2/02/2010

சோவின் எங்கே பிராமணன் பார்ட் - 2 (எபிசோட்கள் - 26 & 27)

எபிசோட் - 26 (01.02.2010) சுட்டி - 1 & சுட்டி - 2
முதல் சுட்டி லேட்டாக ஆரம்பிக்கிறது, சில நிமிடங்கள் கழித்து.

நாதன் அலுவலகத்தில் பிரியா, அவளது சீனியர் வக்கீல் அனந்த ராமன், நாதன் ஆகியோரது பேச்சு அசோக்கைப் பற்றி தொடர்கிறது. பிரியா அசோக்கை சிலாகிக்க நாதன் அதை ஏற்றுக் கொள்வதாக இல்லை. அவள் சிறுபெண், இதில் உள்ள சங்கடங்கள் புரியாது என அவள் வாயை அடக்கி விடுகிறார். பிறகு அவர் கம்பெனி கேஸ் விஷயமாக வக்கீலுடன் பேசுகிறார்.

அவர் கேஸ் வரும் தினம் நல்ல நாள், ஆகவே வெற்றி நிச்சயம் என்றும் அந்த நாள் பற்றி தன் மாமனாரும் அவ்வாறே கூறுவதாகவும் பிரியா கூறுகிறாள். யார் அவள் மாமனார் என நாதன் கேட்க, அவர் வீட்டில் பூஜைக்கு வரும் சாம்பு சாஸ்திரிகள்தான் அவர் எனக்கூற, பிரியாவின் தந்தையை போலவே அவள் மாமனாரும் நல்ல மனிதர் என நாதன் மனம் மகிழ்கிறார்.

பாகவதரை கோவிலில் ஆடியோ நாராயணன் என்பவர் சந்தித்து அதிக ராயல்டி அவரது ஆடியோ கேசட்டுகளுக்கு தருவதாக ஆசை காட்டி அவர் மனதை மாற்றி விடுகிறார். முதன் முறையாக என் மனதை சங்கடம் செய்த காட்சி இத்தொடரில் இதுதான். இது பற்றி மேலே பேச இஷ்டம் இல்லை. நீலகண்டனிடம் பாகவதர் காண்ட்ராக்டில் கையெழுத்திட மறுத்து விட்டார் என்பதையும் சொல்லி வைக்கிறேன்.

கோவிலில் பர்வதமும் வசுமதியும் சந்தித்து பேசுகின்றன்றனர். அசோக் பற்றி பேசி வருத்தப்படுகிறாள் வசுமதி. உமாவின் குழந்தைக்கு புண்யாதானம் வைத்திருப்பதாகவும் அதற்கு வசுவும் நாதனும் வரவேண்டும் எனவும் பர்வதம் கேட்டு கொள்கிறாள். அசோக் தனி மரமாக நின்று தனது பரிசோதனையில் ஈடுபடுவது பற்றி நினைத்து வசுமதியின் மனம் பாதிக்கப்படுகிறது.

இங்கு நாதன் வீட்டில் சாம்பு சாஸ்திரிகள் பூஜை முடிந்து கிளம்பும் சமயம் பார்த்து வசுமதி வீட்டில் இல்லை. சமையற்கார மாமி சாம்புவிடம் அவரது மகள் ஆர்த்திக்கு குருபலன் வந்து விட்டதால் அவளுக்கு கல்யாண வேளை வந்து விட்டது எனக் கூறுகிறாள்.

அதென்ன குரு பலன் என சோவின் நண்பர் கேட்க, அவர் அது சம்பந்தமாக சோதிட விளக்கம் தருகிறார். எனக்கு புரியாததால் நான் எஸ்ஸாகிறேன். சுப்பையா, சித்தூர் முருகேசன் ஆகியோர் க்ளிப்பிங்கை பார்த்து தத்தம் வலைப்பூவில் எழுதினால் இன்னும் ஆதண்டிக்காக இருக்கும் என போகிற போக்கில் சொல்லி விட்டு போகிறேன்.

தனது உறவினர் ஒருவருக்காக சாம்புவின் மகள் ஆர்த்தியை மணம் முடிக்க சமையற்கார மாமி தனது எண்ணத்தை வெளியிடுகிறாள். இதற்குள் வசுவிடமிருந்து போன் வருகிறது. சாம்பு சாஸ்திரிகள் இன்னும் அங்கே இருக்கிறாரா என கேள்வி எழும்ப, சமையற்கார மாமி அவர் எப்போதோ கிளம்பிப் போய் விட்டார் என அனாவசியமாக ஒரு பொய்யை உதிர்த்து விடுகிறாள். தேவையின்றி ஏன் பொய்யுரைக்க வேண்டும் என சாம்பு அவளை கோபிக்கிறார். முதலில் ஆர்த்தியின் ஜாதகத்தை கையில் எடுத்த பிறகுதான் மற்றதெல்லாம் என்று வேறு அவளிடம் விட்டேற்றியாக கூறிவிட்டு அப்பால் செல்கிறார்.

திருவள்ளுவரே பொய் சொல்லலாம் எனச்சொல்லவில்லையா என சோவின் நண்பர் கேட்க, வழக்கம்போல திருவள்ளுவரை இங்கு பலரும் தவறுதலாக புரிந்து கொண்டார்கள் என சோ அவரை கலாய்க்க்கிறார்.

“வாய்மை எனப்படுவது யாதெனின் யாதொன்றும்
தீமை இலாத சொலல்” என்று சொன்ன திருவள்ளுவர்

“பொய்மையும் வாய்மை யிடத்த புரைதீர்ந்த
நன்மை பயக்கும் எனின்”

என்றும் கூறியதற்கு உதாரணமாக சோ அவர்கள் ராமாயணத்திலிருந்து ராமரே இரண்டு இடங்களில் பொய்யுரைத்ததை எடுத்து காட்டுகிறார். அவர் வனத்துக்கு தேரில் செல்லும்போது தேரை நிறுத்துமாறு தசரதர் கூவிக்கொண்டே பின்னால் வர, தேரோட்டி சுமந்திரனிடம் காதில் கேட்காதது போல மேலே செல்ல பணிக்கிறார் ராமர்.

வனத்தில் தன்னைப் பார்க்க வரும் பரதனிடம் கைகேயியை திருமணம் செய்து கொள்ளும்போது அவளுக்கு பிறக்கும் மகனுக்கே பட்டம் என தந்தை வாக்களித்ததாக பொய்யுரைக்கிறார் ராமர்.

இரு இடங்களிலும் தன்னை வனத்துக்கு அனுப்பி, பரதனை அரசனாக்கிய தந்தையின் கட்டளை பங்கப்பட்டுவிடக்கூடாது என்ற ஒரே உன்னத காரணத்துக்காகவே அவர் அவ்வாறு செய்த்கார் என்பதையும் சோ தெளிவுபடுத்துகிறார்.

(தேடுவோம்)

எபிசோட் - 27 (02.02.2010) சுட்டி - 1 & சுட்டி - 2
சாம்பு சாஸ்திரியின் மனைவி செல்லம்மாவும் மகள் ஆர்த்தியும் பேசிக் கொண்டிருக்கிறார்கள். வழமையான குடும்ப பிரச்சினைகள் குறித்து பேச்சு செல்கிறது. சிறு பெண்ணுக்குரிய அத்தனை ஆசைகளும் அடங்கிய ஆர்த்திக்கு கழுத்து மட்டும் குறை அவை நிறைவேறவில்லை என்று. பேச்சு வேம்புவின் மகள் ஜயந்தி பற்றியும் திரும்புகிறது. கிருபாவின் குழந்தையும் பேச்சில் அடிபடுகிறது.

நீலகண்டன் நடேச முதலிய்யரை பார்த்து பாகவதர் ஒப்பந்தத்திலிருந்து பின்வாங்கிய விவரம் கூற, அவர் வருத்தமும் கோபமும் அடைந்து பேசுகிறார். பாகவதருக்கு அதிக ராயல்டி கொடுப்பதாக ஆசை காட்டிய பார்ட்டியோ அவருக்கு முழுசாக பட்டை நாமம் போட்டு விட்டு எஸ்ஸாகிறான். அவருக்கு அதில் அதிர்ச்சி. அவரது முதல் மகன் சிவராமன், மருமகள் ராஜி, மனைவி மட்டும் இரண்டாம் மகன் மணி ஆகியோர் அவரை ஏமாந்ததற்காக சாடுகின்றனர். அவரும் புத்தி வந்து எல்லாவற்றையும் ஏற்று கொள்கிறார். அவரது மருமகள் அவரை அழைத்து கொண்டு போலீசுக்கு போகப்போவதாகக் கூறுகிறாள்.

அசோக் கடற்கரையில் கடலை நோக்கி நின்று கொண்டிருக்க, அங்கு வந்த ரமேஷும் உமாவும் அவனை பார்க்கின்றனர். உமா அவனுடன் பேசுவதற்காக வருகிறாள். குழந்தை கிரகணம் தாண்டி பிறந்தது தாங்கள் பகவானுக்கு பிரார்த்தனை செய்து கொண்டதாலேயே என அசோக் கூற, அப்படி செய்திராவிட்டால் அது கிரகணத்தின் போது பிறந்திருக்குமா என உமா கேட்கிறாள். பிரபஞ்சத்தில் லயம் ஒத்திசைவில் இருக்க எல்லாமே முன்னாலேயே நிர்ணயம் செய்யப்பட்டவை என அசோக் பதிலளிக்கிறான். மேலும் பிரார்த்தனையின் உண்மையான பொருளே ஆண்டவன் செயலுக்கு அங்கீகாரம் அளிப்பதுதான் எனவும் அவன் சுட்டிக் காட்டுகிறான்.

குழந்தை பிறந்த வேளை அவள் கணவன் ரமேஷுக்கு கிடைக்க வேண்டிய வேலை உயர்வு கிடைக்காததால் அக்குழந்தை ராசியில்லாதவள் என அவன் கூறுவதாக உமா கூறி வருந்துகிறாள். ஒரு ராசியில்லாத தகப்பனுக்கு பிறந்ததற்காக அக்குழந்தை வருந்தினால் ரமேஷ் என்ன சொல்வான் என அசோக் திரும்பக் கேட்கிறான்.

அப்படியெல்லாம் குழந்தையின் ராசி தகப்பனை பாதிக்குமா என சோவின் நண்பர் கேட்க, அவர் ஒருவனது கெட்ட காலம் ஆரம்பித்தால் அதை குறிக்கும் வண்ணமாக அப்போது பிறக்கும் குழந்தையின் ஜாதகம் அமையலாம். ஆகவே அது ஒரு குறிப்பே, அவனது கெட்ட காலத்துக்கு காரணம் இல்லை என பதிலளிகிறார்.

பிரார்த்தனை செய்யாமல் இருந்திருந்தால் குழந்தை கிரகணத்தின் போது பிறந்திருக்குமா என உமா கேட்டதை நண்பரும் கேட்கிறார். கிரகணத்தின் போது குழந்தை பிறந்தால் பிரச்சினை இல்லை, அந்த நேரத்தில் கருவுறுதல் மட்டும் வேண்டாம் என தான் ஏற்கனவே கூறியதை திரும்பவும் சொல்கிறார் சோ அவர்கள். பிறகு, அவ்வாறு குழந்தை பிறக்க வேண்டுமென்றிருந்தால் பிரார்த்தனையே செய்து கொண்டிருக்க மாட்டார்கள் எனவும் அவர் கூறுகிறார்.

பிராமணனாக அசோக் மாறுகிறானா என உமா கேட்க, அவன் அதற்கான முயற்சிகள் நடக்கின்றன எனக் கூறுகிறான். எப்போது அங்கீகாரம் கிடைக்கும் எனக் கேட்க, பெர்ஃபக்‌ஷன் வரும்போது என்கிறான். எப்போது பெர்ஃபக்ஷன் வரும் என விடாது உமா கேட்க, அது ஆன்கோயிங் செயல்பாடு, முடிவே கிடையாது என்கிறான். இவ்வாறாக இருக்கும் அவனை தான் ஒரு காலத்தில் தன் தளத்துக்கு இழுக்க முயற்சி செய்தது குறித்து குற்றவுணர்ச்சியுடன் இருப்பதாக அவள் கூற, தானும் அவளிடமிருந்து பல விஷயங்கள் கற்றுக் கொண்டதாக அவன் கூறுகிறான்.

அவனிடமிருந்து விடை பெற்று கணவனிடம் செல்லும்போது ரமேஷ் ஏற்கனவே காருக்கு போயிருக்கிறான். அங்கு சென்று அவனுடன் வாக்குவாதம் நடக்கிறது. அவனுக்கு அசோக்கை பிடிக்கவில்லை. உமா குழப்பத்தில் ஆழ்கிறாள்.

(தேடுவோம்)

சோவின் எங்கே பிராமணன் பார்ட் - 2 ஒவ்வொரு வாரமும் திங்கள் முதல் வியாழன் முடிய ஜெயா டிவியில் இரவு எட்டு முதல் எட்டரை வரை ஒளிபரப்பப்படுகிறது.

அன்புடன்,
டோண்டு ராகவன்

4 comments:

Anonymous said...

இந்த பிச்சை( சாரி பிக்ஷை) மேட்டர ஒரு மாசமா விட மாட்டேன்ங்கறாங்க... ஒரு விசயத்த ஏன் திருப்பி திருப்பி காமிச்சி கடிய போடறாங்க சார்.... ஆனாலும் இந்த சீரியல் மத்தத பார்க்கும் பொது நூறு மடங்கு தேவல்ல... இன்னும் சுவாரசியம் ஆக்க முயற்சிக்கலாம்

Anonymous said...

//பிராமணனாக அசோக் மாறுகிறானா என உமா கேட்க, அவன் அதற்கான முயற்சிகள் நடக்கின்றன எனக் கூறுகிறான். எப்போது அங்கீகாரம் கிடைக்கும் எனக் கேட்க, பெர்ஃபக்‌ஷன் வரும்போது என்கிறான். எப்போது பெர்ஃபக்ஷன் வரும் என விடாது உமா கேட்க, அது ஆன்கோயிங் செயல்பாடு, முடிவே கிடையாது என்கிறான். //


This reminds of FILM: "LAST SAMURAI" - If you have time - try to watch - Acting of Ken Watanabe!

http://www.imdb.com/title/tt0325710

Chittoor Murugesan said...

//சுப்பையா, சித்தூர் முருகேசன் ஆகியோர் க்ளிப்பிங்கை பார்த்து தத்தம் வலைப்பூவில் எழுதினால் இன்னும் ஆதண்டிக்காக இருக்கும் என போகிற போக்கில் சொல்லி விட்டு போகிறேன்.//
சுப்பய்யா சார் எல்லாம் ஸ்பெசலிஸ்டுக, ஃபுல் டைமருங்க. நாம ஏதோ அஷ்டாவதானம் பண்ணிக்கிட்டிருக்கோம். என்னை போயி சுப்பையா லிஸ்ட்ல சேர்த்துட்டிங்களே குரு தானே கீழே இருக்கிற லின்கை க்ளிக் பண்ணுங்க . படம் வரைஞ்சு பாகங்கள் குறிச்சிருக்கேன்

http://anubavajothidam.blogspot.com/2007/10/5_23.html

dondu(#11168674346665545885) said...

பின்னூட்டத்துக்கு நன்றி சித்தூர் முருகேசன் அவர்களே. உங்க்ள் பதிவை பார்த்தேன்.

அது என்ன பத்திகள அமைக்காது ஒரேயடியாக எழுதுகிறீர்கள்? ஹெவி சப்ஜக்ட், அதிலே போய் இந்த பிரச்சினை வேறு ஏன் இருக்க வேண்டும்?

அன்புடன்,
டோண்டு ராகவன்

 

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது