1/04/2009

அறத்துக்கே அன்பு சார்பென்ப அறியார் மறத்துக்கும் அஃதே துணை

திருக்குறள் கால எல்லைகளை மீறியது் என்று கூறுவதற்கு சரியான சான்றாக இக்குறளைக் கூறலாம். அது பற்றி இங்கு இப்போது ஏன் பேச வேண்டும் என்றால் அவ்வாறு செய்யத் தூண்டியது ஜெயமோகனின் இறைவிருப்பம் என்ற தலைப்பில் வந்துள்ள இடுகையே. முதலில் அதை பார்ப்போம், பிறகு டோண்டு ராகவன் வருவான்.

மலையாள கவிஞர் வயலார் ராமவர்மா பற்றியது இந்த இடுகை. அதில் என்னைக் கவ்ர்ந்த வரிகள் கீழே:

“வயலார் ராமவர்மா கண்ணதாசனின் நெருக்கமான நண்பர். இருவருக்கும் பொதுவான பல வாழ்க்கைக்கூறுகள் இருந்தன. மது மாது தட்டுகெட்ட வாழ்க்கை. இருவரும் சேர்ந்து மதுவருந்தும் மாதுக்களை கோண்டாடும் வழக்கமும் இருந்தது. ஆனால் கண்ணதாசனின் பாடலுக்கும் வயலார் ராமவர்மாவின் பாடலுக்கும் நிறைய வேறுபாடுகள் உண்டு. கண்ணதாசனிடம் ஒரு தத்துவார்த்தத் தன்மை உண்டு. அது அவரது பாடல்களுக்கு ஒரு செவ்வியல்தன்மையை அளித்தது. மாறாக வயலார் ராமவர்மா கற்பனாவாதத்தில் ஊறியவர்.

வயலார் ராமவர்மாவின் கவிதைகள் வைரங்களை செங்கற்களாக அடுக்கிக் கட்டி மேக விதானம் இடப்பட்ட மாளிகை போல மண்ணில் சற்றும் கால்பாவாத கற்பனாவாத எழுச்சிகள். காமமும் இயற்கை வருணனையும் கற்பனையின் பொன்னிலத்தில் ஒன்று கலந்தவை. பாடல் என்ற வடிவில் அவற்றுக்கு இருக்கும் கனவுத்தன்மையே பெரும் கவற்சியாக ஆகிறது. அத்துடன் அழகிய சம்ஸ்கிருதச்சொற்கள் கலந்து கம்பீரமான ஒலியழகை அளிக்கின்றன.

நீலகிரியுடே சகிகளே ஜ்வாலாமுகிகளே
ஜோதிர்மயியாம் உஷஸினு
வெள்ளீச்சாமரம் வீசும் மேகங்ஙளே
சுப்ர·பாதம் சுப்ர·பாதம்!

[நீலமலையின் தோழிகளே, சுடர்முகத்தவர்களே!
ஒளிவடிவாம் புலரிமகளுக்கு
வெள்ளிச்சாமரம் வீசும் மேகங்களே!
நல்விடியல்! நல்விடியல்!]

என்று அவரது கவிதை கிட்டத்தட்ட சம்ஸ்க்ருத சுலோகம்போலவே ஒலிக்க்கும். சலீல் சௌதுரி தவிர பிறர் அவரது வரிகளுக்குத்தான் இசையமைத்திருக்கிறார்கள். இசைக்குப் பாடல்கள் அமைக்கும்போதுகூட

”இவிடே காற்றினு சுகந்தம்?
இதிலே போயொரு வசந்தம்!
வசந்தத்தின் சுவர்ண தேரில் இருந்நதாரு?
வாஸர ஸ்பனத்தின் தோழிமாரு!

[இங்கே காற்றுக்கு நறுமணம்?
இவ்வழியாகச் சென்றதொரு வசந்தம்!
வசந்தத்தின் பொற்தேரில் இருந்தது யார்?
இளமைக்கனவின் தோழியர்!]

என்று சகஜமாக நகர்ந்தது அவரது கவிதை. காமத்தை பலசமயம் அத்துமீறிக்கூட அவர் எழுதியிருக்கிறார். அதை சம்ஸ்கிருதம் மறைத்துவிடும். ‘ஒவ்வொரு மாமிசமலரும் இதழ்விட்டு விழித்தெழும் இந்த இரவில்…’, ‘ஈர உடையணிந்து நீ பூஜைக்கு வருகையில் நீலக்கார்வண்ணனாக நிற்பேன் நான்’ போன்ற வரிகளை சாதாரணமாக அவர் கவிதைகளில் காணலாம். நிலவு அவருக்கு பெரியதோர் படிமம். ஓடம், காயல், நிலவு மூன்றும் கலந்த ஒரு காட்சி சித்திரம் அவரது பல பாடல்களில் மீண்டும் மீண்டும் வருகிறது. ‘எத்தனை கறந்தாலும் அகிடு வற்றாத ஒரு கருநீலப் பெரும்பசு’ அவருடைய நிலாவானம்.

சமீபத்தில் வயலார் ராமவர்மாவின் மனைவி பாரதி தம்புராட்டி கணவரைப்பற்றி எழுதிய ஓரு சிறு நூலைப் படித்தேன். [இந்திர தனுஸின் தீரத்து'.. ஸைந்தவ புகஸ் ] அவர் எழுத்தாளர் அல்ல. ஆகவே சும்மா எழுதிச்செல்கிறார். வர்ணனைகள் இல்லை. நுண்விவரிப்புகள் இல்லை. வெறும் தகவல்கள் , நினைவுகள். வயலார் 1975ல் தன் 48 ஆவது வயதில் வயலார் ராமவர்மா மறைந்தார். மறைவில் இருந்து தொடங்குகின்றன நினைவுகள். சமீபத்தில் இத்தனை உள்சுழிகள் கொண்ட ஒரு வாழ்க்கை வரலாற்றை வாசிக்க நேர்ந்ததில்லை”.

“வயலார் ராமவர்மாவுக்கும் அம்மாவுக்குமான உறவின் விசித்திரங்களை தொட்டுத்தொட்டுச் செல்கிறது பாரதியம்மாவின் குறிப்புகள். அம்மாவில் நிழலில் வளர்ந்தவர் வயலார். அம்மா சொல்லை ஒரு கணமேனும் தட்டமுடியவில்லை அவரால். அம்மாவுக்கு தன் மகனை எவரிடமும் பகிர்ந்துகொள்ள முடியவில்லை. சற்று கூட. வயலார் ராமவர்மா பிரபல மலையாள எழுத்தாளர் காரூர் நீலகண்ட பிள்ளையின் சகோதரியை மணக்க விரும்பினார். ஆனால் அம்மாவுக்கு ஒரு நாயர் பெண்ணை அவர் மணப்பது பிடிக்கவில்லை. ஆகவே அந்த எண்ணத்தையே உதறிவிட்டார்.

அம்மாவின் கூற்றுக்கு இணங்க பாரதியின் அக்காவைத்தான் முதலில் மணம் புரிந்தார் வயலார் ராமவர்மா. கிட்டத்தட்ட நான்குவருடங்கள் கழித்துத்தான்தான் அம்மா தன் மகனுக்கு ஏன் குழந்தை பிறக்கவில்லை என்று யோசிக்க ஆரம்பித்தார். ஒவ்வொரு மாதமும் கடைசி நாளில் இரவில் பாத்திரங்களை எல்லாம் கழுவி வைத்துவிட்டுப் படுக்கப்போகும்முன்பு தான் வீட்டு விலக்காகிவிட்டதாகச் சொல்வது பாரதியின் அக்காவின் வழக்கம். அதை சந்தேகப்பட்ட அம்மா அவளை மிரட்டிக்கேட்கும்போது உண்மை வெளியாகிறது. அவளுக்கு மாதவிலக்கே வருவதில்லை. அவளால் தாய்மை அடைய முடியாது.

மனைவியை ஆழமாக நேசித்த வயலார் ராமவர்மா தன் அம்மாவின் கட்டளைக்கு ஏற்ப அவளை விவாகரத்து செய்கிறார். அவள் அதற்குச் சம்மதிக்க மறுக்கிறாள். அழுகிறாள். ஆனால் கட்டாயப்படுத்தி சம்மதிக்க வைக்கிறார்கள். அவளை பிறந்தகத்துக்குக் கொண்டுவந்து விடுவிடுகிறார்கள். அங்கே உள்ளறைகளின் இருட்டில் வாழ்ந்து அவள் மறைந்தாள். பாரதியை வயலார் இரண்டாவதாக மணக்கவேண்டும் என்று அம்மா ஆணையிடுகிறாள். வயலார் ராமவர்மாவை எண்ணி காத்திருந்த காரூர் நீலகண்டபிள்ளையின் சகோதரி மீண்டும் திருமண ஆலோசனையுடன் வந்தபோதும் அம்மா சம்மதிக்கவில்லை.

பாரதியை வயலார் ராமவர்மா மணக்கிறாள். பாரதிக்கு வயலார் ராமவர்மாவை அவ்வளவாகப் பிடிக்கவில்லை. ஆனால் வேறுவழியே இல்லை. வேறு ஒரு பெண் வயலார் ராமவர்மாவை மணந்தால் அவரை தன்னால் பார்க்கக்கூட முடியாது போய்விடுமே என்று அக்கா அழுதுகொண்டு சொன்னதனால் பாரதி சம்மதிக்கிறாள். ஒரு முறை மூத்தமனைவியை ஒரு திருமண நிகழ்ச்சியில் பார்த்து விட்டு வந்த வயலார் பாரதியிடம் அதைப்பற்றிச் சொல்லி கண்ணீர் வடிக்கிறார்.

அப்போது வயலார் ராமவர்மா திரையுலகில் உச்சத்தில் இருந்தார். எப்போதாவது வீட்டுக்கு வருவதோடு சரி. வந்தால் அம்மாவுடன் மட்டுமே பேசமுடியும். அவர் தன் மனைவியுடன் பேசுவது வெளியே செல்வது எதுவுமே அம்மாவுக்குப் பிடிக்காது. பாரதி வயலார் ராமவர்மாவுக்கு சமைத்துப்போடக்கூட அம்மா சம்மதிப்பதில்லை. கடிதங்கள்கூட வயலார் ராமவர்மா அம்மாவுக்குத்தான் எழுதினார். பெயர்கூட எழுதமாட்டார். ‘அம்மா, ராகவப்பறம்பு, வயலார், சேர்த்தலா’ என்றுதான் விலாசம் எழுதுவார். தொலைபேசியில் தினமும் அம்மாவிடம் பேசுவார் வயலார் ராமவர்மா, ஒருமுறைகூட மனைவியிடம் பேசியதில்லை.

சமையலறையிலேயே வாழ்ந்து குழந்தைகளை வளர்த்து வாழ்க்கையைக் கடந்து வந்தார் பாரதி. நினைவில் சில பயணங்கள் சில அபூர்வ தினங்கள் அல்லாமல் வயலார் ராமவர்மாவுடனான வாழ்க்கையின் ஒளிமிக்க கணங்களே இல்லை. சென்னையிலேயே தங்கிய வயலார் ராமவர்மா குடிகாரர் ஆனார். பெண்பித்தராக அலைந்தார். அவரது பெண்பித்து பற்றி பாரதி கேள்விப்படுகிறார். ஆனால் அப்படியெல்லாம் இல்லை, அவர்களெல்லாம் அவரது சகோதரிகள்தான் என்று கற்பனை செய்துகொண்டேன் என்கிறார். வேறு என்ன செய்ய முடியும்?

வயலாரை பாரதி நேசித்தாரா? ஆமாம் என்று சொல்கிறார் பாரதி. ஏனென்றால் நேசித்தாகவேண்டும். வேறு உலகமே கிஐயாது. நேசிக்கும்படியாக அவர் வளர்க்கபப்ட்டிருக்கிறார். அவரன்றி நினைவுகள் கூட இல்லை. ஆனால் அது நேசம்தானா? வெறும் கற்பனையா? சொல்ல முடியாது. என் வாழ்க்கையை நரகமாக்கிய வயலாரின் அன்னையை முதுமைக்காலத்தில் நன்றாகவே புரிந்துகொள்வதாகவும், அவர்மீது நேசமும் இரக்கமும் மட்டுமே மனதில் எஞ்சியுள்ளது என்றும் சொல்கிறார்.

குடி வயலார் ராமவர்மாவை வதைத்தது. அதை விட்டுவிட ஒவ்வொருநாளும் விரும்பினார். அதற்காக பலமுறை சபதம் எடுத்தார். புத்தாண்டுகள் தோறும் டைரியில் எழுதிவைத்தார். மனைவியை நேசிக்க முடியாமையைப்பற்றி புலம்பி எழுதினார். ஆனால் அந்த மரணப்பாதையில் சென்றுகொண்டே இருந்தார். அவரை நினைத்து அம்மா மனம் புழுங்கினார். அவருக்காக கோயில்தோறும் வேணிக்கொண்டார்.

ஒருமுறை குடி மூத்து நிற்க முடியாத வயலார் ராமவர்மா தன் வேலையாளிடம் மேலும் மது வாங்க பணம் எடுத்துக் கொடுக்கும்படி பாரதியிடம் சொல்ல பாரதி அழுதபடி மறுக்கிறார். அம்மா வெளியே வந்து ”நீ சீதனம் கொண்டுவந்த பணம் அல்ல அது. அவன் சம்பாதித்த பணம்… போய் எடுத்து கொடுடீ”என்று சீறினாள். பணத்தை எடுத்துக்கொடுத்துவிட்டு பாரதி வந்து பார்த்தபோது அம்மா அறைக்குள் கதறி அழுது கொண்டிருந்தாள்.

”பாரதீ நீ கவலைப்படாதே, அம்மாவின் காலம் முடிந்தபின் நாம் நிம்மதியாக வாழலாம்”என்று போதையில் மனைவியிடம் சொல்லி கண்ணீர்விடுகிறார் வயலார் ராமவர்மா. ஆனால் அம்மாவின் கண்முன் அவர் இறந்தார். ஈரல் கெட்டுவிடிருந்தது. மரணப்படுக்கையில் ”என்னை வேலூருக்குக் கொண்டு செல்லுங்கள்…”என்று கதறினார். கசக்கவில்லை வாழ்க்கை ”இந்த அழகிய நிலத்தில் ஆசை தீர வாழ்ந்து மறைந்தவர்கள் உண்டா?” என்று கேரளத்தைப்பற்றி பாடியவர் அவர்

அம்மா உடைந்துபோய்விடுகிறாள். சற்றே மனநலம் பாதிக்கப்பட்டது. தலையில் தண்ணீர் விடமுடியாது, ஜன்னி வரும் . ஆனால் பேரப்பிள்ளைகளை வளர்த்து மேலும் பல வருடங்கள் வாழ்ந்தாள். எத்தனை வீணான வாழ்க்கை. ஏன் அப்படி அது நிகழ்ந்தது?

வாழ்க்கையின் பெரும் புதிர்களை ‘ஈஸ்வரஹிதம்’ என்று சாதாரணமாக தாண்டிச்செல்கிறார் பாரதி. தனித்த வாழ்க்கையின் குரூரங்களை கண்ட அம்மா அதே வாழ்க்கையை ஏன் தன் மருமகளுக்குக் கட்டாயமாக்கினாள்? அம்மாவின் சொல்லை மகன் தட்டமாட்டான் என்று அறிந்திருந்தும் ஏன் மகனை குடிக்கக்கூடாது என்று அம்மா சொல்லவில்லை?

”சொல்லியிருந்தால் மகன் தட்டியிருப்பான் என்று அம்மாவுக்குத்தெரியும்”என்றார் லோகித தாஸ். ”ஓர் எல்லை உள்ளது. அந்த அம்மா அதை மீறிவிட்டார்”. வயலார் ராமவர்மா குடித்து அலைந்தது ஏன்? உள்ளூர அவர் ஏன் நிறைவில்லாதவர் ஆனார்? ”மறுக்கப்பட்ட அன்பை உலகில் எங்குமே மனிதன் கண்டுகொள்ள முடியாது…தேடித்தேடிச் சாகவேண்டும் என்பது விதி…”என்றார் லோகிததாஸ். பேரன்பால் தன் மகன் வாழ்க்கையைத் தின்று அழித்தார் அம்மா. பேரன்பால் தன்னை அம்மாவுக்கு பலிதந்தார் மகன்”.

மீண்டும் டோண்டு ராகவன். ஜெயமோகன் மேலும் ஜேசுதாஸை பற்றியும் எழுதுகிறார். அது எனது இப்பதிவுக்கு தேவையில்லை. நன்றிகெட்டத்தனத்தை குறித்து வள்ளுவர் எழுதியதை எடுத்து காட்ட நான் பதிவு போட்டால் அதற்கு உபயோகமானதாக அது இருக்கும் என்பது வேறு விஷயம். ஆவல் உள்ளவர்கள் ஜெயமோகனின் பதிவுக்கே சென்று பார்த்து கொள்ளலாம்.

வயலார் ராமவர்மாவின் அம்மாவின் பேரன்பு அவரை மட்டுமின்றி அம்மாவையும் ராமவர்மாவின் மனைவியையுமே அழித்து விட்டது. அதைத்தான்் ஐயன் வள்ளுவன் மறத்துக்கும் அஃதே துணை என்கிறார். சூர்ப்பனகையிடம் ராவணன் வைத்த அன்பு அவன் குலத்தையே அயித்தது. மகாபாரதத்தில் இம்மாதிரி எண்ணற்ற உதாரணங்களைப் பார்க்க இயலும்.

எமோஷனலாக பிளாக்மெயில்களைத்தானே தொலைக்காட்சி சீரியல்களில் செய்கிறார்கள்? “மெட்டி ஒலி” மாணிக்கத்தைவிட சிறந்த உதாரணம் தரவியலுமா? சரியோ தவறோ என் அன்னை சொல்வதே சரி என்று எத்தனை கணவன்மார்கள் படுத்துகின்றனர். பெண்களும் இதில் சளைத்தவர்கள் அல்ல. வயலார் ராமவர்மாவின் அன்னையே சிறந்த உதாரணம். முதல் மனைவி தான் ராமவர்மாவை பார்த்து கொண்டிருக்க வேண்டும் என்ற தனது சுயநலனுக்காகத்தானே தன் தங்கையை வற்புறுத்தி அவரை மணம் செய்ய வைக்கிறாள். அவள் மேல் உள்ள பாசத்தால்தானே அத்தங்கையும் தன் வாழ்வை பலிகொடுத்தாள். இவ்வரிகளை தட்டச்சிடும் போதெ என்னுள்ளே கோபம் கொப்பளிக்கிறது.

சமீபத்தில் 1969-ல் உயர்ந்த மனிதன் படத்தை நான் பார்க்க மறுத்ததன் காரணமே மறத்துக்கு வழி செய்யும் இந்த அன்பை பார்க்கப் பிடிக்காமல்தான். தன் மகன் சிவாஜியின் காதலியின் வீட்டுக்கு நெருப்பு வைத்து கொளுத்தும் ராமதாஸ் பிறகு சிவாஜி சவுக்கார் ஜானகியை திருமணம் செய்ய வேண்டும் என்றும் இல்லாவிட்டால் தான் தற்கொலை செய்து கொள்ளப் போவதாகவும் சொல்லி மிரட்டியே தன் காரியத்தை சாதித்து கொள்கிறார் என்ற கதையோட்டத்தைக் கேட்டதுமே அப்படத்தைக் காண நான் விரும்பவில்லை. இன்றுவரை முயுமையாக பார்க்கவில்லை. கடைசி சில காட்சிகள்தான் க்ளிப்பிங்களில் பார்த்தேன்.

இன்னமும் கோலங்கள் தொலைக்காட்சி தொடரில் அம்மாதிரி காட்சிகள் வரும்போது பார்க்க பிடிக்காமல் எழுந்து சென்றுவிடுவேன்.

எனது பாலிசி என்னவென்றால் யாரும் என்னை எமோஷனலாக பிளாக்மெயில் செய்ய அனுமதிக்கக் கூடாது; அம்மாதிரி செய்பவர்கள் தவிர்க்க வேண்டிய நபர்கள் என்பதே.

அன்புடன்,
டோண்டு ராகவன்

13 comments:

Anonymous said...

டோண்டு ஐயா அவர்களின் இந்தப் பதிவை படிக்கும் ஒவ்வொரு மனிதனும் தனது வாழ்க்கையில் சம்பந்ததப் பட்ட ஒரு பாவப் பட்ட ஜென்மம் எடுத்த பெண்ணின் உண்மை கதை போலவே எண்ணி ,ஒரு இறுக்க மனத்தோடு தான் இருப்பார்கள் என்று சொன்னால் அது மிகையன்று.



அம்மா பிள்ளையாய் ,அதுவும் ஒற்றைப் பிள்ளை யாய் ,தேசிய மயமாக்கப் பட்ட வங்கியில் பணிபுரிபவராய்,குடி இருக்க சொந்த வீட்டோடும்,கொஞ்சம் நில புலன்களும் இருக்கும் மாப்பிள்ளைக்கு பெண் கொடுக்கும் பெண்னை பெற்றொரும் ,அந்தப் பெண்ணும் ,இந்த பாரதி அம்மா விட, கொடுமை களை நாளும் அனுபவித்து வந்துள்ளனர்.

இப்போ கொஞ்சம் நிலமை சீரைடந்து வருகிறது.

காரணம் ,எல்லா ஜாதிப் பிரிவுகளிலும் நல்ல படித்த, குணமுள்ள, செல்வ வசதி படைத்த மணப் பெண்களின் எண்ணிக்கை குறைந்து வருவதே.

அம்மா பிள்ளையாய் வளரும் மகன்களை அம்மாஞ்சி ஆக்கி, மருமகளோடு பேசுவதற்கும் ,வெளியே
சினிமா,டிராமா என செல்லவும் அனுமதி கொடுக்கப் படுவதில்லை.

பெரும் பாலான பெண்கள் தங்கள் வீட்டிலிருந்து சீதனமாய் கொண்டு வந்த நகை களைக்கூட மாமியாரின் காலடியில் சமர்பித்துவிடு,பின்னர் வேறு விசேடங்களுக்கு செல்லும் போது மாமியாரை சாஸ்டாங்கமாய் நமஸ்கரித்து, அவர்கள் செலக்ட் செய்யும் பட்டுப் புடவை,நகைகளைத்தான் அணிந்து செல்ல வேண்டிய துர்பாக்கியநிலை பல வீடுகளில் உள்ள நிதர்சனமான நிலை.
இவர்களாவது பரவாயில்லை, வெளி அலுவலங்களில் வேலைக்குப் போய் கைநிறைய சம்பளம் வாங்கும் அபாக்கியவதிகளின் நிலை இன்னும் மோசம்.மாதச் சம்பளக் கவரை மாமியாரிடம் கொடுத்துவிட்டு அன்றாடம் ,பஸ்சுக்கும்,காபிக்கும் கையேந்தும் கையறு நிலை வன் கொடுமையன்றோ.

மாமியார்களுக்கு வயதானதால் உணவு முறைகள்,கால இடைவெளிகள் மாறி இருக்கும் சூழ்நிலையில், மருமகளையும் நேர நேரத்திற்கு சாப்பிட விடமால் செய்யும் அரக்கத் தன்மையை என்ன வென்று சொல்வது.நமது ஒத்தை பிள்ளை கதாநாயகனோ ,அய்யோ பாவம் கேசு. விசயம் தெரிந்தாலும் ,கண்டும் காணததைப்போல் வாழா இருக்கும் ஆணற்ற தன்மைக்கும் தமிழில் என்ன வார்த்தை சொல்வது.
இதுவாவது பரவாயில்லை,ஒரு சில கொடுமையின் மொத்த உருவமாய் திகழும் மாமியார்கள்,மருமகள்,தனது குடும்ப வாரிசை சுமந்து கர்ப்பமாய் இருக்கும் சமயத்திலும் கடுமையான வார்த்தை சாடல்களை சொல்லியும் இடையில்லாப் பணிகளை கொடுத்தும் தொந்திரவு செய்யும் மாபாதகத்தை என்ன வென்று அழைப்பது.

பேரனோ,பேத்தியோ பிறந்த பிறகு சம்பந்தி வீட்டார் அடிக்கடி வந்து விடக் கூடாது என்பதற்காகவே, அரசியல் வாதியை மிஞ்சும்,சாணக்கியத்தனங்களை கொண்டு ,சம்பந்தி வீட்டாரை , வில் ,அம்பு ,கதாயுதம், வாள். கோடாரி , சூலாயுதம்,ஈட்டி,வெடி குண்டு ஆகியயை ஒன்றாய்ச் சேர்ந்து தாக்கும் சக்தியை விட கொடுரமான வார்த்தை அனுகுண்டுகள் வீசும் வடிவரசித் தனங்கள்.


சரி இதற்கு தீர்வுதான் என்ன?

கன்னியாக் குமரி மாவட்டத்தில் உள்ள குடுமப மூறை,சொத்துக்களை பிரிக்கும் முறை சிறத்தது.

இங்குள்ள வழக்கப் படி சொத்து முழுவதும் பெண்ணுக்குத்தான்
பெண் கல்யாணம் முடிந்ததும், மாப்பிள்ளை பென் வீட்டொடு சென்று விடுவது.

மாப்பிள்ளை மனைவியோடு ,தன் வீட்டில் இல்லாமல், மனைவியின் வீட்டில் இருப்பதால் மேலே சொல்லப் பட்ட அதீத நிகழ்வுகள் நடப்பதற்கு வாய்ப்பே இல்லை.

Anonymous said...

//மாப்பிள்ளை மனைவியோடு ,தன் வீட்டில் இல்லாமல், மனைவியின் வீட்டில் இருப்பதால் மேலே சொல்லப் பட்ட அதீத நிகழ்வுகள் நடப்பதற்கு வாய்ப்பே இல்லை.//

athaithaan veettodu maappilai yenpaarakale

Anonymous said...

male savanistukal down down

Anonymous said...

aanathikavaathikalidaiye dondu oru gentle man

jindabad jindabad
dondu jindabad

Anonymous said...

mardabad mardabad

hitler type monther-in-laws

Anonymous said...

congrats to http://jeyamohan.in/?p=1130

thanks to dondu sir for this posting

Unknown said...

பாரதி தம்புராட்டி அவர்களின் கண்ணிர்க் கதை
கல் நெஞ்சையும் கரைய வைத்துவிடும்.

இவர்களின் சோக வரலாற்றுக்கு யார்/எது காரணம்.

1.நாடு பிடிக்கும் பேராசைக்காரன் திப்பு சுல்தானா?-மண்ணாசை

2.வட கேரளாவிலிருந்து தென் கேரளா ஒடிய வயலாரின் தந்தையா? - உயிர் பயம்

3.தங்கை என்றும் பாராமல் சொத்தை அபகரித்த தாய்மாமனா?-பொன்னாசை

4.வயலாரின் தாய் அனுபவித்த வறுமையா? -தலைவிதி

5.மலட்டுத் தன்மையினால் பிறந்தகம் நோக்கி விரட்டப் பட்ட வயலாரின் முத்த மனைவிக்கு இயற்கை செய்த சதியா? -மருத்துவ ரகசியம்

6.மகனின் மனைவியும் ஒரு பெண்தான் என்ற உணர்வு இல்லமால் கொடுமைகள் செய்த வயலாரின் தாயாரா?-மாமியார் கொடுமைகள்

7.கவிஞர் எல்லோரும் இந்த உலகை மறந்து ஒரு கற்பனை உலகில் வாழும் புலவர் வாழக்கை முறையா?-இறைவனின் சாபமா?

8.கல் ஆனாலும் கணவன்,புல்லானலும் புருசன் எனும் தத்துவம் ஆட்கொண்ட பாரதி தம்புராட்டி அவர்களின் பத்தாம் பசலித் தனமா-பெண்ணடிமை.

சரி டோண்டு சார் இப்போ நம்ம கேள்விக்கு வருவோம்.

அனாதி காலத்திலிருந்து
புலவர்கள்/கவிஞர்கள்/பாடகர்கள்/இசை சம்பந்தங்கள்
1.வறுமையில் வாடி வதங்கி உள்ளனர்
2.குடுபத்தை காக்கும் அறத்திலிருந்து நழுவி உள்ளனர்
3.குடி கெடுக்கும் குடியோடு கும்மாளம் போட்டு மூச்சையும் முழுங்கி மறைந்துள்ளார்கள்
4. வாழும் காலத்தில் பிறரால் மதிக்கப் படமால்,பின் அவர்களின் மறைவுக்குப் பிறகு இந்திரன் சந்திரன் எனப் போற்றப் பட்டுள்ளனர்.
5.தான் கொண்ட கொள்கையை அடிக்கடி மாற்றியதால் நிரந்திர புத்தி இல்லை என்று பழிக்க பட்டுள்ளனர்.
6.தானாய்ச் சேர்ந்த திரண்ட செல்வத்தை தீய வழிகளில் தண்ணிராய் செலவழித்து ,ஊரெல்லம் கை நீட்டி கடன் வாங்கி ,பின் கலங்கி நின்றுள்ளனர்

மேலெ சொல்லப் பட்டவைகளால் ஏற்படும் பாதிப்பு கொஞ்சமும் இல்லாத கவிஞர்/புலவர்/இசை சம்பந்தங்கள் யாரெனும் உள்ளனரா?

இல்ல என்றால் என்ன காரணம்

1. விதிப் பயனா?
2.புகழ் தரும் போதையா?
3.அறிவு மிகுதி தரும் சித்த பிரமையா?
4.கல்வியா? செல்வமா?வீரமா அன்று நாரதர் தொடங்கிய புராணக் கற்பனை கதையை -இன்று இயற்கை அன்னையின் கரத்திலா?

வால்பையன் said...

எனக்கு கண்ண கட்டுது!

இது யாரோட கதை!
திருவள்ளுவர்ல ஆரம்பிச்சி
சீரியல்ல முடிஞ்சிருக்கு!

Anonymous said...

//வால்பையன் said...
எனக்கு கண்ண கட்டுது!

இது யாரோட கதை!
திருவள்ளுவர்ல ஆரம்பிச்சி
சீரியல்ல முடிஞ்சிருக்கு!//


kerala (thraippada paadalaasiriyar)
kannadasan kathithaan valpaiyan saar

Anonymous said...

ரொம்ப நாள் கழித்து நெஞ்சை நக்கிய பதிவு.

நன்றி! டோண்டு ஐயா

Anonymous said...

//Anonymous said...
ரொம்ப நாள் கழித்து நெஞ்சை நக்கிய பதிவு.

நன்றி! டோண்டு ஐயா//

yen saar appadi solreenga?

TamilBloggersUnit said...

happy newyear we invite u to join now in bloggers unit

Sethu Raman said...

இது என்ன கண்ணறாவி!
டோண்டு 'கோலங்கள்' பார்க்கிறாரா?
காட்டுக்கத்தல் ஆதியையும், அழுகை
அபியின் அம்மாவையும், முகத்திலே
ஒரு பாவமும் இல்லாத தொல்காப்பி
யனையும் பார்த்து ரசிக்க முடியுமா?
இதற்கெல்லாம் நேரம் எங்கே இருக்கிறது

 

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது