1/22/2006

குட்டி ரேவதியும் CPWD-யும்

C.P.W.D. அனுபவங்கள் - 5

இந்த வரிசையில் வந்த முதல் நான்கு பகுதிகள் பின் வருமாறு:

1)
2)
3)
4)

இன்று 22-01-2006. சரியாக 35 ஆண்டுகளுக்கு முன்னால் அதாவது 22-01-1971 அன்று இந்தத் துறையில் இளம்பொறியாளராக பம்பாயில் சேர்ந்தேன். சேர்ந்ததும் வெளியே வந்து நான் செய்த முதல் வேலை என் வேலை வாய்ப்பு அலுவலகத்தில் கொடுத்த அடையாள அட்டையை சென்னை நந்தனத்தில் இருந்த அந்த அலுவலகத்துக்கு எனக்கு வேலை கிடைத்த செய்தியை பதிவு செய்து தபால் பெட்டியில் போட்டேன். அதற்கு தபால் தலை தேவையில்லை என அட்டையிலேயே குறிப்பிடப்பட்டிருந்தது.

அறிமுகம் போதும். இந்தப் பதிவுக்கான விஷயத்துக்கு வருவேன்.

சென்னையில் மத்திய ரிஸர்வ் போலீஸ் வளாகத்தில் வேலை. நான் மின்பொறியாளன். எங்கள் மின் துறைக்கும் கட்டுமானப் பணித் துறைக்கும் ஏழாம் பொருத்தம். ஒரே வாத விவாதங்கள்தான். நாங்கள்தான் அப்படியென்றால் சிவில் காண்ட்ராக்டருக்கும் எலெக்ட்ரிகல் காண்ட்ராக்டருக்கும் சண்டை தூள் பறக்கும். சிவில்காரர்கள் கூரைகளுக்கு கம்பி கட்ட எலெக்ட்ரிகல்காரர்கள் மின்சார இழைகளை கொண்டு செல்ல தோதாக காண்ட்யூட் பைப்புகள் இட வேண்டும். கம்பி கட்டினால்தான் காண்ட்யூட் போட முடியும், காண்ட்யூட் போட்டால்தான் கான்க்ரீட் போட முடியும். மின்சாரக்காரர்கள் சுவற்றை உடைத்து விட்டார்கள் என்று சிவில்காரர்கள் கத்த, சிவில்காரர்கள் தாங்கள் இட்ட மின் இழைகளை அறுத்து விடுகிறார்கள் என்று பதிலுக்கு இவர்கள் கத்த, ஒரே கலாட்டாதான்.

சிவில் காண்ட்ராக்டர் ஒருவர் பெயர் மந்திரமூர்த்தி. அவரைக் கண்டாலே எலெக்ட்ரிகல் ஆட்களுக்கு ஆகாது. ஏனெனில் அவர் அவர்களை வாய்க்கு வந்தபடி திட்டுவார். ஆகவே தங்கள் முதலாளியிடம் கூடக் கூறாமல் ஒரு வேலை செய்தார்கள். அவர்கள் குழுவில் மந்திரமூர்த்தி என்ற அதே பெயரில் ஒரு பையன் இருந்தான். முதலில் அவனிடம் விஷயத்தை விளக்கித் தயார் செய்தார்கள். பிறகு எலெக்ட்ரிகல் ஆட்கள் எப்போது சிவில் கண்ட்ராக்டர் வேலை நடக்கும் இடத்தில் இருந்தாலும் வேண்டுமென்றே உரத்த குரலில் தங்களுடன் வேலை செய்யும் மந்திரமூர்த்தியை வாய்க்கு வந்தபடி திட்டுவார்கள். அவனும் தலையைத் தொங்கப் போட்டபடி கஷ்டப்பட்டு சிரிப்பை அடக்கிக் கொள்வான். ஏனெனில் திட்டத் திட்ட அவனுக்கு பின்னால் பல சலுகைகள் அவன் தோழர்கள் செய்து தருவார்கள். "அடேய் மந்திரமூதி, முட்டாப் பயலே" என்பதுதான் இருந்த வசவுகளிலேயே மிக நாகரிக வசவு என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்!! அவ்வப்போது ஓகார வசவுகளும் வரும். சிவில் காண்ட்ராக்டருக்கு முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடிக்கும்.

ஒரு நாள் அவரே தாங்க முடியாமல் எலெக்ட்ரிகல் காண்ட்ராக்டர் நாதன் அவர்களிடம் நேரில் இது பற்றி புகார் செய்தார். நாதனும் தன் ஆட்களை கண்டிக்க இந்த வேலை நின்றது.

குட்டி ரேவதி விவகாரத்தைப் பற்றி படிக்கையில் இந்த நிகழ்ச்சி நினைவுக்கு வந்தது. ஹி ஹி ஹி.

அன்புடன்,
டோண்டு ராகவன்

No comments:

 

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது