3/25/2010

கற்றது கை மண்ணளவு, டோண்டு ராகவனே

மந்தரை சூழ்ச்சிப் படலத்தில் கம்பர் இவ்வாறான வரிகளை எழுதியுள்ளார்.

தனக்கு துர்போதனை செய்த மந்தரையின் வார்த்தைகளை கேகயன் புதல்வியான கைகேயி உடனே ஏற்றுக் கொண்டுவிடவில்லை. மந்தரையை பார்த்து அவள் சினத்துடன் கூறும் வரிகளை கம்பன் வாய்மொழியில் பார்ப்போம்:

வாய் கயப்புற மாந்தரை வழங்கிய வெஞ் சொல்,
காய் தனல்தலை நெய் சொரிந்தென, கதம் கனற்ற,
கேகயர்க்கு இறை திருமகள், கிளர் இள வரிகள்
தோய், கயல் கண்கள் சிவப்புற நோக்கினள், சொல்லும்;

வெயில் முறைக் குலக் கதிரவன் முதலிய மேலோர்,
உயிர் முதல் பொருள் திறம்பினும், உரை திறம்பாதோர்;
மயில் முறைக் குலத்து உரிமையை, மனு முதல் மரபை;
செயிர் உற, புலைச் சிந்தையால், என் சொனாய்? - தீயோய்!


பிறகு மந்திரை தன் நோக்கத்தில் வெற்றியடைந்து ராமாயணத்தை மேற்கொண்டு நகர்த்துவது இப்பதிவில் வராது. அது பற்றி பிறகு பார்ப்போம்.

"மயில் முறைக் குலத்துரிமை" பற்றி மந்தரை சூழ்ச்சிப் படலத்தில் கம்பர் பாடியதற்குப் பல வித விளக்கங்கள் கூறுவர். நாமக்கல் கவிஞர் முதலில் தான் படித்த கம்பராமாயண உரைநூலில் மயில் முட்டைகளில் முதலில் உருவான முட்டை முதலில் குஞ்சாக பொரியும், பிறகுதான் அடுத்து உருவான முட்டைகள் பொரியும், அதுபோல மூத்தவனுக்கே அரசுரிமை என்பதாக விளக்கம் தரப்பட்டிருந்ததை கண்டிருக்கிறார். ஆனால் அவருக்கு குழப்பம் என்னவென்றால், இது எல்லா பறவைகளின் முட்டைகளுக்குமே பொருந்துமே, மயில் என்ன ஸ்பெஷல் இதில் என்பதே.

எதேச்சையாக ஒரு நாள் அவர் 'ஸயண்டிபிக் அமரிக்கன்' என்ற பத்திரிக்கையில்
ஒரு விளக்கம் கண்டார். அது பின்வறுமாறு:
மயிலானது தன்னுடைய எல்லாக் குஞ்சுகளுடனும் குடும்ப சகிதமாகத்தான் ஓர் இடத்திலிருந்து
இன்னோர் இடம் போகும். அப்படி மயில் குஞ்சுகளுடன் சேர்ந்திருக்கும் போது, குஞ்சுகளின் மூத்தது
தான் தோகைவிரித்து ஆடத் தொடங்கும். அதன் பிறகே மற்றக்குஞ்சுகள் தோகை விரிக்கும்.
இவ்வாறு மயில்களைப் பற்றிய ஒரு கட்டுரையில் குறிப்பிட்டிருந்ததைக் கண்டார் நாமக்கல் கவிஞர்.

இதைக் கண்டுபிடிக்க மயில் குஞ்சு பொரித்தவுடன் ஒவ்வொரு குஞ்சுக்கும் ஒரு வளையம்
விதம் விதமான வண்ணத்தில் காலில் மாட்டிவிடப்பட்டதாம். அதிலிருந்தே மூத்த மயில் அடையாளம்
அறியப்பட்டது என்றும் அந்த கட்டுரையில் கூறப்பட்டிருந்தது.

மயிலிடம் உள்ள இந்தத் தனிவிசேடத்தைத்தான் கம்பர் பாடியிருக்கிறார்’ மன மாற்றம் ஏற்படும் முன் கைகேயி, ராமனுக்கு முடி சூடிவிடவேண்டியது முறை எனக் கூனிக்கு உணர்த்தும் அப்பாட்டில் என்பதை அவர் உணர்ந்தார்.

அதன் பிறகு பல காலம் இதை வைத்தே அவர் பலரை அசத்தி வந்திருக்கிறார். வேண்டுமென்றே பேச்சை கம்பர் பக்கம் திருப்ப வேண்டியது, பிறகு இந்த குறிப்பிட்ட பாடலை கூறி, மயில் இதில் எங்கே வந்தது என கேட்பது, அவர்களை சிறிது நேரம் அலையவிட்டு பிறகு சயண்டிஃபிக் அமெரிக்கன் பத்திரிகையில் வந்ததைக் கூறுவது என்றிருந்திருக்கிறார். ஆனால் இதிலும் முழு உண்மையை கூறமாட்டார். அதாகப்பட்டட்து மற்றவர்கள் இதை அவர் எங்கிருந்து கற்றார் எனக்கேட்டால், பறவை சாஸ்திரம் தெரிந்தவர்களுக்குத்தன் இந்த விஷயம் தெரியும் என பூடகமாக கூறிவிடுவார். மறந்தும் சயண்டிஃபிக் அமெரிக்கன் கட்டுரை பற்றி கூறமாட்டார்.

இவ்வாறு சில ஆண்டுகள் சென்றன. ஒரு வயதான தமிழ்ப்புலவரை பார்த்திருக்கிறார். அவரிடம் இக்கதையை எடுத்து விட்டு விளக்கம் கேட்டிருக்கிறார். அவரோ சர்வ சாதாரணமாக, “ஓ, அதுவா, மயிலானது தன்னுடைய எல்லாக் குஞ்சுகளுடனும் குடும்ப சகிதமாகத்தான் ஓர் இடத்திலிருந்து
இன்னோர் இடம் போகும். அப்படி மயில் குஞ்சுகளுடன் சேர்ந்திருக்கும் போது, குஞ்சுகளின் மூத்தது
தான் தோகைவிரித்து ஆடத் தொடங்கும். அதன் பிறகே மற்றக்குஞ்சுகள் தோகை விரிக்கும். கம்பர் இதைத்தான் தனது பாடலில் சுட்டியுள்ளார்” எனச் சொல்ல, இவருக்கு மூச்சே நின்றுவிட்டதாம். முகத்தில் ஏதோ கரி பூசியது போலவும், மூக்கு நுனி சற்றே பங்கப்பட்டது போலவும் பிரமையாம். அப்புலவர் ஆங்கிலம் அறியாதவர், அவராவது சயண்டிஃபிக் அமெரிக்கன் இதழை பார்த்திருப்பதாவது என்றெல்லாம் மனம் மயங்கியுள்ளார். பிறகு அவரிடமே மேலும் விளக்கம் கேட்க, அவர் சர்வ இயல்பாக ஒரு தமிழ் இலக்கிய படைப்பின் பெயரைக் கூறி விட்டு அதில் இன்ன இடத்தில் இன்ன செய்யுளில் இந்த சேதி உள்ளது எனக் கூறிச் சென்றார்.

துரதிர்ஷ்டவசமாக ராமலிங்கம் பிள்ளை அவர்கள் அந்த சுட்டியின் விவரங்களை குறித்து வைத்துக் கொள்ள தவறிவிட்டார். பிறகு எவ்வளவு முயன்றும் அவருக்கு அது கிடைக்கவில்லை. போகும் இடமெல்லாம் இது பற்றி கேட்டிருக்கிறார். ஆனால் இம்முறை மரியாதையாக சயண்டிஃபிக் அமெரிக்கன் விஷயங்களையும் வெளிப்படையாக கூறி, தமிழ்ப்புலவர் தன்னை கர்வபங்கம் செய்ததையும் சொல்லி யாருக்கேனும் மயில் முறை குலத்துரிமை எந்த நூலில் எந்த இடத்தில் வருகிறது என்பது பற்றி தெரியுமா என கேட்டிருக்கிறார். இவ்வாறு இக்கேகேள்வியுடனேயே அவர் பல ஆண்டுகள் மேலும் தேடியிருக்கிறார்.

ஒரு நாள் திடீரென அவருக்கு ஒரு முதல் நிலை தமிழ் மாணவனிடமிருந்து கடிதம் வந்தது. அதில் பலான நூலில் பலான செய்யுள் எண்ணில் அவர் கேட்ட தகவல் இருக்கிறது என காணப்பட்டிருந்ததாம்.

ஆக, பல ஆண்டுகள் பெரிய பயணம் நடந்த உணர்வுடன் அவர் இவ்வாறு கூறி முடிக்கிறார், “இவ்வாறுதான் நான் உணர்ந்தேன், கற்றது கைம்மண்ணளவு என்று” என.

இங்கு டோண்டு ராகவன் தரப்பிலிருந்து சில வரிகள். வெ. ராமலிங்கம் பிள்ளையின் இது குறித்த கட்டுரையை நான் கலைமகள் கதம்பத்தில் படித்ததாக நினைவு. அதே சமயம் கடைசியில் குறிப்பிடப்பட்டுள்ள நூலின் பெயர் என்ன என்பதையும் மறந்து விட்டேன். யாராவது தெரிஞ்சால் சொல்லுங்கப்பு.

அன்புடன்,
டோண்டு ராகவன்

பின்குறிப்பு:
kasaikannan said...
இந்த செய்யுள் கந்தபுராணத்தில் வருகிறது.
''பலாவம் பொழில் சூழ் பல் கானத்துள்
கலாவம் புனைந்த களிமயில் மூத்தது ''
March 25, 2010 2:04 PM

அதுவேதான். மிக்க நன்றி கசைகண்ணன் அவர்களே. இப்பதிவிலுள்ளேயே ஏற்றப்பட வேண்டிய இற்றைப்படலாக இப்பின்னூட்டம் உள்ளது.

24 comments:

வடுவூர் குமார் said...

வளையம் மாட்டாமலே நம்முன்னோர்கள் எப்படி கண்டுபிடித்தார்கள்??
மயிலுக்கு இப்படி ஒரு சிறப்பா?

dondu(#11168674346665545885) said...

@வடுவூர் குமார்
பறவை சாத்திரம் ஆய 64 கலைகளுள் ஒன்றாயிற்றே. நம் முன்னோர்களில் பலர் அதில் தேர்ந்தவர்கள். பறவைகளின் பேச்சையும் தெரிந்தவர்களும் இருந்திருக்கிறார்களே. இங்கு மட்டும் அல்ல, விவிலியத்தின் பழைய ஏற்பாட்டில் அரசன் சாலமன் பறவைகளுடன் பேசுவான் என குறிப்பிடப்பட்டுள்ளதை. உடான்ஸ் என நினைத்தாலும், தற்கால விலங்குகளை அவதானம் செய்த கோன்ராட் லோரென்ஸின் புத்தகமான Er redete mit dem Vieh, den Vögeln und den Fischen-ல் [புத்தகத் தலைப்பின் தமிழ் மொழி பெயர்ப்பு: அவர் (அரசர் சாலமன்) மிருகங்கள், பறவைகள், மீன்களுடன் பேசினார்] இம்மாதிரி பல விஷயங்கள் உண்டு. நான் ஜெர்மன் மொழி டிப்ளமா பரீட்சையில் இப்புத்தகத்திலிருந்து வந்த கேள்விகளுக்கு பதில் எழுதியுள்ளேன்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

Anonymous said...

தற்சமயம் அறிவியல் ரீதியாக மக்கள் கண்கொண்டு பார்க்க துவங்கிவிட்டனர்...ஆயக்கலைகள் பற்றி சிந்திக்கவோ...அதை ஆராயவோ யாருக்கும் நேரமில்லை..யாரேனும் அது பற்றி பேசினால் போடா பைத்தியக்காரா என்கிறார்கள் விஞ்ஞான உலகத்துல என்னமோ உளறுரான் என்கிறார்கள்.படிப்பு,அது தரும் சம்பளம்,அது தரும் கேளிக்கை இதுவே பிரதானம்,இதுவே கொள்கை என தற்கால வாழ்வு மாறி வருகிற்து..இது போன்ற ரசனையான செய்திகளை படிக்கும் போது மகிழ்ச்சியாயாக இருக்கிறது நன்றி!

enRenRum-anbudan.BALA said...

Good post !


கைம்மண்ணளவு - There is a typo, Its "கை மண்ணளவு"

dondu(#11168674346665545885) said...

@என்றென்றும் அன்புடன் பாலா
நன்றி. பிழை திருத்தி விட்டேன். ஆக, கற்றது கை மண்ணளவு என்பது மறுபடியும் எனக்கு நிரூபணம் ஆயிற்று.

அன்புடன்,
டோண்டு ராகவன்

kasaikannan said...

இந்த செய்யுள் கந்தபுராணத்தில் வருகிறது.
''பலாவம் பொழில் சூழ் பல் கானத்துள்
கலாவம் புனைந்த களிமயில் மூத்தது ''

dondu(#11168674346665545885) said...

//kasaikannan said...
இந்த செய்யுள் கந்தபுராணத்தில் வருகிறது.
''பலாவம் பொழில் சூழ் பல் கானத்துள்
கலாவம் புனைந்த களிமயில் மூத்தது ''
March 25, 2010 2:04 PM//

அதுவேதான். மிக்க நன்றி கசைகண்ணன் அவர்களே. இப்பதிவிலுள்ளேயே ஏற்றப்பட வேண்டிய இற்றைப்படலாக இப்பின்னூட்டம் உள்ளது.

அவ்வாறே செய்து விட்டேன். ராமலிங்கம் பிள்ளை பல ஆண்டுகாலம் காத்திருக்க வேண்டியது. எனக்கோ அதே விடை உங்கள் தயவால் சில மணி நேரத்திலேயே கிடைத்தது.

அன்புடன்,
டோண்டு ராகவன்

அ. நம்பி said...

`கைம்மண்' என்பது சரிதான் ஐயா. திருத்த வேண்டுவது இல்லை.

Anonymous said...

''பலாவம் பொழில் சூழ் பல் கானத்துள்

இந்த செய்யுள் தணிகை புராணத்தில் வருகிறதாக அவர் எழுதியதாக ஞாபகம். எங்கோ குறித்து வைத்து இருக்கிறேன்.
இரண்டும் ஒன்றா என்று தெரியவில்லை.- பி. எஸ்.ஆர்

Unknown said...

interesting fact abt peacock.. Thanks for sharing ..!

Murali
www.myownscribblings.blogspot.com

dondu(#11168674346665545885) said...

@பி.எஸ்.ஆர்.
தணிகை புராணம்தான் சரி என எனக்கும் தோன்றுகிறது. பார்க்க: http://shylajan.blogspot.com/2008/05/blog-post_26.html

அன்புடன்,
டோண்டு ராகவன்

Anonymous said...

மூத்தவன் பட்டத்துக்கு வருவது எல்லா பண்பாடுகளிலும் உள்ளதுதான். அது ஒருபுறமிருக்க மனிதர்கள் மயிலை ஏன் முன்மாதிரியாக எடுத்துக்கொள்ளவேண்டும் என்பதுதான் புரியவில்லை?

ஈஸ்வரன்

dondu(#11168674346665545885) said...

@ஈஸ்வரன்
இப்பதிவை படித்த பின்னுமா புரியவில்லை?

அன்புடன்,
டோண்டு ராகவன்

வெண்புரவி said...

கம்பர் எவ்ளோ பெரிய ஆள்னு புரிய வெச்சுடீங்க...
நல்ல விஷயம் .. நல்ல பதிவு

வஜ்ரா said...

ஒரு புதிய விஷயத்தைக் கற்றேன்.

மயில் தோகைவிரித்தாடுவது பெட்டையை கவர்வதற்கு.
அதற்கு முன்னுரிமையை தன் சகோதரர்கள் அதற்குக் கொடுக்கும்.

மற்ற மயில்கள் கொடுக்காது. போட்டி இல்லாமல் எதுவுமே இல்லை என்பதும் இங்கு நாம் சொல்லியாகவேண்டும்.

அதாவது, கருணாநிதியின் நாற்காலியை ஸ்டாலின் அழகிரிக்கு விட்டுக்கொடுத்தாலும் அ.இ.அ.தி.மு.க வோ விஜய்காந்தோ விட்டுக்கொடுக்க மாட்டார்கள்.

Anonymous said...

//அதாவது, கருணாநிதியின் நாற்காலியை ஸ்டாலின் அழகிரிக்கு விட்டுக்கொடுத்தாலும் அ.இ.அ.தி.மு.க வோ விஜய்காந்தோ விட்டுக்கொடுக்க மாட்டார்கள்.//

What about cousin peacocks?What would be their behaviour?

bala said...

What about the rights of peahens esp illegitimate peahens?Why no one talks abt their rights?

Anonymous said...

//
What about cousin peacocks?What would be their behaviour?
//

மாறன் குடும்பத்தார் படிப்பில்/பிசினஸில் காட்டிய கவனத்தில் 10ல் ஒரு பங்கு கூட பாலிடிக்ஸில் காட்டவில்லை.

அவர்கள் போட்டிக்கு வந்தாலும் ஜெயிக்கும் சான்ஸ் இல்லை.


//
What about the rights of peahens esp illegitimate peahens?Why no one talks abt their rights?
//

மயில்களில் பெண் மயில்களுக்குத் தோகை கிடையாது.

எம்.ஏ.சுசீலா said...

நானும் இச் செய்தியை வாசித்திருக்கிறேன்.
தரமானதொரு இலக்கியத் தகவலை இணைய வாசகர்களிடம் கொண்டு சென்றிருப்பதற்குப் பாராட்டுக்கள்.
பிறர் அறியாததைத் தாம் அறிந்திருக்கிறோம் என்ற உணர்வு , அதனால் விளையும் வித்தியா கர்வம் - சில வேளைகளில் உண்மையான அறிஞர்களுக்கும் கூட ஏற்பட்டு விடுகிறது என்பதற்கு இச் சம்பவம் ஒரு சான்று.
ஆனால் இறுதியாகத் தன் குறைபாட்டை நேர்பட ஒத்துக் கொள்ளும் துணிவும் எளிமையும் அவர் புகழை வானளாவ உயர்த்திவிடுவதும் மறுக்க முடியாததே.

bala said...

மஞ்ச துண்டு குடும்பத்தினரை மயிலோடு ஒப்பிடுவதெல்லாம் ஒவராக இல்லையா வஜ்ரா.

அது சரி, ஆந்தைகளோட ராஜ்யத்துல இளைய ஆந்தைக்கு தானே பட்டம் கட்டுவாங்க?

Unknown said...

// பெண் மயில்களுக்குத் தோகை கிடையாது//

தோகை இல்லாததால் உரிமை இல்லையா?என்ன ஆணவம்?ஆணாதிக்க போக்கினால் வஞ்சிக்கப்படும் பெண் மயிலகளுக்கு ஆதரவாக குரல் கொடுக்காமல் கள்ள மெளனம் கடைபிடிக்கும் பெரியார் கும்பலின் அயோக்யத்தனம் திராவிட இயக்கங்களின் சீரழிவை வெளிச்ச்சம் போட்டு காட்டிவிட்டது.

ஷைலஜா said...

இப்போதுதான் வாசித்தேன் அருமையாக எழுதி இருக்கீங்க!

நிலாமகள் said...

'தலையிருக்க வால் ஆடலாமா...' என்பதும் இதிலிருந்துதான் வந்திருக்குமோ ... அறிவை விசாலப்படுத்தும் தங்கள் பதிவுகளுக்கு நன்றி ஐயா!

Uthamaputhra Purushotham said...

மயில், கம்பன் மற்றும் சம்பந்தப்பட்ட தகவல்கள் அனைத்தையும் தங்களின் பகிர்வால் புதிதாய்க் கற்றுக் கொண்டேன். நன்றி.

 

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது