4/29/2009

எங்கே பிராமணன் - பகுதி - 59 & 60

பகுதி - 59 (27.04.2009):
பாகவதரை தான் சொல்வதை ஏற்கச் செய்ய இயலாத சோர்வில் வசுமதி திரும்புகிறாள். நாதனிடம் பாகவதர் பற்றி ஆத்திரமாக பேசுகிறாள். இப்படி பாகவதர் சொல்வதையெல்லாம் கேட்டுத்தான் தீர வேண்டுமா என கேட்கிறாள். அவர் தனது குரு அவர் சொல்படித்தான் தான் நடக்கப் போவதாகவும் நாதன் திட்டவட்டமாகக் கூறுகிறார்.

சோவின் நண்பர், குரு கிணற்றில் விழச்சொன்னாலும் விழ வேண்டுமா என கேட்கிறார். ஆம் என சோ அழுத்தம் திருத்தமாகக் கூறுகிறார். அதே சமயம் குருவுக்கும் தரக்கட்டுப்பாடு எல்லாம் உண்டு எனவும் கூறுகிறார். ஒரு சீடன் நிஜமாகவே குருவின் பேச்சைக் கேட்டு கிணற்றில் விழுந்த கதையையும் கூறுகிறார். மாடுகளை அவன் மேய்க்க அழைத்து சென்று மாலை திரும்புகிறான். குரு அவனுக்கு ஆகாரம் ஏதும் தராவிட்டாலும் அவன் தென்பாகவே இருக்கிறான். விசாரித்ததில் அவன் மாட்டுப் பாலை கறந்து உண்டிருக்கிறான். குரு அவன் அதைச் செய்யலாகாது என கூறுகிறார். அடுத்த முறை பசுங்கன்றின் வாயில் இருக்கும் பால் நுரையை வழித்து உண்டிருக்கிறான். அதையும் குரு தடுக்கிறார். மூன்றாம் நாள் பிட்சை எடுத்து சாப்பிட்டுள்ளான். அதற்கும் தடா. அன்று மாலை அவன் திரும்பவில்லை. குரு போய்ப் பார்க்க, அவன் கிணற்றிலிருந்து குரல் தருகிறான். குரு நடந்ததை விசாரிக்க, ஒன்றுமே சாப்பிடக் கிடைக்காததால் எருக்கம்பூவை உண்டதாகவும் கண்பார்வை பறிபோனதில் கிணற்றில் தவறி விழுந்ததாகவும் கூறுகிறான். குரு அஸ்வினி தேவதைகளை வேண்ட சீடனுக்கு கண்பார்வை கிடைக்கிறது. அவனது விடாத குரு பக்தியை மெச்சி அவனுக்கு நல்ல கல்வியளித்து அவனை ஞானவான் ஆக்குகிறார்.

இன்னொரு சீடன் குரு ஆக்ஞையை ஏற்று வெள்ளத்தைத் தடுத்து அணைபோட தன் உடலையே நீர் செல்லும் வழியில் கிடத்துகிறான். அவனுக்கும் குருவருள் பின்பு கிட்டுகிறது. இதையெல்லாம் கூறிய சோ, குருவும் இதற்கெல்லாம் தகுதியானவராக இருக்க வேண்டும் என்பதையும் மறுபடியும் வலியுறுத்துகிறார். காலேஜ், ஸ்கூல் வாத்தியார் எல்லாம் குருவாக இயலாது எனவும் தெளிவுபடுத்துகிறார்.

மாதா, பிதா, குரு என மூன்றாம் இடத்தில் குருவை வைத்தாலும், மாணாக்கனுக்கு ஞானம் அளிக்க தேவையாக இருப்பது கட்டுப்பாடு, அதை குருவால்தான் அளிக்க முடியும், என்றும் அவர் கூறுகிறார்.

ஆகவே குருதான் சரணம் என நாதன் முத்தாய்ப்பாகக் கூற, இப்போதைய தேவை குரு அல்ல என வசுமதி நொடிக்க்கிறாள். இவர்கள் பேசுவதை கேட்டபடி வரும் சாம்பு சாஸ்திரி அவர்களுக்கு பூஜை பிரசாதங்கள் தந்து ஆறுதல் கூறுகிறார்.

பர்வதம் வீட்டுக்கு வசுமதி வருகிறாள். உமா “அசோக்கை ஏன் அழைத்து வரவில்லை” என கேட்க, வசுமதி அலுத்து கொள்கிறாள். பிறகு அவர்கள் வீட்டை சுற்றிப் பார்க்கிறாள். உமாவின் அறையில் அசோக்கின் பல ஃபோட்டோக்களைப் பார்த்து திகைக்கிறாள்.

நாதன் வீட்டு வராந்தாவில் இரவு மேலும் கீழுமாக நடக்க, அசோக் வந்து விசாரிக்கிறான். நாதன் அவனிடம் கோபமாக பேசுகிறார்.

சாம்பு வீட்டில் பசுவுக்கு உபசாரங்கள் நடக்கின்றன. அவரும் செல்லம்மாவும் அசோக் பற்றி பேசுகின்றனர். யார் சொல்லியும் அசோக் கேட்க மறுக்கிறான் என்னும் நிலையில் நீலகண்டன் மகள் உமாவின் உதவியை நாடலாம் என செல்லம்மா கூறுகிறாள். இம்மாதிரி நாசுக்கான விஷயங்களில் பெண்கள் மூலம் அறிவுரை கூறவைப்பதை ‘காந்தா சம்ஹிதை’ எனக் கூறுவார்கள் என சாம்பு கூறுகிறார். “அது யார் காந்தா”? என நண்பர் கேட்க, சோ அவரிடம் ரத்தக் கண்ணீரில் வரும் “அடி காந்தா நிச்சயமாக இல்லை” எனக்கூறிவிட்டு அது பற்றி விளக்கத் துவங்குகிறார். அறிவுறைகள் மூவகைப்படும். அவை 1. பிரபு சம்ஹிதை (வேதம், அரசக் கட்டளைகளுக்கு சமம்); 2. சுஹுருத் சம்ஹிதை (நண்பன் அறிவுரை கூறுவது போன்றது, புராணங்கள் அப்படிப்பட்டவை) மற்றும் 3. காந்தா சம்ஹிதை (பிரியமாக சொல்லப்படுவை, காப்பியங்கள்). ஆக, பொம்மனாட்டிகள் பேசினால் சில சமயங்களில் காரியம் நடக்கும் என சாம்பு கூறுகிறார். அதனால்தானே கம்பெனிகளில் ரிசப்ஷனிஸ்டாகவும், டெலிமார்க்கெட்டிங்கிற்கும் பெண்கள் நியமிக்கப் படுகின்றனர் என செல்லம்மா கூறுகிறார்.

சாம்பு இதையே நாதன் வீட்டில் கூற அவர் வசுமதியை இது சம்பந்தமாக பர்வதத்தைப் பார்த்து பேசச் சொல்கிறார். அவளும் முதலில் மறுத்தவள், கடைசியில் அரை மனதுடன் சம்மதிக்கிறாள்.

பகுதி - 60 (27.04.2009):
கிருபா வீட்டில் அவன், வேம்பு மற்றும் சாம்பு ஜயந்திக்கு வந்த வரன் பற்றி விவாதிக்கின்றனர். பையனின் அப்பா பிராமணர் இல்லை என்பதை வேம்பு கூற, அது தனக்கு சரிப்படாது என வேம்பு முதலிலேயே எண்ணி ஒதுங்கியிருக்க வேண்டுமென சாம்பு முதற்கண் கூறுகிறார். பிறகு வேம்புவுக்கு இந்த சம்பந்தத்தில் ருசி இருக்கிறதென அறிந்து சற்றே சுதாரிக்கிறார். வேம்பு வீட்டில் தனது மனைவிக்கும், அக்காவுக்கும் இதில் இஷ்டம் இல்லை என்பதையும் பார்க்க வேண்டியிருக்கிறது என வேம்பு கூறுகிறார். ஆக டெஸ்ட் கிரிக்கெட் பந்தயத்தில் தன்னை மூன்றாவது நடுவராக செயல்படும்படி வேம்பு எதிர்பார்க்கிறாரா என சாம்பு நகைச்சுவையுடன் கேட்கிறார். தான் வேம்பு வீட்டுக்கு வந்து சாதக பாதகங்களை கூறப்போவதாகவும், ஆனால் முடிவை வேம்புவின் குடும்பத்தினரே எடுக்க வேண்டும் என்றும் சாம்பு திட்டவட்டமாக கூறுகிறார். இருட்டில் தான் வெறுமனே டார்ச் அடிப்பவர் என்றும், கீழே கிடப்பது பாம்பா கயிறா என்பதை வேம்பு குடும்பத்தினர்தான் பார்த்து கொள்ள வேண்டும் எனவும் அவர் கூறுகிறார்.

நீலகண்டன் வீட்டில் பர்வதத்திடம் வசுமதி பேசுகிறாள். அசோக் மனோதத்துவ நிபுணரிடம் வர மறுப்பதால், உமா அவனுடன் இது சம்பந்தமாக பேசி சம்மதிக்க வைக்க வேண்டும் என தனது ஆசையை கூறுகிறாள். உமாவை அழைத்து பர்வதம் இதை சொல்ல உமா இதை முதலில் ஏற்க மறுக்கிறாள். மனதில் ஒரு கோளாறும் இல்லாத அசோக்கை டாக்டரிடம் அழைத்து செல்வது என்பது பெற்றோர்கள் ஏனும் நிலையில் நாதனும் வசுமதியும் செய்யும் தவறு என உமா கூறுகிறாள். பாகவதரும் இதைத்தான் கூறுகிறார் என வசுமதி திகைப்புடன் கூறுகிறாள். இருப்பினும் வசுமதி மேலும் ஒன்று கூறுகிறாள். அதாவது நாம் மெடிகல் செக்கப்புக்கு போவதில்லையா. அது போல இதையும் ஏன் வைத்து கொள்ளக்கூடாது? மனமும் உடலின் ஒரு உறுப்புதானே, அதுவும் சூட்சுமமான உறுப்பு. வசுமதி சொல்வது ஏற்றுக் கொள்ளத் தக்கதாகவே இருப்பதாக உமா கூறுகிறாள்.

வேம்பு வீட்டில் அவர், அவரது மனைவி மற்றும் தமக்கை மற்றும் சாம்பு அமர்ந்திருக்கின்றனர். விஷயத்தை வேம்பு மறுபடி பிரஸ்தாபிக்கிறார். சாம்பு இதற்கு இரண்டு பதில்கள் இருப்பதாக கூறுகிறார்.

“அது என்ன சார் இரண்டு பதில்கள்? நீங்க ஒரு சமயம் சொன்னேளே எட்டுவகை திருமணங்கள் அது மாதிரியா”? என சோவின் நண்பர் கேட்கிறார். “சாம்பு சொல்லறது இரண்டு பார்வைக் கோணங்கள் பற்றி, இருவகை மணங்கள் அல்ல” என சோ திட்டவட்டமாகக் கூறுகிறார். அந்த எண்வகை மணங்களை பட்டியலிடுமாறு கூற, அவற்றையும் சோ உன்னதத்தின் இறங்கு வரிசையில் பட்டியலிடுகிறார். கடைசியில் எட்டாவதாக வருவது திருட்டுத் தாலி. ஆனால் எங்குமே தற்காலத்தில் பெண்வீட்டாரிடம் வரதட்சிணை வாங்கி மணம் செய்யும் முறையில்லை என்பதையும் அவர் வலியுறுத்துகிறார்.

முதல் பதில் இந்தத் திருமணம் கூடாது என சாம்பு திட்டவட்டமாக கூறுகிறார். வேம்பு வீட்டு பெண்மணிகளுக்கு சந்தோஷம், சாம்பு தங்கள் தரப்பைப் பேசுவதில். காரணங்களை அடுக்கிறார். ஜெயந்திக்கு ப்ரபோஸ் செய்யப்பட்ட பிள்ளையின் தாயாருக்கு கோத்திரம் உண்டு, ஆனால் தந்தைக்கு இல்லை. ஆக திருமணம் செய்து கொண்டதும் ஜெயந்தி என்ன கோத்திரம் என்ற கேள்வி எழுகிறது என சாம்பு கூறுகிறார். அவளுக்கு பிறக்கப் போகும் குழந்தைக்கு என்ன கோத்திரம் என்பதும் இங்கு வருகிறது. அக்குழந்தை வளர்ந்து அதற்கு திருமணம் செய்விக்கும்போது கிரியின் தாயார் சந்திக்கும் சங்கடத்தை ஜெயந்தியும் சந்திக்க வேண்டியிருக்கும்.

இரண்டாவது பதில், தாராளமா இந்தத் திருமணத்தை செய்யலாம். வேம்பு வீட்டு பெண்கள் திகைக்கின்றனர். சாம்பு மேலே பேசுகிறார். இப்போது ஜெயந்திக்கு நல்ல குலம் கோத்திரம் எல்லாம் பார்த்து மணம் செய்த பிறகு அந்த மாப்பிள்ளை கெட்ட பழக்கங்களுடன் இருந்தால் என்ன செய்வது? அதனால் விவாகரத்து ஏற்பட்டால் அப்போது மட்டும் ஜெயந்தியின் கோத்திரம் என்ன? அவளே பின்னால் இது குறித்து வருந்த மாட்டாளா? கிரிக்கு கெட்ட பழக்கம் ஏதும் இல்லை. நல்ல பிராமணனாகவே வளர்க்கப்பட்டுள்ளான். பிறப்பால் பிராமணனை விட இந்த வளர்ப்பால் பிராமணன் மேல் என ஜெயந்தி நினைக்கலாம் அல்லவா என்றும் சாம்பு கூறுகிறார். இதற்கெல்லாம் முத்தாய்ப்பாக இன்னொன்றும் அவர் கூறுகிறார். அதாவது கிரிக்கு ஜெயந்தியை கொடுத்தால் அது ஒரு புண்ணிய காரியம் என்று கூறுகிறார். கிரியின் அன்னைக்கு இருக்கும் மாஜி பிராமணத்தி என்ற பெயர் நீங்கும் என கூறுகிறார். எது எப்படியாயினும் முடிவு என்னவோ வேம்பு குடும்பத்தினர் கைகளில்தான் எனவும் கூறுகிறார்.

வையாபுரி வீட்டுக்கு சிங்காரம் வருகிறான். வையாபுரி அவனைப் பார்த்து கலங்குகிறார். சிங்காரம் முதலில் சாதாரணமாகவே தன்னைக் காட்டிக் கொள்கிறான். தனக்காக வையாபுரி செய்த காரியங்களை மனநெகிழ்வுடன் பட்டியலிடுகிறான். தான் எப்போதுமே அவரது தொண்டன் மட்டுமே எனவும் கூறுகிறான். மெதுவாக அவன் துக்கம் அழுகையாக வெளியாகிறது. வையாபுரியும் தன்னை மறந்து அவனைக் கட்டிப் பிடித்து அழுகிறார். சிங்காரமாக வரும் கவிதாலயா கிருஷ்ணனும், வையாபுரியாக வரும் கிருஷ்ணராஜும் போட்டி போட்டுக் கொண்டு இந்த சீனில் நடித்திருக்கிறார்கள். இந்த எபிசோடின் மகுடமே இந்த காட்சிதான். மேலே உள்ள சுட்டியை சொடுக்கி, வீடியோவில் அதைப் பார்ப்பதே நலம். கவனம் இருக்கட்டும், ஃபைர்காக்ஸை பாவிக்கவும். கூகள் குரோம் வேண்டாம்.

எங்கே பிராமணன் மெகா சீரியல் திங்கள் முதல் வெள்ளி வரை ஜெயா டி.வி.யில் இரவு 8 மணிக்கு.

அன்புடன்,
டோண்டு ராகவன்

3 comments:

Sethu Raman said...

கேள்விகள்

1. நடந்து கொண்டிருக்கும் கோடை நாடக விழாவில் உங்களுக்கு மிகவும் பிடித்தது (அ) மரினா மேடையில்
மு.க. (ஆ) மதுரையிலே இளவல் குழு (இ) ஜெ.ஜெ.அம்மா குழு (ஈ) தோட்டத்திலே மருத்துவரய்யா
(உ) சிவகங்கை சிதம்பரம் குழு ??

2. க்வாட்ரோச்சிக்கு aடுத்தது 'பத்மஸ்ரீ' தானா?மனுஷனுக்கு சரியான மச்சம்!! தொட்டதெல்லாம்
கரைந்து போகிறதே??

3. இந்திய சட்ட அமைச்சர் பாரத்வாஜ் பேசியதைக்கேட்டீர்களா? இந்தியா அட்டார்னி ஜெனரல் மிலான்
பானர்ஜி கொடுத்த கருத்தின் பேரில் தான் இந்த நடவடிக்கை என்று! அட்டார்னி ஜெனரல்கள் யார் - அந்தந்த அரசுகளால் நியமிக்கப் பட்டவர்கள் தானே?

4. சிறுபான்மைப் பிரதிநிதியொருவர், மு.க.வுக்கு மஞ்சத்துண்டு போர்த்தியதைக் கண்டீர்களா ??
ரிசர்வேஷனுக்கு என்னவெல்லாம் செய்ய வேண்டியிருக்கிறது??

M Arunachalam said...

//இந்த எபிசோடின் மகுடமே இந்த காட்சிதான்.//

It was nothing but over-acting. Kavithalaya Krishnan acted more than what he has been paid for :-)

dondu(#11168674346665545885) said...

@அருணாசலம்
முதல் பிரசவத்தின்போது சிறையில் கணவன் இருந்ததை சொல்லிச் சொல்லிக் காட்டிய மனைவி, அடுத்த பிரசவத்தின் போதும் அவன் இல்லாது போனால் தான் இறந்துவிடலாம் என பயந்த மனைவி, அவ்வாறு பயந்தவாறே எல்லாம் நடந்துவிட்ட நிலையில் கணவன் வேறு எப்படி ரியேக்ட் செய்ய வேண்டும் என எதிர்பார்க்கிறீர்கள்? கூடவே வையாபுரியிடம் அவனுக்கு இருக்கும் விசுவாசம் வேறு இருக்கிறது.

அன்புடன்,
டோண்டு ராகவன்

 

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது