள்ளவனாகிறான்.

யட்சன்: பிராமணர்களுக்குப் பொருள் கொடுப்பது எதற்காக?
தருமர்: தர்மத்திற்காக.

யட்சன்: நடன மற்றும் நாடகக்காரர்களுக்குப் பொருள் கொடுப்பதால் என்ன பயன்?
தருமர்: அவர்களுக்குச் செல்வம் கொடுப்பதால் பொருள் கிட்டும் என்பதே பலன்.

யட்சன்: வேலைக்காரர்களுக்கு எதற்காகப் பொருள் கொடுக்க வேண்டும்?
தருமர்: அவர்களை வசப்படுத்துவதற்காக.

யட்சன்: அரசர்களுக்குக் கொடுப்பது எதற்காக?
தருமர்: அவர்களிடமிருந்து பயமின்றி வாழ்வதற்காக.

யட்சன்: மனிதனால் வெல்ல முடியாத பகைவன் யார்?
தருமர்: கோபம்.

யட்சன்: முடிவே இல்லாத வியாதி எது?
தருமர்: பேராசை.

யட்சன்: எவன் சாது?
தருமர்: எல்லாப் பிராணிகளிடத்திலும் அன்புடன் இருப்பவன்.

யட்சன்: எது தைரியம்?
தருமர்: இந்திரியங்களை அடக்குவதே தைரியம்

யட்சன்: எது சிறந்த ஸ்நானம்?
தருமர்: மனதில் உள்ள அழுக்கைப் போக்குவதே உண்மையான ஸ்நானம்.

யட்சன்: எந்த மனிதன் பண்டிதனாகிறான்?
தருமர்: தர்மங்களை அறிந்து கடைபிடிப்பவனே பண்டிதன்.

யட்சன்: எவன் நாஸ்திகன், எவன் மூர்க்கன்?
தருமர்: நாஸ்திகனே மூர்க்கன்.

யட்சன்: எது டம்பம்?
தருமர்: தான் செய்யும் தர்மத்தை ஊரறியச் செய்வது டம்பம்.

யட்சன்: ஒன்றுக்கொன்று எதிரிடையான வழி முறைகள் கொண்ட அறம், பொருள், இன்பம் - ஆகியவை ஓரிடத்தில் சேர்வது என்பது எப்படி நடக்கும்?
தருமர்: அறமும், மனைவியும் இணைந்து செயல்படும்போது, அந்த இல்லத்தில் அறம், பொருள், இன்பம் மூன்றும் சேர்ந்து விடுகின்றன.

யட்சன்: எந்த மனிதன் அழிவற்ற நரகத்தை அடைவான்?
தருமர்: தானம் கொடுப்பதாகக் கூறிவிட்டு பிறகு இல்லை என்று சொல்பவன்; வேதம், தர்ம வழிச் செயல்கள், முன்னோர்களுக்கான சடங்குகள் இவற்றில் பொய் கூறுபவன்; செல்வம் இருந்தும் பிறர்க்குக் கொடாதவன் - ஆகியோர் அழிவற்ற நரகத்தை அடைவார்கள்.

யட்சன்: பிறப்பு, வேதம் ஓதுதல், தர்ம சாஸ்திரங்களைப் பற்றிய அறிவு, ஒழுக்கம் - இவற்றில் எதன் மூலம் பிராமணத்துவம் உண்டாகிறது?
தருமர்: பிராமணத்துவம் உண்டாவதற்குக் காரணம் பிறப்போ, தர்ம சாஸ்திர அறிவோ, வேதம் ஓதுதலோ அல்ல. ஒழுக்கம்தான் பிராமணத்துவத்திற்குக் காரணம். ஒழுக்கமற்றவன் எவனாக இருந்தாலும் அவன் பாழானவனே! கல்வியும், சாஸ்திர அறிவும் மட்டுமே பயனளிப்பவை என்று நினைத்து, அதை மட்டும் பற்றி நிற்பவர்கள் மூடர்களே! தான் கற்ற சாத்திரப்படி நடப்பவனே பண்டிதன். ஒழுக்கத்துடன் நடந்து கொண்டு, யாகத்தில் பற்றுள்ளனவனாக, இந்திரியங்களை அடக்கியவன் எவனோ அவனே பிராமணன்.

யட்சன்: இனிமையாகப் பேசுகிறவன் எதைப் பெறுகிறான்?
தருமர்: மற்றவர்களின் அன்பைப் பெறுகிறான்.

யட்சன்: ஆலோசித்த பிறகே காரியத்தைச் செய்பவன் எதை அடைகிறான்?
தருமர்: வெற்றியை ஆடைகிறான்.

யட்சன்: தர்மத்தில் பற்றுள்ளனவனுக்கு என்ன கிட்டுகிறது?
தருமர்: அவனுக்கு நல்ல கதி கிடைக்கிறது.

யட்சன்: எவன் சந்தோஷத்தை அடைகிறான்?
தருமர்: கடனில்லாதனாகவும், பிழைப்பதற்காக ஊரை விட்டு ஊர் செல்ல வேண்டிய நிலையில் இல்லாதவனாகவும், தனக்கு வேண்டிய சிறிதளவு உணவாகிலும் வீட்டிலேயே கிடைக்கப் பெறுகிறவனாகவும் எவன் இருக்கிறானோ அவன் சந்தோஷமடைகிறான்.

யட்சன்: எது தினந்தோறும் நடக்கும் நிகழ்ச்சி?
தருமர்: உயிரினங்கள் எமலோகம் சென்று கொண்டே இருப்பது.

யட்சன்: எது ஆச்சரியம்?
தருமர்: உயிரினங்கள் தினந்தோறும் எமலோகம் சென்று கொண்டேயிருப்பதைப் பார்த்தும்கூட, மனிதர்கள் தங்களுக்கு மரணமில்லாதது போல் நினைத்ட்துக் கொண்டு நல்ல கதியை அடைய முயற்சிக்காமலேயே வாழ்நாளைக் கழித்து விடுகிறார்களே - அதுதான் ஆச்சரியம்.

யட்சன்: பின்பற்ற வேண்டிய வழி எது?
தருமர்: வேதங்கள், ஸ்மிருதிகளைக் கற்றறிந்து பின்பற்ற வேண்டிய வழியைக் கண்டு கொள்ளலாம் என்றால், அது அவ்வளவு எளிதாக முடிகிற முயற்சி அல்ல. ஆழ்ந்து கவனிக்காமல் மேலோட்டமாக இவற்றை அறிபவனுக்கு, அவை முரண்பட்டவை போலவே தெரியும். ரிஷிகளின் கருத்துப்படி நடக்கலாம் என்று நினைத்தாலோ, அவர்கள் பற்பல வகைகளில் இந்தப் பிரச்சினையை அணுகுகிறார்கள். ஆக, தர்மத்தை அறிவது சிக்கலாகவே இருந்து வருகிறது. ஆகையால் நமது பெரியோர்கள் சென்ற வழியே நாம் பின்பற்ற வேண்டிய வழி.

யட்சன்: எவன் புருஷன்?
தருமர்: விருப்பு - வெறுப்பு; சுகம் - துக்கம்; நடந்தது - நடக்க இருப்பது; ஆகிய இரட்டை நிலைகள் எவனுக்கு சரி சமமாக இருக்கின்றனவோ, அவனே புருஷன் எனக் கூறப்படுகிறான்.

யட்சன்: எவன் செல்வம் மிகுந்தவன்?
தருமர்: ஆசையற்று, அமைதியான மனமும் பெற்று, தெளிவான அறிவும் கொண்டு, எல்லாப் பொருள்களையும் சமமாகப் பார்க்கும் மனிதன் எவனோ, அவனே செல்வம் நிறைந்தவன்.

இப்படி தெருமபுத்திரர் கூறிய பதில்களால் திருப்தியுற்ற யட்சன் "யுதிஷ்டிரா! உன் பதில்கள் தெளிவாக உள்ளன. அதற்குப் பரிசாக உன் தம்பிமார்களில் ஒருவரை மட்டும் உயிர்ப்பிக்கிறேன். அவன் யார் என்பது உனது விருப்பத்தைப் பொறுத்தது" என்றான்.

தருமர், "நெடிய ஆச்சாமரம் போல வீழ்ந்து கிடக்கும் அழகன் நகுலன் உயிர்பெறட்டும்" எனக் கூறினார். யட்சன் ஆச்சரியமடைந்து, பீமன் அருச்சுனன் ஆகியோரை விட்டு விட்டாயே, உனது அரசைப் பெற அவர்கள் முயற்சி இன்றியமையாததல்லவா"? எனக் கேட்டான்.

தருமர், "யட்சனே, தருமம்தான் முக்கியம். அதற்குத்தான் இறுதி வெற்றி பீமனோ அருச்சுனனனோ அதற்கு முன்னால் ஒன்றுமில்லை. எனது தாயார் குந்தியின் புதல்வனாகிய நான் உயிருடன் உள்ளேன். எனது சிறிய அன்னை மாத்ரியின் பிள்ளை ஒருவனும் பிழைப்பதே தருமம் என" உறுதியாக மறுமொழி கூறினார்.

தருமரது இந்த சொற்களினால் மகிழ்ந்த யட்சன் எல்லோரையுமே உயிர்ப்பித்தான். பிறகு தந்தான் தரும தேவதை என்றும், தனது அம்சமாகிய யுதிஷ்டிரனை பார்த்து சோதிக்கவே வந்ததாகவும் கூறி ஆசியளித்து மறைந்தான்.

மகாபாரதத்தின் வனபர்ர்வத்தின் இக்கடைசி நிகழ்ச்சிகளைப் பற்றி படிப்பவர்களுக்கு நல்ல ஆயுள் கிட்டும் பிறன் பொருளை அபகரிக்கும் அதர்மச் செயல்களில் அவர்தம் மனம் செல்லாது என மகாபாரதம் கூறுகிறது.

நன்றி: சோ அவர்கள் எழுதிய "மகாபாரதம் பேசுகிறது" மற்றும் ராஜாஜி அவர்கள் எழுதிய "வியாசர் விருந்து".

அன்புடன்,
டோண்டு ராகவன்

35 comments:

Anonymous said...

good one.

வால்பையன் said...

//யட்சன்: பிராமணர்களுக்குப் பொருள் கொடுப்பது எதற்காக?
தருமர்: தர்மத்திற்காக.//

பிராமணர்களுக்கு கொடுப்பது தர்மமானால்!
தர்மம் பெறுபவர்களெல்லாம் பிராமணர்களா!

நோகாமல் நோம்பி கொண்டாட அன்று அவர்கள் எழுதி வைத்தது இன்று நடைமுறைக்கு சாத்திய படுமா

வால்பையன் said...

//யட்சன்: நடன மற்றும் நாடகக்காரர்களுக்குப் பொருள் கொடுப்பதால் என்ன பயன்?
தருமர்: அவர்களுக்குச் செல்வம் கொடுப்பதால் பொருள் கிட்டும் என்பதே பலன்.//

அவர்களுக்கு பொருள் கிட்டும்!
நமக்கு ரத்தக்கண்ணீர் இரண்டாம் பாகம் கிட்டும்

வால்பையன் said...

//யட்சன்: வேலைக்காரர்களுக்கு எதற்காகப் பொருள் கொடுக்க வேண்டும்?
தருமர்: அவர்களை வசப்படுத்துவதற்காக. //

என்ன ஒரு முதாலாளித்துவ சிந்தனை!
இது தருமன் சொன்னதா இல்லை சோ சொன்னதா

வால்பையன் said...

//யட்சன்: அரசர்களுக்குக் கொடுப்பது எதற்காக?
தருமர்: அவர்களிடமிருந்து பயமின்றி வாழ்வதற்காக.//

மீண்டும் அதே! வலியவனை அண்டி எளியவன் பிழைக்க வேண்டும் என்பதே!
தெய்வ கணம் பொருந்தியவர்களின் ஆசையா!?

வால்பையன் said...

//யட்சன்: எது தைரியம்?
தருமர்: இந்திரியங்களை அடக்குவதே தைரியம்//

புலனடக்கமா??

வால்பையன் said...

//யட்சன்: எது சிறந்த ஸ்நானம்?
தருமர்: மனதில் உள்ள அழுக்கைப் போக்குவதே உண்மையான ஸ்நானம்.//

அப்போ குளிக்கவே வேணாம்னு சொல்லுங்க

வால்பையன் said...

//யட்சன்: எவன் நாஸ்திகன், எவன் மூர்க்கன்?
தருமர்: நாஸ்திகனே மூர்க்கன்.//

அன்போடு கண்டிக்கிறேன்

வால்பையன் said...

//யட்சன்: எது டம்பம்?
தருமர்: தான் செய்யும் தர்மத்தை ஊரறியச் செய்வது டம்பம்.//

அதுசரி, அப்புறம் எப்படி தேர்தல்ல ஜெயிக்கிறது

வால்பையன் said...

//வேதம், தர்ம வழிச் செயல்கள், முன்னோர்களுக்கான சடங்குகள் இவற்றில் பொய் கூறுபவன்; //

அப்போ இத சொல்றவன் தான் அங்கே போவான்.
வேதமே உண்மையென்று நிரூபிக்கப்படாத போது
அவன் சொல்வது பொய் என்று சொல்வது எப்படி

வால்பையன் said...

//செல்வம் இருந்தும் பிறர்க்குக் கொடாதவன் - ஆகியோர் அழிவற்ற நரகத்தை அடைவார்கள்.//

அப்போ அரசியல்வாதிகளுக்கு நரகம் தானா!
கேட்டுங்க மக்களே! நாம எந்த கேள்வியும் கேக்க கூடாது!
அவுங்களுக்கு நரகம் தான் கிடைக்கும்,
(ஆனால் அங்கே எல்லாமும் கிடைக்கும் என்பது சொர்க்கத்தில் இருக்கும் நமக்கு தெரியாதே)

வால்பையன் said...

எனது நண்பர் கார்த்திக் அவரது வலையில் இதே கதையை சுஜாதா விஞ்ஞான சிறுகதைகள் புத்தகத்தில் எழுதியதை வலையேற்றி இருக்கிறார்.

Madhu Ramanujam said...

உங்க ஸ்டைல்ல சொல்லணும்னாஅ சமீபத்தில் 1990களில் ஆங்கிலத்தில் ஒரு பாடமாகப் படித்தது. நல்ல தமிழில் அதை இப்போது படிப்பது சுகமாய் இருந்தது ராகவன். நல்ல மொழி பெயர்ப்பு :-) !

dondu(#11168674346665545885) said...

//என்ன ஒரு முதாலாளித்துவ சிந்தனை!
இது தருமன் சொன்னதா இல்லை சோ சொன்னதா//
தருமர் சொன்னது.

//நல்ல மொழி பெயர்ப்பு :-) !//
பாராட்டு அப்படியே சோ அவர்களுக்கு போய் சேர வேண்டியது.

அன்புடன்,
டோண்டு ராகவன்

வஜ்ரா said...

//
யட்சன்: அரசர்களுக்குக் கொடுப்பது எதற்காக?
தருமர்: அவர்களிடமிருந்து பயமின்றி வாழ்வதற்காக.
//

இது தான் தருமன் சொன்னதா ?

எவர்களிடமிருந்து பயமின்றி வாழ்வதற்கு. ?

அந்த அரசனிடமிருந்தேவா ?

பாதுகாப்பாக வாழ்வதற்குத்தான் நாம் அரசுக்கு வரி செலுத்துகிறோம்.

பயமின்றி வாழ்வதற்கா, பாதுகாப்பாக வாழ்வதற்கா ?

Anonymous said...

When you people stop refering CHO.
Its only weaken your good points/effects,whenever you refer
CHO...

Please change a suitable Bramin boy instead CHO , why not kamal, balachander,rajaji,Blakrishna sastrigal (F/O Mouli) etc etc...

Please ignore CHO and finally
Dondu sir, - Please 'DROP THE DEAD DONKEY'.

Your friend
Sathappan

manikandan said...

வால்பையன் :- உங்களுக்கு எது சரி என்று படுகிறதோ, அதை எடுத்து கொள்ளுங்களேன்.

ஒரு சிறு விளக்கம் தர முயற்சிக்கிறேன்.

ஒரு வணிகனுக்கு நாம் பணம் கொடுப்பது, பொருள் வாங்குவதற்கே.

தங்களிடம் வேலை செய்யும் ஒருவனுக்கு பொருள் கொடுப்பது வேலை வாங்குவதற்கே.

நமது நாட்டை ஆள்பவருக்கு பொருள் கொடுப்பது, நம் பாதுகாப்புக்கு. நமக்கு பாதுகாப்பு இருந்தால் பயம் தானே agalum.

நாம் கொடுக்கும் பொருளினால் ஒரு பயனும் கிடைக்காத போது அது பிராமணனுக்கு கொடுப்பதாக ஆகிறது. இன்றைய சூழ்நிலையில் "மதர் தெரேசா" டிரஸ்ட் என்று வைத்துகொள்ளுங்களேன்.

வேதம் என்பது உண்மை என்று எதற்காக நிரூபிக்கப்பட வேண்டும் ? ஒரு வாதத்திற்கு வேதத்தை பெரியாரின் கொள்கைகள் என்று வைத்து கொள்ளுங்களேன். அவ்வாறு இருக்கும் பொழுது, அவரின் கொள்கையை நமது சுயநலத்துக்கு பயன்படுத்தாமல் வாழ முயல வேண்டும். அவ்வளவு தான்.

டோண்டு சார், தருமன் ஏன் ஒவ்வொருவராக யட்சனிடம் அனுப்பி வைக்கிறான் ? ஏன் அவனே செல்ல முயலவில்லை ? சகாதேவனுக்கு இந்த தத்துவம் புரியாமல் போனதற்கு காரணம் என்ன ? இதற்கான விளக்கம் தெரியுமா உங்களுக்கு ?

manikandan said...

//யட்சன்: எவன் நாஸ்திகன், எவன் மூர்க்கன்?
தருமர்: நாஸ்திகனே மூர்க்கன்.//

எனக்கு இதன் உள்ளர்த்தம் சுத்தமாக புரியவில்லை.

//வலியவனை அண்டி எளியவன் பிழைக்க வேண்டும் என்பதே//

யார் யாரை சார்ந்து இருக்கிறார்கள் ?
அரசன் எளியவனிடம் இருந்து வரும் செல்வதை சார்ந்து இருக்கிறான். அப்படி என்றால் யார் வலியவன் ? யார் எளியவன் ?

manikandan said...

//When you people stop refering CHO.
Its only weaken your good points/effects,whenever you refer
CHO...

Please change a suitable Bramin boy instead CHO , why not kamal, balachander,rajaji,Blakrishna sastrigal (F/O Mouli) etc etc...

Please ignore CHO and finally
Dondu sir, - Please 'DROP THE DEAD DONKEY'.//


சோவை விட்டாலும் "அவாள்" என்ற தற்காப்பு சொல் எங்கும் போய்விடாது. கம்யூனிஸ்ட் தலைவர் வரதராஜன் இதற்கு சான்று.

அடுத்தது டோண்டு சாரிடம் சோவை விட சொல்வது அபத்தம்.

manikandan said...

சுஜாதாவின் சிறுகதை கலக்கல்.

dondu(#11168674346665545885) said...

//சுஜாதாவின் சிறுகதை கலக்கல்.//
அவரது நவீன குசேலன் கதை இன்னும் கலக்கலோ கலக்கல். அது பற்றி பிறகு. கூந்தலுக்கு இயற்கைமணம் உண்டா என்ற கேள்விக்கான எனது பதிலைப் பாருங்கள்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

dondu(#11168674346665545885) said...

//டோண்டு சார், தருமன் ஏன் ஒவ்வொருவராக யட்சனிடம் அனுப்பி வைக்கிறான் ? ஏன் அவனே செல்ல முயலவில்லை ? சகாதேவனுக்கு இந்த தத்துவம் புரியாமல் போனதற்கு காரணம் என்ன ? இதற்கான விளக்கம் தெரியுமா உங்களுக்கு?//
என்னதான் வனவாசத்தில் இருந்தாலும் தருமர் என்பவர் அவர் சகோதரர்களின் கண்ணுக்கு இன்னும் அரசரே. அரசரே சில இடங்களில் முந்திரிக்கொட்டை போலச் செல்லக்கூடாது. அதனல் பல உபத்திரவங்கள் வரலாம்.

மகாபாரதத்தில் கவனித்தால் ஒவ்வொரு பாத்திரத்துக்கும் ஒவ்வொரு கட்டத்தில் முக்கியத்துவம் வரும். பகாசுரனை கொன்றது, ஹிடிம்பனைக் கொன்றது ஆகிய தருணங்களில் பீமன் மேல் அழுத்தம் தரப்பட்டிருக்கும். அது போல வேறு உதாரணங்களையும் மற்ற பாத்திரங்களுக்கு கூறலாம்.

ஆக, இத்தருணத்தில் முக்கியத்துவம் தருமனுக்கே.

அன்புடன்,
டோண்டு ராகவன்

SurveySan said...

எனக்குத் தெரிஞ்ச 55+ நீங்கதான் :)

வாசிக்க:
ஐம்பத்தைந்து வயதைத் தாண்டியவர்களே

dondu(#11168674346665545885) said...

//எனக்குத் தெரிஞ்ச 55+ நீங்கதான் :)//

உங்களுக்கு தெரிஞ்சது அவ்வளவுதான். :))))
புது டோண்டுவுக்கு வயது ஆறுதான். 55+ அல்ல. வயது ஆவது பற்றிய உணர்வு எனக்கு லேட்டாகத்தான் வந்தது. இன்னமும் தினமும் 15 மணி நேரத்துக்கு மேல் கணினியில் அமர்ந்து மொழிபெயர்ப்பு செய்யும் அளவுக்கு தெம்பு உள்ள நான் மனத்தளவில் 25 வயது வாலிபனே. ஆளை விடுங்கள் சாமி.

அன்புடன்,
டோண்டு ராகவன்,
62 வயது வாலிபன்

Anonymous said...

//
நாம் கொடுக்கும் பொருளினால் ஒரு பயனும் கிடைக்காத போது அது பிராமணனுக்கு கொடுப்பதாக ஆகிறது. இன்றைய சூழ்நிலையில் "மதர் தெரேசா" டிரஸ்ட் என்று வைத்துகொள்ளுங்களேன்.
//

மதர் டெரசா டிரஸ்டுக்குக் கொடுக்கப்படும் பொருளினால் எந்தப்பயனும் இல்லையா ?

வால்பையன் said...

//தங்களிடம் வேலை செய்யும் ஒருவனுக்கு பொருள் கொடுப்பது வேலை வாங்குவதற்கே. //

இதுதான் முதலாளித்துவம்,
ஒரு மனிதனுக்கு பணம் கொடுப்பது வேலை செய்ததற்காக என்று ஏன் உங்களால் சொல்ல முடியவில்லை.

//நமது நாட்டை ஆள்பவருக்கு பொருள் கொடுப்பது, நம் பாதுகாப்புக்கு. நமக்கு பாதுகாப்பு இருந்தால் பயம் தானே agalum.//

வரி என்பது தேவையானது தான்,
அது அடிப்படை வசதிகளை ஏற்படுத்தி கொடுக்க!
"பாதுக்காப்பு இருந்தால் பயம் அகலாது"
"பயம் இருந்தால் தான் பாதுக்காப்பு தேவைப்படும்"

//வேதம் என்பது உண்மை என்று எதற்காக நிரூபிக்கப்பட வேண்டும் ?//

பொதுவான கருத்துகள் மட்டும் அதில் இருந்தால் அது விவாதத்துக்கு எடுத்து கொள்ள படமாட்டாது. ஆனால் பிராமணம் எல்லோரையும் விட்ட உயர்ந்தவன் என்று சொல்கிறதே வேதம், அதை தான் ஏன் என்று கேட்கிறேன்

manikandan said...

மரியோ பூசோ

******மதர் டெரசா டிரஸ்டுக்குக் கொடுக்கப்படும் பொருளினால் எந்தப்பயனும் இல்லையா ******

அமாம் !!!

manikandan said...

*******பிராமணம் எல்லோரையும் விட்ட உயர்ந்தவன் என்று சொல்கிறதே வேதம், அதை தான் ஏன் என்று கேட்கிறேன்*******

அப்படி மட்டும் தான் சொல்கிறதா ?

பிராமணம் என்றால் என்ன என்றும் சொல்லி இருக்கிறதே.

இவையில் உள்ள எந்த கருத்தும், எந்த காலத்துக்கும், ஏற்றதாக (முழுமையாக) இருந்திருக்க வாய்ப்புக்கள் அரிதே.

Anonymous said...

//

இதுதான் முதலாளித்துவம்,
ஒரு மனிதனுக்கு பணம் கொடுப்பது வேலை செய்ததற்காக என்று ஏன் உங்களால் சொல்ல முடியவில்லை.
//

போர்த்திக்கொண்டு படுத்தாலும், படுத்துக்கொண்டு போர்த்திகிட்டாலும் ஒண்ணு தானே...

வேலை செய்வதற்காகப் பணம் கொடுத்தாலும் வேலை வாங்குவதற்காகப் பணம் கொடுத்தாலும் முதலாளித்துவம் தான்.

வேலை செய்யாமல் பணம் வாங்கவேண்டும், என்று நினைப்பதும், பணம் கொடுக்காவிட்டால் கூட்டாளிகளைச் சேர்த்துக்கொண்டு மிரட்டுவதும் தான் கம்யூனிசம்.

யட்சன்... said...

டிஸ்க்ளெய்மர்:

திரு.தருமரிடம் மேற்படி கேள்விகளை நான் எப்போதும் கேட்டதில்லை, இதற்கு முன்னர் அவரை நான் பார்த்ததும் இல்லை என்பதை இந்த இடத்தில் சுட்டிக் காட்டிட விரும்புகிறேன்.

என் பெயரில் வேறு யாரும் விளையாடியிருக்கலாமென கருதுகிறேன்.

என்ன கொடுமையிது :-)

வால்பையன் said...

//வேலை செய்யாமல் பணம் வாங்கவேண்டும், என்று நினைப்பதும், பணம் கொடுக்காவிட்டால் கூட்டாளிகளைச் சேர்த்துக்கொண்டு மிரட்டுவதும் தான் கம்யூனிசம்.//

இந்த மாதிரி கொள்கைகள் உடைய கூமுட்டைகளை பற்றி நமக்கென்ன கவலை!

உண்மையான கம்யூனிசம் என்பது முதலாளிகளை மிரட்டுவது அல்ல!
தொழிலாளிகளுக்கு உதவி செய்வது.

//வேலை செய்வதற்காகப் பணம் கொடுத்தாலும் வேலை வாங்குவதற்காகப் பணம் கொடுத்தாலும் முதலாளித்துவம் தான்.//

வேலை செய்யும் முன் பணம் கொடுக்கும் முதலாளிகள் இங்கே இருக்கிறார்களா என்ன?
பணம் என்னும் ஒரு வஸ்து, ஆட்டி வைக்கும் மனபோக்கு தான் முதலாளித்துவம்.
எதை வேண்டுமானாலும் அதை வைத்து செய்ய முடியும் என்று நினைப்பது முதலாளிகளின் குணம்.

ஊதியம் குறைவாக கொடுப்பது கூட ஒருவனை காயப்படுத்தாது,
நீ பணம் வாங்கி விட்டாய் அதனால் நீ எனக்கு அடிமை என்று சொன்னால் அவனுக்கு எப்படி இருக்கும்

Anonymous said...

அது என்ன நவீன குசேலன் கதை?

டி. ராமசந்திர பிரபு

dondu(#11168674346665545885) said...

வரும் வெள்ளியன்று அக்கதையின் சுருக்கம் கேள்வி பதில் பதிவில் வரும்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

Unknown said...

பல முனைத் தாக்குதலில் சிக்கியுள்ளாதாய் பத்திரிக்கைகள் (புலான்ய்வு)கலைஞர் அவர்களை பற்றிய எழுதும் கதைகளில் உண்மையின் அளவு எவ்வளவு.? சமாளிப்பாரா?

வஜ்ரா said...

//
யட்சன்: அரசர்களுக்குக் கொடுப்பது எதற்காக?
தருமர்: அவர்களிடமிருந்து பயமின்றி வாழ்வதற்காக.
//

http://acorn.nationalinterest.in/2008/09/04/on-liberal-nationalism/

 

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது