10/27/2010

வி.எஸ். திருமலை கதைகள் - 5. கிருஷ்ணன் பொம்மை

வி.எஸ். திருமலை அவர்களது சிறுகதை தொகுப்பின் தலைப்பே இக்கதைக்கும் தலைப்பாகும். நேராகவே கதைக்கு போய் விடுகிறேன். ஓவர் டு திருமலை.

நான் அதற்குமுன் காந்தி நகருக்குள் சென்றதே கிடையாது. அன்று வெயிலில் நான் என் நண்பன் ஒருவனுடைய வீட்டைத் தேடித் தேடி அலுத்துப் போனேன். கடைசியில் அந்தக் காரியத்தைக் கைவிட்டு பஸ் ஸ்டாண்டுக்கு திருபி நடக்கும்பொழுது ஒரு வீட்டின் வாசலில் நின்ற ஒரு குழந்தை என் கண்ணில் பட்டாள். அவளைப் பார்த்ததும் என் மார்பு படபடத்தது. நெருங்க நெருங்க என் வியப்பு அதிகரித்தது. ‘அப்படியும் இருக்கக்கூடுமோ’ என்று தோன்றியது.

கமலாவின் குழந்தைதான் அவள். அதில் சிறிதளவேனும் சந்தேகமே இல்லை. என் கண்கள் மட்டுமா சாட்சியம் கூறின? என் சமுசயம்தான் அலறிற்றே!

அருகில் சென்றேன். சுற்றும் முற்றும் பார்த்தேன். வேறு ஒருவரும் தென்படவில்லை.

அவளுக்கு ஐந்து வயது இருக்கும். அவள் என்னைப் பார்த்து நெடுநாள் பழக்கமானவள் போல் முறுவலித்தாள். போக்கிரி! அன்று காலேஜில் முதல் சந்திப்பின்போது சிரித்தாளே கமலா, அதே சிரிப்பு. இரட்டைப் பின்னல் போட்டுக் கொண்டிருந்தாள் குழந்தை. அவளுடைய கையில் ஒரு பந்து இருந்தது.

வேறு யாரேனும் ஒருவரது குழந்தையாக இருந்தால்! தயங்கினேன். அவள் கமலாவின் குழந்தையாகத்தான் இருக்க வேண்டும் என்ற எண்ணம் மறுபடியும் ஓங்கியது.

உலோபி போல் நான் என் மனத்துள் புதைத்து வைத்திருந்த கமலாவின் பல்வேறு தோற்ற ஞாபகப் படங்களைப் புரட்டிப் பார்த்தேன். எதிரே நின்ற குழந்தையின் தோற்றத்துடன் ஒப்பிட்டேன்.

கன்னங்களில் அதே குழிவு. தலைமயிர் சிறிது செம்பட்டையாக இருந்தது. சிறிய அழகிய மோவாய்க் கட்டை.

“உள்ளே வாங்கோ மாமா”.

குழந்தையின் பேச்சும் கமலாவின் இன்னிசைக் குரலையே எதிரொலித்தது.

இதற்குள் குழந்தையின் தகப்பனாரோ, “மைதிலி! வெயிலில் என்ன விளையாட்டு என அதட்டிக் கொண்டே வெளியே வந்தார்.

“மன்னிக்கவும், ஈஸ்வரி பாங்க் கோபாலன் வீடு எங்கே இருக்கிறது தெரியுமா?” என்று கேட்டேன்.

“அப்படி ஒருவரும் இந்தத் தெருவில் இருப்பதாகத் தெரியவில்லையே” என்று அவர் புருவங்களை நெரித்தார்.

“ஒரு டம்ளர் ஜலம் கொடுக்க முடியுமா, தயவு செய்து?” என்றேன் கைகுட்டையால் முகத்தைத் துடைத்துக் கொண்டு.

“வெயிலில் நிற்பானேன்?” என்றார் அவர்.

சரி, குழந்தையின் அம்மாவைப் பார்த்து விடலாம் என ஆவலுடன் அவரைத் தொடர்ந்தேன்.வாயிற்படியைத் தாண்டியவுடன் இருந்த ரேழியில் செருப்பை விட்டுவிட்டு அதற்கப்புறம் இருந்த ஹாலுக்குள் நுழைந்தேன். கமலாவைத் தேடிய என் கண்கள் ஏமாற்றமடைந்தன. உள்ளே உட்கார்ந்திருந்த பெண்மணியிடம் குழந்தை மைதிலி, “அம்மா!” என்று அழைத்தவாறு ஓடினாள்.

“பார்வதி, ஒரு டம்ளர் ஜலம் கொண்டு வருகிறாயா?” என்று அவர் கேட்டு முடிப்பதற்குள் அந்த ஸ்திரீ உள்ளே சென்று விட்டாள்.

என்ன மடத்தனம்! கமலாவின் குழந்தை அவள், கமலாவையே சந்தித்து விடுவோம் என்றெல்லாம் எண்ணித் தவித்தேனே!

கமலா எங்கிருக்கிறாளோ? சுமார் பத்து வருஷங்களுக்கு முன் நான் கடைசியாகக் கமலாவைப் பார்த்த தினம் ஞாபகத்துக்கு வந்தது. ரயில்வே ஸ்டேஷனுக்கு அவள் வந்திருந்தாள். யுத்தம் என்றால் எப்படி இருக்கும் என்று பார்த்து விடலாமே என்று உற்சாகத்துடன் நான் ஆகாயப்படையில் சேர்ந்துவிட்டேன். அம்பாலா பயிற்சிக் கலாசாலைக்கு நான் போனபொழுதுதான் என்னை வழியனுப்ப அவள் வந்திருந்தாள்.

ரயில்வே ஸ்டேஷனில் எங்களுக்குள் பேச்சே இல்லை. இருவர் மனத்திலும் ஆயிரம் எண்ணங்களும் கேள்விகளும் இரைச்சலிட்டன. வெளியே மனிதர் சந்தடி எங்கள் மனநிலையைப் பிரதிபலித்தது. உள்ளத்தில் இருந்த வருத்தத்தையும் குழப்பத்தையும் மறைத்து சம்பந்தா சம்பந்தமில்லாத விஷயங்களைப் பற்றி வார்த்தையாடினோம். ரயில் நகர ஆரம்பித்தது. நான் ஜன்னல் வழியே அவளைப் பார்த்து நின்றேன். அவள் உருவம் பின்னுக்குச் சென்று கொண்டே இருந்தது. பிளாட்பாரத்தில் இருந்த மற்ற கும்பலுடன் கலந்தது. என் பார்வையிலிருந்து மறைந்து விட்டது.

டெல்லியிலிருந்து அவளுக்கு நான் தந்தத்தில் கடைந்தெடுத்த கிருஷ்ணன் பொம்மை ஒன்றை அனுப்பினேன், என் நினைவுப் பொருளாக. அதன் கூட ஒரு கடிதமும் எழுதியிருந்தேன். “நான் மரணத்துடன் வாழப்போகிறேன். என் வேலையில் நான் காலனின் முகத்தை எப்போதும் காணலாம். நாளைக்கு இருப்பது நிச்சயமற்ற, அபாயம் நிறைந்த விமானியாகிய நான் ஏன் உன் வாழ்வில் குறுக்கிட வேண்டும்? என்னை மறந்துவிடு” என்று எழுதியிருந்தேன். வேறு யாரோ ஒருத்திமேல் காதல் கொண்டேன் என்றும் அவள் எண்ணீயிருக்கலாம். மூன்று வருடங்கள் கழித்து நான் மறுபடியும் லீவில் சென்னை வந்தேன். ஆனால் கமலாவைக் காணமுடியவில்லை. அவளைப் பற்றித் தகவல் கூட ஒன்றும் அகப்படவில்லை. தேடியதெல்லாம் வீண். பக்கத்து வீட்டில் யார் குடியிருக்கிறார்கள் என்றுகூடக் கவலைப்படாத இந்தக் காலத்தில் பக்கத்து வீட்டுக்காரர்கள் எந்த ஊருக்கு மாற்றிப் போனார்கள் என்றா சொல்லப் போகிறார்கள்?

எதிரே ஒரு டம்ளர் தண்ணீர் கொண்டு வந்தாள் அந்த வீட்டுக்காரி. என் சிந்தனைத் தொடர் அறுந்தது. தலையை நிமிர்த்தி அந்த அம்மாளைப் பார்த்தேன். கமலா எங்கே? எதிரே நின்றவள் எங்கே?

“மிகவும் வந்தனம்” என்று சொல்லிவிட்டு ரேழிக்கு வந்து செருப்பை மாட்டிக் கொண்டபொழுது கீழே கிடந்த பொம்மையைப் பார்த்தேன். குனிந்து அதை எடுத்தேன்.

நான் கமலாவுக்கு அனுப்பிய தந்தக் கிருஷ்ணன்! யோசியாமல் அதை என் பையில் போட்டுக் கொண்டு வெளியே வந்தேன்.

பத்து வருஷங்களின் சின்னங்கள் மஞ்சளாகப் போயிருந்த அந்த தந்தப் பொம்மையின் மீது காணப்பட்டன. ஒருகை உடைந்து ஒட்ட வைக்கப்பட்டிருந்தது. உடலில் பல கீரல்கள்.

அந்தப் பொம்மை அங்கே எப்படி வந்தது? அதை வைத்துக் கொண்டு மைதிலி விளையாடியிருக்க வேண்டும். இல்லாவிட்டால் அவ்வளவு கீறல்கள் எப்படி வந்தன? ஒருகால் மதிலி கமலாவின் குழந்தைதானோ என்னவோ? இம்மாதிரி என் மனதில் பல கேள்விகள் எழுந்தன.

மைதிலி, கமலாவின் குழந்தையாகவேதான் இருந்தால் எனக்கென்ன? கடந்த பத்து வருஷங்களில் கமலாவின் வாழ்விலும் உள்ளப்பாட்டிலும் எவ்வளவு மாறுதல்களோ? அறுந்த நட்பை மீண்டும் ஒட்டவைக்க முடியுமா? மறுபடியும் அவள் வாழ்க்கையில் நான் எப்படி பிரவேசிக்க முடியும்?

ஆறு நாட்கள் என் ஆவலை அடக்கி வைத்திருந்தேன். பித்துப் பிடித்தவன் போல் ஆனேன். எப்படியாகிலும் கமலாவைப் பற்றிய விவரங்களை அறிய வேண்டும் என்கிற ஆசை அதிகரித்தது.

தந்தக் கிருஷ்ணனைத் திருப்பிக் கொடுக்க வேண்டும் என்ற சாக்கை வைத்துக் கொண்டு மறுபடியும் ஒரு வாரம் கழித்து காந்தி நகருக்கு சென்றேன்.

பொழுது சாய்ந்து விட்டது. நான் அந்த வீட்டை நெருங்கிய பொழுது ஒரு டாக்டர் வெளியே வந்து காரில் போகக் கண்டேன். மைதிலிக்கு உடம்பு சரியில்லையோ என்று நினைத்துக்கொண்டே கதவைத் தட்டினேன். கதவு தாழிடவில்லை. உள்ளே நுழைந்தேன்.

ரேழியில் கமலா நின்று கொண்டிருந்தாள். “கமலா!” என்று கூவினேன்.

அவள் பதிலில் பத்து வருஷத்திற்கப்புறம் ஏற்படும் சந்திப்பின் வியப்பையோ, ஆர்வத்தையோ காணோம்.

“நல்ல வேலை செய்தாய், முரளி! குழந்தையின் பொம்மையையா திருடுவது?” என்று என்னைக் கமலா கடிந்தாள்.

மாறாத இளமையைப் பெற்றவளா அவள்? அவள் முகத்தில் காலத்தின் அடிச்சுவடுகளைக்கூட காணோமே! வயது ஆனதாகத் தெரியவில்லையே!

“இதோ!” என்று தந்தக் கிருஷ்ணனை நீட்டினேன். கமலா அதை வாங்கிக் கொள்ளவில்லை.

“அதைக் காணாத ஏக்கம், மைதிலியை ஜுரத்தில் கொண்டு வந்து விட்டது. பாவம், தவிக்கிறாள்! நல்ல வேளையாய்த் திருப்பிக் கொண்டு வந்தாயே. ஓடு, கொண்டுபோய் கொடு. அவளுக்கு உடம்பு சரியாகி விடும்”.

“உன் குழந்தையா மைதிலி!”

“பார்த்தால் தெரியவில்லை உனக்கு?”

“பின் ஏன் பார்வதியை அம்மா என்று அழைக்கிறாள் அவள்?” என்று கேட்டேன்.

கமலா சிரித்தாள். வெண்கல மணியின் சுத்த நாதம் போல் கேட்டது, அந்தச் சிரிப்பொலி. “பார்வதிதான் மைதிலிக்கு இப்பொழுது அம்மா. என் ஞாபகம் கூடக் கிடையாது குழந்தைக்கு... என் மீது மைதிலி காட்ட வேண்டிய பாசம் எல்லாம் அந்தப் பொம்மையின் மீது திரும்பி விட்டது.”

எனக்கு ஒன்றும் புரியவில்லை.

கமலா மேலும் சொன்னாள்: “நீ என் வாழ்விலிருந்து மறையும் முன் கொடுத்த அன்பளிப்பை என் பெண்ணுக்கு, அவளிடம் நிரந்தரமாக விடை பெறுமுன் கொடுத்தேன்... நான் அந்தக் கிருஷ்ணனை எவ்வளவு மதித்தேனோ, அதைவிட அதிகமாக மைதிலி நேசிக்கிறாள்!”

காலடிச் சப்தம் கேட்டு திரும்பிப் பார்த்தேன். மறுபடி கமலாவை நோக்கிய போது அவளைக் காணவில்லை. அவள் நின்ற இடம் சூன்யமாக இருந்தது.

“ஸார்” என்று குரல் கொடுத்தேன். உள்ளே சென்றேன். ஹாலில் மைதிலி கட்டிலின் மீது அப்படியும் இப்படியும் புரண்டு கொண்டிருந்தாள் ஜுர வேகத்தில்.

அவள் தகப்பனார் அருகே ஒரு நாற்காலியில் உட்கார்ந்திருந்தார்.

“போன வாரம் இந்தப் பொம்மையை வாசலில் கண்டெடுத்தேன். ஒரு வேளை உங்கள் குழந்தையின்...”

என்னை இடைமறித்து அவர் “மைதிலி, இதோ பார்! கண்ணைத் திற அம்மா! உன் கிருஷ்ணன் அகப்பட்டுவிட்டது” என்று கத்தினார்.

குழந்தை “அம்மா பொம்மை” என்று அதைக் கையில் வாங்கிக் கொண்டது. இரண்டே நிமிஷத்தில் நிம்மதியாக அயர்ந்து தூங்கவும் ஆரம்பித்தது.

சுவரில் மாட்டப்பட்டிருந்த கமலாவின் படம் என் கவனத்தைக் கவர்ந்தது. அன்றே அதைக் கவனிக்காமல் போனேனே!

என் பார்வையைக் குறித்த அவர் என் சந்தேகத்தைத் தாமாகவே நிவர்த்தி செய்தார்.

“தாயில்லாக் குழந்தை ஸார்! அந்தப் படத்தில் இருப்பவள்தான் தாய் - என் முதல் தாரம். நான் கொடுத்து வைக்கவில்லை. அவள் போய் நான்கு வருஷங்களாச்சு”.

அவர் அதைச் சொல்லும்பொழுது தொண்டையை அடைத்துக் கொண்டது. எத்தனையோ இன்ப நாட்களின் துன்ப நினைவுகள் ஏக காலத்தில் அவரைத் தாக்குகின்றன என்று ஊகித்தேன்.

என் கண்களில் தூசியோ ஏதோ விழுந்து விட்டது. கைக்குட்டையை எடுத்து ஒற்றிக் கொண்டேன்.


அன்புடன்,
டோண்டு ராகவன்

1 comment:

Kaliraj-Qatar said...

சார், இன்னைக்கு நானே ஏதாவது கதை போடச்சொல்லி கேட்கலாம் என்றிருந்தேன். அந்த அளவிற்க்கு அமரர்.திருமலை அவரின் கதைகள் என்னைக்கவர்கின்றன. இப்ப வாரப்பத்திரிக்கைகளில் வரும் கதைகளில் டுவிஸ்ட்டு இருக்கே தவிர உயிரோட்டம் இல்லை. பாஸ்ட் ஃபுட் மாதிரி ஒரு நிமிடக்கதை, ஒரு பக்க கதையாகிவிட்டது.

 

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது