5/08/2006

C.P.W.D. அனுபவங்கள் - 5

மத்தியப் பொதுப்பணித் துறையின் கட்டுமான வேலைகள் ஒப்பந்தப் புள்ளிக்காரர்களுக்கு அளிக்கப்பட்டு செய்விக்கப்படுகின்றன. துறையில் பணிபுரியும் தொழிலாளிகள் (எலக்ட்ரீஷியன், கலாசி, பம்ப் ஆப்பரேட்டர்கள்) பராமரிப்பு வேலைகளில் ஈடுபடுத்தப் படுகின்றனர். பொறியாளர்கள் மேற்பார்வை வேலைகள் செய்கின்றனர். பராமரிப்பு வேலை மேற்பார்வை வேலை நான் அங்கிருந்த பத்தரை ஆண்டுகளில் எனக்குத் தரப்படவில்லை. முதல் மூன்றரை வருடம் ப்ளானிங்கிலும் மீதி ஏழு வருடங்கள் கட்டுமானப் பணியில்தான் எனக்கு வேலை.

ஆகவே, நான் காண்ட்ராக்டர்கள் வேலையை மேற்பார்வை செய்து, அளவுகளை எடுத்து, பிறகு அவர்களது பில்களை சமர்ப்பிக்க வேண்டும். கேட்பதற்கு சுலபமாக இருந்தாலும் உள்ளே நுழைந்து பார்த்தால் பல காம்ப்ளிகேஷன்ஸ் தெரிய வரும். காண்ட்ராக்டர் பில்கள் என்பது பெரிய சமுத்திரம் மாதிரி. பில்கள் போடும்போது ஒன்று நினைவில் கொள்ள வேண்டும். அவற்றை சரிபார்க்கப் போவது ஆடிட்டர், டிராயிங்க் பிரிவு மற்றும் அக்கௌண்டன்ட் ஆகியோர். அவர்கள் பார்வை கோணத்தைத் தெரிந்து கொள்வது அவசியம். பொறியியல் விஷயங்களில் அவர்களுக்கு அவ்வளவாக அக்கறை இல்லை. ஒப்பந்த ஷெட்யூல்களில் உள்ளபடி வேலை விவரங்கள் கொடுக்கப்பட்டுள்ளனவா என்பதைத்தான் பார்ப்பார்கள். என் நல்ல வேளை என் முதல் பில்லிலேயே அப்போது என்னை வழிநடத்திய அசிஸ்டண்ட் இஞ்ஜினியர் சங்கரன் அவர்கள் எனக்கு இதை அழகாகப் புரிய வைத்ததில் இது சம்பந்தமான பிரச்சினைகள் எனக்கு வரவேயில்லை.

சமீபத்தில் 1974-ல் நான் மத்திய ரிஸர்வ் போலீஸ் வளாகத்துக்கு போஸ்டிங் பெற்றேன். அவர்களது கட்டுமான வேலைகள் நடைபெற்று வந்தன. நான் மின்சார கட்டுமான வேலைகளை கவனித்தேன். அடுத்த 7 வருடம் அங்கு நான் பெற்ற அனுபவங்கள் என்னை புடம் போட்டன என்றால் மிகையாகாது.

நான் இங்கு வேலையில் சேர்ந்தபோது என்னை சேர்த்து 4 ஜூனியர் இஞ்ஜினியர்கள். அவர்களில் ஒருவர் ஸ்டோர்ஸ் பொறுப்பை வகித்தார், ஒருவர் பராமரிப்புக்கு, மூன்றாமவரும் நானும் கட்டுமான வேலைகளுக்கு. அதுவரை பிளானிங்கில் இருந்த நான் முதல் முறை சைட்டுக்கு வந்தேன். வந்ததிலிருந்து மூச்சு விடாத அளவுக்கு வேலை. என்வசம் 6 கட்டிடங்கள். அவற்றுக்கு ஸ்லேப் போடும்போது எலெக்ட்ரிகல் பைப்புகளை போடும் வேலையை மேற்பார்க்கவேண்டும். ஒரு நாளைக்கு இரண்டு மூன்று ஸ்லேப்புகள் போடுவது சர்வசாதாரணம். கட்டிடம் கட்டிடமாக ஓட வேண்டும். இளரத்தமாக இருந்ததால் சமாளிக்க முடிந்தது. காண்ட்ராக்டர்களின் தொழிலாளிகளை தட்டிக் கொடுத்து வேலை வாங்க வேண்டும்.

நல்ல வேளையாக பெரிய ப்ராஜக்ட் ஆதலால் காண்ட்ராக்டர்களே தினமும் வருவார்கள். அவர்களில் இருவர் மட்டும் பிராஜக்டில் உள்ள கட்டுமான வேலைகளில் 80% தங்கள் வசம் வைத்திருந்தனர். அவர்களில் ஒருவர் என் நண்பர் பால் பாக்கியசாமி. அவரைப் பற்றி இப்பதிவில் பேசலாம் என நினைக்கிறேன்.

அவர் 10 வருடம் மத்திய பொதுப்பணித் துறையில் என்னை மாதிரியே ஜே.இ. ஆக இருந்தவர். நாக்பூரில் பெரிய பிராஜக்டை அப்போது ஹேண்டில் செய்தவர். அங்கு தான் பெற்ற அனுபவங்களை என்னிடம் பகிர்ந்து கொண்டதில் வாழ்க்கையில் பிராக்டிகலாக இருப்பது எப்படி என்று எனக்கு சொல்லி கொடுத்தார்.

அளவுகள் எப்படி எடுக்க வேண்டும், அவற்றை பதிவு செய்வது எப்படி என்பதையெல்லாம் எனக்கு அழகாக விளக்கினார். சி.டி.இ. (Central Technical Examiner) என்றாலே அக்காலத்தில் இஞ்ஜினியர்களும் காண்ட்ராக்டர்களும் அலறுவார்கள். அவர்கள் வேலை தப்பு கண்டிப்பதே. பால் அவர்களை மிக அழகாக சமாளித்தார். அவர் என்ன செய்வார் என்றால் வேண்டுமென்றே பின்னால் சரி செய்யக் கூடிய சில குறைபாடுகளை விட்டு வைப்பதாகும். உதாரணத்துக்கு எர்த் குழியில் மூடி போட மாட்டார், தண்ணீர் ஊற்ற ஃபன்னல் வைக்க மாட்டார். ஸ்விட்ச்போர்டுகளுக்கு கவர் வைக்க மாட்டார். சி.டி.இ. விறுவிறென்று அவற்றை எழுதிக் கொண்டு போவார். சுமார் 10 பாயிண்டுகள் கிடைத்து விடும். திருப்தியுடன் அடுத்த கட்டிடத்துக்கு சென்று விடுவார். அங்கு விஷயம் புரியாத காண்ட்ராக்டர் எல்லாவற்றையும் பக்காவாக செய்து விடுவார். அங்குதான் சி.டி.இ. மேலும் நோண்ட ஆரம்பிப்பார். ஸ்விட்ச் போர்ட் அருகில் சுவற்றை உடைத்து சரியாக கிளாம்ப் பொருத்தவில்லை என்று கண்டுபிடிப்பார். அம்மாதிரி குறைகள் எல்லாம் பின்னால் சரி செய்ய முடியாதவை. ஆவால் பால் விஷயத்தில் சி.டி.இ. டில்லிக்கு திரும்பி சென்றதும் நோட் செய்த பாயிண்டுகளையெல்லாம் சரி செய்து விடுவார். சி.டி.இ. கடிதம் கிடைத்ததும் நாங்களும் அவை எல்லாம் செய்யப்பட்டு விட்டன என்று எழுதி விடுவோம். ஆட்சேபங்கள் நீக்கிக் கொள்ளப்ப்பட்டு விடும். மற்ற வேலை விஷயங்களில் இது நடக்காது, ஏனெனில் கண்டெடுக்கப்பட்ட குறைகள் சரிசெய்யப்படக் கூடியவை இல்லை. இது சி.டி.இ.க்கும் தெரியும்.

பால் எனக்கு தந்த இன்னொரு அறிவுரை தேவையில்லாது சி.டி.இ.டம் பேசக் கூடாது என்பதே. பால் அவர்கள் மேற்பாற்வையில் இருந்த ஒரு கட்டிடத்தில் மெயின் போர்டுகள், துணை மெயின் போர்டுகளை தனியான காண்ட்ராக்டில் செய்வித்தோம். பால் அவ்ர்கள்தான் அந்த காண்ட்ராக்டையும் பெற்றவர். அவற்றை பெற்ற நாங்கள் பிறகு கட்டிடம் எழும்பும் நேரத்தில் பால் அவர்களிடம் கொடுத்து அவற்றை பதிக்கச் செய்தோம். ஆனால் இது வேறு காண்ட்ராக்ட். நிலைமை என்னவென்றால் இரண்டு காண்ட்ராக்டும் ஒருவராலேயே நிறைவேற்றப்பட்டது, இரண்டிலும் சம்பந்தப்பட்ட ஜே. இ. நான் மட்டுமே. இப்போது சி.டி.இ. இந்தக் கட்டிடத்திற்கு வருகிறார். போர்டில் குறைகூற ஆரம்பிக்கிறார். நான் அவரிடம் "போர்டுகள் டிபார்ட்மெண்டால் காண்ட்ராக்டருக்கு வழங்கப்பட்டவை" என்று கூறுகிறேன். ஆகவே அந்த விஷயத்தை அப்படியே விட்டுச் செல்கிறார் அவர். பக்கத்தில் இருந்த கோட்டகப் பொறியாளருக்கு திருப்தி. நன்றாக சமாளித்தேன் என்று எனக்கு பாராட்டு வேறு. அவர் சைட்டுக்கு புதிது. சில நாட்கள் கழித்து திடீரென நினைத்துக் கொண்டு அவர் என்னை கேட்கிறார், "போர்டுகள் செய்யும் காண்ட்ராக்டை யார் நிறைவேற்றினார்?" என்று. நான் சிரிக்காமல் கூறினேன், "பால் அவர்களேதான் அதையும் செய்தார்" என்று. அவர் மூச்சே நின்று விட்டது. "அடப்பாவி, இதை ஏன் சி.டி.இ.டம் கூறவில்லை?" என்று. "ஏனெனில் அவர் என்னைக் கேட்கவில்லை" என்கிறேன். "அது தவறில்லையா" என்று அவர் கேட்டதற்கு நான், "அச்சமயம் சி.டி.இ. நம்மிடம் தப்பு கண்டு பிடிக்க வந்தவர், அவருக்கு தேவையில்லாது ஏன் தகவல் தர வேண்டும்?" என்று பதிலளித்தேன்.

பால் அவர்கள் வாழ்க்கையில் மிகவும் அடிபட்டவர். சிறுவயதிலேயே தந்தையை இழந்து அவரும் அவர் தாயும் தந்தை வீட்டாரால் விரட்டப்பட்டு அன்னையின் அன்னை வீட்டில் வளர்ந்தவர். அப்போது தான் பட்ட அவமானங்கள், தான் அவற்றை சமாளித்த விதம் எல்லாவற்றையும் என்னிடம் விவரிப்பார். அவர் கதை விடுவதாக எனக்கு முதலில் சந்தேகம். ஆகவே பல குறுக்கு கேள்விகள் பல தருணங்களில் வெவ்வேறு கோணங்களிலிருந்து போட்டேன். எல்லாவற்றுக்கும் பொருத்தமான பதில்களே வந்தன. உண்மையைக் கூறியிருந்தால் ஒழிய இது சாத்தியமே இல்லை என்பதை தெரிந்து கொண்டேன். அப்போதுதான் உண்மை கூறுவதன் பலனை புரிந்து கொண்டேன். பொய் சொல்ல ஆரம்பித்தால் எந்த பொய்யை எங்கு யாரிடம் கூறினோம் என்றெல்லாம் நினைவில் வைக்க வேண்டும் சள்ளை பிடித்த வேலை. கால விரயம் வேறு. உண்மை கூறிவிட்டால் நாம் நம் வேலையை பார்த்துக் கொண்டே போகலாம்.

நான் பொறியியல் கல்லூரியில் கற்க முடியாத பல பாடங்களை அவரிடமிருந்து கற்றேன். மறக்க முடியாத மனிதர் அவர்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

No comments:

 

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது