5/05/2009

நங்கநல்லூர் பஞ்சாமிர்தம் - 05.05.2009

எலெக்சன் கோட்:
தமிழகத்தில் உள்ள போக்குவரத்து கழகங்கள் திடீரென சில நாட்களுக்கு முன்னால் பஸ்கட்டணங்களை கணிசமாக குறைத்தன. ஏற்கனவே திருமங்கலம் பை எலெக்‌ஷன் சமயத்தில் அந்த ஏரியாவுக்கு மட்டும் இதை செய்து எலெக்‌ஷனுக்கு பிறகு கட்டணக் குறைப்பு வாபஸ் பெறப்பட்டது என கேள்விப்பட்டேன். இப்போது எலெக்‌ஷன் கமிஷன் உறுதியாக செயல்பட்டு, கட்டணக் குறைப்பை வாபஸ் வாங்கச் செய்துள்ளது என்ற செய்தி ஆறுதல் அளிப்பதாக உள்ளது.

விளக்கம் கேட்ட தேர்தல் கமிஷனுக்கு அரசு அளித்த விளக்கம் கேனத்தனமாக இருந்தது. அதாவது போக்குவரத்து கழகங்களின் நிர்வாக தலைவர்களே தன்னிச்சையாக இக்காரியத்தை செய்தார்களாம். அதுவும் எப்படி, பரேடில் கவாத்து செய்யும்போது ஒரே முறையில் அடியெடுத்து செய்யும் கணக்காக எல்லா கழகங்களின் தலைவர்களும் ஒருமித்து செய்தார்களாம். இந்த பொய்யை எப்படி சிரிக்காமல் தேர்தல் கமிஷனிடம் சொன்னார்கள் எனத் தெரியவில்லை. தேர்தல் கமிஷன் எதால் சிரித்திருக்கும் என்பது சுவையான கற்பனைக்கு வழிவகுக்கும்.

எனக்கு ஒன்று தோன்றுகிறது. கட்டணங்களை குறைக்கச் சொன்னதும், பிறகு பழைய நிலைக்கு கொண்டு போகச் சொன்னதும், இரண்டுமே வாய்வழி உத்திரவு மட்டுமே என்றும், எழுத்து ரூபத்தில் இல்லை என்றும் பேப்பரில் போட்டிருந்தார்கள். பேசாமல் இந்த சில தினங்களில் அரசுக்கு வருவாய் குறைவு எத்தனை என்பதை கணக்கிட்டு (ரொம்ப சுலபம், கணக்கிடுவது - விற்ற டிக்கெட்டுகளை விலை வித்தியாசத்துடன் பெருக்க வேண்டியதுதான். அந்தத் தொகைக்கு போக்குவரத்து அமைச்சரை தனிப் பொறுப்பு ஏற்க செய்ய வேண்டும். அல்லது திமுக கட்சி அதை சரி செய்ய வேண்டும் என்றால் இன்னும் உத்தமம், அதுதான் பல ஆயிரம் கோடிகள் ஐந்தாண்டுகளில் ஈட்டப்பட்டிருக்குமே, அதிலிருந்து கட்டச் சொல்ல வேண்டியதுதானே. இந்த முன் உதாரணம் எதிர்காலத்தில் எல்லோருக்குமே ஒரு நல்ல பாடமாக இருக்குமே.

மதுரையில் செய்யப்பட்ட கூத்துகளை பார்த்தால் அத்தொகுதி எலெக்‌ஷனையே கேன்சல் செய்தால்தான் சம்பந்தப்பட்டவர்களுக்கும் புத்தி வரும். இதுவரை லஞ்சமாக தரப்பட்ட பணமும் கோவிந்தா ஆகும். நடக்குமா?

எரிவாயு சிலிண்டர்கள் பிரச்சினை (தொடர்ச்சி)
நண்பர் DFC எனது முந்தைய நங்கநல்லூர் பஞ்சாமிர்தம் பதிவில் பின்னூட்டமிட்டது போல, எரிவாயு சிலிண்டர் வைத்து கொள்ளும் நிலையில் இல்லாதவர்களுக்கு கெரோசின் சப்சிடியில் வழங்கப்படுகிறது. சிலிண்டர் என்பதை சற்றே வசதிபட்டவர்கள்தான் உபயோகிக்கின்றனர். ஆகவே அவர்களுக்கெல்லாம் இம்மாதிரி பாதிக்கு மேல் சப்சிடி தருவது அதர்மம். நான் ஏற்கனவே சொன்னதையே இங்கு மீண்டும் கூறுவேன். சிலிண்டரின் முழு விலையையும் சார்ஜ் செய்தாலே அதில் உள்ள கள்ளமார்க்கெட் தானே ஒழிந்து போகும். ஆனால் நடப்பதைப் பார்த்தால் பலருக்கு இந்த கள்ள மார்க்கெட் இருப்பதுதான் சௌகரியம் போலிருக்கிறது.

உலகம் முழுவதும் இதுதான் பிரச்சினை. எந்த சப்சிடியையும் கொடுப்பது சுலபம். ஆனால் அதை திரும்பப் பெறுவதென்பது குதிரைக் கொம்பே. அதை துர் உபயோகம் செய்வதற்கென்றே கோஷ்டிகள் உருவாகி விடுகின்றன. அதை திரும்பப் பெறும் எந்த எண்ணத்தையும் முளையிலேயே கிள்ளிவிட துடிக்கின்றன.

டெலிஃபோன் இணைப்பு பெற 90-கள் வரை மிகக் கடினமான விஷயமாகவே இருந்தது. 1997-ல் கூட டெலிஃபோன் என்பது பணக்காரருக்கே உரியது போன்ற தோற்றம் அளிக்கப்பட்டு, அதை வைத்திருப்பவர்கள் வருமான வரி ரிடர்ன் தந்தே ஆகவேண்டும் என்று கூட காபந்து செய்தனர். ஏனென்றால், சேவை அளிப்பு கட்டுப்படுத்தப்பட்டது, ஆனால் தேவையோ மிக அதிகம். இணைப்புகளை அதிகரித்தால் அரசுக்குத்தான் அதிக வருமானம் என்ற இரண்டாம் கிளாஸ் கணக்கை போடவும் தெரியாத அரசு கொள்கைகள் ஆட்சி செலுத்தின. இப்போது அந்த நிலையை நினைத்து கூட பார்க்க முடியவில்லை அல்லவா. அதே போல இந்த எரிவாயு சிலிண்டர் சப்சிடியை ஒழித்தாலே பல பிரச்சினைகள் தீரும். செய்வார்களா? அதே சமயம் எரிபொருளுக்கான வரிகளும் கட்டுப்படுத்தப்பட வேண்டும். அப்போதுதான் விலையும் யதார்த்தத்தை ஒட்டி இருக்கும்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

15 comments:

இராகவன் நைஜிரியா said...

// அதே போல இந்த எரிவாயு சிலிண்டர் சப்சிடியை ஒழித்தாலே பல பிரச்சினைகள் தீரும். செய்வார்களா? அதே சமயம் எரிபொருளுக்கான வரிகளும் கட்டுப்படுத்தப்பட வேண்டும். அப்போதுதான் விலையும் யதார்த்தத்தை ஒட்டி இருக்கும்.//

இந்த அளவு யோசனை செய்து மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்று செயல்படும் அரசியல்வாதிகள் யாராவது இருந்தால் உலக மகா அதிசயம்தான்.

dondu(#11168674346665545885) said...

@இராகவன் நைஜீரியா
இந்த அளவு யோசனை செய்த முதல் மந்திரி மோடிதான். குஜராத்தில் விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்கப்பட்டு வந்தது. ஆனால் ஆற்காடு வீராசாமி வழ்ங்கும் மின்சாரம் போல எப்போதாவதுதான் வந்தது.

மோடி ஒரே ஒரு ப்ரபோசலை வைத்தார், பணம் கட்டுங்கள் 24 மணிநேர மின்சாரம் என்று. அவர்களும் ஒத்து கொண்டனர். குஜராத் இப்போது விவசாயத் துறையில் அமோகமாக முன்னேறியுள்ளது என்பதில் என்ன ஆச்சரியம் இருக்க முடியும்?

அன்புடன்,
டோண்டு ராகவன்

yrskbalu said...

dear ragavan,

why you thinking always negative only.
good politicians there. but they hands are tied up.

when time will turn they will react.

dont take or accept politicians are like that only. what for we are here?
only do chating?

வால்பையன் said...

சிலிண்டருக்கு சப்சிடி கொடுக்குறதால அரசுக்கு ஒன்னும் நட்டமில்லை!
அதுக்கு பதிலா வேறு எதிலாவது போட்டு தாளிச்சுருவாங்க!

ஆனா கள்ள மார்க்கெட்டில் விற்பனையாவது தடுக்க வேண்டிய செயல் தான்! ஆனா அரசு இயந்திரமே ஊழல் எண்ணையில தானே ஓடுது! யார் வந்து தடுப்பா?1

dondu(#11168674346665545885) said...

வால்பையன் நான் கூறவருவதை முதலில் புரிந்து கொள்ளுங்கள். அரசுக்கு நட்டம் என்ற காரணத்துக்காக நான் சப்சிடியை எதிர்க்கவில்லை. அது தேவையில்லை என்பதாலும், அதனால் கருப்பு சந்தைதான் செழிக்கிறது என்பதால் மட்டுமே நான் சப்சிடியை எதிர்க்கிறேன்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

வால்பையன் said...

//வால்பையன் நான் கூறவருவதை முதலில் புரிந்து கொள்ளுங்கள். அரசுக்கு நட்டம் என்ற காரணத்துக்காக நான் சப்சிடியை எதிர்க்கவில்லை. //

ரேஷன் என்ற அமைப்பு உலகம் முழுக்க பெரும்பாலான நாடுகளில் இருக்கிறது! அங்கே தரப்படும் பொருள்கள் அனைத்தும் சப்சிடியுடன் தான் வருகிறது!
ஆனால் பாருங்கள் நம் நாட்டில் தான் ரேஷன் பொருள்களுக்கு கள்ல சந்தை அதிகம்!

தலைமை சரியில்லாத போது வால் வரைக்கும் ஆடத்தான் செய்யும்!

dondu(#11168674346665545885) said...

சமீபத்தில் 1952-ல் சென்னை மாகாணத்தின் முதல் மந்திரியாக பதவியேற்ற ராஜாஜி அவர்கள் செய்த முதல் காரியம் ரேஷன் முறையை விலக்கிக் கொண்டதே. அதனால் பல பொருள் விரயங்கள் தடுக்கப்பட்டு, நாடு முழுவதிலும் அது அமுலுக்கு வந்தது. 1964 வரை ரேஷன் முறை இல்லாமல்தான் இருந்தது. அவ்வாண்டு வந்ததிலிருந்து இன்றுவரை அப்படியே உள்ளது. நமக்கெல்லாம் இன்னொரு ராஜஜி அல்லது மோடி தேவை.

அன்புடன்,
டோண்டு ராகவன்

வஜ்ரா said...

கருப்புச்சந்தை என்பதே அரசு, வியாபாரச் சந்தைக்குள் புகுவதால் வரும் நேரடி எதிர்வினை.

விபாபாரம் அரசு செய்யவேண்டிய வேலை அல்ல.

வால்பையன் said...

//நமக்கெல்லாம் இன்னொரு ராஜஜி அல்லது மோடி தேவை.///

வேறு யாருக்கும் நல்லதே செய்ய தெரியாதே! இல்லை செய்யவே மாட்டாங்களா?

உங்களை ஆப்பிரிக்காவுல விட்டாக்கூட,
ஆப்பிரிக்கா முன்னேற நமக்கு ஒரு மோடி தேவைன்னு சொல்விங்கன்னு குழந்தைக்கு கூட தெரியுமே!

dondu(#11168674346665545885) said...

@வால்பையன்
ராஜாஜியை விடுங்க, அவர் இறந்து 36 ஆண்டுகளாகி விட்டன. மோடியை தவிர்த்து வேறு யாரேனும் ஒரு முதல் மந்திரியையாவது உங்களால் உதாரணமாகத் தரவியலுமா?

மோடி பற்றிய எனது இப்பதிவிலிருந்து சில வரிகள். பார்க்க: http://dondu.blogspot.com/2008/01/38-3.html
தமிழகத்தில் மின்சாரம் வந்தால் அது செய்தி. குஜராத்திலும் முதலில் அதே நிலைமைதான் மோடி அவர்கள் பதவிக்கு வந்த போது இருந்தது. நிலைமையில் முன்னேற்றம் காண்பது கடினம் என்பது அதிகாரிகளின் கூற்று. மோடி அவர்கள் சளைக்காது நடவடிக்கை எடுத்தார். பகுதி பகுதியாக எடுத்து காரியமாற்றினார். முதல் 1000 நாட்களில் 45 விழுக்காடு கிராமங்களுக்கு முழு மின்சாரம் வழங்கப்பட்டது. இப்போது அதே திட்டம் குஜராத் முழுக்க விஸ்தரிக்கப்பட்டு 100 விழுக்காடு கிராமங்களுக்கு 24 மணி நேரமும் 3-phase மின்சாரம் வழங்கப்படுகிறது. இதற்காக மோடி அவர்கள் முதல் 1000 நாட்களில் செய்த விஷயங்கள் பின்வருமாறு. 23 லட்சம் மின்கம்பங்கள், 56,000 ட்ரான்ஸ்ஃபார்மர்கள், 75000 எலெக்ட்ரிக் மீட்டர்கள் ஆகியவை பொருத்தப்பட்டன. ஒரு அரசு மனது வைத்தால் என்னென்ன செய்ய முடியும் என்பதற்கு இதை விட நல்ல உதாரணம் வேறு ஏது? ”500 நாட்களில் 700 கிலோமீட்டர் நீளத்துக்கு நர்மதா திட்டத்தில் பைப்புகள் இடப்பட்டன” என்று சோ கூறியதை குறிப்பிட்டு அதை அப்டேட் செய்தார். தற்போது அதே புள்ளிவிவரம் 700 நாட்களில் 1400 கிலோமீட்டர் பைப்லைன்கள் போடப்பட்டன என்று கூறினார். அந்த பைப்பில் கருணாநிதி அவர்கள் தன்னுடைய குடும்பத்தாருடன் காரில் செல்ல இயலும் என்று பைப்லைனின் விட்டத்தை பற்றி கூறுவதற்காக அவர் தமாஷாக மேற்கோள் காட்டினார். ஒரே சிரிப்பு அரங்கில். தனக்கு எதிராக ஒரு ஊழல் புகாரும் இல்லை என்பது ஒரு புறம் மகிழ்ச்சி அளித்தாலும், மறுபுறம் அதை தக்க வைத்து கொள்ள வேண்டுமே என்ற கவலையும் இருக்கிறது என்றார்.

அரசு மனம் வைத்தால் வருவாயையும் பெருக்க இயலும் என்றார். ஆனால் அது லஞ்சத்தை ஒழித்தால்தான் முடியும் என்றார். உதாரணத்துக்கு மஹாராஷ்டிரம் மற்றும் குஜராத் வழியில் செல்லும் நெடுஞ்சாலையில் குஜராத் பக்கத்தில் ஒரு எல்லை செக்போஸ்ட் உண்டு, மஹாராஷ்ட்ரா பக்கத்தில் ஒரு செக்போஸ்ட் உண்டு. இரண்டிலும் ஒரே அளவு வண்டிகள் போக்குவரத்துதான். குஜராத் தரப்பினர் சட்ட பூர்வமாக கலெக்ட் செய்வது மஹாராஷ்ட்ரா தரப்பில் உள்ளதை விட 239 கோடியே 60 லட்சம் ரூபாய் அதிகம் எனக் கூறினார் (எவ்வளவு காலக்கட்டம் என்பதை சரியாக கேட்க இயலவில்லை லௌட்ஸ்பீக்கர் சதி செய்தது). ஆனால் மிகவும் அதிகம் அது, சட்டப்படி என்னவெல்லாம் வருமானம் அரசுக்கு வரக்கூடும் என்பதை அது தெளிவாகக் காட்டுகிறது. ஆனால் அதெல்லாம் செய்யாது விட்டால் கீழ்மட்டத்திலிருந்து மேல் மட்டம் வரை அதிகாரிகள், மந்திரிகள் ஆகியோரது தனிப்பட்ட பணப்பைதான் நிறைகிறது என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.

தேர்தல் முடிந்ததும் மோடியை பேட்டி கண்ட ஒரு பத்திரிகையாளர் மோடி அவர்கள் கம்யூனல் பிரச்சினையை கிளப்பி ஜெயித்ததாகக் கூற, மோடி அவரிடம் தனது எல்லா எலெக்‌ஷன் பேச்சுக்களும் பதிவு செய்யப்பட்டு எலெக்‌ஷன் கமிஷனிடம்தான் உள்ளன. அவற்றை போட்டு பார்த்து ஏதேனும் ஒரு இடத்தில் தான் அம்மாதிரி செய்ததாக நிருப்பிக்க இயலுமா என பத்திரிகைக்காரரை கேட்க அவர் பின்வாங்கியுள்ளார். இப்போது மோடி அவர்கள் துக்ளக் மீட்டிங்கில் பார்வையாளர்களிடம் ஒரு கேள்வி கேட்டார். அதாவது தான் தீவிரவாதத்துக்கு எதிராகப் பேசினால் தன்னை மதவாதி என்று கூறிட முடியுமா என்று கேட்க பார்வையாளர்கள் ஒரே குரலில் ”இல்லை” என குரல் தந்தனர்.

மதசார்பின்மை என்ற சொல் வருடங்கள் செல்ல செல்ல 5 வருடங்களுக்கு ஒரு முறை எம்மாதிரி மாறி வந்திருக்கிறது என்பதை மோடி அவர்கள் விவரித்தார். முதலில் அது மத ஒற்றுமையை குறிப்பிட்டது. பிறகு சிறுபான்மையினருக்கு அநுதாபம் என மாறியது, பிறகு சிறுபான்மையினர் கூறுவதையேல்லாம் செய்வது என்றாயிற்று. ஆனால் மோடி அவர்களை பொருத்தவரை மதசார்பின்மை பரம ஏழைகளையும் முன்னேற்றுவதாகத்தான் இருக்க வேண்டும் என தான் புரிந்து வைத்திருப்பதாக கூறியபோது பலத்த கரகோஷம் எழுந்தது. ஒரு மகாநாட்டில் நாட்டின் செல்வங்களுக்கு முதல் உரிமை இசுலாமியருக்கே என பிரதம மந்திரி குறிப்பிட்டபோது தான் ஆட்சேபணை எழுப்பினதாக கூறினார். அது என்ன இசுலாமியர்கள் என்று கூறுவது? ஏழைகள் என்று கூறவும் என்று சொன்னதாக கூறினார். இம்மாதிரி மனநிலையுடன் இருக்கும் பிரதம மந்திரிக்கு மதசார்பின்மை பற்றி பேச ஒரு அருகதையும் கிடையாது அவரிடமே தான் கூறியதாக மோடி சொன்னார்.

மேலும் சில குஜராத் புள்ளி விவரங்கள். மோடி முதலில் ஆட்சிக்கு வந்தபோது நிதி பற்றாக்குறை 6700 கோடி ரூபாய், தற்சமயம் 1000 கோடி ரூபாய் உபரியாக கையில் உள்ளது. ஆண்டுக்கு 2500 கோடி ரூபாய் பற்றாக்குறை பட்ஜெட் வரி உயர்வு ஏதும் இன்றி 400கோடி ரூபாய் உபரி பட்ஜெட்டாக உயர்ந்துள்ளது என்றார். முக்கிய காரணம் லஞ்சம் எல்லா தளங்களிலும் ஒழிக்கப்பட்டு வரி வசூல் சரியாக நடந்ததே. காங்கிரஸ் கலர் டிவி தருவதாக வாக்களித்தபோது அவரிடம் பத்திரிகைக்காரர்கள் இது பற்றி கேட்டுள்ளனர். கலர் டிவி தர இயலாது ஆனால் தான் பதவிக்கு வந்தால் வரி கொடுக்காதவர்களை தேடி கண்டுபிடித்து நோட்டீஸ் கொடுக்கப் போவதாக தயக்கமின்றி கூறியுள்ளார். மக்கள் தங்கள் நலனை அறிந்தவர்கள். ஆகவே வரி வசூல் நோட்டீஸ் அனுப்பப் போவதாக சொன்ன தனக்கு ஓட்டு போட்டு ஜயிக்க வைத்தனர் என்பதில் மோடிக்கு ஐயமேயில்லை.

மோடி அவர்கள் இப்போது இன்னொரு விஷயத்தை தொட்டார். மோடி இப்படி, மோடி அப்படி என்றெல்லாம் கூறிப் பார்த்து பப்பு வேகவில்லை என தெரிந்து கொண்ட ஊடகங்கள் குஜராத்தியினரே சரியில்லை என கூறத் துவங்கியுள்ளனர் என்பதை கூறினார். தமிழகத்தின் நல்லவேளை தான் இங்கு முதன் மந்திரி இல்லை. அப்படியிருந்திருந்தால் தமிழக மக்களை பற்றி அவதூறு ஆரம்பித்திருக்க வேண்டும் என்று மோடி சொன்னபோது அரங்கில் சிரிப்பு. அப்படியே இருந்தாலும் பரவாயில்லையே, மோடி மாதிரி ஒரு முதல்வர் நமக்கில்லையே என்று எனக்குள் எண்ணம் எழுந்தது.

சந்திரபாபு நாயுடு வெற்றியடையாததற்கு காரணம் அவரது அபிவிருத்தி திட்டங்கள் எல்லோரையும் போய் சேரவில்லை என்று சோ சொன்னதையே மோடியும் உறுதி செய்தார். அபிவிருத்தி திட்டங்களில் மக்களின் முழு ஈடுபாடு என்பதன் முக்கியத்துவத்தையும் அவர் வலியுறுத்தினார். மேலும் ஆட்சி செலுத்தும்போது அடுத்த தேர்தலையெல்லா நினைக்கலாகாது. அரசு மட்டும் செலுத்தினாலே போதும் என்றும் கூறினார். குஜராத்தில் நடப்பது தொடர வேண்டும், முழு நாட்டுக்கே அது கிரியா ஊக்கியாக அது இருக்க வேண்டும் என்ற தனது எண்ணத்தை அவர் வெளிப்படுத்தினார். குஜராத்தில் அவரது வெற்றிக்கு காரணங்கள் குறைந்த அளவு அரசு இயந்திரம், மிகப் பரவலான ஆட்சி செலுத்தல் ஆகியவையே.

குஜராத் பூகம்பம் பற்றியும் பேசினார். அம்மாதிரியான பூகம்பம் வந்தால் வளர்ந்த நாடுகளிலேயே மீண்டும் புனர்வாழ்வு வர 7 ஆண்டுகளுக்கு மேல் பிடித்திருக்கும். ஆனால் குஜராத்திலோ மூன்றே ஆண்டுகளில் அது சாத்தியமாயிற்று என்றார். அவர் பதவிக்கு வந்த போது பல கூட்டுறவு வங்கிகள் ஒன்றன் பின் ஒன்றாக நொடித்தன. தனது அரசு எடுத்த நடவடிக்கைகளால் அவை சரி செய்யப்பட்டு பல விஷயங்களில் தேசீயமயமாக்கப்பட்ட வங்கிகளையும் மிஞ்சியுள்ளன என்று பெருமிதத்துடன் குறிப்பிட்டார் அவர். அகலப்பட்டை இணைய இணைப்பு ஒவ்வொரு கிராமத்துக்கும் வரும் நிலை உள்ளது என்றும் கூறினார். அதன் தரம் வாஷிங்டனில் உள்ள வெள்ளை மாளிகையில் உள்ள இணைப்பின் தரத்துக்கு குறையாமல் இருக்கும் என்றார். தமிழக மக்களை குஜராத்துக்கு நேரடியாக வந்து பார்த்து தான் கூறியதன் உண்மையை கண்டுணரச் சொன்னார்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

M Arunachalam said...

Dondu Sir,

Even to perceive, understand and appreciate a gift(Inaam)-free, corruption-free and development-oriented governance & Government, one needs a different mindset; particularly if that person happens to be a Tamilian, for whom corruption & poverty are a way of life & who only knows to vote one or the other Dravidian party scoundrels by taking money or free-TV from them.

The main difference here is the Gujarati people i.e. farmers, who have demonstrated their "self-respect" & "enterprise" by choosing the option given by Modi that they will pay for the power if it is given without interruption for 24 hours instead of free-but-interrupted power supply, so that they can work on the fields continuously & grow more crops & thus earn well. So, the Govt. also earned well (as against politicians or beuracrats) and people (farmers) also earned their income well - a win-win situation.

Compare this with TN, where just to watch some wretched sob-serials, rigged reality shows & biased news coverage, people are willing to vote for the party which promises to give free-TV. What a contrast!

When TN people - I mean the farmers, small traders, weavers, etc. - start asserting their self-respect & reject such free-bies & show the door to such unethical parties, even TN people & ever-skeptical (only against BJP) Tamil bloggers, will be able to perceive what Good Governance is all about.

Till such time, allow these skeptics to enjoy watching sob-serials & keep on criticising Modi to their heart's content. I don't think you should waste your time replying to such skeptics.

Unknown said...

டோண்டு சார்,

மோடியைப் பற்றி இந்த அளவு விவரமாக சோ கூட எழுத மாட்டார்.அது சரி. ஜெவின் இந்த திடீர் ஈழ ஆதரவைப் பற்றி நீங்கள் ஏதும் கூறவில்லை போல் இருக்கிறதே?நானும் இதைப் பற்றி ஒரு இடுக்கை இட்டுள்ளேன்.
http://tlbhaskar.blogspot.com/2009/05/blog-post.html
நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?

dondu(#11168674346665545885) said...

@பாஸ்கர்
உங்கள் பதிவை பாத்தேன்.
ஜே பற்றி பேச என்ன இருக்கிறது? அவரும் சரி கருணாநிதியும் சரி கைதேர்ந்த நடிப்புடையவர்கள். அதுவும் ஈழத்தமிழர் விஷயத்தில் கேட்கவே வேண்டாம்

என்ன, இருவரில் ஜே தான் தீவிரவாதத்துக்கு எதிராக செயல்படுவதில் உறுதியாக இருக்கிறார். தமிழ் தீவிரவாதம் என்றால் பரவாயில்லை என கருணாநிதி போல காமெடி எல்லாம் செய்ய மாட்டார்.

நான் கடந்த ஜனவரியில் நடந்த துக்ளக் ஆண்டுவிழா பற்றி எழுதிய நான்காம் பதிவில் நான் சோ சொன்னதாக இவ்வாறு குறிப்பிட்டுள்ளேன்:
“முதல்வர் தலைமையில் ரெவ்யூ மீட்டிங்குகள் நடக்கும்போது ஜெயலலிதா காலத்தில் அது அதிகாரிகள் மற்றும் அமைச்சர்களுக்கு சிம்ம சொப்பனம். முதல்வர் எல்லா விஷயங்களையும் நன்கு படித்து அதிகாரிகளை கேள்விகளால் வாட்டி விடுவார். கலைஞர் விஷயத்தில்? அவர் கேட்பார் “உளியின் ஓசை” பார்த்தீர்களா? அதிகாரி சொல்வார் “அது ஒரு காவியம் ஐயா” (சத்தியமாக அவர் அதை பார்த்திருக்க மாட்டார்). “எனது லேட்டஸ்ட் கவிதை எப்படி”? “அற்புதம் சார்”. “இன்றைய பேப்பர் படி, இன்னும் அருமையான கவிதை எழுதியுள்ளேன்” ரிவ்யூ மீட்டிங் ஓவர்”.

பார்க்க: http://dondu.blogspot.com/2009/01/14012009-4.html

அன்புடன்,
டோண்டு ராகவன்

Unknown said...

டோண்டு சார்,

நீங்கள் சொல்லுவது சரிதான். ஆனால் ஜெவின் இந்த "இராணுவத்தை அனுப்பும்" உணர்ச்சிகரப் பேச்சு மிகப் பெரிய நினைக்க முடியாத பின் விளைவுகளை ஏற்படுத்தும்.மத்திய அரசு சிறிது கூட சாதுர்யம் இல்லாமல் இலங்கைப பிரச்சனையைக் கையாண்டுள்ளது.உங்கள் நங்கநல்லூர் ஆஞ்சநேயர் தான் தமிழ் நாட்டைக் காப்பாற்ற வேண்டும்.

நன்றி
பாஸ்கர்

dondu(#11168674346665545885) said...

@பாஸ்கர்
மறுபடியும் சொல்லுவேன், ஜெயின் பேச்சு வெறும் எலெக்‌ஷன் ஸ்டண்ட்தான். தேர்தல் முடிந்ததும் அவரே அதை மறந்து விடுவார், ஏனெனில் ராணுவத்தை அவ்வாறெல்லாம் அனுப்ப இயலாது. மத்தியில் பாஜக வந்தாலும் சரி, காங்கிரஸ் வந்தாலும் சரி இந்த விஷயத்தில் ஒரே மாதிரித்தான் நடந்து கொள்வார்கள்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

 

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது