1/21/2009

அஞ்சாநெஞ்சன் கஞ்சா கருப்பு


தஞ்சாவூரில் தை திருநாளன்று பிரபலங்களை அழைத்து விழா கொண்டாடும் எம். நடராஜன் அவர்கள் இம்முறை நடிகர் கார்த்திக்கையும் நகைச்சுவை நடிகர் கஞ்சா கருப்பையும் அழைக்க, கார்த்திக் அதிலிருந்து எஸ்ஸாகிவிட கஞ்சா கருப்பு மாட்டிக் கொண்டார்.

விழா நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கிய கவிஞர் சினேகன் “அஞ்சா நெஞ்சன் என்று யார் யாரோ தம்பட்டம் அடித்து கொள்கிறார்கள். நிஜமான அஞ்சா நெஞ்சனாக இங்கே அமர்ந்திருப்பவர் கஞ்சா கருப்புதான்” என ஏடாகூடமாக பட்டம் தந்து அவரை பொக்கையில் விட்டார். அதுவரை உற்சாகமாக இருந்த கஞ்சா கருப்பு புஸ்வாணமாகிவிட்டார்.

“ஏம்பா தேரை இழுத்து தெருவில விடுறீங்க. நான் செவனேன்னுதானே புள்ள பூச்சியாட்டம் உட்கார்ந்திருக்கேன்” என சலித்தபடியே மைக் பிடித்தார் கஞ்சா கருப்பு. மேற்கொண்டு இக்கூட்ட விவரம் வேண்டுபவர்கள் இந்தவார ஜூனியர் விகடன் (25.01.2009 இதழ்) 19-ஆம் பக்கத்துக்கு செல்லுமாறு கேட்டு கொள்ளப்படுகிறார்கள். டோண்டு ராகவனும் முரளிமனோகரும் இப்பதிவுக்கு செல்கிறோம்.

பருத்திவீரன் படத்தில் இதே மாதிரி ஒரு சீனில்தான் டீக்கடையில் வேலை செய்த கஞ்சா கருப்புவுக்கு வேலை போயிற்று என்பதையும் கஞ்சா கருப்பு உணர்ந்திருப்பார்தானே. பின்னே என்ன, நிஜமான அஞ்சா நெஞ்சனிடம் மோத அவர் என்ன கில்லி விஜயா?



“இந்த மாதிரி உசுப்பேத்தி உசுப்பேத்தியே ஒடம்பை ரணகளமாக்கிட்டாங்கப்பா”ன்னு வடிவேலு வின்னர் படத்தில் நொந்து கொள்வதும் நினைவுக்கு வருகிறது.



இன்னொரு சீனும் நினைவுக்கு வருகிறது. வடிவேலு தன் வேலைக்காரன் பின்னால் வர, தெருவோரமாகப் போய் கொண்டிருக்கிறார். வழியில் ஒரு டீக்கடையில் ஒருவன் பந்தாவாக அமர்ந்து பேப்பர் படித்து கொண்டிருக்கிறான். அவன் அவ்வாறு உட்கார்ந்திருப்பதை பொறுக்காத வேலைக்காரன் எஜமானன் வடிவேலுவையும் உசுப்பிவிட்டு அவ்வாறே உட்கார்ந்து பந்தா செய்யும்படி கூறுகிறான். கடைசியில் வடிவேலு சாக்கடையில் விழ வேலையாளி எஸ்ஸாகிறான். இந்த காட்சியை பலமுறை தொலைகாட்சி காமெடி சீன்களில் பார்த்துள்ளேன். ஆனால் படத்தில் பெயர் நினைவுக்கு வரவில்லை. ஆகவே தமிழ்ப்படங்களில் அத்தாரிட்டியான லக்கிலுக்குக்கு ஃபோன் போட்டு கேட்டால், அவர் தானும் இந்த சீனை பார்த்திருப்பதாகவும், ஆனால் பெயர் தனக்கும் நினைவுக்கு வரவில்லை எனக் கூறிவிட்டார். யோசித்து நினைவுக்கு வந்தால் எனக்கு ஃபோன் செய்வதாகக் கூறியுள்ளார். இப்பதிவை பார்க்கும் எவருக்கேனும் அப்படத்தின் பெயர் தெரிந்தால் பின்னூட்டத்தில் கூறுமாறு கேட்டு கொள்கிறேன்.

சமீபத்தில் 1978-ல் தஞ்சை பாராளுமன்ற தொகுதிக்கு இடை தேர்தல் வந்தது. அப்போது காங்கிரஸ் அதிமுக கூட்டணி இருந்த காலம். அத்தேர்தலுக்கு இந்திரா காந்தி நிற்பதாக இருந்தது. அவரை எதிர்த்து கலைஞர் நிற்க வேண்டும் என ஒரு பெரிய முயற்சியே நடந்தது. கலைஞருக்கு இதில் அவ்வளவாக உற்சாகம் இல்லை. ஆனால் அவரை சுற்றிய அவரது அடிப்பொடிகள் பயங்கரமாக அலம்பல் செய்து வந்தனர். அப்போது குமுதத்தில் ஓவியர் செல்லம் வரைந்த கேலிச் சித்திரம் வந்தது. அதில் தீமிதிக்கு எல்லாம் தயார் நிலையில் இருக்க, கலைஞருக்கு மாலை போட்டு அவர் இரு கைகளையும் அவரது இரு தொண்டர்கள் பிடித்து கொண்டு, “பாருங்கள், கலைஞர் தீமிதித்து சாதனை காட்டப் போகிறார்” என முழக்கமிடுகிறார்கள். கலைஞரோ முகத்தில் சோகம் கலந்த வெறுப்பை காட்டியவாறு கேமரா லுக் தருகிறார். இந்த மாதிரி தொண்டர்கள் இருக்கும்போது எனக்கு எதிரி தேவையா என்பது போல முகத்தில் பாவனை இருக்கும். (கேமரா லுக் என்பது நடிகர் நடிக்கும்போது கேமராவையே பார்ப்பது. அப்போதுதான் பார்வையாளர்கள் தங்களைத்தான் நடிகர் பார்க்கிறார் என்ற உணர்வினை பெறுவார்கள்). இந்த மாதிரி கேமரா லுக்கை லாரல் ஹார்டி ஜோடியில் ஹார்டி கேமரா லுக் தருவார். அதன் தாத்பர்யம் என்னவென்றால் இம்மாதிரி படுத்துபவனை வைத்து கொண்டு நான் என்ன செய்வது என்று நொந்து நூடுல்ஸாவதுதான்.

கலைஞரின் நல்லவேளையோ என்னவோ இந்திரா தஞ்சையில் தேர்தலுக்கு நிற்காது சிக்மகளூர் தொகுதிக்கு சென்றார். அதன் பிறகு அதிமுகவுக்கும் காங்கிரசுக்கும் சுமுகமில்லாது போக கலைஞர் “நேருவின் மகளை” வரவேற்று போஸ்டர் போட்டு, கூட்டு வைத்து 1980 பாராளுமன்ற தேர்தலில் வென்றது பிறகு நடந்தது. அத்துடன் விட்டிருந்தால் நன்றாக இருந்திருக்கும். ஆனால் அவர் கெட்ட வேளையோ என்னவோ அவரை யாரோ உசுப்பிவிட, அவரும் இந்திராவிடம் பேசி எம்.ஜி.ஆரின் மாநில அரசை கலைக்க வைத்தார். பிறகு நடந்த இடை தேர்தலில் மறுபடியும் எம்ஜிஆர் ஜெயித்ததுதான் நடந்தது. அடுத்த 7 ஆண்டுகளுக்கும் மேல் அவரால் முதலமைச்சர் பதவியை கனவுகூட காணமுடியவில்லை. அதைவிட பெரிய கெடுதி என்னவென்றால் அதுவரை ஊழலே இல்லாது ஆட்சி நடத்திய எம்.ஜி.ஆர். பிறகு அதில் கலைஞரே மலைக்கும் அளவுக்கு ஊழலில் பி.எச்.டி. செய்ததுதான்.

“ஏதாவது சீரியசாக பேசாது என்ன இது சும்மா மொக்கை போடுகிறாய்” என முரளி மனோகர் கோபித்து கொள்வதால் சீரியசாகவே பேசி பதிவை முடிக்கிறேன்.

ஆகவே மக்களே தனது வலிமையின் எல்லை அறிந்து செயல்படுவதே நலம், இதிலெல்லாம் மற்றவர் உசுப்பல்களையெல்லாம் அலட்சியம் செய்து நடப்பதே நலம்” என மகாத்மா காந்தி சொன்னதை கேட்டு எல்லோரும் நன்மை பெறுங்கள்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

15 comments:

Madhu Ramanujam said...

//தனது வலிமையின் எல்லை அறிந்து செயல்படுவதே நலம், இதிலெல்லாம் மற்றவர் உசுப்பல்களையெல்லாம் அலட்சியம் செய்து நடப்பதே நலம்//

இலங்கை விஷயத்தில் கலைஞர் இதைத் தான் “நான் யார், எனது உயரம் என்ன என்பதை நான் நன்கு அறிவேன்” என்று சொன்னாரோ? வார்த்தை பிரயோகம் ஒன்று போல் இருந்தாலும் கலைஞர் சொன்னதன் அர்த்தம் இன்றுவரை புரியவில்லை.

வால்பையன் said...

நீங்க சொல்ல வர்ரது என்னான்னா
அரசியல்வாதிகளும், காமெடியர்களும் ஒண்ணு சரியா?

Anonymous said...

//ஆகவே மக்களே தனது வலிமையின் எல்லை அறிந்து செயல்படுவதே நலம், இதிலெல்லாம் மற்றவர் உசுப்பல்களையெல்லாம் அலட்சியம் செய்து நடப்பதே நலம்” என மகாத்மா காந்தி சொன்னதை கேட்டு எல்லோரும் நன்மை பெறுங்கள்//


இதை கொம்பு சீவுதல் என்பார்கள்

dondu(#11168674346665545885) said...

கீழ்க்கண்ட மின்னஞ்சலை எனக்கு அனுப்பியதற்காக திரு சீனுவாசனுக்கு நன்றி.

அந்த படத்தின் பெயர் :கார்மேகம் (மம்மூட்டி நடிப்பில் வெளிவந்த படம்)
இப்படிக்கு
சீனிவாசன்

Anonymous said...

வடிவேலு நடித்த அந்த படத்தின் பெயர் கார்மேகம்

வஜ்ரா said...

மதுரையிலிருந்து சென்னை வரை ஆட்டோ வராது என்ற ஒரே தைரியத்தில் இப்படி பதிவு போட்டுள்ளீர்கள் என்று நினைக்கிறேன்.


மதுரையின் அஞ்சா நெஞ்சன், ஆட்சி மாறினால் பங்களூருக்குச் சென்றுவிடும், அண்ணன் அழகிரி மட்டுமே.

Anonymous said...

லாரல் ஹார்டி ஜோடி காமெடிக்கு ஈடு இணை ஏது. நம் கவுண்டர் செந்தில் ஜோடியை அவர்கள் அளவுக்கு சொல்ல முடியாவிட்டாலும், நல்ல காமெடி சூடி எனலாம். தற்போது மிஸ்டர். பீன் -ல் வரும் ரோவன் அட்கின்ஷன் கூட நல்ல நகைச்சுவை நடிகர் தான்.

ரிஷபன்Meena said...

நல்ல காமெடி "ஜோடி" என வாசிக்கவும்

Anonymous said...

//மதுரையின் அஞ்சா நெஞ்சன், ஆட்சி மாறினால் பங்களூருக்குச் சென்றுவிடும், அண்ணன் அழகிரி மட்டுமே.//


?

Anonymous said...

வளரும் கலைஞர்கள், அரசியில்வாதிகள் சம்மந்தப்பட்ட மேடைகளை தவிர்க்க வேண்டும் , இல்லாவிட்டால் தவிக்க நேரிடும்.

வாலில்லாத தம்பி.

வாழவந்தான் said...

சார் இந்த பின்நவினத்துவம்-னு சொல்றாங்களே அப்படீனா என்ன??
இத நீங்க வியாழன் கேள்வி பதிலா சொன்னாலும் சரி இல்ல இப்பவே சொன்னாலும் சொல்லலாம்

dondu(#11168674346665545885) said...

@வாழவந்தான்
நாளைக்கான பதில்கள் பதிவு ஃபைனலைஸ் ஆகி நாளை காலை தன்னிச்சையாக ஐந்து மணிக்கு பிரசுரம் ஆவதற்காக முன்னமைவு செய்யப்பட்டு விட்டது.

இனி வரும் கேள்விகள் 29-ஆம் தேதிக்கான பதிவுக்குத்தான் வரும். ஏற்கனவே அதற்கான சில கேள்விகள் அதன் முன்வரைவுக்கு சென்று விட்டன. ஆகவே உங்களது இக்கேள்விக்கு இப்போதே பதிலளித்து விடுகிறேன்.

பின்னை நவீனத்துவம் (பின்நவீனத்துவம்) என்பது குறிப்பாக மேற்கு நாடுகளில் கலை இலக்கிய உலகில் நிலவும் ஒரு சமீபத்திய மனோபாவமாகும்.
கலை இலக்கியம் எனும் எல்லைப்பாடுகளைக் கடந்து தற்போது அது தத்துவம், அரசியல், வாழ்க்கைமுறை, தொழிநுட்பம் போன்ற புதிய களங்களை நோக்கியும் விரிந்து வருகிறது. பின்னை நவீன யுகம் எனும் வரலாற்றுக் காலகட்டத்தை அது குறிப்பதாக பின்னை நவீன வாதிகள் கருதுகின்றனர். பின் அமைப்பியல் சிந்தனையாளர்களான மிஷேல் ஃபூக்கோ, லக்கான், தெரிதா போன்றோர், அவர்களைத்தொடந்ர்து லியத்தார்ட், பௌதலியார்ட், டெலூஸ் ஆகியோர், இன்னும் சமீபத்தில் அறிமுகமாகிவரும் புதிய தத்துவவியலாளர்கள் போன்றோர் பின்னை நவீனத் தத்துவத்தின் தத்துவவியலாளர்களாகக் கருதப்படுகின்றனர்.
பின்னவீனத்துவம் என்பது நவீனத்துவத்துவத்துக்கான ஒரு மறுவினையாகும்.
இப்போக்கானது இரண்டாம் உலகப்போரின் பின்னான நம்பிக்கைச்சிதைவுகளின் செல்வாக்கால் எழுந்தது எனக் கூறப்படுகிறது.
ஒழுங்குபடுத்தும் கோட்பாடோ, ஒரு தெளிவான மையப் படிநிலையோ அற்ற கலாசார, புலமைத்துவ, கலைத்துவ நிலையாக பின்னவீனத்துவம் குறிப்பிடப்படுகிறது.
இது, தீவிர சிக்கற்றன்மை, முரண்பாடு, குழப்பநிலை, பல்வகைமை, தம்மிடைத் தொடர்புடைமை போன்றவற்றை வெளிப்படுத்துகிறது.

குழப்பமாக இருந்தால் மிதக்கும் வெளி சுகுணா திவாகரை கேட்கவும். என்ன, இன்னும் அதிகமாக குழப்புவார் அவ்வளவே.

அன்புடன்,
டோண்டு ராகவன்

வாழவந்தான் said...

ரொம்ப நன்றி சாரே!!
இதுவே கொஞ்சம் கொழப்புதுதான், இதைவிட அதிகமாவா??!!
இன்னிக்கு முரளி மனோகர் லீவா? அவரு பின்நவீனத்துவத்தை பத்தி என்ன சொல்றாரு .. ஏன்னா சில நேரத்துல நீங்க எழுதின நல்ல பதிவுகளை விட முரளியின் மொக்கைகளே இந்த மரமண்டைல நிக்கும்...
என்ன பண்ண வாழவந்தான் வாங்கி வந்த வரம் அப்படி..
மீண்டும் உங்கள் முயற்சிக்கு நன்றி..

Anonymous said...

உண்மையான அஞ்சா நெஞ்சன் மதுரை முத்த இளவரசு, அழகிரியாரின் புகைப்படம் தமிழக அமைச்சர் அலுவலகங்களில்,கலைஞர்,ஸ்டாலின் புகைபடத்துடன் வைக்கப்பட்டுள்ளதாம். .(ஜு.வி.பக்கம் 44-
25-01-2009).

Anonymous said...

அனானி நண்பரே!
அஞ்சா நெஞ்சன் மதுரையின் முத்த இளவரசா(!!), இல்லை மூத்த இளவரசான்னு சுமோ வரதுக்குள்ள தெளிவு படுத்துங்க!

 

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது