8/08/2008

டோண்டு பதில்கள் 08.08.2008

எழில் அரசு:
பாரதி இப்போது இருந்தால் இதற்கு என்ன சொல்லியிருப்பார்?
(பாரதி என்ன சொல்லியிருப்பாரோ நான் அறியேன். இந்த டோண்டு ராகவன் தான் நினைப்பதைக் கூறிடுவான்).
1. உள்ள நிறைவில் ஓர் கள்ளம் புகுந்திடில் உள்ளம் நிறைவாமோ?
பதில்: தேள் கொட்டிய திருடன் மனதில் இருப்பது கள்ளம்தானே. ஆனால் கள்ளம் புகுந்துவிடில் நன்றாகவே உறங்கும் உள்ளம். ஏனெனில் உள்ளத்தில் நல்ல உள்ளம்தான் உறங்காதென்பது வல்லவன் வகுத்ததடா, கர்ணா.

2. வாழ்வை நினைத்த பின் தாழ்வை நினைப்பது வாழ்வுக்கு நேராமோ?
பதில்: யாருடைய தாழ்வை?

3. தாழ்வு பிறர்க்கு எண்ண, தான் அழிவான் என்ற சாத்திரம் கேளாயோ?
பதில்: சொன்னது பாரதியாராக இல்லாதிருந்தால் யாரோ யாரையோ வைத்து காமெடி பண்ணுகிறார்கள் என எண்ணியிருப்பேன்.

4. சிப்பியிலே நல்ல முத்து விளைந்திடும் செய்தி அறியாயோ?
பதில்: அறுபதினாயிரம் மனைவியரை மணந்தவருக்குப் பிறந்தவனே அந்த ஏக பத்தினிவிரதன்.

5. நேருக்கு அருச்சுனன் தேரில் கசை கொண்டு நின்றதும் கண்ணன் அன்றோ?
பதில்: பாவம் எல்லாம் போகட்டும் கோவிந்தனாம் கண்ணனுக்கே, தூண்டுதலாக இருந்ததற்காக, என அவனே கூறியதாகக் கேள்வி.

6. தின்ன வரும் புலி தன்னையும் அன்போடு சிந்தையில் போற்றிடுவாய்
பதில்: முதலில் புலியைக் கொன்றிடுவோம், பிறகு வேண்டுமானால் அன்புடன் அதன் தோலை ஆசனமாக செய்து கொள்வோம்.

7. புகை நடுவினில் தீ இருப்பதைப் பூமியில் கண்டோமே
பதில்: இதைத்தான் நெருப்பில்லாமல் புகையாது என்றார்களோ?

8. குப்பையிலே மலர் கொஞ்சும் குருக்கத்திக் கொடி வளராதோ?
பதில்: தாராளமாக வளரும். நானே பார்த்துள்ளேன்.

10. தெள்ளிய தேனில் ஓர் சிறிது நஞ்சையும் சேர்த்த பின் தேனாமோ?
பதில்: ஒரு குடம்பாலில் ஒரு துளி விஷம்!


ரமணா:
சுதந்திரம் அடைந்த 60 ஆண்டுகளில் தவறு இழைத்தவர்களுக்கு " அன்னியன்" பாணியில் "கருட புராணம்' சொல்லும் தண்டனையை விளக்கமாய் சொல்லவும்:
1.உணவுப் பொருட்களை பதுக்குவோர்

பதில்: உணவுப் பொருள்களுடன் சேர்ந்து மூட்டையாகக் கட்டுவது.

2. அதைக் கடத்துவோர்
பதில்: அந்த மூட்டைகளை அவர்களையே சுமக்கச் செய்வது.

3. அதை கொள்ளை விலைக்கு விற்போர்
பதில்: அவர்களையே அடிமைகளாக விற்று வயல்களில் வேலை செய்ய அனுப்புவது.

4. இதற்கு உதவும் அதிகாரிகள்
பதில்: பென்ஷன் தராது அலைக்கழியவிடுவது.

5. உதவும் அரசியல் புள்ளிகள்
பதில்: தெருத்தெருவாக இழுத்து சென்று செருப்பால் அடிப்போமா?

6. கண்டும் காணாத பொதுஜனம்
பதில்: அவர்களுக்குத்தான் ஏற்கனவே தண்டனைகள் மேலே கூறிய நபர்கள் மூலம் வந்து விட்டனவே.

7. பணம் புடுங்கும் "வசூல் ராஜக்கள்"(மருத்துவர்கள் - தவறிழைப்போர்)
பதில்: அது என்ன மருத்துவர்கள் என ஒரு சாராரை மட்டும் இழுக்கிறீர்கள்? தவறு செய்வோர் எல்லா துறைகளிலும் உள்ளனரே.

8. உழைக்காத மக்கள்
பதில்: பட்டினி போடுவது. உழைத்தால்தான் சோறு.

9. உழைப்பை உறிஞ்சும் உன்மத்தர்கள்
பதில்: மேலே குறிப்பிட்டுள்ள ஏதேனும் ஒரு தண்டனை.

10. பதிவுலகில் குழப்புவோர்
பதில்: குழப்புவது அவர்தம் ஏகபோக உரிமையா என்ன? அவர்களை குழப்ப எத்தனை மணித்துளிகள் பிடிக்கும்?


நக்கீரன் பாண்டியன்:
1. ஹோகனேக்கல் திட்டம் என்னாச்சு?
கலைஞரைத்தான் கேட்க வேண்டும்.

2. கலைஞரின் மனநிலை?
இது என்னடா மதுரைக்கு வந்த சோதனை!!

3. எடியூரப்பாவின் மனநிலை?
புலிவால் பிடித்த நாயர்.

4. தமிழ் நடிகர்கள் இப்போது?
அடுத்த ஷூட்டிங் எப்போது?

5. கன்னட நடிகர்கள் இப்போது?
அடுத்து வரும் எந்தத் தமிழ் படத்துக்கு வயிறெரியலாம்?

6. தமிழக கட்சிகளின் நிலை? (கூட்டணி)
எந்த மடம் நல்ல மடம்?

7. எதிர்க்ட்சிகளின் நிலை?
இதில் நமக்கு எவ்வளவு ஓட்டுகள் தேறும்?

8. பா.ம.க வின் நிலை?
அவசரப்பட்டு விட்டோமோ?

9. ரஜினியின் மன்னிப்பு பற்றி?
மன்னிப்பெல்லாம் கேட்கவில்லை, வருத்தம்தான் தெரிவித்துள்ளார் என ஒரு கோஷ்டி கூறிக் கொண்டு அலைகிறது. இது கன்னட மக்கள் காதில் விழுந்து விடப்போகிறதே எனது ரஜனிக்கு திக் திக் மனநிலை.

10. பிறரின் விமர்சனம் ரஜினியின் மன்னிப்பு பற்றி?
அவருக்கென்ன கூறிவிட்டார், அகப்பட்டது ரஜனியல்லவா?

அடுத்த வாரம் மீண்டும் சந்திப்போமா?

அன்புடன்,
டோண்டு ராகவன்

21 comments:

Anonymous said...

//10. பிறரின் விமர்சனம் ரஜினியின் மன்னிப்பு பற்றி?
அவருக்கென்ன கூறிவிட்டார், அகப்பட்டது ரஜனியல்லவா?//

good one

வால்பையன் said...

ஆரம்பத்தில் சுவாரிசயமாக சென்றாலும் போக போக போரடிக்கிறது!
காரணம் மற்றவர் கேள்விகளுக்கு பதிலப்பது தான்!
ஆனந்தவிகடனில் நானே கேள்வி நானே பதில் என்று வருகிறது பாருங்கள் அது போல் இந்த மாதிரி கேள்வி கேட்டால் இந்த மாதிரி பதிலளிப்பேன் என்று நீங்களே எழுதலாம்.

என் கேள்விகள் வாறதற்கு காரணம் அரசியலில் ஆர்வம் குறைந்ததே!

இந்த வார கேள்வி
தமிழில் இடண்டு மெய் எழுத்துக்கள் தொடர்ச்சியாக வரக்கூடாது என்கிறார்கள்
உதாரணமாக "இதற்க்கு" ஆனால் நான் வழக்கம் போல் மல்லாக்க படுத்து யோசித்து கொண்டிருக்கும் வேளையில் ஒரு தமிழ் வார்த்தை தோன்றியது. அதில் இடண்டு மெய் எழுத்துக்கள் தொடர்ச்சியாக வருகிறது, எவ்வளவு யோசித்தும் அதற்க்கு மாற்று வழி தெரியவில்லை, எனது சந்தேகம் அது உண்மையிலேயே தமிழ் வார்த்தை தானா?

அந்த வார்த்தை

"அர்த்தம்"


வால்பையன்

dondu(#11168674346665545885) said...

அவ்வாறு செய்வதில் என்ன த்ரில் உண்டு வால்பையன் அவர்களே. மற்றவர் கேள்விகள் என் கட்டுப்பாட்டில் இல்லை, ஆகவே அதுதான் அதிக சவால்.

துபாஷி வேலையும் அப்ப்டித்தானே. எந்த சமயம் என்ன கூறுவார்கள் என்பது நமது கண்ட்ரோலில் இல்லையே. வார்த்தைகள் வர வர அவற்றை மொழிபெயர்க்க வேண்டும் அதுவும் உடனேயே.

பை தி வே உங்கள் கேள்வி அடுத்த வாரத்துக்கான பதிவுக்கு போய் விட்டது, பதிலும் கூறிவிட்டேன். அடுத்த வாரம் வரும்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

வால்பையன் said...

சில கேள்விகள் வேண்டுமென்றே உங்கள் வாயை புடுங்குவதர்க்காகவே கேட்க படுவது போல் எனக்கு தோன்றியது அதானால் சொன்னேன்.

என்ன புத்தகம் படித்து கொண்டிருக்குறீர்கள்

வால்பையன்

dondu(#11168674346665545885) said...

//சில கேள்விகள் வேண்டுமென்றே உங்கள் வாயை பிடுங்குவதற்காகவே கேட்கப்படுவது போல் எனக்குத் தோன்றியது//
தோன்றுவது என்ன, அதுதான் உண்மையே. ஆனால் அதெல்லாம் இந்த டோண்டு ராகவனை அசைத்து விடுமா என்ன?

அன்புடன்,
டோண்டு ராகவன்

வால்பையன் said...

அதியமானின் குழந்தைகளை சென்று பார்த்தீர்களா
குழந்தைகளை கேட்டதாக சொல்லவும்

வால்பையன்

dondu(#11168674346665545885) said...

ரொம்பவும் குட்டிக் குழந்தைகள். வெளி ஆட்கள் கண்படாமல் இருப்பது உத்தமம். தேவைக்கேற்ற அளவே யாருமே குழந்தைகளை நெருங்க வேண்டும். பெரியவர்கள் இது விஷயமாக விதித்தக் கட்டுப்பாடுகள் அர்த்தமுள்ளவை.

அன்புடன்,
டோண்டு ராகவன்

வால்பையன் said...

அதுவும் சரிதான்!
எனக்கு குழந்தைகள் என்றால் உயிர்
நன்றாக பார்த்துக்க சொல்லவும்.
அடுத்த முறை சென்னை வரும் போது
நேரில் பார்க்கிறேன்

வால்பையன்

நல்லதந்தி said...

டோண்டு சார் மன்னிக்கவும்.இப்போது டோண்டு பதில்கள் சலிக்க ஆரம்பித்து விட்ட காரணம் என்ன?.கிண்டல் செய்யாமல் உண்மையைச் சொல்லவும்!

dondu(#11168674346665545885) said...

//இப்போது டோண்டு பதில்கள் சலிக்க ஆரம்பித்து விட்ட காரணம் என்ன?.//
அப்படியா? ஆனால் எனக்கு சலிக்கவில்லையே. ஆகவே உங்கள் கேள்விக்கு பதில் அளிப்பது என் வசம் இல்லை. யாருக்கு சலித்ததோ அவர்கள் கூற வேண்டும் பதிலை.

அன்புடன்,
டோண்டு ராகவன்

வால்பையன் said...

//டோண்டு சார் மன்னிக்கவும்.இப்போது டோண்டு பதில்கள் சலிக்க ஆரம்பித்து விட்ட காரணம் என்ன?.கிண்டல் செய்யாமல் உண்மையைச் சொல்லவும்! //

பார்த்தீர்களா!
மற்றவர்களும் கேட்க ஆரம்பித்து விட்டார்கள். அவர்களுக்கு ஏற்கனவே இந்த எண்ணம் உண்டு. நான் ஆரம்பித்து வைக்க அவர்கள் தொடர்கிறார்கள்.
உணவு பஞ்சம் போல் நாட்டில் கேள்வி பஞ்சம் வந்து விட்டதோ என்னவோ

வால்பையன்

நல்லதந்தி said...

//பார்த்தீர்களா!
மற்றவர்களும் கேட்க ஆரம்பித்து விட்டார்கள். அவர்களுக்கு ஏற்கனவே இந்த எண்ணம் உண்டு. //

வால்! நான் உங்களிடம் நேற்று முந்தினம் பேசும் போது சொன்னதை,இன்று, டோண்டு சாரிடம் சொன்னதற்கு நன்றி!.என்ன இருந்தாலும் நீங்கள் அவருடைய சிஷ்யரல்லவா? :)

வால்பையன் said...

மனிதில் ஒன்றையும் வாயில் ஒன்றையும் வைத்து கொண்டு பேசுவது உண்மையான நட்புக்கு அழகல்ல!
தோன்றியது கேட்டுவிட்டோம், அவரும் பதிலத்து விட்டார்.

வால்பையன்

வால்பையன் said...

//என்ன இருந்தாலும் நீங்கள் அவருடைய சிஷ்யரல்லவா? :)//

அவர் இன்னும் அப்பாயின்மென்ட் ஆர்டர் தரவில்லையே

வால்பையன்

நல்லதந்தி said...

//இதற்கு உதவும் அதிகாரிகள்
பதில்: பென்ஷன் தராது அலைக்கழியவிடுவது.//

என்னங்க இது அநியாயம்! மற்றவர்களுக்கு பல தண்டணை அதிகார வர்கத்துக்கு மட்டும் "உனக்கு மிட்டாய் தரமாட்டேன் ங்கிற தண்டணையா?'.மற்றவர்களை விட இவர்களைத்தான் ரொம்ப நேரம் எண்ணையில் வறுத்தெடுக்க வேண்டும்.(ஹி..ஹி..கருட புராணத்தின் படி)

நல்லதந்தி said...

//யாருக்கு சலித்ததோ அவர்கள் கூற வேண்டும் பதிலை.//

எனக்கு?

கெட்டவனாயிருந்தா: சூப்பர்!

நல்லவனாயிருந்தா : கேள்விகளுக்கு, அதை,எதிர்மறையா நினைத்து பதில் சொல்ல ஆரம்பியுங்கள்!.கொஞ்சமாவது சூடு பிடிக்கும்!
எதாவது எங்கேயாவது இடித்தால் இந்த பின்னூட்டத்தைப் போடவேண்டாம்.

manikandan said...

கேள்விகள் :-

1) வாயை பிடுங்குவது என்றால் என்ன ?

2) வாயை புடிங்கனாலும் அசராமல் (அசையாமல்) பதில் அளிப்பவன் புத்திசாலியா ?
இல்லையேல் பதில் சொல்லாமல் இருப்பவன் புத்திசாலியா ?
இதில் நீங்கள் எந்த வகை ?

3) நைஜீரியா மற்றும் அங்கோலாவில் தாங்கள் ஆதரிக்கும் கட்சி எது ?

4) கேள்வி - பதில்கள் மற்றவருக்கு சலிப்பூட்டாமல் திரு சோ அவர்கள் இவ்வளவு வருடமாக எப்படி தாக்கு பிடிக்கிறார் ?

5) போலிகளை கண்டுபிடிக்கும் தங்கள் முயற்சியால் பயனடைந்த மற்றவர்களை தாங்கள் குறை கூறுவீர்களா ?

6) சுவாரசியமாக கேள்வி கேட்பது எப்படி ?

மொக்கைச்சாமி said...

டோண்டு ஐயா, கேள்வி பதில் கொஞ்சம் டல்லா தான் இருக்கு... உங்க கிட்ட இன்னும் விரிவான பதிலை எதிர்பார்கிறாங்கன்னு நினைக்கிறேன்... மேலும் சில பதில்கள் "எதிர் கேள்வியா" மட்டும் இருக்கு. அதனாலையோ என்பது சின்ன கருத்து...

Anonymous said...

வலைப்பதிவுகளில் அதுவும் தமிழ் வலைப்பதிவுகளில் பரவலாகக் காணப்படும் அமேரிக்க எதிர்ப்பு ஏன்?

அத்தகய எதிர்ப்பு மனித உரிமை மீரல்கள் அதிகம் நடக்கும் வட கொரியா, சீனா, போன்ற நாடுகளின் மேல் பாய்வதில்லையே ?

தமிழ் ஈழ அகதிகள் ஏன் ஜெர்மனி, கனடா, போன்ற நாடுகளுக்கு குடி புகுகின்றனர் ? அவர்கள் நலம்விரும்பிகள் என்று சொல்லிக்கொண்டு திரிபவர்கள் விரும்பும் வட கொரியாவுக்கு, க்யூபா, வெனிசூலாவுக்கு புலம்பெயரவேண்டியது தானே ?

சமாஜ்வாடி பார்டி அர்ஜுன் சிங் நிதி அமைச்சரானால் ?

குடுகுடுப்பை said...

மதுரை மட்டுமா மதுரைகளுமா.

Please Clarify said...

கிருஸ்ணரின் கோவர்த்தன மலையை பி.ஜே.பி அரசு இடிப்பது சரியா?

 

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது