11/20/2008

அடியைப் பிடிடா பாரத பட்டா

நண்பர் சந்திரசேகரன் இன்று ஃபார்வேர்ட் செய்த மின்னஞ்சல் சுவாரசியமான விஷயத்தை சொல்லியது. அரசு செலவினங்களை பற்றிய விஷயங்களை அது கூறியது. இப்போதைய பொருளாதார நெருக்கடியைத் தீர்க்க பலர் 1932-ல் அமெரிக்க ஜனாதிபதி ஃப்ராங்க்ளின் ரூஸ்வெல்ட் கையாண்ட புதிய ஏற்பாட்டை சிபாரிசு செய்கின்றனர். குறைந்த பட்சம் பொருளாதாரம் மீண்டும் தலையெடுக்கும் வரைக்குமாவது இதை கோருகின்றனர்.

ஆனால் கஷ்டம் என்னவென்றால் அரசு ஆரம்பிக்கும் புதிய திட்டங்களில் தற்காலிகம் என்று எதுவும் கிடையாது. அவற்றின் தேவை தீர்ந்த பிறகும் அவை பல ஆண்டுகள் நடைமுறையில்தான் இருக்கும். முக்கிய உதாரணம் பம்பாய் மற்றும் சென்னையில் இயற்றப்பட்ட வாடகை கட்டுப்பாட்டு சட்டமே. இதை முதலில் ஐந்து ஆண்டுகளுக்கு மட்டும் கொண்டு வந்தார்கள். இரண்டாம் உலக யுத்தம் முடிந்த பிறகு வாடகைகள் எக்குத் தப்பாக உயர்ந்ததால் இதை கொண்டு வருவதாக கூறினார்கள். ஆனால் அது இன்னமும் அப்படியே உள்ளது, என்ன நடந்ததென்றால், மாதுங்கா போன்ற இடங்களில் வீட்டு வாடகை முப்பது ரூபாய் மாதம் என்ற அளவில். யாருக்கும் புதிய வீடுகள் கட்டும் எண்ணமே வரவில்லை. கட்டுவானேன், வாடகைக்கு விட்டு அவதிப்படுவானேன் என்றெல்லாம் யோசித்து யாரும் அக்கறை காட்டவில்லை. இந்த சுண்டைக்காய் வாடகையில் மராமத்தாவது மயிராவது. இப்போது பம்பாயில் இடியும் நிலையில் உள்ள எல்லா வீடுகளிலும் இம்மாதிரி பழைய குடித்தனக்காரர்களே உள்ளனர். வீடு கட்டியவர்களும் தாங்கள் வசிக்க முடியாமல் போனால் பூட்டி வைப்பதையே விரும்பினர்.

இருந்தாலும் நாமெல்லாம் கற்று கொள்வதாக இல்லை என்று வருந்துகிறார் Christopher Lingle அவருடைய "கட்டி வராத பொய்யை மீண்டும் அரங்கேற்றல்" என்னும் கட்டுரையில். Christopher Lingle என்ன கூறுகிறார் என்பதை முதலில் பார்ப்போம். டோண்டு ராகவனும் முரளி மனோஹரும் பிறகு வருவது இருக்கவே இருக்கிறது.


பற்றாக்குறை நிதி நிலைமையை அரசின் செலவினங்கள் மூலம் சமாளிப்பது என்பது யதார்த்தத்திலும் சரி, சரித்திர பூர்வமாகவும் சரி, நிரூபிக்க முடியாத ஒரு கோட்பாடு.

இக்கொள்கையை கொன்று சமாதி கட்டிய பிறகும் மீண்டும் கிளர்ந்தெழுகிறது, ட்ராக்குலா போல. அது எழுபதுகளில் உருவாக்கிய பொருளாதார மந்த நிலையை சம்பந்தப்பட்டவர்கள் மறந்தனரோ? ஆம் என்றுதான் தோன்றுகிறது. ஏனெனில், சமீபத்தில் நடந்து முடிந்த G-20 சந்திப்பில் அரசு செலவு செய்வதன் மூலம் வேலைகளை உருவாக்க முடியும் என்ற முடிவுக்கு சம்பந்தப்பட்டவர்கள் வந்ததாகத் தெரிகிறது.

எத்தனை முறை தன்ணீரில் முக்கினாலும் மேலே பாய்ந்து வரும் கார்க்கை போன்று இக்கொள்கை வந்த வண்ணம் இருக்கிறது. எண்பதுகளின் முடிவில் ஜப்பானியர் இதை செய்து பார்த்தனர். அரசு கடன் அதிகரித்ததுதான் மிச்சம். பொருளாதார வீழ்ச்சியை என்னவோ தடுக்க இயலவில்லை.

இன்னும் சமீப காலத்தில் (அமெரிக்காவில்) பொருளாதார ஊக்குவிப்பு சட்டம் (Economic Stimulus Act) 2008 மூலம் பத்தாயிரம் கோடி டாலர்கள் அளவில் வரிச்சலுகைகள் தரப்பட்டன. அதனால் எல்லாம் மக்கள் செலவு செய்வது அதிகரிக்கவில்லை. அப்பணம் சேமிப்பிற்கும் பழைய கடன்களை அடைக்கவும் மட்டுமே பயன்பட்டது.

ஒறை முறை வரிச் சலுகைகளல் பலன் இல்லை என்பதை பல ஆய்வுகள் காட்டியுள்ளன. ஏனெனில் அம்மாதிரி கிடைக்கும் உபரிப்பணம் பொருட்களை வாங்குவதில் பயன்படுத்தப்படுவதில்லை. ஆனால், பொதுத்துறையின் பற்றாக்குறைகள் அவற்றின் மூலம் நாட்டின் கடன்கள் அதிகரிப்பது என்னவோ நிச்சயம்.

அதிகப் பொருட்களை வாங்குவதால் மட்டுமே பொருளாதாரம் வளர்ச்சி அடையும் என்ற தட்டையான சிந்தனைதான் இந்த தவறான அணுகுமுறைக்கு காரணம். நுகர் பொருட்களும் சேவைகளும் கடவுள் தந்த வரம் என்ற ரேஞ்சுக்கு நம்புவதால் வரும் நிலைதான் இது.

உணமை கூறப்போனால், நிலையான பொருளாதார முன்னேற்றத்துக்கு சேமிப்புகளும் அவசியம். அப்போதுதான் தொழில் மூலதனத்துக்கான பொருட்களை உற்பத்தி செய்ய இயலும். அப்பொருட்கள் அதிக உற்பத்தி மற்றும் அதிக சம்பளங்களுக்கான அடிப்படையாகும். அவற்றை உருவாக்க வேண்டுமானால் வெறும் நுகர்வு பொருட்களுக்கான செலவை கட்டுப்படுத்த வேண்டும்.

சேமிப்பு என்பது மனிதனின் இயற்கையான தன்மைகளில் ஒன்று. சிக்கனத்தின் சிறப்பை கூறும் பல கதைகள் சும்மா பொழுதுபோக்குக்காகக் கூறப்பட்டதல்ல. ஆனால் இதையெல்லாம் வங்கிகள் மறந்து சேமிப்புக்கான ஊக்குவிப்பை அலட்சியம் செய்து செலவுக்கு தூபம் போட்டன. அடிமாட்டு விலைக்கு ஈடான குறைந்த வட்டி விகிதங்களால் சேமிக்கும் பழக்கம் கிட்டத்தட்ட அடியோடு ஒழிந்தது என்று கூறினாலும் மிகையல்ல.

இதனால் என்ன ஆயிற்றென்றால் ஒரு புறம் சேமிப்பு இல்லை. அதற்கு மாறாக குறைந்த வட்டியில் கடன் தந்து நுகர்வோர்களை செலவு செய்ய ஊக்குவித்தனர். இந்த பொது கொள்கைகள் காரணமாக தனிப்பட்டவர்கள் தத்தம் நெடுங்கால நலனை மறந்து இப்போது நன்றாக வாழ்ந்தால் போதும் என்ற மன நிலைக்கு தள்ளப்பட்டனர். அதனால் என்ன ஆயிற்று என்றால் பொருட்களை வாங்கும் சக்தியை இழந்தனர் மக்கள். வாங்குபவர் குறைந்ததால் உற்பத்தி குறைந்து பல வேலையிடங்கள் அழிக்கப்பட்டு வேலையில்லா திண்டாட்டம், மீண்டும் உற்பத்தி குறைவு போன்ம்று சீட்டுக் கட்டு மாளிகைகள் போல எங்கும் சரிவுகள்.

சக்திக்கு மீறி செலவு செய்து அர்சுகள் எதிர்காலத்து பொருளாதார முன்னேற்றத்தையே அடகு வைக்கின்றன. வேலையில்லா திண்டாட்டமும் அதிகரிக்கிறது.

அரசு புதிய வேலைகளை உருவாக்கும் என்ற நம்பிக்கை இன்னும் அசையாமல் அப்படியே உள்ளது. தனது தேர்தல் பிர்சாரத்தில் ஒபாமாவும் $150 பில்லியன் டாலர் பட்ஜெட்டில் புதிய காற்றாலைகள், சூரிய வெளிச்சத் தகடுகள் ஆகியவற்றை பொருத்தப் போவதாகக் கூறியுள்ளார். அதன் மூலம் ஐம்பது லட்சம் அளவில் "பசுமை" வேலைகள் உருவாகுமாம்.

முதலில் ஒன்று புரிந்து கொள்ள வேண்டும். அரசின் மூலம் வேலை உருவாக்குவது தனியார் துறையில் உருவாக்குவதை விட அதிக செலவு பிடிக்கும். ஏனெனில் அரசு விஷயத்தில் அதன் அதிகாரிகளின் எண்ணிக்கையும் இதனால் அதிகரிப்பது தவிர்க்க முடியாதது. வரி செலுத்துவோரின் சுமைதான் இதனால் அதிகரிக்கும். அதனால் அவர்களது சேமிக்கும் திறன் குறையும். அப்படியே புது முதலீடுகளும் குறையும், வேறு நல்ல பலன் எதுவும் பொருளாதாரத்துக்கு இல்லை.

அரசு துவங்கும் முயற்சிகளால் வேலைகள் அதிகமாவது போலத் தோன்றினாலும், அவற்றின் ஒட்டுமொத்த விளைவு மலையைக் கொல்லி எலியை பிடிப்பது போலத்தான். போட்ட முதலுக்கு ஏற்ப முன்னேற்றம் இந்த முயற்சிகளில் இல்லை.

பொருளாதார மேம்பாட்டுக்கான வேலைகளை உருவாக்க அரசின் முயற்சி இல்லாமலே முடியும். அதன்றி வேலைத் திறன் இல்லாத தொழில் நுட்பத்துக்கு முட்டு கொடுக்கும் தொகைகளை தருவதன் மூலம் திறமையின்மைக்குத்தான் ஊக்கம் அளிப்பதாக முடியும். நல்ல விளைவுகள் இல்லாத நிலையில் உண்மையான சம்பள உயர்வு என்று ஒன்றும் இருக்காது.

இது போதாதென்று அரசின் தற்காலிக ஏற்பாடுகளால் வருங்காலத் தலைமுறையினரின் சுமைகள் வேறு அதிகரிக்கும். நாம் இப்போது படும் கடன்களை அவர்கள் அடைக்க வேண்டியிருக்கும்.

ஆகவே இம்மாதிரியெல்லாம் நடக்காமல் இருக்க திவாலான பல பழைய பொருளாதார கோட்பாடுகளை சரித்திரத்தின் குப்பைத் தொட்டியில் போடுவதே வழி.


[Christopher Lingle is a research scholar at the Centre for Civil Society in New Delhi and a visiting professor of economics at Universidad Francisco Marroquin in Guatemala. Comments are welcome at theirview@livemint.com]

இப்போது மீண்டும் டோண்டு ராகவன். எத்தனை முறைகள் பட்டாலும் தெரியாமல் போனால் என்ன செய்வது?

“ஒவ்வொரு தலைமுறையும் தானும் அதே தவறை செய்வேன் என்றில்லாமல் வேறு ஏதாவது புதிய தவறாவது செய்யுங்களப்பு எனக் கூறும் முரளி மனோஹரை சீரியசாக பேசுமாறு தீவிரமாக எச்சரிக்கிறேன். அரசு செய்வது என்னவென்றால் புது துறைகளை உருவாக்குவது, செக்ரட்டரி, ஜாயிண்ட் செக்ரட்டரி, கிளர்க்குகள் ஆகிய வேலையிடங்களை உருவாக்குவது. அவற்றுக்கெல்லாம் செண்ட்ரல் டி.ஏ. அளிப்பது ஆகியவை மட்டுமே. கூடவே இருக்கிறது பார்க்கின்ஸன் விதி. எவ்வளவு போஸ்டுகள் உருவானாலும் அத்தனைக்கும் ஏற்ற அளவில் உருப்படாத வேலைகளும் அதிகரிக்கும். வேறு பலன் லேது.

1932-ல் உருவான பொருளாதார மந்த நிலை ரூஸ்வெல்ட்டின் புதிய ஏற்பாட்டினால் (New Deal) நீங்கியது என்று பலர் கூறுவர். உணமை கூறப்போனால் இரண்டாம் உலக மகாயுத்தம் 1939-ல் வந்ததால்தான் பொருளாதார நிலை மேம்பட்டது. அதாவது சுட்டிப் பையன் பி. லட்சுமணன் கண்ணாடி ஜன்னலை உடைத்தான். ஜெர்மனியில் கூட ஹிட்லர் ஜெர்மனியின் படைபலத்தை அதிகரித்ததால்தான் வேலையில்லா திண்டாட்டம் பெரும் அளவில் குறைந்தது. ஆனால் இரண்டாம் உலக மகா யுத்தமும் வந்தது.

இது நமக்கு தேவையா? அப்படியே மூன்றாம் உலக மகா யுத்தம் வந்தால் என்ன நடக்கும்? கூறுவது கடினம். ஆனால் ஒன்று கூறலாம், நான்காம் உலக மகா யுத்தத்தில் விற்களும் அம்புகளும் மட்டுமே பயன்படும், ஆனால் அது வர கண்டிப்பாக நூறாண்டுகள் போல ஆகும்

(இப்பதிவின் ஆங்கில மூலம் இங்குள்ளது) .

அன்புடன்,
டோண்டு ராகவன்

6 comments:

Anonymous said...

a) மசால் தோசை junk food -லிஸ்டில் வருமா ? anything fried/cooked in oil is comes under this classification?
b) மாடு பிடிக்கப் போனதுண்டா ? ஜல்லிக்கட்டுக்கு
c) கோவை அண்ணபூரானாவில் காபி சாப்பிட்டு இருக்கிறீர்களா ?
d) காந்தி சிலைக்கு மாலை அணிவித்ததுண்டா ? காந்தி ஜெயந்தி அன்று அவரை நினைப்பதுண்டா ?
e) கடலில் கால் நனைக்க துணை தேடுவது எதானால் ? சுனாமி வந்து விடுமோ என்ற பயமா?
f) முடி வெட்டிக் கொள்ளும் போது உங்களுக்கு தூக்கம் வருமா ?
g) சகோதரி நிவேதிதா -ஐ சந்தித்த பிறகு தான் பாரதி பெண் விடுதலை பற்றி எழுத ஆரம்பித்தாராமே ?
h) நமக்கு வால் மட்டும் இருந்தா இப்ப மாதிரி பாண்ட் போட்டுக்க முடியுமா ? பஞ்ச கச்சம் தான் சரியா வரும்-நு நினைகிறேன். உங்கள் கருத்து என்ன?
i) English தான் என் உயிர் , பிரஞ்ச் தான் என் முச்சு என்ற கோஸ்டிகள் அவர்களிடம் இருக்கிறதா?
j) சட்டக் கல்லூரி முன்னாள் அன்று நீங்கள் இருந்திருந்தால் என்ன செய்திருப்பெர்கள் - குப்புக்குட்டி

Anonymous said...

அடியைப் பிடிடா பாரத பட்டா
What does this title mean? Dondu sir

dondu(#11168674346665545885) said...

அடியைப்பிடிடா பாரத பட்டா என்றால் எல்லாவற்றையும் முதலிலிருந்து ஆரம்பிக்க வேண்டும் என்று பொருள். அதாவது பட்டும் திருந்தாமல் எல்லாவற்றையும் மறுபடி மறுபடி செய்வது. உப்பிலியின் கதை அதைத் தெளிவுபட கூறுகிறது.

அன்புடன்,
டோண்டு ராகவன்

Anonymous said...

இது நமக்கு தேவையா? அப்படியே மூன்றாம் உலக மகா யுத்தம் வந்தால் என்ன நடக்கும்? கூறுவது கடினம். ஆனால் ஒன்று கூறலாம், நான்காம் உலக மகா யுத்தத்தில் விற்களும் அம்புகளும் மட்டுமே பயன்படும், ஆனால் அது வர கண்டிப்பாக நூறாண்டுகள் போல ஆகும்


1.will the world be destoyed-in 2012 as said by a boy ( who came from mars)?
2.already threats to obama is comming in news?( from extremists)
3.what is the real reason for the downward trend in stock market?
4.2.75 lak crores of money released by reserve bank .where it has gone?
5.what will happen to indian economy?

Anonymous said...

குப்புகுட்டி அண்ணாச்சியின் குறும்பு கேள்விக்கு டோண்டு சாரின் குஷியான பதிலகள்தான் நாளைய
highlight .
சரியா சார்?

வெள்ளிக்கிழமை கேள்வி பதில் ரெடி பண்ணி விட்டீர்களா?

காலை 5 மணிக்கு எதிர்பார்க்கலாமா?

Anonymous said...

பயனுள்ள கட்டுரை. சந்தைப் பொருளாதாரத்தின் பலவீனமான பகுதி தவிர்க்கப்பட்டிருக்கின்றது. இது முதலாளித்துவ தலைவர்கள் டாஸ் கப்பிட்டல் படிக்க விரும்புகின்ற காலம்.

டோண்டு ராகவனுக்கு ஒரு குட்டி சபாஷ்.

புள்ளிராஜா

 

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது