9/30/2006

வயது ஆவது பற்றிய உணர்வு

நான் சமீபத்தில் 1971-ல் மத்தியப் பொதுப்பணி துறையில் இள நிலை பொறியாளராக சேரும்போது எனக்கு இன்னும் 25 வயது நிரம்பவில்லை. என் மேலதிகாரிகள் என்னை விட வயதில் பெரியவர்கள். என் சக ஜூனியர் இஞ்சினியர்கள் என் வயதினர். மேலதிகாரிகள் என்னைவிட வயதில் பெரியவர்கள் என்பதால் குழப்பம் ஒன்றுமில்லாமல் வேலை செய்ய முடிந்தது.

ஆனால் அடுத்த சில ஆண்டுகளிலேயே மேலதிகாரிகளில் சிலர் என்னை விட வயதில் இளையவர்களாக இருப்பதைப் பார்க்க முடிந்தது. முக்கியமாக யூ.பி.எஸ்.சி. மூலம் நேரடியாகவே உதவி/உதவிக் கோட்டகப் பொறியாளர்கள் வந்தனர். அவர்களில் பிந்தையவர்களுக்கு ஐந்து ஆண்டுகளில் அடுத்தப் பதவிக்கு பிரமோஷன் கொடுப்பது டிஃபால்ட் ஆன நிலை. ஆகவே சில கோட்டகப் பொறியாளர்கள் கூட என்னை விடச் சிறியவர்கள் என்ற நிலை வரத் தொடங்கியது. நல்ல வேளையாக 1981-ல் ஐ.டி.பி.எல். சென்றதில் தப்பித்தேன். இதில் என்ன பிரச்சினை என்று கேட்பவர்களுக்கு ஒரே பதில்தான். அதாவது தன்னை விட வயது குறைந்தவர் கீழ் வேலை செய்யும் போது, மேலே போஸ்டிங்குகள் காலி இல்லையென்றால், பதவி உயர்வு கிடைப்பது என்பது என்னை மாதிரி இருப்பவர்களுக்கு எட்டாக்கனியே.

ஐ.டி.பி.எல்லில் பிரச்சினை இல்லையா என்றால் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும், ஏனெனில் நான் ஏற்கனவே கூறியபடி நான் சேர்ந்த நேரம் ஐ.டி.பி.எல். தளர ஆரம்பித்த நேரம். ஆகவே புதிதாக வேலைக்கு ஆள் எடுப்பது அதுவும் அதிகாரி லெவலில் எனக்கப்புறம் இல்லை என்றே ஆயிற்று. ஆகவே எனது மேலதிகாரிகளாக, அதிலும் முக்கியமாக எனது துறையில் என்னை விட இளையவர் யாருமே இல்லை என்பதுதான் நிஜம்.

ஆக நான் சொல்ல வருவது என்ன? ரொம்ப நாளைக்கு எனக்கு வயதாகி விட்டது என்ற எண்ணமே வரவில்லை. என் மன நிலை 25 வயது வாலிபனாகவே என்னை நடக்கச் செய்தது. தினமும் போகவர 40 கிலோமீட்டர் சைக்கிள் விட்டதும் இதற்குக் காரணம்.

அவ்வப்போது சில நிகழ்ச்சிகள் நடந்தன. என்னிடம் கணிதம் கற்றுக் கொண்டிருந்த ஒன்பதாம் வகுப்பு மாணவி என்னை அங்கிள் என்று அழைப்பார். ஆனால் ஒரு நாள் அப்பெண்ணின் அன்னையே என்னை அங்கிள் என அழைக்க எனக்குத் தூக்கிவாரிப் போட்டது. அப்போது எனக்கு வயது 45. அதே போல பாக்கிஸ்தானின் பிரதம மந்திரியாக பேனஜீர் புட்டோ பதவியேற்றப் போது அவர் என்னை விட 8 வயது இளையவர். இப்போதும் அதே வயது வித்தியாசமே:)) ஆனால் முதலில் அது ஷாக்கிங்காக இருந்தது. அவருக்கு அடுத்தப் பிரதமர் நவாஜ் ஷரீஃப் என்னை விட இரண்டு வயது இளையவர். ஜான் மேஜர், டோனி ப்ளேர் மற்றும் பில் க்ளிண்டனும் என்னை விட வயதில் குறைந்தவர்கள். அதே போல தெருவில் போகும்போது நான் காணும் போலீஸ் அதிகாரிகள் கூட சிறுவர்களாக என் கண்ணுக்குப் பட்டனர்.

இதெல்லாம் முக்கியமாக நான் மொழிபெயர்ப்பு வேலைகளுக்குச் சென்ற கம்பெனிகளின் மேலதிகாரிகளைக் காணும்போது அதிகம் மனதுக்குப் பட்டது.இப்போது கூட பாருங்கள், நான் கடைசியாக மொழிபெயர்ப்பு வேலை செய்து அனுப்பிய கம்பெனியின் தலைமை அதிகாரி என்னை விட 26 வயது சிறியவர்.

நேற்றுக் கூட ஒரு குட்டிக் குழந்தையை கொஞ்ச, அதுவும் என்னைப் பார்த்து சிரிக்க, அதன் பெற்றோருடன் பேசிவிட்டு நான் விடை பெற்ற போது குழந்தையின் தந்தை "தாத்தாவுக்கு டாட்டா" காட்டுமாறு அதனிடம் கூற, அதுவும் அவ்வாறே செய்ய நானும் அதை சந்தோஷத்துடன் ஏற்றுக் கொண்டு வீட்டுக்கு வந்து வீட்டம்மாவிடம் இதை பற்றிக் கூறியபோது அவர் எனக்கு அறுபது வயதாகி விட்டதை எடுத்துக் கூறினார்.

பெங்களூருக்கு சென்றபோது எனது டிக்கெட்டிலும் சீனியர் சிடிஸன் என்பதற்காக கட்டணக் குறைப்பு வேறு.

ஆனால் என்ன, என் மனதின் வயது 25-ஐ தாண்டவே இல்லை. நல்ல ஃபிகர் தென்பட்டால் பார்க்காமல் இருக்க முடிகிறதா என்ன? இதில் என்ன சோகம் என்றால் எனது கனவுக் கன்னிகளுக்கும் வயது ஆகிவிட்டது என்பதுவே. காஞ்சனாவுக்கு அறுபது வயதுக்கு மேலாகி விட்டதாமே? வைஜயந்தி மாலாவுக்கு 72 வயதாம், ஹூம்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

35 comments:

dondu(#11168674346665545885) said...

Comment placed by Flemingo was by mistake clicked at the rejection button. Now being reproduced here.

"//நல்ல ஃபிகர் தென்பட்டால் பார்க்காமல் இருக்க முடிகிறதா என்ன? //

உம்மை நம்பி ஒன்பதாம் வகுப்பு மாணவியை அனுப்பமுடியுமா? மாணவி என்ன, அவர் அம்மாவே நல்ல பிகரா என்று பார்ப்பீரோ?"

என்ன கேள்வி சார், அப்படியானால் சைட் அடிப்பவன் எல்லாம் எல்லா பெண்களையுமா சைட் அடிப்பான்? ஒரு தராதரம் இல்லையா?

அன்புடன்,
டோண்டு ராகவன்

டிபிஆர்.ஜோசப் said...

ஆனால் என்ன, என் மனதின் வயது 25-ஐ தாண்டவே இல்லை. நல்ல ஃபிகர் தென்பட்டால் பார்க்காமல் இருக்க முடிகிறதா என்ன? இதில் என்ன சோகம் என்றால் எனது கனவுக் கன்னிகளுக்கும் வயது ஆகிவிட்டது என்பதுவே. காஞ்சனாவுக்கு அறுபது வயதுக்கு மேலாகி விட்டதாமே? வைஜயந்தி மாலாவுக்கு 82 வயதாம், ஹூம்//

இது தேவையா சார்:)

ஆனாலும் முதலில் வந்த பின்னூட்டம் கொஞ்சம் ஓவர்னு நினைக்கேன்..

எதையுமே ஈசியா எடுத்துக்க தெரியாம.. எப்படித்தான் இப்படியெல்லாம் சிந்திக்க தெரியுதோ இவங்களுக்கு..

dondu(#11168674346665545885) said...

நன்றி ஜோசஃப் அவர்களே.

அன்புடன்,
டோண்டு ராகவன்

Kodees said...

டோண்டு சார், ஒரு மனிதன் எப்போது தனக்கு வயதாகிவிட்டதை உணர்கிறான் என்ற சந்தேகம் எனக்கு உண்டு, இப்போது சிறிய வெளிச்சம் கிடைத்திருக்கிறது. அங்கிள் என 30 வயதுக்கு மேற்பட்ட பெண் அழைத்தால் நமக்கு வயதாகிவிட்டது எனலாமா?

dondu(#11168674346665545885) said...

யாரோ அவர்களே,

அங்கிள் என முப்பது வயதுக்கு மேற்பட்ட ஆண் அழைத்தாலும் அதே நிலைதான். :))

பை தி வே, இம்மாதம் நான் பெங்களூர் சென்ற போது முதல் முதலாக சீனியர் சிடிசனாகச் சென்றதைப் பற்றி கூறியிருந்தேன் அல்லவா? டிக்கெட் செக்கர் கேட்கக் கூடும் என எனது PAN கார்டை வயது நிரூபணத்துக்காக வைத்திருந்தேன். அந்த பொல்லாத டி.சி. (சுமார் 40 வயதிருக்கும்) என்னிடம் டிக்கட்டில் டிக் செய்து விட்டது "நன்றி அங்கிள்" எனக் கூறியக் கொடுமையை யாரிடம் போய் சொல்ல?

ஆனால் ஒன்று, இப்போது கணினியில் தினமும் புதிதாகக் கற்கும் போது வயது குறைந்தது போல உணர்வுதானே.

அன்புடன்,
டோண்டு ராகவன்

dondu(#11168674346665545885) said...

இல்லை சந்திரா அவர்களே. என் மனத்தின் வயது அதே 25 தான். என் காதல் மனைவி இப்போதும் என் கண்ணுக்கு இளமையாகத்தான் தென்படுகிறார்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

வஜ்ரா said...

//
நல்ல ஃபிகர் தென்பட்டால் பார்க்காமல் இருக்க முடிகிறதா என்ன?
//

போச்சுரா...ஆரம்பிச்சுட்டீங்களா? இதெல்லாம் நம்ம மாரல் போலீசுக்கு புடிக்காத காரியமாச்சே..!

இப்ப என்னன்ன நடக்கப் போவுதோ? தென்திருப்பேரை மகர நெடுங்குழைகாதனுக்குத்தான் தெரியும்!

dondu(#11168674346665545885) said...

"இப்ப என்னன்ன நடக்கப் போவுதோ? தென்திருப்பேரை மகர நெடுங்குழைகாதனுக்குத்தான் தெரியும்!"
இதுக்கெல்லாம் போய் அவரை தொந்திரவு செய்யலாமா? எனக்கு கிருஷ்ணரே போதும்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

dondu(#11168674346665545885) said...

இப்போதுதான் கவனித்தேன். வைஜஜயந்திமாலாவுக்கு 72 வயதுதான் ஆகிறது. திருத்தி விட்டேன். ஹி ஹி ஹி.

அன்புடன்,
டோண்டு ராகவன்

ஜயராமன் said...

டோண்டு சார்,

வாஸ்தவமான பேச்சு. ரொம்பவும் வெளிப்படையாக எழுதுகிறீர்கள். பேசுகிறீர்கள். இதை நெஞ்சுரம் காரணமா. அசட்டு துணிச்சலா. இல்லை இந்த சொஸைடிக்கு போடா நீங்கள் அடிக்கடி சொல்வது போல ஜாட்டானா?

எப்படியோ, விலகிய கருத்துக்கள். ஆனால், ஆணித்தரமாக.

சரி. என் அபிப்ராயத்தை சொல்லுகிறேன்.

வயசாவது என்பது மனதில் என்பது முக்கியமான உண்மை. முந்தியெல்லாம் நாப்பது வயதில் தாத்தா ஆகி விடலாம். இப்போது கல்யாணமே கஷ்டமாய் இருக்கிறது. நம்மை எனர்ஜி சூழலில் ஆட்படுத்திக்கொண்டால் மனதளவில் துருதுரு என்று இருக்கலாம் என்பதும் பிரஸித்தமான உளவியல் உண்மை. உளவியலில் காரியம் மனதை மாற்றும், மனம் காரியத்தை மாற்றும். இளமையாய் இருப்பது போல நடவடிக்கைகளை மாற்றிக்கொண்டால், இளமையாக மனம் மாறும். and vice versa. இது தெரிந்ததுதான்.

வயதான பிறகு சொஸைடி சில அவர்களிடம் எதிர்பார்க்கிறது. அவர்களை மரியாதை கொடுப்பதோடு, சில வரைமுறைகளையும் எதிர்பார்க்கிறது. வயதான அனுபவங்களை இளையவர்களுக்கு எடுத்துக்காட்டாய் - வாக்கு, மனம், காரியம் - என்று இருக்கவேண்டும் என்று விரும்புகிறது. அவ்வாறு அந்த சொஸைடிக்கு பயனாய் இருப்பவர்கள் என்றென்றும் அந்த சமூகத்தால் ஞாபகப்படுத்தப்பட்டு போற்றப்படுகிறார்கள்.

வயதாக வயதாக preferences மாறுகின்றன. சின்ன வயதில் பிடித்ததெல்லாம் மனதில் மறத்துப்போய் புதிதாய் நிமித்தங்கள் ஆட்கொள்கின்றன. அதன்படி தன் வாழ்க்கைப்பாதையை மாற்றிக்கொள்பவன் விவேகி. இளம் வயதில் "சின்ன சின்ன ஆசை" என்றால் வயதாக வயதாக "சட்டி சுட்டதடா...". அதற்காக முற்றும் துறக்கல் ஆகாது. ஆனால், பெரிய விஷயங்களில் ஆசைப்படுபவனே பெரியவன்.

யதார்த்தமாக எழுதினேன். வித்தியாசமாக நினைக்கவேண்டாம்.

நன்றி

dondu(#11168674346665545885) said...

நல்ல பின்னூட்டத்திற்கு நன்றி ஜயராமன் அவர்களே. மிகவும் ரசித்தேன். சிறு வயது ஆசைகள் நிறைவேறாமலேயே பல போயின. உதாரணத்துக்கு எனது நிறைவேறாத ஒரு ஆசை சக்கரம் ஓட்டுவது. பழைய சைக்கிள் சக்கரத்தின் ரிம்மை வைத்து என் நண்பர்கள் அலட்டுவார்கள். அந்த ரிம் க்ரூவில் ஒரு குச்சியை கொடுத்து தெருத் தெருவாக ஓடும் ஒரு சிறுவனின் மகிழ்ச்சியை முன்னால் நம்ம தல அஜீத் கூட ரேஸ் காரில் பெற முடியாது என்பது என் உறுதியான எண்ணம். இது எனக்கு ஒருபோதும் கிடைத்ததில்லை. என் அப்பாவிடம் கேட்டும் கிடைக்கவில்லை.

இப்போது ரிம் கிடைக்கும், ஆனால் அதை வைத்துக் கொண்டு ஓடினால் பக்கத்து, எதிர் வீட்டு மாமாக்கள் "என்ன ராகவையங்கார் ஸ்வாமி, இளமை திரும்புகிறதா" என்று கோட்டா பண்ணுவார்களே!

அன்புடன்,
டோண்டு ராகவன்

GiNa said...

//போச்சுரா...ஆரம்பிச்சுட்டீங்களா? இதெல்லாம் நம்ம மாரல் போலீசுக்கு புடிக்காத காரியமாச்சே..!//

மாரல் போலீசெல்லாம் இல்லீங்கண்ணா! உங்கள் மாமாவோ,தாத்தாவோ இப்படி ஒரு கமெண்ட் அடித்தால் வருத்தப்ப்டுவீர்களா அல்லது "ஆமாம் மாமா, நம்ம பக்கத்தாத்து கோதை அத்தை கூட் சூப்பர் ஃபிகர்" என்று சேர்ந்துகொள்வீர்களா?

//அப்படியானால் சைட் அடிப்பவன் எல்லாம் எல்லா பெண்களையுமா சைட் அடிப்பான்? ஒரு தராதரம் இல்லையா? //

நீங்கள் சொன்ன ஒரே தராதரம் "நல்ல ஃபிகர்" என்பது மட்டுமே. அந்த "நல்ல ஃபிகர்" உங்கள் மாணவியின் தாயாராக் இருந்தால் பார்க்கமாட்டீர்களா? அப்படியானால் அது தங்களுக்கு தாங்களே செய்துகொள்ளும் மாரல் போலீசா?

dondu(#11168674346665545885) said...

பிளெமிங்கோ அவர்களே,
சற்று விரிவாகவே விடை தருகிறேன். நான் பம்பாயில் மூன்றரை வருடம் கல்யாணத்துக்கு முன் இருந்தேன். என் மனைவியாக வரப்போகிறவர் என்று எனது அத்தை மகளை ஏற்கனவே நிச்சயம் மனதில் செய்து வைத்திருந்ததால் வேறு எந்த சலனத்துக்கும் ஆளாகவில்லை என்பதே நிஜம்.

இப்போது என்னை அங்கிள் என்று என்னை கூப்பிட்ட அந்தப் பெண்ணின் அன்னை என்னை அண்ணா என்று கூப்பிட்டிருந்தால் மிக்க மகிழ்ந்திருப்பேன். அவரும் என்னை அங்கிள் என்று அழைத்ததால் அது எனது இளவயது மனதுக்கு ஒரு அடி அவ்வளவே.

ஒரு அழகானப் பெண் எதிரில் பார்த்தால் யார்தான் பார்க்க மாட்டார்கள்? பார்த்து விட்டு உடனே மறப்பதுதான் நடக்கும்.

நீங்கள் கூறுவது போல இது நமக்கு நாமே வைத்துக் கொள்ளும் மாரல் போலீஸே. அது இருந்தால்தான் பிழைக்க முடியும். வாழ்க்கையில் ஏற்கனவே இருக்கும் சிக்கல்கள் போதாதா.

அன்புடன்,
டோண்டு ராகவன்

வஜ்ரா said...

//
ாரல் போலீசெல்லாம் இல்லீங்கண்ணா! உங்கள் மாமாவோ,தாத்தாவோ இப்படி ஒரு கமெண்ட் அடித்தால் வருத்தப்ப்டுவீர்களா அல்லது "ஆமாம் மாமா, நம்ம பக்கத்தாத்து கோதை அத்தை கூட் சூப்பர் ஃபிகர்" என்று சேர்ந்துகொள்வீர்களா?
//

flemingo,

உங்களுக்குத் தெரிந்தது ரெண்டே நிலைப்பாடு தானா...? ஒன்று, வயசானா பொத்திகிட்டு கெடக்கும் மாமா, இல்லென்னா, பிளாட்பாரத்தில் கிடைக்கும் மலிவு விலை மஞ்சள் நாடா வெளியீடு கதையில் வரும் மாமா தானா?

உங்கள் மாமாவுடன் கமெண்டுகள் அடித்து விளையாடியது இல்லையா? இல்லை நண்பர் போல் பழகும் தந்தை தான் உங்களுக்கு அமைந்ததில்லையா?

இவர் எழுத்திலும் பேச்சிலும் straight forward ஆக இருக்கிறார். நீங்கள் சான்ஸ் கிடைத்தால் சந்தில் சிந்து பாடும் எண்ணம் வைத்துக் கொண்டு சமூகக் காவலர் போல், அது தப்பு, இது தப்பு என்று மாடிவிடு கட்டும் அளவிற்கு ஜல்லியிரக்குகிறீர்கள்.

dondu(#11168674346665545885) said...

Flemingo வைப் பற்றி அப்படி ஒரேயடியாகக் கூறி க்ளாஸிஃபை செய்து விட முடியாது என நினைக்கிறேன்.

கேள்வி கேட்டார், பதில் கொடுத்தாகி விட்டது.

நான் CPWD ல் இருந்த போது ஒரு காண்ட்ராக்டர் இருந்தார், 70 வயதிருக்கும். எனக்கு அப்போது வயது 30.

அவரிடம் ஒரு அசைவ ஜோக் நான் சொல்ல அவரும் அதை தன் வீட்டம்மாவிடம் அந்தரங்கமான நேரத்தில் கூற அவரும் சிரித்து விட்டு யார் சொன்னது இந்த ஜோக்கை எனக் கேட்க அவர் என்னை பற்றி கூறியிருக்கிறார். உடனே இம்மாதிரி சின்னப் பசங்கள மனதையெல்லாம் கெடுக்கிறீர்களா என்று அவரை காய்ச்சியிருக்கிறார். அடுத்த நாளன்று அவ்ரே எங்களிடம் சொன்னது. இதில் கொடுமை என்னவென்றால், ஜோக்கை சொன்னது நான், வாங்கிக் கட்டிக் கொண்டது அவர்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

GiNa said...

ராகவன் சார்,

விளக்கத்துக்கு நன்றி. ஜயராமன் அவர்கள் ஆணியை மண்டயில் அடித்தார் (hit the nail on its head என்று சொலவார்களே)

/வயதான பிறகு சொஸைடி அவர்களை மரியாதை கொடுப்பதோடு, சில வரைமுறைகளையும் எதிர்பார்க்கிறது. //

நான் சொல்ல வந்ததும் அதுதான்.

வஜ்ரா,

//நண்பர் போல் பழகும் தந்தை தான் உங்களுக்கு அமைந்ததில்லையா?//

என் தந்தை எனக்கு மட்டுமில்லை, என் நண்பர்களுக்கும் நண்பர்போல் பழகும் அதிர்ஷ்டம் எனக்கு! ஆனால் இன்றுவரை ஃபிகர் லெவலுக்கு பேச்சு வந்ததில்லை. காரணம் வேறொன்றுமில்லை - மரியாதை தான்.

மற்றபடி மஞ்சள் நாடா வெளியீடு கதையெல்லாம் படித்ததில்லை. ஸாரி.

சரி, கேள்வி கேட்டது நான், பதில் சொல்வது டோண்டு சார். இந்த விவாதத்தில் நீர் ஏன் அழையா விருந்தாளியாக தேவையில்லாமல் ஜல்லி, பல்லியெல்லாம் இரக்குகிறீர்?

என்னை சமூகக்காவலரா என்று கேட்டுவிட்டு நீர்தான் அந்த வேலை செய்வதுபோல் தெரிகிறது.

//வாழ்க்கையில் ஏற்கனவே இருக்கும் சிக்கல்கள் போதாதா.//

ஆமாம். ஏற்கனவே டெலி மார்க்கெட்டிங்கில் ஆரம்பித்து, பெரியார் திருமணம் வழியாக, ஈரோட்டில் ஏன் எயிட்ஸ் இருக்கிறது என்றளவுக்கு பட்டய கிளப்பியாச்சு.

dondu(#11168674346665545885) said...

சந்திரா அவர்களே,

Let's first set the record straight.

மணியம்மைக்கு வயது அப்போது 16 அல்ல, 26-க்கும் மேல். அவர் தன் சுயவிருப்பத்தின் பேரில்தான் ஈ.வே.ரா. அவர்களைத் திருமணம் செய்து கொண்டார்.

அவர் சீடர்கள் அதற்காக ஈ.வே.ரா. அவர்களை நன்றாகக் காய்ச்சி எடுத்து விட்டனர். தி.க. கட்சியே உடைந்தது. அதற்கு முக்கியக் காரணமே, அதே காலக் கட்டத்தில் அம்மாதிரி பொருந்தாத் திருமணங்களை எதிர்த்து தி.க. கட்சி ஈ.வே.ரா. அவர்கள் தலைமையில் போராட்டம் நடத்தி வந்தது. ஆகவே அச்சமயம் இத்திருமணம் எல்லோருக்கும் சங்கடமாப் போயிற்று. இப்போது கூட அது தி.க.வுக்கு ஒரு வீக் பாயிண்ட்தான்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

dondu(#11168674346665545885) said...

"ஆமாம். ஏற்கனவே டெலி மார்க்கெட்டிங்கில் ஆரம்பித்து, பெரியார் திருமணம் வழியாக, ஈரோட்டில் ஏன் எயிட்ஸ் இருக்கிறது என்றளவுக்கு பட்டய கிளப்பியாச்சு."
இதென்ன சந்தடி சாக்கில் புதுக்கதை? ஈரோட்டில் எயிட்ஸ் இருப்பதாக நான் கூறினேனா?

பை தி வே நான் கூறியது தமிழ்மணத்தில் எழுந்த சிக்கல்கள் பற்றி அல்ல. அவையெல்லாம் தேனீர் கோப்பை புயல்கள், அவ்வளவே.

அன்புடன்,
டோண்டு ராகவன்

dondu(#11168674346665545885) said...

"ஜயராமனுக்கு எல்லாரும் வயசானால் சாமியார் ஆகிவிட வேண்டும் என எண்ணம்."
கண்டிப்பாக அப்படியெல்லாம் இல்லை. ரொம்ப ஜாலி பேர்வழி அவர். வலைப்பூ மீட்டிங்குகளில் அவர் கூறும் ஜோக்குகள் அபாரம்.

மீட்டிங் பற்றிய நான் எழுதும் பதிவுகள் அவர் பின்னூட்டங்களால் பொலிவு பெறும் என்னும் எண்ணத்திலேயே அடக்கி வாசிக்கப்படுபவை.

அவர் இங்கு கூறியதற்கு காரணமே வேறு. என்னுடைய கடைசி சில பதிவுகள் நல்லபடியாகப் போக வேண்டியவை, ஏதேனும் ஒரு வாக்கியத்தால் திசை திருப்பப்பட்டு போகின்றன என்பது அவர் ஆதங்கம். இப்பதிவில் கூட நான் என்னிடம் டியூஷன் படித்த பையன் மற்றும் அவன் அப்பா என்னை அங்கிள் எனக் கூப்பிட்டதாக எழுதியிருந்தால் பிரச்சினை இருந்திருக்காதுதான். ஆனால் என்ன செய்ய, நடந்ததை நடந்தபடி கூறுவது எனது வழக்கமாகி விட்டது. அதை விடுத்து நடக்காததை கூறும் வழக்கத்தை மேற்கொண்டால் எந்தப் பொய்யை எங்கு யாரிடம் சொன்னேன் என்றெல்லாம் ஞாபகம் வைத்துக் கொள்ள நேரிடும்.

இருக்கும் சிக்கல்கள் போதாதா என்று மறுபடியும் கேட்கிறேன். :)))

அன்புடன்,
டோண்டு ராகவன்

சிறில் அலெக்ஸ் said...

என்ன சார் வையகரா எடுத்துக்கொண்டு பதிவுகள் போடுறீங்களா என்ன?

:)

விளையாட்டாகத்தான் கேட்கிறேன்.

dondu(#11168674346665545885) said...

விளக்கத்துக்கு நன்றி Flemingo அவர்களே. ஜயராமன் அவர்களைப் போலவே வஜ்ராவுக்கும் ஆதங்கம், நான் மறுபடியும் சர்ச்சையில் சிக்குகிறேனே என்று. ஆகவே அப்படி எழுதினார். அவருக்கும் என் நன்றி உரித்தாகுக.

அன்புடன்,
டோண்டு ராகவன்

dondu(#11168674346665545885) said...

இதுக்கெல்லாம் போயி ஏன் டிஸ்கியெல்லாம் அலெக்ஸ் அவர்களே.

மனதே இளமையாக இருக்கும் போது வயாக்ராவெல்லாம் எதற்கு?

அன்புடன்,
டோண்டு ராகவன்

GiNa said...

அப்பாடி, ஒருவழியாக பிரச்சனை ஒய்ந்ததா? Even if we agree to disagree!

புதுக்கதையெல்லாம் இல்லை - உங்கள் டெலிமார்க்கெட்டிங் பதிவுக்கு பதிலாக விடாது கருப்பு பதிவிட, அஙகு பெரியார் திருமணம், தமிழ்நாட்டு பெண்கள் கற்பு நிலை எல்லாம் அலசப்பட்டு, கிழுமாத்தூர் எக்ஸ்பிரஸ்ஸில் 'தமிழ்நாட்டு பெண்கள் கற்புக்கரசிகளாக இருந்தால் தமிழ்நாட்டில் ஏன் எயிட்ஸ் அதிகமாக் இருக்கிறது' என்றவரை சென்றது!

Raj Chandra said...

நல்ல ஃபிகர் தென்பட்டால் பார்க்காமல் இருக்க முடிகிறதா என்ன?
- இதை பின்னூட்டம் இட்டவர்கள் அனைவரும் மேற்கோள் காட்டிவிட்டாலும், என்னாலும் மேற்கோள் காட்டாமல் இருக்க முடியவில்லை :). அழகை அழகாக இரசிக்க முடியும் வரை இதில் ஒன்றும் தவறில்லை என்பது என் அபிப்பிராயம்.

என் கனவுக்கன்னிகள் ஹேமாவும், ரேகாவும். வயதானாலும் அதுவும் ஒரு அழகு அவர்களிடம்(எனக்கு வயது 37 தான் :) ).

dondu(#11168674346665545885) said...

@கிழுமாத்தூர் எக்ஸ்பிரஸ்ஸில் 'தமிழ்நாட்டு பெண்கள் கற்புக்கரசிகளாக இருந்தால் தமிழ்நாட்டில் ஏன் எயிட்ஸ் அதிகமாக் இருக்கிறது' என்றவரை சென்றது!"

ஓ, அதை சொல்றீங்களா?

"அப்பாடி, ஒருவழியாக பிரச்சனை ஒய்ந்ததா?"
அலைகள் ஓய்வதில்லை.

அன்புடன்,
டோண்டு ராகவன்

dondu(#11168674346665545885) said...

"பெரியார் சீடர்கள் அவர் கட்சியை உடைக்க காரணம் ஆட்சியை பிடிக்க வேண்டும் என்பதால் தான்.மணியம்மை திருமணம் அதற்கு கிடைத்த சாக்கு."

அப்படியா கூறுகிறார்கள். 1949-ல் திக. கட்சி உடைந்தது. இருப்பினும் என் ஞாபகத்தின்படி 1957-ல் தான் தி.மு.க. முதன் முறையாக தேர்தலுக்கு நின்றது.

அன்புடன்,
டோண்டு ராகவன்

கால்கரி சிவா said...

வயது என்பது நாட்டுக்கு நாடு வேற்றுபடுகிறது. 45 வயதாகும் எனக்கு 16 வயது குழந்தை என்றால் 47 வயதாகும் என் அதிகாரிக்கு ஒரு வயது குழந்தை அவர் மனவிக்கு வயது 42.

ரிடையர்மெண்ட்டிற்கு இன்னும் 20 வருடங்கள் உள்ளன அதற்குள் குழந்தை தன் காலில் நிற்கும் என்பது அவர்கள் கணக்கு.

dondu(#11168674346665545885) said...

"ரிடையர்மெண்ட்டிற்கு இன்னும் 20 வருடங்கள் உள்ளன"

இப்போதைக்கு எனக்கு ரிடையர்மெண்டே இல்லை.

அதே போல நான் ஒரு இடத்தில் வேலை செய்த காலங்களில் வயது பற்றி நினைக்கவே நேரம் இல்லை. எல்லோராலும் ரிடையர்மெண்ட் என்று ஒத்துக் கொள்ளப்படுபவை நான் முறையே 35 வயது மற்றும் 47 வயதாக இருந்தபோது நிகழ்ந்தவை.

அவற்றுக்குப் பிறகுதான் உண்மையான வேலையே, ஒரு நாளைக்கு 16 மணி நேரம் வரை.

ஒரு வேளை அதனால்தான் நான் இளமையாக உணர்கிறேனோ?

அன்புடன்,
டோண்டு ராகவன்

வஜ்ரா said...

//
சரி, கேள்வி கேட்டது நான், பதில் சொல்வது டோண்டு சார். இந்த விவாதத்தில் நீர் ஏன் அழையா விருந்தாளியாக தேவையில்லாமல் ஜல்லி, பல்லியெல்லாம் இரக்குகிறீர்?
//

Flemingo,

உங்கள் முந்தய பதிலைப் பாருங்கள். அதில் யாருடய பின்னூட்டத்திலிருந்து quote செய்தீர்கள். கேள்வி என்னை நோக்கி ஏவப்பட்டதாக உணர்ந்து நான் பதிலளித்தேன். இல்லையென்றால் எனக்கு என்ன வந்தது.

dondu(#11168674346665545885) said...

வஜ்ரா மற்றும் ஃப்ளெமிங்கோ,

கவலையே படாதீர்கள். இது ஜாலிப் பதிவு. எல்லோருமே புகுந்து விளையாடலாம்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

Bajji(#07096154083685964097) said...

என் கனவுக் கன்னி நதியா இப்போதெல்லாம் அம்மாவாக நடிக்கிறார் என் மனசே ஒடிந்து விட்டது டோண்டு சார்.

கிருஷ்ணன்

dondu(#11168674346665545885) said...

நன்றி செர்வாண்டஸ் அவர்களே,

சமீபத்தில் 1972-ல் "ஜவானி தீவானி" என்ற படம் வந்தது. ஜெயா பாதுரி கதாநாயகி. அப்போது அவருக்கு வயது 22. அதே படத்தில் அண்ணி ரோலில் நிரூபா ராய் நடித்தார். அவருக்கு வயது அப்போது 45-க்கு மேல். அவர் அழகுக்கு முன்னால் ஜயா பாதுரி இருந்த இடமே தெரியவில்லை.

அன்புடன்,
டோண்டு ராகவன்

Anonymous said...

என்ன இருந்தாலும் தேவிகாவின் அழகு வருமா? அவர் மகள் கனகா கூட அம்மாவின் அழகுக்கு ஈடில்லை.

முனிவேலு

dondu(#11168674346665545885) said...

எனக்கு இப்போது கூட அஞ்சலிதேவி படங்கள் பார்க்க மிகவும் பிடிக்கும். முக்கியமாக "கணவனே கண்கண்ட தெய்வம்".

சினிமாக்களில் என்ன சௌகரியம் என்றால் எவ்வளவு ஆண்டுகள் கழித்து அவற்றை பார்த்தாலும் அவரவர் அதே வயதில் நிலையாக இருப்பார்கள்.

அஞ்சலிதேவி என்றதும் இன்னொரு விஷயம் ஞாபகத்துக்கு வருகிறது. மதன் என்று நினைக்கிறேன், அவர் கேள்வி பதிலில் ஒருவர் அஞ்சலி தேவிக்கும் தற்கால சினிமா நடிகை ஒருவருக்கும் உள்ள முக ஒற்றுமையை பற்றி கேட்டிருந்தார். அதற்கு மதன் பதிலை கூறிவிட்டு மேலும் கூறினார்:

அதாவது இந்த வாசகருக்கு அந்த நடிகையை பிடித்திருந்தால் அவரது தாத்தாவிற்கு அந்த காலத்தில் அஞ்சலி தேவியை பிடித்திருந்திருக்கும் என்று.

அன்புடன்,
டோண்டு ராகவன்

Anonymous said...

"அதாவது இந்த வாசகருக்கு அந்த நடிகையை பிடித்திருந்தால் அவரது தாத்தாவிற்கு அந்த காலத்தில் அஞ்சலி தேவியை பிடித்திருந்திருக்கும் என்று."
There was this article in "The Readers' Digest". The authoress was an ex-star, who acted opposite the legendary Clark Gable. Some decades after the event, she was approached by a young girl, who was cashier in a bank, this ex-actress went to. The girl, took this actress aside and asked with trepidation, "How was it like, being kissed by Clark Gable?"

Thangam

 

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது