6/03/2009

எங்கே பிராமணன் - பகுதிகள் - 84 & 85

பகுதி - 84 (01.06.2009)
கிரி வீட்டில் அவன் மனைவி ஜயந்தி துளசி மாடத்தை சுற்றி வந்து நமஸ்கரிக்கிறாள்.

சோவின் ந்ண்பர் துளசிக்கு அப்படி என்ன தனி சிறப்பு என கேட்கிறார். சோ அவர்கள் துளசியின் அவதாரக் கதையை கூறுகிறார். தேவலோகத்தில் சரஸ்வதி, கங்கை மற்றும் லட்சுமிக்கு இடையே நடந்த தகராறாரினால் ஒருவரை இன்னொருவர் சபிக்க, அதன் பலனாக துளசி லட்சுமியின் அம்சமாக பூலோகத்துக்கு வந்தார் எனவும் கூறுகிறார். அதை பாவிப்பதால் ஏற்படும் பலன்களையும் கூறுகிறார்.

கிரியின் தாயார் தன் மருமகளிடம் தங்கள் வீட்டிலேயும் ஆசாரம், பத்து எல்லாம் பார்ப்பதாகக் கூறிவிட்டு, மருமகள் தினசரி செய்ய வேண்டிய கடமைகள் பற்றியும் பட்டியலிடுகிறாள். அது பற்றி ஜயந்தி கிரியிடம் புகார் செய்ய, கிரியோ வைதிகர் வீட்டில் பிறந்து வளர்ந்த ஜயந்திக்கு அதெல்லாம் புதிது இல்லையே எனக்கூற, அங்கிருந்து தப்பித்து வந்ததாக நினைத்தால் இங்கும் அதே ஆசாரம், பத்து ஆகிய விஷயங்கள்தானா என அலுத்து கொள்கிறாள். கிரியின் தந்தை சிகாமணி தன் மனைவியிடம் இனிமேல் அவள் ஆசாரம் பத்து ஆகிய விஷயங்களை மூட்டை கட்ட வேண்டும் என கண்டிப்பாகக் கூறுகிறார். அவ்ளோ அவருடன் அது பற்றி வாது புரிய, தான் பிராம்மணரல்லாதவரை திருமணம் செய்து கொண்டது பற்றி அவளுக்கு காம்ப்ளக்ஸ் இருப்பதாகவும், இத்தனை நாள் ஒரு தலைபட்சமாக பிராமண கலாசாரத்தை பேணினதில் தனக்கு மனைவியாக ஒரு நாள் கூட வாழவில்லை எனத் தெளிவாகக் கூறிவிட்டு செல்கிறார்.

உமா கல்யாண விஷயமாக பேச பர்வதம் ஸ்ரீமதியை பார்க்க வருகிறாள். சாம்பு சாஸ்திரிகள் சிபாரிசு செய்த இடம் அது. காப்பியா டீயா எது வேண்டும் என ஸ்ரீமதி கேட்க, டீயே போதும் என பர்வதம் சொல்ல. மகா பெரிவாளே டீயைத்தான் சிபாரிசு செய்திருக்கிறார் என்பதை தெய்வத்தின் குரல் என்னும் புத்தகத்தில் படித்ததாக ஸ்ரீமதி கூறுகிறாள்.

நிஜம்மாவே மகாபெரியவா டீயை சாப்பிடச் சொன்னாரா என சோவின் நண்பர் கேட்க, அப்ப்டியில்லை என மறுக்கிறார். டீ, காப்பி இரண்டுமே அடிக்‌ஷனை உருவாக்கும் எனவும், அதில் டீ குறைந்த அளவே அடிக்‌ஷனை விளைவிப்பதால் அவாய்ட் செய்ய முடியாத நிலை என வந்தால் போனால் போகிறதென டீயை எடுத்து கொள்ளலாம் என மகாபெரியவா கூறியதைத்தான் இம்மாதிரி திரித்து புரிந்து கொண்டுள்ளனர் என சோ விளக்குகிறார்.

இரு பெண்மணிகளும் ஒருவருக்கொருவர் தத்தம் குடும்பத்தை பற்றி பேசுகின்றனர். உமாவின் இரண்டு லேட்டஸ்ட் போட்டோக்கள், ஒன்று புடவையுடன் இன்னொன்று சூடிதாரில் எடுத்து சிடியாக போட்டுத் தந்தால் தன் பையன் இருக்கும் அமெரிக்காவுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பப் போவதாக ஸ்ரீமதி கூறுகிறாள். அதே சமயம் இன்னொரு ஃபோன் இன்னொரு பெண்வீட்டாரிடமிருந்து கல்யாண விஷயமாக அவாத்து பெண்ணின் போட்டோக்களையும் அனுப்புமாறு கூறுகிறாள்.

கிருபா வீட்டில் பிரியாவை பார்க்க சுப்புலட்சுமி வருகிறாள். அவள் கருவுற்றிருப்பதால் தான் பார்க்க வந்ததாக சுப்புலட்சுமி கூறுகிறாள். தன் மகள் மேல் புக்ககத்திலிருந்து புகார்கள் வந்துள்ளன எனவும் கூறிவிட்டு, சுப்புலட்சுமி பிரியாவை ஜயந்தியுடன் பேசி அவளுக்கு புத்தி சொல்லுமாறு கேட்டு கொள்கிறாள்.

ஸ்ரீமதி வீட்டுக்கு நீலகண்டனும் பர்வதமும் வந்துள்ளனர். அமெரிக்காவிலிருந்து ஸ்ரீமதியின் பிள்ளை ரமேஷ் இண்டர்நெட் மூலம் அம்மாவிடமும் நிலகண்டன் மற்றும் பர்வதத்துடனும் பேசுகிறான். தன்னிடம் வந்த ஃபோட்டோக்களில் உமாவின் போட்டோ மட்டும் தனக்கு பிடித்ததாக அவன் கூறுகிறான். நீலகண்டன் மற்றும் பர்வதமும் ரமேஷுடன் நெட் மூலமாக பேசுகின்றனர். பிறகு நீலகண்டன் வீட்டில் இருக்கும் உமாவுக்கு ஃபோன் போட்டு அவளையும் ரமேஷிடம் பேச வைக்கிறார். உமாவும் ரமேஷும் மனம் விட்டு பேசுகின்றனர். உமா அசோக் பற்றிய விஷயத்தையும் கூறுகிறாள். அதை பெரிதாக எடுக்கவில்லை ரமேஷ்.

தன் தாயுடன் மீண்டும் நெட்டில் தொடர்பு கொள்ளும் ரமேஷ் இந்த இடத்தையே பேச சொல்கிறான். வரதட்சணை என ஏதும் வாங்கக் கூடாது எனவும் கூறுகிறான். அவன் தாய்க்கு சற்றே ஏமாற்றம் வருவது போன்ற தோற்றம். உமா வந்து ரமேஷுக்கு நன்றாக சமைத்து போடுவாள் எனக் கூறும் பர்வதம், அதற்குள் அவளுக்கு சமைக்க கற்று கொடுத்துவிட மாட்டோமா என்ன என்று கூறுகிறாள்.

பகுதி - 85 (02.06.2009)
நீலகண்டனும் பர்வதமும் ரமேஷின் பெற்றோருடன் பேசுகின்றனர். அமெரிக்காவில் இருக்கும் ரமேஷின் தங்கையும் அவள் கணவரும் விடுமுறை பெற்று தமிழகம் வர குறைந்தது ஓராண்டு பிடிக்கும் என கூறும் அவர்கள், தங்கை இல்லாமல் ரமேஷ் கல்யாணம் நடத்த விரும்பாததாதால் ஓராண்டு பொறுத்திருக்கும்படி கேட்டு கொள்கின்றனர். நீலகண்டனும் பர்வதமும் இந்த சம்பந்தத்தை நழுவவிடத் தயாராகாததால் ஒத்து கொள்கின்றனர். பெயரளவுக்கு ஒரு நிச்சயதார்த்தம் வைத்து கொள்லலாம் என தீர்மானிக்கப்படுகிறது.

நாதனை பார்க்க வரும் அவரது டாக்டர் தனது நண்பர் சாரியார் வையாபுரியுடன் அவரது மகனுக்கும் தனது நண்பர் நடேச முதலியாரின் மகள் சோபனாவுக்கும் திருமணம் சம்பந்தமாக டிஸ்கஸ் செய்ய ஆசைப்படுவதாகவும், ஆகவே வையாபுரியுடன் அப்பாயிண்ட்மெண்ட் நாதன் வாங்கித் தரவேண்டும் என கேட்டு கொள்ள, அவரும் வையாபுரியிடம் போனில் பேசி அதற்கு ஏற்பாடு செய்கிறார். அதற்கு முன்னால் வையாபுரி ஒரு அரசியல்வாதி என்பதை மறக்காது சாரியார் அவரை ஜாக்கிரதையாகக் கையாள வேண்டும் என கூறிவிடுகிறார்.

சாரியாரை பார்க்க அசோக் வருகிறான். வைஷ்ணவ சம்பிரதாயத்தில் தனக்கு இருக்கும் சில சந்தேகங்கள் பற்றி அவருடன் பேச வந்திருப்பதாக அவன் கூறுகிறான்.

“அதென்ன வைஷ்ணவ சம்பிரதாயம்”? என சோவின் நண்பர் கேட்கிறார். சோ பேச ஆரம்பிக்கிறார். முதலில் ஆதி சங்கரர் விளக்கிய அத்வைதம் (நீயும் பிரும்மமும் ஒன்றே), ராமானுஜர் விளக்கிய விசிஷ்டாத்வைதம் (ஒன்றுதான், ஆனால் சில வரையரைக்குள்ளேதான், மத்வர் விளக்கிய த்வைதம் (நீ வேறு, பிரும்மம் வேறு) ஆகிய கோட்பாடுகள் உண்டு. அவை ஏற்கனவேயே இருந்தவைதான். பிறகு மேலும் சுருக்கமாக வைணவ சம்பிரதாயம் பற்றி பேச ஆரம்பிக்கிறார். வைணவர்களுக்கான ஐந்து கடமைகள் என்னென்ன என்பதையும் குறிப்பிடுகிறார். வைணவர்களுக்குள்ளேயே வடகலையாருக்கும் தென்கலையாருக்கும் உள்ள பார்வை கோணத்தில் வேறுபாட்டையும் குறிப்பிடுகிறார். வைணவத்தின் ஒட்டு மொத்த கோட்பாடு சரணாகதி. ஆனால் அதே சரணாகதியை இரு வேறு கோணங்களில் காண்கின்றனர் இந்த இரு கலையார்களும். ஸ்ரீமத் நாராயணனை சரணடைந்தாலே போதும், மீதியை அவன் பாத்துப்பான் என்கின்றனர் தென்கலையினர், அதாவது தாய்ப்பூனை தன் குட்டியை அதற்கு வலிக்காது தூக்கிச் செல்வது போல. அப்படியில்லை, குட்டிக் குரங்கு தாய் குரங்கை விடாது பிடித்து கொள்வது போல, சரணாகதி அடைந்தாலும் பகவானின் நினைப்பை விடக்கூடாது என்னும் அளவுக்கு ஜீவாத்மா செயலாற்ற வேண்டும் என்பது வடகலையார் கூற்று. ராமானுஜர் சொல்வது பக்தி மார்க்கம், சங்கரர் கூறுவதோ ஞான மார்க்கம் என்பதையும் சோ குறிப்பிடத் தவரவில்லை. நாமம், திருநீறு ஆகியவற்றின் தத்துவமும் அருமையாக விளக்கப்படுகிறது. எதற்கும் வீடியோவையே பார்த்து விடுங்கள். அதுதான் சரிப்படும் எனக் கூறுவது டோண்டு ராகவன்.

அசோக் இம்மாதிரி சந்தேகங்கள் கேட்பது தனக்கு பிடிக்கிறது எனக்கூறும் சாரியார், இருப்பினும் தான் அப்போது வேதபாடசாலைக்கு ஒரு அவசர காரியம் நிமித்தம் செல்லவிருப்பதால் பிறிதொரு நாள் அவை பற்றி பேசலாம் எனக் கூறுகிறார். தான் வேதபாடசாலையை பார்க்க நிரம்ப ஆவலுடன் இருப்பதாகவும், தானும் அவரோடு வரலாமா என அசோக் வினயமாகக் கேட்க, அவர் மகிழ்ச்சியுடன் அவனை அழைத்து செல்கிறார்.

கிரியின் வீட்டில் பிரியா கிரியின் அன்னையைப் பார்க்க வருகிறாள். ஜயந்தியுடன் அவள் பேசப்போவதாக ஒரு இம்ப்ரெஷன் போன எபிசோடில் காட்டப்பட்டிருக்க இங்கு அவள் ஜயந்தியின் மாமியாரையே பார்த்து பேச தொடங்குகிறாள். அடாடா அந்த சுட்டிப் பெண் எவ்வளவு வினயமாகவும் அதே சமயம் அழுத்தம் திருத்தமாகவும் தான் சொல்லவந்ததைக் கூறுகிறாள்! டயலாக் எழுதியவருக்கு எனது சல்யூட். கிரி ஜயந்தி திருமணம் எந்த நிலையிலும் தோற்கலாகாது என்பதை அடிநாதமாக வைத்து முகத்தில் சரஸ்வதி களைவீசும் அப்பெண் பேசியதையும் வீடியோவில் பார்ப்பதே பொருத்தம். அவள் விரும்பி கேட்டுக் கொண்ட வண்ணமே கிரியின் மாமியார் தன்னை உணர்ந்து தன்னை மாற்றிக் கொள்ளும் இடமும் அருமையே.

சாரியாரும் அசோக்கும் வேதபாடசாலைக்கு வருகின்றனர். அங்கு அசோக்கின் அறிமுகம் நடேச முதலியாரின் இரண்டாவது மகள் சோபனாவுடன் ஏற்படுகிறது. வேதபாடசாலையின் அமைப்பு பற்றிய அசோக்கின் கேள்விகளுக்கு அப்பெண் பதிலளிக்கிறாள். தான் அங்கு அக்கவுண்டண்ட் மட்டுமே எனவும், தனக்கு வடமொழி சுத்தமாகவே வராது எனவும் கூறும் அவள் அதே மூச்சில் வடமொழி சுலோகங்களை கேட்கும்போது மனதுக்குள் ஒரு ரசவாதமே நிகழ்கிறது, அதி அற்புதமாக தன்னுள் ஒரு உணர்வு எழுவதையும் அவள் குறிப்பிடுகிறாள். என்ன இருந்தாலும் வடமொழி தேஅவ்ர்கள் பாஷை அல்லவா, அதை பேசினால் பூலோகத்திலேயே தேவர்கள் வருவார்கள் என அசோக் விடை கூறுகிறான்.

“அதென்ன சார் தேவபாஷை?” என்று சோவின் நண்பர் கேட்கிறார்.

எங்கே பிராமணன் மெகா சீரியல் திங்கள் முதல் வெள்ளி வரை ஜெயா டி.வி.யில் இரவு 8 மணிக்கு.

அன்புடன்,
டோண்டு ராகவன்

4 comments:

Unknown said...

தமிழ்10 இல் இணையுங்கள் பணத்தை அள்ளுங்கள்
. தமிழ்10 இணையத்தளம் ஆரம்பிக்கப்பட்ட குறுகிய காலத்திற்குள்ளேயே இவ்வளவு பெரிய வெற்றியையும் வரவேற்பையும் பெற்று இருப்பது தமிழ் பதிவர்களாகிய உங்களால் தான் .சுருக்கமாகச் சொன்னால் இது எங்கள் வெற்றி என்பதை விட உங்கள் வெற்றி என்று கூறினால் அது மிகையாகாது .எனவே தமிழ்10 தளம் தன் வெற்றியை உங்களுடனும் பகிர்ந்து கொள்ளும் விதமாக எடுத்து வைத்திருக்கும் முதல் முயற்சியே இது .
மேலும் படிக்க

http://tamil10blog.blogspot.com/2009/06/10_02.html

வால்பையன் said...

எப்போ முடியும்?

dondu(#11168674346665545885) said...

@வால்பையன்
100 முதல் 120 பகுதிகள் என சோ அவர்கள் கூறியதாக ஞாபகம்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

வால்பையன் said...

//100 முதல் 120 பகுதிகள் என சோ அவர்கள் கூறியதாக ஞாபகம்.//

அதுகுள்ள எங்கே பிராமணன்னு கண்டுபிடிச்சிருவாங்களா?

 

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது