1/18/2006

நினைக்கத் தெரிந்த மனமே உனக்கு

சில நினைவுகள் என்ன முயன்றாலும் நம்மை விட்டு அகலுவதில்லை. அவற்றில் ஒன்று இளமையில் வறுமை. என் தாத்தா இறக்கும்போது என் தந்தைக்கு 19 வயதுதான். அவருக்கு ஒரு அண்ணா, ஒரு தம்பி மற்றும் ஒரு தங்கை (என் வருங்கால மாமியார்). என் சித்தப்பா அந்தச் சமயம் 5 வயது குழந்தை. தாத்தா இருந்தவரை குடும்பத்தில் ஒரு பிரச்சினையும் இல்லை. அவர் ஏ.ஜி. அலுவலகத்தில் சுப்பிரண்டண்ட் ஆக பணி புரிந்தார். 1931 ஆம் வருடம் அவர் இறந்தபோது மாதச் சம்பளம் 390 ரூபாய்கள். அக்காலத்தில் அது ரொம்பப் பெரிய தொகை. இக்கால விலைவாசிகளுக்கு அட்ஜஸ்ட் செய்து பார்த்தால் மாதம் 60,000-க்கு குறையாது.

திடீரென குடும்பத்தலைவன் இறந்த நிலையில் அக்காலத்தில் விதவைக்கு பென்ஷன் எல்லாம் கிடையாது. பொறுப்பு முழுதும் என் பெரியப்பா தலைaயில் விழுந்தது. அவர் பி.எல். படித்திருந்தார். சொல்லிக் கொள்ளும்படியான பிராக்டீஸ் ஏதும் இல்லை. கல்யாணம் வேறு ஆகியிருந்தது. எப்படியோ சமாளித்தார். அதற்காக குடும்பத்தில் கடுமையான முறையில் சிக்கனம் கடை பிடிக்கப்பட்டது. துணிமணிகள் எல்லாம் எவ்வளவு தேவையோ அவ்வளவுக்கு மட்டும் வாங்கப்பட்டன. அரை வீசை (700 கிராம்) கறிகாய் வாங்கினால் இரண்டு வேளைக்கு வைத்துக் கொள்வார்கள். குழம்பு இருந்தால் ரசம் இருக்காது. துவையல் செய்து அப்பளம் மட்டும் காய்ச்சிய நாட்களும் உண்டு.

பிற்காலத்தில் என் தந்தை ஹிந்து நிருபராக வேலை செய்த காலத்தில் அவ்வளவு கஷ்டம் இல்லையென்றாலும் சிக்கனமாக இல்லையென்றால் மாதக் கடைசியில் கஷ்டம்தான். என் தந்தைக்கு அது பிடிக்காது. ஆகவே சிக்கன வாழ்க்கை தொடர்ந்தது. திடீரென என் அத்தையின் கணவர் மரணமடைய அவர் முதல் இரண்டு குழந்தைகள் எங்கள் வீட்டிலும், அத்தை மற்றும் மிகுதி 3 குழந்தைகளும் பெரியப்பா வீட்டிலுமாக இருக்க வேண்டிய நிலை. சிக்கன வாழ்க்கை இன்னும் கடுமையாக அனுசரிக்கப்பட்டது. அதனால்தான் நாங்கள் எப்போதுமே மாதக் கடைசி கஷ்டங்களைப் படவில்லை.

1971-ல் நான் பம்பாய் சென்றபோதும் என் சிக்கன வாழ்க்கை தொடர்ந்தது. 540 ரூபாய் சம்பளத்தில் 100 ரூபாய் அப்பாவுக்கு மாதா மாதம் அனுப்பிவிட்டு, சாப்பாடு, வாடகை மற்றச் செலவுகள் போல மாதம் 200 ரூபாய் மிச்சம் பிடிக்க முடிந்தது. இது பற்றி நான் இப்பதிவிலும் அதன் பின்னூட்டங்களிலும் ஏற்கனவே குறிப்பிட்டுள்ளேன். ஆக இங்கும் எனக்கு மாசக் கடைசி தொல்லைகள் எல்லாம் இல்லை.

1974-ல் சென்னைக்கு மாற்றல் பெற்று வந்தேன். என் தந்தை 1979-ல் இறக்கும் வரை என்னுடனேயே இருந்தார். இந்த 5 வருடங்களில்தான் முக்கியமான ஒன்றைப் பார்த்தேன். பணக்கஷ்டம் சுத்தமாக இல்லை. சொந்த வீடு வாடகை இல்லை. நன்றாக தாராளமாக செலவழித்தாலும் பிரச்சினை இருந்திருக்காது. ஆனாலும் எங்களால் சிக்கன வாழ்க்கையை மாற்ற முடியவில்லை. முக்கியமாக என் தந்தைக்கு அது முடியாத காரியமாகவே இருந்தது. தேவையில்லாது ஃபேன் சுற்றக் கூடாது, விளக்குகள் எரியக்கூடாது என்றெல்லாம் கூறுவார். எனக்கும் அவர் கூறியது சரி என்றுதான் பட்டது. ஆகவே சிக்கன வாழ்க்கைதான். என் வீட்டம்மாவும் (என் அத்தை பெண்) சிறு வயதில் கஷ்டப்பட்டு விட்டதால் அவருக்கும் இம்முறை பழக்கமானதே.

இப்போது? என் அப்பன் மகர நெடுங்குழைகாதன் அருளால் காசுக்கு பஞ்சமில்லை. ஆனால் இப்போதும் வரவுக்குள்ளேயே செலவுதான். என்ன, வரவு அதிகம் ஆகவே செலவு சற்றே அதிகரித்துள்ளது. மொழிபெயர்ப்பு வேலைகள் வீட்டில் தலைக்கு மேல் இருப்பதால் எங்காவது வெளியில் சென்றால் கால் டாக்ஸி எடுத்து செல்வது அதிகம் ஆகி விட்டது. நேரம் பொன்னானது அல்லவா? கார் வாங்க வேண்டாம் என்று தீர்மானித்ததும் சிக்கன நடவடிக்கையே. அது எப்படி என்பதைப் பற்றி இப்பதிவில் குறிப்பிட்டுள்ளேன்.

ஆனால் ஒரு சிறு சந்தேகம். நான் காலத்துக்கேற்ப இல்லையென்று பலர் கூறுகின்றனர். ரொம்ப கருமி என்றும் அழைக்கப்படுகிறேன். ஆனால் அவ்வாறு அழைக்கும் பலர் என்னிடம் கடன் கேட்டு அது கிடைக்காதவர் என்பதால் அதன் நம்பகத்தன்மை குறைந்து காணப்படுகிறது என்று நான் நினைக்கிறேன். நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?

அன்புடன்,
டோண்டு ராகவன்

15 comments:

Muthu said...

சிக்கனமாக இருந்த பழகிவிட்டால் அதை விட முடியாது என்பது உண்மைதான்.

ஒரு இருபதாயிரம் ரூபாய் கடனாக கொடுக்கமுடியுமா? (நீங்கள் எப்படி என்றா கேட்கிறீர்கள்? பிறகு சொல்கிறேன்.)

dondu(#11168674346665545885) said...

முத்து அவர்களே,

நீங்கள் யார்? உங்களை நான் பார்த்ததே இல்லையே!!!!!!

அன்புடன்,
டோண்டு ராகவன்

பாலசந்தர் கணேசன். said...

Dear Sir
I have removed all the comments by Poli Dondu. Any idea who he is. Is there any way we can take some action to stop this.

dondu(#11168674346665545885) said...

பாலசந்தர் அவர்களே, போலி டோண்டு யார் என்பது தமிழ்மணத்தில் அனேகருக்குத் தெரியும். முக்கியமாக எனக்குத் தெரியும், காசி அவர்களுக்கும் தெரியும்.

அவன் இப்போதும் தமிழ்மணத்தில் வேறு சில பெயர்களில் ஒளிந்திருப்பதும் தெரியும். மீன் வாசனை போல அவன் எங்கிருந்தாலும் அடையாளம் காணப்படுவான்.

என் பின்னூட்டங்களைப் பொருத்த வரை 3 ஷரத்துகள் உள்ளன. அவை மூன்றும் சரியாக இருந்தால்தான் அது என்னுடைய பின்னூட்டம்.

உங்கள் பதிவுகள் அனானி மற்றும் அதர் ஆப்ஷன்களை வைத்திருக்கிறீர்கள். அவற்றை செயலிழக்கச் செய்து ப்ளாக்கர் பின்னூட்டம் மட்டும் என்றிருந்தாலே பாதி தொல்லை விடும். இப்போது அவன் உங்கள் மற்றும் என்னுடைய ப்ளாக்கர் எண்களை வைத்து பதிவிட முடிந்ததே இந்த அதர் ஆப்ஷனால்தான். ஆனால் இதில் என்னுடைய ஃபோட்டோ இருக்காது.

அப்படியே ப்ளாக்கர் பதிவாளர்கள் மட்டும் என்றிருந்தால் அவன் வேறு வழியைக் கையாளுவான். என்னுடைய டிஸ்ப்ளே பெயர் மட்டும் புகைப்படத்தை வைத்து அவன் சில ப்ளாக்கர் கணக்குகள் இம்மாதிரி நச்சுப் பின்னூட்டங்களுக்காகவே தயார் செய்து வைத்துள்ளான். அவற்றை உபயோகித்து பின்னூட்டமிட்டால் அது என் போட்டோவுடன் வரும். ஆனால் எலிக்குட்டியை பின்னூட்டத்தின் மேலே உள்ள dondu(#4800161)மேல் வைத்தால் திரையின் கீழே இடது பக்கத்தில் என் எண் (#4800161) தெரிய வேண்டும். போலி டோண்டுவாக இருந்தால் வேறு எண் தெரியும்.

ப்ளாக்கர் இல்லாத பதிவுகளில் மேலே கூறியவை பிரயோசனம் இல்லை. ஆகவே என் பின்னூட்டங்கள் என்னுடைய தனிப்பதிவு ஒன்றிலும் பின்னூட்டமாக நகலிடப்படும். அப்பதிவின் உரல் உங்கள் பதிவில் கொடுத்தாலும், மறுபடியும் இங்கே தருவேன். பார்க்க http://dondu.blogspot.com/2005/12/2.html

அப்பதிவையும் அதற்கு முன்னோடி பதிவையும் அவற்றின் முறையே 104 மற்றும் 537 பின்னூட்டங்களுடன் படித்தால் போலி டோண்டு யார் என்பது விளங்கும்.

ஆக உண்மை டோண்டுதான் பின்னூட்டமிடுகிறான் என்பதற்குத் தேவையான 3 ஷரத்துகள் பின்வருமாறு:
1. எலிக்குட்டியை dondu(#4800161)மேல் வைத்துப் பார்த்தால் கீழே 4800161 எண் தெரிய வேண்டும்.
2. அதே சமயம் டிஸ்ப்ளே பெயருடன் என் போட்டோவும் தெரிய வேண்டும் (சம்பந்தப்பட்டப் ப்ளாக்கர் போட்டோ எனேபிள் செய்திருந்தால்).
3. அப்பின்னூட்டத்தின் நகல் என் தனிப்பதிவிலும் வர வேண்டும்.
4. முக்கியமாக லூசுத்தனமாக எல்லாம் டோண்டு எழுத மாட்டான் என்பதையும் ஞாபகம் வைத்துக் கொள்ள வேண்டும்.

இன்னொரு விஷயம். உங்கள் பதிவில் உங்களிடம் சற்று கடுமையாக கடைசி பின்னூட்டமிட்டேன். மன்னிக்கவும்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

dondu(#11168674346665545885) said...

நாட்டாமை அவர்களே,

நீங்கள் குறிப்பிடுவது ரன்னிங் செலவுகள் மட்டுமே. மீதி ஃபிக்ஸட் செலவுகளும் உள்ளன. கார் விலைக்கான வட்டி. டிரைவர் செலவு (எனக்கு டிரைவிங் தெரியாது), மராமத்து செலவு.

நீங்கள் பொறியாளராக இருந்தால் இப்போது நான் கூறப்போவது புரியும். அதாவது மிகச் சிறந்த செயல் திறனுக்கு ரன்னிங் செலவு = பிக்ஸட் செலவு. ஆக நீங்கள் கூறும் கிலோமீட்டர் செலவுகள் எல்லாம் மறுபடி வரும்.

அப்படியே சிறிது சேமிப்பு இருந்தாலும் உறவினர் செலவு வேறு. அதாவது வீட்டிற்கு வந்த உறவினரை ரயில்வே ஸ்டேஷன் வரை காரில் கொண்டு விட வேண்டும். டாக்ஸி என்றால் அவரை டாக்ஸியில் ஏற்றி விட்டால் அவரே போய்க்கொள்வார் டாக்ஸி செலவையும் அவரே பார்த்துக் கொள்வார். நீங்கள் கூடப் போவதும் போகாததும் உங்கள் இஷ்டம்.

நீங்கள் சென்னைக்கு வந்து காரை அண்ணாசாலை பகுதிக்கு நீங்களே ஓட்டிச் சென்றால் பார்க்கிங்கிற்கு நாய் படாத பாடுதான் பட வேண்டும்.

இதையேல்லாம் என்னுள்ளெ இருக்கும் பொறியாளன் பார்த்துக் கொள்வதால் அவனுடைய சகாவான மொழிபெயர்ப்பாளன் சந்தோஷமாக இருக்கிறான்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

dondu(#11168674346665545885) said...

நன்றி டி.ராஜ் அவர்களே.

பொதுவாகவே ஆசியர்கள் சேமிப்பவர்கள். ஆனால் அமெரிக்கர்கள் மற்றும் ஐரொப்பியர்களின் அனுபவங்களைப் பார்த்தால் வேறு மாதிரி இருக்கும். உதாரணத்துக்கு ஜெர்மனி போன்ற தேசங்களில் ஒன்றன் பின் ஒன்றாக இரு தலைமுறையினர் ஒரே நாளில் தங்கள் வங்கிசேமிப்புகள் செல்லாக்காசாகிப் போனதை மக்கள் மறக்கவில்லை. ஆகவே அனுபவி ராஜா என்று அனுபவிக்கிறார்கள் என நான் நினைக்கிறேன்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

dondu(#11168674346665545885) said...

டி.ராஜ் அவர்களே,

நான் எழுதுவதற்காக ஒரு புது பதிவுக்கு வித்திட்டிருக்கிறீர்கள் நன்றி.

அன்புடன்,
டோண்டு ராகவன்

Unknown said...

//அப்படியே சிறிது சேமிப்பு இருந்தாலும் உறவினர் செலவு வேறு. அதாவது வீட்டிற்கு வந்த உறவினரை ரயில்வே ஸ்டேஷன் வரை காரில் கொண்டு விட வேண்டும். டாக்ஸி என்றால் அவரை டாக்ஸியில் ஏற்றி விட்டால் அவரே போய்க்கொள்வார் டாக்ஸி செலவையும் அவரே பார்த்துக் கொள்வார். நீங்கள் கூடப் போவதும் போகாததும் உங்கள் இஷ்டம்//.

//நான் காலத்துக்கேற்ப இல்லையென்று பலர் கூறுகின்றனர். ரொம்ப கருமி என்றும் அழைக்கப்படுகிறேன்//.

அந்தாருக்கு பாருங்க முதல்ல... நீங்க எழுதின பின்னூட்டம்... பின்ன ஏன் சொல்ல மாட்டாங்க?., டோண்டு அவர்களே., ஆள் அப்பீட்டாயிட்டேன்னு நினைக்காதிங்க., உங்களுடைய முந்திய பதிவிற்கு பதில் தனிப் பதிவில் நிச்சயம் உண்டு.... இது வேற யாரோன்னு குழப்பம் வேண்டாம்., நாந்தான்.. நானேதான்!!!.

enRenRum-anbudan.BALA said...

//முத்து அவர்களே,

நீங்கள் யார்? உங்களை நான் பார்த்ததே இல்லையே!!!!!!
//

ராகவன் சார்,

என்னையாவது ஞாபகம் இருக்கிறதா ???? எங்காவது "சிறுவயது சிந்தனைகள்" படித்த மாதிரி ;-)

ரத்னா கபேக்கு (கூட) வரும்படி என்னை 2 முறை அழைத்திருக்கிறீர்கள் !!! உங்களைக் கருமி என்றழைப்பதா ????

ஐயம்: அப்படி வந்திருந்தால் பில்லை என் தலையில் கட்டியிருப்பீர்களோ :-)

எ.அ. பாலா

dondu(#11168674346665545885) said...

வாங்க அப்பிடிப்போடு அவர்களே. "அதற்குள் 10 முறை 'புள்ள கனவுல வந்திச்சு (நாந்தான்!) பாக்கனும்னு ஓடி வந்தேன்னு' வரும் உங்கள் பெரியப்பா சௌக்கியமா?

மற்றப்படி நீங்களாவது அப்பீட் ஆவதாவது. சொல்ல வந்ததைப் பிடிவாதமாகக் கூறும் ஆர்வத்தில் நீங்கள் என்னைப் போலவே இருக்கிறீர்கள் என்பதை மகிழ்ச்சியுடன் கூறுகிறேன்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

dondu(#11168674346665545885) said...

வாருங்கள் பால அவர்களே. ரத்தினா கபேக்கு 20000 ரூபாய் எல்லாம் பில்லாகாதல்லவா?

அன்புடன்,
டோண்டு ராகவன்

Geetha Sambasivam said...

It is true now-a-days people usd to spend money.They are ignoring the savings because of open economy and so many things are selling at 0%interest. So they want to buy them at any cost not knowing of the after effects.In my childhood radio and newspaper are luxury items.We used to read newspapers in the school library only.But to day we spending 300 to 400 for magazine and papers.Time is changing.

dondu(#11168674346665545885) said...

கீதா அவர்களே,

வருகைக்கு நன்றி. இன்ஸ்டால்மெண்டில் வாங்கி இன்சால்வெண்ட் ஆவதுதான் நடக்கிறது.

அன்புடன்,
டோண்டு ராகவன்

dondu(#11168674346665545885) said...

கீதா அவ்ர்கள் பதிவு ஒன்றில் நான் இட்டப் பின்னூட்டம் இதோ. பார்க்க: http://sivamgss.blogspot.com/2006/01/forgotting-passwords.html#comments

கீதா அவர்களே,

மேலே தமிழில் என் பெயரின் கீழ் வந்திருக்கும் பின்னூட்டம் நான் இட்டதில்லை. அதை தயவு செய்து நீக்கவும்.

உண்மை டோண்டுதான் பின்னூட்டமிடுகிறான் என்பதற்குத் தேவையான 3 ஷரத்துகள் பின்வருமாறு:

1. எலிக்குட்டியை dondu(#4800161)மேல் வைத்துப் பார்த்தால் கீழே 4800161 எண் தெரிய வேண்டும்.
2. அதே சமயம் டிஸ்ப்ளே பெயருடன் என் போட்டோவும் தெரிய வேண்டும் (சம்பந்தப்பட்டப் ப்ளாக்கர் போட்டோ எனேபிள் செய்திருந்தால்).
3. அப்பின்னூட்டத்தின் நகல் என் தனிப்பதிவிலும் வர வேண்டும்.

முக்கியமாக லூசுத்தனமாக எல்லாம் டோண்டு எழுத மாட்டான் என்பதையும் ஞாபகம் வைத்துக் கொள்ள வேண்டும். முதலில் மட்டுறுத்தலை இந்த வலைப்பூவில் செயல்படுத்தவும்.

இப்பின்னூட்டத்தை இட்டது உண்மையான டோண்டுவே என்பதைக் கூற இதன் நகலை என்னுடைய இப்பதிவிலும் பின்னூட்டமாக இடுவேன். பார்க்க http://dondu.blogspot.com/2006/01/blog-post_18.html

அன்புடன்,
டோண்டு ராகவன்

மங்களூர் சிவா said...

/
சிக்கனமாக இருந்த பழகிவிட்டால் அதை விட முடியாது என்பது உண்மைதான்.
/

உங்களின் பழைய பதிவுகளை தேடித்தேடி படிக்கிறேன். வாழ்கைக்கு மிக அவசியமான ஒன்று.

 

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது