11/29/2009

சூரியின் ஜெஸ்டஸ் - வாரத்தின் எட்டாம் நாள் - 2


இரண்டாம் அத்தியாயம் மிகவும் பெரியதாக உள்ளதால் அதை சில பகுதிகளாக பிரித்தேன். மூன்று பகுதிகள் வரும் என எண்ணினேன். ஆனால் அது நான்காக வரும் போலுள்ளது


முதல் அத்தியாயம் இங்கே

இரண்டாம் அத்தியாயம் முதல் பகுதி இங்கே




அத்தியாயம் - 2
வாரத்தின் எட்டாம் நாள் (பகுதி - 2)


திருடர்களில் ஒருத்தன் நீல நிற கால்சட்டை போட்டிருந்தான். இன்னொருத்தன் வெள்ளை நிறத்தில். நீலன் ஏதோ உறுமினான். பையனும் பெண்ணும் தயக்கத்துடன் தங்கள் கைக்கடிகாரங்களை தந்தனர். அவர்களது செல்பேசிகளும் பறிக்கப்பட்டன. எல்லாவற்றையும் நீலன் தான் வைத்திருந்த பையில் போட்டுக் கொண்டான்.

அடுத்தபடியாக பறிக்கப்பட்டன பர்சுகள் மற்றும் கிரெடிட் கார்டுகள். அவற்றைத் தர சற்றே சுணங்கியதால் அந்தப் பையனுக்கு நீலன் கையில் இருந்த துப்பாக்கியின் பின்கட்டையால் மோவாய் மேல் நச்சென அடி கொடுத்தான். பையன் வாயிலிருந்து ரத்தம் கொப்பளித்தது. வெள்ளையன் தன் பங்குக்கு பையனது கையில் கத்தியால் ஒரு கீறல் போட்டான். இப்போது பையன் மற்றும் பெண்ணிடமிருந்தும் எல்லா எதிர்ப்பும் சுத்தமாக அடங்கியது. பெண் மாட்டியிருந்த தோள்மாட்டிப் பையின் பட்டைகள் அறுக்கப்பட்டன. அதிலிருந்த மடிக்கணினியும் ஐபேடும் நீலனது பைக்குள் தஞ்சம் புகுந்தன. இனிமேல் திருட ஒன்றும் மிஞ்சவில்லை.

இதையெல்லாம் பார்த்து கொண்டிருந்த எனக்கு ரத்தம் கொதித்தது. உடல் கோபத்தால் நடுங்கியது. ஆனால் நான் என்ன செய்ய முடியும்? நான் என்ன சினிமா கதாநாயகனா, திருடர்களை நான்கைந்து டிஷும் விட? நான் சுபாவத்தில் அமைதியை விரும்பும் கோழைதானே. பாகஸ் என் தோளைத் தொட்டு அமைதியாக இருக்குமாறு சைகை செய்தார்.

நீலன் தன் பையிலிருந்து நீண்ட நைலான் கயிறு ஒன்றை எடுத்தான். அதை இரண்டாக வெட்டினான். துப்பாக்கி முனையில் அப்பையனையும் பெண்ணையும் நிறுத்தி பக்கத்தில் இருந்த இரு பனைமரங்களில் அவர்களை சேர்த்து கட்டினான். பையன் கெஞ்சினான்.

“அதான் எல்லாத்தையும் எடுத்துக்கிட்டீங்களே. எங்கள போக விடுங்க”

நீலன் சிரித்தான்.
“கவலைப்படாதே கண்ணு. நாங்க இப்போ போய் ஒன்னோட அப்பாக்கு ஃபோன் போட்டு நீ இங்கே இருக்கறதை சொல்லிடறோம். ஒன்னோட அப்பனோட நம்பரைச் சொல்லு”.

திருடங்க ரெண்டு பேரும் போவதற்கான தயாரிப்பில் இருந்தனர். திடீரென வெள்ளையனுக்கு பெண்ணைப் பார்த்து ஒரு சபலம் வந்தது. நீலனைப் பார்த்து சொன்னான்,
“குட்டி ஷோக்காத்தான் இருக்கா, ஹாரி. அவளோட கொஞ்சம் விளையாடிட்டு வரேன். உனக்கு வேணாமா”? “ஒவ்வொருத்தரா செய்வோம்”
நீலன் சொன்னான், “டாஸ் போட்டு பார்ப்போம் யார் முதல்லங்கறதை”

பெண் கத்த ஆரம்பித்தாள். வன்புணர்வு என்பதே சீரியஸ். அதிலும் அதுக்கு கடுமையான தண்டனை வேறு. ஆகவே இவங்க காரியம் ஆனதும் நிச்சயமா சாட்சிங்க யாரையும் விட்டு வைக்க மாட்டாங்க. சாதாரண திருட்டாக ஆரம்பித்தது இப்போது வன்புணர்வு மற்றும் கொலையாக உருவெடுக்க ஆரம்பித்தது. பையனும் கத்த ஆரம்பித்தான். வெள்ளையன் அவன் முகத்தைக் கத்தியால் கீறினான்.

“வாயை மூடு, இல்லேன்னா சங்கை அறுத்துடுவேன்” பையனின் சட்டைக் காலரில் ரத்தம் சொட்டியது. வெள்ளையன் பெண்ணை நோக்கி நிதானமாக நடந்து வந்து, அவள் துணிமேல் கையை வைத்தான்.

இப்போது பாகஸ் வெளிப்பட்டார். அதுவும் பாடிக் கொண்டே. “புதிய வானம், புதிய பூமி” என்று அபத்தமான பாடிக்கொண்டே, மைக்கேல் ஜாக்ஸன் நடன அசைவுகள் வேறு.

திருடர்கள் தாங்கள் செய்யவிருந்த காரியத்தை சற்றே நிறுத்தி பாகஸை அதிசயத்துடன் பார்த்தனர். பாகஸோ கவலையேபடாது அவர்கள் இருக்குமிடம் நோக்கி நகர்ந்தார். நானும் வெளியே வந்து, பாகஸை நோக்கி நடக்க ஆரம்பித்தேன்.

பாகஸ் மரத்துடன் கட்டப்பட்டிருந்த ஆணையும் பெண்ணையும் அணுகினார். “ஐ, ஒரு பொண்ணு, ஒரு பையன்” எனக்கூறிக் கொண்டே கைகளைத் தட்டியவாறு டப்பாங்குத்து போட்டார். திருடங்களை பார்த்து ”திருடங்க” என கத்திக் கொண்டே சிங்கி அடித்தார். வேகமாகத் தன்னைத் தானே சுற்றி, ஒரு குதி குதித்து உட்கார்ந்தார். திருடர்களுக்கு ஒரே குழப்பம், அது அவர்களது கண்களில் தெரிந்தது. என்னைப் பார்த்ததும் அவர்களது பார்வை கடுமையாயிற்று.

பாகஸ் சட்டென எழுந்து என்னருகில் ஓடிவந்தார். “பாத்தியா கண்ணா, இங்க ஒரு பொண்ணு, ஒரு பையன், ரெண்டு கெட்டவங்க இருக்காங்க. இவங்க எல்லோருமே என்னோட கற்பனையில் உதித்தவங்கதான்”.

நீலன் துப்பாக்கியால் என்னைக் குறிவைத்தான். “நீ யாருடா? யாரு இந்தக் கேனையன், ஒன்னோட அப்பனா”?

ஒண்ணுமே தெரியாத பாவனையில் நான் புன்னகை செய்தேன். “அவர் என்னோட அப்பா இல்லை. எனக்கு மாமா முறையாகணும். நீங்களே பாத்தீங்க இல்ல? அவர் ஒரு பைத்தியம், வீட்டை விட்டு ஓடி வந்துட்டாரு. நான் அவரை அழச்சிண்டு போகத்தான் வந்திருக்கேன்”.

அவன் என்னை நம்பவில்லை என்பது அவன் கண்களிலிருந்தே தெரிந்தது. என்னைக் காலில் சுடறதா அல்லது சங்குல சுடறதான்னு அவன் யோசிக்கிற மாதிரி எனக்கு பட்டது. எனக்கு பயத்தில் மூத்திரம் முட்டிக் கொண்டு வந்தது. பாகஸ் மறுபடியும் உரக்கச் சிரித்தார்.  அவனிடம் அவர் சொன்னார், “நீயும் என் கனவுல வர பாத்திரம்தான்”.

பிறகு பாகஸ் என்னிடம் ஒரு பேராசிரியரின் தோரணையில் ஆக்ஸ்ஃபோர்ட் உச்சரிப்புடன் பேச ஆரம்பித்தார். “தேவையில்லாம என்னை சந்தேகப்பட்டியே, இப்ப புரியறதா? இந்த நிகழ்ச்சிகள் எல்லாமே என்னுடைய கற்பனைகள்னு ஒனக்கு புலப்படலையா. நீ இப்போ நிஜம்னு நெனச்சுட்டு இருக்கிறது என்னோட கனவைத்தான்”.

எனக்கு சுத்தமா பாகஸ் என்ன சொல்லறார்னு புரியவில்லை. திருடங்களுக்கும்தான். ஆனா அவங்க கிட்டே ஆயுதம் இருந்தது. மேலும் அவங்க ராட்சசன் கணக்கா வேறு இருந்தாங்க. ஆகவே பயம் எல்லாம் அவங்களுக்கு இல்லை.

நீலன் கடுமையான தொனியில் பாகஸிடம் சொன்னான், “டேய் பைத்தியம், பேசாம ஒதுங்கிக்கோ. ஒன்னோட மருமானை சுட்டுடுவேன். என்னோட கூட்டாளி ஜக் உன் பின்னாலே கத்தியைச் சொருகி மேலே ஏத்துவான்”.

பாகஸ் மெதுவாக நகர்ந்து வெள்ளையனை நோக்கி நின்றார். ஜக் கத்தியை இங்குமங்குமாக ஆட்டினான். அவர் கேனத்தனமாக சிரித்து விட்டு சொன்னார், “நீ என்னோட கனவுல இப்போ இருக்கே. உன் கையில இருக்கறது பிளாஸ்டிக் கத்தி”. அவரது கேலிச்சிரிப்பு ஜக்கை கோபப்படுத்தியது. கத்தியை அவர் வயிற்றில் சொருகினான். படக் என ஒரு சத்தம் கேட்டது. கத்தி மூன்றாக உடைந்தது. மூன்று துண்டுகளும் பாகஸ் கைக்கு எப்படி வந்தன என்பது எனக்கு இன்னும் புரியவில்லை. நீலனைத் தாக்கலாமா என அபத்தமாக ஒரு கணம் யோசித்து அதை கைவிட்டேன். நம்மால் ஆகாத காரியம் என்பது வெள்ளிடைமலை. அவன் கையில் துப்பாக்கி வேறு, எப்போ சுடுவான்னும் புரியவில்லை. பாகஸ் என்னை நோக்கி ஆக்ஸ்ஃபோர்ட் பேராசிரியர் ரேஞ்சில் மேலே பேசினார்.
“எனது அருமை முட்டாள் நண்பனே, இந்த கேடுகெட்ட ஆசாமி கிட்ட இருக்கிற இரும்புக் கத்தி பிளாஸ்டிக்கால் ஆனது என கற்பனை செய்தேன். அப்படியே ஆயிற்று. பாவம் இந்தத் திருடன்”.

ஜக் தன் கரத்தை முஷ்டியாக்கி பாகஸை பார்த்து ஒரு குத்து விட்டான். பாகஸ் கேஷுவலாகச் சொன்னார், “இதப் பார்றா, இந்தாள் கை வெறும் களிமண்ணால் ஆனதுதானே, பாவம் இவனுக்கு ஏன் இந்த வேண்டாத வேலை”?

ஜக் வேகமாகவே குத்தினான். பிறகு ஒரு பெரிய கத்தல் அவனிடமிருந்து வந்தது. அவன் முஷ்டி உடைந்து அது முழுதும் கொழகொழவென ரத்தத்தால் நனைக்கப்பட்டது. இதற்கு நடுவில் பாகஸின் ஒரு கால் அவன் முழங்காலுக்கு கீழே உதைத்ததில் அந்தக்காலும் முறிந்தது. கீழே விழுந்த ஜக் ஒரு நிமிடம் வலியில் புழுவாய் நெளிந்தான். மயக்கமானான்.
இப்போது நீலன் பாகஸை சுட்டான். வெறுமனே கிளிக் என்னும் சப்தம் மட்டும் கேட்டது. பாகஸ் கேலியாகச் சிரித்தார், “இவ்வளவோ கற்பனை செய்யறவன் துப்பாக்கியில் குண்டு இல்லைன்னு கற்பனை பன்ண முடியாதா? இப்போ மறுபடியும் துப்பாக்கியை இயக்கினால், குண்டு எதுவும் வராது. குசுதான் வரும்” என்றார்.

ஹாரி மறுபடியும் சுட்டான். பயங்கர நாத்தத்துடன் அதிலிருந்து வாயுதான் பிரிந்தது. சகிக்க முடியாமல் அவன் மூக்கை மூடிக் கொண்டான்.
“உன் துப்பாக்கியால் இதைத்தான் செய்ய முடியும்” என பாகஸ் சீரியசாகக் கூறினார்.

இப்போது அவரது தத்துவ விவாதம் ஹார்வார்ட் உச்சரிப்புடன் தொடர்ந்தது.
“கௌபாய்ஸ் உபயோக்கிற சுருக்குக் கயிறு பற்றி உனக்குத் தெரியும்தானே. இப்போ என் கையிலே அது இருக்கு, அதை நான் இந்தத் திருடன் கழுத்தை நோக்கி வீசி அவனைப் பிடிக்க முடியும்னு கற்பனை செய்யறேன். ஸ்பெயின் தேசத்து ஜல்லிக்காளையையே இக்கயிற்றை மாட்டி இழுத்து கீழே தள்ள என்னால் முடியும்போது இவன் வெறும் சுண்டைக்காய்தானே? இப்பப் பாரு அவன் முழிக்கிறதை”?

பாகஸால் வீசப்பட்ட சுருக்குக் கயிறு திருடன் கழுத்தில் மாட்டி இழுக்கப்பட்டதில் அவன் தொபுக்கடீர் என விழுந்தான். அவன் தரையை முத்தமிடும் முன்னரே பாகஸ் அவன் மேல் சிறுத்தை போல பாய்ந்து அவன் கரங்களை அவனது முதுகுப்பக்கம் வைத்து மூட்டைக் கட்டி உருட்டிவிட்டு, எழுந்து நின்று தன் கைகளைத் தட்டிக் கொண்டார். என்னால் என் கண்களையே நம்ப முடியவில்லை! அவற்றை கசக்கிக் கொண்டேன். நான் விழித்திருக்கிறேனா, கனவு காண்கிறேனா என்றே புரியவில்லை.

தன் உள்ளங்கைகளை ஓன்றுக்கொன்றுடன் தேய்த்தவாறு பாக்ஸ்டன் ஒரு கணம் நிதானித்தார்.
“இப்போதைக்கு திருடங்க பிரச்சினை இல்லை. அந்தப் பெண்ணையும் பையனையும் பார்ப்போம்”.

இருவரது கட்டுகளையும் அவிழ்த்து அவர்களை விடுவித்தோம். நடந்த எதையும் நம்ப முடியாமல் நேரில் பார்த்துக் கொண்டிருந்த அவர்கள் முகத்தில் இப்போது நிம்மதி பரவியது.

பெண் தன்னுடன் வந்த நண்பனைப் பார்த்து கைகளை பிசைந்தவாறே கூறினாள், “இவனுக்கு பலமா அடிப்பட்டிருக்கு. டாக்டர் கிட்டே கூட்டிண்டு போகணும். நாங்க வந்த கார் ஹைவேயில் நிக்கறது”.
பாகஸ் பையனின் காயங்களைப் பரிசோதித்தார். என்னைப் பார்த்து சொன்னார், “உனக்கு நிறையா லெக்சர் பண்ணியாச்சு. இப்போ இந்தப் பையனோட முறை”

பையனைப் பார்த்து கூறினார், “புதுசுப்புதுசா புத்தகங்கள் படிக்கிறது உனக்கு பிடிக்கும் இல்லையா”. பையனுக்கு பாகஸ் சொல்வது புரியவில்லை என்பது வெளிப்படையாகத் தெரிந்தது.
“என்ன ஜான், நேத்திக்குத்தானே விஷுவலைசேஷன் பத்தி ஒரு புத்தகம் படிச்சுட்டு, இப்போ இங்கே இருக்கிற உன் நண்பி மோனிகாவோட அது பத்திப் பேசினாய்”?
“எங்கப் பேர் ஒங்களுக்கு எப்படித் தெரியும்”?
“இப்போ அது ரொம்ப முக்கியமா? ஒன்னோட காயங்களைப் பாக்கறதுதான் முக்கியம். அந்த விஷுவலைசேஷன் முறையையே உபயோகிச்சுப் பாரேன். அதுக்கு இதை விட்டா வேற சந்தர்ப்பம் கிடைக்குமா என்ன”?

ஜான் என்ன சொல்வதென்றே தெரியாது விழித்தான். பாகஸ் அவனை விடுவதாக இல்லை.
“சரி சரி. இப்போ நான் செய்யறதைப் பார். ஒன்னோட கைக்குட்டையைத் தா”.

ஜானுக்கு குழப்பம் அதிகரிப்பது தெளிவாகப் தெரிந்தது. அவனுக்கு சற்று எரிச்சலாகவும் இருந்திருக்கும் போல. ஆனால் இந்த கிறுக்குக் கிழவர் தங்கள் உயிரைக் காப்பாற்றியவர். அவர் சொல்வதையும் செய்துத்தான் ஆக வேண்டும். மோனிகா பொறுமையின்றி நடப்பதை கவனித்துக் கொண்டிருந்தாள்.
பாகஸ் கைக்குட்டையை கையில் எடுத்துக் கொன்டே கூறினார், “நான் என்னோட வந்திருக்கிற இவனுக்கு பலமுறை சொன்னது போல இப்போ ஒன்னோட காயம் ரத்தம் எல்லாம் வெறும் ஜாம்தான். அவற்றைத் துடைத்து விடலாம் என நான் கற்பனை செய்யறேன். அதுங்களையெல்லாம் இப்போ துடைச்சு எடுத்துடறேன்”

பாகஸ் பையனின் கையை தன் ஒரு கையால் பிடித்து நிறுத்தி இன்னொரு கையில் இருந்த கைக்குட்டையால் அவன் காயத்தைத் துடைத்தார். வலியை எதிர்பார்த்த பையன் முகத்தை சுளித்தான். மோனிகா ஆச்சரியத்தில் வாய் பிளந்து பார்த்துக் கொண்டிருந்தாள். பாகஸ் இப்போது கைக்குட்டையை பையன் கைமேலிலிருந்து எடுத்து அவள் எதிரில் உதறினார். காயம் போயே போச்சு. அதற்கான ஒரு அடையாளம் கூட காயம் பட்ட இடத்தில் இல்லை.

“எவ்வளவு சுலபம் பாத்தியா”, பையனிடம் கூறிய பாகஸ் அதே கைக்குட்டையை அவன் புஜத்தில் இருந்த வெட்டுக் காயத்தின் மேல் வைத்து துடைத்தார் அதுவும் மறைந்தது.

நண்பனும் நண்பியும் ஆச்சரியத்தில் மூழ்கினர்.

“என்ன, நம்ப முடியல்லியா? நம்பிக்கைதான் முக்கியம். இந்தா பெண்ணே இப்ப நீயே அவன் மோவாயை துடைச்சுடு”, என்று கூறியவாறே ஜெஸ்டஸ் அவளிடம் கைக்குட்டையை கொடுத்தார். தயக்கத்துடன் அதை கையில் வாங்கிய அப்பெண் ஜானின் முகத்தை உற்று நோக்கினாள்.
“தயங்காதே”, பாகஸ் உற்சாகமளித்தார்.

மனதை திடப்படுத்திக் கொண்டு அப்பெண் மிருதுவாக பையனின் முகத்தையும் மோவாயையும் துடைத்தாள். அவ்வாறு செய்யும்போது பயத்தில் அவள் கண்கள் மூடின. ஜான் அவள் கையிலிருந்து கைக்குட்டையை எடுத்து பலமாக உதறினான். அவள் கண்ணைத் திறந்து பார்த்தாள். முகம் பழையபடி ம்ருதுவாக, அப்போதுதான் சலூனிலிருந்து ஷேவ் செய்து கொண்டு வந்தது போல மழமழவென இருந்தது.

பெண் பேசினாள், “ஒங்களுக்கு நாங்க ரொம்பவுமே கடமைப் பட்டிருக்கோம். நன்றியெல்லாம் சொல்லி மாளாது, அந்தளவுக்கு நீங்க உதவி பண்ணியிருக்கீங்க”.
ஜான் சொன்னான், “இது கலப்படமில்லாத மேஜிக் சார். எப்படி இதை செஞ்சீங்க”?

பாகஸ் என்னை சுட்டிக்கொண்டே சிரித்தார். “கற்பனைதான், வேறென்ன? இதைத்தான் நான் இன்னிக்கு முழுக்க இந்த ஆள் கிட்ட சொல்லிக்கிட்டிருந்தேன்”.
“கற்பனையா? அவ்ளோதானா”? பையனால் நம்ப முடியவில்லை. தன்னை வைத்து காமெடி செய்வதாக அவனுக்கு பட்டிருக்க வேண்டும்.

பாகஸிடமிருந்து ஒரு அவுட்டு சிரிப்பு வெளிப்பட்டது.
“வேற ஒண்ணுமே இல்லை. இந்த முழு நிகழ்ச்சியுமே என்னோட கனவுதான்.  என் பக்கத்துல இருக்கற இவனும் அதை உறுதி செய்வான். உங்க ரெண்டு பேரையும் கனவுல பார்த்தேன். கிழே விழுந்து கிடக்கும் இந்தத் திருட்டு முட்டாளகளையும்தான். உங்களை காப்பாத்தற இந்த முயற்சியும் என்னோட ஸ்கிரிப்டுதான்”.

காதலர்களுக்கு இப்போது பயம் வந்தது. காப்பாத்தினார் என்பதெல்லாம் சரிதான். ஆனாக்க இன்னும் அரைமணிநேரம் இந்த பெரிசோட இருந்தால் நமக்கும் பைத்தியம் பிடிச்சுடும், பேசாம நன்றி சொல்லிட்டு நடையை கட்டறதுதான் மேல் என அவர்களுக்கு தோன்றியதாக எனக்குப் பட்டது.

விடைபெறும் நோக்கத்தில் கால் மாற்றி கால் மாற்றி நின்றனர். நான் சொன்னேன், “கொஞ்சம் நில்லுங்கள்”. தரையில் கிடந்த திருடர்களது பையை எடுத்தேன்.
“ஒங்களோட பொருட்களை மறந்துட்டீங்களே”, என்றவாறு பையைத் திறந்தேன்.

அவசரம் அவசரமாக தங்கள் பொருட்கள் எல்லாவற்றையும் எடுத்து கொண்டனர். பெண்ணின் தோள்மாட்டிப் பை வார்கள் அறுந்திருந்தன. அவளால் அதை மாட்டிக் கொள்ள இயலவில்லை.

பாகஸால் சும்மா இருக்க முடியவில்லை. பைஅயை கைகளில் எடுத்துக் கொண்டார். “இங்கும் கற்பனைத்தான் செய்யணும். இப்போ என் கையில ஊசி நூல் இருக்கறதா நினைச்சுக்கறேன். இதோ பையின் வார்களை தைத்து பொருத்துகிறேன் பாருங்க” தைப்பது போல அசைவுகளைத் தர, பை புதிது போல ஆயிற்று. அதை பெண்ணிடம் நீட்டினார்.

இருவரும் நன்றியை வெளிப்படுத்தினர். இருப்பினும் விசித்திரமான நிகழ்வுகளிலிருந்து அப்பால் செல்லவே விரும்பினர்.

பைத்தியக்கார கிழவருடன் கைகுலுக்கவும் அஞ்சினர். பிறகு அந்த இடத்தை விட்டு பைய அகன்றனர்.

பாகஸின் கவனம் ஜக் மற்றும் ஹாரி மேல் திரும்பியது. ஜக்குக்கு மெதுவாக நினைவு திரும்பிக் கொண்டிருந்தது. முனகிக் கொண்டே உட்கார்ந்தான். ஆனால் நிற்க முடியவில்லை. ஒரு காலும் ஒரு கையும் முறிந்த நிலை அவனுக்கு.
“இந்தப் பசங்களை என்ன செய்யலாம்”? என பாகஸ் என்னைக் கேட்டார்.
“பேசாம போலீசைக் கூப்பிட வேண்டியதுதான்”
“வேண்டாம்னு நினைக்கிறேன். ஒன்னோட கற்பனையை பயன் படுத்து. அவங்களுக்கு ஒரு பாடம் கத்துக் கொடுக்கணும்”
“அவங்க எதையும் கத்துப்பாங்கற நம்பிக்கை எனக்கு இல்லை. இதிலே கற்பனை வேறயா, என்னோட கற்பனை எனக்குள்ளேயே எழுந்து எனக்குள்ளேயே முடிஞ்சு போற விஷயம். அத்தால என்ன செய்யற்து? ஆனா ஒங்களோடதோ வெளியேயும் வந்து பல விஷயங்களை நடத்தித் தரதே”.

 பாகஸ் சிரித்தார். ஹாரி இருக்கும் இடத்துக்கு சென்று அவனது கட்டுகளை அவிழ்த்தார். அவன் கொழுத்த கழுத்திலிருந்த சுருக்கையும் நீக்கினார். ஹாரி அவர் மேல் தாவ யத்தனம் செய்தான். அவன் தலையில் டீச்சர் செய்வதுபோல ஒரு குட்டு வைத்து, அவன் காதையும் திருகினார் பாகஸ். காற்றிழந்த பலூன் கணக்காக ஹாரி தொய்ந்தான்.

சில அடிகள் பின்னால் சென்று இருவரையும் அவதானித்தார் பாகஸ். அவர்கள் அசையாமல் கிடந்தனர். இந்த கிறுக்கு பிடிச்சக் கிழவர் என்ன வேணுமானாலும் செய்வார் என்பதை உணர்ந்தது போல அவர்கள் எதிர்ப்பெல்லாம் இழந்து இருந்தனர்.

பாகஸ் அவர்களைப் பார்த்து சொன்னார், “உங்களை போலீஸ் கிட்டே பிடிச்சுக் கொடுத்து ஒண்ணூம் ஆகப்போவதில்லை. கேஸ் நடக்கும், சிறைக்கு போவீங்க, சில மாதங்கள் கழித்து வெளியே வருவீங்க. இதைவிட இன்னும் மோசமாத்தான் நடந்துப்பீங்க. இன்னி ராத்திரி முழுக்க காட்டிலேயே நீங்க கழிச்சாகணும். நீங்க அந்தப் பையனுக்கும் பெண்ணுக்கும் இழைக்க நினைச்ச தீங்குகளை பத்தி நினைச்சுப் பாருங்க, கொஞ்சம் வருந்தப் பாருங்க. அது ஒங்களோட ஆத்மாவுக்கு நல்லது. பேசாம நான் ஒங்களோட எல்லா எலும்புகளையும் முறிச்சுப் போட்டு, ராத்திரியிலே இந்தப் பக்கமா வர கழுதைப் புலிங்க கிட்ட உங்களை விட்டிருக்க முடியும். ஆனா என்ன செய்யறது, உயிர்களை எடுக்கறது எனக்கு பிடிக்காதே. அதனால உங்களை இங்கேயே முழு இரவுக்குமா விட்டுட்டு போறேன். நாளைக்கு சந்திப்போம் என்ன சொல்லறீங்க”?
திருடர்கள் முகத்தில் நிம்மதி பரவியது. பாகஸ் அந்தண்டை போனதும் பைய நழுவறதே வங்க திட்டம்னு எனக்கே புரிந்தது.
சின்னக் குழந்தை கணக்கா பாகஸ் அவங்களை கேட்டார், “என்ன சரிதானே? இங்கேயே ராத்தங்கறதுக்கு சம்மதம்தானே”?
“சரி, சரி” என அவர்கள் ஒரே குரலில் அவசரம் அவசரமாகக் கூறினர்.
எனக்கென்னவோ வேற ஏதோ செய்யப் போறார் இந்தக் கிழவர்னு பட்டது . பாகஸ் மீண்டும் அவர்களைக் கேட்டார், “இந்த காட்டுக்கு ராஜாவை உங்கள் காவலுக்கு வச்சுட்டு போறேன் சரிதானே”?
“சம்மதம், சம்மதம்” என்று போலிப் பணிவுடன் அவர்கள் கூறினார்.

பாகஸ் இரு விரல்களை தன் வாயில் வைத்து ஒரு சத்தமான சீட்டி அடித்தார். அந்த சத்தத்தால் கவரப்பட்ட பறவைகள் புதர்களிலிருந்து சடசடவெனப் பறந்தன.
தூரத்தில் இருந்த இரு மரங்களில் சலசலப்பு ஏற்பட்டது. கிளைகள் வேகமாக அசைந்தன. அந்த அசைவுகளும் நாங்கள் இருந்த இடம் நோக்கியே பரவின.

எட்டடி உயரம் உள்ள இரு ஆஜானுபாகுவான கொரில்லாக்கள் எங்கள் முன்னால் குதித்தன. இந்த ராட்சச கொரில்லாக்களை பார்த்ததுமே திருடர்களின் சப்த நாடிகளும் ஒடுங்கினது வெளிப்படையாகவே தெரிந்தது.

பாகஸ் கொரில்லாக்களை மரியாதையுடன் வணங்கி விட்டுச் சொன்னார், “இந்த காட்டின் ராஜாக்களே, இங்கே இருக்கிற இந்த ரெண்டு பசங்களுக்கும் துணையா இருக்கணும். அவங்க தனியா இருக்க பயப்படறாங்க”.


ஒரு கொரில்லா பாகஸுக்கு எதிர் வணக்கம் செய்தது. ஹாரியின் கழுத்தைப் பிடித்து தூக்கியது. அவனை மேல் நோக்கி வீசியது. அவன் ஐயோ என கத்தியவாறே இருபது அடி உயரத்துக்கு பறந்தான். மீண்டும் கீழ் நோக்கி விழுந்த அவனை ஒரு பொம்மையை பிடிப்பது போல பிடித்து தரையில் வீசியது. காரே மோரே என அவன் தரையில் கிடந்தான். இன்னொரு கொரில்லா ஜக்கை யோசனையுடன் பார்க்க, அவனோ ஒரு கத்தல் போட்டு பயத்தில் சிறுநீர் கழிந்தான். கொரில்லா முகத்தைச் சுளித்து கர்ஜனை செய்தது.

பாகஸ் திருடங்களை பார்த்து சொன்னார், “இதோ பாருங்க, இப்போ என்ன செய்யணுங்கறது உங்களுக்கு புரிஞ்சிருக்கும்னு நினைக்கிறேன். சமத்தா ராத்திரி முழுக்க இங்கேயே இருங்க. என்னோட நண்பர்களுக்கு நீங்க அசைந்தால் பிடிக்காது. ஒரு பேச்சும் கூட இருக்கக் கூடாது. வெளிக்கு போறத தவிர்த்துடுங்க, ஏன்னாக்க கால் கழுவ வழி இல்லை அப்புறம் உங்களுக்கு ஈக்களாலும் கொசுக்களாலும் பயங்கர தொல்லைதான்”.

“ஓக்கே நாளைக்கு பாக்கலாம். அதுவரைக்கும் இவங்கதான் உங்களுக்கு துணை”.
கொரில்லாக்கள் சாவகாசமா திருடர்களுக்கு அருகில் அமர்ந்தன.


பாகஸ் என்னிடம் சொன்னார், “நாம இப்போ போகலாம், ராத்திரி சாப்பாடு வேற காத்திட்டிருக்கு”. ஏதோ கனவில் நடப்பது போல நான் அவர் பின்னால் சென்றேன்.

(தொடரும்)

(ஆன்லைனில் ஜெஸ்டஸ் ஆங்கில மூலத்தை வாங்க இங்கே செல்லவும்).

அன்புடன்,
டோண்டு ராகவன்

6 comments:

Anonymous said...

கொஞ்சம் விவகாரமான கேள்விகள்

1.ஒரு தண்ணிர் தொட்டியின் நீளம்*அகலம்*உயரம் 10மீ*4மீ*6மீ .அதை முழுவதும் நிரப்ப இரன்டு குழாய்கள் (அ,ஆ)உள்ளன .ஒருகுழாய்(அ) தனியாக தொட்டியைய் நிரப்ப 17 மணி நேரம் எடுத்துக் கொள்ளும்.அடுத்த குழாய்(ஆ)தொட்டியை தனியாய் நிரப்ப 23 நேரம் எடுத்துக் கொள்ளும்.இரன்டையும் த‌ண்ணிர் நிரப்ப திறந்த 3 மனி நேரத்தில் குழாய் ஆ பழுது பட்டதால் அதன் வால்வு அடைக்கப்பட்டது.தொட்டியை நிரப்ப குழாய் (அ) எவ்வளவு நேரம் எடுத்துக்கொள்ளும்.தண்ணிர் தொட்டியின் அளவை மறந்து விட வேன்டாம்.

dondu(#11168674346665545885) said...

வரும் வியாழனில் வரும் டோண்டு பதில்களுக்கான வரைவுக்கு இக்கேள்வி சென்று விட்டது.

அன்புடன்,
டோண்டு ராகவன்

Anonymous said...

//1.ஒரு தண்ணிர் தொட்டியின் நீளம்*அகலம்*உயரம் 10மீ*4மீ*6மீ .அதை முழுவதும் நிரப்ப இரன்டு குழாய்கள் (அ,ஆ)உள்ளன .ஒருகுழாய்(அ) தனியாக தொட்டியைய் நிரப்ப 17 மணி நேரம் எடுத்துக் கொள்ளும்.அடுத்த குழாய்(ஆ)தொட்டியை தனியாய் நிரப்ப 23 நேரம் எடுத்துக் கொள்ளும்.இரன்டையும் த‌ண்ணிர் நிரப்ப திறந்த 3 மனி நேரத்தில் குழாய் ஆ பழுது பட்டதால் அதன் வால்வு அடைக்கப்பட்டது.தொட்டியை நிரப்ப குழாய் (அ) எவ்வளவு நேரம் எடுத்துக்கொள்ளும்.தண்ணிர் தொட்டியின் அளவை மறந்து விட வேன்டாம்.// 11 hour 47 minutes

dondu(#11168674346665545885) said...

Correct answer is 11 hours + 18/23 hours (or 47 minutes?)

Regards,
Dondu Raghavan

Anonymous said...

Well Done Dondu sir -Correct Answer

Anonymous said...

Dondu Sir, Kathai marana kadia iruku...Original kathaye ippadithana...?

 

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது