7/26/2009

துண்டு துண்டாய் சேகரித்த ராமாயணம்

நான் தில்லியில் இருந்தபோது புலவர் கீரன் அவர்களது விரிவுரைகளைக் கேட்டு மகிழ்ந்ததுண்டு. அவர் பாட்டுக்கு வருவார். சுருக்கமாக ஒரு பிரார்த்தனை ஸ்லோகம் சொல்வார். விறுவிறென கதையை ஆரம்பித்து விடுவார். பல பாடல்களை மூச்சுவிடாது பாடுவார். அவற்றின் பொருளை அருமையாகக் கூறுவார். அவ்வப்போது சமகால அரசியல் நிகழ்வுகளை இழுத்து விடுவார்.

உதாரணத்துக்கு திருமந்திரத்தின் இப்பாடலை அபிநயத்துடன் பாடி அப்ளாஸ் பெறுவார். அப்பாடலை நான் எனது இப்பதிவில் இட்டுள்ளேன்.

“அடப்பண்ணி வைத்தார் அடிசிலை உண்டார்
மடக்கொடி யாரொடு மந்தணங் கொண்டார்
இடப்பக்கமே இறை நொந்தது என்றார்
கிடக்கப் படுத்தார் கிடந்தொழிந் தாரே.
[திருமந்திரம்:த1:யாக்கைநிலையாமை:பாடல்148]

"இப்பதான் வந்தாரு, நல்லா சாப்பிட்டுவிட்டு எல்லாத்துக்கிட்டேயும் நல்லா பேசிக்கிட்டிருந்தாரு, இலேசா நெஞ்சை வலிக்குதுன்னாரு - படுத்தாரு அப்படியே போய்ட்டாரு" என்று நாம் அடிக்கடி கேள்விப்படுகிற நிகழ்வைச் சொல்கிற பாடல் இது. இப்போதெல்லாம் இதை massive heart attack எனச் சொல்கிறோம்”.

இது எல்லாவற்றையும் தூக்கி விழுங்கக்கூடிய ஒரு விஷயம்தான் அவர் குறிப்பிட்ட திவ்ய பிரபந்த பாசுர இராமாயணம். நாலாயிர திவ்யபிரபந்தங்களில் பல பாடல்களில் ராமாயணம் பற்றி ஓரிரு அடிகள் நடுநடுவே வரும். அவை எல்லாவாற்றையும் கோர்த்து, அழகாக வரிசைப்படுத்தினார் வியாக்கியான சக்ரவர்த்தி என்று பெயர் பெற்ற பெரியவாச்சான் பிள்ளை என்ற வைணவ ஆச்சார்யர். அந்த ராமாயணத்தைத்தான் “திவ்ய பிரபந்த பாசுர இராமாயணம்” என்று வைணவர்கள் கொண்டாடுகிறார்கள். இராமயண காவியம் தமிழரது வாழ்வோடு எத்தனை அளவுக்கு ஊடுருவியிருக்கிறது என்பது இதிலிருந்து புலனாகிறது. அந்தத் தொகுப்பை கீழே தந்துள்ளேன். ஒவ்வொரு வரியும் வெவ்வேறு ஆழ்வார்கள் அருளித் தந்த பாசுரங்களிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது என்பதை நினைவில் கொள்ள வேண்டும். இக்காலத்தில் கூட கணினியில் இதற்கென அல்காரிதம் போட்டு அவற்றை எடுக்க முடிந்திருக்கலாம் என்றாலும், ராமாயண கதைப்போக்கின்படி அவற்றை அடுக்க எந்த அல்காரிதம் போடுவதாம். அதுவும் பெரியவாச்சான் பிள்ளை காலத்தில் கணினி எல்லாம் ஏது?

இப்போது திவ்ய பிரபந்த பாசுர இராமாயணத்தை பார்ப்போமா? வேர்ட் கோப்பில் நகலெடுத்து ஒட்டினால் 690 சொற்களே வருகின்றன. அற்புதம்!!

திருமடந்தை மண்மடந்தை இருபாலும் திகழ
நலம் அந்தம் இல்லதோர் நாட்டில்
அந்தம் இல் பேரின்பத்து அடியரோடு
ஏழுலகம் தனிக்கோல் செல்ல வீற்றிருக்கும்
அயர்வறும் அமரர்கள் அதிபதியான
அணியார் பொழில் சூழ் அரங்க நகர் அப்பன்
அலை நீர்க் கடலுள் அழுந்தும் நாவாய் போல்
ஆவார் யார் துணையென்று துளங்கும்
நல்ல அமரர் துயர் தீர
வல்லரக்கர் இலங்கை பாழ்படுக்க எண்ணி
மண்ணுலகத்தோர் உய்ய
அயோத்தி என்னும் அணி நகரத்து
வெங்கதிரோன் குலத்துக்கு ஓர் விளக்காய்
கௌசலை தன் குல மதலையாய்
தயரதன் தன் மகனாய்த் தோன்றி
குணம் திகழ் கொண்டலாய்
மந்திரம் கொள் மறை முனிவன் வேள்வி காக்க நடந்து
வந்து எதிர்ந்த தாடகை தன் உரத்தைக் கீறி
வல்லரக்கர் உயிருண்டு கல்லைப் பெண்ணாக்கி
காரார் திண் சிலை இறுத்து
மைதிலியை மணம் புணர்ந்து
இருபத்தொருகால் அரசு களைகட்ட
மழு வாளி வெவ்வரி நற்சிலை வாங்கி வென்றி கொண்டு
அவன் தவத்தை முற்றும் செற்று
அம்பொன் நெடு மணிமாட அயோத்தி எய்தி
அரியணை மேல் மன்னன் ஆவான் நிற்க
கொங்கை வன் கூனி சொற்கொண்ட
கொடிய கைகேயி வரம் வேண்ட
அக்கடிய சொற்கேட்டு
மலக்கிய மாமனத்தனனாய் மன்னவனும் மறாதொழிய
குலக்குமரா காடுறையப் போ என்று விடை கொடுப்ப
இந்நிலத்தை வேண்டாது
ஈன்றெடுத்த தாயரையும் இராச்சியமும் ஆங்கு ஒழிந்து
மைவாய களிறொழிந்து மாவொழிந்து தேரொழிந்து
கலன் அணியாதே காமர் எழில் விழல் உடுத்து
அங்கங்கள் அழகு மாறி
மானமரு மென்னோக்கி வைதேவி இன் துணையா
இளங்கோவும் வாளும் வில்லும் கொண்டு பின் செல்ல
கலையும் கரியும் பரிமாவும்
திரியும் கானம் கடந்து போய்
பத்தியுடை குகன் கடத்தக் கங்கை தன்னைக் கடந்து
வனம் போய் புக்குக் காயொடு நீடு கனியுண்டு
வியன் கான மரத்தின் நீழல்
கல்லணை மேல் கண் துயின்று
சித்திரகூடத்திருப்ப தயரதன் தான்
நின் மகன் மேல் பழி விளைத்திட்டு
என்னையும் நீள்வானில் போக்க
என் பெற்றாய் கைகேசீ
நானும் வானகமே மிக விரும்பிப் போகின்றேன்
என்று வான் ஏற
தேனமரும் பொழில் சாரல் சித்திரகூடத்து
ஆனை புரவி தேரொடு காலாள்
அணி கொண்ட சேனை சுமந்திரன்
வசிட்டருடன் பரதநம்பி பணிய
தம்பிக்கு மரவடியை வான் பணயம் வைத்துக் குவலய
துங்கக் கரியும் பரியும் இராச்சியமும்
எங்கும் பரதற்கு அருளி விடை கொடுத்து
திருவுடைய திசைக்கருமம் திருத்தப் போய்
தண்டகாரணியம் புகுந்து
மறை முனிவர்க்கு
அஞ்சேல்மின் என்று விடை கொடுத்து
வெங்கண் விறல் விராதனுக வில் குனித்து
வண்டமிழ் மாமுனி கொடுத்த வரிவில் வாங்கி
புலர்ந்து எழுந்த காமத்தால் சீதைக்கு நேராவள்
என்னப் பொன்னிறம் கொண்ட
சுடு சினத்த சூர்ப்பனகாவை
கொடி மூக்கும் காதிரண்டும்
கூரார்ந்த வாளால் ஈரா விடுத்து
கரனொடு தூடணன் தன்னுயிரை வாங்க
அவள் கதறித் தலையில் அங்கை வைத்து
மலை இலங்கை ஓடிப் புக
கொடுமையில் கடுவிசை அரக்கன்
அலை மலி வேற் கண்ணாளை அகல்விப்பான்
ஓர் உருவாய் மானை அமைத்துச் சிற்றெயிற்று
முற்றல் மூங்கில் மூன்று தண்டத்தனாய் வஞ்சித்து
இலைக் குரம்பில் தனி இருப்பில்
கனி வாய்த் திருவினைப் பிரித்து
நீள் கடல் சூழ் இலங்கையில்
அரக்கர் குடிக்கு நஞ்சாகக் கொடு போய்
வம்புலாங் கடிகாவில் சிறையாய் வைக்க
அயோத்தியர் கோன் மாயமான் மாயச் செற்று
அலைமலி வேற்கண்ணாளை அகன்று தளர்வெய்தி
சடாயுவை வைகுந்தத்து ஏற்றி
கங்குலும் பகலும் கண் துயிலின்றி
கானகம் படி உலாவி உலாவி
கணை ஒன்றினால் கவந்தனை மடித்து
சவரி தந்த கனி உவந்து
வனம் மருவு கவியரசன் தன்னோடு காதல் கொண்டு
மரா மரம் ஏழு எய்து
உருத்து எழு வாலி மார்பில்
ஒரு கணை உருவ ஓட்டி
கருத்துடைத் தம்பிக்கு
இன்பக் கதிர் முடி அரசளித்து
வானரக் கோனுடன் இருந்து வைதேகி தனைத் தேட
விடுத்த திசைக் கருமம் திருத்து
திறல் விளங்கு மாருதியும்
மாயோன் தூது உரைத்தல் செப்ப
சீர் ஆரும் அநுமன் மாக்கடலைக் கடந்தேறி
மும்மதிள் நீள் இலங்கை புக்குக் கடிகாவில்
வாராரு முலை மடவாள் வைதேகி தனைக் கண்டு
நின் அடியேன் விண்ணப்பம் கேட்டருளாய்
அயோத்தி தன்னில் ஓர்
இடவகையில் எல்லியம் போதின் இருத்தல்
மல்லிகை மாமலை கொண்டு அங்கார்த்ததும்
கலக்கிய மா மனத்தளாய் கைகேயி வரம் வேண்ட
மலக்கிய மா மனத்தனனாய் மன்னவனும் மறாதொழிய
குலக்குமரா காடுறையப் போ என்று விடை கொடுப்ப
இலக்குமணன் தன்னோடு அங்கு ஏகியதும்
கங்கை தன்னில்
கூரணிந்த வேல் வலவன் குகனோடு
சீரணிந்த தோழமை கொண்டதுவும்
சித்திரக் கூடத்திருப்ப பரத நம்பி பணிந்ததுவும்
சிறுகாக்கை முலை தீண்ட மூவுலகும் திரிந்து ஓடி
வித்தகனே ராமா ஓ நின்னபயம் என்ன
அத்திரமே அதன் கண்ணை அறுத்ததுவும்
பொன்னொத்த மான் ஒன்று புகுந்து இனிது விளையாட
நின்னன்பின் வழி நின்று சிலை பிடித்து எம்பிரான் ஏக
பின்னே அங்கு இலக்குமணன் பிரிந்ததுவும்
அயோத்தியர் கோன் உரைத்த அடையாளம்
ஈது அவன் கை மோதிரமே என்று
அடையாளம் தெரிந்து உரைக்க
மலர்குழலாள் சீதையும்
வில் இறுத்தான் மோதிரம் கண்டு
அனுமான் அடையாளம் ஒக்கும் என்று
உச்சி மேல் வைத்து உகக்க
திறல் விளங்கு மாருதியும்
இலங்கையர் கோன் மாக்கடிகாவை இறுத்து
காதல் மக்களும் சுற்றமும் கொன்று
கடி இலங்கை மலங்க எரித்து
அரக்கர் கோன் சினம் அழித்து மீண்டு அன்பினால்
அயோத்தியர் கோன் தளிர் புரையும் அடியிணை பணிய
கான எண்கும் குரங்கும் முசுவும்
படையாக் கொடியோன் இலங்கை புகல் உற்று
அலையார் கடற்கரை வீற்று இருந்து
செல்வ விபீடணற்கு நல்லானாய்
விரிநீர் இலங்கை அருளி
சரண் புக்க குரை கடலை அடல் அம்பால் மறுக எய்து
கொல்லை விலங்கு பணி செய்ய
மலையால் அணை கட்டி மறுகரை ஏறி
இலங்கை பொடி பொடியாக
சிலை மலி வெஞ்சரங்கள் செல உய்த்து
கும்பனொடு நிகும்பனும் பட
இந்திரசித்து அழியக் கும்பகர்ணன் பட
அரக்கர் ஆவி மாள அரக்கர்
கூத்தர் போலக் குழமணி தூரம் ஆட
இலங்கை மன்னன் முடி ஒருபதும்
தோள் இருபதும் போய் உதிர
சிலை வளைத்துச் சரமழை பொழிந்து
மணி முடி பணி தர அடியிணை வணங்க
கோலத் திருமாமகளோடு
செல்வ வீடணன் வானரக் கோனுடன்
இலகுமணி நெடுந்தேரேறி
சீர் அணிந்த குகனோடு கூடி
அங்கண் நெடு மதிள் புடை சூழ் அயோத்தி எய்தி
நன்னீராடி
பொங்கிளவாடை அரையில் சாத்தி
திருச்செய்ய முடியும் ஆரமும் குழையும்
முதலா மேதகு பல்கலன் அணிந்து
சூட்டு நன்மாலைகள் அணிந்து
பரதனும் தம்பி சத்துருக்கனனும்
இலக்குமணனும் இரவு நன்பகலும் ஆட்செய்ய
வடிவிணை இல்லாச் சங்கு தங்கு முன்கை நங்கை
மலர்க்குழலாள் சீதையும் தானும்
கோப்புடைய சீரிய சிங்காதனத்திருந்து ஏழுலகும்
தனிக்கோல் செல்ல வாழ்வித்து அருளினார்


இந்த ராமாயணம் பற்றி எனது நண்பரும் சென்னை பல்கலைக்கழக வைணவத் துறையின் தலைவருமான டாக்டர் ராகவ்னிடம் சில கேள்விகள் கேட்டேன். இதைத் தவிர பெரியவாச்சான் பிள்ளை ஏதேனும் தனியாக எழுதியுள்ளாரா என்றதற்கு அவர் வால்மீகி ராமாயணம், வியாச மகாபாரதம், பாகவதம் ஆகிய காவியங்களிலிருந்து தெரிவு செய்தெடுத்த பல ஸ்லோகங்களுக்கு அருமையான உரைகள் எழுதியுள்ளதாகவும் கூறினார்.

நிஜமாகவே பெரியவாச்சான் பிள்ளை பிரமிப்புக்கு உரிய மனிதர்தான்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

10 comments:

Anonymous said...

11டி.ஆர்.பாலு?
12.எல்.ஜி.கணேசன்?
13.செஞ்சியார்?
14.கண்ணப்பனுக்கு மடும் ஸ்பெசல் மரியாதை ?
15.கொ.மு.கழகம் தொண்டமுத்தூரில் வெற்றி பெற்றால்?
16.வி.காந்த் 2-3 தொகுதிகளில் வெற்றி பெறும் வாய்ப்பு?
17.கம்யூனிஸ்டுகளின் இரட்டை வேடம் இடைதேர்தலில்.?
18.திரை நட்சத்திரங்களின் அரசியலில் திடீர் பிரவேசம் ?
19.கனிமொழிக்கு மத்திய அமைச்சர் ஆகும் யோகம் அடிக்குமா?
20. தற்சமயம் அமெரிக்காவில் இந்தியர்களுக்கான வேலைவாய்ப்பு எப்படி?
21.அகில இந்திய அரசியல் - தமிழக அரசியல் ஒரு ஒப்பீடு?
22.சோனியா-கலைஞர் நட்பால் மிகுதியாய் சிரமம்படும் நபர் யார்?

Anonymous said...

23.ஆண்/பெண் இவர்களின் குரலை வைத்து என்ன சொல்ல முடியும்?
24. பொதுவாய் நேர்மை, நாணயம்-இருக்கிறதா?
25.அரிசி/பருப்பு விலை ?
26.வர்த்தக சூதாடிகளின் கைவரிசையினால் இனி என்னவாகும்?
27.உலகின் மிகப் பெரிய பணக்காரர் இப்போது யார்?-உங்கள் விமர்சனம்?

28. வரும் கொலை ,கொள்ளைச் செய்திகளை பார்த்தால்?
29.வரதட்சணை ஒழிப்பின் தற்போதைய நிலை என்ன?
30 எய்ட்ஸ் பற்றிய பிரச்சாரம் ?
31.சாலை விபத்துகள் அதிகமாவது பற்றி?
32.கடவுள் (தென்திருப்பேரை பெருமாள்) உங்கள் முன் தோன்றினால்?

Unknown said...

பக்தி மணம் பரப்பும் பதிவுகள் தொடரட்டும்.நன்றி.

RV said...

எந்தெந்த வரி எங்கிருந்து எடுத்தாளப்பட்டது என்றும் சொல்லுங்களேன்! இன்னும் சுவாரசியமாக இருக்கும்! குலசேகர ஆழ்வார்தான் பெரும் ராம பக்தர் என்று நினைவு.

குலக்குமரா காடுறையப் போ என்ற வரி மிக நன்றாக இருக்கிறது.

கோனார் நோட்ஸ் எதுவும் இல்லாமல் பல நூறு ஆண்டு முன்னால் எழுதப்பட்ட வரிகளில் அனேகமாக வார்த்தைகள் புரிவதும் ஒரு feel-good moment.

dondu(#11168674346665545885) said...

@ஆர்வி:
நாலாயிர திவ்யபிரபந்தங்களில் உள்ளன 4000 ஸ்லோகங்கள். அவற்றில் ராமரை ரெஃபர் செய்யும் வரிகள் சில வரும். அந்தந்த பாடலில் அந்தந்த வரி ஒரு பகுதிதான். அவற்றையெல்லாம் சேர்த்து, பிறகு chronological-ஆக வரிசைப் படுத்தி என்றெல்லாம் வேலைகள் உண்டு. அதை செய்துதான் இந்த ராமாயணம் உருவானது. இந்த வேலையே பெரும்பாடு, எல்லோராலும் இயலாது. பெரியவாச்சான் பிள்ளை போன்றவரால் மட்டுமே முடியும். அதைவிட பல மடங்கு கடினம் இப்போது எந்த வரி எந்தப் பாடலில் பொருந்துகிறது என்பதை அறிவது.

திருப்பாவையில் சில பாடல்களில் ராமர் பற்றிய வார்த்தை வந்திருக்கும், ஆனால் திருப்பாவையோ கிருஷ்ணாவதாரத்தை சிலாகிக்கிறது.

4000 பாடல்களையும் கரதலப்பாடமாக அறிந்திருப்பவர் வேண்டுமானால் உங்கள் ஆசையை நிறைவேற்ற இயலும்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

ஜீவி said...

//ஆழ்வார்கள் அருளித் தந்த பாசுரங்களிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.//

'அற்புதம்' என்று மலைப்பதை விட வேறு எதுவும் சொல்லத் தோன்றவில்லை.

Anonymous said...

அந்த காலத்தில் சைவப்பிள்ளைகள் தாங்கள் சைவராகயிருப்பினும், வைணவர்களுக்கு இப்படி தொண்டு செய்திருக்கார்களே? ஆச்சரியம்தான்.

நம் காலத்திலும் ஒரு ரெட்டியார் உண்டு. அவர் பெயர்: ந. சுப்பு ரெட்டியார். அவர் ஒரு சைவர். ஆனாலும் அவர் வைணவ ஆராய்ச்சி மலைக்க வைக்கும்.

’நாலாயிர திவ்யபிரபந்தங்களில் உள்ளன 4000 ஸ்லோகங்கள்...”

ஆழ்வார்கள் எழுதிய தமிழ் வரிகளுக்கும் சுலோகம் என்றா சொல்வார்கள். பேரா. இராகவனிடமே கேட்டுச்சொல்லுங்களேன் அவர்தான் உங்கள் நண்பரே. விளக்குவார். அப்புறம் இங்கு வந்து சொல்லுங்கள்.

இடும்பன்

dondu(#11168674346665545885) said...

பாசுரங்கள் என்றும் சொல்லலாம்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

Anonymous said...

கரெக்டா சொல்லிட்டேள்.

வட்மொழியில் இருந்தாத்தா சுலோகம்வா!

தென்மொழியில் இருந்தா சிம்ப்ளா ஆனா மதிப்பிகுறையாம ‘அருளிச்செயல்’பா.

அப்புறம், இந்தப் பெரியவாச்சான் பிள்ளையைப் பத்தி ஒன்னுமே சொல்லலேயே, ஏன்?

அவா பிள்ளைதானே?

-இடும்பன்-

Anonymous said...

பாசுரங்கள் என்றும் சொல்லலாம். - தொண்டு.

பாசுரங்கள் என்று2தான் சொல்லலாம்.

 

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது