9/29/2010

வி.எஸ். திருமலை கதைகள் - 3. தவறாத தீபாவளி

இக்கதையை ஐம்பது/அறுபதுகளில் ஏதோ ஒரு பத்திரிகையின் தீபாவளி மலரில் படித்த நினைவு. அப்போதே மனதில் சிம்மாசனம் போட்டு உட்கார்ந்து கொண்டது. எழுதியவர் பெயரை அப்போது பார்க்கவில்லை. ஆனால் திருமலை சாரின் இக்கதைத் தொகுப்பில் இதன் முதல் வரியை படிக்கும்போதே, அடேடே இதை அவர்தான் எழுதியதா என நிமிர்ந்து உட்கார்ந்தேன். இதை அவரது அவரது மனைவியிடம் கூறியபோது தானும் அதே மாதிரி முன்பு படித்து மனதில் நின்ற பல கதைகள் தனது திருமணத்திற்கு பிறகுதான் இவர் எழுதியது எனக் கண்டறிந்ததாகக் கூறினார். இப்போது ஓவர் டு திருமலை:

“அம்மா, நேரமாச்சு. நீ போய் படுத்துக்கோயேன்!”

“இதென்னடி வேடிக்கையாயிருக்கு! பத்தடித்து விட்டது. இன்னம் மாப்பிள்ளையைக் காணோம்! உன் குடும்பம் நன்னாத்தான் நடக்கிறது!”

“எவ்வளவு கடுதாசுலே எழுதியிருக்கேன்! எவ்வளவு தரம் நான் உனக்குச் சொல்றது, அவர் சாதாரண டாக்டரில்லைன்னு? அவர் வேலை பூராவும் முடியற மட்டும் அவருக்கு வேறு நினைவே வராது ... காரணமில்லாமல் அவர் தாமதிக்க மாட்டார். நீ போய் படுத்துக்கோ. நேர்று ராத்திரி ரயிலிலே என்ன தூக்கம் கண்டிருப்பாய்? நாள் பூராவும் அடுப்பண்டை உட்கார்ந்து வேலை வேறு செய்திருக்கே! இவ்வளவு பட்சணங்களையும் யார்தான் திங்கப் போறாளோ! அவ்வளவும் வீணாப் போகப் போறது!”

“தன் பெண் தலை தீபாவளி இவ்வளவு ஜோரா நடந்ததுன்னு தெரிஞ்சா உங்க அப்பா ரொம்ப சந்தோஷப்பட்டுப்பா! அது என்ன அப்படி ஒழியாத வேலை உன் அகமுடையானுக்கு? ‘தலை தீபாவளிக்கு நீங்கள் ரெண்டு பேரும் வருவேள். பிரமாதமா கொண்டாடலாம்’னு, உன் அண்ணா, மன்னி, அப்பா, நான் எல்லோரும் என்ன என்னமோ திட்டம் போட்டுண்டிருந்தோம். அதுதான் நடக்கவில்லை. முதல் தடவையாக நான் இங்கு வந்தால் வீடு வெறிச்சிட்டு கிடக்கு.எஜமானனைக் காணோம். நீ கவலையில்லாமல் ரேடியோவைத் திருப்பிண்டு உட்கார்ந்திருக்கே. பண்டிகைக்கு முன்னாளே இப்படியிருந்துதுன்னாக்கே சாதாரண நாளெல்லாம் எப்படியிருக்குமோ...?

“அம்மா தீபாவளிக்கு இன்னம் ஆறேழு மணி இருக்கு. நீ நிம்மதியாய்த் தூங்கு. நாளைக்குப் பண்டிகை நன்றாக, குறையில்லாமல் நடக்கும்”.

“எனக்கென்னவோ பிடிக்கவில்லை, பாமா! என் தலை தீபாவளி என்னமா நடந்தது! அதையும் நெனைச்சு, இப்போ இங்கே நடப்பதைப் பார்த்தால்...”

“அம்மா, என் நிலை முற்றிலும் வேறு மாதிரி, அதோ அவரது கார் சப்தம் கேட்கிறது. அவர் வந்து விட்டார்!”

உள்ளே வந்தார் டாக்டர் முரளி. அவர் முகத்தில் வழக்கத்தைவிட அதிகமான சோர்வும், யோசனையும், கவலையும் இருப்பதைக் கண்டாள் பாமா.

“என்னம்மா சௌக்கியமா? ஊரில் எல்லாரும் சௌக்கியம்தானே? ரயில் நேரத்துக்கு வந்துதோல்லியோ? தலை தீபாவளிக்கு என்று அங்கே வர முடியவில்லை. நல்ல வேளை நீங்கள் இங்கு வந்தீர்கள், பாமாவுக்கு ஏமாற்றத்தை விலக்க! ... ஓ இது என்ன பாமா, இது? பக்ஷணமா? ஹும் ஹூம்! இப்போ வேண்டாம். ஊச்! ரொம்ப களைப்பாயிருக்கு. ஒரு ஆப்பிள் கொடு. பாலில் இரண்டு ஸ்பூன் அதிகமாகவே க்ளூக்கோஸ் போடு. நாளைக்கு சீக்கிரம் போனால் தேவலை. ஒரு சிக்கலான ஆப்பரேஷன் பண்ணியாகணும்...”

“நல்ல டாக்டர் வேலை! தீபாவளிக்கு, அதுவும் தலை தீபாவளிக்குக் கூட ஓய்வு கிடையாதா?” என்று மாமியார் கேட்டாள்.

“தன் தலை தீபாவளியன்று தான் கண்ட இன்பத்தைத் தன் பெண் பாமாவும் அனுபவிக்க வேண்டும், தானும் அதைக் கண்டு மகிழ வேண்டும் என்பது அவள் உள்ளூற ஆசை.

“நோயும் விபத்தும் தீபாவளிக்கு என்று விடுமுறை எடுத்துக் கொள்ளவில்லையே, அம்மா! என் ஆஸ்பத்திரியில் நோயாளிகள் பெரும்பாலானோர் சிறுவர்கள். இன்றைக்கு சாயங்காலம் நான் வீட்டுக்கு கிளம்பிக் கொண்டிருந்தபோது இரண்டு அபாய நிலைக் கேசுகள் வந்து சேர்ந்தன. அதிலே ஒரு பையனுக்கு உடனேயே ரண சிகிச்சை செய்யும்படியாக இருந்தது. ஐந்து மணி நேரம் பிடித்தது அந்த ஆப்பரேஷனுக்கு. மற்றவனுக்கு நாளைக்கு ஆப்பரேஷன் பன்ணியாகணும். அதுக்கு உதவி செய்ய இரண்டு டாக்டர்களை வேறு வரச் சொல்லியிருக்கேன்”.

“உங்களுக்குத் தீபாவளி வேண்டாமா?”

“அவசியம் வேணும்! இன்றைக்கு அந்தப் பையன் பிழைத்தான், இப்போ பாருங்கோ, அவன் வீட்டில் நிற்கவிருந்த தீபாவளி தவறாது நடக்குமோல்லியோ? எனக்கு அது போதும், அம்மா” என்று சிரித்தவாறு கூறி டாக்டர் முரளி முகம் கழுவச் சென்றார்.

பாமா பாலும் பழமும் எடுத்து வந்தாள். டெலிபோன் கூப்பிட்டது.

“டாக்டர் முரளிதரன் வீடு!... இல்லை; அவர் இன்னும் வரவில்லை...ஊம் வந்தவுடன் டெலிஃபோன் செய்யச் சொல்கிறேன்...”

பாமா பேசி முடிந்த பிறகே டாக்டர் ஸ்னான அறையிலிருந்து திரும்பி வந்தார்.

“பாமா! டெலிபோன் மணி சப்தம் கேட்டுதே, யாரு?”

“யாரோ, தவறான எண்ணைக் கூப்பிட்டு விட்ட போலிருக்கு!” என்று பாமா பொய் சொன்னாள்.

படுத்தவுடன் அயர்ந்து தூங்கி விட்டார் முரளி. சிறு விளக்கை அணைக்கு முன் உறங்கும் கணவனைப் பார்த்து வெய்துயிர்ந்தாள் பாமா. அவர் தலைமயிர் கலைந்து நெற்றியில் தவழ்ந்தது; அகன்ற மர்பு விம்மிவிம்மித் தாழ்ந்தது! மார்பின் மேல் ஒரு கை, பக்கத்தில் ஒரு கை. நீண்ட, மெல்லிய பலமுள்ள விரல்கள். குணமாக்கும் கத்தி பிடித்து, ஜீவ வீணையில் தவறிய சுருதியை மீண்டும் கோக்கும் விரல்கள்...ஆம்! அபூர்வ சமயங்களில் பாமாவின் ஆவியில் இன்ப நாதம் எழச்செய்யும் கரங்கள்தான்.

“குழந்தை மாதிரி தூங்குகிறாரே! நான் ‘நர்ஸிங் ஹோமிலிருந்து டெலிபோன் வந்ததை உண்மையாகவே சொல்லியிருந்தால், இத்தனை நேரம் அங்கல்லவா ஓடியிருப்பார்! என்ன தொழில் இது! ஓய்வு, நிம்மதி, தூக்கம் எதற்கும் இடம் தராத தொழில்!” என்று எண்ணியவளாய், பாமா லேசாக அவர் மீது போர்வையைப் போட்டு சரிசெய்தாள்.

திடீரென்று ஞாபகம் வந்து, பரபரவென்று போய் டெலிபோன் ரிசீவரை எடுத்துத் தனியாக வைத்தாள். இந்தத் தீபாவளி இரவாவது அவரைத் தொந்தரவு செய்யாது இருக்கட்டும் அந்த ராக்ஷஸ டெலிபோன்! தன் அந்தரங்க ஆசைக்கு என்றில்லையானாலும், அம்மாவின் திருப்திக்காகவாவது தலை தீபாவளியைத் தடங்கலில்லாது கொண்டாட வேண்டாமா?

டெலிபோன் ரிசீவர், தொடர்பு அறுக்கப்பட்டக் கருவியாய் அதன் தொட்டிலைப் பிரிந்து கிடந்தது.

பாமா தயங்கினாள்.

அவசரமாக டாக்டர் தேவையாயிருந்து யாரேனும் டெலிபோன் செய்தால்! தன் இச்செய்கையாக் டாக்டர் டெலிபோனில் கிடைக்காது ஓர் உயிர் பலியானால்!

தன் காரியம் தகாதது என்று உணர்ந்து அதை நிவர்த்தி செய்தாள். இதற்கே காந்த்திருந்தது போல் மணி உடனே அடித்தது!

நர்ஸ் சுப்ரியாதான் கூப்பிட்டது. மறுநாள் ஆப்பரேஷன் செய்யலாம் என்று இருந்த சிறுவன் நிலை மோசமாகி வந்தது. உதவி டாக்டரும் அவளும் கொடுத்த தற்காலிகச் சிகிச்சை பலன் அளிக்கவில்லை. பெரிய டாக்டரின் நித்திரையை கலைக்கக் கூடாது என்ற தன் தீர்மானத்தை மீறித்தான் சுப்ரியா டெலிபோன் செய்தாள்.

“காலை மட்டும் தள்ளிப் போட முடியாதா சிஸ்டர்? ரொம்பச் சோர்ந்து போயிருக்கிறாரே, அவரை எப்படி எழுப்புவது” என்று கேட்டாள் பாமா.

“எனக்குத் தெரியாதா? நிர்ப்பந்தமிருந்தால் ஒழிய நன் கூப்பிடுவேனா? என் மேல் கோபிக்கிறீர்களே என்றாள் சுப்ரியா.

கோபமாகப் பேசியதற்கு மன்னிக்கவும், சுப்ரியா! இதோ பார், இன்று எங்கள் தலைதீபாவளி. காலை ஐந்தரை மணிக்கு அவரை அனுப்பி விடுகிறேன். அவருக்கு ஓய்வும் உறக்கமும் மிக அவசியம். எங்கள் பண்டிகை முக்கியம். தடை எதுவும் வராதிருக்க வேண்டுமே என்பதுதான் என் பிரார்த்தனை. தயவு செய்து வேறு ஏதாவது செய்ய முடியுமா, பார்! உனக்குக் கோடி புண்ணியம் உண்டு!”

மணி பதினொன்று அடித்தது. வெளியே மழை சற்று நேரம் பிசுபிசுத்தது. குளிர் அதிகரித்தது. எங்கோ தொலைவில் ஒரு பட்டாசு வெடித்தது. பாமாவுக்குத் தூக்கம் கொள்ளவில்லை.

அவளுக்கு 26 வயதானதும் கல்யாணம். உடனே தனிக்குடித்தனம். அதற்க்காகவெல்லம் பண்டிகையின் முக்கியத்துவமும் இன்பப் பெருக்கும் குறைந்து விடுமா? அதோடு வாழ்க்கையில் எந்த உணர்ச்சியையும் தன் சொந்த அனுபவத்தில் கண்டால் தவிர பிறர் சொல்லக்கேட்டு உணர்வது கூடாத காரியமல்லவா?

சிருங்காரம் என்பதற்கு டாக்டர் முரளிக்கு அதிக அவகாசமில்லை. அவர் தொழில், இல்லை - அவர் கலை அவர் வாழ்க்கையில் பிரதான ஸ்தானம் வகித்தது. “என் கண்ணே, மூக்கே, காதே” என்றெல்லாம் அவர் பாமாவை அழித்து என்றும் குலாவியதே இல்லை. சில சமயங்களில் தான் ஒருத்தி மனைவி என்றிருப்பது அவருக்கு நினைவில்லாமல் போய் விடுகிறதே, தன்னைப் பற்றி அவர் அன்புடன் சிந்திப்பதாகப் பிரமாணமாகத் தெரியவில்லையே என்று பாமா நினைப்பதுண்டு. தேக சௌக்கியம், பண லாபம், சௌகர்யம் என்பதையெல்லாம் கருதாது உழைத்துத் தேய்கிறாரே என்ற அங்கலாய்ப்புடன்தான், பாமா அவரைப் போற்றி வந்தாள்.

பன்னிரண்டு மணியும் போய் விட்டது. பாமா புரண்டாள். கண்ணிமையை மூட முடியவில்லை. அவள் மனப்பாரம் தூக்கத்தை அழுத்திவிட்டது. படுக்கை நொந்தது. நீர் குடித்துவிட்டு பாகனியில் போய் நின்றாள்.

“க்ரீங், க்ரீங் ... க்ரீங், க்ரீங்....”

“ஐயோ அவரை எழுப்பாது இருக்க வேண்டுமே இவ்வலறல்” என்று திடுக்கிட்டு ஓடி டெலிபோனை எடுத்தாள்.

உதவி டாக்டர் சுந்தராச்சாரி பேசினான், நர்சிங் ஹோமிலிருந்து.

“இந்தப் பையன் உடம்பு ரொம்ப மோசமாகி விட்டதம்மா... இன்னம் ஒரு மணி நேரத்தில் எமெர்ஜென்சி ஆப்பரேஷன் செய்தாக வேண்டும். இல்லையானால்...”

“சரி. அவரை வரச்சொல்கிறேன்.”

“நாங்கள் இங்கு தியேட்டரை தயார் செய்து வைக்கிறோம்”. அவர் வந்தவுடனே வேலை துவக்கலாம்...”

“அவரிடம் அதையும் சொல்கிறேன்!” என்று ரிசீவரைக் கீழே வைத்தாள்.

பரபரவென்று எலெக்ட்ரிக் ஸ்டவ்வில் இரண்டு டம்ளர் காப்பி தயாரித்தாள். டாக்டரின் உடைகளைத் தயாராக எடுத்து வைத்து விட்டு, அவரை எழுப்பி, காப்பி குடிக்கச் சொல்லிவிட்டு, ஷெட்டுக்கு ஓடினாள். காரை அவள் எடுத்து வருவதற்கும், டாக்டர் வெளியே வருவதற்கும் சரியாக இருந்தது.

“நானே ஓட்டிச் செல்கிறேன், பாமா!”

“ஏறிக் கொள்ளுங்கள் சீக்கிரம்!” என்று பாமா க்ளச்சை அழுத்தினாள்.

நர்சிங் ஹோம் கட்டடத்தின் வாசலில் அவள் காரை நிறுத்தியவுடன், “நீ வீட்டுக்குப் போய் தூங்கு, பாமா, நான் எப்போ திரும்புவேனோ தெரியாது...” என்று சொல்லி ஆப்பரேஷன் தியேட்டருக்கு விரைந்தார் முரளி.

வீட்டுக்குத் திரும்பிய பாமா மறுபடியும் படுக்கச் செல்லவில்லை. இன்னும் கொஞ்சம் காப்பி அருந்தி விட்டு, விளக்கைப் போட்டு ஒரு நாவலைப் படிக்க முயற்சி செய்தாள். வகையறியாத ஓர் உணர்ச்சி அவளைக் குழப்பிற்று. எப்படியோ காலம் கழிந்து ஐந்தரை மணியாயிற்று. நர்சிங் ஹோமை டெலிபோனில் கூப்பிட்டு விசாரித்தாள்.

“இன்னம் அரை மணிக்கு மேல் ஆகும். இப்போதுதான் தையல் போட ஆரம்பித்திருக்கிறார், டாக்டர்...”

“உங்கள் ஆஸ்பத்திரியையே இடித்து விட வேண்டும் என்று எனக்கு இப்போது தோன்றுகிறது. டாக்டருக்குத் தீபாவளி இல்லாது அடித்து விட்டீர்களே!”

“டாக்டருக்கு மட்டுமென்ன அம்மா! இங்கு வேலை செய்யும் எங்களுக்கும் தீபாவளி கிடையாதுதான். நாங்கள் பெரியவர்கள், பரவாயில்லை!... இப்போது இங்கே நாற்பது சிறுவர்கள் இருக்கிறார்களே. தீபாவளியை இழக்க அவர்களுக்கு எப்படி மனம் ஒப்பும்? யோசித்தீர்களா?... இதைப் பார்த்துப் பார்த்துத்தான் எனக்கும் ஒருவித விரக்தி ஏற்பட்டு விட்டது! ... தவிர்க்க முடியாததைத் தைரியமாக ஏற்றுக் கொள்ள வேண்டியதுதான்...”

“நன்றாகப் பேசுகிறாயே, சிஸ்டர்!”

தீபாவளி ஆரம்பித்து விட்டது. அம்மா புது ஜவுளியை எடுத்து வைத்திருந்தாள். கிண்ணத்தில் எண்ணெய், ஸ்னான அறையில் வெந்நீர், தட்டுத் தட்டாக பக்ஷணம், டபராவில் லேகியம், கூடை நிறைய புருசு, மத்தாப்பு, பட்டாசு வெடி வகையறா எல்லாம் காத்திருந்தும் பயனென்ன?

வெளி எங்கிலும் மங்கள வெடி ஓசை முழங்கியது. இன்னம் சற்று நேரத்தில் அக்கம் பக்கத்தினர் கங்கா ஸ்னானம் விசாரிக்க வந்து விடுவார்கள்.

“சீ! இது இழந்த தீபாவளியா?” என்று சலிப்புடன் தன்னையே வினவினாள் பாமா.

அவள் தாய் அதுவரை ஒன்றும் பேசாமலிருந்தாள்.

“என்ன, யோசனையில் ஆழ்ந்து விட்டாய், பாமா?” வருத்தப்படக்கூடாதம்மா. அவர் வந்தவுடன் பண்டிகையைக் கொண்டாடி விட்டால் போச்சு” என்றாள்.

பாமா சிரிப்பை வரவழைத்துக் கொண்டு சொன்னாள். “இல்லை, இல்லை. வருத்தமா? நான் மட்டுமா...” அவள் பெச்சு திடீரென நின்று விட்டது, குறுக்கிட்ட ஒரு நினைவால்.

நர்ஸ் சற்றுமுன் என்ன சொன்னாள்? “இங்கே இப்போது நாற்பது நோயாளிச் சிறுவர்கள் இருக்கிறார்களே! தீபாவளியை இழக்க அவர்களுக்கு எப்படி மனம் ஒப்பும்?... என்றல்லவா கேட்டாள்!

ஏன் அவர்களும், நானும், தன் கணவனும் தீபாவளியை இழக்க வேண்டும்? ஏதாவது தன்னால் செய்ய முடியாதா?

ஆம்! சந்தர்ப்ப சௌகர்யமில்லாத எல்லோரும் சேர்ந்து பண்டிகையை நடத்தினால்: ஏன் அவ்வாறு செய்யக்கூடாது?

உற்சாகமாகக் குதித்தாள் பாமா. வெறி பிடித்தவள் போல், “அம்மா, என் தலை தீபாவளியை வீணாக்கவே வேண்டாம்! ஆனந்தமாகக் கொண்டாடலாம்... ஊம்...கிளம்பு!” என்று ஒரு கூடையில் மத்தாப்பு, புருசு வாணங்களைப் போட்டாள். பட்டாசு வெடிகளை ஒதுக்கி விட்டாள். ஒரு பெரிய பூனா டப்பா நிறைய திரட்டுப் பாலும் ஜிலேபியும் வைத்தாள். கூடை, டப்பாவைக் காரில் எடுத்து வைத்தாள். ஒரு பிளாஸ்கில் காப்பியையும் எடுத்துக் கொண்டாள்.

திகைத்துக் குழம்பிய தன் தாயை இழுத்து, காரில் ஏற்றி, தீபாவளி முழங்கும் தெருக்கள் வழியே நர்சிங் ஹோமை நோக்கி வேகமாக ஓட்டினாள்.

தன் வேலை முடிந்து, தன் அறைக்குத் திரும்பிய டாக்டர் முரளிதரன் திகைத்து நின்றார்.

வார்டின் நடுவே ஒழிக்கப்பட்ட இடத்தில் புருசு வாணங்களை ஒவ்வொன்றாகக் கொளுத்திக் கொண்டிருந்தாள் பாமா. தத்தம் படுக்கையில் சாய்ந்தவாறு கிரீச்சிட்டு க்தூகலமாகக் கத்தினார்கள் சிறுவர் சிறுமியர். வழக்கமாக அந்த இடத்தை ஆண்ட நோய், மௌனம் எங்கே? நர்ஸ் சுப்ரியா மத்தாப்பு வினிஒயோகத்தில் ஈடுபட்டிருந்தாள். வேலைக்காரர்கள், சில குட்டி டாக்டர்கள் எல்லோரும் இந்த நர்சிங் ஹோம் தீபாவளியில் பங்கெடுத்துக் கொண்டிருந்த்னர்.

“என்ன அருமையான யோசனை என் பாமாவுக்கு!” என்று டாக்டர் முரளி எண்ணமிட்டபோது, “வாருங்கள் டாக்டர்! உங்களுக்கென்று உங்கள் மனைவி தனியாக வாணங்கள் பங்கு வைத்திருக்கிறார்!” என்றாள் நர்ஸ் சுப்ரியா.

“உங்கள் உத்திரவில்லாமல் தின்பண்டங்கள் எதுவும் கொடுக்கக் கூடாதென்கிறாளே நர்ஸ்!” என்றாள் பாமா.

“தாராளமாக பக்ஷணம் கொடு. எல்லாரும் ரண சிகிச்சை கேசுகள்தானே? அந்த மூலையில் மார்பியா மயக்கத்தில் சூழ்ந்து கிடக்கும் இரண்டு புது கேசுகளை மட்டும் விட்டுவிடு. பாவம்; அவர்களுக்கு இன்னும் எட்டு மணி நேரத்துக்கு நினைவே வராது!”

“வாருங்கள், டாக்டர். இந்த புருசைக் கொளுத்துங்கள். என் மத்தாப்பை பத்த வையுங்களேன்... எனக்கு இன்னொரு கைக்கும் ஜிலேபி வேணும்!... டேய், என் மத்தாப்பைப் பாரடா, எவ்வளவு ஜோரா பூ விடுகிறது!”

அன்று வார்டில் ஆழி மழைக் கண்ணனே வந்திருந்து களித்தான் என்றபடி டாக்டர் முரளி - பாமா தம்பதியினரின் தவறாதத் தலைதீபாவளி அமோகமாக நடந்தது.

ஒருவரும் எண்ணெய் தேய்த்து, புத்தாடை உடுத்தவில்லை. அதனால் என்ன? வேறு விதத்தில் ஜமாய்த்தல்லவா விட்டனர்! குழந்தைகளுக்குக் கரை காணா ஆனந்தம். அதற்குக் காரணமாயிருந்த பாமாவுக்குப் பூரண திருப்தி. பழைய காலத்து மனுஷி, அவள் அம்மாவுக்கு ஆனந்தக் கண்ணீர்.

வீடு திரும்பும்போது மணி எட்டாகி விட்டது. தெருவெல்லாம் வெடித்த பட்டாசுக் குப்பை. பண்டிகையின் ஜாலவித்தையுடைய உஷஸுடன் கழற்றி, உலகம் தன் பழைய துணிகலைப் போட்டுக் கொண்டு விட்டது போல் தோன்றியது.

பாமாவுக்கு அரைத் தூக்கம். டாக்டர் மெதுவாகக் காரை ஓட்டினார். அவர் தோள்மீது தலையைச் சாய்த்து, கண்களை மூடினாள் பாமா. அவர்கள் அந்நியோன்னிய நிலையைப் பின்னால் உட்கார்ந்திருந்த அம்மா பார்த்து பெரிதும் மகிழ்ந்தாள்.

“பாமா! பாமா! தூங்கி விட்டாயா? நான் என்னமா கார் ஓட்டுவது?” என்றார் முரளி.

பாமா கண்களைத் திறக்கவில்லை. பதில் பேசவில்லை. அன்றைய சம்பவங்களை நினைவில் மீண்டும் அனுபவித்துக் கொண்டிருந்தாள் அவள். அத்தினத்தை அவள் என்றென்றும் மறவாள்.

சிறிது நேரம் கழித்து டாக்டர் தன் மாமியாரிடம் சொன்ன ஒவ்வொரு வார்த்தையும் பாமாவின் செவியில் புகுந்தது.

“ஊம்! பாமா தூங்கிப் போய்விட்டாள்! சோர்வு! அம்மா, இன்று உங்கள் பெண் எவ்வளவு பெரியதொரு காரியம் செய்தாள்! எங்கள் எல்லாத் தீபாவளிகளையும் இம்மாதிரி பிறருடன் இன்பம் பகிர்வதில் கொண்டாடுவோம்!... உங்கள் பெண் ரொம்ப தைரியசாலி, அம்மா! என் வேலையில் கருத்தாயிருந்து நான் அவளை அதிகம் கவனிப்பதேயில்லை. அதனால் குறைப்பட்டுத் தேயாது, மனமிடியாது இருக்கிறாளே, அதுதான் உண்மை தைரியம்! உங்களிடம் பெருமைக்காக நான் இதைச் சொல்லவில்லை... பாமா எனக்கு எவ்வளவு துணை, பல, ஆதரவு என்பதை விவரிக்கவே முடியாது! அவளை மனைவியாக அடைந்தது என் பாக்கியம்தான்... சீதை போட்ட பாதையில் நடக்கும் பெண் அவள்.”

பாமா புளகாங்கிதமானாள். அவள் குறைவு, ஏக்கம், பசப்பு, மனவிருள் எல்லாம் கண்ணன் முன் ந்ரகாசுரன் போல் தகர்ந்தொழிந்தன.


அன்புடன்,
டோண்டு ராகவன்

9 comments:

அருள் said...

நல்லக் கதைதான்.

ராஜசுப்ரமணியன் said...

கண்களில் நீர் நிறைந்தது. என்ன அருமையான கதை. பாமாவும், டாக்டர் முரளியும் மனதில் நிலைத்துவிட்ட உண்மை நாயகர்கள்.

பதிவிற்கு நன்றி.

Anonymous said...

டோண்டு சார், படிக்கும்போது ஒரு காலத்து தீபாவளி மனதில் வந்து போகிறது. எல்லா கதைகளையும் பதியுங்களேன்!

Anonymous said...

கண்களில் நீர் நிறைந்தது. என்ன அருமையான கதை.
பதிவிற்கு உங்களுக்கு ஒர் “ஓ”

எல் கே said...

nalla kathai ... amam ithuku yar ivlo minus pottathu

virutcham said...

அருமையான கதை.
இந்தக் கதையின் சாயலில் ஒரு படம் வந்ததே. வீட்டுக்கு வீடு வாசப்படி என்று நினைக்கிறேன். விஜயகுமார் ரத்தி நடித்தது. இதில் வரும் பாம்மாவின் முதிர்ச்சி இல்லாத நாயகி ரதி, தொலைபேசியை கீழே வைத்ததால் முக்கிய ஒரு சிகிச்சை செய்ய முடியாமல் போய் நாயகன் கோபிக்க அதுவே இருவரின் பிரிவுக்கு காரணம் ஆகும். பின் சுருளி ஷோபா என்று ஞாபகம், இருவரும் சேர்த்து வைக்கப் பாடுபடுவார்கள். படம் நல்லாஇருக்கும்

geethasmbsvm6 said...

அருமையான பகிர்வுக்கு ரொம்ப நன்றி சார். கண்ணீரே வந்துவிட்டது. மறக்க முடியாத தீபாவளிக்கதை!

geethasmbsvm6 said...

வி.எஸ்.திருமலையின் கதைகளைத் தேடிப் பிடிக்கிறேன்.

அப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்) said...

அருமையான கதை

 

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது