3/02/2010

வாடிக்கையாளரை அணுகும் முறைகள் - 1

நான் ஏற்கனவே யாழ்தேவி தளமேலாளருக்கு சொன்னபடி, வாடிக்கையாளர்களை அணுகும் முறைகள் என நான் கடந்த 35 ஆண்டுகளாக கண்டறிந்தவற்றை மீண்டும் பகிர்ந்து கொள்கிறேன். அந்த 10 பதிவுகள் வந்த சமயம் யாழ்தேவியே இல்லை. ஆகவே அதன் பயனாளர்களுக்காக இந்த மீள்பதிப்புகள். முதலில் பகுதி- 1.

1975-லிருந்து நான் மொழி பெயர்ப்பு வேலைகளைச் செய்து வருகிறேன். விடாமல் நாம் வேலைகள் பெற நம்மிடம் வாடிக்கையாளரை எப்படி அணுகுவது என்பது பற்றியத் தெளிவான கருத்துகள் இருக்க வேண்டும். அவை இருந்தாலே பாதி காரியம் முடிந்த மாதிரித்தான்.

1. எல்லாவற்றையும் விட முக்கியமானது புது வாடிக்கையாளரைப் பிடிப்பது. எவ்வாறு கடிதம் எழுத வேண்டும்? யாருக்கு எழுத வேண்டும் என்றெல்லாம் பார்க்கலாம். இதற்கு மட்டும் பின்னால் ஒரு தனிப் பதிவு தேவைப் படும்.

2. உங்களை நீங்கள் அறிய வேண்டும். அதாவது உங்களால் எது முடியும் எது முடியாது என்பதில் தெளிவாக இருக்க வேண்டும். தேவையில்லாது வாக்குறுதிகள் அளித்து விட்டு அவற்றை நிறைவேற்றாது போனால் உங்கள் நம்பகத்தன்மை அடிபட்டு விடும். உதாரணத்துக்கு வேலை எப்போது முடித்துத் தரவேண்டும் என்று வாடிக்கையாளர் கூறும்போது அது உங்களுக்குத் தோதுப்படுமா என்று பார்த்தே ஒத்துக் கொள்ள வேண்டும். பத்துக்கு ஒன்பதுத தருணங்களில் அவசரம் என்று வாடிக்கையாளர் கூறுவது உதாராகத்தான் இருக்கும். அவசரமான வேலை என்றால் ஒன்றரை மடங்கு விலை என்றுக கூறிப் பாருங்கள் அவசரம் என்பது அவசரமாகவே மறைந்து விடும். இது பற்றிப் பின்னால் மேலும் விவரமாகக் கூறுகிறேன்.

3. உங்கள் விலை என்ன என்பதில் தெளிவாக இருங்கள். மொழி பெயர்ப்பாளர்கள் பலர் இதில்தான் கோட்டை விடுகிறார்கள். அவர்களைப் பொருத்தவரை வேலை சுலபமாகவே இருக்கலாம். அவர்களுக்கு மிகவும் பிடித்ததாகவே கூட இருக்கலாம். அதை எல்லாம் வாடிக்கையாளரிடம் கூற வேண்டிய அவசியம் இல்லை. பிறகு அவர் உங்களுக்கு ஏதோ சலுகை காட்டுவது போலத் தோற்றம் வந்து விடும். இது பற்றியும் அடுத்த பதிவுகளில் மேலும் கூறுவேன்.

4. வாடிக்கையாளர்களின் வாக்குறுதிகளை அப்படியே நம்பி விடாதீர்கள். தங்களிடம் ஆயிரக்கணக்கான பக்கங்கள் இருப்பதாகவும் நிறைய வேலை கொடுக்க முடியும் என்றும் ஆசை காட்டுவார்கள். இதுவும் மேலே கூறியதை போன்று அனேகமாக ஒரு பீலாவாகத்தான் இருக்கும். அவர்களிடம் ஒரே ஒரு வேலை இருந்தாலும் அவ்வாறுதான் கூறுவார்கள். அவர்கள் அக்கறை முடிந்த அளவுக்கு விலையைக் குறைப்பதே ஆகும். இதை நான் என்னளவில் எவ்வாறு கையாண்டேன் என்பதையும் பின்னொரு பதிவில் கூறுவேன்.

5. தேவையில்லாத விவரங்கள் கொடுக்காதீர்கள். உதாரணத்துக்கு நீங்கள் ஒரு முழு நேர வேலை வைத்திருக்கிறீர்கள். மொழிபெயர்ப்பு என்பது பகுதிநேரவேலை. அவ்வேலைக்கான வாடிக்கையாளரிடம் நீங்கள் எங்கு வேலை செய்கிறீர்கள் என்பதை ஒரு போதும் கூறக்கூடாது. அவர்களும் சும்மா இருக்க மாட்டார்கள். நீங்கள் எங்கு வேலை செய்கிறீர்கள் என்பதை அடிக்கடி கேட்பார்கள். மரியாதையுடன் அதே நேரத்தில் உறுதியுடன் தகவல் தர மறுத்து விடவும். இது பற்றி நான் சந்தித்த சுவாரஸ்யமான அனுபவங்களைப் பிறகு கூறுகிறேன்.

6. எப்போதும் உங்களைத் தொடர்பு கொள்ள ஏதுவாக உங்கள் தகவல் வழிகளைத் திறந்து வைக்கவும். தொலைபேசி வைத்திருப்பது மிக முக்கியம். தொலைபேசி அழைப்புகளை நீங்களே கையாளுவது முக்கியம். குழந்தைகளைத் தொலைபேசியை எடுக்க விடாதீர்கள். அது முடியாது என்றால் உங்களுக்கென்றுத் தனியாக செல்பேசி வைத்துக் கொள்ளுங்கள். அது உங்களிடம் மட்டும் இருக்க வேண்டும். செல்பேசி "யூனிவர்செல்"பேசியாக மாறக் கூடாது. இதில் பல சாத்திய கூறுகள் உள்ளன. அவை பற்றிப் பிறகு.

7. உங்கள் அப்போதைய நிலை எதுவாக இருப்பினும் அதன் சாதகமான அம்சங்களையே வலியுறுத்தவும். 2002 வரை என்னிடம் கணினி இல்லை. இப்போது உண்டு. இரண்டு நிலைகளையும் நான் எனக்குச் சாதகமாக மாற்றிக் கொண்டேன். அது பற்றிப் பிறகு.

8. வேலை செய்தால் மட்டும் போதாது. வரவேண்டிய தொகைகளையும் வசூலிக்கத் தெரிய வேண்டும். இது சம்பந்தமாக பல சுவாரசியமான நிகழ்ச்சிகள் குறித்துப் பிறகு விரிவாகப் பேசுவேன்.

மேலே கூறியவற்றையும், மேலும் கூறப் போவதைப் பற்றியும் பேச என்னுடைய யோக்கியதாம்சங்கள் என்ன? சமீபத்தில் 1975-லிருந்து நானே உணர்ந்துக் கடைபிடித்ததைப் பற்றித்தான் கூறப்போகிறேன். நான் சென்னையில் வெற்றிகரமாகச் செயல் புரியும் ஒரு மொழி பெயர்ப்பாளன் என்றுக் கூறுவதைத் தடுக்க என்னிடம் பொய்யடக்கம் இல்லை. தில்லியில் இருந்தபோதும் எனக்கு வெற்றி கிடைத்து வந்தது.

இஃது எத்தனை பகுதிகளாக வரும் என்பதோ, விடாமல் ஒன்றன் பின் ஒன்றாக வருமோ அல்லது விட்டு விட்டு வருமோ என்பது பற்றி இன்னும் முடிவெடுக்கவில்லை. சோ, சுஜாதா, பெரியார், பார்ப்பனீயம், இஸ்ரேல், ஹைப்பர் லிங்குகள் ஆகியவையுங்கூட நடுவில் தேவைக்கேற்ப வரலாம் என்பதையும் கூறி விடுகிறேன். (அவ்வாறே வந்தும் விட்டன).

அன்புடன்,
டோண்டு ராகவன்

9 comments:

-/பெயரிலி. said...

ஐயா, தங்கள் பதிவுகளையெல்லாம் ஒரு சொல் விடாமல் வாசித்து வருகிறேன். மொழி, மொழிபெயர்ப்புகளுடான தங்கள் கருத்துகள், பட்டறிவு ஆகியவை அருமை. ஆனால், தமிழைக் கொஞ்சம் கவனிக்கலாமே: "ஒரு உதாராகத்தான்" இனை விட்டுவிடலாம். ஆனால், கீழ்க்கண்ட சொற்றொடர்களைக் கொஞ்சம் கவனியுங்களேன். (தவறாக எடுத்துக்கொள்ளாதீர்கள்; தனியே சுட்ட உங்கள் அஞ்சல் முகவரி தெரியாது)

தெளிவானக் கருத்துகள் = தெளிவான கருத்துகள்
எவ்வாறுக் கடிதம் = எவ்வாறு கடிதம்
ஒன்பதுத் தருணங்களில் = ஒன்பது தருணங்களில்
நிறைவேற்றாதுப் போனால் = நிறைவேற்றாது போனால்
என்றுப் பார்த்தே = என்று பார்த்தே
ஆயிரக்கணக்கானப் பக்கங்கள் = ஆயிரக்கணக்கான பக்கங்கள்
பிறகுக் கூறுகிறேன் = பிறகு கூறுகிறேன்
என்பதுப் பகுதி நேர வேலை = என்பது பகுதிநேரவேலை
பல மொழி பெயர்ப்பாளர்கள் = மொழிபெயர்ப்பாளர்கள் பலர்
பிடித்ததாகவே கூட = பிடித்ததாகவேகூட
என்றுக் கூறிப் = என்று கூறிப்
அடுத்தப் பதிவுகளில் = அடுத்த பதிவுகளில்
எத்தனைப் பகுதியாக = எத்தனை பகுதிகளாக
எவ்வாறுக் கையாண்டேன் = எவ்வாறு கையாண்டேன்
தொலை பேசியை = தொலைபேசியை
பிறகுக் கூறுகிறேன் = பிறகு கூறுகிறேன்
சாத்தியக் கூறுகள் = சாத்தியக்கூறுகள்
இது எத்தனைப் பகுதியாக = இஃது எத்தனை பகுதிகளாக
வர வேண்டியத் தொகைகளையும் = வரவேண்டிய தொகைகளையும்
ஆகியவையும் கூட = ஆகியவையுங்கூட

dondu(#11168674346665545885) said...

மிக்க நன்றி, பெயரிலி அவர்களே. நீங்கள் குறிப்பிட்டவற்றை என் பதிவில் உள்ளீட்டுள்ளேன். என் மின்னஞ்சல் முகவரி: raghtransint@gmail.com

அன்புடன்,
டோண்டு ராகவன்

dondu(#11168674346665545885) said...

அருமையான சுருக்கத்திற்கு நன்றி. வினோத் துவா அவர்கள்தான் நினைவுக்கு வருகிறார். பிரணாய் ராய் முதலியோர் ஆங்கிலத்தில் தங்கள் அலசல்களைக் கூற, துவா அவர்கள் இரண்டு அல்லது மூன்று வரிகளில் ஹிந்தியில் அவற்றின் சாரத்தைக் கூறுவார்.
சீக்கிரம் வருகிறேன்.
அன்புடன்,
டோண்டு ராகவன்

அன்பு said...

உங்கள் தொடருக்குக்காக காத்திருக்கிறேன்.

உங்களுடைய பலகால அனுபவங்களை, உங்கள் பொன்னான நேரத்தை இதுபோன்ற மிக பயனுள்ள பதிவுகளாக பதிவுசெய்தால் பலருக்கும் பயனுள்ளதாக இருக்கும் என்பது எனது தாழ்மையான விண்ணப்பம். அது இன்று கூடிவந்திருப்பதற்கு உங்களுக்கு நன்றி.

தொடர் தொடங்கட்டும்.

Sri Rangan said...

Sehr geehrter Herr Dondu Raghavan,
mit diesem schreiben teile ich Ihnen die Erfahrungen von Ihre eigne leben ist wichtig fuer die anfaenger mit.Berichten Sie bitte Immer was besonderer sachen -was heute zu tag wichtig ist!aber Bitte nicht mit dem Judische vergangenheit und Hitler. Heute was menschen darf-darf nicht ist auch sehr sehr wichtig.

Die Bedeutung der sozialen fragen fuer Hitler wissen wir mehr als Herr Dondu.

Mit freundlichen Gruessen
P.V.Sri Rangan

dondu(#11168674346665545885) said...

நன்றி சிறீரங்கன் அவர்களே. நாம் இனியத் தமிழிலேயே எழுதலாமே. நிற்க. இப்போது எழுதவிருப்பது பல பதிவுகளாக வரும். எண்ணங்களைக் கோர்வையாக்கிக் கொண்டு எழுத வேண்டியது அது.
நடுநடுவில் மற்றவையும் வரும். எது வருமோ இல்லையோ, இஸ்ரேல் கண்டிப்பாக வரும். அது என் மூச்சு.
அன்புடன்,
டோண்டு ராகவன்

அ. இரவிசங்கர் | A. Ravishankar said...

பயனுள்ள குறிப்புகள். பலவற்றை நானும் அனுபவத்தில் உணர்ந்து வருகிறேன். நன்றி.

வடுவூர் குமார் said...

ந‌ம‌க்கு என்ன‌ தெரியும் என்ற‌ தெளிவு தான் ப‌ல‌ வேலைக‌ளுக்கும் இந்த‌ ப‌திவுக்கும் ஆதார‌ சுருதி.
அவ‌ற்றை உங்க‌ள் பாணியிலேயே சொல்லுங்க‌ள் தெரிந்துகொள்ள‌லாம்.
ச‌மீப‌த்தில் எங்க‌ள் அலுவ‌ல‌க‌த்தில் அர‌பிக்க்கில் இருந்து ஆங்கில‌த்துக்கு மொழிபெய‌ர்பாள‌ர்க‌ளை தேடி க‌ண்டுபிடித்த‌ போது தான் இதில் இருக்கும் வியாபார‌ வீரிய‌ம் தெரிந்துகொண்டேன்.

mohamedali jinnah said...

அருமையான கட்டுரை .

 

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது