1/07/2006

C.P.W.D - அனுபவங்கள் - 4

மத்தியப் பொதுப்பணித்துறை மிக ஆழமான பாரம்பரியம் உடையது. 1854-ஆம் வருடத்தில் துவக்கப்பட்டது. மத்திய அரசுக்கு சொந்தமான கட்டிடங்கள், தோட்டங்கள் ஆகிய எல்லாவற்றையும் பராமரித்து வருகிறது. அது செலவு செய்யும் துறை. விளக்குகிறேன். கட்டிடங்கள் கட்டி, தோட்டங்களை நிர்மாணித்து லாபத்துக்கு விற்கும் துறை அல்ல அது. இதை இன்னும் அதிகமாக பார்க்கலாமா?

மார்ச் 31 அணுகுகிறது என்றாலே இத்துறையின் கோட்டகப் பொறியாளர்கள் காய்ச்சல் வந்தது போல அலைவார்கள். எப்படியாவது திட்டத்தில் தங்கள் கோட்டத்துக்கு ஒதுக்கப்பட்ட பணத்தை செலவு செய்ய வேண்டும். செலவு செய்யாது மிச்சம் பிடித்தால் குட்டுதான் விழும். அடுத்த ஆண்டு பட்ஜெட்டில் சங்குதான். ஆகவே துணைப்பொறியாளர்கள், இளநிலைப் பொறியாளர்கள் எல்லோரும் காலில் கஞ்சி விட்டு கொண்டது போல ஓட வேண்டியதுதான்.

நான் ஏற்கனவே கூறியபடி முதல் மூன்றரை ஆண்டுகள் திட்டப் பிரிவில் இருந்ததால் இந்த தேதியின் மகத்துவம் எனக்குத் தெரியாது போயிற்று. ஆக, 1971-ல் வேலைக்கு சேர்ந்த நான் 1975-ல்தான் முதல் முறையாக இதை எதிர்க்கொண்டேன். மாலை 4 மணி அளவில் கோட்டகப் பொறியாளர் எங்கள் அலுவலகத்துக்கு வந்து இன்னும் சிறிது நேரத்தில் மின்விளக்குகள் சுமார் 2000 வந்து இறங்கும் என்றும், உடனே பில்போட்டு அனுப்ப வேண்டும் என்றும் கூறிச் சென்றார். எங்கள் ஏ.இ. வீரப்பன் அவர்கள் எங்கள் நால்வரையும் அப்படியே நிறுத்திக் கொண்டார். பொருள்கள் இரவு 8 மணிக்கு வர, விறு விறு என்று நாங்கள் அவற்றை எண்ணி சரி பார்க்க, சம்பந்தப்பட்ட ஸ்டோர்ஸ் ஜே.இ. 10 மணிக்கு பில் போட, அது 10.30-க்கு டிவிஷன் ஆஃபீஸை அடைந்தது. அங்கு அக்கௌண்டண்ட், ஆடிட்டர், காசாளர் மற்றும் இ.இ. எல்லோரும் காத்திருக்க 11 மணிக்கு பில் சரிபார்க்கப்பட்டு செக் கிழிக்கப்பட்டது.

அலுவலகம் சாஸ்திரிபவனத்தில். நான் செல்ல வேண்டியது நங்கநல்லூருக்கு, எங்கள் ஏ.இ.யின் வீடு கிரோம்பேட்டையில். பொடி நடையாக சேத்துப்பட்டு ரயில் நிலையம் வந்து வண்டி பிடிக்கும்போது இரவு 11.30. எனக்கு வீட்டம்மாவை நினைத்து ஒரே உதறல். அவரிடம் முன்னால் இது பற்றி எதுவும் கூறவில்லை, ஏனெனில் எனக்கு இம்மாதிரி நடக்கும் என்பதே தெரியாது. டெலிஃபோன் வசதி வேறு அந்தக் காலத்தில் பரவலாகக் கிடையாது.

வீரப்பன் அவர்களிடம் பாதி சீரியஸாகவும் பாதி விளையாட்டாகவும் என்னுடன் வீடு வரை வந்து என் மனைவியிடம் நான் உண்மையிலேயே ஆஃபீஸில் இருந்ததாகக் கூறுமாறு கேட்டுக் கொள்ள அவரும் ஒத்துக் கொண்டார். ஆனால் ஒரு கண்டிஷன். பிறகு என் வீட்டிலிருந்து அவருடன் ப்ய்றப்பட்டு கிரோம்பேட்டையில் உள்ள அவர் வீட்டுக்கு வந்து அவர் மனைவியிடம் நான் சாட்சி சொல்ல வேண்டும் எனக் கேட்டுக் கொண்டார். சரி இது காரியத்துக்காகாது என்று நான் மட்டும் மீனம்பாக்கத்தில் இறங்கி தைரியமாக வீட்டிற்கு சென்றேன்.

அடுத்த நாளைக்கு ஒரு புடவை வாங்கி வீட்டம்மாவிற்கு தர வேண்டியது பற்றி இங்கு மேலும் பேச வேண்டாமே?

அன்புடன்,
டோண்டு ராகவன்

2 comments:

ENNAR said...

சேலை வாங்கிக் கொடுத்து ஏமாற்றினீர்கள் இப்பொழுதுதான் தெறிகிறது மேல் சொன்னதெல்லாம் நாடகம். தங்களைப்பற்றி ஐயம் மாமிக்குண்டு அதான். நாங்கள் எல்லாம் அப்படி இல்லை சார்.

dondu(#11168674346665545885) said...

"சேலை வாங்கிக் கொடுத்து ஏமாற்றினீர்கள் இப்பொழுதுதான் தெரிகிறது"
நீங்க வேற, அப்படியெல்லாம் போட்டுக் கொடுத்துடாதீங்க சார்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

 

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது