5/21/2008

டோண்டு ராகவனுக்கு இதுவும் வேணும் இன்னமும் வேணும்

சமீபத்தில் 1970 ஜனவரியில் துக்ளக் துவக்கப்பட்ட நாளிலிருந்து சோ அவர்கள் அதை ஒரு தரமுள்ள அரசியல் பத்திரிகையாக வெற்றிகரமாக நடத்தி வருகிறார் என்பதில் வேறு கருத்து இருக்க முடியாது. அவரது கொள்கையை ஒத்து கொள்ளாதவர்களும் கூட அவரது உழைப்பையோ, சின்சியரிடியையோ பயமின்மையையோ, ஆபாச எழுத்துக்கள் மற்றும் கிசிகிசுக்கள் உபயோகிக்காது நல்ல முறையில் எழுதுகிறார் என்பதையோ மறுக்க இயலாது.

அரசியலில் தவறு செய்த பலரை அவர் சாடி வந்திருக்கிறார். அவரால் நல்ல அரசியல்வாதி என அடையாளம் காண்பிக்கப்பட்டவர்கள் அவ்வளவு அதிகமாக இல்லை. என் நினைவில் அவர் அவ்வாறு முதலில் அடையாளம் காட்டியது சுதந்திரா கட்சியில் இருந்த எம்.எல்.ஏ. டாக்டர் ஹண்டேயைத்தான். ஒரு கார்ட்டூனில் தமிழக சட்டசபையையே அவராக உருவகம் காட்டியவர் இவர். ஆனால் அவர் ராஜாஜி அவர்களின் மறைவுக்கு பிறகு அண்ணா திமுகவில் சேர்ந்து விசிலடிச்சான் குஞ்சு ரேஞ்சுக்கு செயல்பட்டு.. விடுங்கள்.

பிறகு அடையாளம் காட்டியது பா. ராமச்சந்திரன் அவர்களை. காமராஜ் அவர்களின் அணுக்கத் தொண்டராக இருந்து தமிழகத்தில் காமராஜ் காங்கிரசை அவர் காலத்துக்கு பிறகும் இந்திரா அவர்கள் வேட்டையிலிருந்து காப்பாற்றினார். அவரை அட்டைப் படத்திலேயே போட்டு கௌரவித்தார் சோ. ஆனால் அந்தோ, வெகு சீக்கிரம் அவர் கட்சி மாறி, சத்தியமூர்த்தி பவனை இந்திரா காங்கிரசுக்கு தாரை வார்த்து கொடுத்தார். பரிசாக ஒரு மாநிலத்தின் கவர்னர் பதவியை பெற்றார்.

அதிமுகவில் எஸ்.டி. சோமசுந்தரம் அவர்கள் ஜெயலலிதாவுக்கு எதிராக தன் சுயமரியாதையைக் காப்பாற்றும் முயற்சியில் ஈடுபட்டு அதற்காக சோவால் அட்டைப்பட கார்ட்டூனில் புகழப்பட்டார். ஆனால் அதே எஸ்.டி.எஸ். ஜெயலலிதாவின் தயவுக்காக அவர் வந்த பிரசார வேனின் ஃபுட்போர்டில் தொங்கிக் கொண்டு வந்தார்.

ஒரு கேள்வி பதிலில் சோ அவர்களிடம் அவர் ஏன் சிறந்த அரசியல்வாதிகளை அடையாளம் கண்டுகொண்டு அவர்களை கௌரவித்து எழுதக்கூடாது என கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு அவர் பாதி நகைச்சுவையாகவும் பாதி சீரியசாகவும் தான் யாரையெல்லாம் அவ்வாறு குறிப்பிட்டாரோ அவர்கள் உடனேயே தங்கள் செய்கையால் தங்கள் நல்ல பெயரை கெடுத்து கொண்டு இவர் மூக்கை உடைத்து விடுகின்றனர் என பதிலளித்தார்.

கடைசியாக கம்யூனிஸ்ட் தலைவர் நல்லக்கண்ணுவை நல்ல அரசியல்வாதியாக அடையாளம் காட்டினார். என்ன ஆகிறதோ பார்ப்போம்.

சோவின் இந்த ரியேக்சன் பல முறை வேவ்வேறு தருணங்களில் பார்த்துள்ளேன். துக்ளக் மீட்டிங் ஒன்றிலும் இதை வெளியிட்டதாக ஞாபகம். அப்போது எல்லோரும் சிரித்தோம். ஆனால் சோ மட்டும் சிரிக்கவில்லை. அது என்ன சமாச்சாரம் என்பது இப்போதுதான் எனக்கும் புரிகிறது.

இதில் டோண்டு ராகவன் எங்கு வந்தான்? அதைக் கூறுவதுதான் இந்தப் பதிவு. எனது டோண்டு பதில்கள் 25.04.2008 பதிவில் இவ்வாறு கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு எனது பதிலும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது:

"கண்ணன், பாங்காக்
1. தமிழகத்தைச் சேர்ந்த தற்போதுள்ள மத்திய அமைச்சர்களில் யார் சிறப்பாக பணியாற்றுகிறார்கள்? உங்கள் அளவில் ஒவ்வொருவருக்கும் எவ்வளவு மார்க் போடுவீர்கள் (Out of 10) இந்தியா டுடே பாணியில்).
அப்படியெல்லாம் மதிப்பெண் தர எனக்கு ஒரு தகுதியும் இல்லைதான். இருப்பினும் ப.சிதம்பரமும் டி.ஆர். பாலுவும் அன்புமணியும் மனதைக் கவர்கின்றனர்".

முதலில் டி.ஆர். பாலு எனது மூக்கை உடைத்தார். தன் குடும்பத்தினர் நலம்தான் பொது நலம் என வாதாடி, சரித்திரமே படைத்தார். அன்புமணி தனது தனிப்பட்ட விரோதம் காரணமாக ஒரு சட்டத் திருத்தம் வரக் காரணமாக இருந்து அது சுப்ரீம் கோர்ட்டால் நிராகரிக்கப்பட்டு வேறுவித பெருமை அடைந்தார். ப.சிதம்பரத்தை என்னவென்று கூறுவது? கோல்ட் க்வெஸ்ட் விவகாரத்தில் அவரது மனைவி நளினி சிதம்பரம் அளித்த சான்றிதழால் பலர் ஏமாந்ததாகக் கூறுகின்றனர். ஆனால் அது பற்றி அப்புறம் பேச்சு இல்லை. சிதம்பரம் அவர்கள் நிதியமைச்சராக தொடரும் வரையில் இது சம்பந்தமாக ஏதேனும் நடக்கும் எனத் தோன்றவில்லை.

இப்போதுதான் சோ அவர்களின் frustration எனக்கு புரிகிறது. இந்த அழகில் முரளி மனோஹர் வேறு வந்து கத்துகிறான். "டோண்டு ராகவனுக்கு இதுவும் வேணும் இன்னமும் வேணும்" என்று.

அன்புடன்,
டோண்டு ராகவன்

24 comments:

வால்பையன் said...

சோ அவர்கள் மோடி அவர்களை கூடத்தான் நல்ல அரசியல்வாதி என்கிறார்
அந்த கணிப்பும் தவறாகுமா?

வால்பையன்

dondu(#11168674346665545885) said...

மோடி எல்லாம் தனி க்ளாஸ் என்று நினைக்கிறேன். மேலும் அவர் அப்படியே இருக்க வேண்டும், அதுதான் குஜராத்துக்கும் நாட்டுக்கும் நல்லது என நம்புகிறேன். பார்ப்போம், நல்லதையே நினைப்போமே.

அன்புடன்,
டோண்டு ராகவன்

வால்பையன் said...

இங்க பாருங்க காமெடிய

வால்பையன்

dondu(#11168674346665545885) said...

வால்பையன் அவர்களே,

என்ன செய்யறது, சிலபேருக்கு என்னுடைய ஹிட்ஸ்களை ஏத்தணும்னு வேண்டுதல் போல. அதுக்காக அவரது எஜமானன் கிட்ட உதை வாங்காம இருப்பார்னு நம்பறேன்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

T.V.ராதாகிருஷ்ணன் said...

ராமகிருஷ்ண ஹெக்டே வை கூறினார்.கடைசிவரை சிறந்த அரசியல்வாதியாகவே அவர் திகழ்ந்தார்.

அருப்புக்கோட்டை பாஸ்கர் said...

சார்,
அவரால் நேர்மையான அரசியல்வாதிகளாக அடையாளம் காணப்பட்டு அதை கடைசிவரை காப்பாற்றியவர்களும் உண்டு
1 ) திரு. மொரார்ஜி தேசாய்
2) திரு. சந்திரசேகர்
3)திரு. ராமகிருஷ்ண ஹெக்டே
அன்புடன்
பாஸ்கர்

Unknown said...

வால்பையன் உங்க லின்க் super.
காண்டு கஜேந்திரன் வாழ்க.

puduvaisiva said...

Mr.Doondu are you belive cho.Ramasawy ?? you know he was one of comedy Actor that is

so you dont give any valuve that felow.

you know only Govt Libiary blongs to that book not buy many people in tamilnadu ok.

please wirte useful article Mr.Doondu not waste your time like this cho.

periyamudan
siva
pondy.

dondu(#11168674346665545885) said...

சிவா அவர்களே,

காமெடி ஆக்டராக இருந்தது குற்றமா? அது சோவின் ஒரு பக்கம் மட்டுமே. அவருக்கு வேறு பக்கங்களும் உண்டு. அதையெல்லாம் கவனிக்காது பேசுவது உங்கள் அறியாமையைத்தான் குறிக்கிறது. உங்களுக்காக பரிதாபப்படுகிறேன்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

மெய் புங்காடன் said...

டோண்டு சார், நான் 1970ல இருந்து எல்லாம் துக்ளக் படிக்கலைனாலும், அஞ்சு வருச பாக்கறேன், கலைஞர கால வாரறது எல்லாத்தையும் கொளப்பறது தவிர ஒன்னும் உருப்படியா இல்ல...
ஒரு தனி ஆளு மேல இப்படி சேறு பூசறது நல்ல பத்திரிக்கையோட வழக்கமில்ல...
கொஞ்சம் சீரியச போச்சா.. அறிவாலயா அண்ணன் லக்கிலுக்கு நக்கல படிங்க...

dondu(#11168674346665545885) said...

//நான் 1970ல இருந்து எல்லாம் துக்ளக் படிக்கலைனாலும், அஞ்சு வருசமா பாக்கறேன்,//

அதுதான் உங்களுக்கும் எனக்கும் உள்ள வித்தியாசம். நான் 38 ஆண்டுகளாக பார்த்து விட்டு எழுதுகிறேன். நீங்கள் அப்படி இல்லை. அவ்வளவுதான்.

கடந்த ஐந்து வருடங்களில் அவர் பல முறை கலைஞரை புகழ்ந்தும் எழுதியுள்ளார். சேறு பூசுவது எல்லாம் அவர் ஸ்டைல் அல்ல. அரசியல் ரீதியாக கோமாளித்தனம் செய்தால் அதை எழுதுவார், மற்றப்படி ஒருவர் தனிப்பட்ட வாழ்க்கையில் நடக்கும் விஷயங்களை எழுத மாட்டார்.

முக்கியமாக அவர் 1975-ல் எடுத்த நிலைப்பாடை பற்றி நான் எழுதியிருப்பதையெல்லாம் பார்த்துவிட்டு வரவும். சுட்டி? 'சோ' என்னும் லேபலுக்கு கீழே பார்த்து கொள்ளவும்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

மாயவரத்தான் said...

மற்றொரு பதிவில் கருணாநிதியை சோ சென்று சந்தித்ததற்கு ஒரு ஆள் பின்னூட்டம் : 'நூத்து சொச்சம் அச்சடிக்கப்படுவதற்கு பத்திரிகையாளன் என்று பெயரா?' என்று.

ரெண்டரை சொச்சம் பேரு படிக்கும் வலைப்பதிவில் எழுதும் உனக்கே (அந்த ஆளை சொன்னேன்!) இப்படி இருக்கும் போது நூத்து சொச்சம் (அதில் ஒவ்வொருவரும் பத்தாயிரம் சொச்சத்துக்கு சமம்) சோ-வுக்கு எப்படி இருக்கும்?

இன்னொரு விஷயம் கவனித்தீர்களா?

கருணாநிதி இது வரைக்கும் இப்படி மாற்று கருத்து கொண்டவர்களை என்றைக்காவது சென்று சந்தித்தது உண்டா? - எம்.ஜி.ஆர். இறந்த தினத்தன்று நீலிக் கண்ணீர் வடித்தது தனிக் கதை!

dondu(#11168674346665545885) said...

என்ன செய்வது மாயவரத்தான் அவர்களே. இப்படித்தான் சோ சேறு பூசுகிறார் என்று கூறிக் கொண்டே அவர்கள்தான் சேறு பூசுகிறார்கள்.

ஆ ஊ என்றால் பாப்பான் என்று பேசுவார்கள். இப்பதிவுக்கு வந்து நிராகரிப்பட்ட பல பின்னூட்டங்கள் இப்படிப்பட்டவைதான். அவற்றை பிரசுரிப்பது கூட அவற்றுக்கு தேவையற்ற பப்ளிசிடி தந்து விடும்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

dondu(#11168674346665545885) said...

//அவரால் நேர்மையான அரசியல்வாதிகளாக அடையாளம் காணப்பட்டு அதை கடைசிவரை காப்பாற்றியவர்களும் உண்டு
1 ) திரு. மொரார்ஜி தேசாய்
2) திரு. சந்திரசேகர்
3)திரு. ராமகிருஷ்ண ஹெக்டே//

உண்மைதான். ஆனால் ஒன்று அவர்களில் ஒருவரும் தமிழகத்தைச் சேர்ந்தவர் அல்ல.

அப்படியென்று சோ குறிப்பிட்டு எழுதாவிட்டாலும், அவர் இந்த விஷயத்தில் உதாரணமாகக் காட்டியவர்கள் எல்லோருமே தமிழகத்தைச் சேர்ந்தவர்களே.

அன்புடன்,
டோண்டு ராகவன்

dondu(#11168674346665545885) said...

ஒரு சிறு திருத்தம். காமராஜ் மற்றும் ராஜாஜி. முன்னவருடன் சோ நன்றாக பழகியவர். அவர் சோ கூறியதற்கு ஏற்ப நல்ல அரசியல்வாதியாகவே இருந்து விட்டு சென்றார்.

ராஜாஜி அவர்கள் காந்தி ரேஞ்சுக்கு உயர்ந்த மனிதர். அவரைப் பற்றி கூறவே வேண்டாம்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

அருப்புக்கோட்டை பாஸ்கர் said...

//ராஜாஜி அவர்கள் காந்தி ரேஞ்சுக்கு உயர்ந்த மனிதர்.//


காந்தி இறந்து இத்தனை ஆண்டுக்கு அப்புறமும் அவரை இது போல் தூற்றாதீர்கள்! . இது அழகல்ல !!

dondu(#11168674346665545885) said...

மன்னிக்கவும் அறுவை பாஸ்கர்,

அது உங்கள் கருத்து. உங்கள் ஒப்புதல்கள் எல்லாம் மாமனிதர் ராஜாஜிக்கு தேவையில்லை.

அன்புடன்,
டோண்டு ராகவன்

அருப்புக்கோட்டை பாஸ்கர் said...

காமராஜர் மேல் இருந்த வெறுப்பால் ( ஈகோ வினால் ) திராவிட கட்சிக்கு ஓட்டு கேட்டவர் அவர் என்பதை பதிவு பண்ணி கொள்கிறேன் .

அருப்புக்கோட்டை பாஸ்கர் said...

//மன்னிக்கவும் அறுவை பாஸ்கர்,//


நான் அருவை (அருப்புகோட்டை) பாஸ்கர் என்பதை தெரிவித்து கொள்கிறேன்

dondu(#11168674346665545885) said...

பெயரைத் தவறாக எழுதியதற்கு முதலில் மன்னிக்கவும் அருவை பாஸ்கர் அவர்களே.

1952-லிருந்து 1969- பிப்ரவரி வரை நான்கு சிறந்த நபர்கள் முதலமைச்சர்களாக இருந்தது தமிழகத்தின் பாக்கியமே.

தமிழக அரசியலில் காமராஜரும் ராஜாஜியும் இரு துருவங்கள் என்பது தெரிந்ததே. ராஜாஜி அவர்களும் சத்தியமூர்த்தி அவர்களும் எதிரெதிர் முகாம்களில் இருந்தவர்கள். சத்தியமூர்த்தி அவர்களைத் தன் குருவாக எண்ணியவர் காமராஜர் அவர்கள். ஆக ராஜாஜிக்கும் காமராஜருக்கும் கருத்து வேற்றுமைகள் அனேகம். ஆயினும் தனிப்பட்ட முறையில் இருவருமே ஒருவரை ஒருவர் மதித்தனர்.

இந்த இரு மாமனிதர்களை பற்றி மதிப்புக்குரிய சோ அவர்கள் தனது “காமராஜை சந்தித்தேன்” என்ற புத்தகத்தில் எழுதியதை இங்கு தருகிறேன்.

"கடுமையான மோதல்கள், அவற்றால் ஏற்பட்ட மனகசப்புகளை மறுப்பதற்கில்லை. ஆனால் இவற்றையெல்லாம் மிஞ்சி ராஜாஜியின் அரசியல் ஞானத்தையும் அவரது அறிவையும் மனதில் நிறுத்தி காமராஜர் அவரை வெகுவாக மதித்தார். ராஜாஜி ஒரு அறிவாளி என்பதை விட அவர் ஒரு மேதாவி என்பதே பொருந்தும். அரசியல் அறிவில் அவரை மிஞ்சக் கூடியவர்கள் வெகு சிலரே இருக்க முடியும். நிர்வாகத் திறமையிலும் அவ்வாறே. ஆனால், அறிவாளிகளுக்கெ உரித்தானப் பிடிவாதமும் ராஜாஜியிடம் உண்டு. அவர் ஒரு போதும் தனது கொள்கைகளுடன் சமரசம் செய்து கொண்டதில்லை. ஆகவே வளைந்து கொடுத்து, எதிராளியைத் தட்டி வேலைவாங்குவதில் அவர் அவ்வளவாக ஈடுபாடு செலுத்தவில்லை. ஆனால் காமராஜரோ விட்டுப் பிடித்து காரியத்தை நிறைவேற்றுவதில் வல்லவர்".

ஆகவே 1971 தேர்தலில் ராஜாஜியின் சுதந்திரா கட்சியும் காமராஜரின் பழைய காங்கிரஸும் சேர்ந்து கூட்டமைத்ததுதான் அத்தேர்தலில் படுதோல்வி அடைந்ததற்குக் காரணமாக இருந்திருக்குமா என்பது சோ அவர்களின் ஐயம். ஆகவே இந்த நிலையிலாவது ராஜாஜியுடனான கூட்டை முறிச்சிக்கலாமே என்ற மெல்லிய எண்ணம். இதை அவர் மெதுவாக காமராஜ் அவர்களிடமே கேட்டு வைக்க, சீறி எழுந்தார் அவர். சோ அவர்களது வார்த்தைகளில்:

"காமராஜின் பெரிய மனது திறந்தது. காமராஜ் என்ற அரசியல்வாதிக்கு அப்பாற்பட்டு நின்ற காமராஜ் என்ற மனிதர் விஸ்வரூபம் எடுத்து நின்றார். பெருந்தன்மை வார்த்தைகளாக உருவெடுத்து என் முன்னே நர்த்தனமாடியது. 'தோத்துட்டோம்கிறதுக்காக எல்லாத்தையும் மறந்துடறதா? நம்ம தோத்ததுக்கு ஆயிரம் காரணம் இருக்கும். முதல்லே கையிலே பணம் இல்லே. ஏமாத்தறவங்களைத்தான் ஜனங்க நம்புறாங்கன்னு ஆயிடுச்சு. எல்லாத்துக்கும் சேத்து ராஜாஜி தலை மேலே பழியைப் போடச் சொல்லறீங்களா? ஜெயிப்போம்னு நெனச்சு தானே அவரோட சேந்தோம்னேன்! ஜெயிக்கணும்னா வேண்டியவரு; ஜெயிக்காட்டி வேண்டாதவரா? அவர் என்ன கெடுதல் செய்துப்புட்டாரு? அவரும் நானும் நிறைய விஷயங்கள்லே ஒத்துப் போறதிலலே. ஆனா தேசம் நல்லா இருக்கணும், மக்கள் நல்லா இருக்கணும்னு அவருந்தானே விரும்பறாருன்னேன்? அதை ஒத்துக்கிட்டுத்தானே கூட்டு சேர்ந்தோம்?"

"இது எல்லாத்துக்குமா சேர்த்து ராஜாஜியாலேதான் தோத்துட்டோம்னு நினைச்சிக்கிட்டா யாரை ஏமாத்தப் போறோம்? அவரு நம்ம கூட இருக்காருங்கறத்துக்காவே, அந்த மரியாதைக்காகவேகூட நமக்கு அதிகமா ஓட்டு வந்திருக்கலாம் இல்லியா?"

"...காமராஜின் பரந்த உள்ளம் அலைகடல் போல் அங்கு பரந்து விரிந்து கிடந்தது. அந்தக் கடலோரத்தில் நின்று அரசியல் விமரிசகன் என்ற முறையில் நான் குறுகிய நோக்கோடு கூறிய வார்த்தைகளை நினைத்து வெட்கித் தலை குனிந்து அந்தக் கடலின் அலைகளில் என் கால்களை நனைத்து, பாவத்தைக் கழுவிக் கொண்டேன்."

1967 தேர்தலில் காமராஜர் தோல்வி கண்டார். தி.மு.க.வைச் சேர்ந்த பெ.ஸ்ரீனிவாசன் வெற்றி பெற்றார் அல்லவா. அந்தத் தேர்தலில் வெற்றி பெற்ற வேட்பாளர் என்னமோ தான் பெரிய சாதனை படைத்ததைப் போல எண்ணிக் கொண்டு பீற்றிக் கொண்டு காமராஜரது நடவடிக்கைகளியெல்லாம் தரக்குறைவாக விமரிசனம் செய்து வந்தார். அவரைத் தனியாகக் கூப்பிட்டு அண்ணா அவர்கள் கண்டித்தார். பிறகு அவர் தயாரித்த அமைச்சரவைப் பட்டியலில் அந்த வேட்பாளரின் பெயர் இல்லை. அந்த வேட்பாளர் ராஜாஜி அவர்களிடம் போய் தனக்காக அண்ணா அவர்களிடம் சிபாரிசு செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். அதற்கு மூதறிஞர் ராஜாஜி தெரிவித்தக் கருத்து இது:

"கென்னடி ரொம்ப ரொம்பப் பெரிய மனுஷன்தான. ஒரே ஒரு துப்பாக்கிக் குண்டு அந்த ஆளை கீழே சாய்ச்சுடுச்சு. அதுக்காக அந்த புல்லட்டை எடுத்து வெச்சி அங்கே எவனாவது கொண்டாடினானா என்ன?"

மற்றப்படி 1967-ல் ராஜாஜி அவர்களும் காமராஜ் அவர்களும் எதிரெதிர் முகாம்களில் இருந்தது ஒரு காலத்தின் கட்டாயமே. அதற்காக எல்லாம் தனிப்பட்ட முறையில் முறித்து கொண்டு போவதற்கு அவர்கள் என்ன ஜெயலலிதா கருணாநிதியா என்ன?

அன்புடன்,
டோண்டு ராகவன்

அருப்புக்கோட்டை பாஸ்கர் said...

நானும் என் கருத்துக்கு வலு சேர்க்கும் என்று காமராஜை சந்தித்தேன் புத்தகத்தை மீண்டும் ஒருமுறை வாசித்தேன் . நீங்கள் எழுதியுள்ளது மூன்றாம் அத்தியாயத்தில் வருகிறது .

அவரின் "குலக்கல்வி" கொள்கையினை பற்றி உங்கள் கருத்து என்ன ?
பலராலும் அக்கொள்கை ஏற்றுக்கொள்ள படவில்லை என்பதை ஒத்து கொள்கிறீர்களா ? ( காமராஜர் உட்பட !)

dondu(#11168674346665545885) said...

மாமனிதர் ராஜாஜியின் கல்வித் திட்டத்தைப் பற்றி இன்னொரு முறை பேச வாய்ப்பு அளித்ததற்கு மிக்க நன்றி அருவை பாஸ்கர் அவர்களே.

இப்போது மிகத் தவறாகப் புரிந்துக் கொள்ளப்பட்ட ராஜாஜி அவர்களின் கல்வித் திட்டத்தைப் பற்றிப் பேசுவேன். 1953 ஆம் வருடம் சென்னை மாகாணத்தின் நிலையைப் பார்ப்போம்:

குழந்தைகள் இரண்டு வேளையும் பள்ளிக்கு வந்து கொண்டிருந்த முறை அமுலில் இருந்தது. பல ஏழைக் குழந்தைகள் பள்ளிக்கே வர இயலாத நிலை. நிதி நிலைமை ரொம்ப மோசமாக இருந்தது. 40 லட்சம் குழந்தைகள் பள்ளி செல்லும் வயதில் இருந்தனர். பல பள்ளிகளுக்குக் கட்டிடங்கள் இல்லை, பயிற்சி பெற்ற ஆசிரியர்கள் இல்லை.

அப்போது ராஜாஜி அவர்கள் முன்னிறுத்திய ஆரம்பக் கல்வி வெறும் ஏட்டளளவில் நிற்காமல் தொழில் சார்ந்ததாயிற்று. இரண்டு வேளைகளும் பள்ளி இருந்ததால், பல ஏழைப் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளைப் பள்ளிக்கு அனுப்புவதையே தவிர்த்தனர். ஏனெனில் தங்கள் தொழில்களில் அவர்கள் தங்கள் பிள்ளைகள் உதவி செய்ய வேண்டும் என்று எதிர்ப்பார்த்தனர். மேலும் இரு வேளையும் வகுப்புக்கு வர வேண்டிய நிலையில் ஒரு குறிப்பிட்ட அளவு மாணவர்களுக்கு மட்டும் கல்வி தர முடிந்தது.

ராஜாஜி அவர்களின் திட்டம் இந்த எல்லா பிரச்சினைகளுக்கும் ஒரே வீச்சில் தீர்வு கண்டது. அதாவது, மாணவர்கள் தினம் மூன்று மணி நேரம் மட்டுமே வகுப்புக்கு வர வேண்டியது. அந்த தினசரி அவகாசத்தில் பெறும் கல்வி அவர்களுக்கு முழுப்பரீட்சை எழுதும் அளவுக்கு பாடம் கற்பிக்கப் போதுமானதாக இருந்தது. காலையில் ஒரு பேட்ச் வகுப்புக்கு வர வேண்டியது, மாலையில் இன்னொரு பேட்ச். இதனால் 100 பேருக்கு பதில் 200 பேருக்கு ஒரு பள்ளியில் கல்வி அளிக்க முடிந்தது. அதே கட்டிடம், அதே மற்ற வசதிகள். ஆனால் பலன் இரு மடங்குப் பேருக்கு. பிள்ளைகள் வகுப்புக்குச் செல்லாத நேரத்தில் ஏதாவது தொழில் கற்றுக் கொள்ளலாம் என்றுக் திட்டமிடப்பட்டது. பள்ளிகளுக்கு அனுப்பாமல் தங்களிடமே தொழில் கற்றுக் கொள்வதற்காக வைத்திருக்கும் பெற்றோரிடம் தினசரி 3 மணி நேரத்துக்காவது பிள்ளைகளைப் பள்ளிக்கு அனுப்பலாம் என்பது வலியுறுத்தப் பட்டது. முதலில் ஆரம்ப வகுப்புகளுக்கு மட்டும் இத்திட்டம் அமல் செய்வது என்றும், பிறகு படிபடியாக நடுநிலை மற்றும் உயர்நிலைப் பள்ளிகளுக்கு இதை விரிவுபடுத்தலாம் என்றும் திட்டமிடப்பட்டது. கிராமங்களில் கல்வி நிலைமை மிகவும் மோசமாக இருந்தது. ஆகவே இத்திட்டம் சோதனை முறையில் அங்கு மட்டுமே நடத்த முடிவு செய்யப் பட்டது.

என்னத் தொழில் கற்பது? இதில் மாணவர்களது பெற்றோர்களுக்கு பூரண சுதந்திரம் கொடுக்கப் பட்டது. அதற்கு முக்கியக் காரணம் அப்போதிருந்த ஆசிரியர்கள் எல்லோரும் மக்காலே முறையில் கல்வி கற்று பேனா பிடிக்கும் வேலைகளுக்கே லாயக்காய் இருந்தனர். ஆதாரக் கல்வி அளிக்கவே பணம் இன்றிக் கஷ்டப்பட்ட அரசு கண்டிப்பாகத் தொழில் கல்வியைப் பள்ளிகளில் அளிக்கும் நிலையில் இல்லை. அதற்கான கட்டிட அல்லது வேறு வசதிகள் இல்லவே இல்லை. ராஜாஜியின் எதிர்ப்பார்ப்பு என்னவென்றால், தன் சுயநலத்துக்காகவாவது ஒரு தகப்பன் தன் மகனுக்க்குத் தான் செய்யும் தொழிலில் சிறந்தப் பயிற்சியே அளிப்பான் என்பதே.

உண்மையை கூறப்போனால் இக்கல்வி இருக்கும் வசதிகளை முடிந்த அளவுக்கு எவ்வளவு பேருக்கு அளிக்க முடியுமோ அத்தனைப் பேருக்கு அளிப்பது என்பதையே முக்கிய நோக்கமாகக் கொண்டிருந்தது. ஏற்கனவே கூறியது போல எந்தத் தொழிலைக் கற்பதென்பது பெற்றோர்கள் விருப்பத்துக்கே விடப்பட்டது. தச்சன் மகன் வேறு தொழில் கற்கலாம் அல்லது ஒன்றுமே கற்றுக் கொள்ளாமலும் இருக்கலாம். ஒன்றுமே கற்றுக் கொள்ளவில்லை என்பதற்காக யாரும் சம்பந்தப்பட்டக் குழந்தைகளை தண்டிக்கப்போவதில்லை. அத்தொழில்களில் தேர்வும் கிடையாது. அந்தத் தரத்தில் ஒரு பள்ளியால் நிச்சயம் பயிற்சி தந்திருக்க முடியாது.

ஒரு தொழில் கற்றுக் கொண்டால் கைகளுக்கு ஒருங்கிணைந்து வேலை செய்யும் திறன் வரும். மூன்று மணி நேரக் கல்வியே பரீட்சைகளில் தேர்வு பெறப் போதுமானது. ஆகவே மாணவர்கள் பள்ளியிறுதித் தேர்வு எழுதவோ மேற்படிப்பு படிக்கவோ எந்த விதத் தடையும் இல்லை.

நிறையப் பேருக்குத் தெரியாத இன்னொரு விஷ்யம். 1953 - 54 கல்வியாண்டில் இம்முறை நிஜமாக அமலுக்கு வந்தது. பல ஆசிரியர்கள் பள்ளிகளில் மாணவர் வருகையில் முன்னேற்றத்தைப் பார்த்தனர். கூடிய சீக்கிரம் நகரங்களுக்கும் இம்முறையை விஸ்தரிக்க வேண்டும் என்றக் கோரிக்கையும் எழுந்தது.

21 ஜூன் 1953 கல்கி இதழில் கிண்டி பொறியியல் கல்லூரியின் அப்போதைய முதல்வர் கர்னல் எஸ். பால் கூறியதன் சாரம். இக்கல்விமுறை அவர் மாணவராக இருந்தப்போது யாழ்ப்பாணத்தில் காரை நகரில் செயல்பட்டது. கல்வியின் தரம் அருமை. பால் அவர்கள் சக்கிலிய மற்றும் தச்சுத் தொழிலில்களில் தேர்ச்சி பெற்றார். அது அவர் மேல் படிப்புக்குச் செல்லத் தடையாக இல்லை. சொல்லப் போனால் அவர் தன்னம்பிக்கை அதிகமானது. இவ்வாறு கூறியது பொறியியல் கல்லூரி முதல்வர்.

சில புள்ளி விவரங்களைப் பார்ப்போம். 1953-ல் பள்ளி செல்லும் வயதில் 80 லட்சம் குழந்தைகள் இருந்தனர். அவர்களில் 70 லட்சம் பேர் கிராமத்தில். கிராமத்துக் குழந்தைகளில் 38.5 லட்சம் குழந்தைகள் பள்ளியில் சேர்க்கப்படுவதில்லை.மீதி 32.5 லட்சம் குழந்தைகளில் 10 லட்சம் பேர் மட்டும் கல்வியைத் தொடர்கின்றனர். மற்றவர்கள் படிப்பைப் பாதியில் விடுபவர்கள். ஆக 60 லட்சம் குழந்தைகளைப் பற்றி நாம் கவலைப்பட வேண்டும். அவர்களுக்கு எப்படியாவது பகுதி நேர படிப்பையாவதுக் கொடுப்பதே ராஜாஜி அவர்களின் புதுக் கல்வித் திட்டத்தின் நோக்கம்.

எப்படியும் தங்கள் தொழிலில் தங்களுக்கு உதவியாக இருப்பதற்காகக் குழந்தைகளின் படிப்பை நிறுத்தும் பெற்றோர்கள், குழந்தைகளைப் பள்ளிக்கு அனுப்பும் சாதகமான மனநிலைக்கு வருவதற்காகவே எல்லா முயற்சிகளும் எடுக்கப்பட்டன. இம்முறையை ராஜாஜி அவர்கள் எங்கிருந்தோ திடீரென்று கொண்டு வந்துவிடவில்லை. அச்சமயம் பத்தாண்டுகளுக்கும் மேலாக பரிசீலனையில் இருந்ததுதான் அத்திட்டம். பல கல்வி வல்லுனர்களிடம் ஆலோசனைக் கேட்டுத்தான் இம்முறை பரீட்சார்த்த முறையில் அமலுக்கு வந்தது.

கையில் ஒரு தொழில் இருப்பது எவ்வளவு சுயநம்பிக்கைத் தரும் என்பதை உணர நிஜமாகவே ஒரு தொழிலைத் தெரிந்து வைத்துக் கொண்டால் புரிந்து கொள்ளலாம். ராஜாஜி அவர்கள் கூறிய கல்விமுறை சரியானபடி நிறைவேற்றப் பட்டிருந்தால் என்ன நடந்திருக்கும் என்பதைப் பார்ப்போம். மக்காலே கல்வி முறையால் நடந்த விபரீதங்கள் இல்லாமல் போயிருக்கும்.

அவை என்ன? தகப்பன் நெற்றி வேர்வை நிலத்தில் விழப்பாடுபடுவான். பிள்ளை ஏட்டுக் கல்வி படிப்பான். டிகிரியும் வாங்கி விடுகிறான் என்று வைத்துக் கொள்வோம்? அத்தனைப் பேருக்கும் வெள்ளைக் காலர் வேலைக்கு எங்குப் போவது? படித்த மாணவர்களும் கையில் அழுக்கு ஏறும் தந்தையின் தொழிலைச் செய்யும் மனநிலையில் இல்லை. மகன் பந்தாவாக ஊரைச் சுற்றி வர, தகப்பன் உடல்நிலை பாதிக்கப்படுவதுதான் மிச்சம். ராஜாஜி கூறிய முறையில் தொழிலுக்கு மரியாதை வந்திருக்கும். ஏட்டுப் படிப்பும் படித்ததால் அவர்களை யாரும் சுலபத்தில் ஏமாற்றியிருக்க முடியாது. வேலை கிடைக்கிறதோ இல்லையோ கைவசம் தொழில் இருக்கவே இருக்கிறது. இந்த அருமையானக் கல்வி முறைக்குத்தான் குலக்கல்வி என்றுப் பெயரிட்டு கூக்குரலிட்டனர். பின்னால் வந்தத் தலைவர்கள் அதை அவசரம் அவசரமாகக் கைவிட்டதுதான் பெரிய சோகம்.

பின்னூட்டங்களுடன் பார்க்க: http://dondu.blogspot.com/2006/08/2.html

அன்புடன்,
டோண்டு ராகவன்

Anonymous said...

மீண்டும் முரளி மனோகரின் திக் விஜயம் உண்டா?(வலைபதிவுகளில்)கர்நாடக இடைத்தேர்தலில் வேறு B.J.P போலி மதவாத எதிர்ப்பு சக்திகளை எல்லாம் முறியடித்து கோகனேக்கல் குடிநீர் திட்ட எதிப்பாளர்"
எடியூரப்பா முதல்வராய் ............

இனி மாநில தண்ணிர் பிரச்சனை சூடுபிடிக்கும் போல் உள்ளதே.
துக்ளக் ஆசிரியர் சோ வேற கலைஞர் அவர்களைசந்தித்துள்ளார்.
அதிமுகாதலைவி காங்கிரஸ் தலைவியை நெருங்கிவிட்டதாக தகவல்கள் .............

சோ அவர்களுக்கு ஜே
சுப்ரமணிய சுவாமிக்கு ஜே
டோண்டு சாருக்கு ஜே

dondu(#11168674346665545885) said...

முரளி மனோஹர் வராமலா, அவ்வப்போது டோண்டுவின் பதிவுகளில் வந்து அவனை வெறுப்பேற்றாவிட்டால், அவனுக்கு சோறு எப்படி இறங்கும்?

அன்புடன்,
டோண்டு ராகவன்

 

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது