10/27/2006

அறிவு இடைவெளி

இந்தப் பதிவில் கணினி அறிவு பலரிடம் எவ்வாறு பூஜ்யமாக இருக்கிறது என்பதை எழுதியிருந்தேன். இருபதாம் நூற்றாண்டின் கடைசி 30 ஆண்டுகள் நாளொரு கண்டுபிடிப்பு பொழுதொரு முன்னேற்றம் என்றுதான் வளர்ந்திருக்கிறது. இப்போதோ கேட்கவே வேண்டாம். ஒரு புது தொழில் நுட்பத்தின் ஆயுளே குறைவாகத்தான் இருக்கிறது. உதாரணத்துக்கு வி.சி.ஆர். மற்றும் வி.சி.பி.

முந்தையதில் பல தொலைகாட்சி நிகழ்ச்சிகளைப் பதிவு செய்து வைத்துக் கொள்ள முடியும். பிந்தையதிலோ வெறுமனே பதிவு செய்த நிகழ்ச்சிகளி டி.வி.யில் போட்டுப் பார்க்க மட்டுமே முடியும், அதன் விலையும் குறைவு. பலர் முந்தையதையே வாங்கினர். ஆனால் அதை சரியாக உபயோகிக்கத் தெரியாது விசிபி போலவே உபயோகித்தனர். நிகழ்ச்சிகளை ரெகார்ட் செய்தவர்கள் கூட அதன் முழு சாத்தியக் கூறுகளையும் அறிந்தார்கள் இல்லை.

ஒரு நிகழ்ச்சியைப் பதிவு செய்ய வேண்டுமானால் அது டிவியிலும் பார்த்துக் கொண்டிருக்கும்போது மட்டுமே ரிகார்ட் செய்ய முடியும் என்றே பலரும் நம்பினர். ஒரு சேனல் நிகழ்ச்சியைப் பார்த்துக் கொண்டே வேறொரு சேனல் நிகழ்ச்சியைப் பார்க்கலாம் என்ற எண்ணமே அவர்களுக்கு வரவில்லை. முன்கூட்டியே பதிவு செய்ய வேண்டிய நிகழ்ச்சிகளை ஒரு நிகழ்ச்சி நிரல் மூலம் சரியான தருணத்தில் பதிவு செய்யலாம், அப்போது டிவிகூட ஆன் செய்ய வேண்டாம் என்பதோ அவர்களுக்குத் தெரியவே தெரியாது.

இப்போது அதைப் பற்றிப் பேசி என்ன புண்ணியம். விசிஆர் கான்சப்டே மொத்தத்தில் அடித்துக் கொண்டு போகப்பட்டு விட்டது. சிடி, டிவிடி என்றெல்லாம் வந்து விட்டன.

ஒரு முறை எனது வாடிக்கையாளரிடமிருந்து ஒரு ஜாப் ஆர்டர் வரவேண்டியிருந்தது. அவருடைய ஆர் & டி பிரிவுக்கு அந்த ஆர்டரின் ஒரு காப்பி வந்திருந்தது. அதை எனக்கு ஃபேக்ஸ் செய்யுமாறுக் கூற, அந்தப் பிரிவின் ஸ்டெனோ என்னிடம் தங்களுக்கு அந்த காப்பி தேவைப்படுவதால் அதை எனக்கு ஃபேக்ஸ் மூலம் அனுப்ப முடியாது என சீரியஸாகச் சொன்னார்!

அவரை விடுங்கள், ஏதோ குழம்பி விட்டார். இந்த வாடிக்கையாளர் மென்பொருள் நிபுணர். அவரது ஜெர்மானிய வாடிக்கையாளருக்காக வங்கி ப்ராடக்டுகள் மென்பொருளை உருவாக்கி அனுப்புபவர். அவற்றை ஆங்கிலத்தில் உருவாக்குவதை நான் ஜெர்மன் மொழியில் மாற்ற வேண்டும். அவ்வாறு செய்து நான் ஒரு கோப்பு மின்னஞ்சல் இணைப்பாக அனுப்பியிருந்தேன். அதையே அவர் எனக்கு திரும்ப அதே மின்னஞ்சல் வழியே திருப்பி அனுப்புகிறார். கிட்டத்தட்ட ஒரு MB அளவுள்ள கோப்பு. என்ன விஷயம் என்றால், அதில் ஓரிரு இடங்களில் அவருக்கு மொழிபெயர்ப்பு விட்டுப் போனதாகத் தோன்றியதாம்! அவரிடம் ஒரே கேள்விதான் கேட்டேன், அதாவது "நான் அனுப்பும் கோப்பு என் வந்தகட்டிலேயே இருக்குமே, அதை ஏன் மெனக்கெட்டு அனுப்பினீர்கள்" என்று. கேட்காத கேள்வி என்னவென்றால், "இந்த அடிப்படை அறிவு கூட இல்லாது, என்னத்தே மென்பொருளை உருவாக்கி, அனுப்பி ..." என்பதே அது.

ஒரு முறை கோப்பை அனுப்புவார்கள். நான் கொட்டேஷன் தருவேன். சரியாகப் பட்டால் வேலை தருவார்கள். அச்சமயத்தில் அதே கோப்பை மறுபடி அனுப்பித்த பிரஹஸ்பதி கம்பெனிகளும் இருந்தன.

என்னத்தை வேலை, செஞ்சு...

அன்புடன்,
டோண்டு ராகவன்

1 comment:

dondu(#11168674346665545885) said...

அப்படியில்லை தினகர் அவர்களே. சிலருக்குக் கற்றுக் கொள்ளும் ஆர்வமே இருந்ததில்லை.

அதே ஸ்டெனோ என்னிடம் சீரியசாக எனது பில் தொகைகள் எனது வங்கிக் கணக்கில் கம்பெனியால் நேரடியாகச் செலுத்தப்படும் என்று கூறினார். இதில் என்ன விசேஷம் என்றால் எனது வங்கி பற்றியத் தகவல்களை கம்பெனி கேட்டதேயில்லை, நானும் தரவேயில்லை என்பதும் அவருக்குத் தெரியும். அவ்வாறே தந்திருந்தாலும் அவர்தான் அதற்கான பேப்பர்களைத் தயார் செய்திருக்க வேண்டும். இதற்கு என்ன சொல்லுகிறீர்கள்?

அன்புடன்,
டோண்டு ராகவன்

 

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது