5/27/2009

எங்கே பிராமணன் - பகுதி - 80

பகுதி - 80 (26.05.2009):
சிகாமணியும் அவர் மனைவி ஸ்ரீமதியும் அவரது அண்ணா நடேச முதலியார் வீட்டுக்கு வருகின்றனர். அவரது அண்ணி அதை தன் கணவரிடம் கூறி, வெளியே வந்து தம்பியுடன் பேசுமாறு கேட்டு கொள்கிறாள். முதலில் மிக தீவிரமாக மறுத்த நடேச முதலியார் பிறகு மனைவியின் பேச்சை தட்ட முடியாமல் வெளியே வருகிறார். தம்பியுடன் தனது குத்தலான பேச்சைத் தொடர, தம்பி அசாத்திய பொறுமை காட்டுகிறார். அதே சமயம் தனது மகன் கிரி கல்யாணத்துக்காக அவரை அழைக்க வந்த காரியத்திலும் கண்ணாக இருக்கிறார். அண்ணனுக்கு கோபம் இருக்கும் அதே தருணத்தில் தம்பி மேல் பாசமும் இருக்கிறது. அது வெளியே வருவதற்கு முன்னால் தன் தம்பி சாதி விட்டு திருமணம் செய்ததை எல்லாம் சாடி விட்டு, சாதியின் மகத்துவத்தை அவருக்கு புரிந்த வண்ணம் விளக்குகிறார்.

பொறுமையுடன் அடங்கும் சிகாமணியின் அன்புக்கு முன்னால் அவரும் தணிந்து போவது சீரியலில் நன்றாகவே காட்டப் பட்டுள்ளது. இருப்பினும் கடைசி ஷாட்டாக தனது நண்பர் சாரி என்னும் ஐயங்கார் ஸ்வாமியை குறிப்பிட்டு, அவர் நண்பராக இருந்தாலும் அதற்காக அவர் குடும்பத்துடன் எல்லாம் சமப்ந்தம் வைத்துக் கொள்ள இயலுமா என அவர் ஒரு பந்தை bowl செய்ய, பந்தை ஸ்லிப் வழியாக பவுண்டரிக்கு அடிப்பது போல அவருக்கும் தான் பத்திரிகை வைக்கவிருப்பதை குறிப்பிட்டு, அவ்வாறு செய்யலாமா என அண்ணாவிடம் பவ்யமாக கேட்க, அவரும், சாரி வீட்டில்தான் இருக்கிறார், அங்கு உடனே போனால் அவரை பார்க்கலாம் என கூறுகிறார். கடைசியில் தம்பியும் அவர் மனைவியுமாக அளிக்கும் தட்டை வாங்கி மனைவியிடம் தருகிறார்.

நீலகண்டன் அனுப்பிய கடிதத்தை வைத்து கொண்டு நாதனும் வசுமதியும் விவாதிக்கின்றனர். அசோக்கை அனுப்பி உமாவுடன் பேசி அவள் மனதை மாற்றி அவள் பெற்றோர் ஏற்பாடு செய்யும் திருமண ஏற்பாட்டுக்கு ஒத்து கொள்ளுமாறு செய்ய நீலகண்டன் கடிதம் மூலமாக நாதனுக்கு வேண்டுகோள் விடுத்திருந்தார். இதை எவ்வாறு எதிர்க்கொள்வது என நாதன் குழம்ப, வசுமதியோ தெளிவாகவே இக்கோரிக்கையை நிராகரித்தாள். அப்போது தன் கடிதத்துக்கான எதிர்வினை பற்றி அறிய நீலக்ண்டன் அங்கு வந்து சேர, நாதன் அவரிடம் இதெல்லாம் சரியாக வராது என தயக்கம் காட்டுகிறார். நீலகண்டன் வற்புறுத்த மெதுவாக ஒத்துக் கொள்கிறார். ஆனால் வசுமதி அங்கு வந்து வெட்டு ஒன்று துண்டு இரண்டாக பேசி விடுகிறாள். அசோக் வந்து உமாவுடன் பேசினால் மேலும் அதிக பிரச்சினைகள்தான் வரும் என்பதையும் அவள் விளக்குகிறாள். நீலக்ண்டன் மேலே வற்புறுத்தாமல் செல்கிறார்.

நடேச முதலியார் தனது நண்பர் சாரியார் வீட்டுக்கு வருகிறார். அவர் வீட்டில் அவருக்கு அதிதி போஜனம் நடக்கிறது. சாரியாரின் மகன் பார்த்தசாரதி மூளை வளர்ச்சி குறைவாக உள்ள ஒரு வாலிபன். குழந்தை மாதிரி தன் தந்தையிடம் சினிமா போக 50 ரூபாய் கேட்கிறான். அவர் தனது மகன் சுலோகம் எல்லாம் கூறுவான் என நடேச முதலியாரிடம் கூறி விட்டு விஷ்ணு சஹஸ்ரநாமம் அவனுக்கு நன்றாக பாடம் ஆகியுள்ளது என தான் கூறுவதை தானே நம்புகிறார்.

சோவின் நண்பர் விஷ்ணு சகஸ்ரநாமம் பற்றி கேள்வி கேட்கிறார். அதை யார் எழுதியது என்ற கேள்விக்கு சோ அவர்கள் அது ஏற்கனவே இருந்ததாகவும், அதை வியாசர் உணர்ந்து பீஷ்மர் வாயால் யுதிஷ்டிரருக்கு சொல்ல வைத்தார் என கூறுகிறார். அம்பு படுக்கையில் பீஷ்மர் இருந்த நிலையில் அவரிடம் யுதிஷ்டிரருக்கு பாடம் சொல்ல பீஷ்மரை விட்டால் சரியான ஆள் கிடையாது என கிருஷ்ணர் கூற பீஷ்மர் உபதேசம் செய்ய ஆரம்பிக்கிறார். அவர் போதித்த பல விஷயங்களில் விஷ்ணு சஹஸ்ரநாமமும் ஒன்று. அது முக்தியை தரக்கூடியது, செல்வம் அளிக்கக் கூடியது, பயத்தை போக்கக் கூடியது, பிறவிப் பெருங்கடனை நீக்கக் கூடியது என அதன் பெருமைகளை பற்றியும் சோ கூறுகிறார். விஷ்ணூ சஹஸ்ரநாமத்துக்கு மேல் இன்னும் மேலதிக பலன் அளிக்கக் கூடிய “நமோ வசிஷ்டாய..” என கம்பீரத் தொனியில் துவங்கும் ஒரு மந்திரத்தையும் சோ கூறுகிறார். ஆனால் அதன் பெயரை சொல்லவில்லை என்பதில் எனக்கு சற்று வருத்தம்தான்.

அதனால் என்ன, அந்த ஸ்லோகத்தை ஒரு அனானி நண்பர் அனுப்பியுள்ளார் அவருக்கு என் மனமார்ந்த நன்றிகள். அந்த சுலோகம் இதோ:

நமோ வசிஷ்டாய மஹா வ்ரதாய
பராசரம் வேத நிதிம் நமஸ்யே
நமோஸ்து அனந்தாய மஹோரகாய
நமோஸ்து ஸித்தேப்ய இஹாஷயேப்ய:
நமோஸ்து ரிஷிப்ய: பரமம் பரேஷாம்
தேவேஷூ தேவம் வரதம் வராணாம்
ஸஹஸ்ரஷீர்ஷாய நம சிவாய
ஸஹஸ்ரநாமாய ஜனார்தனாய

பார்த்தசாரதிக்கு சாரியார் 50 ரூபாய் கொடுத்து அனுப்புகிறார். அவனும் குழந்தை மாதிரி “சாந்தாகாரம், புஜங்க சயனம்...” என விஷ்ணு சஹஸ்ரநாமத்தின் ஓரடியை உரக்கக் கூறிய வண்ணம் செல்கிறான். பிறகு அவர் நடேச முதலியாரிடம் அவர் தம்பி சிகாமணி தன் வீட்டுக்கு வந்து தன் மகன் கிரியின் திருமணத்துக்கு அழைத்ததை கூறுகிறார். அதில் அவ்வளவு சுவாரசியம் காட்டாத நடேச முதலியாருக்கு அவ்வாறு இருக்கலாகாது என மிருதுவாக போதிக்கிறார். என்ன இருந்தாலும் அவரது ஆசிகள் அவரது தம்பி மகன் திருமணத்துக்கு மிகவும் தேவை என அவர் வலியுறுத்துகிறார். நடேச முதலியார் மசிய மறுத்ததால் மேலே சாரியார் அவருக்கு பல விஷயங்களை கூறுகிறார். வைணவர்களில் ஒரு பிரிவினர் திருமலை நல்லான் சக்கரவர்த்தி என்னும் பெயரில் அழைக்கப்படுகிறவர்கள் எனக் கூறி மேலும் சொல்கிறார்: தாழ்ந்த சாதி என கருதப்பட்ட ஒருவன் மரணமடைய அந்திம சடங்கு செய்ய யாரும் கிடைக்காத நிலையில் ஒரு வைணவர் துணிந்து முன் வந்து அவனுக்கான அந்திமச் சடங்குகளை செய்ததை எடுத்துரைக்கிறார். அச்சமயத்தில் அவருக்கு சாதி முக்கியமாக படவில்லை என்றும் அவர் கூறுகிறார்.

“யார் சார் இந்த திருமலை நல்லான் சக்கரவர்த்தி?” என சோவின் நண்பர் கேட்கிறார். சோ பதிலளிக்க தயாராகிறார்.

எங்கே பிராமணன் மெகா சீரியல் திங்கள் முதல் வெள்ளி வரை ஜெயா டி.வி.யில் இரவு 8 மணிக்கு.

அன்புடன்,
டோண்டு ராகவன்

1 comment:

Anonymous said...

Thanks for the regular update on this serial. Here is the first verse of that slokam.

நமோ வசிஷ்டாய மஹா வ்ரதாய
பராசரம் வேத நிதிம் நமஸ்யே
நமோஸ்து அனந்தாய மஹோரகாய
நமோஸ்து ஸித்தேப்ய இஹாஷயேப்ய:
நமோஸ்து ரிஷிப்ய: பரமம் பரேஷாம்
தேவேஷூ தேவம் வரதம் வராணாம்
ஸஹஸ்ரஷீர்ஷாய நம சிவாய
ஸஹஸ்ரநாமாய ஜனார்தனாய

 

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது