11/01/2008

மின்சாரக் கண்ணாக்கள்

30.10.2008 குமுதம் ரிப்போர்டரில் வந்த இக்கட்டுரை மின் திருட்டுகள் பற்றிய நமது சந்தேகங்களை ஊர்ஜிதப்படுத்துவதாகவே உள்ளது. இப்பதிவின் நோக்கம் வெறுமனே மின் உற்பத்தியை அதிகரித்தால் மட்டும் போதாது. அது திருட்டுப் போகாமலும் பார்த்து கொள்ள வேண்டும் என்பதைக் கோடிட்டு காட்டுவதே. இப்போது குமுதம் ரிப்போர்டர் கட்டுரைக்கு போவோமா?

மின்வெட்டைக் கண்டித்து ஆறு லட்சம் தொழிற்சாலைகள் கதவடைப்புப் போராட்டம்', `மின்வெட்டால் சிறுதொழில்கள் அழியும் அபாயத்தைக் கண்டித்து எதிர்க்கட்சிகள் போராட்டம்' என ஒவ்வொரு நாளும் தி.மு.க. அரசுக்கு `ஷாக்'காகத்தான் விடிகிறது. இதற்கிடையே `ஆட்சிக்கே ஆபத்து ஏற்படும் அளவுக்கு மின் பற்றாக்குறை இருந்தாலும், மின்துறை அதிகாரிகளின் ஊழல்களுக்கு மட்டும் இங்கே பற்றாக்குறையே ஏற்படுவதில்லை' எனக் கூறி நம்மை அதிர வைத்தனர் உயர் அதிகாரிகள் சிலர்.

இதுபற்றி நாம் விசாரிக்க ஆரம்பித்தோம். மின்வாரியத்தில் பணிபுரியும் அதிகாரி ஒருவர் நம்மிடம், "தமிழ்நாட்டின் மின்தேவை ஒன்பதாயிரம் மெகாவாட். ஆனால் நமக்குக் கிடைப்பது 7200 மெகாவாட்தான். ஆகவே பற்றாக்குறை 1800 மெகாவாட். தற்போது மேற்கு வங்கம், அரியானா, அசாம் போன்ற மாநிலங்களில் இருந்து 700 மெகாவாட்டை ஒரு யூனிட்டுக்கு ஒன்பது ரூபாய் வீதம் விலை கொடுத்து வாங்குகிறோம். ஆனால், நம்மிடம் உள்ள மூல ஆதாரத்தை வைத்தே நம்மால் மின்தேவையைச் சமாளிக்க முடியும். மின்துறையில் அதிகரித்து விட்ட ஊழல்தான் தற்போதைய பற்றாக்குறைக்கு முக்கியக் காரணம்'' என்று அதிரடியாகக் கூறிவிட்டுத் தொடர்ந்தார்.

``தமிழகத்தில் நெய்வேலி, கல்பாக்கம் ஆகியவற்றில் இருந்து நமக்கு 2,330 மெகாவாட் மின்சாரம் கிடைக்கிறது. இதுபோக தூத்துக்குடி, மேட்டூர், வடசென்னை, எண்ணூர் அனல்மின் நிலையங்களில் இருந்து மொத்தமாக இரண்டாயிரம் மெகாவாட் மின்சாரம் கிடைக்கிறது. இந்த அனல்மின் நிலையங்களுக்காக மாதம் பத்து லட்சம் டன் நிலக்கரியை, மத்திய அரசின் நிறுவனமான `கோல்டு இந்தியா'வின் துணை நிறுவனங்களிடம் இருந்து பெறுகிறோம். தூத்துக்குடி அனல்மின் நிலையத்திற்கு கொல்கத்தாவில் உள்ள `ஈஸ்டர்ன் கோல் ஃபீல்டு' நிறுவனமும், வடசென்னை, மேட்டூர், எண்ணூர் அனல்மின் நிலையங்களுக்கு ஒரிசா, தால்சரில் உள்ள `கோல் ஃபீல்டு' நிறுவனமும் நிலக்கரி சப்ளை செய்கிறது.

தால்சரில் இருந்து ரயில் மூலம் வரும் நிலக்கரி, பாரதீப் துறைமுகத்திற்கு வந்து, அங்கிருந்து கப்பல் மூலம் சென்னைத் துறைமுகத்திற்கு வந்து சேர்கிறது. சில நாட்களுக்கு முன்னர் இப்படி துறைமுகத்திற்கு வந்த நிலக்கரியில், சுமார் ஒரு லட்சம் டன் நிலக்கரியை யாரோ `லவட்டிக்' கொண்டு போய்விட்டனர். அதிகாரிகள் இதை கமுக்கமாக வைத்திருந்தும் தகவல் வெளியே கசிந்து விட்டது. இதை அமுக்க நினைத்த அதிகாரிகள், `இன்னும் எங்களுக்கு நிலக்கரி வந்து சேரவில்லை' என்று சொல்லி விட்டார்கள்.

திருட்டுப்போன இந்த ஒரு லட்சம் டன் நிலக்கரி இந்த அனல்மின் நிலையங்களின் மூன்று நாள் தேவைக்கான கரியாகும். இந்த நிலக்கரி மூலம் 11.7 கோடி யூனிட் மின்சாரத்தைத் தயாரித்திருக்க முடியும். இதற்கு ஈடாக இன்னும் நிலக்கரி வராமல் அதிகாரிகள் இப்போது தலையைப் பிய்த்துக் கொண்டிருக்கிறார்கள். இதில் இன்னொரு வேடிக்கை,. ஒரு டன் நிலக்கரியை ரூ.410-க்கு வாங்கும் நாம், அதை ரயில், கப்பல் மூலம் கொண்டு வர ஒரு டன்னுக்கு ஆயிரம் ரூபாய் செலவழிக்கிறோம். எல்லாமே மக்களின் வரிப்பணம்தான். காணாமல் போன நிலக்கரி மூலம் கிடைக்கும் மின்சாரத்தைக் கொண்டு தமிழ்நாட்டின் பன்னிரண்டு மணிநேர மின் தேவையைச் சமாளித்திருக்க முடியும்'' என்று கூறி நம்மை அதிர வைத்தார் அந்த அதிகாரி.

நாம் மற்றொரு அதிகாரியிடம் பேசியபோது, அவரும் சில அலறல் தகவல்களை அள்ளித் தெளித்தார்.

"அனல் மின் நிலையத்தின் பயன்பாட்டிற்காக `கன்வேயர் பெல்ட்' வாங்க அண்மையில் டெண்டர் விடப்பட்டது. வடசென்னையில் நடந்த இந்த டெண்டரில் செயற்பொறியாளர் ஒருவரின் மகனும், அவரது சீனியர் அதிகாரி ஒருவரின் மகனும் போட்டியிட்டனர். கடைசியில் சீனியர் அதிகாரி மகனின் டெண்டர் விண்ணப்பத்தை மட்டும் ஏற்றுக் கொண்டு, மற்றொருவரின் விண்ணப்பத்தை அதிகாரிகள் பிரிக்கவேயில்லை. ஆனால், இதைப் பெற்றுக் கொண்டதாகக் குறிப்பு எழுத வேண்டியவரே அந்த செயற்பொறியாளர் என்பதுதான் வேடிக்கை.

இந்த விவகாரத்தில் ரூ.37 லட்சத்துக்கு கன்வேயர் பெல்ட் வாங்காமலேயே வாங்கியதாக பில் போட்டு, பணத்தைச் சுருட்டிவிட்டனர். இந்தத் தகவல் அம்பலமானதும், சீனியர் அதிகாரியை தலைமை இடத்திற்கு `மாற்றி'விட்டனர். பாவம், செயற்பொறியாளர். இதில் `தான் மாட்டிக் கொள்வோம்' என்ற பயத்தில் தற்கொலை செய்து கொண்டார். ஆனால், வயிற்றுவலியால் அவர் இறந்ததாகக் கூறி அதிகாரிகள் ஊழலை மறைத்து விட்டனர். அதுபற்றி துறைரீதியான விசாரணை நடக்கிறது'' என நம்மிடம் சொன்ன அந்த அதிகாரி,

"வடசென்னை அனல் மின்நிலையத்தில் யூனிட் பழுதடைவது, பாய்லர் ட்யூப் பஞ்சர் ஆவது, உற்பத்தி தடைப்படுவது என கடந்த மூன்று மாதத்தில் ஆறு முறை `ரிப்பேர்' என்று சொல்லிவிட்டார்கள். மூன்றாவது யூனிட்டில் மூன்று முறை உற்பத்தி நின்றுபோய்விட்டது. இந்த ரிப்பேரைச் சரி செய்ய இரண்டு நாட்களாகும். இதற்கு காண்ட்ராக்டர்களின் கொள்ளைதான் காரணம். இதே கதிதான் மற்ற யூனிட்டுகளிலும் நடக்கிறது. செயற்கையாகப் பழுதடைய வைத்து அதன்பின் `பழுதைச் சரிசெய்கிறோம்' என்று சொல்லி லட்சக்கணக்கில் பணத்தைச் சுருட்டும் வேலைகள் நடக்கின்றன. இதனால் நாளொன்றுக்கு ஒன்றரைக் கோடி யூனிட் மின் தயாரிப்பு நின்று போய்விடுகிறது.

மேலும், அனல்மின் நிலையங்களைக் குளிரூட்டப் பயன்படும் கடல்நீரை வைத்து மின்நிலையங்களில் உள்ள பூஞ்சைகளையும் அழிக்க முடியும். ஆனால் அதிகாரிகளோ பூஞ்சைகளை அழிப்பதற்காக புரோமின் என்ற நீரை தேவையில்லாமல் லிட்டருக்கு 380 ரூபாய் என நாளொன்றுக்கு பத்தாயிரம் ரூபாய் செலவழித்து வாங்குகிறார்கள். இதிலும் ஊழல்.

இப்படியெல்லாம் தாறுமாறாகக் கொள்ளை நடப்பதால்தான் மின்நுகர்வைச் சமாளிக்க இருமடங்குக் கட்டண உயர்வை அமைச்சர் ஆற்காடு வீராசாமி அறிவித்து இப்போது அதை வாபஸ் வாங்கியும் விட்டார். இப்படி அறிவித்தால்தான் மக்கள் மின்சாரத்தை சிக்கனமாகப் பயன்படுத்தி அரசுக்கு `நெருக்கடி'யைக் குறைப்பார்கள் என்று அமைச்சர் நினைத்திருக்கலாம்.

ஆனால், இப்போது அரசு கொடுத்துள்ள இலவச கலர் டி.வி.க்களும் மின்பற்றாக்குறைக்கு ஒரு காரணம் என்றுதான் சொல்லவேண்டும். இந்த இலவச கலர் டி.வி.க்களால் நாளொன்றுக்கு அறுபது லட்சம் யூனிட் கூடுதலாக மின்நுகர்வு ஏற்படுகிறது. தற்போது மேலும், நாற்பது லட்சம் டி.வி.க்கள் வழங்கப்பட உள்ள நிலையில், இதற்காக ஒரு கோடி யூனிட் வரை மின்சாரம் தேவைப்படும். டி.வி.க்களுக்காக செலவிடப்படும் 2400 கோடி ரூபாயில் 600 மெகாவாட் திறனுள்ள ஒரு அனல்மின் நிலையத்தையே நிர்மாணிக்க முடியும். நாட்டின் தேவையைத் தெரிந்துகொண்டு திட்டமிடும் வேலையை மட்டும் மின்துறை எப்போதுமே செய்வதில்லை'' என யதார்த்தத்தைப் பிரதிபலித்தார் அந்த அதிகாரி.

இந்தக் குற்றச்சாட்டுகளுக்காக அமைச்சர் ஆற்காடு வீராசாமியை நாம் தொடர்பு கொள்ள முயன்றபோது, அவர் சார்பாக நம்மிடம் பேசினார் அமைச்சரின் ஸ்பெஷல் பி.ஏ. மதிவாணன்.

"நிலக்கரி தொலைந்து போனது பற்றி எந்தத் தகவலும் இல்லை. அப்படியெதுவும் நடக்கவில்லை என்று அதிகாரிகள் சொல்கிறார்கள். அதிகாரி இறந்தது உண்மைதான். ஆனால், அதற்கான காரணம் தெரியவில்லை. கன்வேயர் பெல்ட் வாங்குவது தொடர்பான புகார் குறித்து விரிவான விசாரணை நடந்து வருகிறது. இன்னும் எங்களுக்கு அறிக்கை வரவில்லை. மின்நிலைய யூனிட்டுகளில் பழுது ஏற்படுவது இயல்பானதுதான். அதைச் சரிசெய்யும் முயற்சிகளும் நடந்து வருகின்றன. இதுவரை நடந்தவை எல்லாம் சரியாகவே நடந்து வருகின்றன!'' என்றார் அவர்.


நன்றி: குமுதம் ரிப்போர்டர் (கட்டுரை எழுதியவர்: ஸீ ஏ.வி.ஆனந்த்)

இப்போது டோண்டு ராகவன்.

சும்மா சொல்லப்படாது சம்பந்தப்பட்ட எல்லோருமே மின்சாரக் கண்ணாக்கள்தான்.

ஆனால் ஒரு விஷயம். மேலே சொன்னது போன்ற ஊழல்கள் இன்னும் அதிக அளவில் நடந்த ஒரு மாநிலம் மோடிக்கு முந்தைய குஜராத். அவர் வந்த பிறகு சாட்டையை சுழற்றினார். என்ன நடந்தது என்பதை அவர் துக்ளக் மீட்டிங்கில் கூறியதை எனது இப்பதிவில் எழுதியதிலிருந்து:



தமிழகத்தில் மின்சாரம் வந்தால் அது செய்தி. குஜராத்திலும் முதலில் அதே நிலைமைதான் மோடி அவர்கள் பதவிக்கு வந்த போது இருந்தது. நிலைமையில் முன்னேற்றம் காண்பது கடினம் என்பது அதிகாரிகளின் கூற்று. மோடி அவர்கள் சளைக்காது நடவடிக்கை எடுத்தார். பகுதி பகுதியாக எடுத்து காரியமாற்றினார். முதல் 1000 நாட்களில் 45 விழுக்காடு கிராமங்களுக்கு முழு மின்சாரம் வழங்கப்பட்டது. இப்போது அதே திட்டம் குஜராத் முழுக்க விஸ்தரிக்கப்பட்டு 100 விழுக்காடு கிராமங்களுக்கு 24 மணி நேரமும் 3-phase மின்சாரம் வழங்கப்படுகிறது. இதற்காக மோடி அவர்கள் முதல் 1000 நாட்களில் செய்த விஷயங்கள் பின்வருமாறு. 23 லட்சம் மின்கம்பங்கள், 56,000 ட்ரான்ஸ்ஃபார்மர்கள், 75000 எலெக்ட்ரிக் மீட்டர்கள் ஆகியவை பொருத்தப்பட்டன. ஒரு அரசு மனது வைத்தால் என்னென்ன செய்ய முடியும் என்பதற்கு இதை விட நல்ல உதாரணம் வேறு ஏது? ”500 நாட்களில் 700 கிலோமீட்டர் நீளத்துக்கு நர்மதா திட்டத்தில் பைப்புகள் இடப்பட்டன” என்று சோ கூறியதை குறிப்பிட்டு அதை அப்டேட் செய்தார். தற்போது அதே புள்ளிவிவரம் 700 நாட்களில் 1400 கிலோமீட்டர் பைப்லைன்கள் போடப்பட்டன என்று கூறினார். அந்த பைப்பில் கருணாநிதி அவர்கள் தன்னுடைய குடும்பத்தாருடன் காரில் செல்ல இயலும் என்று பைப்லைனின் விட்டத்தை பற்றி கூறுவதற்காக அவர் தமாஷாக மேற்கோள் காட்டினார். ஒரே சிரிப்பு அரங்கில்.

அப்பதிவிற்கு முந்தைய சோ பேச்சிற்கான பதிவில் எழுதியது.

குஜராத்தில் நடந்த பொருளாதார முன்னேற்றங்களை அவர் பட்டியலிட்டார். 500 நாட்களில் 700 கிலோமீட்டர் நீளத்துக்கு நர்மதா திட்டத்தில் பைப்புகள் இடப்பட்டன. 50 பில்லியன் டாலர்கள் வெளிநாட்டு முதலீடு. ஒரு லட்சம் சிறு அணைகள். 100 விழுக்காடு கிராமப்புற மின்சாரம். அதுவும் நம்ம ஆர்க்காட் வீராசாமி மின்சாரம் போல எப்போதாவது வருவதில்லை, 24 மணி நேரமும் உண்டு. விவசாயத்துக்கு இலவச மின்சாரம் என்ற வெள்ளை யானை திட்டத்தை மாற்றினார் அவர். விவசாயிகளிடம் எடுத்து கூறினார், அதாவது இலவச மின்சாரம் எப்போதாவதுதான் ஒரு தினத்தில் வரும், ஆனால் கட்டண மின்சாரம் 24 மணி நேரமும் வரும் என்பதை விவசாயிகள் ஏற்று கொண்டனர். சிலர் மின்சாரம் திருடியபோது தாட்சண்யம் காட்டாது 1,20,000 இணைப்புகளை துண்டித்தார். இந்த தில் இதுவரை எந்த முதல்வருக்கு இருந்தது என்று சோ கேட்ட கேள்விக்கு கரகோஷமே இல்லை என்று பதில் அளித்தது.

“இப்ப இதெல்லாம் இங்கே எதுக்கு சொல்லற” என்று கோபப்படுகிறான் முரளி மனோஹர். காரணம் ரொம்ப சிம்பிள். குஜராத் அரசாங்கம் செய்துள்ளது. நம் அரசு ஏன் அதை செய்யக் கூடாது என்பதை வலியுறுத்தவே குஜராத் உதாரணம் வலியுறுத்தப்படுகிறது.

“சரி அத்த வுடு. இப்ப எதுக்காக சோ, மோடி ஃபோட்டோவ போட்ட” என்று கேட்கும் முரளி மனோஹருக்கு பதில்: போட்டோவைப் பாத்தாலே அதிருதுல்ல?

அன்புடன்,
டோண்டு ராகவன்

11 comments:

Anonymous said...

hats off to modi

thanks to kumudam reporter,cho and our dondu sir.

please do write as "minsaarak kaNNaakkaL'

1.maNal krishNarkal
2.kattuu raajakkaL
3.land lapak thaasukal
4.marble maabiyaakkal

ரமணா said...

மின்சாரப் பற்றாக்குறைக்கு மேலும் காரணிகள்

௧.மின்சாரத் திருட்டுகள்
௨ .இலவச மின்சாரத்தில் உள்ள குளறுபடிகள்
௩.தரமில்லா மின் கடத்திகள் ,மின் சாதனங்கள்

௪.அரசியல் தலையிடுகள் டெண்டர் விவகாரங்களில்
௫.உழியர் பற்றாக்குறை
௬.உழியர் திறமைக்குறைவு
௭ .கழக ஆட்சியாளர்களின் திட்டமிடலில் உள்ள குறைபாடு
௮ .லஞ்சம்,லாவண்யம் ,கூட்டுக் கொள்ளை

வெண்பூ said...

அட விடுங்க சார்!!! நியூஸ் படிச்சிங்களா? இந்திய கறுப்புப்பணம் 64 லட்சம் கோடி ஸ்விஸ் வங்கியில இருக்காம். மோடியினால அதுல தமிழக அரசியல்வாதிங்கள அடிச்சிக்க முடியுமா? அவங்கங்க திறமை அவங்கவங்களுக்கு!! இதைப்போய் பெருசா பேசிகிட்டு..

Anonymous said...

Watch Cho and Mouli in today night (1-november) Kofee with Anu in Vijay tv 9.30pm saturday.

if possible - provide a posting on what Cho says in that program. It will be useful for people like us outside India.

அருப்புக்கோட்டை பாஸ்கர் said...

//அவங்கங்க திறமை அவங்கவங்களுக்கு!! இதைப்போய் பெருசா பேசிகிட்டு..//

சூப்பர் வெண்பூ !!!

Anonymous said...

uzhal arasu adhigarigalai dhairiyamai thatti ketta JJ ku makkal muzhumaiyana adharavu kudakavillai. Oru nalla vaipai izhandhom. JJ's administration was good. SInce she lost her parliment election then, they retracted her good policies too. (kattaya madha matra thadai sattam is another that bit the dust :().
Karunanidhi is by himself interested onl in amassing wealth. No need to talk about his huge family. They are interested only in stunt shows.
JJ can be a real leader if she wants, karunanidhi cannot never be a leader as always he just want to survive and support his family.

Geli koothu dhane namma jananayagam!

Madhu Ramanujam said...

என்னங்க நீங்க, 700 நாள்ல 1400 கிமி பைப் போட்டதை இவ்வளவு பெர்சா சொல்லிக்கிட்டு. நம்ம கலைஞரையோ இல்லை அம்மாவையோ விட்டா 100 நாளில் 1400 கோடிகளை சுருட்டிக் காட்டுவார்கள். எங்கே செய்யச் சொல்லுங்கள் உங்கள் மோடியை.

வால்பையன் said...

மோடிக்கேத்த ஜாடி
இல்ல இல்ல
ஜாடிகேத்த மூடி

வால்பையன் said...

தனிமனித தூற்றுதல் எந்த அளவுக்கு முட்டாள் தனமோ அதே அளவு தான் தனிமனித போற்றுதலுக்கும் என்று நான் நினைக்கிறேன்.
நீங்க என்ன சொல்றிங்க

dondu(#11168674346665545885) said...

நான் மோடியை போற்றி போட்ட விஷயங்களில் ஏதேனும் உண்மைக்கு புறம்பானதாக இருந்தால் கூறுங்களேன்.

ராஜாஜி, காமராஜ், ரங்கசாமி, மோடி போன்ற முதல்வர்கள் சிறுபான்மையினராகவே உள்ளனர். ஆக அவர்கள் கிடைக்கும்போது போற்ற என்னத் தடை?

அதிலும் மோடியிடம் ராஜாஜியிடம் இருந்த மன உறுதி, லஞ்ச ஊழலை எதிர்க்கும் துணிவு, கட்சிக்காரர்கள் நிர்வாகத்தில் தலையிடாமல் பார்த்து கொள்வது ஆகியவை உள்ளன. ரங்கசாமி மற்றும் காமராஜரிடம் இருந்த எளிமையும் உண்டு. காமராஜரிடம் இருக்கு நிர்வாகத் திறமையும் உண்டு.

அன்புடன்,
டோண்டு ராகவன்

Anonymous said...

// dondu(#11168674346665545885) said...
நான் மோடியை போற்றி போட்ட விஷயங்களில் ஏதேனும் உண்மைக்கு புறம்பானதாக இருந்தால் கூறுங்களேன்.

ராஜாஜி, காமராஜ், ரங்கசாமி, மோடி போன்ற முதல்வர்கள் சிறுபான்மையினராகவே உள்ளனர். ஆக அவர்கள் கிடைக்கும்போது போற்ற என்னத் தடை?

அதிலும் மோடியிடம் ராஜாஜியிடம் இருந்த மன உறுதி, லஞ்ச ஊழலை எதிர்க்கும் துணிவு, கட்சிக்காரர்கள் நிர்வாகத்தில் தலையிடாமல் பார்த்து கொள்வது ஆகியவை உள்ளன. ரங்கசாமி மற்றும் காமராஜரிடம் இருந்த எளிமையும் உண்டு. காமராஜரிடம் இருக்கு நிர்வாகத் திறமையும் உண்டு.

அன்புடன்,
டோண்டு ராகவன்//


மிகச் சரியாய் சொன்னீங்க சார்.
இந்த லிஸ்ட்ல "அண்ணாவை" விட்டு விட்டீர்களே சார்

அவர் இருக்கும் வரை எல்லாம் சரியாய் இருந்தது.

எல்லாக் கூத்துக்களும்,லஞ்ச லாவண்யங்களும்,அதிகார துஷ்பிரயோகங்களும்,ஜாதிய மோதல்களும்,சொத்து குவிப்புகளும்,எதிர்க் கட்சியினரை எதிரியாய் நசுக்குவதும்,அரசு நிர்வாககத்தை தன் இஷ்டத்துக்கு ஆட்டி வைப்பதும், அரசு உழியருக்கு மத்திய அரசு வழங்கும் சலுகையைவிட அதிக சலுகை வழங்கி அனைவரையும் தனதாக்கி கொண்டதும் பேரறிஞர் அண்ணாவின் மறைவுக்குப் பின்னால் தான் எனபதை எப்படி ஐயா மறந்தீர்கள்

 

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது