11/11/2008

சட்டம் ஒரு கழுதை என்றால் கழுதை கோச்சுக்கும்

“சட்டம் ஒரு இருட்டறை” என்று விஜயகாந்த் கூறியுள்ளார், “சட்டம் என் கையில்” என கமல் கூறியுள்ளார். ஆனால் பலர் சட்டத்தை கழுதையுடன் ஒப்பிடுகின்றனர். இது பற்றி கல்கி அவர்கள் எழுதியதிலிருந்து:

முதலில், நான் மன்னிப்புக் கேட்டுக்கொள்ள வேண்டும். யாரிடம் என்று நேயர்களுக்கு சொல்ல வேண்டியதில்லை. கழுதையிடந்தான்! கழுதையைச் சட்டத்துடன் ஒப்பிட்டது கழுதைக்கு அகெளரவமாகத் தோன்றலாம். ஆனால், இந்த அவதூறுக்கு நான் பொறுப்பாளியல்ல. "சட்டம் ஒரு கழுதை" என்று கூறியவர் ஓர் ஆங்கில ஆசிரியர். எனவே கழுதை அவதூறு வழக்குத் தொடர எண்ணினால், தப்பு! மன்னிக்கவேண்டும். கோர்ட்டுக்குப் போவது போன்ற அறிவீனமான செயலைக் கழுதை செய்யுமா, என்ன!

கழுதையின் மீது எவ்வளவு சுமை போட்டாலும் அது எப்படி முணுமுணுக்காமல் சுமந்து செல்கிறதோ, அப்படியே சட்டத்தின் மீது எவ்வளவு பாரம் போட்டாலும் அது தாங்குகிறது. உங்களுக்கு இதில் சந்தேகமிருந்தால் ஓர் உதாரணம் கூறுகிறேன்.

சென்னை ஹைகோர்ட்டில் சில மாதங்களுக்கு முன் பந்தகப் பத்திரம் சம்பந்தமான ஒரு வழக்கு நடந்தது. பந்தக நிலங்களில் தனக்கு ஜீவனாம்ச பாத்தியம் உண்டென்று மீனாக்ஷயம்மாள் என்னும் பெண்மணி ஒரு குறுக்கு வழக்குத் தொடுத்தாள். அதில் அந்த அம்மாளுக்கு அனுகூலமாகத் தீர்ப்புக் கிடைத்தது. ஜீவனாம்சத் தொகையும் செலவுத் தொகையுமாகச் சேர்த்து ரூ. 503-8-0 அந்த அம்மாளின் வக்கீல் ஸ்ரீமான் விசுவநாதய்யர் பிரதிவாதிகளிடமிருந்து பெற்றுக்கொண்டார். ஆனால், இந்தப் பணத்தை அவர் மீனாட்சி அம்மாளிடம் கொடுக்கவில்லை. பலமுறை கேட்டும் பயனில்லாமற் போகவே, அந்தப் பெண்மணி வக்கீல்மீது வழக்குத் தொடுத்தாள். இவ் வழக்கு கீழ்க் கோர்ட்டுகளையெல்லாம் தாண்டி, ஹைகோர்ட்டுக்கு வந்தது. நீதிபதி மாதவநாயரும் நீதிபதி ஜாக்ஸனும் வழக்கை விசாரித்தார்கள். வக்கீல் ஸ்ரீமான் விசுவநாதய்யரின் சார்பாக மாஜி நீதிபதி வி.வி. சீனிவாசய்யங்கார் தோன்றி வாதமிட்டார். மேற்படி ஜீவனாம்ச வழக்கில் ஸ்ரீமான் விசுவநாதய்யருக்கு வக்கீல் கூலி ரூ. 550 வரவேண்டுமென்றும், அதற்காகத் தம் கட்சிக்காரர்க்குத் தீர்ப்பான தொகையை அவர் நிறுத்திக் கொண்டதாகவும் அவர் எடுத்துக் கூறினார்.

ஏன்? நன்றாயிருக்கிறதல்லவா! ஜீவனாம்சமும் செலவுத் தொகையும் சேர்த்து ரூ. 503-8-0. இந்தத் தொகைக்காக வழக்கு நடத்திய வக்கீலுக்குக் கூலி ரூ. 550. இது அநீதியேயானாலும், சட்டம் அதற்கு இடங்கொடுக்கின்றதென்றும், வக்கீல் குற்றவாளியல்ல என்றும் கனம் நீதிபதிகள் தீர்ப்பளித்தார்கள்! இது சம்பந்தமான சட்டத்தைத் திருத்தியமைத்தல் நலமென்று அவர்கள் யோசனை சொன்னார்கள்.

அதுதான் விஷயம். சட்டம் வேறு நீதி வேறு. இரண்டும் ஒன்றுதான் என்று நாட்டில் சிலர் நினைக்கிறார்கள். இப்படி நினைத்த சாது மனிதன் ஒருவன் வெளியூர் கோர்ட் ஒன்றில் நீதிபதியைப் பார்த்து "எஜமானே! நீதி வழங்கவேண்டும்" என்ற முறையிட்டான். நீதிபதி கொஞ்சம் நகைச்சுவையுள்ளவர். அவர் உடனே "இங்கே நீதி கிடையாது அப்பனே நீதி கிடையாது சட்டம்தான் உண்டு" என்று பதில் கூறினார். ஏழை ஸ்திரீ ஒருத்தியின் ஜீவனாம்சத் தொகை முழுவதையும் வக்கீல் விழுங்கிவிடுதல் நீதிக்குப் பொருந்தாது என்ற குட்டிச்சுவரைக் கேட்டாலும் சொல்லும். இதைத் தென் ஆப்ரிக்க வெள்ளைக்காரன்கூட ஒப்புக்கொள்வான். ஆனால் சட்டம் அதற்கு இடம் கொடுக்கிறது. சட்டத்தின்படி வக்கீல் தமக்குச் சேரவேண்டிய பாக்கி ரூ. 4-8-0க்கு அந்தப் பெண்மணியின் மீது வழக்குத் தொடராதிருந்தாலே பெரும் பாக்கியம்! "சட்டம் - ஒரு கழுதை" என்ற ஆங்கில ஆசிரியரின் வாக்கு உண்மையா, அல்லவா?

சில வருஷங்களுக்கு முன்னர் நடந்த மற்றொரு வழக்கைப் பற்றிச் சமீபத்தில் கேள்விப்பட்டேன். இரண்டு சகோதரர்கள் தங்கள் தகப்பனார் வைத்துச் சென்ற இரண்டு லட்ச ரூபாய் சொத்தைப் பிரித்துக் கொண்டார்கள். சொத்துப் பிரிவினை எல்லாம் சமரசமாக முடிவடைந்து. கடைசியில் தகப்பனார் பூஜை செய்து வந்த, 'ஸாளக் கிராம'த்தைப் பிரித்துக் கொள்வதில் தகராறு ஏற்பட்டது. இதில் சமரசம் ஏற்படாமல் போகவே சகோதரர்கள் கோர்ட்டுக்குச் சென்றார்கள். ஹைகோர்ட் 'புல்பெஞ்சு', வரைக்கும் போய் வழக்காடினார்கள். பிரித்துக் கொண்ட ஒரு லட்ச ரூபாய் சொத்தில் ஒரு தம்பிடி பாக்கியின்றி இருவரும் செலவழித்தார்கள். முடிவாக ஸாளக் கிராமத்தை இரண்டாய் உடைத்து தலைக்கு ஒரு பாதி எடுத்துக்கொள்ள வேண்டுமென்று தீர்ப்பு அளிக்கப்பட்டது! எனவே ஒரு சந்தேகம். மேற்படி ஸாளக் கிராமத்திடம் இவ்விரு சகோதரர்களை விட அதிக பக்தி கொண்டு மானஸ பூசை செய்துவந்த சில வக்கீல்மார்கள் இருந்திருக்கலாமோ? அந்தப் பக்தர்களுக்கு அருள்புரிய வேண்டுமென்று 'ஸாளக் கிராமம்' திருவுளங் கொண்டிருக்கலாமல்லவா?

மயிலாப்பூரில் ஏறக்குறை எழுபது வயதானவரும் ஆசார சீலருமான ஒரு பெரிய வக்கீல் இருக்கிறார். இவர் சமீபத்தில் விவாக வயது கமிட்டியாரின் முன்பு சாட்சியம் தருகையில் பெண்களுக்கு 11 வயதுக்குள் கல்யாணம் செய்து, பெரியவளான பதினாறாம் நாள், சாந்தி முக்ஷர்த்தம் நடத்தி, அதற்கு அடுத்த வருஷம் குழந்தை பிறந்து, அதில் தப்பிப் பிழைத்தால் இருபது வயதிற்குள் கிழவியாகி, கண்ணால் பார்க்க வேண்டுமென்றும், பெண்களுக்கு அடுப்பங்கரைக் கல்வியே அதிகமென்றும், அதற்கு மேல் கொடுத்தால் அஜீரணமாகி விடுமென்றும், இன்னும் பல முன்னேற்றமான யோசனைகளும் கூறி, கடைசியில் இவைதான் தம்முடைய மதம் என்றும், "என் மதத்துக்காக நான் உயிரையும் விடச் சித்தமாயிருக்கிறேன்" என்றும் சொல்லி முடித்தார். ஆனால், தற்போது அவர் தினந்தோறும் கோர்ட்டுக்கு வந்து பணத்துக்காக உயிர் விடுவதைத்தான் நாம் பிரத்தியட்சமாகப் பார்க்கிறோம். இப்பெரியார் சமீபத்தில் ஓர் அரிய யோசனை கூறினார். அதாவது, பத்து வருஷத்திற்குச் சட்டக் கலாசாலையை மூடிவைக்க வேண்டுமென்று அவர் தெரிவித்தார்; இந்த யோசனை எனக்கு மிகவும் பிடித்திருந்தபடியால் சட்டக் கலாசாலை மாணாக்கர் சிலரிடம் அதைப் பற்றி அபிப்பிராயம் கேட்டேன். "இதைவிட அறுபது வயது தாண்டிவிட்ட வக்கீல்கள் கோர்ட்டுக்கு வரக்கூடாதென்று சட்டம் செய்தால் நலம்" என்று அவர்கள் சொன்னார்கள். பின்னர், கட்சிக்காரர் சிலரிடம் இந்த யோசனையைப் பற்றிச் சொன்னேன். 'சட்டக் கலாசாலையை மூடுவதை விடக் கோர்ட்டுகள் எல்லாவற்றையும் பத்து வருஷ காலத்திற்கு மூடி விட்டால் சர்வோத்தமமாயிருக்கும்" என்று இவர்கள் அபிப்பிராயப்பட்டார்கள்.

வக்கீல் தொழிலில் ஏற்பட்டிருக்கும் நெருக்கடியை இவை எல்லாம் தெரிவிக்கின்றன அல்லவா? வக்கீல்களின் கூட்டம் நாளுக்கு நாள் பெருகி வருகிறது. கட்சிக்காரர்களோ நாளுக்கு நாள் ஏழையாகி வருகிறார்கள். எனவே போகும் வழி என்ன? கொஞ்ச நாளைக்கு முன் மாயவரத்துக்கு ஜில்லா நீதிபதி வந்திருந்தபோது வக்கீல்கள் அவரை இந்தக் கேள்விதான் கேட்டார்கள். அதற்கு அந்த நீதிபதி "வேறு வழி ஒன்றும் எனக்குப் புலனாகவில்லை. ஈஸ்வரனைப் பிரார்த்தியுங்கள்" என்று பதிலளித்தார். தற்போது மாயவரம் வக்கீல்கள் "ஈஸ்வரா! வழக்குகளும் கட்சிக்காரர்களும் பெருகும்படி அருள் செய்வாய்" என்று தினந்தோறும் மூன்று வேளை பிரார்த்தனை செய்து வருகிறார்களென்றும் நம்புகிறேன்
.


இதெல்லாம் நம்ம ஊரில்தான் நடக்கும் என நம்பினால், சாரி, உலகம் முழுதும் இப்படித்தான். நம்ம ஊராவது பரவாயில்லை. பிரேசில் போன்ற நாடுகளில் படிவங்களை நிரப்பியே ஆயுளைத் தொலைத்தவர்கள் உண்டு. இங்கிலாந்தின் நிலையைப் பார்ப்போம். ஆங்கில எழுத்தாளர் Jerome K. Jerome எழுதிய “ஊர்சுற்றிகள் மூவர்” (Three men on the bummel) என்னும் புத்தகத்திலிருந்து ஒரு பகுதி.

ஜெரோம் அச்சமயம் (1890-களில்)ஒரு பத்திரிகையில் துணை ஆசிரியராகப் பணி புரிந்து வந்தார். பல விஞ்ஞான விஷயங்கள் பற்றியும் அவர் எழுதுவார். வாசகர்கள் கேட்கும் கேள்விகளுக்கும் பதில் எழுதுவார். “பலூன் மாமா,” என்ற பெயரில் ஒருவர் ஹைட்ரஜன் வாயுவை உற்பத்தி செய்வதைப் பற்றி கேட்டிருந்தார். அக்காலத்தில் கூகள் இல்லாததால் இவரும் பிரிட்டிஷ் மியூசியம் சென்று அது பற்றி தகவல் சேகரித்து எழுதியிருக்கிறார். அது சுலபம்தான் ஆனாலும் ஜாக்கிரதையாக செய்ய வேண்டிய விஷயம் என்ற டிஸ்கி வேறு போட்டிருக்கிறார். ஆனால் விதி யாரை விட்டது. ஏற்கனவே அவர் பிரிட்டிஷ் மியூசியம் சென்று பேட்டண்ட் மருந்து விளம்பரம் ஒன்று பார்த்து கஷ்டப்பட்டதை நான் இங்கே எழுதியுள்ளேன். சரி, அது இங்கே எதற்கு? இக்கதையைப் பார்ப்போமா?

பத்து நாட்கள் கழித்து மழை நிறைந்த அந்தப் பகலில் முகத்தில் பூனை மீசையுடன் ஒரு முப்பந்தைந்து வயது மதிக்கக் கூடிய ஒரு குண்டு பெண்மணி மூஞ்சுறு போன்ற முகத்தோற்றத்துடன் கூடிய ஒரு பத்து வயது பையனை தன்னுடன் இழுத்து வந்தாள். பையன் முகமோ ஒரு உணர்ச்சியும் இல்லாமல் இருந்தது. அவன் தலையைச் சுற்றி ஒரு துணி சுற்றப்பட்டிருந்தது. அவனை பத்திரிகை ஆசிரியர் மற்றும் ஜெரோம் முன்னால் நிறுத்தி துணியை விலக்கியதும்தான் புரிந்தது, பையன் முகத்தில் ஏன் உணர்ச்சி ஏதும் இல்லை என்று. புருவங்கள் ஒட்டு மொத்தமாக மிஸ்ஸிங். தலையில் ரோமங்களும் ரொம்ப இல்லை. ஏதோ ரசத்தில் கடுகு தாளித்தது போல அங்குமிங்குமாக மயிர் போன்று ஏதோ வஸ்து தென்பட்டது.

குண்டுப் பெண்மணி கோபத்துடன் பேச ஆரம்பித்தாள். “போன வாரம் கூட இந்தப் பையன் சுருட்டை முடி, அடர்ந்த புருவங்களுடன் அழகாகவே இருந்தான். உங்கள் பத்திரிகையில் விளங்காத பயல் ஒருவன் ஹைட்ரஜன் வாயு தயாரிப்பதின் செயல் முறையை தந்திருக்கிறான்” என்றாள். அப்போதே அவள் குரல் ஆரோகண வரிசையில் ஏற ஆரம்பித்து விட்டது.
“பையனுக்கு என்ன ஆச்சு?” என்று பத்திரிகையாசிரியர் கேட்டார்.
“அந்த விளங்காத பயல் எழுதியதை பார்த்து இந்தக் குழந்தை ஹைட்ரஜன் வாயுவை தயாரிக்க முயற்சி செய்தான். படாலென சத்தம். விளைவை நீங்கள் இப்ப பார்க்கிறீர்கள்” என்றாள் அவள். பத்திரிகையில் பலூன் மாமா ஜெரோமைக் கேட்ட கேள்வியும் அவரது பதிலும் அடங்கிய கட்டுரையை விசிறி அடித்தாள். ஆசிரியர் அதை எடுத்தார், படித்தார்.
“இந்தப் பையந்தான் ‘பலூன் மாமாவா’?” என்று அவர் கேட்டார்.
“ஆமாம் என்று சொன்ன அந்த குண்டு பெண்மணி “இப்ப இதுக்கு என்ன சொல்லறீங்க” என்று கேட்டாள்!
“முடி மறுபடியும் முளைக்காதா,” என்று ஆசிரியர் கேட்டார்.
“அந்தக் கதையெல்லாம் இங்கே வேண்டாம். நஷ்ட ஈடு கேட்டு கோர்ட்டில் உங்கள் பத்திரிகை மேல் கேஸ் போடுவேன்,” என்றாள் அவள்.

ஆசிரியர் மேலே ஒன்றும் பேசாமல் அவளுக்கு ஐந்து பவுண்டுகள் கொடுத்து அனுப்பினார். இப்போது ஜெரோமுக்கு ஒரே ஆச்சரியம். கோர்ட்டில் அந்தப் பெண்மணி கண்டிப்பாக தோற்றிருப்பாள் என்று ஆசிரியரிடம் எடுத்து கூற, அவர் ஜெரோமுக்கு சில அறிவுரைகள் கூறினார். அதாகப்பட்டது, ஒரு திருடன் உங்களை கத்தியை நீட்டி பயமுறுத்தி பணம் கேட்டால், முடிந்தால் அவனுடன் சண்டை போட்டு ஜயித்தாலும் ஜயிக்கலாம். ஆனால் அதே திருடன் ஐந்து பவுண்ட் தராவிட்டால் கேஸ் போடுவேன் ந்ன்றால் பேசாமல் அதைத் தந்து விடுவதே மிக சிக்கன நடவடிக்கையாகும். இனிமேல் இந்த மாதிரி விஞ்ஞானக் தகவல்கள் எல்லாம் தர வேண்டாம் என்பதே அந்த அறிவுரைகள்.

மான நஷ்ட வழக்குகள் போடுவது பற்றி பலர் பல தருணங்களில் யோசித்திருக்கென்றனர். அவர்களுக்கு பிரபல அமெரிக்க வழக்கறிஞர் லூயி நைஜர் ஒரே ஒரு அறிவுறையைத்தான் கூறுகிறார். அதாவது வழக்கு போட்டே ஆக வேண்டுமா என்ற கேள்வியை முதலில் தன்னைத்தானே கேட்டு கொள்வது நலம். அதுவும் அமெரிக்காவில் இது சள்ளை பிடித்த காரியம். அவதூறைக் கண்டு கொள்ளாமல் போனால் மக்கள் அதை மறந்து விடுவார்கள். ஆனால் கேஸ் என்று போட்டால் அது என்ன அவதூறு என்பதை அறிய பலர் ஆவலாக இருப்பார்கள். ஆகவே அது திரும்பத் திரும்பக் கூறப்படும் அபாயம் உண்டு. சில சமயம் கேஸ் போட்டவருக்கே எதிராகத் திரும்பவும் செய்யும். இதையெல்லாம் அவர் தான் எழுதிய புத்தகத்தில் விளக்கமாக பல உதாரணங்களுடன் கூறியுள்ளார்.

டாக்டர் ஜெயின் என்னும் பல் மருத்துவர் தன் மனைவி வித்யாவை கொலை செய்ய இரண்டு கூலிக் கொலைக்காரர்களை ஏவியுள்ளார். கொலை நடந்தது. மூவருமே மாட்டிக் கொண்டனர். கேஸ் நடந்தது. மூவருக்குமே ஆயுள் தண்டனை வழங்கப்பட்டது. ஜெயின் பேசாமல் அதை ஏற்றுக் கொண்டு ஜெயிலுக்கு சென்றார். கூலிக் கொலைக்காரர்கள் ஆயுள் தண்டனையை எதிர்த்து மேல் முறையீடு செய்ய, மேல் நீதிமன்றமோ அவர்களுக்கு ஆயுள் தண்டனை கொடுத்தது போதாதென அதை தூக்கு தண்டனையாக மாற்றியது. அது நிறைவேற்றவும் பட்டது. ஜெயினோ ஆயுள் தண்டனை முடிந்து வெளியே வந்து தனது வேலையைத் தொடர்ந்தார்.

“இப்போ எதுக்கு இந்தப் பதிவை நகைச்சுவை மற்றும் விவாத மேடையின் கீழ் போட்டிருக்கே” என்று கேட்கும் முரளி மனோஹருக்கு எனது பதில் இதுதான். சிரிக்க வைத்து சிந்திக்க வைப்பது கலைவாணர் மட்டும்தான் செய்வாரா? இந்த டோண்டு ராகவன் செய்ய முடியாதா?

இது எப்படி இருக்கு?

அன்புடன்,
டோண்டு ராகவன்

10 comments:

Chandra said...

I really liked the post on Law. But also wish to point out what our great economist Frederick Bastiat said in his Small Book on The Law. The below few paragraphs are from this book and he clearly says that the purpose of law is to protect the individual’s life, liberty and property.

What Is Law ?
What, then, is law? It is the collective organization of the individual right to lawful defense.
Each of us has a natural right--from God--to defend his person, his liberty, and his property. These are the three basic requirements of life, and the preservation of any one of them is completely dependent upon the preservation of the other two. For what are our faculties but the extension of our individuality? And what is property but an extension of our faculties?
If every person has the right to defend -- even by force -- his person, his liberty, and his property, then it follows that a group of men have the right to organize and support a common force to protect these rights constantly. Thus the principle of collective right -- its reason for existing, its lawfulness -- is based on individual right. And the common force that protects this collective right cannot logically have any other purpose or any other mission than that for which it acts as a substitute. Thus, since an individual cannot lawfully use force against the person, liberty, or property of another individual, then the common force -- for the same reason -- cannot lawfully be used to destroy the person, liberty, or property of individuals or groups.
Such a perversion of force would be, in both cases, contrary to our premise. Force has been given to us to defend our own individual rights. Who will dare to say that force has been given to us to destroy the equal rights of our brothers? Since no individual acting separately can lawfully use force to destroy the rights of others, does it not logically follow that the same principle also applies to the common force that is nothing more than the organized combination of the individual forces?
If this is true, then nothing can be more evident than this: The law is the organization of the natural right of lawful defense. It is the substitution of a common force for individual forces. And this common force is to do only what the individual forces have a natural and lawful right to do: to protect persons, liberties, and properties; to maintain the right of each, and to cause justice to reign over us all.

http://econlib.org/library/Bastiat/basLaw1.html#firstpage-bar

Chandra

Maniz said...

good one :)

Anonymous said...

Dear Raghavan,

Nothing offensive. But, you are a classic megalomaniac. You have proved it once again in the last paragraph.

Cheers,
--Nokia Fan

Anonymous said...

டோண்டு ஐயா மிகச் சரியாய் சொல்லியுள்ளீர்கள்.

1947-2008 சுமார் 60 வருடங்களில் இந்தியாவில் கீழ்க்கண்டோரில் எத்தனைபேர்( பெரும் புள்ளிகள்) நீதி மன்றத்தால் தண்டிக்கப் பட்டுள்ளார்கள்.

கீழ்க்கோர்ட்டில் தண்டனை
மேல்க்கோர்ட்டில் விடுதலை
இது தானே நாளும் நடக்கும் சமாச்சாரம்


1.உண்வுப் பொருள்களை பதுக்கி கொள்ளை லாபம் அடித்தோர்( அதுவும் குறிப்பாக பற்றாக்குறை காலங்களில்)
2.வரவுக்கு மீறி லஞ்சம் வாங்கி பெரும் சொத்து சேர்த்த அரசியல் தலைவர்கள்
3.அதிகாரத்தை துஷ்பிரயோகம் பண்ணி பெரும் கொள்ளை லாபம் அடித்த அரசு அதிகாரிகள்
4.வங்கியில் பெரும் கடன் வாங்கி திருப்பி தரதோர்.
5.கடத்தல் மன்னர்கள்
6.கள்ள நோட்டு கும்பல்கள்
7.அரசு ஓப்பந்தங்களில் முறைகேடு செய்தோர்
8.கள்ளச் சாராய அதிபர்கள்
9.immoral traffic in large scale
10.கறுப்பு பண முதலைகள்.


இவர்களுக்கு நம்மை காக்கும் கடவுளாவது தண்டனை அளிப்பரா?

அரசன்( சட்டம்-நீதி-ஒழுங்கு) என்றும் கொல்வதில்லை( கண்டு கொள்வதில்லை)


தெய்வம் என்று கொல்லும்?

Anonymous said...

பதிவுலகப் பெரியவர் டோண்டு ராகவன் சாருக்கு ஒரு விண்ணப்பம்.

உங்கள் பதிவுகளிலே டோண்டுவின் வெள்ளிக்கிழ்மை பதில்கள் வாசகர்களிடையெ பெரும் மதிப்பு பெற்றது என்பதற்கு வெள்ளிக்கிழமை ஹிட் கவுண்டரே சாட்சி.

இருந்த போதிலும் ஒரு சில பதிவுலக நண்பர்கள் தற்சமயம் கேள்வி பதில் சுவை குன்றியிருப்பதாகவும் கேள்விகள் வரத்து குறைவாய் இருப்பதாகவும்
கருத்து தெரிவித்து வருகிறார்கள்.


இதை சுவை உடையதாய் மற்ற ஒரு எளிய வழி.

வெள்ளிக்கிழமை தொடங்கி-வியாழன் இரவு வரை நடக்கும் அரசியல்,சமுக,கலையுலக நிகழ்வுகளை வைத்து தாங்களே ஒரு கேள்விபதில்
நிகழ்வினை நடத்தினால் அது நிச்சய்ம் அனைவரையும் விரும்பி படிக்க வைக்கும்( உங்கள் பதிவுகளுக்கு பின்னூட்டங்களின் எண்ணிக்கை முன்பு இருந்த உச்ச நிலை மாறிஉள்ளதாய் பேசப் படுகிறது)

ஒரு சில பத்திரிக்கைகள் இதே முறையை பின்பற்றி பிரபலாமாய்
வெற்றி பவனி வருவது தெரிந்ததே!

வால்பையன் said...

தமிழகத்தில் வழக்கு போட காவல்னிலையம் சென்றால் அங்கேயே சொத்தை புடுங்கி விடுவார்கள்.

கழுதையாவது சுமை தூக்க பயன்படும்.
நமது ச...ம், விளிம்பு நிலை மனிதர்களுக்கு ஒன்றுமே செய்ததில்லை.

Arun Kumar said...

நல்ல பதிவு டோண்டு சார் :)
இன்றைய இந்திய சட்ட துறையில் சில பொருந்தாத நடைமுறைகளை சுமந்து வருகிறோம்..

நீதிமன்ற விடுமுறைகாலம்.

ஆங்கிலேய நீதிபதிகள் இந்தியாவில் கோடைகாலத்தில் இருக்க முடியாது என்ற காரணத்தினால் வந்த இந்த நடைமுறையை இன்னமும் நாம் சுமந்து கொண்டு இருக்க வேண்டுமா?

Anonymous said...

சட்டம் ஒரு இருட்டறை என்பது பழைய மொழி
புது மொழி தாங்கள் சொன்னது தான் போல் இருக்கிறது.

பாதிக்கப்படுவோரை காப்பாற்ற அரசால் இயக்கபட்டுள்ள கீழே சொல்லப்பட்டுள்ள சட்டங்களால் அப்பாவிகள் பாதிக்கப் படுகிறார்கள் என்று வலம் வரும் செய்திகளில் உங்களுக்கு உடன் பாடு உண்டா?
செயல்கள் மிகை படுத்தப்படுகிறதா?
விடிவுகாலம் உண்டா?

1.தீண்டாமை ஒழிப்பு சட்டப் பாதுகாப்பு விதிகள்
2.வரதட்சனை ஒழிப்புச் சட்டப் பாதுகாப்பு விதிகள்
3.பாலியல் பலாத்கார தடுப்பு விதிகள்
4.வன்கொடுமை பாதுகாப்பு விதிகள்

Sethu Raman said...

Dondu sir:
I do not agree with your response to Mr. Krishnan on the Saravana Bhavan US visa case.
The U.S. Government does grant visas for Indian Cooks, on a permanent basis, if one goes through the procedures - a)advertise in local US papers calling for cooks with knowledge of Indian cuisine - prove that there are no locals able to do this kindof cooking b) file an immigrant petition with the Immigration service, and WAIT for some years for thisto come through. What Shivakumar did was a criminal offence, in applying for a tourist visa,with falsified documents, whereas his intention was to employ this people in the us as cooks. They try to take a short cut and violate immigration regulations and get caught.. The New York Woodlands and other Indian eateries went the regular way and were able to take many cooks in the past. Saravanas policy in recruting appears to be crooked.

dondu(#11168674346665545885) said...

//a)advertise in local US papers calling for cooks with knowledge of Indian cuisine - prove that there are no locals able to do this kindof cooking b) file an immigrant petition with the Immigration service, and WAIT for some years for thisto come through. //
சில ஆண்டுகள் காத்திருக்க வேண்டும் என்பதுதானே பிரச்சினை. இப்படி செய்திருக்கலாமா, அதாவது, இந்தியாவில் சமையற்காரகளை வேலைக்கெடுத்து அவர்களை பணிமாற்றம் செய்வது. அவ்வாறு பல இந்திய நிறுவனங்கள் செய்கின்றனவே, உதாரணம் எல். & டி., இன்ஃபோசிஸ், டி.சி.எஸ் ஆகியவை.

இதில் அமெரிக்க சட்டம் என்ன சொல்கிறது?

அன்புடன்,
டோண்டு ராகவன்

 

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது