1/28/2009

பதிவர் சுப்பையா அவர்களின் இடுகை தூண்டிய எண்ணங்கள்

இன்று எதேச்சையாக நண்பர் சுப்பையா அவர்களது அதிரவைத்த இளம் சந்நியாசி! பதிவை படிக்க நேர்ந்தது. வழக்கம்போல சுவாரசியமான இடத்தில் தொடரும் போட்டுவிட்டார். மேலே கதை எப்படி போகிறது என்பதை அறிய நானும் ஆர்வமாக உள்ளேன். நிற்க.

இம்மாதிரி வேஷம் இட்டு செல்வது என்பது பல முறை பல தருணங்களில் நடந்துள்ளது. காவியத்திலும் சரி சரித்திரத்திலும் சரி அது பலமுறை பதிவு செய்யப்பட்டுள்ளது. அவற்றில் ஒரு கதை எனக்கு நினைவுக்கு வருகிறது.

ஒரு பெரிய கொள்ளைக்காரன் இருந்தான். அரசரின் பொக்கிஷத்தை கொள்ளையடிக்க திட்டம் தீட்டினான். அதற்கு முதலில் அரசரின் நம்பிக்கையை பெற வேண்டும். தீர யோசித்துவிட்டு ஒரு சாமியார் வேடம் தரித்து ஊருக்கு வெளியே காட்டில் ஒரு குடில் அமைத்து வசிக்க முற்பட்டான். சில நாட்களில் அவனைப் பார்க்க பலர் வந்தனர். ஒருவரிடமும் அதிகம் பேசாமல் அவர்கள் சொல்வதை மட்டும் காது கொடுத்து கேட்டதில் பல விஷயங்களை கற்று கொண்டான். அவற்றில் பல அவனது தொழிலுக்கு உதவக்கூடிய துப்புகள். கடைசியாக அரசனும் வந்தான். அவனை வணங்கி தனது குறைகளைச் சொன்னான். இவனும் தனக்கு தோன்றிய ஆலோசனைகளை கூற அவையும் குருட்டாம்போக்கில் சரியாக ஒர்க் அவுட் ஆனதால் அரசன் இவனை மிக அதிகமாக நம்ப ஆரம்பித்தான்.

இப்போதுதான் அந்தக் கொள்ளைக்காரனே எதிர்பாராத திருப்பம் ஏற்பட்டது. தனது சுயநலத்துக்குத்தான் என்றாலும் அவன் விடாது நல்ல விஷயங்களையே கூறி வந்ததில் அவனது எண்ண ஓட்டத்தில் மாறுதலைத் தெரிவித்தன. சாதாரண நடிப்புக்கே இந்தப் பலன் என்றால் உண்மையாக திருந்தினால் என்னென்ன பலன்கள் உண்டு என்ற ரேஞ்சில் யோசிக்க ஆரம்பித்தான். அவனது ஒரிஜினல் நோக்கங்கள் தானாகவே மறைந்தன. பிறகு பெரிய சாதுவாக உருவெடுத்து பல் நாடுகளுக்கு சென்று பெரும் புகழ் பெற்றான்.

நம்பமுடியாத கதையாக இது சிலருக்கு தோன்றலாம். ஆனால் இம்மாதிரி நிகழ்ச்சிகள் பல இலக்கியத்தில் உண்டு.

சமீபத்தில் அறுபதுகளில் வந்த படம் தேவ் ஆனந்த் வகீதா ரெஹ்மான் நடித்த "Guide" கதையே இதுதான். சாதாரண ஏமாற்றுவேலைகளில் ஈடுபட்டு சிறை சென்ற ராஜு விடுதலை ஆனதும் கால்போன போக்கில் செல்ல, ஓரிடத்தில் தங்குகிறான். அவனை உள்ளூர் மக்கள் ஒரு சாதுவாக நினைத்து ஆதரவு அளிக்கின்றனர். அந்த ஊரில் பஞ்சம் வருகிறது. மழையே இல்லை. இவன் யதார்த்தமாக ஏதோ கூறப்போக, மழை வரும்வரையில் அவன் உண்ணாவிரதம் இருந்து தேவையானால் உயிரையும் விடத் தயார் என செய்தி பரவி, அவனது உண்ணாவிரதத்துக்கு ஏற்பாடு செய்யப்படுவதை கண்டு திடுக்கிடுகிறான். உள்ளூரில் உள்ள ஒரு குடியானவனிடம் அவன் தன்னைப் பற்றிய உண்மையை கூற அவனோ இதை சர்வசாதாரணமாகவே எடுத்து கொள்கிறான். வழிப்பறிகொள்ளை செய்து வந்த வால்மீகி பின்னால் ராமாயணம் எழுதியதை கூறுகிறான். நாட்கள் செல்லச் செல்ல ராஜுவும் நிகழ்ச்சிகளால் கவர்ந்து செல்லப்பட்டு கடைசியில் உயிர் துறக்கிறான். ஆனால் அவன் உயிர் பிரியும் தருவாயில் மழை பெய்ய ஆரம்பிக்கிறது. அவனது மனப்போராட்டங்களை காட்டும் இந்த காட்சியைப் பாருங்கள்.. படத்தின் முடிவில் அவன் இறக்கும் காட்சி ஒரு கவிதை.

[வசனங்கள் ஹிந்தியில் உள்ளன. அந்த மொழி புரிந்தவர்களுக்கு அந்த வசனத்தின் கம்பீரம் புலப்படும். தெரியாவிட்டாலும் பரவாயில்லை, விஷ்வலாக பார்ப்பதே ஓர் அனுபவம். இருந்தாலும் இப்படத்தின் ஆங்கில மொழியாக்கத்தின் ஒரு காட்சியும் தருவேன். ராஜுவின் அறிமுகம் இதில் உண்டு. எப்படி இருந்தவன் எப்படி ஆயிட்டான்னு பார்க்கலாம். பை தி வே இக்கதை ஆர்.கே. நாராயணனுடையது. அதன் தமிழாக்கத்தைத்தான் நான் படித்துள்ளேன்].

ஓக்கே பதிவின் விஷயத்துக்கே மறுபடியும் வருவேன். ராமாயணத்தில் ஓர் அருமையான காட்சி. அசோக வனத்தில் இருக்கும் சீதையை ஏமாற்ற ராவணனே ஏன் ராமனாக உருமாறி சீதையிடம் செல்லக்கூடாது என அவனது ராணிகளில் ஒருத்தி ஆலோசனை கூறுகிறாள். ராவணன் சலிப்புடன் கூறுகிறான், “எனக்கு மட்டும் அது தோன்றாமல் இருக்குமா? அதையும் செய்தேனே. ஆனால் என்ன ஆச்சரியம்? ராமனது ரூபத்தை எடுத்த பிறகு பிறன்மனை நோக்கா பேராண்மை எனக்கும் வந்து விட்டதே. இதென்ன முதலுக்கே மோசமாகப் போனது என துணுக்குற்று வேடத்தைக் களைந்தேன்”.

பொதிகை தொலைகாட்சியில் காந்தி ஜயந்திக்க்காக ஒரு நாடகம் போட்டார்கள். அதில் ஒரு நிகழ்ச்சி. உள்ளூர் குடிகாரன் ஒருவன் முகப் பொருத்தத்தை வைத்து காந்தியாக வேடம் போட வேண்டியிருந்தது. நாடக ரிகர்சல்கள் கிட்டத்தட்ட ஒரு மாதம் நடந்தது. அவனுக்கு கோச் செய்தவர் காந்தியடிகளின் பாத்திரம் நன்றாக தத்ரூபமாக வர வேண்டுமென எண்ணி அவனுக்கு காந்தியை பற்றி எல்லா விஷயங்களையும் அவன் மனதில் படுமாறு எடுத்துரைக்கிறார். நாடகம் முடிந்தது. ஆனால் அவன் பழைய வாழ்க்கைக்கு திரும்பவே இல்லை. குடிப்பழக்கத்தை அடியோடு விட்டான். இப்போது இது குறித்து பலர் கேள்விகள் கேட்கலாம். ஆனால் அந்த நாடகத்தை பொதிகையில் பார்த்தபோது என்னுள்ளே அக்கேள்விகள் வரவே இல்லை என்பதே நிஜம்.

Ellis Peters எனக்கு பிடித்த எழுத்தாளர். அவர் உருவாக்கிய பல பாத்திரங்களில் முக்கியமானது காட்ஃபேல் என்னும் பாதிரியார். அவர் ஒரு துப்பறியும் நிபுணர் கூட. அவர் வரும் கதைகளின் காலக்கட்டம் 12-ஆம் நூற்றாண்டாகும். அதில் ஒரு கதையில் Saint Winifred என்பவரது எலும்புகளை ஒரு சமாதியில் இட்டு அதை வழிபடுவதாக கதை வரும். ஆனால் நடந்ததென்னவென்றால் சமாதியில் இருந்தவை Saint Winifred-ன் எலும்புகள் அல்ல. அவை ஒரு ஏமாற்று பேர்வழிக்கு சொந்தம். அது தெரியாது மக்கள் வந்து வழிபடுகின்றனர். பல அற்புதங்களும் நிகழ்கின்றன. உண்மை எது என்பது சில நாட்களுக்கு பிறகு அதன் முக்கியத்துவத்தை இழந்து விட்டது. ஆனால் உண்மை என நம்பி பிரார்த்தனை செய்தது மட்டும் பலிக்கிறது. கதையில் என்னவோ இது போகிறபோக்கில் கூறப்பட்டாலும் அதன் தாக்கம் பலமாகவே இருந்தது.

ஓக்கே சுப்பையா அவர்களது பதிவில் கூறப்பட்ட கதை எப்படி போகிறது என பார்க்கலாம்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

11 comments:

வால்பையன் said...

ரொம்பநாளைக்கு(உங்க சமீபத்தில்) முன்னாடி பார்த்த ஒரு சினிமா,

ரஜினியிம், கராத்தே மணியிம் நடித்திருப்பார்கள்.
இரண்டில் ஒருவன் திருடன், ஒருவன் நல்லவன்.

நல்லவன் திருடனுக்கு இரவு முழுவதும் புத்திமதி சொல்லுவான்.
திருடன் திருந்து விடுவான். காலையில் எழுந்து பார்த்தால் நல்லவன் எல்லாவற்றையும் திருடி சென்றிருப்பான்.

ஒன்றின் மேல் பற்று கொண்டு மாறுவது நல்ல விசயதில் மட்டுமல்ல, கெட்ட விசயதிலும் நடக்கிறது.
இருந்தாலும் நல்ல விசயங்களாஇ மட்டும் எடுத்து கொள்ளும் உங்களின் பாசிடிவ் அப்ரோச் பாராட்டதக்கது

நாமக்கல் சிபி said...

//பொதிகை தொலைகாட்சியில் காந்தி ஜயந்திக்க்காக ஒரு நாடகம் போட்டார்கள். அதில் ஒரு நிகழ்ச்சி. உள்ளூர் குடிகாரன் ஒருவன் முகப் பொருத்தத்தை வைத்து காந்தியாக வேடம் போட வேண்டியிருந்தது. நாடக ரிகர்சல்கள் கிட்டத்தட்ட ஒரு மாதம் நடந்தது. அவனுக்கு கோச் செய்தவர் காந்தியடிகளின் பாத்திரம் நன்றாக தத்ரூபமாக வர வேண்டுமென எண்ணி அவனுக்கு காந்தியை பற்றி எல்லா விஷயங்களையும் அவன் மனதில் படுமாறு எடுத்துரைக்கிறார். நாடகம் முடிந்தது. ஆனால் அவன் பழைய வாழ்க்கைக்கு திரும்பவே இல்லை. குடிப்பழக்கத்தை அடியோடு விட்டான். இப்போது இது குறித்து பலர் கேள்விகள் கேட்கலாம். ஆனால் அந்த நாடகத்தை பொதிகையில் பார்த்தபோது என்னுள்ளே அக்கேள்விகள் வரவே இல்லை என்பதே நிஜம்//

இந்த நாடகம் நானும் பார்த்திருக்கிறேன்!

நிஜமா அற்புதமான கதை அது!

ரிஷபன்Meena said...

காதலிக்காக காந்தியைப் பற்றி தெரிந்து கொள்ள ஆரம்பித்த முன்னாபாய் மாறியது போலத் தான். லேஹே ரஹோ முன்னா பாய்- அற்பதமான படம்.

Subbiah Veerappan said...

////இன்று எதேச்சையாக நண்பர் சுப்பையா அவர்களது அதிரவைத்த இளம் சந்நியாசி! பதிவை படிக்க நேர்ந்தது. வழக்கம்போல சுவாரசியமான இடத்தில் தொடரும் போட்டுவிட்டார். மேலே கதை எப்படி போகிறது என்பதை அறிய நானும் ஆர்வமாக உள்ளேன்/////

வணக்கம் டோண்டு சார்! நீங்கள் எனது படிவைப் படித்துவிட்டு, அதைச் சில சுவையான தொடர்புச் சம்பவங்களுடன் இடுகையாக வலை ஏற்றியமைக்கு நன்றி!

கதை உங்களுடைய ஆவலையும் 'எதிர்பார்ப்பையும்' சற்றும் குறைக்காமல்
தொடரும் (இன்னும் ஒரு பதிவு மட்டுமே!)

Sri said...

நான் எங்கேயோ படித்தது இது-நாம் எந்த விஷயத்தில் கவனம் செலுத்துகிறோமோ அது நம்மிடம் வளரும். :-)

Anonymous said...

மெய்ப் பொருள் நாயணார் கதையில் மட்டும் இந்த லாஜிக் கொஞ்சம் நொண்டுது இல்லையா ?

வாலில்லாத தம்பி

கபீஷ் said...

@வாலில்லாத தம்பி
க க போ

Anonymous said...

Qestion for 29-01-2009

ADMAK leader miss.jeyalalitha has told that her word would not be heard by liberation tigers to end the war in srilanka and she requested DMK leader to do the needful for this.
How is it?

Tech Shankar said...

அந்தப் படத்தின் பெயர் ‘ரங்கா’

//நல்லவன் திருடனுக்கு இரவு முழுவதும் புத்திமதி சொல்லுவான்.
திருடன் திருந்து விடுவான். காலையில் எழுந்து பார்த்தால் நல்லவன் எல்லாவற்றையும் திருடி சென்றிருப்பான்.

Anonymous said...

//வழிப்பறிகொள்ளை செய்து வந்த வால்மீகி பின்னால் ராமாயணம் எழுதியதை கூறுகிறான்.//

fantastic
இந்து என்றால் திருடன் கதை மாதிரி இருக்கே!

//காந்தியாக வேடம் போட வேண்டியிருந்தது. நாடக ரிகர்சல்கள் கிட்டத்தட்ட ஒரு மாதம் நடந்தது. அவனுக்கு கோச் செய்தவர் காந்தியடிகளின் பாத்திரம் நன்றாக தத்ரூபமாக வர வேண்டுமென எண்ணி அவனுக்கு காந்தியை பற்றி எல்லா விஷயங்களையும் அவன் மனதில் படுமாறு எடுத்துரைக்கிறார். நாடகம் முடிந்தது. ஆனால் அவன் பழைய வாழ்க்கைக்கு திரும்பவே இல்லை.//


நம்ம அரசியல்வாதிகளுக்கும் இந்த மாதிரி காந்தி வேஷம் போட்டு நடிக்க வைக்கலாமா? கொஞ்சம் பேராவது நல்லவங்களா.... !@#$ அட சே!@# ஆசைய பாரு....

நாமக்கல் சிபி said...

//நம்ம அரசியல்வாதிகளுக்கும் இந்த மாதிரி காந்தி வேஷம் போட்டு நடிக்க வைக்கலாமா? கொஞ்சம் பேராவது நல்லவங்களா.... !@#$ அட சே!@# ஆசைய பாரு....//

:))

அப்படி ஏதாச்சும் செஞ்சி தொலைச்சிடாதீங்க!

காந்தி கெட்டுப் போயிடுவார்!

 

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது