5/09/2006

ரிடயர்மெண்டுக்கு பிறகு வாழ்க்கை - 2

முதல் பதிவுக்கு வந்த சில பின்னூட்டங்கள் இந்த இரண்டாம் பதிவையிட ஊக்குவித்தன.

ஹிந்தியில் அவதார் என்று ஒரு படம் எண்பதுகளில் வந்தது. ராஜேஷ் கன்னா, ஷபனா ஆஸ்மி, ஏ.கே. ஹங்கல், சுஜீத் குமார், சச்சின் ஆகியோர் நடித்திருந்தனர். மோட்டார் மெக்கானிக் ராஜேஷ் கன்னாவுக்கு இரண்டு பையன்கள். சச்சின் அவர் நம்பிக்கைக்குரிய வேலைக்காரன். முதல் பையன் பேங்க் ஆபீஸர், இரண்டாவது பையன் பொறியியல் கல்லூரியில் படிக்கிறான். விபத்தில் ஒரு கை இழந்த ராஜேஷ் கன்னாவுக்கு அவர் முதலாளி கணிசமான தொகை தருகிறார். அதை ஒரு வீடு வாங்க உபயோகிக்கும் ராஜேஷ் கன்னா, பணத்தை பெரிய மகனிடம் கொடுத்து வீட்டை தன் மனைவியின் பெயரில் பதிவு செய்யச் சொல்ல அவனோ அதை தன் மனைவி பெயருக்கு பதிவு செய்து விடுகிறான். அவர் கஷ்டப்பட்டு இரண்டாம் மகனை படிக்க வைக்க அவனோ பாஸ் செய்ததும் தந்தையிடம் கூடக் கூறாது தன் காதலியின் தந்தையின் ஆசி பெற்று அவர் வீட்டோடு மாப்பிள்ளையாகிறான். இதற்குள் முதல் மருமகளும் மாமனார் மாமியாரை வீட்டை விட்டு வெளியேற்றி விடுகிறாள். அப்போதுதான் அவருக்கு தன் மகன் வீட்டு விஷயத்தில் செய்த மோசடியை பற்றித் தெரிந்து கொள்கிறார். இது போல நூற்றுக்கணக்கானக் கதைகள் வந்திருக்கும்தானே. ஆனால் பிறகு நடந்ததுதான் பார்வையாளருக்கு ஒரு பெரிய எழுச்சியை ஊட்டுகிறது என்றால் மிகையாகாது.

நிஜமாகவே நடுத்தெருவுக்கு வந்த ராஜேஷ் கன்னா வேலைக்காரன் துணையுடன் சிறிய மெக்கானிக் ஷாப் அமைத்து, எரிபொருள் சிக்கனம் செய்யும் கார்பொரேட்டர் வடிவமைத்து பெரிய பணக்காரராகிறார். பல நிறுவனக்களை திறக்கிறார். அவரை ஏமாற்றிய பையன்களை சாவகாசமாகப் பழி வாங்குகிறார். மனதுக்கு நிறைவு தந்த காட்சிகள் அவை. அதே படம் தமிழிலும் வந்தது, வாழ்க்கை என்னும் தலைப்பில். சிவாஜி, அம்பிகா நடித்திருந்தனர்.

அது இருக்கட்டும் இப்பதிவுக்கும் அதற்கும் என்ன சம்பந்தம் என்று கேட்பவர்களுக்கு, நான் கூறுவது இதுதான். ரிடயர்மெண்ட் பணம் கைக்கு வந்ததும் அதை யாருக்கும் தராது பத்திரமான முதலீட்டில் இட வேண்டும். மனதை உருக்கும் சோகக் கதைகளை உறவினர் கூறி பணம் கேட்பார்கள். மூச், ஒருவருக்கும் தரக்கூடாது. முக்கியமாக பிள்ளைகளுக்கு. ரொம்பக் கடுமையாகப் படுகிறதா? ஏமாந்தால் அதே பிள்ளைகள் கையில் கடுமையான சோதனைகளை சந்திக்க வேண்டுமே ஐயா? எதற்கும் ஒரு நல்ல வேலை தேடிக் கொள்வதும் நலமே. கடைசி வரை தன் தேவைகளுக்கான செலவுகளுக்கு யாரிடமும் கையேந்தக் கூடாது. தனது சொத்தையெல்லாம் தான் இருக்கும்போதே பசங்களுக்கு மேடோவர் (made over) செய்து விட்டு கடைசி காலத்தில் பசங்களால் பந்தாடப்பட்டு, சந்தியில் நின்றவர்கள் அனேகம்.

விசு சினிமா கூட ஒன்று அதே தீமில் வந்தது. ரிடையர்மெண்ட் பெற்றவர்களே, இதெல்லாம் உங்களுக்கு நடந்தால் இதற்கு முக்கியக் காரணம் நீங்களே. உங்கள் கையில் எல்லா கண்ட்ரோலையும் வைத்திருக்கவும். இல்லாவிட்டால் ஸ்கூல் மாஸ்டர் படத்தில் வருவது கணவன் மனைவியையே பிரித்து ஒருவர் முதல் பிள்ளை வீட்டிலும் இன்னொருவர் இன்னொரு பிள்ளை வீட்டிற்கும் சென்று தொண்டு செய்ய நேரிடும். சினிமாதானே என்று கூறுபவர்களுக்கு நான் கூறுவது, இதெல்லாம் நடக்கக் கூடியதே. உங்கள் சலுகைகளை விட்டுக் கொடுக்காதீர்கள் என்பதே. இதையெல்லாம் சரி செய்து கொண்டு உங்கள் சமூக சேவைகளை ஆரம்பிக்கவும். ஒன்றும் அவசரம் இல்லை.

இதைப் படிக்கும் இளைய தலைமுறையினருக்குக் கூறுவேன், தயவு செய்து பெற்றோர்களை கண்ணீர் விட வைக்காதீர்கள். அவ்வாறு செய்தால் நீங்கள் உருப்படவே மாட்டீர்கள்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

15 comments:

Sivabalan said...

// உறவினர் கூறி பணம் கேட்பார்கள். மூச், ஒருவருக்கும் தரக்கூடாது //

சார், உண்மையை சொன்னீங்க!!

நல்ல பதிவு!! தொடருங்கள்!!

dondu(#11168674346665545885) said...

நன்றி சிவபாலன் அவர்களே.

அன்புடன்,
டோண்டு ராகவன்

நாமக்கல் சிபி said...

"திருமதி ஒரு வெகுமதி" படத்தில் என்று நினைக்கிறேன்.

விசு தன் ரிடையர்மெண்ட் பணத்தை மகன்களுக்கு கொடுத்துவிட்டு வாரம் ஒரு மகன் வீட்டில் என்று அல்லாடுவதைக் கண்டு கலங்கியிருக்கிறேன்.

தனக்கென்று சிறிதளவாவது பணம் வைத்திருந்தால் யாரையும் நம்பியிருந்திருக்க வேண்டிய அவசியம் இருந்திருக்காது. அதே படத்தில் மிகவும் உஷாரான கிஷ்மு, தனது மகன், மருமகள் கூட பணம் தன் கையில் இருக்கும்ப்போதுதான் மதிப்பார்கள் என்ற எண்ணத்துடன்
உடல் நிலை சரியில்லாதபோது கஷாயம் போட்டு கொடுத்ததற்கும் காசு கொடுத்து, உண்மையான உறவுகளுக்கும் விலை பேசக்கூடிய நபர்.

இப்படி இரு வேறுபட்ட கோணங்களையும் படமாக்கியிருப்பார் விசு!

dondu(#11168674346665545885) said...

சிபி அவர்களே,

அதே படத்தைத்தான் நானும் குறிப்பிட்டேன். கிஷ்மு இன்னொரு எக்ஸ்ட்ரீம். பணத்தைக் கையில் வைத்துக் கொள்ள வேண்டும். அதற்காக பிள்ளையை விரோதிக்க வேண்டும் என்றில்லை. இது ஒரு நாசுக்கான நிலை. நீங்கள் சொன்ன விசு படத்தில் கிஷ்மு கடைசியில் விசுவின் நிலை எடுக்க, விசு கிஷ்முவின் முந்தைய நிலையை எடுக்கிறார்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

நாமக்கல் சிபி said...

//இதைப் படிக்கும் இளைய தலைமுறையினருக்குக் கூறுவேன், தயவு செய்து பெற்றோர்களை கண்ணீர் விட வைக்காதீர்கள். அவ்வாறு செய்தால் நீங்கள் உருப்படவே மாட்டீர்கள்.
//

வாஸ்தவம்தான் சார்.

பாலசந்தர் கணேசன். said...

பிள்ளைகளுக்கு தங்கள் மீது உண்மையாக பிரியம் உள்ளவர்களாக இருக்கும் வண்ணம் பெற்றோர்கள் இருந்தால் பிள்ளைகள் ஏன் கடமையை மறக்கிறார்கள்?. பிள்ளைகளை தைரியம், தன்னம்பிக்கை, நற்பண்பு கொண்ட சிங்கங்களாக உருவாக்குவது, அவர்களுக்கு தங்கள் மனதின் ஆற்றல்களை உணரச் செய்வது, ஒழுக்கத்தின் உயர்ந்த பலன்களை போதிப்பது,அவர்களுக்கு நல்ல உடல் பலத்தினை கொடுப்பது என்று பல அம்சங்களிலும் பெற்றோர்கள் கவனம் செலுத்தி, அவர்களுக்குள்ள தனித்திறமையினை உணரசெய்யவேண்டுவது தான் பெற்றோர்கள் கடமை. அதை விட்டு விட்டு பெற்றோர்கள் , எல்லா குழந்தைகளையும் ஒரே பேட்டர்னில் வழக்கிறார்கள். இதனால் தான் பெற்றோர்கள் மீதான அன்பு குறைகிறது. நான் எதனையும் நியாயபடுத்தவில்லை.

dondu(#11168674346665545885) said...

நானும் எதையும் நியாயப்படுத்தவில்லை. தந்தையை பிள்ளைகள் ஏய்ப்பதும், அதே பிள்ளைகளை அவர்கள் பிள்ளைகள் ஏய்ப்பதும் காலம் காலமாக நடந்து வருகிறது. புத்தியுள்ளவர்கள் தங்களைக் காத்துக் கொள்கின்றனர். மற்றவர் ஏமாறுகின்றனர்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

டிபிஆர்.ஜோசப் said...

தனது சொத்தையெல்லாம் தான் இருக்கும்போதே பசங்களுக்கு மேடோவர் (made over) செய்து விட்டு கடைசி காலத்தில் பசங்களால் பந்தாடப்பட்டு, சந்தியில் நின்றவர்கள் அனேகம்.//

உண்மைதான் சார். நானும் பார்த்திருக்கிறேன். பெற்ற மனம் பித்து, பிள்ளை மனம் கல்லு.. என்று அந்த காலத்திலேயே சொல்லி வைத்திருக்கிறார்களே.. உண்மையில்லாமலா சொன்னார்கள்?

dondu(#11168674346665545885) said...

ஜோசஃப் அவர்களே, பாசம் வேண்டியதுதான். அது விவேகத்துடன் செயல்படுவது மிக்க அவசியம்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

dondu(#11168674346665545885) said...

சரியாகச் சொன்னீர்கள் நாட்டாமை அவர்களே. திருமதி ஒரு வெகுமதி அக்கா தம்பிகள் கதையே. ஒரு விஷயம் தெரியுமா. இப்படம் எழுபதுகளில் வந்த சதுரங்கம் என்னும் படத்தின் தழுவல். பாண்டியன் ரோலில் ஸ்ரீகாந்த், எஸ்.வி.சேகர் ரோலில் ரஜனிகாந்த், ரஜனிகாந்த்தின் மனைவி ரோலில் பிரமீளா, அக்கா ரோலுக்கு பதில் அங்கு அம்மா ரோல், பண்டரிபாய்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

dondu(#11168674346665545885) said...

சரியாகக் கூறினீர்கள் மனசாட்சி அவர்களே. மனித மனம் விசித்திரமானது. பிறர் மேல் நன்றி உணர்ச்சியை ஓரளவுக்கு மேல் அது தாங்கிக் கொள்ளாது. உதாரணத்துக்கு வீட்டுக்கு பெரிய அண்ணன் தன் தம்பி தங்கைககளின் படிப்புக்காக சக்திக்கு மீறி கடன் வாங்கிப் படிக்க வைக்கிறான், அவர்களுக்கு கல்யாணமும் செய்து வைக்கிறான். அவன் மனைவியும் அதில் அவனுக்கு உறுதுணையாக இருக்கிறாள் என்று வைத்துக் கொள்வோம்.

பிற்காலத்தில் இந்த இருவரும் முதுமை நிலையில் இருக்கிறார்கள், கையில் பணமும் இல்லை. அவர்களை தம்பி தங்கைகள் மதிக்கப் போகிறார்களா. அவர்களுக்கு அந்த நன்றி உணர்ச்சி என்பது அப்போது எரிச்சல் தருவதாகவே ஆகி விடுகிறது.

ஆகவேதான் கூறுகிறேன், எப்போதும் லகான் கைவசம் இருக்கட்டும். உங்கள் காலத்துக்கு அப்புறம்தான் அவர்கள் வாரிசு, முன்பே அல்ல.

அன்புடன்,
டோண்டு ராகவன்

துளசி கோபால் said...

அருமையாக்ச் சொல்லிட்டீங்க. ஆனா இதுலே ஒரே ஒரு விஷயம் சொல்லிக்கறேன்.
எல்லாத்துக்கும் ரெண்டு பக்கம் இருக்கறது போல இதுலேயும் இருக்குதானே?

ஒருவேளை பிள்ளைங்க, அடிப்படை வசதிக்குக் காசு பத்தாம இருக்கர நிலையிலே இருந்தா
தாய்தகப்பன் என்ற முறையிலே கொஞ்சம் கொடுக்கத்தானே வேண்டி இருக்கு. நமக்கு
அப்புறம் எல்லாம் அதுங்களுக்குப் போய்ச் சேர்ந்து அப்புறம் நல்லா இருக்கறது வேற.
கண்ணுமுன்னே அதுங்க கஷ்டப்படும்போது நாமே எல்லாக்காசையும் வச்சுக்கிட்டு அனுபவிச்சா
நல்லவா இருக்கும்?

ஆனாலும் கடைசி வரை நம்ம கிட்டே லகான் இருக்கணுமுன்னு சொன்னீங்க பாருங்க.
இது சத்தியமான உண்மை.

dondu(#11168674346665545885) said...

"ஒருவேளை பிள்ளைங்க, அடிப்படை வசதிக்குக் காசு பத்தாம இருக்கர நிலையிலே இருந்தா
தாய்தகப்பன் என்ற முறையிலே கொஞ்சம் கொடுக்கத்தானே வேண்டி இருக்கு."
இத்தனை வருஷங்களிலே பசங்களோட யோக்கியதை என்னவென்று தெரிந்து கொண்டிருப்பீர்கள்தானே. ஊதாரிப் பையன் வந்து பிசினஸ் ஆரம்பிக்கப் போவதாகக் கூறி பணம் கேட்க, கொடுத்தால் அது குதிரை வாலுக்குத்தான் போகும் என்று நீங்கள் அறியும் பட்சத்தில் என்ன செய்ய வேண்டும்?

வரவு நல்ல உறவு என்ற படத்தையே எடுத்துக் கொள்ளுங்கள். விசு ஒவ்வொரு தடவையும் பிள்ளைகளின் அடாவடியைக் கண்டு குமுறும்போதும் அவரைப் பேச விடாது அவர் மனைவி ஒரு டம்ளர் ஜலம் கொடுத்து அவர் கோபத்தைத் தணிப்பார். இது தேவையா? கேட்டால் குடும்பத்தின் அமைதி போய் விடுமாம். பார்வையாளன் எனக்கே கோபம் வந்தது. கடைசியில் விசு அந்த மனைவியை ஒரு அறை விடுவார், எல்லா நாசமும் அவளால்தான் என்றும் கூறுவார். கதைப்படி அது உண்மைதான்.

எது எப்படியானாலும் தும்பை விட்டு வாலைப் பிடிப்பது முட்டாள்தனமே.

அன்புடன்,
டோண்டு ராகவன்

சாமான்யன் Siva(stocksiva.blogspot.com) said...

என்னமோ பெரியவங்க,அனுபவப்பட்டவங்க சொல்றீங்க. கேட்டுக்கிறோம்.
//இதைப் படிக்கும் இளைய தலைமுறையினருக்குக் கூறுவேன், தயவு செய்து பெற்றோர்களை கண்ணீர் விட வைக்காதீர்கள். அவ்வாறு செய்தால் நீங்கள் உருப்படவே மாட்டீர்கள்.
//
அய்யா!சாபம் விடாதீர்கள்.

dondu(#11168674346665545885) said...

சாபம் எல்லாம் இட நான் யார். துரோகம், அதுவும் பெற்றோருக்கு, செய்தால் கலிகாலத்தில் கைமேல் பலன்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

 

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது