4/02/2009

நங்கநல்லூர் பஞ்சாமிர்தம் - 02.04.2009

சிக்கனப் பேர்வழிகளும் கஞ்சப்பிசுனாறிகளும்
இந்த விஷயத்தில் எனது கருத்துகள் மிகத்தெளிவானவை. தேவையின்றி தாம்தூம் செலவு செய்பவர்கள், அடுத்தாத்து அம்புஜத்தைப் பாத்தேளான்னு புருஷனைக் கேட்டு (அவர் நிஜமாகவே அடுத்தாத்து அம்புஜத்தைப் பார்த்தால் அவருக்கு அவர் மனைவியிடம் கிடைக்கப் போகும் உதைகள் பற்றி இப்பதிவு இல்லை) நெக்லஸ் வாங்கத் தொந்திரவு செய்ததால் கடன் வாங்கி பிரஸ்தாபிக்கப்பட்ட நெக்லஸை வாங்குபவர்கள் ஆகியோர் ஊதாரிகள். அவர்கள் பின்பற்றத்தக்கவர்கள் இல்லவே இல்லைதான்.

அதுவும் பொருளாதாரம் இப்போது இருக்கும் நிலையில் தண்டச் செலவுகள் முழுவதுமாகத் தவிர்க்கப்படாவிட்டாலும் குறைக்கப்பட வேண்டும் என்பதில் மாற்று கருத்தே இருக்க முடியாது. அதே சமயம், கையில் பணமிருந்தாலும் தனது ஆதாரத் தேவைகளையும் மறுத்து பணத்தை சேமித்து வைப்பவனைத்தான் கஞ்சப்பிசுனாறி என்கிறோம். அது மட்டுமின்றி அதே தேவைகளுக்கான செலவுகளை மற்றவ்கள் தலையில் கட்டுபவர்களை குறிப்பிட உபயோகிக்கும் வார்த்தைகள் அச்சில் ஏற்றத்தகாதவை.

நான் ஐ.டி.பி.எல்.-லில் இருந்த போது மேனேஜர் ரேங்கில் இருந்த ஒருவர் எனக்கு ஒரு யோசனை சொன்னார். நான் அக்காலகட்டத்தில் Financial Express பத்திரிகை ரெகுலராக வாங்குவேன். ஒரு நாள் யதார்த்தமாக அதை ஆஃபீசுக்கு கொண்டுவர, அது இந்த மனிதர் கண்ணில் பட்டுவிட்டது. ஆகவே யோசனை சொன்னார், அதாகப்பட்டது நான் தினமும் அதை எடுத்து வர வேண்டுமாம். அவர் அதை இரவல் பெற்று வீட்டுக்கு எடுத்து சென்று படித்து விட்டு அடுத்த நாள் கொண்டு தருவாராம். டோண்டு ராகவன் எப்படி எதிர்வினை தந்திருப்பான் என நினைக்கிறீர்கள்? கரெக்ட் நீங்கள் நினைப்பது சரிதான். அதற்கு நான் ஒத்து கொள்ளவில்லை.

ஆனால் அதே சமயம் ஒட்டுமொத்தமாக கோரிக்கையை நிராகரிக்கவும் இல்லை. நான் எதிர் யோசனை ஒன்று வைத்தேன். அதாவது அவர் அடுத்த நாள் திரும்பக் கொண்டுவரவெல்லாம் தேவையில்லை. நான் பத்திரிகையை வாங்கிய அன்றே படித்து விட்டு அவரிடம் தந்து விடுவேன். அவர் பத்திரிகையின் விலையில் பாதி எனக்கு தந்துவிட வேண்டியது. அவரைப் பொருத்தவரை அது லாபமே. ஏனெனில் பாதிவிலைக்கு பத்திரிகை கிடைப்பது இருக்கட்டும். பழைய பத்திரிகைகளை எடைக்கு போட்டு கிடைக்கும் பணமும் அவருக்குத்தானே. ஏனோ தெரியவில்லை, இது அவருக்கு ஒப்புதலாக இல்லை. அத்துடன் நெகோசியேஷன் முடிந்தது.

அந்த மேனேஜரை நான் கஞ்சப் பிசுனாறிக்கு உதாரணமாகக் கூறுவேன். தனக்கு வேண்டியதை வாங்கப் பணமிருந்தும் அதை வாங்குவதை தவிர்ப்பவர் என்னைப் பொருத்தவரை எவ்வளவு பணக்காரராக இருந்தாலும் ஏழையே.

இப்போது சிக்கனமாக இருப்பதைப் பார்ப்போம். அவசரம் ஏதும் இல்லையென்றால் பொது போக்குவரத்து வசதியை உபயோகிப்பதுதான் நல்லது. அது சிக்கனமே. தேவையின்றி டாக்சி அல்லது ஆட்டோ கூப்பிடுவது வெட்டிப் பந்தாவேதான். ஆனால் இங்கும் ஒரு கஞ்சப்பிசுனாறி உள்ளே வரக்கூடும். அதை ஒரு கதை மூலமாக விளக்குகிறேன்.

ஒரு கஞ்சன் இருந்தான். அவன் மகனும் கஞ்சன். ஒரு நாள் மூச்சிறைக்க வீட்டுக்கு ஓடி வந்தான் பையன். என்ன என கஞ்சன் விசாரித்தான். பள்ளியிலிருந்து வீட்டுக்கு வர 5 கிலோமீட்டர்கள் கடக்க வேண்டும். பஸ் பின்னாலேயே ஓடிவந்து பையன் பஸ் சார்ஜை மிச்சம் பிடித்ததை பெருமையாகக் கூற, கஞ்சனுக்கு ஒரே கோபம். “ஏண்டா ஓடினதுதான் ஓடினாய், டாக்சி பின்னால் ஓடியிருக்கக் கூடாதா? டாக்சி கட்டணத்தை மிச்சம் பிடித்திருக்கலாமே” என கோபப்பட்டான்.

சீரியசாகவே பேசுவோம். சிக்கனமாக இருத்தல் எப்போதுமே நல்லதுதான். அது எந்த அளவுக்கு என்பதுதான் 64000 டாலர் கேள்வி. எனது நினைக்கத் தெரிந்த மனமே பதிவில் கூறியபடி, இளமையில் வறுமை அனுபவித்த என் தந்தை, பெரியப்பா ஆகியோர் தங்கள் வாழ்நாள் முழுக்க சிக்கனமாகவே இருந்தனர். ஆகவே கடன் ஏதும் இல்லை.

அதே சமயம் சேமிப்பது சரியா தவறா எனக் கேட்டால், அது நிலைமைக்கு ஏற்ப முடிவு செய்ய வேண்டியுள்ளது. தாம்தூம் என செலவு செய்பவர்கள் கடன் ஏதாவது தேவை என்றால் அதற்காக சிக்கனமாக செலவு செய்பவர்களிடம்தான் வருவார்கள். அதுவும் உறவினர்களாக இருந்தால் அதிகாரமாகவே கேட்பார்கள். கடன் சுமையில் தவிப்பவர்களை பார்த்தால், அனேகமாக அவர்கள் டாம்பீகச் செலவுக்கு கடன் வாங்குபவர்களாகத்தான் இருப்பார்கள். இங்குதான் சிக்கனமாக இருப்பவர் மிகவும் ஜாக்கிரதையாக இருக்க வேண்டியிருக்கும். என்னென்னவோ கண்ணீர் கதைகள் எல்லாம் கடன் கேட்பவர் சொல்வார். மயங்கக் கூடாது.

கூட்டணி கூத்துக்கள்:
நம்ம கட்சிகளுக்கு விவஸ்தையேயில்லை. யார் யாருடன் கூட்டணி சேருவது என்பது குழப்பத்திலேயே உள்ளது. பாஜகவும் மதிமுகவும் கூட்டணி அமைக்கலாம் என்ற ஹேஷ்யத்தைப் பார்த்து எதால் சிரிப்பது எனத் தெரியவில்லை. ஆனால் ஒன்று, இரு கட்சிகளுமே ஒருவருக்கொருவர் நல்ல தண்டனைதான். பார்க்க தமாஷாக இருக்கும். ஒரே ஆறுதல் என்னவென்றால் இந்த இரு கட்சிகளும் சேர்ந்து அரசு அமைப்பதெல்லாம் அவ்வளவு சாத்தியமல்ல என்பதே.

சமீபத்தில் 1966-ல் மேற்கு ஜெர்மனியில் மகா கூட்டணி ஏற்பட்டது. சிடியு/சிஎஸ்யு மற்றும் எஸ்பிடி கூட்டணி அமைத்தன. (அதாவது நம்ம தேசத்தில் பாஜக மற்றும் காங்கிரஸ் கூட்டணி அல்லது திமுக மற்றும் அதிமுக கூட்டணி). அது போல நம்மூரில் இன்னும் வரவில்லை என வேண்டுமானால் அல்ப திருப்தி பட்டுக் கொள்ளலாம்.

எங்கே பிராமணன் பற்றி சில பதிவர்களது சஞ்சலங்கள்:
இன்று காலை ஒரு பதிவர் சேட்டில் வந்தார். அபோது பேசியதை அவர் பெயர் குறிப்பிடாது விஷயத்தை மட்டும் தருகிறேன்.
நண்பர்: இப்படி எங்கே பிராமணன் கதை போட்டே காலத்தை ஓட்டறீங்களே
நான்: காலத்தின் கட்டாயம்
நண்பர்: நல்ல பதிவா போடுங்க சார், மரணமொக்கையா இருக்கு :-)
நான்: ஏற்கனவேயே ஜ்யோவ்ராம் சுந்தர் இது பற்றி திகிலோட எழுதிட்டார்
நண்பர்: அப்படியா, சுட்டி கொடுங்க
நான்: இதோ:
“ஜ்யோவ்ராம் சுந்தர் said...
ஐயையோ இந்த சீரியல் ரெண்டு வருசம் வந்தா இதே மாதிரி முழுக் கதையும் எழுதிகிட்டிருப்பீங்களா :)
dondu(#11168674346665545885) said...
@ஜ்யோவ்ராம் சுந்தர்: ஆமாம், அப்படித்தான் உத்தேசம்.

நண்பர்: //ஆமாம், அப்படித்தான் உத்தேசம்// என்னா வில்லத்த்னம்!
நான்: டோண்டு ராகவனா கொக்கா
நண்பர்: எங்களையெல்லாம் பாத்தா உங்களுக்கு பாவமா இல்லியா
நான்: இல்லை. பலபேர் இதை வரவேற்கிறாங்களே. உதாரணம் பதிவர் பட்டாம்பூசி
நண்பர்: ஓ
நான்: ஏதோ நம்மால் ஆன மொக்கை
நண்பர்: சரி போகட்டும்.. நீங்களும் மொக்கை போட வேண்டாமா
நான்: அதானே

அன்புடன்,
டோண்டு ராகவன்

7 comments:

Anonymous said...

என்னைச் சுற்றி எல்லோரும்(அனேகமாக) ஏதோ ஒரு விதத்தில் கடனாளியாக இருக்கும் போது எனக்கு மட்டும் கடன் இல்லை என்பது என்னவோ போல் இருக்கு.
வெண்ணை - இதை நிஜப்பெயரிலேயே சொல்லலாமே! என்று கேட்டால்....பிறகு யாராவது வந்து என்னிடம் கடன் கேட்டால் என்ன செய்வது?
எ.பி. தொடர் வேஸ்ட் - சொன்னா என்ன நிறுத்தவா போகிறீர்கள்.உங்கள் முயற்சி வெற்றியடைய வாழ்த்துக்கள்.

மணிகண்டன் said...

***
தனக்கு வேண்டியதை வாங்கப் பணமிருந்தும் அதை வாங்குவதை தவிர்ப்பவர் என்னைப் பொருத்தவரை எவ்வளவு பணக்காரராக இருந்தாலும் ஏழையே.
***

Perfect Point dondu sir.

Vishnu - விஷ்ணு said...

// தனக்கு வேண்டியதை வாங்கப் பணமிருந்தும் அதை வாங்குவதை தவிர்ப்பவர் என்னைப் பொருத்தவரை எவ்வளவு பணக்காரராக இருந்தாலும் ஏழையே //

மிக சரியான சிந்தனை. வேண்டிய பொருள் என்பதை காட்டிலும் அத்தியாவசிய பொருள் அல்லது அவசியமான பொருள் என்றால் மிக பொருத்தமாக இருக்கும் என்பது என் கருத்து.

// இந்த இரு கட்சிகளும் சேர்ந்து அரசு அமைப்பதெல்லாம் அவ்வளவு சாத்தியமல்ல என்பதே //

தமிழ் நாடு என்றால் முடியவே முடியாது.

மத்தியில் ஆட்சி என்றால் மதிமுக எதற்கு? ஒரு வேளை ஒன்று அல்லது இரண்டு சீட் தேவை என்றால் ஒரு வேளை தேவை படலாம் அதுவும் மதிமுக ஜெயித்தால் மட்டுமே.

ஞாபகம் வருதே... said...

வெயில் காலமான இக்காலத்தில் இரண்டாம் வகுப்பு படுக்கை கிடைத்தாலும் அதைவிடுத்து 3டயர் ஏ.சி புக் செய்து பயணம் செய்வதற்கு உங்கள் அகராதியில் என்ன பெயர்?

வால்பையன் said...

//பலபேர் இதை வரவேற்கிறாங்களே. உதாரணம் பதிவர் பட்டாம்பூசி//

மத்த மொக்கைக்கு இந்த மொக்கை பரவாயில்லைன்னு நினைச்சிட்டாங்க போல!

:)

பட்டாம்பூச்சி said...

எத்தனையோ விசயங்களை நாம் அறியாமலேயே கடமையாக ஆன்மீக விசயத்தில் செய்து கொண்டிருக்கிறோம்.அது சம்பந்தமாக சில விஷயங்கள் கூறப்பட்டிருப்பதாக நான் கேள்விப்பட்டதே இதில் நான் கொள்ளும் ஆர்வத்துக்கு காரணம். மற்றபடி வேறெந்த காரணத்துக்காகவும் இல்லை.

@வால்பையன்
அப்படியும்தான் :) .

பெசொவி said...

// தனக்கு வேண்டியதை வாங்கப் பணமிருந்தும் அதை வாங்குவதை தவிர்ப்பவர் என்னைப் பொருத்தவரை எவ்வளவு பணக்காரராக இருந்தாலும் ஏழையே. //

I am reminded of one proverb. If one goes on buying unnecessary things, he may end up with selling necessary things. I think this is enough to differentiate between thriftness and lavishness

 

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது