7/08/2009

நீண்ட நாட்களுக்கு பிறகு ஒரு நண்பனுடன் சந்திப்பு

நான் ஏற்கனவே பல இடங்களில் சொல்லி வருவது போல என்னுடைய புத்தகம் படிக்கும் பழக்கம் மிகவும் குறைந்துதான் போய் விட்டது. அப்படியே படித்தாலும் ஒரே மூச்சில் படிப்பது என்பது அறவே இல்லாமல்தான் ஆகிவிட்டது. ஹாரி பாட்டர் நாவல்கள் மட்டும் விதி விலக்கு என வைத்து கொள்ளலாம். அறுபதுகளில் நான் அதிகம், அதுவும் ஒரே மூச்சில் படித்த எழுத்தாளர்களுள் Nevil Shute மிகவும் முக்கியமானவர். பிரிட்டனில் பிறந்து வளர்ந்தவர் தன் வாழ்நாட்களின் கடைசி பத்து ஆண்டுகளை ஆஸ்திரேலியாவில் கழித்தார்.

சென்ற சனிக்கிழமை கடலூர், கார்ப்பங்காடு, திருவரங்கம் ஆகிய இடங்களில் உள்ள வைணவத் திருத்தலங்களுக்கு எனது ஷட்டகரின் காரில் ஒரு டூர் அடித்தோம். அப்போது கார் பயணத்தின்போது படிக்க நெவில் ஷுட் எழுதிய Trustee from the Toolroom கையோடு எடுத்து சென்றேன். அக்கால கட்டத்தில் மிகவும் விரும்பி படித்த நாவல், ஆகவே அதிலிருந்து எனக்கு பிடித்த பகுதிகளை மறுபடி படிக்கவே எடுத்து சென்றேன். ஆனால் என்ன ஆச்சரியம், முதல் பாராவை பார்த்தவன் அப்படியே இரண்டாம் மூன்றாம் பாராக்களுக்கு தாவி அப்படியே முழு புத்தகத்தையுமே ஒரே மூச்சில் படித்தேன். நீண்ட நாட்களுக்கு பிறகு ஒரு நண்பனை சந்தித்த உணர்வு. நாவலை படிக்க படிக்க முதல் முறை படித்த போது மிஸ் செய்த பல விஷயங்கள் இப்போது கண்ணுக்கு புலப்பட்டன. சில நிகழ்ச்சிகளில் இருந்த நினைவுப் பிழைகள் சரி செய்யப்பட்டன.

அதிலும் முக்கியமாக ஒரே மூச்சில் புத்தகத்தை படித்து முடிக்கும் அனுபவமே ஒரு பழைய நண்பனை பார்ப்பது போலத்தான் இருந்தது. நாவலின் கதாநாயகன் Keith Stewart மேற்கொண்ட வேலை பிரம்மாண்டமானது. ஆனால் அவரோ சாதாரண மனிதன். அதை அவர் எவ்வாறு செய்து முடிக்கிறார் என்பதுதான் கதை. கதை நடக்கும் காலம் 1957.

அவர் ஒரு மாடல் இஞ்சினியர். பெரிய இயந்திரங்களை சிறிய மாடல்களாக தயாரிப்பவர். அதை ஒரு முழுநேர வேலையாகவே வைத்திருப்பவர். அது சம்பந்தமாக Miniature Mechanic என்னும் ஒரு பிரிட்டிஷ் சஞ்சிகையில் ரெகுலராக எழுதுபவர். அவருக்கு உலகம் பூராவும் வாசகர்கள் உண்டு. தங்களுக்கு தோன்றும் சந்தேகங்களையெல்லாம் அவருக்கு எழுத, அவரும் எல்லோருக்கும் மெனக்கெட்டு பதிலெழுதி அனுப்புவார்.

அவரது தங்கையும் அவள் கணவரும் தங்கள் பத்து வயது மகள் ஜேனிஸை அவரிடம் ஒப்படைத்து விட்டு, ஒரு பாய்மரக் கப்பலில் கனடா நோக்கி பயணம் செல்கின்றனர். பூமியின் தென்பகுதிக் கடல் மூலமே செல்கின்றனர். பிரெஞ்சு பாலினீஷியாவில் டாஹிட்டி அருகில் ஒரு ஆள் இல்லாத தீவில் அவகள் படகு பவளப்பாறையில் மோதி அவர்கள் இருவரும் உயிரிழக்கின்றனர்.

இறந்தவர்கள் நல்ல பணவசதி படைத்தவர்கள். தங்கள் மரணத்துக்கு பிறகு தங்களது பெண்ணை பாதுகாத்து அவள் வயதுக்கு வந்ததும் தங்கள் சொத்தை அவளுக்கு தரும் பொறுப்பை நம் கதாநாயகரிடமே தெளிவாக ஒப்படைத்துள்ளனர். ஆக உயிலில் ஒரு குழப்பமும் இல்லை. ஆனால் அதே சமயம் வங்கியில் அவர்களது அக்கவுண்டில் பணமும் இல்லை. எல்லா பணத்தையும் வைரங்களாக மாற்றி தங்களுடன் தங்கள் கப்பலில் எடுத்து சென்றுள்ளனர். அதில் உள்ள சிறு மோட்டாருக்குள் ஒரு பெட்டியில் வைத்து அதை ஒளித்து வைத்துள்ளனர். அந்த பெட்டியை அங்கு அவர்களுக்கு பொருத்தி வைத்து குடுத்ததே நம் கதாநாயகனே. ஆனால் அவருக்கு அச்சமயம் முழு உண்மையும் தெரியாது. அக்காலத்திய இங்கிலாந்தில் சொத்துக்களை வெளிநாட்டுக்கு எடுத்து செல்வதில் பல கெடுபிடிகள் உண்டு. ஆகவேதான் அவர்கள் அவ்வாறு செய்துள்ளனர்.

இப்போது சிக்கல் என்னவென்றால் அத்தனை வைரங்களும் மோட்டாரில் சிக்கியுள்ளன. அவற்றை எடுத்து வர வேண்டும். அதற்கு டாஹிட்டி வரை செல்ல வேண்டும். அதே சமயம் விஷயமும் யாருக்கும் தெரியக் கூடாது. அவர் அதை எப்படி நிறைவேற்றுகிறார் என்பதில்தான் முழுக்கதையே அடங்கியுள்ளது.

அனுமாருக்கு தன் பலம் தெரியாதது போல நம் கதாநாயகனுக்கும் தனது பிரபலம் பற்றி தெரியவில்லை. அவர் போகுமிடமெல்லாம் அவரது கட்டுரைகளின் வாசகர்கள் உள்ளனர். அவர்கள் ஒவ்வொருவரும் தத்தம் வழியிலே அவருக்கு செய்யும் உதவிகளை பற்றி படிக்கையில் மனம் நிறைகிறது. கதையை படியுங்கள், நீங்களே உணருவீர்கள்.

எல்லாவற்றையும் முடித்த பின்னரும் கதாநாயகன் சிறிதும் கர்வமின்றி இருப்பதுதான் அவருக்கு இன்னும் சிறப்பைக் கூட்டுகிறது.

அன்புடன்,
டோண்டு ராகவன்

7 comments:

Radha Sriram said...

எனக்கு ரொம்ப பிடித்த எழுத்தாளர்.ஹை ஸ்கூலில் இருக்கும் போது நெவில் ஷூட் பையித்தியம் பிடித்திருந்தது. அப்போது அவருடைய அத்தனை புத்தகத்தையும் படித்து முடித்தேன்.நீங்கள் குறிப்பிட்டிருக்கும் புத்தகமும் ரொம்ப பிடித்த ஒன்று.ரூயிண்ட் சிடி,பையிட் பைபெர்,செக்கெர் போர்ட், அ டவுன் லைக் ஆலீஸ், ரவுண்ட் தெ பெண்ட்.......இன்னும் பல மறக்க முடியாத புத்தகங்கள்.

Anonymous said...

ஜெயா டிவி நேர்காணல் - 08.07.2009

நிகழ்ச்சியின் தகவல்களை தனிப் பதிவாக
வெளியிடவும்.

Nat Sriram said...

காரில் அரட்டை அடித்து கொண்டே செல்வது தானே இயல்பு. உங்கள் ஷட்டகர்க்கு போர் அடித்து டென்ஷன் ஆகவில்லையா :-)

Vijay said...

ஜெயா தொலைக்காட்சியில் உங்கள் பேட்டியைப் பார்த்துக் கொண்டிருக்கிறேன் :-)

ரொம்பவே இளைத்து விட்டீர்களே. :-)

Unknown said...

ஜெயா தொலைகாட்சியின் காலை மலரில் டோண்டு ராகவன் அவர்களின் சந்திப்பு நிகழ்ச்சி அருமையாய் வடிவமைக்கப் பட்டிருந்ததற்கு பாராட்டுக்கள்.

நிகழ்ச்சி சரியாய் 07 :30 க்கு தொடங்கி 08: 10 வரை இனிதாய் முடிந்தது.

நிகழ்ச்சியின் தொடக்கத்தில் ராகவன் அவர்களது ஆறு மொழிப் புலமையைப் பாராட்டி வெப்சைட்-ப்ளாக் பற்றிய பல தகவ்ல்கள் சொல்லப் பட்டன்.
சொல்லப் படும் வார்த்தைகளுக்கு பொறுப்பு உள்ளது போல் எழுதுவதற்கு முன்னால் ஆலோசித்து எழுதுவது நலம் என்றும், அனைத்து பிளாக்களையும் மானிட்டர் பண்னுவது சைபர் போலிஸுக்கு சாத்யமில்லை.ஆனால் பண்புமீறும் செயல்களை பற்றிய குற்றச்சாட்டுகள்
பற்றிய வழக்குகள் அவர்களால் விசாரிக்கப்படுகிறது என்று சொல்லியபோதும், பழைய கசப்பான அனுபவங்களை தவிர்த்தது ஒரு சிறப்பு.வலையில் பிஸ்ஸிங் ஏமாற்று செய்திகளை விளக்கியது , பலருக்கு ஒரு நல்ல் எச்சரிக்கையாய் அமைந்தது.

வலைப்பூ நண்பர்கள் மூலம் தென்திருப்போரை பெருமாள் திவ்விய தேச தரிசனம் நினைவு கூர்ந்தார்.
அது போல் அனைவருக்கும் வரும் கனவுகள் பற்றிய பதிவுபற்றி பலரின் பின்னூட்டங்கள் ப்ற்றிய தகவ்ல்கள் கேள்வியாளரையே ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.
அடுத்து மொழிபெயர்ப்புபற்றி பற்றி பல் அரிய தகவ்ல்கள் பரிமாறப்பட்டன.
1993 லிருந்து 16 வருடங்களாய் இந்த துறையில் தமிழகத்தில் முதன்மையாய் இருப்பதையும் ,இதனால் மொழிபெயர்ப்பு வெப்சைட்டில் பிளாட்டினம் உறுப்பினர் சலுகையில் கிடைத்ததையும்,
டெல்லியைவிட சென்னையில் மொழிபெயர்ப்பு வாய்ப்புகள் அதிகம் எனவும் மதிப்பும் அதிகம் எனவும் சொன்னார்.மொழிபெயர்ப்பாளர்கள் த்குதிகேற்ற ஊதியம் தைரியாமாய் கேட்கவேண்டும்.மொழிபெயர்ப்பு மென்பொருளால் மனிதன் போல் சிந்தித்து மண்வாசனையுடன் மொழிமாற்றம் செய்தல் முடியாது அதனால் இன்னும் 50 வருடங்களுக்கு மெசின் மனிதனுக்கு போட்டியாகாது என்றார்.
மொழிபெயர்ப்பாளர் மண்வாசனையுடன்,அங்குள்ள கலாச்சார சுவையுடன் மொழிபெயர்ப்பு செய்தால் அனைவராலும் ரசிக்கப்படும்.அதற்கு திறமை அதிகம் வேண்டும்.ஹேரிபார்ட்டரின் ஏழு புத்தகங்கள் இதற்கு சாட்சி.அனைத்து மொழிகளிலும் மேஜிக் அழகாய் சித்தரிக்கபட்டுள்ள்து.
மொழிபெயர்ப்பாளர் பார்ப்பதை மனதில் வாங்கி அதை தனது தாய் மொழியில் இமேஜாய் உள்வாங்கி தேவையான மொழியில் அதனுடைய மண்வாசனையுடன் மொழிபெயர்த்தால் முழு வெற்றி நிச்சயம்.தான் அப்படி செய்வதாகச் சொன்னார். ஜெர்மன்,பாகிஸ்தான் போன்ற மொழி சீரியல்களை பார்க்கும் போது அவ்ர்களைப்பற்றிய நம் கணிப்பு மாறுகிறது.
ப்ளாக்கில் உள்ள வசதிகள்-தீமைகள் -மொழிபெயர்ப்பு துறை பற்றிய பல அரிய தகவ்ல்களை தெரிவிதத்தற்கும்,ஜெயாதொலைகாட்சியில் பேசுவதற்கு வாய்ப்பு கொடுத்தற்கும் பரஸ்பர நன்றியுடன் நிகழ்ச்சி இனிதாய் முடிந்தது.

Krishnan said...

Dondu Sir, I watched your interview on Jaya TV today. You spoke eloquently and put forward your views elegantly.

ராமகுமரன் said...

அம்பானியை கொல்ல நடந்த ஹெலிகாப்டர் சதியின் சாட்சியை கொன்றுவிட்டனர், அந்த கொலையை இப்பொழுது ஊடகங்கள் கண்டுகொள்வதே இல்லையே. இந்த மூடி மறைக்கும் செயல் எதை காட்டுகிறது?

 

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது