4/25/2010

நங்கநல்லூர் பஞ்சாமிர்தம் - 25.04.2010

வங்கியில் ஒரு அனுபவம்
நேற்று ஒரு தபால் கார்ட் வங்கியிலிருந்து வந்தது. வேலை நேரத்தின்போது அவசியம் வந்து தொடர்பு கொள்ளவும் என அதில் குறிப்பிடப்பட்டிருந்தது. அதில் வேறு விவரங்கள் இல்லை. எரிச்சலுடன் சென்று விசாரித்தால், எங்களது ஃபிக்சட் டெபாசிட்டுகள் அக்கவுண்டில் PAN எண் கோட் செய்யவில்லை என அந்த பெண் அதிகாரி கூறினார். அவரிடம் நாங்கள் ஏற்கனவேயே அந்தக் கணக்கிலும் அதை கோட் செய்ததை அவர்களது ரிகார்டிலிருந்தே எடுத்துக் காட்டினேன்.

மன்னிக்கவும் தவறுதலாக அனுப்பி விட்டோம் என அவர் மென்மையாக கூறினார். அதனால் என்ன பரவாயில்லை எனக் கூறி விட்டு, அதென்ன மொட்டைத் தாதன் குட்டையில் விழுந்தான் என்னும் ரேஞ்சில் இக்கடித வாக்கியம் அமைந்தது எனக் கேட்க, அவர் ஒரு விஷயம் கூறினார்.

பல அக்கௌண்ட்காரர்கள் வீட்டுக்கு தெரியாமல் ஃபிக்சட் டிபாசிட்டுகள் போடுகிறார்கள். நாங்கள் பலான ஃபிக்சட் டிபாசிட்டு அக்கௌண்ட்களில் இன்னின்ன விவரங்கள் தேவை எனக் கூறினால், வீட்டிலுள்ள மற்ற மெம்பர்கள் சம்பந்தப்பட்டவரிடம் அந்த ஃபிக்சட் டெபாசிட்டிலிருந்து பணம் எடுத்துத் தருமாறு அவரை நெருக்குவார்கள் என்பதால் இம்மாதிரி மையமாக எழுதுவதாக குறிப்பிட்டார்.

யோசித்துப் பார்த்தால் அந்த முன்ஜாக்கிரதையும் நியாயமாகவே படுகிறது. இம்மாதிரி ஏற்கனவே பல முறை நடந்திருக்கும் என நினைக்கிறேன். பரவாயில்லை வங்கிகளில் இம்மாதிரி மனிதாபிமான நடவடிக்கைகளும் நடக்கின்றன.

தபால்களில் முகவரி எழுதுதல்
மேலே கூறியதைப் பார்த்து தபால்துறையில் தனது அனுபவங்கள் பற்றி ஒரு போஸ்ட் மாஸ்டர் சில ஆண்டுகளுக்கு முன்னால் ஒரு வாரப்பத்திரிகையில் எழுதியது இப்போது நினைவுக்கு வருகிறது.

பெறுநரின் பெயரை இட்டு விட்டு அவரது முகவரியையும் எழுதியிருக்கிறார்கள். அதன் கீழேயே, (அங்கில்லாவிட்டால்) என எழுதி பக்கத்துத் தெருவில் உள்ள இன்னொரு முகவரியையும் எழுதியிருக்கிறார்கள். இது எப்படி இருக்கு?

இதைவிட வினோதமாக முகவரி இவ்வாறு எழுதியிருக்கிறார்கள். மிஸ். கோகிலா (அவள் அப்பாவுக்குத் தெரியாமல்), கூடவே முகவரியின் மீதி விவரங்கள். கண்டிப்பாக அப்பெண்ணின் காதலன் எழுதியிருக்க வேண்டும் (பை தி வே அவ்விரு கடிதங்களும் கேட்டுக் கொண்ட முறைப்படியே பட்டுவாடா செய்யப்பட்டதாக அந்த போஸ்ட் மாஸ்டர் எழுதியுள்ளார்).

மோசக்காரனுக்கு மோசக்காரன்
கந்துவட்டிக்காரர்களிடமே கொள்ளை அடித்த ஒரு பலே கும்பல் பற்றிய செய்தியை இங்கு பார்க்கலாம்.

அதன்படி கோவை நகரில் கடனளிப்பு முறையில் கந்துவட்டி பணம் தினமும் 20 கோடி ரூபாய்க்கும் அதிகமாக புழங்குவதாக, வியாபாரிகள் தெரிவிக்கின்றனர். பதிவு செய்யப்படாமல் நடத்தப்படும் மறைமுக பைனான்ஸ்காரர்கள், சமீபகாலமாக பல்வேறு பிரச்னைகளுக்கு உள்ளாகியுள்ளனர்.

கந்துவட்டிக்காரர்களை, ‘மனித உரிமை அமைப்பு’ பெயரில் மிரட்டி பணம் பறிப்பது அதிகரித்துள்ளது. சமீபத்தில், காந்திபுரத்தைச் சேர்ந்த கந்துவட்டி பைனான்சியரின் வீட்டுக்குச் இரவில் சென்ற கும்பல், அங்கிருந்த கணக்கு ஆவணங்களை பறித்துள்ளது. ‘நாங்கள், மனித உரிமை ஆணையத்துடன் நேரடி தொடர்புடையவர்கள். உங்கள் மீது கந்துவட்டி புகார்கள் வந்துள்ளன’ என மிரட்டியுள்ளனர். தொடர்ந்து, கந்துவட்டிகாரரிடம் 15 ஆயிரம் ரூபாயை பறித்துச் சென்றனர்.

இதே போன்ற மற்றொரு பணம் பறிப்பு சம்பவம், சுந்தராபுரம் பகுதியிலும் நடந்துள்ளது. பதிவு செய்யப்படாமல் பைனான்ஸ் நடத்துவோர், பணம் பறிப்பால் பாதிக்கப்பட்டாலும் கூட போலீசில் புகார் அளிக்க அச்சப்படுகின்றனர். கந்துவட்டி தடைச் சட்டத்தில் தங்களை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துவிடுவார்களோ, என்ற அச்சமே இதற்கு காரணம். இது, பணம் பறிக்கும் கும்பலுக்கு வசதியாக போய்விட்டது. இதைத்தான் திருடனுக்கு தேள் கொட்டிய மாதிரி என்பார்களோ.

குருபிரசாதின் கடைசி தினம்
இக்கதை ஒருவித பாசாங்கும் இல்லாமல் எழுதப்பட்டது. நைட்ஷிஃப்டில் செரெப்ரல் ஹெமரேஜால் மயங்கி, மெதுவாக கோமா நிலைக்கு சென்று கொண்டிருந்த அந்த குருபிரசாதின் கடைசி தினம் மிக நுட்பமாக ரன்னிங் காமெண்டரி போல காட்டப்பட்டிருந்தது.

நைட்ஷிட் சமயத்தில் கம்பெனி ஆஸ்பத்திரியில் டியூட்டியில் இருந்திருக்க வேண்டிய லேடி டாக்டர் ராஜலட்சுமி வீட்டில் மீன்கறி வதக்கிக் கொண்டிருக்க, அவளை பிக் அப் செய்ய வந்த வேனில் முதலில் தனது இரு மகள்கள் சென்றிருக்கும் வீட்டுக்கு போய் அவர்களிடம் வீட்டுச் சாவியை கொடுத்து விட்டு ஆடி அசைந்து கொண்டு ஆஸ்பத்திரிக்கு வந்து, மேலோட்டமாக பார்த்துவிட்டு ஃபுட் பாயிசனிங்காக இருக்கும் என குருட்டுத்தனமாக யோசித்து ஜெனெரல் ஆஸ்பத்திரிக்கு அழைத்துச் செல்ல ஆம்புலன்ஸ் ஏற்பாடு செய்து விட்டு, நோயாளியுடன் அதே ஆம்புலன்சில் போய் தனது இரு மகள்களையும் பிக் அப் செய்து கொண்டு தன் வீட்டில் இறங்கிக் கொள்ள என காமசோமாவென நடவடிக்கைகள் தொடர்கின்றன.

அவ்வப்போது குருபிரசாதின் ஹெமெராஜால் அவன் உடலில் ஏற்படும் சரிசெய்ய முடியாத செல் இழப்புகள் ரன்னிங் காமெண்டரி ரூபத்தில் சொல்லப்படுகின்றன.

ஆம்புலன்ஸில் வந்த குருபிரசாத்தை ஜெனரல் ஆஸ்பத்திரிக்காரர்கள் இன்னொரு ஆஸ்பத்திரிக்கு எடுத்துப் போகுமாறு சொல்ல, அந்த ஆம்புலன்ஸ் டிரைவர் தனக்கு அவ்வாறு செய்யும்படி கம்பெனி டாக்டர் சொல்லவில்லை எனக்கூறி கம்பெனிக்கே கொண்டுவர என ரோலர் கோஸ்டராக நிகழ்வுகள் நடக்கின்றன.

கடைசியில் குருபிரசாத்திற்கு சரியான ட்ரீட்மெண்ட் தர முயற்சிக்கும் சமயத்தில் எல்லாமே கையை மீறி விட்டன.

அவன் மரணத்துக்கு பிறகு கம்பெனியில் பெரிய ஸ்ட்ரைக் வெடிக்க, கம்பெனி டாக்டர் ராஜலட்சுமி டிஸ்மிஸ் செய்யப்பட (அவளுக்கு அது இன்னும் தெரியாது, அச்சமயம் தன் அக்கா வீட்டில் தனக்கு கம்பெனியில் பிரமோஷன் கிடைக்கப் போவதாக அவளிடம் கூறிக் கொண்டிருக்கிறாள்), ஆம்புலன்ஸ் டிரைவருக்கு யூனியன் பாதுகாப்பு இருப்பதால் அவனுக்கு வேறு பிரிவுக்கு மாற்றல் வருகிறது.

எல்லா தொழிலாளர்களும் குருபிரசாத்தின் உடலுக்கு அஞ்சலி செலுத்த ஏதுவாக கம்பெனியே பஸ்கள் ஏற்பாடு செய்ய, அவர்கள் நகரில் தத்தம் வீடுகள் இருக்கும் ஏரியாக்களில் இறங்கிக் கொள்ள, கடைசியில் ஆஸ்பத்திரிக்கு உள்ளே மூன்று யூனியன் லீடர்கள் மட்டும் செல்கின்றனர். அதில் ஒருவன் கேட்கிறான், “செத்தவன் பெயர் என்னவென்று சொன்னார்கள்”? என்று.

எவ்வளவு பேர் சுற்றி இருந்தாலும் இறப்பவன் என்னவோ தனியாகவே இருக்கிறான். ஒரு முறைக்கு மேல் இக்கதையை என்னால் படிக்க முடியவில்லை. உடம்பை என்னவோ செய்து விட்டது.

அன்புடன்,
டோண்டு ராகவன்

9 comments:

கிருஷ்ண மூர்த்தி S said...

ஒரு வாடிக்கையாளருக்குக் கடிதம் அனுப்பும்போது, ரிஜிஸ்தர் தபாலாக இல்லாத பட்சத்தில், அதிக விவரங்கள் இல்லாமல், வங்கிக்கு வருகை தரவும் என்று மட்டுமே எழுதுவது சரியான நடை முறைதான்!

டெபாசிட் விஷயமாக இருந்தால் பான் நம்பர் அல்லது Form 15G இருக்க வேண்டும். பெரும்பாலான வாடிக்கையாளர்கள் அந்த விவரங்களைத் தருவதில்லை. மார்ச்சுடன் முடிந்த நிதியாண்டுக்கு, TDS பிடித்து அனுப்ப வேண்டிய நேரம், பிடித்து அனுப்பினாலும் தகராறு வரும், ஆக, ஒரு குறிப்பிட்ட அளவுக்கு மேல் வட்டி வரவு உள்ள டெபாசிட்தாரர்களுக்கு கடிதம் மூலம் தகவல் சொல்லி, தேவைப் படுகிற விவரங்களைக் கேட்பது, இந்த சீசனில் நடப்பது தான்!

உங்களுடைய மனைவியே, ஒரு வங்கியில் பணியாற்றியவர் தானே!

பழமைபேசி said...

//யோசித்துப் பார்த்தால் அந்த முன்ஜாக்கிரதையும் நியாயமாகவே படுகிறது. இம்மாதிரி ஏற்கனவே பல முறை நடந்திருக்கும் என நினைக்கிறேன். பரவாயில்லை வங்கிகளில் இம்மாதிரி மனிதாபிமான நடவடிக்கைகளும் நடக்கின்றன//

வணக்கம் ஐயா! இது மனிதாபிமான நடவடிக்கையா?

இப்படிதாங்க ஒன்னுக்கு சரிகட்ட... சரிகட்டுனதைச் சரிகட்ட இன்னொன்னு... அந்த இன்னொன்னுக்கு இன்னொன்னுன்னு வாழ்க்கையே பூதாகரமாயிட்டு இருக்கு ஊர்ல....

உள்ளதை, உள்ளபடிச் சொன்னா என்ன? வீட்டுல நெருக்கடி கொடுத்தா, குடுக்க முடியாதுன்னு சொல்ல வேண்டியதுதானே?

ஒளிஞ்சிருந்து பாக்குறது... பின்னாடி இருந்து கைய வுடுறது.... இங்க பாருங்க, பிடிச்சிருந்தா நேராப் போயி, எனக்கு உங்ககோட ஒரு மாலை நேரத்தை செலவழிக்கணும் போல இருக்கு, உங்களுக்கு சம்மதமா? இல்லையா, வுடு!

முடிஞ்சது பிரச்சினை! இது ஒரு உதாரணத்துக்குதான் சொல்லுறேன்... ...in all levels, we need transparency while preserving privacy!!

dondu(#11168674346665545885) said...

2010/4/26 Tamilish Support

Hi Dondu,

Congrats!

Your story titled 'நங்கநல்லூர் பஞ்சாமிர்தம் - 25.04.2010' made popular by tamilish users at tamilish.com and the story promoted to the home page on 25th April 2010 09:00:02 PM GMT

Here is the link to the story: http://www.tamilish.com/story/233771

Thank you for using Tamilish.com

Regards,
-Tamilish Team
Thanks Tamilish team

நன்றி தமிழிஸ்

dondu(#11168674346665545885) said...

@கிருஷ்ணமூர்த்தி
வீட்டுக்கு வந்து என் மனைவியிடம் கூறியபோது அவரும் இம்மாதிரி பல வயதான பெற்றோர்களுக்கு அவர்தாம் ஊதாரி பிள்ளைகளால் இது விஷயத்தில் தரப்பட்ட நெருக்கடிகளை ஊர்ஜிதம் செய்தார்.

@பழமைபேசி
பல பெரியவர்கள் அம்மாதிரி நெருக்கடிகளை சமாளிக்கும் மன வலிமையுடன் இல்லை.

அன்புடன்,
டோண்டு ராகவன்

Anonymous said...

இங்க பாருங்க, பிடிச்சிருந்தா நேராப் போயி, எனக்கு உங்ககோட ஒரு மாலை நேரத்தை செலவழிக்கணும் போல இருக்கு, உங்களுக்கு சம்மதமா? இல்லையா

Mr.Mani -
Elutharathukku mattume nallayirukira visayam!

நானானி said...

//எவ்வளவு பேர் சுற்றி இருந்தாலும் இறப்பவன் என்னவோ தனியாகவே இருக்கிறான். ஒரு முறைக்கு மேல் இக்கதையை என்னால் படிக்க முடியவில்லை. உடம்பை என்னவோ செய்து விட்டது.//

எனக்கும்தான்.

நானானி said...

வங்கியின் முன்னெச்சரிக்கை நியாயமானதுதான். பாராட்டக்கூடியதும் கூட.

ஜீவி said...

சுஜாதாவின் அற்புத குறுநாவலாயிற்றே 'குருபிரசாத்தின் கடைசி தினம்'?
எனக்கென்னவோ அவரது கணேஷ்-வசந்த் துப்பறியும் கதைகளைவிட, இப்படிப்பட்ட சமூக நாவல்களில் அவர் இயல்பாக அதிகம் ஜொலிப்பதாகத் தோன்றும்.
நிச்சயம் அவரது உயிர்ப்புடனான எழுத்துக்களில் அவர் வாழ்கிறார்.

sury siva said...

அண்மையில் நான் சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள ஸ்ரீராம் டிரான்ஸ்போர்ட் ஃபைனான்ஸ் நிறுவனத்திற்கு
அதில் இருக்கும் ஃபிக்ஸ்ட் டெபாஸிட்டுகளை திரும்பவும் பெற சென்றிருந்தேன். எனது இரு டெபாசிட்டுகள்
முதிர்ந்து இரு மாதங்கள் ஆகி விட்டிருந்தன. ஏன், இந்த முதிர்வு பற்றிய விவரம் அறிவிக்க கூடாதா, முதிர்வு தேதி முதல் வட்டி கிடையாது, ஆனால் அதை ரென்யூ செய்தால் அன்றைய தேதி முதல் ரென்யூ செய்கிறோம் என்றார்கள்.
அவர்களது பதில் திருப்தி அளிப்பதாக இல்லை.

எனது பழைய நண்பர் அந்த நிறுவனத்திலேயே டைரக்டராக இருக்கிறார் என்று அறிந்து அவரிடம்
தொலை பேசியில் தொடர்பு கொண்டபோது அவர் சொன்னது காலத்துக்கு ஏற்ற வாறே இருந்தது.
பல குடும்பத்தலைவிகள் ஃபிக்ஸ்ட் டெபாஸிட் போட்ட விவரங்கள் அவர்கள் கணவன்மார்களுக்கே
தெரியாதாம். இந்த அகெள்ன்ட் சம்பந்தமாக விவரங்கள் கடிதம் மூலம் அவர்கள் வீட்டிற்கு வருவதை அவர்கள்
விரும்புவது இல்லையாம். கான்ஃபிடன்ஷியலிடி காரணமாக, இக்கடிதம் அவர்கள் எழுதுவதில்லையாம்.



சுப்பு ரத்தினம்.

 

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது