11/14/2008

முகம்மது இஸ்மாயில் அவர்களது கேள்விகளுக்கு எனது பதில்கள்

13 Nov 2008
07:07 PM IST

வணக்கம் ராகவன் ஐயா,

நாம் முன்னர் தொலைபேசியில் பேசியபடி இக்கேள்விகளை பதிகின்றேன். நான் இன்னும் தமிழ் 99 தட்டச்சு பழகிக்கொண்டிருக்கிறேன். அதனால் கால தாமதமாக பதிந்தாலும் இந்த கேள்விகளுக்கு முன்னுரிமை கொடுத்து பதில் தரவும்.முடிந்தால் இதை தனிப்பதிவாக இட்டால் மிக்க மகிழ்ச்சி.

மேலும் இது ஒரு புது வித விளையாட்டு,அதாவது இதன் மூலம் கற்றல் மற்றும் கற்பித்தல் இரண்டுமே நிகழும். 60+ வயது வாலிபரான உங்களுக்கு இந்த விளையாட்டு மிகவும் பிடிக்கும். இதற்கான விதிமுறைகள்.

1. அனைத்து கேள்விகளுக்கும் ஒரிரு வரிகளில் பதில் கூறக்கூடாது, முடிந்த அளவு விரிவாக பதில் தரவும். கேள்விகளைப் பற்றி மற்றவரிடம் விவாதித்து பதில் தரக்கூடாது. நீங்கள் மட்டுமே படித்து பதில் தரவும். கேள்விகளை திருத்த கூடாது. இதை நான் எனது வலைப்பதிவிலும் www.gnuismail.blogspot.com -ம் பதிவேன். இது உங்க ஐடியா தான் !!!.

2. நீங்கள் வரிசையாகத்தான் பதில் தர வேண்டும், அதாவது ஒவ்வொரு கேள்வியையும் படித்த உடனே பதில் எழுதி விட்டுதான் அடுத்த கேள்வியை படித்து பதில் தர வேண்டும். மேலும் முன்னர் எழுதிய பதிலை திருத்த கூடாது.அதற்கு பதில் எழுதியதை மாற்ற கூடாது. இதற்கான நீதிபதி உங்களின் மனசாட்சி தான்.

3. தெரியாத மற்றும் புரியாத கேள்விகளை விட்டு தள்ளி பதில் அளிக்கலாம். ஆனால் பிறகு அதற்கு பதில் தர முயலக்கூடாது. வேண்டுமானால் தகவல்களை கூட்டி கழித்து திருத்திய பதில்களை வேறோரு பதிவாக இடலாம். தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் சீஸன1, சீஸன்2 போல. இந்த விளையாட்டு உண்மையில் உங்களுக்கு வேறோருவர் தண்ணீரை வேகமாக வாயில் ஊற்ற, நீங்கள் அதை விட வேகமாக குடிப்பதால் அனைவருக்கும் ஏற்படும் த்ரில்லை மிஞ்சும் என நம்புகிறேன்.

இக்கேள்விகள் முன்னர் இந்திய தொழில்நுட்பவியலார்களின் மண்டலத்தில் நாங்கள் உரையாடிய போது எழுப்ப பட்டு பல விதமான பதில்களும் கிடைத்தது. ஆதலால் அப்பதில்களை இறைவன் நாடினால் வரும் சனிக்கிழமை (15 நவம்பர் 2008) மாலை 6.00 மணிக்கு நம் பதிவர்கள் அனைவரிடமும் காந்தி சிலை அருகே பகிர்ந்து கொள்கிறேன்.ஆனால் அதற்கு முன்னமே நீங்கள் பதிவு இட்டு பதில் கூறிவிடுவீர்கள் என நம்புகிறேன். முன்னர் நான் இதை கிழக்கு பதிப்பக மொட்டை மாடியில் நிகழ்த்த பத்ரியிடம் அனுமதி கேட்டேன்.ஆனால் இந்த நிமிடம் வரை மின்னஞ்சல் வரவில்லை. மேலும் உங்களின் பதிவைப் பார்த்து விட்டு உங்களுடன் பேசியபின் கிடைத்த பதிவர் சந்திப்பு தகவலுக்கேற்ப இதை மாற்றி விட்டேன். அவ்வளவுதான். இறைவன் நாடினால் வரும் சனிக்கிழமை நேரில் சந்திப்போம். நன்றி.

கேள்விகள் & பதில்கள்
1. உயிர் என்றால் என்ன?
பதில்: இதற்கு பல க்ரைட்டீரியா உள்ளன. அவற்றில் முக்கியமானது தானே வளர்வது. பிணத்துக்குக் கூட நகங்கள் முடி எல்லாம் வளர்வதும் கூட அது முன்னால் உயிரோடு இருந்ததன் அடையாளம்தான் எனக் கூறிவிடலாம். இனப்பெருக்கம் செய்வது, சூழ்நிலைக்கேற்ப தன்னை மாற்றிக் கொள்வது ஆகியவற்றையும் கூறலாம். எல்லா காரணிகளும் ஒருப்போல இருக்க வேண்டும் என்னும் கட்டாயமும் இல்லை. முக்கியமாக ஒன்று கூறவேண்டும். உயிர் எதற்கு உள்ளது எதற்கு இல்லை என்பதை முக்கால்வாசி சமயங்களில் யார் வேண்டுமானாலும் கூறிவிடலாம்.

2. உயிருக்கென்று தனிப்பட்ட எடை (weight) எதுவும் உண்டா?
பதில்: எனக்கு தெரிந்து இல்லை. சொல்லப்போனால் உயிர் போன பின் கனம் அதிகமாகப் போவது போன்ற உணர்ச்சி. பிணகனம்னு கேள்விப்பட்டிருக்கீங்களா? மேலும் உயிர் என்பது பௌதிக விதிகளுக்கு உட்பட்ட வஸ்து இல்லை எனவும் நினைக்கிறேன். ஆகவே அதற்கு எடை இருக்கா இல்லையா என்பதெல்லாம் தேவையில்லாத சர்ச்சை. `

3. நமது சூரியக்குடும்பத்தில் உள்ள வியாழன் கோளினால் பூமியிலுள்ள நமக்கு என்ன பயன்?
பதில்: அது பெயர்வதால் பல ஜோசியர்களுக்கு பிழைப்பு நடக்கிறது (குருப்பெயர்ச்சிப் பலன்). மேலும் மனிதன் என்ன இயற்கையின் முன்னுரிமைகளில் அவ்வளவு முக்கியமானவனா என்ன? அண்டவெளி தொடங்கி இன்றுவரை நடந்தவற்றை ஓராண்டு ஸ்கேலில் சுருக்கினால் உயிரென நாம் நம்பும் விஷயமே திசம்பர் 20க்கு பின்னால்தான் நடந்திருக்கும். மனிதன் உருவானது திசம்பர் முப்பத்தி ஒன்று நள்ளிரவு 12 மணிக்கு முன்னால் சில நொடிகளில். ஆக, மனிதனுக்கு வெகுகாலத்துக்கு முன்னால் உருவான வியாழணுக்கு வேறு வேலையே இல்லையா என்ன? பிரஹஸ்பதி கோபித்து கொள்ள போகிறார்.

4. குருஷேத்ரத்தில் நடந்த போரில், குந்தி தேவியின் மைந்தர்கள் பயன்படுத்திய ஆயுதங்களில் (அஸ்திரங்கள்/astras) எந்த மைந்தனின் ஆயுதம் மிகவும் ஆற்றல் வாய்ந்தது?
பதில்: அருச்சுனன் பாசுபதாஸ்திரத்தைப் பெற்றாலும் அதை உபயோகித்ததாகத் தெரியவில்லை. ஆனால் பிரும்மாஸ்திரம் உபயோகித்தான். அதைவிட அதிக சக்தி அஸ்திரம் கிடையாது. எப்போது உபயோகித்தான்? அஸ்வத்தாமன் பாண்டவ வம்சத்தை அழிக்க பிரும்மாஸ்திரம் விட அவனுக்கு எதிர் பிரும்மாஸ்திரம் அருச்சுனனும் விட, வியாசரும் நாரதரும் இரு அஸ்திரங்களையும் தற்காலிகமாக தடுத்து நிறுத்தி அவற்றைத் திருப்பிப் பெறுமாறு அவ்விருவரிடமும் கூறினர். அருச்சுனன் உடனே அதைத் திரும்பப் பெற்றான். அசுவத்தாமனால் அது இயலவில்லை. அதன் பலனாக உத்திரையின் கருவுக்கு அபாயம் ஏற்பட்டது. கிருஷ்ணரால் கரு காப்பாற்றப்பட்டது. அஸ்வத்தாமனோ தீராப்பழியுடன் இன்னமும் உயிருடன் அலைந்து கொண்டிருக்கிறான். ஆக சக்தி வாய்ந்த அஸ்திரத்தை விட்டது அருச்சுனன். அதை திரும்பப் பெற்றதும் அவன் சாதனையே. இதுவரை யாரும் அதை செய்ததாக எனக்கு நினைவில்லை.

5. தற்கால "கலியுக பெண்ணொருத்தி" தற்பொழுது உள்ள சமூக நிலையில் "துவாபர யுக திரெளபதியைப்" போல் பஞ்ச பாண்டவர்களுடன் வாழ இயலுமா?
பதில்: திபெத்தில் சில வகுப்புகளில் இன்னமும் அவ்வாறு வாழ்பவர்கள் உள்ளனர். இதற்கு பெயர் polyandry. அதாவது ஒரு குடும்பத்தில் நான்கைந்து அண்ணன் தம்பிகள் இருப்பின் அண்ணனின் மனைவியே எல்லோருக்கும் மனைவி.

6. குருஷேத்ரப்போருக்கு பின் கெளரவர்களின் படையில் உயிர் பிழைத்தவர்கள் யார் யார்?
பதில்: அசுவத்தாமா, கிருபாச்சாரியார் மற்றும் கிருதவர்மர். துரியனை பீமன் வீழ்த்தியதற்கு பழி வாங்க அசுவத்தாமன் பாண்டவர் பாசறைக்கு அன்றிரவு சென்று எல்லோரையும் தூங்கும்போதே கொல்கிறான். கிருஷ்ணனின் சமயோசித செயலால் பாண்டவர்கள் தப்பிக்கின்றனர். கிருபாச்சாரியார் அசுவத்தாமனின் மாமா. கிருத வர்மரோ கண்ணனின் நாராயண சேனையைச் சேர்ந்தவர். அச்சேனையை கிருஷ்ணர்தான் துரியனுக்கு அளித்தார். ஆக யோசித்து பார்த்தால் மகாபாரதத்தில் இம்மாதிரி பல தர்ம சங்கட விஷயங்கள் உண்டு.

7. யூத குலத்தில் பிறந்த இயேசு (ஈஸா அலை) அவர்கள் யூத குருமார்களை எதற்க்காக எதிர்த்தார்கள் எனத் தெரியுமா?
பதில்: யூத குருமார்கள் வெறும் சடங்கு சம்பிரதாயங்களில் மட்டும் மனதை செலுத்தி உண்மையான பக்தியை பின்னுக்குத் தள்ளினர் என்பதில் ஈஸா அலைக்கு கோபம். ஆகவே அவர்களை கோவிலிலிருந்து விரட்டினார்.

8. இயேசு (ஈஸா அலை)அவர்களின் தற்போதைய நிலை என்னவென்று தெரியுமா?
பதில்: கடவுளின் குமாரன் அவர் கடவுளுடந்தான் இருப்பார் என நம்புகிறேன். அவரைப் பற்றி ஒரு கற்பனைக்கதை ஒரு பிரெஞ்சு எழுத்தாளர் எழுதியுள்ளார். அது பற்றி பதிவு போட்டுள்ளேன்.

9. யுக முடிவு அல்லது ஊழிப்பிரளயத்திற்க்கு முன்னால் இயேசு (ஈஸா அலை) அவர்கள் பூமிக்கு இரண்டாம் வருகை புரிவதை எந்த அளவு நம்புகிறீர்கள்?
பதில்: நான் ஹிந்து மதத்தில் கூறியுள்ள பிரளயத்தை நம்புகிறேன். அதற்கு மேல் கூற விரும்பவில்லை.

10. முஹம்மது (ஸல்) அவர்களின் பிறப்பிற்க்கு முன் அரேபிய தேச மக்கள் எதை முதன்மை கடவுளாக வணங்கி கொண்டிருந்தனர்?
பதில்: நூற்றுக்கணக்கான கடவுள்களை வணங்கியதாக படித்துள்ளேன். அதற்கு மேல் தெரியாது.

11. தற்போது அரபுதேசத்திலுள்ள அரபுக்களால் கடைப்பிடிக்கப்படும் யூதர்களின் மீதான இனவெறியானது முஹம்மது (ஸல்) அவர்களின் நடைமுறையா?
பதில்: முஹம்மது ஸல் இருக்கும்போது யூதர்கள் இவ்வளவு சக்தி வாய்ந்தவர்களாக இல்லை. ஆகவே அவர்களை முகம்மது ஸல் அச்சம் கொள்ளவேண்டிய எதிரிகளாகப் பார்த்திருக்க மாட்டார் என்பதே என் எண்ணம்.

12. முஹம்மது (ஸல்) அவர்கள் மரணித்த போது அவர்கள் உணவுக்காகக் கடன் வாங்கிய கோதுமைக்காக அவர்களின் இரும்புக் கவசம் யாரிடம் அடமானம் வைக்கப்பட்டிருந்தது?
பதில்: தெரியாது.

13. இயற்கை பேரழிவுகளின் போது ஒற்றுமையடையும் மனித இனம் (உ.ம் - 2004 சுனாமி) சில மாதங்களுக்கு பிறகு மறுபடியும் தன் இன இரத்தத்தையே ஏன் மண்ணில் சிந்த வைக்கின்றது?
பதில்: அதுதான் மனித இயற்கை. சுனாமி போன்ற பேரழிவுகள் ஏற்படும்போது மனிதன் இயற்கை முன்னால் தான் ஒரு தூசு என்பதை அறிகிறான். அப்போது ஏற்படும் அச்சத்தை சகமனிதர்களுடன் ஒட்டி உறவாடி தவிர்த்து கொள்கிறான். அபாயம் நீங்கியவுடன் பழைய குருடி கதவைத் திறடி கதைதான். மயான வைராக்கியம் என்று ஒரு விஷயம் உண்டு. அதாவது யாராவது மரணமடைந்த பிறகு சுடுகாட்டுக்கு சென்று பிணத்துக்கு எரியூட்டி அடுத்த நாள் எலும்பு பொருக்கும்போது, சே இதுதானா வாழ்க்கை, ஒரே நாளில் பிடி சாம்பலாகி விட்டானே இறந்தவன். அதற்கு முன்னால் சொத்து சுகங்கள் பெற என்னவெல்லாம் செழ்திருக்க மாட்டான் அவன்? அத்தனையும் இதற்குத்தானா என்ற எண்ணம் வந்து விரக்தி ஏற்படும். வீட்டுக்கு வந்து குளித்து விட்டு விட்டத்தைப் பார்த்த வண்ணம் அமர்வான். ஆனால் அன்று இரவே மனைவியிடம் சரியாக சமையல் செய்யவில்லை என்பது குறித்து சண்டை போடுவான்.

14. தற்போது ஏற்ப்பட்ட பொருளாதார மந்தநிலைக்கு காரணம் முதலாளித்துவமா? அல்லது அதை நிர்வாகித்த மனிதர்களா?
பதில்: முதலாளித்துவத்தின் பாடங்களை மறப்பதால் ஏற்படும் விளைவுகள்தான் இவை. இப்போதைய பொருளாதார நெருக்கடி ஏற்பட்டதே சகட்டுமேனிக்கு கடன்களை அள்ளித் தந்ததால்தானே. அடிப்படை பொருளாதார விதிகள் தெரிந்த பின்னும் அதைக் கடைபிடிக்காவிட்டால் இப்படித்தான் ஆகும்.

15. நீங்கள் கணினியை முதலில் எங்கே பார்த்தீர்கள்? கணினியை எப்போது இயக்கினீர்கள்? சொந்தமாக கணினியை எப்போது வாங்கினீர்கள்?
பதில்: கணினியைப் பார்த்தது 1991-ல். ஐடிபிஎல்-லில் அப்போது இருந்தேன். 1993-ல் விருப்ப ஓய்வு பெற்று 2001 வரை தில்லியிலேயே இருந்த போது எனது வாடிக்கையாளர் அலுவலகங்களில் பார்த்திருக்கிறேன். ஆனால் இயக்கியதில்லை. ஆகவே 2001-ஜூலையில் டில்லியிலிருந்து நிரந்தரமாக சென்னைக்கு குடிபுகுந்தபோது எனக்கு கணினி பற்றிய அறிவு பூஜ்யமே. அதுவரை நான் கையால் எழுதித்தரும் மொழிபெயர்ப்புகளை ஏஜன்ஸியின் தட்டச்சுக்காரர்கள் தட்டச்சு செய்து கொடுக்க அவற்றை பிழைதிருத்துவதுடன் என் வேலை முடிந்து விடும். சென்னை வந்த பிறகும் அதே கதைதான் தொடர்ந்தது, ஒரே ஒரு சிறு மாற்றத்துடன். மின்னஞ்சல் முகவரி எடுத்து, டில்லியிலிருந்து வாடிக்கையாளர் கோப்புகளை மின்னஞ்சல்களுடன் இணைப்பாக அனுப்ப அதை இங்கு தரவிறக்கம் செய்வித்து, காகிதங்களில் அச்சிடச்செய்து, அவற்றின் மொழிபெயர்ப்பை கைகளால் எழுதி, மறுபடியும் தட்டச்சு செய்வித்து என்றெல்லாம் காலம் கடந்ததை பற்றி இப்பதிவில் போட்டுள்ளேன்.
எல்லா விஷயங்களும் ஒரு நாளைக்கு முடிவுக்கு வரத்தானே வேண்டும். எனக்காக தட்டச்சு செய்த அந்த இரு இளைஞர்களும் தத்தம் வேலைகளில் ரொம்பவுமே பிசியாகிப் போனதில் எனது மொழிபெயர்ப்பு வேலைகள் சற்றே பாதிக்கப்பட்டன. சரி என்னதான் ஆகிறது என்பதைப் பார்த்து விடலாமே என்று எனது கணினிகுரு முகுந்தனின் துணையோடு ஃபிப்ரவரி 5, 2002-ல் கணினி வாங்கி, வி.எஸ்.என்.எல்.-ன தொலைபேசி வழி இணைய இணைப்பைப் பெற்றேன். எலிக்குட்டியைப் பிடித்து க்ளிக் செய்யக்கூட தடுமாற்றமே. வாங்கி நிறுவிய அன்றே ஒரு மொழிபெயர்ப்பு வேலை ஆங்கிலத்திலிருந்து ஃபிரெஞ்சுக்கு. எக்ஸல் கோப்பில் செய்ய வேண்டிய வேலை. முகுந்தன் எனக்கு கோப்பை திறந்து அதை இப்படிச் சேமி என்ற ஏற்பாட்டில் ஒரு நகலெடுத்து, இரண்டு பக்கங்களையும் ஒன்றன் மேல் ஒன்றாய் அடுக்கி வேலை செய்ய டிப்ஸ்கள் தந்ததில் நானே ஃபிரெஞ்சில் தட்டச்சு செய்தேன். வேலை மெதுவாகத்தான் போயிற்று. இருப்பினும் ஸ்பெல்லிங் தவறுகள் என்னிடம் சாதாரணமாக குறைவாகவே வரும் என்பதால் பிழைதிருத்தும் வேலை எளிதாயிற்று.
பிறகு ஒரு ஆண்டு கழித்து மொழிபெயர்ப்பாளர்கள் தலைவாசல் ப்ரோஸ்.காம்-ல் சாதாரண உறுப்பினனாகச் சேர்ந்து அதன் செயல்பாடுகளில் பங்கேற்று எனது மொழிபெயர்ப்பு வாடிக்கையாளர்களை அதிகமாக்கிக் கொள்ள முடிந்தது. சில மாதங்களில் டிஷ்நெட்டின் அகலப்பட்டை இணைப்பையும் பெற்றேன்.
இப்போதைய நிலை அப்போதைய நிலையை விட பல மடங்கு உயர்ந்துள்ளது. ப்ரோஸ்.காம்-ல் ப்ளாட்டினம் உறுப்பினன் ஆகவும் முடிந்தது. எல்லாம் என் உள்ளங்கவர் கள்வன் என் அப்பன் தென்திருப்பேரை மகரநெடுங்குழைகாதனின் அருளே.
ஆக, ஒரு புது டோண்டு உருவானான் என்று வைத்து கொள்ளலாம். ஃபிப்ரவரி 5, 2002 அன்றுதான் அவனுக்கு பிறந்த நாள்.

16. உங்களின் தமிழ் தட்டச்சு முறை என்ன? ஏன் அதை உபயோகப்படுத்துகிறீர்கள்?
பதில்: ஃபோனெடிக் முறை தட்டச்சுதான் உபயோகிக்கிறேன். அதுதான் எனக்கு சௌகரியமாக உள்ளது. ஆங்கிலம், ஜெர்மன், பிரெஞ்சு என்று அடிப்பதற்கு என்னிடம் ஒரு ஜெர்மானிய தட்டச்சு பலகை உண்டு. தமிழில் அடிக்க என்.எச்.எம் மென்பொருள் உபயோகித்து ஆல்ட்+2 வைத்து அடித்தால் தமிழ் தன்னைப் போல் வருகிறது. தமிழ் 99 என்பது எனக்கு இப்போதைக்கு தேவையில்லை. யளனகபக முதலிலேயே டிபாசிட் அவுட். அன்செலக்டட்.

17. பிராமணர்கள் (or) பார்ப்பான், கிறிஸ்துவர்கள் (or) மிஷநரி , முஸ்லிம்கள் (or) துலுக்கன் ஆகியோர்க்கிடையான ஒற்றுமை, வேற்றுமை என்ன?
பதில்: உணவுப் பொருட்களில் பால் தயிர் முதலியவற்றை சமைத்த உணவுடன் சேர்த்து வைக்கக்கூடாது என எங்கள் பெரியவர்கள் கூறுவார்கள். அவ்வாறு கலப்பதை பத்து எனக் கூறுவார்கள். இதே தடை யூதர்களுக்கு உண்டு. நான் அறிந்த இசுலாமியருக்கும் அப்படித்தான் இருக்க வேண்டும் ஏனெனில் யூதர்களையும் இசுலாமியரையும் நான் ஒருவருக்கொருவர் கண்ணாடி பிம்பங்களாகத்தான் பார்க்கிறேன். கிறித்துவர்களில் அவ்வாறு இருந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை, ஏனெனில் அவர்களும் மூசா நபியின் போதனைகளை உணவு விஷ்யத்தில் பின்பற்றுவதாக நினைக்கிறேன். இன்னொரு ஒற்றுமை தத்தம் கடவுள்களிடத்தில் பக்தி வைப்பது. வேற்றுமை என்று பார்த்தால் பல உண்டு.

18. நீங்கள் ஒரு பிராமணரா (or) பார்ப்பானா?
பதில்: எங்கே பிராம்மணன் என்ற புத்தகத்தில் சோ அவர்கள் கூறியபடி பார்த்தால் நான் உண்மை பிராம்மணன் இல்லை என்றுதான் கூற வேண்டும். அதே சமயம் தஸ்தாவேஜுகளில் நான் பார்ப்பனனாகக் காட்டப்படுகிறேன். பிரச்சினையில்லை.

அன்புடன்,
டோண்டு ராகவன்

15 comments:

dondu(#11168674346665545885) said...

தமிழ்மணம் செயலில் இருக்கும்போதே இப்பதிவை வெளியிட்டு அதில் சேர்க்க நினைத்ததால் பப்ளிஷிங் நேரத்தை முன்னால் கொண்டு வந்து விட்டேன். 08.43-க்கு என்ன நிலைமை இருக்குமோ யாருக்கு தெரியும்?

அன்புடன்,
டோண்டு ராகவன்

Unknown said...

கேள்விக் கணைகள் அதிகமாய் தொடுக்க பட்டுள்ளதுபோல் இருக்கிறது.

இனி வாரத்திற்கு இரண்டு கேள்வி பதில் வருமா?

1.மற்றவர்களுக்கு
2.முகம்மது இஸ்மாயில் அவர்களுக்கு

dondu(#11168674346665545885) said...

இல்லை நக்கீரன் பாண்டியன் அவர்களே. இஸ்மாயில் அவர்கள் கேட்டு கொண்டதால் தனிப்பதிவு போட்டேன். இனிமேல் அவரோ வேறு எவரோ யார் கேட்டாலும் வாரம் ஒரு முறை பதிவுதான், சாதாரண நிலையில்.

வேறு சூழ்நிலைகள் வந்தால் பார்ப்போம். ஏற்கனவே சொன்னதுபோல கேள்விகள் வந்தால் பதிவு, இல்லையேல் இல்லை.

அன்புடன்,
டோண்டு ராகவன்

குடுகுடுப்பை said...

நல்லாதான் பதில் சொல்றீங்க, உங்க பேரையும் இழுத்து ஒரு பொருளாதார மொக்கை பதிவு போட்டிருக்கேன் முடிஞ்சா படிங்க.
வருங்கால முதல்வர்: அமெரிக்காவின் கோமணம் கிழிந்தது.

Vijayashankar said...

Nice answers Sir.

Anonymous said...

How to install unicode fonts. I have down loaded E-kalappai , Key man fonts, but I could not type in transileration method. Is there unicode transileration fonts avaialable in the net. I am very new to Tamil pettai. Please extend your hand for me. My mail ID anbudan@emirates.net.ae

dondu(#11168674346665545885) said...

Dear Anbudan,

You have downloaded ok, but what have you installed it? Unzip the file if applicable and follow the instructions of the installation wizard. They are self-explanatory. Once you install it, alt+2 should allow you to type in Tamil unicode fonts. Pressing again alt+2 should get you back to English and so on.

Regards,
Dondu N. Raghavan

Anonymous said...

முகம்மது இஸ்மாயில் அவர்கள் இந்தப் பதிவை பார்க்கவில்லை போலும்.

ksvaradhan75 said...

I followed your topics published on 16 and 17th of Nov. Thought provoking. Only difficulty in following the tamil scripts between KURIL and NEDIL. i SHALL TRY TO COMMENT ON THE CONTENTS IN DUE COURSE.

VARADHAN

dondu(#11168674346665545885) said...

நன்றி வரதன் அவர்களே. குறில் நெடிலில் என்ன பிரச்சினை?

அன்புடன்,
டோண்டு ராகவன்

Anonymous said...

Mr. Dondu,

>>Hair and finger nails grow even after death.

It's one of the popular myths and has been debunked recently. They appear to have grown due to dehydration. Please see the following link at the British Medical Journal for additional information and other popular myths.

http://www.bmj.com/cgi/content/full/335/7633/1288

- Ravi

Anonymous said...

One of the 100 Guvravas was among the survivors after the Gurukshetra battle. Yutusu, I think.

- Ravi

Anonymous said...

For fifth question: This happen in many parts of Africa, some Polynesian countries & some parts of South & East Asia.

Before the British banned it in 1860 the majority of Upcountry Sinhalese people of Sri Lanka were married this way. Some say it is still prevalent in some parts. I have also heard some Kerala people also marry this way.

dondu(#11168674346665545885) said...

@ரவி:
யுயுத்சு கௌவரவர்களில் ஒருவன் அல்ல. திருதாஷ்டிரனின் இன்னொரு மனைவிக்கு பிறந்தவன்.

அபிமன்யுவை எல்லோரும் ச்ய்ய்ந்து வதம் செய்தபோது அந்த அநீதியை எதிர்த்து யுத்தத்தை விட்டு வெளியேறினான்.

பாண்டவர்கள் அஸ்தினாபுரத்துக்கு வந்ததும் இந்திர பிரஸ்தத்தை பார்த்து கொள்ள யுயுத்சு நியமிக்கப்பட்டான்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

Muhammad Ismail .H, PHD., said...

GNU - The Truth is Alive: கேள்விகள் இங்கே, பதில்கள் அங்கே !!!

 

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது