1/06/2006

கிரிக்கெட் தேர்வில் நடக்கும் கூத்து

முதலிலேயே கூறிவிடுகிறேன், கிரிக்கெட்டுக்கும் எனக்கும் ஒத்துக்கொண்டதே இல்லை. நான் சாரணர் இயக்கத்தில் செயல்பட்ட காலத்தில் நாங்கள் வழக்கமாக திருவல்லிக்கேணியில் உள்ள வென்லக் பார்க்கில் கூடுவோம். இது மெரினா மைதானத்தை ஒட்டி உள்ளது. தினமும் மாலை கிரிக்கெட் ஆட்டம் ஆடுவோம். அடிக்கடி டக்தான் எடுப்பேன். இந்த அழகில் அந்த நாட்களில் நாட்குறிப்பு எழுதும் பழக்கமும் உண்டு. "இன்று ரன் எதுவும் எடுக்கவில்லை" என்பதை கிட்டத்தட்ட தினமும் எழுதியிருப்பேன். அதைப் பார்த்து என் அம்மா கூட கேலியாகக் குறிப்பிடுவார், "டோண்டு நீ ரன் எடுத்தால் எழுது, இல்லாவிட்டால் நாங்களே புரிந்து கொள்வோம் நீ டக் அடித்தாய் என்று".

ஆனாலும் கிரிக்கெட் காமண்டரி ரேடியோவில் கேட்பதில் எல்லாம் குறைவில்லை. டெஸ்ட் மேட்சானாலும் சரி ரஞ்சி ட்ராஃபியானாலும் சரி ரேடியோவே கதி என்றுதான் நானும் என் நண்பர்களும் இருப்போம். அதிலும் வெங்கடராகவன் கிண்டி பொறியியல் கல்லூரியில் எனக்கு இரண்டு வருடம் சீனியர் என்பதில் மிகப்பெருமை. அவரை எனக்கு நன்றாகத் தெரியும், ஆனால் அவருக்குத்தான் என்னை தெரியாது! அக்காலக்கட்டத்தில் அவர், என் வகுப்பு தோழன் சத்வேந்தர் சிங் ஆகியோரை உள்ளடக்கிய எங்கள் கல்லூரியின் கிரிக்கெட் குழு அபார வெற்றிகளை குவித்தது.

ஆனால் நான் ஒன்றை அடிக்கடி காண நேர்ந்தது. அதாவது தமிழ்நாட்டு ஆட்டக்காரர்களுக்கு இடம் கொடுக்க மட்டும் மனதே இருந்ததில்லை. கிட்டத்தட்ட 96 மேட்சுகளில் திறமையாக பேட் செய்த ஸ்ரீகாந்த் ஓரிரு மேட்சில் சரியாக ரன் எடுக்காததற்காக விலக்கப்பட்டார். கிருபால் சிங், மில்கா சிங் ஆகியவர்கள் செய்த ஒரே குற்றம் தமிழ்நாட்டு கிரிக்கெட் டீமில் இருந்ததுதான் என்றே தோன்றுகிறது.

கேப்டனாக சென்றாலும் வெங்கடராகவனை இங்கிலாந்தில் சில மேட்சுகளில் ஆட விடவில்லை. ஒரு டெஸ்டில் அவர் தலைமையில் இங்கிலாந்தை அந்த நாட்டிலேயே வெற்றி கொள்ளும் வாய்ப்பு வந்த போது கவாஸ்கர் சொதப்பலாக ஆடி மேட்சை டிரா செய்ய வைத்தார். அதற்கு அவரை விளக்கம் கூட கேட்கவில்லை. இந்த காம்ப்ளி வரிசையாக சொதப்பல் செய்தபோதும் அவரை தொடர்ந்து ஆட விட்டார்கள். அகர்க்கருக்கு அவ்வளவு சான்ஸ் கொடுத்த பிறகு இப்போது ஆடுகிறார். ஏன் நம்மவருக்கும் அம்மாதிரி வாய்ப்பு கிடைப்பதில்லை? கங்குலியையே எடுத்துக் கொள்ளுங்களேன். எல்லாம் நேரம் சுவாமி. செலக்ஷன் டீமில் இருக்கும் நம்மவர்கள் என்ன கிழிக்கிறார்கள் என்று தெரியவில்லை. குறுகிய மனப்பான்மை கூடாது, ஆட்டம்தான் முக்கியம் என்றெல்லாம் கூற நன்றாக இருக்கும். ஆனால் அந்தக் கொள்கையை தமிழர்கள் மட்டும் பாவிக்கட்டும் என்று மற்ற எல்லோரும் பெருந்தன்மையாக விட்டு விட்டார்கள் என்றுதான் தோன்றுகிறது.

இத்தருணத்தில் நாங்கள் குடியிருந்த வீட்டின் சொந்தக்காரரை இங்கு குறிப்பிட வேண்டும். அவரைப் பற்றி வேறு சமயத்தில் நான் இந்தப் பதிவு போட்டுள்ளேன். அவர் பம்பாயில் பல ஆண்டுகள் ரயில்வேயில் வேலை செய்துவிட்டு ரிடையர் ஆனவர். அவருக்கு பம்பாய் டீமை பிடிக்காது. அந்த டீம் இந்திய கிரிக்கெட் டீமை ரொம்பத்தான் ஆளுமை செய்கிறது என்பது அவர் எண்ணம். ஆகவே கிரிக்கெட் செலக்ஷன் கமிட்டி மேலும் அவருக்கு சுத்தமாக நல்ல அபிப்பிராயம் கிடையாது.

அறுபதுகளில் ஒரு சமயம் மேற்கிந்தியத் தீவுக்கு இந்திய கிரிக்கெட் டீம் சென்றது. டீம் உறுப்பினர்களை செலக்ட் செய்து ரேடியோவில் அறிவித்தார்கள். அச்சமயம் W.P.K. ஐயங்கார் அவர்கள் வீட்டில் இல்லை. வந்ததும் வராததுமாக என்னை அழைத்து கேட்டார்:
"என்ன டோண்டு, கிரிக்கெட் டீமை சொல்லிட்டாங்களா?"
நான்: "ஆயிற்று மாமா"
அவர்: "வெங்கடராகவன் டீமில் இருக்கானா?"
நான்: "இல்லை மாமா."
அவர்: "உருப்படாதுன்னா, நம்ம டீமுக்கு அஞ்சு மேட்சிலும் உதைதான்".

மேலே பேச விருப்பமின்றி அவர் சென்றார். ஆனால் அந்தோ, அவர் கூறியது அப்படியே பலித்தது. நன்றாக வேண்டும் இந்தியாவுக்கு என்றுதான் எனக்கும் அவருக்கும் அப்போது தோன்றியது.

நல்லதுக்கு காலம் இல்லை என்றுதான் கூற வேண்டும்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

3 comments:

பழூர் கார்த்தி said...

கிரிக்கெட்டே ஒரு கூத்துதேன்.. இதுல இதுல நடக்கற தேர்வு பத்தி கேக்கணுமா ???

*****

போன பாகிஸ்தான் டூர்ல நம்ம பாலாஜி கலக்குனாறு.. அதுக்கப்புறம் அவரை ஒதுக்கிட்டாங்கேன்னு நினைக்கேன்..

*****

பதானி, ரமேசு, ரூபன் பால் இப்பிடி நிறைய பேர் இருக்காங்கே.. எங்கிட்டு போய் புகார் கொடுக்க ?? இந்த பயலுகளே இப்பிடித்தான் :-)

dondu(#11168674346665545885) said...

முற்றிலும் உண்மை சோம்பேறி பையன் அவர்களே. நம்மால் ஆனது புலம்புவது மட்டுமே.

அன்புடன்,
டோண்டு ராகவன்

டிபிஆர்.ஜோசப் said...

அதாவது தமிழ்நாட்டு ஆட்டக்காரர்களுக்கு இடம் கொடுக்க மட்டும் மனதே இருந்ததில்லை. //

அத சொல்லணுமா என்ன? அந்த காலத்து வி.வி. குமார்.. சந்திரசேகர விட சூப்பரா எந்த பிச்சிலும் விக்கெட் எடுப்பார். அப்புறம் பரத் ரெட்டி.. கிர்மானிக்காகவே தியாகம் செய்யப்பட்டவர்.. அப்புறம் ஸ்ரீகாந்த், இப்ப பாலாஜி, ஏன் யேசுராஜ் கூட நல்லா போடரார்.. வெங்கடராகவனுக்கே அந்த கதியாயிருந்தப்போ இவங்கள பத்தி என்ன சொல்றது..

தமிழ்நாடுன்னாலே நிறைய பேருக்கு அலர்ஜி.. அதுவும் ஒரு தென்னாட்டுக்காரன் கேப்டனா இருக்கும்போது.. இந்த பெங்காலி ஆளுங்களுக்கு இருக்கற ரோஷம் நமக்கில்லையே.. நம்மாளுங்களால புலம்பத்தான் முடியும் போல.. ஹூம்..

 

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது